செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 42_1
“கொஞ்சம் குனியிங்க மூர்த்தி சார்.. இப்படி விறைப்பா நின்னா, நான் எப்படி தலை வாருவேன்?”
கூறியவள், மூர்த்தி குனிய காத்திருக்கவில்லை. மூர்த்தியின் காலில் நின்று கொண்டு கண்ணாடி வளையல் குலுங்க.. அவள் அவனுக்குத் தலை வார.. அவள் விழாமல் இருக்க அவளை இடையோடு கட்டி கொண்டவன் பார்வை எல்லாம் மனைவியின் முகத்தில் தான்.
தாய்மையின் பொலிவு துளசியையும் விட்டு வைக்கவில்லை. அழகின் அளவுகோலை மாற்றியிருந்தான்.
அழகு.. அடுத்த நிலை பேரழகு.. அதற்கும் அடுத்த நிலை துளசி!
ஒரு சுற்று பூசியிருந்தாள். செழிப்பும் வனப்பும் கூடியிருந்தது. அவர்கள் அணைப்பின் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் குறைத்தது, அந்த குட்டி மேடு.
“வெளியில கிளம்பற நேரம் என்ன பார்வை இது? பாக்க வேண்டியத பாக்காதீங்க..” நொடித்துக் கொண்டவளை அள்ளிக் கொண்டவன், “பார்த்தேன். அழகா இருக்கு. கேக்கணும்னு நினைச்சேன்… எதுக்கு இந்த வேல உனக்கு? உடைஞ்சா கையில குத்தாதா?”
வெண்தண்டு கையில் புதிதாக முளைத்திருந்த மஞ்சள் கண்ணாடி வளையல்கள் பற்றித் தான் பேச்சு.
சட்டையில் பொத்தானை போட்டுவிட்டுக் கொண்டே, “இந்த சத்தம் குழந்தைக்குப் பிடிக்குமாம். சொன்னாங்க. அதுக்கு தான் கலர் கலரா நந்துவோட போய், வாங்கி வச்சிருக்கேன்.” கண் பளிச்சிட அவள் கூற,
“வர வர.. எனக்கு பிடிச்ச சத்தம் பத்தி உனக்குக் கவலையே இல்ல. தப்பு தப்பு.. எனக்கு பிடிச்ச எத பத்தியும் உனக்குக் கவல இல்ல!” த்வனியில் ஏக்கம் கலந்த அலுப்பு.
சட்டையோடு கீழே இழுத்து, ‘பச்’ என்று கன்னத்தில் சத்தம் செய்தாள்.
“போதுமா?”
“நான் இத சொல்லவே இல்ல.. இருந்தாலும் இது என்ன ஒரு செகண்ட் கூட நீளம் இல்லாத முத்தம்? நீஈஈஈளமான முத்தம் தர மாட்டியா?”
“ம்ம்ம்ம்? அதுக்கு.. முதல்ல நீங்க என்னை இம்ரெஸ் பண்ணனும் மூர்த்தி சார்! சும்மா எல்லாம் கிடைக்காது! சரி விடுங்க. அது என்ன உங்களுக்கு பிடிச்ச சத்தம்? அதுவும் நீங்க கேட்டு.. நான் மாட்டேன் சொன்னது? அப்படி ஒண்ணு இருக்க ச்சான்சே இல்லையே..?”
வெண் சட்டை கையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டே “ம்ம்கும். வரிசையா சலங்கை வச்ச கொலுசு போட சொன்னா கேக்காத! அந்த சத்தம் எனக்கு பிடிக்கும்” என்றான்.
“ஆமா… நான் ஒரு வயசு பாப்பா.. சலங்கை வச்சு கொலுசு போடுறேன். நீங்க முதல் முதலா வாங்கி தந்த கொலுச கழட்ட மாட்டேன். அது தங்கம்.. சத்தம் வராதுன்னு தான் போட்டிருக்கேன். உங்களுக்கு வெள்ளியில சலங்கை வச்ச கொலுசு ரொம்ப பிடிக்குமுன்னா..”
ஆர்வம் தலைக்கேற, “பிடிக்கும் பிடிக்கும்.. வாங்கி தரவா? போட்டுக்கிறியா? இல்ல இல்ல.. நீ சிரமப் படவேண்டாம். நானே போட்டுவிடுறேன்.” என்றவனின்,
ஆர்வத்தின் ஃயூசை பிடுங்கிவிட்டாள். “சரியான அவசரத்துக்குப் பிறந்தவர். சொல்றத கேளுங்க. பிடிக்குமுன்னா.. ஒண்ண வாங்கி சட்டை பைல போட்டுக்கோங்க… நடக்கும் போது சத்தம் வரும்”
“நக்கலு…? போ போ.. நீ ஒண்ணும் போட வேண்டாம். என் பொண்ணு கால்ல போட்டு அழகு பார்ப்பேன். அவ ஆச அப்பாக்காக.. என் பொண்ணு கால ஆட்டிட்டே இருப்பா..”
“ம்ம்கும்! காத்திருங்க. இன்னும் நாலு வருஷம்.. ஏன்னா முதல்ல வர போறது பையன்..”
“ஆமா இவ தான் கடவுள். இவ சொல்றது தான் நடக்கும் பாரு! எனக்கு பொண்ணு தான். அவ அழகுக்கு… எனக்கு பிடிச்சத எல்லாம் போட்டு அழகு பாக்க போறேன்.. நீ தள்ளி நின்னு பெருமூச்சு விட போற!”
“கண் திறந்தே கனவு கணுங்க…” அவள் நகைக்க..
“நான் ஆசையா கேக்கிற ஏதாவது ஒண்ண நிறைவேத்தறியா? அவ அவ.. புருஷனுக்கு என்ன பிடிக்கும்.. எப்படி பிடிக்கும்னு பார்த்து பார்த்து செய்யறா.. நீ?”
“இவர் போய் ஒவ்வொரு வீடா பார்த்துட்டு வந்தார்..” அவள் உதடு சுழிக்க.. அவனால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.
கொள்ளை அழகு இன்னும் மெருகேறி அவனைக் கொள்ளை கொள்ள.. அவனுக்குள் நித்தம் ஒரு ஆசை..
“ஏன் துளசி… நீ சின்ன பொண்ணு தானே.. உன் கலருக்கும் உன் கண் அழகுக்கும்.. கண்ணுல கொஞ்சம் அடர்த்தியா மை வைக்கலாமே..” என்றான் காதலாய்
“பச்.. மூர்த்தி சார். காலையில எழுந்ததும் என்னைப் பார்த்து பயந்துடுவீங்க. காலைல அத வேற ஒரு மணி நேரம் கழுவணும். ஆள விடுங்க..” என்றாள்.
“கரிசலாங்கண்ணியும் கற்றாழையும் போட்டு அம்மா செய்வாங்க பிள்ளைகளுக்கு. கண்ணுக்கு நல்லதாம்.. அம்மாட்ட செஞ்சு தர சொல்றேனே..”
அவன் கெஞ்சியும் “சும்மா இருங்க மூர்த்தி சார்” என்றுவிட்டாள்.
“உன் நெத்தி ரொம்ப அழகா இருக்கே… பொட்டு பக்கத்துல சின்னதா அரை சென்டிமீட்டருக்கு சந்தனம் வச்சுக்கோயேன்.. பாக்க இன்னும் அழகா இருப்ப. குளிர்ச்சி உடம்புக்கு நல்லது தானே..” என்றான்.
“இருக்க அழகே போதுமே! வீட்டு வேலைக்கு நடுவுல என்னால சந்தனம் எல்லாம் அரைக்க முடியது.. மூர்த்தி சார்” என்றாள்.
“அன்னைக்கு காலேஜ் போனேனே.. அப்போ, அங்க இருக்க ஒரு லெக்சரர், கேரளைட். வெள்ள வேட்டி.. வெள்ள ஹாப் ஸாரி மாதிரி.. சின்னதா பார்டர் வச்சு போட்டிருந்தாங்க.. அழகா இருந்துது. உனக்கு ரொம்ப அழகா இருக்கும்..வாங்கி தரவா?” ஆசை ததும்பக் கேட்டான்..
“அவங்க கேரளா.. நான் தமிழ்!” என்றுவிட்டாள்.
இன்று ஆசையாய் கேட்ட கொலுசும் நிராகரிக்கப் பட்டுவிட்டது.
கைக்குட்டையை மடித்து அவன் சட்டைப் பையில் திணித்துக் கொண்டே.. “ஐயோ.. வர வர உங்க தொல்லை தாங்க முடியல மூர்த்தி சார். புதுசு புதுசா என்ன என்ன ஆச உங்களுக்கு? குளிச்சுட்டு, முடி காயற வரைக்கும் பின்னற பின்னலோடயே சுத்த சொல்றீங்க.. நீளமா ஜிமிக்கி போட சொல்றீங்க.. வேட்டி தாவணி கட்ட சொல்றீங்க! எனக்கு என்னமோ உங்களுக்கு சீக்கிறமே மிட்-ஏஜ் க்ரைஸிஸ் வந்துடுச்சுன்னு தோணுது, மூர்த்தி சார். வயசாகுது இல்ல அது தான்!” அவள் மத்தாப்பாய் சிரிக்க…
அவளை முறைத்தவன்.. “இப்பொ தான் முப்பதுக்குள்ள போயிருக்கேன்.. மிட் ஏஜாம்! உன்ன விட ஒம்பது வயசு தான் ஜாஸ்தி” முணுமுணுத்திகொண்டே வாசல் நோக்கிச் சென்றவனை விட்டாள் இல்லை.
“ஆமா ஆமா… நீங்க மார்க்கண்டேயன் தான் ஒத்துக்கறேன். ஆளும் மூஞ்சியையும் பாரு. வயசு ஆக ஆக, ஏன் மூர்த்தி சார்.. என் வயத்தெரிச்சல கிளப்ப, உங்க தேஜஸ் கூடிட்டே பொகுது? வெளியில உங்கள தனியா அனுப்பவே பயமா இருக்கு. அப்படியே உங்கள என் முந்தியில முடிஞ்சுக்கவா?”
“இப்போ மட்டும் என்னவாம்?” முணுமுணுத்தான்.
வாசல் நோக்கி நகரவும், “போகும் போது உர்றுன்னு போகாதீங்க.” இழுத்து அணைத்துக் கொண்டாள்.
அணைத்த வாக்கிலேயே முகம் உயர்த்தி காரணம் உரைத்தாள். “தீடீர்ன்னு மாத்திக்க முடியல. அத எல்லாம் போட்டுட்டு… யோசிக்கவே வெக்கமா இருக்கு. புரிஞ்சுக்கோங்க மூர்த்தி சார்”
அவன் ஆசை எல்லாம் நிராகரிக்க வேண்டும் என்று வேண்டுதலா என்ன? சின்ன சங்கோஜம். தனிமையில் இருந்தால் கதையே வேறு. கூட்டுக் குடும்பத்தில், கோமாளி வேஷம் போட முடியாதே – இது அவள் எண்ணம்.
“சரி.. விடு. எனக்குக் கொடுத்து வச்சது அவ்வளவு தான். அட்லீஸ்ட் பொண்ணையாவது பெத்து குடு”
“ஆகாகா… ஆச தோச! சந்துல சிந்து பாடாதீங்க. பையன் தான். அதுவும் உங்கள மாதிரியே. இப்போ எதுக்கு அந்த பேச்சு?
மொத நாள் காலேஜ் போறீங்க. நல்ல பேர் எடுத்துட்டு வரணும் சரியா?”
“ம்ம்ம்..”
“பச்… என்ன பதில் இது மூர்த்தி சார்? சிரிச்ச முகமா, சரி சொல்லுங்க!”
“சரி.. துளசி” இழுத்துப் பிடித்துப் புன்னகைத்தவன், தன்னிச்சையாக மீசையை ஆட்காட்டி விரலால் மேலே ஏற்றிவிட..
“அது என்னமோ மூர்த்தி சார்… உங்க மீசை அழகா.. இல்ல நீங்க அத தூக்கிவிடுற ஸ்டைல் அழகான்னே தெரியல.. எனக்காக ஒரு தரம் செய்யுங்களேன்..” என்றாள், வாஞ்சையாக..
“நீ சொல்றத மட்டும் நான் கேக்கணும்?” வீம்பு எட்டிப் பார்த்தாலும், ஆசை மனைவியின் ஆசையை நிறைவேற்றினான், புன்முறுவலோடு.
“ஃபர்ஸ்ட் இம்ரெஷன் ரொம்ப முக்கியம்.. புரியுதா? நல்ல பேரு வாங்கிட்டு வரணும். நீங்க பாக்க நல்லாயிருகிங்கன்னு பல கண்ணு உங்களை மொய்க்கும்… ஆனா நீங்க, வேல பாக்கிற இடத்துல சைட் எல்லாம் அடிக்க கூடாது சரியா? பேரு கெட்டுடும். பொண்டாட்டி மாசமா இருக்கான்னு மனச, அலை பாய விட கூடாது. சரியா?” அவள் பங்கிற்கு மீசையை முறுக்கி விட்டாள்.
“சரி துளசி மா.. உன்ன தவிர யாரையும் சைட் அடிக்கல” என்றான். இம்முறை இழுத்து பிடிக்காமலே முறுவலோடு எட்டிப்பார்த்தது கன்னக்குழி.
“குனிங்க..” குனிந்தவன் நெற்றியில் முத்தம் வைத்து.. “நல்லபடியா போயிட்டு வாங்க.” இன்முகமாய் அனுப்பி வைத்தவள், தலை வருடி, நெற்றியில் ஆழ்ந்த முத்தம் பதித்தான்.
“கிளம்பறேன். உடம்ப பார்த்துக்கோ.. இழுத்துப் போட்டு வேலை செய்யாத. நீ ரெஸ்டே எடுக்கிறது இல்லன்னு உன் மேல கம்ப்ளெயின்ட் வருது.. மதியம் கொஞ்ச நேரம் படு.” கூறியவன், கிளம்பியது மார்த்தாண்டத்தில் இருக்கும் கல்லூரிக்கு.
இடம் பெயர்ந்து வாரங்கள் ஆகியிருக்க, இன்று தான் மூர்த்தியின் முதல் நாள், கலைக் கல்லூரியில்.
ராயல் என்பீல்ட் சத்தம் மறைந்தது தான் தாமதம், துள்ளிக் கொண்டு வந்தாள் நந்தினி, “அக்கா… போலாமா?” என்று கேட்டுக் கொண்டே..
“இன்னைக்கா? நீ காலேஜ் போகமா என்ன பண்ற?”
“அக்கா… என்ன நீ.. மாமா மாதிரியே கேள்வி கேக்கற? நாளைக்கு தான் எனக்கு லீவ். சனிக்கிழமை மாமாவும் வீட்டுல இருப்பாங்க. உன்ன என்னோட தனியா வெளில அனுப்ப மாட்டாங்க. அவர பார்த்தாலே எனக்கு தந்தியடிக்கும். அவரும் கூட வந்தா நான் அவ்வளவு தான்! சோ.. இன்னைக்கு போனா தான் உண்டு. எதுவும் சொல்லாம வா..”
“பத்து மணிக்கா போகலாம். இப்போவே ஒருத்தனும் கடைய திறக்க மாட்டான். நீ முன்னமே சொல்லறதுக்கு என்ன? அவர்கிட்ட ஒரு வார்த்த கேட்டிருப்பேன்.”
“எதுக்கும் புருஷன் பர்மிஷன் வேணுமா? அவங்க சொல்றத எல்லாம் கேட்டே ஆகணுமா? மாமா வேண்டாம் சொல்லிட்டா..?”
“பர்மிஷனா..? நான் அப்படி எல்லாம் யோசிச்சதே இல்ல. என் மேல அக்கறையா இருக்கார். கேட்டுட்டு போனா ஒரு நிம்மதி. நான் கேட்டு அவர் இல்லன்னு எப்போ சொல்லி இருக்கார்? இப்போ அவருக்கு சொல்லாம போன மாதிரி ஆகாதா? அப்புறம்.. அவர் வேண்டாம் சொன்னா.. வேண்டாம் தான். அதுல என்ன சந்தேகம்?”
“அது தானே பார்த்தேன். நீ தான் அவர் கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டியே! அதனால தான் நான் முன்னமே உன் கிட்ட சொல்லலை. மாமாட்ட சொல்ல முடியலன்னு வருத்தப்படாத! தாத்தாட்ட சொல்லிட்டு கிளம்புவோம். அவர் தான் எதிர்த்து கேள்வி கேக்க மாட்டார்.”
“நீ கேடி! ஆனா, எனக்கு அவர் கிட்ட சொல்லிட்டு போனா.. ஒரு நிம்மதி!”
“ஏன் க்கா.. கல்யாணம் ஆனாலே பொண்ணுங்க இப்படி ஆகிடுறீங்க. எதுக்கும் ஆம்பளைங்க கைய பார்த்துகிட்டு? நமக்குன்னு ஆசை எதுவுமே இருக்கக் கூடாதா? போ க்கா.. எல்லாம் உங்கள மாதிரி பொண்டாட்டி கொடுக்கிற இடம் தான்… அவங்க தலை மேல ஏறுறது.”
“தப்பு நந்தினி. உன் சிந்தனையே தப்பு. மத்த ஆம்பளைங்கள பத்தி தெரியாது. ஆனா என் புருஷனும் சரி, செல்வனும் சரி.. நம்மள அடக்கி ஆள நினைக்கிறவங்க இல்ல. உன் கிட்ட சொல்லாம உன் புருஷன் நினைச்ச இடத்துக்கு.. நினைச்ச நேரத்துக்கு போயிட்டு வந்தா.. உனக்கு அது ஓகேவா? எதிர்பார்ப்பு ரெண்டு பேருக்குமே சரி சமம்ன்னு புரிஞ்சுக்கோ.
என் மேல என் புருஷன் வச்சிருக்க பாசத்துக்கு, இது நான் அவருக்கு குடுக்கற மரியாதை.
உன் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கவே தானே, செல்வன் உனக்காக காத்திருக்கார். நீ யூ.ஜி முடிச்சதும் உன் கழுத்தில தாலி கட்டியிருந்தா இந்நேரம் உனக்கு பிடிக்கலனாலும் நீயும் பாம்பேல தானே இருந்திருப்ப. இப்பொவும் உன்ன அவர் கம்பல் பண்ணல.. உனக்கு, அவர் பக்கத்த புரிய வைக்க தான் முயற்சிக்கிறார். உனக்கு தமிழ் டீச்சர் ஆகணும்.. அதுக்கும் வழி பண்றதா தானே சொல்றார். நமக்காக அவங்க பாக்கும் போது, அந்த உறவு வேணும்ன்னு நினைச்சா.. நாமளும் முயற்சி பண்ணி தான் ஆகணும். வாழ்க்கையில எதுவுமே நிரந்தரம் இல்ல. இன்னைக்கு இருக்க பாதுகாப்பும்.. உயிரும், நாளைக்கு இருக்குமா தெரியாது. வாழற நாள வீண் ஈகோல தொலச்சிட கூடாது நந்து. கடந்து போன மணித் துளியும் வயசும் திரும்பவும் கிடைக்காது!
சில விஷயம் அவங்க சொல்றது நம்மளால ஒத்துக்கமுடியாது. அப்போ சண்டை போடாம.. வீம்ப காட்டாம.. பக்குவமா எடுத்து சொல்லணும். நம்ம சந்தோஷமா இருக்க தான் குடும்பம் ஏற்படுத்திக்கிறோம். அப்போ அந்த குடும்பத்துல சந்தோஷம் நிலைக்க கொஞ்சம் விட்டு கொடுத்து போறது தப்பில்ல. விட்டு கொடுக்க வேண்டிய இடத்துல விட்டு கொடுத்தும்.. இழுத்துப் பிடிக்க வேண்டிய இடத்தில இழுத்து பிடிக்கணும்.. அது எல்லாம் கல்யாணம் ஆனா தானா வந்திடும்.”
பேசிக் கொண்டே கடை தெருவில் நடந்து கொண்டிருந்தவர்கள் மேல் இடித்துக் கொண்டு ஒருத்தி நின்றாள்.
இடித்தது நந்தினியை. “சாரி..” என்றதும் நந்தினியிடம்.. ஆனால் கண் நிலைத்தது துளசியின் மேல்.
அவள் அங்கேயே.. அப்படியே நின்றுவிட.. இவர்கள் அவளைச் சுற்றிக் கொண்டு நகர்ந்து விட்டனர்.
“ஆளையும் மூஞ்சியையும் பாரு. இந்த கட தெருவில என்ன இருக்குன்னு கேமராவ தூக்கிட்டு அலையறா இவ?” நந்தினி கேட்கவும்.. துளசி தலையைத் திருப்பி பார்க்க.. அவள் இன்னும் நின்ற இடத்தில் நின்று இவளைத் தான் பார்த்து கொண்டிருந்தாள்.
சல்வார் அணிந்திருந்தாள். புகைப் படம் எடுப்பவள் போல் கழுத்தில் புகைப்படக் கருவி தொங்கிக் கொண்டிருந்தது. அவள் முகமும்.. பார்வையும். இரண்டுமே சரி இல்லை.
“நம்மளையே பார்த்துட்டு இருக்கா நந்து.. தெரிஞ்சவளா இருக்குமோ? என்ன வேணும்ன்னு கேப்போமா?”
“அவ கிடக்கறா… ஏற்கனவே லேட். நீ வா க்கா..” இழுத்துக் கொண்டு துணிக் கடைக்குள் புகுந்தாள் நந்தினி. இரண்டு வாரங்களில் செல்வன் வருகிறான். இருவருக்கும் திருமண நிச்சயத்திற்கு தேதி குறித்தாயிற்று. ஆனாலும் இன்னும் நந்தினி ஒரு முடிவுக்கு வரவில்லை. அவளுக்குச் சேவையில் நாட்டமில்லை. அவனோடு பாம்பே புறநகரில் தனித்து வாழவும் விருப்பமில்லை. தனித்து இருக்க விருப்பமில்லை என்றால்.. காப்பகத்திற்குள்ளேயே இருந்து கொள்ள வசதி செய்து கொள்ளலாம் என்றான். அவளுக்கு அதிலும் சம்மதம் இல்லை. செல்வனை இங்கேயே குடும்பத்தோடு நிருத்திக் கொள்ளும் முடிவு! யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்… அது அவளில்லை!
“ரெண்டு பேரும் பேசறீங்களா? செல்வன் என்ன சொல்றார்? என்ன முடிவெடுத்திருக்கீங்க?”
“அவர் வரட்டும் க்கா… பேசுவோம். அவர் தான்-ன்னு ஆகிடுச்சு. நடக்கற மாதிரி கல்யாணம் நடக்கட்டும்… சேவை தான் செய்யணும்னா… இங்க கூட பாவப்பட்ட ஜீவன் நிறைய இருக்கு. அவங்களுக்குச் செய்யட்டும். யார் தடுத்தா? உனக்கு அவர் ரொம்ப க்ளோஸ்ன்னு தெரியும். அதுக்காக அவர் பக்கம் நிக்காத க்கா. நாம எல்லாரும் ஒண்ணா இங்கேயே இருப்போம். ப்ளீஸ் க்கா.. குடும்பமா இருக்கத கேடுக்க விடாத க்கா. தனியா நான் இருந்ததே இல்ல. அப்படி இருக்கவேண்டி வந்தா, நான் மூச்சு முட்டி செத்தே போயிடுவேன். அண்ணன் தனியா இருக்கது பத்தாதா? நானுமா”
அவரவருக்கு அவரவர் விருப்பமும் நியாயமும். நந்தினி கூறியதில் ஒன்று உண்மை. குடும்பத்தை புறக்கணித்து அது என்ன சேவை? இங்கும் தான் ஒரு வயிறு சோற்றுக்கு வழி இல்லாத ஜீவன்கள் உள்ளதே.. அபலை பெண்கள் இல்லாத இடம் தான் உண்டா? செய்யும் சேவையை நந்தினி கூறுவது போல் இங்கிருந்து செய்தால் தான் என்ன?
“உன் அண்ணன் தனியா தானே இருக்கார் அங்க. நீ அங்க போனா அவரையும் உங்க கூட இருக்க சொல்லலாமே.. யோசிச்சு நல்ல முடிவா எடுங்க.”
“க்கா… இந்த ஷர்ட் நல்லா இருக்கா? அவருக்கு நல்லா இருக்கும் இல்ல?” இருவரும் அவரவர் சிந்தனைக்குத் தற்காலிக விடுமுறை அளித்தனர்.
“ம்ம்… நல்லா இருக்கு” என்றவள் கண்ணில் பட்டது, கேரளத்து புடவை. யோசிக்கவில்லை.. வாங்கிக் கொண்டாள். பின் ஒவ்வொன்றாய்..
“என்ன க்கா… மாமாட்ட கேக்காம தும்பல் கூட போட மாட்ட. கடை கடையா ஏறி இறங்கற? துணி.. நகைன்னு வாங்கி தள்ளற?”
“அவர் பிறந்த நாளுக்கு, நான் போட்டுக்க! இந்த டைம்ல இப்படி தான் ஆசை வருமாம். ஆசை பட்டத அடக்கி வைக்க கூடாதாம்.. உடம்புக்கு கேடாம். ஒரு அறிஞர் சொல்லி இருக்கார். அதனால் தான் இந்த புடவைக்கு மேட்சிங்கா ஜிமிக்கியும்.. கொலுசும்.”
‘இதை எல்லாம் போட்டுக் கொண்டு எதிரில் நின்றால் என்ன செய்வார்?’ உள்ளம் துள்ளிக் குதித்தது.
“மாமா பிறந்த நாளுக்கு மாமாக்கு வாங்கலியா?”
“வெள்ள வேட்டியும் வெள்ள சட்டையும்? இத நான் வேற வாங்கணுமா? கர்சீப் வாங்கி இருக்கேன். கிஃப்ட் தான் ரெடி பண்ணிட்டேனே..” நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
“நீ பெரியாளுக்கா…” சிரிப்பில் சேர்ந்து கொண்டாள் நந்தினி.
இருவரும் வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிக் கொண்டு காரில் ஏறும் வேளை, சலையின் மறுபக்கம்.. மீண்டும் அதே பெண். இவர்களைப் பார்த்து நின்றாள்.
துளசியும் அவளையே பார்க்க.. எங்கோ பார்த்தது போல் தோன்றியது. ஆனால் நினைவில் இல்லை. ‘உடல் வளைவுகளைப் பகிரங்கமாய் காட்டும் சல்லடை புடவை கட்டும், அளவுக்கு அதிகமாய் நாசியைச் சுருங்க வைக்கும் வாசனைத் திரவியமும், கண்ணை உருத்தும் அளவு தலை கொள்ளா மலர் சரமும், நெற்றியைச் சுருக்க வைக்கும் அதிக ஒப்பனை படிந்த முகமும், பளீர் உதட்டுச் சாயமும்’ என்று, அன்று போல் நின்றிருந்தால், ஆமாயா போன்ற குழந்தைகளை கோமல்களாய் மாற்றும் கௌரவின் தோழி, சாந்தினி தான் அது, என்று துளசிக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவள் நின்றதோ மிகவும் மதிக்கத்தக்க நாகரீக ஒப்பனையில் அல்லவா? அதனால் அவளைக் கண்டு கொள்வது அவ்வளவு எளிதல்ல.
“என்ன க்கா?” என்றவளின் பார்வையும் எதிர்புறம் இருந்தவள் மேல் விழ… “யாரு இவ..? எதுக்கு இந்த பார்வ பாக்குது? நீ வா க்கா போலாம்.” இருவரும் ஏறிக்கொள்ள, அவர்கள் மகிழுந்து மகிழ்ச்சியோடு பயணப்பட்டது.
வீட்டை அடைய இன்னும் ஐந்து கிலோமீட்டர் தொலைவு இருக்க.. அவர்கள் கார் வழியில், நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்த பெண்ணை கடக்க வேண்டி வேகம் குறைத்தது. அவள் அவர்களுக்குத் தெரிந்தவள் தான். வீட்டின் அருகே வசிக்கும் மஞ்சு. ஏதோ வழியில் சொந்தமும் கூட.
வயிற்றுப் பிள்ளை காரியை அவர்களோடு ஏற்றிக்கொண்டனர். வாகனமும் நகர ஆரம்பித்தது. வழி முழுவதும் அழுதிருப்பாள் போலும். துளசி அவள் கையை தட்டிக்கொடுக்கவும்.. பெண் உடைந்தாள்.
“எட்டு மாசம் ஆக போகுது மைனி. நாள் நெருங்குது. ஒரு செக்கப் கூட்டிட்டு போக கூட ஒருத்தர் இல்ல. பெத்தவ செத்து போனா.. பிறந்த வீடுன்னு ஒண்ணு இல்லேனா.. இந்த மாதிரி நேரம் எல்லாம் நரகம் மைனி. ஆசையா இருந்தார் தான். ஐஞ்சு மாசம் வரைக்கும் நல்லா தான் போச்சு. ஆனா இப்போ எல்லாம் அவருக்கு என்னை பிடிக்கவே மாட்டேங்குது. எதுக்கும் திட்டும் சண்டையும் தான். இருக்கேனா செத்தேனான்னு பாக்க ஒருதர் இல்ல, நாதியத்து நிக்கறேன். கூட பிறப்புன்னு ஓரு அண்ணன்.. தம்பின்னு.. ஒருத்தன் இல்ல! எப்படி பெத்துக்க போறேன்னு தெரியல. இப்படி இந்த நேரத்துல கூட எனக்கு உதவியா இருக்க ஒரு புருஷன் இல்லாததுக்குச் செத்து போலாம்ன்னு தோணுது மைனி. போன அம்மாக்காரி என்னையும் கூட்டிட்டு போக மாட்டாளா? அனாதையா நிக்கிறேனே மைனி” அழுதே கரைந்தாள்.
“நீ பேசிறது… உணர்றது எல்லாம் பாப்பாக்கு தெரியும். அது வளர்ச்சியைப் பாதிக்கும். ரொம்ப யோசிக்காத. நாங்க எல்லாம் இல்லையா. என் வீட்டு காரர்ட்ட சொல்லி மருது அண்ணாட்ட பேச சொல்றேன். எல்லாம் சரி ஆகிடும்..” ஏதேதோ கூறி பெண்ணின் கண்ணீரைத் துடைத்து வீட்டு வாசலில் இறக்கி விட்டனர்.
“நீ வீட்டுக்கு போ நந்து. நான் இங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு.. செடிக்கு தண்ணி ஊத்திட்டு வரேன்..” துளசி தோட்ட வீட்டில் இறங்கிக் கொள்ள..
“தனியா இருக்க வேண்டாம்..” என்று நந்தினியும் இறங்கிக் கொண்டாள்.