செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 42_2
வாங்கி வந்த பொருட்களை தோட்ட வீட்டு படுக்கையறை அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்தாள். மூர்த்தியின் பிறந்த நாளன்று போட்டு இன்ப அதிர்ச்சி தர வேண்டும்.
தோட்ட வீட்டிலேயே இருக்க முடியாதே.. செடிகளுக்கு நீர் காட்டிவிட்டு, கிளம்பிச் சென்றனர். மனம் முழுவதும் மஞ்சு! ஏதோ பிசைந்தது. இங்கு வந்து வாரங்கள் ஆகி இருக்க.. வாழ்வு முறையில் நிறைய மாற்றங்கள், அவைகளோடு ஒத்துப்போகப் பெறும் முயற்சி எடுக்க வேண்டி இருந்தது.
கணவனும் மனைவியும், நினைத்ததை நினைத்த நேரம் செய்துகொண்டு, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நகமும் சதையும் போல் வாழ்ந்த வாழ்வை இங்கு வாழ முடியவில்லை என்பது தான் பெரிய தாக்கம். போதாக்குறைக்கு அடிக்கடி சண்டை வேறு!
‘மஞ்சு கூறியது போல் தானே தன் நிலையும்? தனக்குப் பிறந்த வீடு என்று ஒன்று இல்லையே. மூர்த்தி சாரும் முன் போல் இல்லையே. ச்ச! என்ன எண்ணம் இது? மூர்த்தியை மருதுவோடு ஒப்பிடுவதா? தப்பு தப்பு!’ மனம் முழுவதும் ஏதேதோ எண்ண ஓட்டம்.
வயிற்றுப் பிள்ளையோடு தனியே இருக்க வீட்டுப் பெரியவர்கள் சம்மதிக்கவில்லை. மூர்த்திக்கும் தனியே தோட்ட வீட்டில் இருப்பதில் நாட்டமில்லை என்பதால் பெரிய வீட்டில் தான் இருவரும் வாசம்.
எல்லா வாரம் போல் அன்று மாலையும் மூர்த்தியிடம் ஆரம்பித்தாள்.
“என்னங்க…”
அவர்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபட்டிருந்தவன் தலை உயர்த்தாமலே.. “ம்ம்..” எனவும்,
“ரொம்ப வேலையா?”
“இல்ல துளசி.. சொல்லு”
“இன்னைக்கு வெள்ளி.. அங்க போலாமா? ஒரு நான் இருந்துட்டு வரலாமா?” கையிலிருந்த கோப்புகளை மேசையில் போட்டவன்.. மெல்லத் தலைத் தூக்கி..
“பச்… அங்க என்ன தான் இருக்குன்னு என்னை வாரா வாரம் புடுங்கற?” அலுத்து கொண்டான்.
என்ன முயன்றும் மஞ்சு கண்ணீர் கண் முன் வந்து சென்றது.
“ஓண்ணும் இல்ல… நீங்க வேலைய பாருங்க.”
சென்று கொண்டிருந்தவள் முதுகு மறையும் வரை பார்த்து அமர்ந்திருந்தான். அவன் பேச்சுக்கு அவள் மறுப்பதும்… அவள் அசைகளை அவன் மறுப்பதும்.. என்று சின்ன சின்ன உரசல்கள் என்று கொஞ்ச நாட்களாகவே இப்படி தான் சென்று கொண்டிருக்கிறது.
அவள் முக மாற்றம் தெரியாமல் இல்லை. தனிமை இனிமை தான்.. இருவர் மட்டுமாக இருந்த வேளை. பிள்ளையை வயிற்றில் வைத்துக்கொண்டு அவனுக்கு அங்குத் தங்க ஏனோ விருப்பமில்லை.
செய்து கொண்டிருந்த வேலை முடியவும் எழுந்து வெளியே சென்றவன், கண் மனையாளை தேடியது. அவ்வளவு பெரிய வீட்டில் எங்கு வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் அவள், அறையிலோ.. அடுப்பங்கரையிலோ பின் முற்றத்திலோ தான் இருப்பாள். அந்தோ பரிதாபம் துளசி அங்கு எங்குமே இல்லை.
“க்கா… துளசி எங்க?” அடுத்த நாள் புட்டு-க்கு மாவை இடித்துக் கொண்டிருந்த பானுவிடம் போய் நின்றான்.
“வேற எங்க இருப்பா? அவளும், அவ ரெண்டு வாலுங்களும் பூ பறிக்க போறேன்னு கிளம்பி போயிருக்காங்க. வழக்கமா நாலுக்கே போயிட்டு வந்துடுவாங்க. இன்னைக்கு உன் கூட தாமதமா போறேன்னு சொன்னா.. நீ ஏதோ வேலையா இருக்கன்னு பிள்ளைகளோடு போனா.
போய் ஒரு மணி நேரம் ஆச்சு. இப்போ வந்திடுவா.
உன்ன சொல்லணும்.. ஏன் டா பிள்ளைக்காரிய பொழுது போனப்புறம் தனியா ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அனுப்புற? கூட போனா என்ன? ஒரு மணி நேரம் பொண்டாட்டிக்கு ஒதுக்க முடியலனா எதுக்கு டா உனக்கு எல்லாம் கல்யாணம்?”
அங்கு சிலர் நிலத்தின் ஓரத்திலேயே, அவரவர் வீட்டுக் கல்லறை வைக்கும் வழக்கம் இருப்பதால்… அதை எல்லாம் தாண்டி பொழுது போன வேளையில் வயது பெண்களைத் தனித்து அனுப்ப யோசிப்பார்கள்.
அவன் வேலையை ஒருவரும் பொருட்டாக பார்க்கவே மாட்டார்களா? சட்டென்று கோபம் வந்துவிட்டாலும்.. காட்டி கொள்ளவில்லை. “சரி கத்தாத. அது தான் பிள்ளைங்க இருக்காங்க இல்ல. நீ நைட்டுக்கு சாப்பாட கொடுத்தனுப்பு, நாங்க காலைல வரோம். இருட்டுல அவ மேலையும் கீழயுமா அலய வேண்டாம். போனதும் பிள்ளைங்கள அனுப்பி வைக்கிறேன்.”
வீட்டிலிருந்து இரண்டு நிமிடம் நடந்திருக்க மாட்டான்… வாண்டுகள் இரண்டும் எதிரில் வந்து கொண்டிருந்தது.
“பாரதி.. சித்தி எங்க?”
“சித்தி அப்போவே தூங்கிட்டாங்க..”
“தூங்கிட்டாங்களா?”
“ம்ம்… சித்தி தூங்கினா எழுப்ப கூடாதுன்னு நீங்க சொன்னீங்க இல்ல.. அதனால் எழுப்பாம வந்துட்டோம்..”
“சரி ரெண்டு பேரும் எங்கேயும் சுத்தாம நேரா வீட்டுக்கு போங்க..”
அதன் பின் எங்கே நடப்பது? ஓட்டம் தான். கதவு சாத்தியிருந்தது. வீட்டினுள் அவளில்லை.
‘துளசி..’ நெற்றியை தேய்த்து நின்றான். சூரியன் அஸ்தமித்திருக்க, இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது.
‘தூக்கத்திலிருந்து விழித்தவள் குறுக்குப் பாதையில் சென்றிருப்பாளோ?’ எதற்கும் சுற்றி ஒரு முறை பார்த்துவிடும் நோக்கத்தோடு தோட்டத்தைச் சுற்றியவன் கண்ணில் பட்டது மகிழம் பூ மரத்தடி திண்டில் ஒரு உருவம்.
அத்தனை இருட்டவில்லை என்பதால் ஆள் யார் என்று தெரிய விளக்கின் ஒளி தேவைப் படவில்லை. அவள் தான். அவளே தான்.
உதிரிப் பூக்கள் சுற்றி இருக்க.. மரத்தில் தலை சாய்ந்து உறங்கியிருந்தாள். இப்பொழுது எப்படி உணர வேண்டும்? தெரியவில்லை அவனுக்கு. வேண்டாம் என்று கூறியபின்னும் இது என்ன வேலை? வீம்புக்கென்றே செய்வாளா?
கோபம் தான். இருந்தும் தூங்குபளிடம் கோபத்தை எப்படிக் காட்ட? அமைதியாக அருகில் அமர்ந்தவன், “துளசி…” மெல்லத் தலை வருடி எழுப்பினான்.
விழித்தவள், விழித்தாள்.
சுற்றி கண்ணை ஓட்டியபின் தான் உணர்வு வந்தது.
“சாரி. தேடி வந்தீங்களா? பிள்ளைங்க பூ பறிக்கிறத வேடிக்கை பார்த்துட்டே உக்காந்து இருந்தேன்.. தூங்கிட்டேன் போல. பிள்ளைங்க எங்க?”
இழுத்து மூச்சு விட்டவன்.. “வா வீட்டுக்கு..” கூறிக்கொண்டே நடக்க…
“இருங்க பூ எடுத்துக்கிறேன்..” என்றவள் ஒரு கை பூ அள்ளியிருப்பாள்..
அதுவரை இழுத்துப் பிடித்திருந்த கோபம் வெளியேறியது. “துளசி!” என்றான்.
மூர்த்தியின் சத்தமா இது? அவள் காது ஜவ்வு கிழியவில்லை. பூவை அப்படியே விட்டுவிட்டு அவன் பின்னோடு தோட்ட வீட்டிற்கு நடந்தாள்.
அவன் ஒன்றுமே பேசவில்லை. முன் வாசல் திண்ணையில் அமர்ந்துகொண்டான். கோவம் என்று தெரிந்தது.
அவளும் வேண்டுமென்று உறங்கவில்லையே… காலையிலிருந்தே அலைச்சல்.. தென்றல் தாலாட்ட… மகிழம் பூ வாசம் மனதை லேசாக்க.. கண்ணயர்ந்துவிட்டாள்.
அருகில் அமர்ந்துகொண்டவள். “தினமும் வாக்கிங் போகணும் இல்லையா? சாயங்காலம் தங்கத்தையோ.. பாரதியையோ கூட்டிட்டி வருவேன். பூ கட்டி வச்சுகிட்டு, நாலரை.. ஐஞ்சுக்குள்ள வந்திடுவோம். வெள்ளி சாயங்காலம் உங்களோட இங்க வந்தா ஞாயறு காலைல தான் போவோம். ஆனா இன்னைக்கு நீங்க வரலியா…” முடிக்கும் முன்
“வரலனா.. நீ தேவை இல்ல போடான்னு, கிளம்பி வந்திடுவியா?” எரிந்து விழுந்தான். அவனுக்குக் கோபம். இப்படி இருட்டிக் கொண்டு வரும் வேளையில் மரத்தடியில் தூங்க என்ன அவசியம் வந்தது? பூச்சி புழு என்று ஏதேனும் கடித்து வைத்தால்? அவன் வராமல் போயிருந்தால்? அந்த கோபம், எரிச்சலாக வெளிவந்தது.
எச்சில் விழுங்கினாள். தொண்டை அடைத்தது. பதில் பேச விழையவில்லை. மூர்த்தி சாருக்கு அப்படி என்ன எரிச்சலோ தன் மீது? எதற்கும் கோபப்பேச்சு தானா? பெண் வாடிப்போனாள்.
தோளில் சாய்ந்து, அவன் உள்ளங்கையைக் கன்னத்தில் வைத்து உணர்வுகளை எல்லாம் அடக்கிக் கொண்டிருந்தாள்.
இருவர் அனுமதியும் இல்லாமலே நிமிடங்கள் ஊர்ந்து சென்றது.
கன்னத்திற்கும் அவள் கைக்கும் இடையே இருந்த கையை உருவத் தோன்றவில்லை மூர்த்திக்கு. அப்படியே அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். அவள் கை எடுத்தால், அவன் கை உருவி விழுந்துவிடும் அளவில் தான் அவன் பலம் கொடுத்திருந்தான். ‘தொடக் கூட மாட்டாராமா?’ அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
துளசியின் உதட்டோடு கன்னமும் துடித்தது. அவன் கோவத்தை அவளால் தாங்க முடியவில்லை என்பதை உணர்ந்தான். ஆனால் சமாதான படுத்த தோன்றவில்லை.
அவன் அமைதி காக்க.. துடித்த உதடு பேச ஆரம்பித்தது.
“மெட்ராஸ்-லயே இருந்திருக்கலாம்.”
“..” ‘ஏனாம்?’ கேட்டானில்லை.
அவளே பதில் உரைத்தாள்.
“காலைல உங்க மடியில உக்காந்து ஒரு வாய் காபி குடிக்க மாட்டேனான்னு மனசு ஏங்குது.
ஆசை ஆசையா உங்க கைல ஊத்தி.. எனக்கு குழம்ப ருசி பாக்க குடுக்க மாட்டீங்களான்னு இருக்கு. உங்க கையால எனக்கு சாப்பாடு ஊட்டமாட்டீங்களான்னு முகம் பாக்க வேண்டு இருக்கு.
வெள்ளி கிழம நைட் ஆனா.. விடிவிடிய மொட்ட மாடில படுத்து கத பேச மாட்டோமான்னு இருக்கு.
அங்க ரெண்டு பேரு தான் இருந்தோம். ஒரு நாள் கூட என்னை நீங்க தனியா விட்டதே இல்ல. இப்போ மூனு பேர்! கூடவே பெரிய குடும்பமே இருக்கு. எப்பொவும் என்னை சுத்தி ஆட்கள். என்னை கண்ணுக்குள்ள தாங்கிற அன்பான குடும்பம். மனசு நிறைவா இருக்கணுமா இல்லையா..?
எனக்கு ஏதோ உள்ளுக்குள்ள காலியான மாதிரி இருக்கு. நீங்க இல்லாம நான் ரொம்ப தனியாகிட்ட மாதிரி.
இந்த வீட்டுல இருக்க ஒரு நாளுக்காக ஒரு வாரம் பூரா காத்திருக்கேன். இனி மேல் அது கூட இல்லியா? உங்களுக்கு தோட்ட வீடு பிடிக்கும்னு சொன்னீங்களே. இப்போ பிடிக்கலியா?”
“…”
“தோட்ட வீடு மட்டும் தான் பிடிக்கலியா? இல்ல உங்க பிள்ளைய சுமந்துட்டு இருக்க என்னையும் பிடிக்கலியா? உங்க விருப்பம் போல நான் ட்ரெஸ் பண்ணலன்னு என் மேல கோபமா?
எதுக்கும் கோபப்படுறீங்க. சுள்ளுன்னு விழறீங்க. ரொம்ப அலுத்துக்கறீங்க. ஏன்னு சத்தியமா தெரியல. எனக்கு இத எல்லாம் தாங்க தெம்பில்ல மூர்த்தி சார்.
எனக்கு நீங்க வேணும் மூர்த்தி சார். துளசி மா-ன்னு கூப்பிடுற என் பழைய மூர்த்தி சார் வேணும். இங்க இருந்து போயிடலாம்.”
கண்ணீர் வடிக்கவில்லை. வருத்தம் கொட்டி கிடந்தது. அவள் கை இறங்கிய பின்னும் அவன் உள்ளங்கை கன்னத்தில் பசையில்லாமலே ஒட்டி நின்றது.
அவன் இப்படி எல்லாம் யோசிக்கவே இல்லையே. மாசமாக இருப்பதால் அதிகம் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. வீட்டில் இத்தனை பேர் அவளைக் கவனித்துக் கொள்ள.. தேவைகள் இல்லையே என்று பள்ளி கல்லூரி வேலை என்று இருந்துவிட்டான்.
இத்தனை ஏக்கங்கள் உள்ளே போட்டு புதைத்திருப்பதை இன்று தானே அறிந்தான்.
பூச்சிகளின் ரீங்காரம் மட்டுமே செவியை நிரப்பியது. இருட்டில் மின்மினிகளின் வெளிச்சம் இருவரையும் கவரவில்லை. அதைப் பிடிக்க அதன் பின்னோடு அவள் செல்லவும் இல்லை. செதுக்கப் பட்ட சிலை போல் அமர்ந்திருந்தனர்.
சுவாமியின் மகன் இரவு உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.
உள்ளே அழைத்துச் சென்றவன், ஒரே தட்டில் உணவை இட்டு அவளுக்கும் ஊட்டி அவனும் உண்டான்.
ஏதாவது கூறுவானா என்று கண் பார்க்க.. அவனும் கண்ணைப் பார்த்தே ஊட்டி முடித்தான்.
அதன் பின்னும் நீண்ட அமைதி. மடியில் அமர்த்திக் கொண்டான். பேசுவனா என்று பார்க்க.. ம்ம்ஹூம்.. பேசவில்லை. ஏதோ யோசனையில் நேரம் கடந்தது. வந்து வாரங்கள் ஆகி இருக்க.. முன்பிருந்தது போல் இங்கு இருக்க முடியவில்லை தான். அதற்காக நேசம் குறைந்து விட்டது என்று அர்த்தமில்லையே- இது அவன் எண்ணம்.
படுக்கையில் கைவளைவில் வைத்துக் கொண்டான். மனைவி முதுகை மார்போடு சேர்த்து அணைத்துப் படுத்திருந்தான்.
நீண்ட மௌனம். கண் மூடி இருந்தாலும், இருவருக்கும் தூக்கம் தொலை தூரம் தள்ளி நின்றது. மாலையில் ஆரம்பித்த மௌனம்.. யார் உடைப்பது?
அவள் உடைத்தாள். “எனக்கு.. எனக்கு, என் தம்பிய பாக்கணும். அமர, சீமந்தத்துக்கு வர வைப்பீங்களா? எனக்குன்னு சொந்தம்ன்னு சொல்லிக்க ஒருத்தராது வேணும். அவன் சின்ன பையன் தான். ஆனா நான் அவன் அக்கா.. என் மேல கண்டிப்பா ரத்த பாசம் இருக்கும் இல்ல.. கூட்டிட்டு வருவிங்களா? அப்பாக்கு நான் மாசமா இருக்கது தெரியுமா?” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.
என்றிலிருந்து அப்பாவின் மகன் மேல் பிரியம்? அப்பா என்ற நபரைப் பற்றி இன்னுமா யோசிக்கிறாள்? ஏதோ ஏகப்பட்ட மன உளச்சலில் அவள் இருப்பது புரிந்தது.
உச்சந்தலையில் இதழ் பதித்துக்கொண்டான். மெல்ல நெஞ்சை நீவி விட்டான், மனைவியின் ஏக்கங்களும் தடுமாற்றமும் புரிந்தவனாய். ‘நான் இருக்கேன் துளசி’ என்று சொல்லாமல் உணர்த்த முயன்றான். உணர்ந்துகொண்டாள். மெல்ல மெல்லத் திடம் வந்தது பெண்ணிடம்.
ஏதோ இதற்குத் தான் காத்திருந்தது போல்.. அணைத்திருந்த கையை எடுத்து உதட்டில் பதித்துக் கொண்டாள்.
நெருங்கத்தை அதிகப்படுத்தினான்.
“துளசி மா..” என்றான்.
“ஒரு மாதிரி பயமா இருக்கு மூர்த்தி சார். என்னை விட்டுட மாட்டீங்களே. முன்ன எப்படியோ.. இனிமேல் தனியா போராட முடியாது மூர்த்தி சார். ரொம்ப பயமா இருக்கு.”
‘ஏன் இந்த திடீர் பயம்? புரியவில்லை? காலை கல்லூரி செல்லும் வரையிலுமே நன்றாக தானே இருந்தாள்?’ விடை தெரியவில்லை என்றாலும் அவள் கேள்விகளுக்கான பதிலை கொடுக்க முயன்றான்.
“முதல் குழந்தை.. இந்த பயம் இருக்கத் தான் செய்யும் துளசி.”
“உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்கும் இது தானே முதல்?”
“ரதி சொல்லுவா.. அப்படி தான் தெரியும். அனு ரொம்ப சண்டை போடுவா.. கோப படுவா.. திடீர்னு அழுவான்னு சத்யனும் சொல்லி இருக்கான். இந்த மூட் ஸ்விங் இருக்க தான் செய்யும். மாசங்கள் நகர நகர டெலிவரிய நினைச்சா எனக்கும் பயமா தான் இருக்கு துளசி. எல்லாத்தையும் சேர்ந்தே கடந்த மாதிரி இதையும் சேர்ந்தே கடப்போம். நான் உன் கூடவே இருப்பேன். எங்கேயோ.. ஏதோ மேஜிக் இருக்கணும் துளசி… அவ்வளவு வலியோட குழந்த பெத்து.. அந்த கஷ்டம் எல்லாம் தெரிஞ்சும் அடுத்த குழந்தையையும் ஆசை பட்டு பெத்துக்கிறாங்களே..”
“அது பாப்பா முகத்த பாக்கும் போது.. அத வாங்கி நெஞ்சோடு அணைச்சுக்கும் போது, அந்த மேஜிக் நடக்குமா இருக்கும்..”
இயல்புக்கு மீண்டிருந்தாள்.
“ம்ம்.. இருக்கும் இருக்கும். உன் மகன பார்க்க போற நாளை நினைச்சுக்கோ.. இந்த பயம் எல்லாம் போயிடும்”
“மகனா..?” அதுவரையுமே மூடி இருந்த கண் சட்டென்று விரிந்தது.
“ம்ம்… நீ வேணும்னா பாரேன் உன் ஆசை போல நமக்கு மகனே தான். நீங்க ரெண்டு பேர் செல்லம் கொஞ்சிறத பார்த்து, நான் காண்டாகி… அடுத்த வருஷமே எனக்கு ஒரு பொண்ண ரெடி பண்ணிக்கிறேன். சரியா?”
“ம்ம். போங்க மூர்த்தி சார்”
“அப்படி எல்லாம் உன்ன விட்டு போக மாட்டேன். உன்னையே சுத்தி சுத்தி வருவேன்…. என்னையே சுத்தி சுத்தி வர வைப்பேன்.”
உதட்டில் பதித்த கையில், முத்தம் கொடுத்து முடிக்கவில்லை.. முடிக்க முடியவில்லை. உணர்ச்சி பெருக்கில் குவித்த உதடு அப்படியே உள்ளங்கையில் ஆழப்பதிந்து நின்றது. அதனால், இன்னும் சத்தம் வரவில்லை. மூத்ததின் நீளம் நீண்டுகொண்டே போனது.
முத்தத்திற்குச் சத்தம் மட்டும் அல்ல.. ஆழம், நீளம், உணர்வு.. இருந்ததை கண்டுகொண்டான். முத்ததிற்குள் செய்தியை அடக்கி வைக்கமுடியும் என்பதையும் அறிந்துகொண்டான்.
“வெள்ளி சாயங்காலம் வந்துட்டு, ஞாயிறு சாயங்காலம் வரைக்கும் இருப்போம். இங்க இருக்கும் போது இங்கேயே சமைச்சு சாப்பிடுவோம். பாப்பா பிறந்து ரெண்டு வருஷம் முடியட்டும், மொட்டை மாடிக்கு ஏற்பாடு பண்றேன்..
காலம் மாறுது துளசி. நீ இன்னும் அதே குட்டி பொண்ணுல்ல. கல்யாணம் ஒரு ஆம்பிள்ளை வாழ்க்கையில அதிக மாற்றம் ஏற்படுத்தறது இல்ல. ஆனா பொண்ணுங்களுக்கு அப்படி இல்ல. இது வரைக்கும் ரெண்டு பேரா தனியா இருந்துட்டோம். இங்க, வெக்கேஷன் ஸ்பாட் மாதிரி வந்து போனோம். சோ.. வாழ்க்கை முறையில மாற்றம் இல்ல. ஆனா இப்போ வேரோட பிடுங்கி புது இடத்துல நட்ட செடி மாதிரி ஆகிட்டோம். எல்லாம் புதுசு! பழக நாள் எடுக்கும்.
ஸ்கூல் வேலை, மருமக, அக்கா,தங்கை, நாத்தனார், அம்மான்னு.. குடும்ப பொறுப்பு கூடிட்டே போகுது. என் குட்டி பொண்ணு பெரிய பொண்ணா மாறிட்டு இருக்கா. கூட்டம் அதிகமாக.. சந்தோஷம், துக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் எல்லாமே கூடும் குறையும்.. ஆரம்பத்துல ஏத்துக்கிறது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனா நம்மளால முடியும்.
இடம் மாற்றம்.. சுத்தி இருக்க சூழல் எல்லாமா உனக்கு அழுத்தம் குடுக்குது. இது போதாதுன்னு, ப்ரெக்னன்சி ஹார்மோன் சேஞ்சஸ்..
எனக்கும் நிறைய பொறுப்பு.. ஸ்கூல் வேலை.. புது காலேஜ்.. புது ஆட்கள்… ஒரு விஷயம் நினைச்சா, நினைச்ச மாதிரி நடக்க மாட்டேங்குது! அது தான் சட்டுன்னு கோப பட்டிடுறேன் போல. இனி மேல் கவனமா இருந்துகிறேன்.
நான் உன்னோட அதே மூர்த்தி சார் தான். கோபப்பட்டா.. பிடிக்கலன்னு அர்த்தமில்ல. வேலைய ஒழுங்கா மேனேஜ் பண்ண தெரியாம முழிக்கறேன்னு கூட அர்த்தம் இருக்காலாம் இல்லையா? நானும் உன்ன மாதிரியே கொஞ்சம் பயம்.. கொஞ்சம் குழப்பம்ன்னு, விழி பிதுங்கி தான் நிக்கறேன் துளசி மா..”
“..”
“இனி மேல் எப்போவும் கட்டிகிட்டே அலைய முடியாது. உன்ன தூக்கினாலோ.. கொஞ்சினாலோ.. கட்டிகிட்டாலோ.. நடுவில சண்டைக்கு நீ பெத்து போடற மூணும் வந்து நிக்கும்.
நான் தள்ளி நின்னாலும்.. உன் கண்ணு முன்னால இல்லாம போனாலும், அப்பவும்.. உன்ன மட்டுமே நினைக்கிற.. உன்னோட அதே மூர்த்தி சார் தான் நான்னு நீ தான் புரிஞ்சுக்கணும். புரிஞ்சுப்பியா?” அணைப்பை அதிகபடுத்தி, அவன் கூறிக்கொண்டிருக்க..
குவிந்த உதடு உள்ளங்கையில் சத்தம் எழுப்பியது. மீண்டும் மீண்டும் முடிவில்லா நீஈஈஈள முத்தம் கொண்டு, நன்றியையோ… ‘சாரி’யையோ… இல்லை இரண்டையுமோ… காதலாய் கடத்திக் கொண்டிருந்தாள்.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை…