செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 44_1
“ஏன் மூர்த்தி சார்.. அவசரமா மெட்ராஸ் போய் தான் ஆகணுமா?”
“ரதி என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் துளசி மா..”
“ப்ச்! அவ்வளவு பெரிய வீடே காலியா இருக்கு. என்னவோ போல இருக்கு. எல்லாரும் வந்த பிறகு போலாமில்ல..”
“என்னடாமா பேசற? பெரியண்ணா பசங்க இங்க தான் சுத்திட்டு இருங்கானுங்க. அக்கா குடும்பம் பூரா இருக்கு. எல்லாத்துக்கும் மேல செல்வன் இருக்கான். நாளைக்கு பூரா உன் கூடவே இருக்கேன்னு சொல்லி இருக்கான். அப்புறம் என்ன?”
“இப்போவே போகணும்ன்னு என்ன அவசியம்?” மெல்லச் சிணுங்க ஆரம்பித்தாள்.
“குழந்த பிறந்ததுக்கே போகல. தொட்டில்ல போட போறாங்க… போகாட்டா நல்லா இருக்காது துளசி.”
“நானும் வரேனே..” முகம் கெஞ்சலை தத்தெடுத்தது.
“வேண்டவே வேண்டாம். ஆறு மாசத்துக்கே வயிறு ரொம்ப பெருசா இருக்கு. டாக்டர் என்ன சொன்னாங்க? அலைச்சல் கூடாது. ஒண்ணு பண்ணலாம். நீ இங்கேயே இரு. செல்வனும், பசங்களும் அங்க இருக்கட்டும். உனக்குத் துணையா அக்காவும் பிள்ளைங்களும் இங்க இருப்பாங்க. சின்ன இடத்துல எல்லாரும் ஒண்ணா இருந்தா.. நேரம் போறதே தெரியாது. உன் மரத்த நீ நாலு தரம் சுத்தி வரதுக்குள்ள நான் வந்திடுவேன். தூக்கம் வந்தா வீட்டில வந்து தூங்கு! மரத்தடியிலேயே படுத்திடாத புரியுதா?”
“ம்ம்..” முகம் தெளியவில்லை.
“ரெண்டே நைட்.. ஒரே ஒரு பகல் தானே துளசி மா”
“ம்ம்..”
“என்ன ம்ம்ம்?”
“சரி சரி.. போயிட்டு வாங்க. சாயங்காலம் தானே போகணும். கொஞ்ச நேரம் படுப்போம். தூக்கம் வருது.”
கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள் மெல்லப் படுக்கையில் சாய்ந்தாள். வயிறு, ஆறு மாதத்திற்கு சற்று பெரியது தான். ‘இரட்டையா’ என்று பலர் கேட்டும் விட்டனர். இல்லை என்றதற்கு, ‘குழந்த நல்ல பெருசா இருக்கும் போல’ என்று சிலர் கூற.. அதனாலேயே, கண் பட்டுவிடுமோ என்று மருமகளை ஒருவர் கண்ணிலும் காட்ட முத்து பிரியப் படுவதில்லை.
கண் மூடி இரண்டு நிமிடம் கழிந்தது.. கண் மூடிய வாக்கிலேயே இருக்க, “மூர்த்தி சார்?” என்றாள்,
மதியம் போல் அனைவரும் உண்டு பெரிய வீட்டில் முடங்கியிருக்க… இவர்கள் மட்டும் தோட்ட வீட்டில். ஒருத்திக்கு உறக்கத்தில் கண் சொருகினாலும்.. அவள் கணவன் அவளை விட்டானில்லை.
“ம்ம்..?”
“புடவைய விடுங்க.. தூங்கணும்”
“ப்ச்..”
“இன்னும் எவ்வளவு நேரம் தான் இந்த வயிறயே பார்த்திட்டு இருக்க போறீங்க? நான் வேணும்னா இந்த புடவையை கழட்டி வச்சிட்டு தூங்கட்டா… நீங்க உங்க மகன ஆச தீர பாருங்க! எனக்கு கண்ண கட்டுது.”
“பொண்ணு துளசி… மகன் இல்ல.. மகள்! சொல்லு.. ‘உங்க மக’!”
“ம்ம்கும்..”
“கை.. கால்.. குட்டி குட்டி விரல் எல்லாம் முளைச்சிருக்கும் இல்ல..”
“ம்ம்…”
“ஆறு மாசம் ஆகுது. எப்போ பாப்பா அசைவ காட்ட போற?”
“அது அசையும் போது நீங்க இருந்தா காட்ட போறேன். அதையே பார்த்துட்டு இருந்தா அசையும்ன்னு யார் சொன்னது உங்களுக்கு?”
“என்னவோ போ… ஆமா நீ ஏன் முதுகில படுத்திருக்க? சைடா படு.”
“முதுகு வலிக்குது மூர்த்தி சார்… நீங்க கொஞ்சம் வாய மூடிட்டு படுங்க… படுக்க வேண்டாம்ன்னா, என் வயிறுல இருந்து கைய எடுத்துட்டு என் கால பிடிச்சு விடுங்க.”
“ம்ம்ஹும்ம்ம்… லெஃப்ட் சைடா படு. பிடிச்சுவிடுறேன். இப்பிடி படுத்தா இன்னும் தான் முதுகு வலிக்கும்.”
படுத்தவள், காலை மடியில் ஏந்திக்கொண்டு அதை பிடித்துவிட்டாலும்.. வாய் மூடவில்லை. “எப்படியும் முக்கால் முழ நீளம் இருப்பா இல்ல. இடம் பத்துமா?”
“பாப்பா-க்கு வேணுங்கற இடத்த அதுவே எடுத்துக்கும்… நான் வச்சுகிட்டு வஞ்சகம் பண்ண மாட்டேன்.. ஏற்கனவே வயிறு அண்டா மாதிரி தான் இருக்கு! இருக்க இடத்துல அத சுருண்டு படுத்துக்க சொல்லுங்க. இதுக்கு மேல தாங்காது!”
“என்ன பேச்சு.. அண்டா குண்டான்னு..?”
“தனியா இருக்க நேரத்தை எல்லாம் இப்பிடி பேசியே என்னை டார்சர் பண்றீங்க.. வந்து படுங்களேன்.”
அவன் காதில் விழவில்லையோ..
“நாலே மாசம் துளசி. உன்ன மாதிரியே புசுபுசுன்னு குட்டியா என் கைக்குள்ள. முத்தம் குடுக்க தெரியாம, என் முகம் பூரா எச்சில் பண்ணி.. அப்பான்னு கூப்பிடாம ப்பா ப்பான்னு அவ மழலைல கூப்பிடுற அந்த சத்தம் கேக்க அவ்வளவு ஆசையா இருக்கு.
தங்கத்த கைல எடுக்கும் போதே அப்படி ஒரு சந்தோஷம் எனக்குள்ள. ஆனா.. இது வேற. என் மக. என் துளசியோட குட்டி சைஸ்..” சிரித்தான்.. “என் பட்டு அம்மு குட்டி.. என் குட்டி கண்ணம்மா..” வயிற்றில் முத்தம் பதித்தான்.
“போதுங்க… என்னால முடியல உங்க பாப்பா புராணம்.. இந்த வயிற தவிர வர வர உங்களுக்கு எதுவும் தெரிய மாட்டேங்குது..”
“அலுத்துக்காத துளசி மா…”
“பின்ன என்ன? எப்போ பாரு குழந்த.. வயிறு.. இத தவிற நான் இருக்கேன். தெரியுதா? போங்க.. போங்க.. நீங்க என்னவாது பண்ணுங்க… வர வர என் அருமையே உங்களுக்கு தெரியல. நீங்க உங்களுக்கு இஷ்ட பட்ட ஆள கொஞ்சுங்க.. நான் கோவிச்சுகிட்டு தூங்கறேன்..”
“குழந்த கூட போட்டிப் போடாத துளசி மா. அவ என் ஹேப்பினஸ்..” தடவிக் கொண்டிருந்த சிப்பி வயிற்றில் மீண்டும் இதழ் பதிக்க.. காண்டாகிப் போனாள்.
“ம்கும்.. இப்போவே இவருக்கு என்னை தெரியல! பொண்ணு மட்டும் பிறந்தா நான் எல்லாம் கண்ணுல தெரிவேனா?”
கண் மூடி படுத்திருந்தவள் வாய் முணுமுணுத்து..
“ரெண்டு நாள்.. பொண்டாட்டி இருக்க மாட்டாளேன்னு கொஞ்சமாது தோணுதா? என்ன மனுஷனோ.. ஒரு ஆசை பார்வை.. காதல் வார்த்த.. கொஞ்சம் இப்படி அப்பிடின்னு ஏதாவது? அவ்வளவு தான் துளசி நீ கொடுத்து வச்சது!” புலம்பிக்கொண்டே கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்.
மூடிய இமை சட்டென்று திறக்க…
“மூர்த்தி சார்…?” என்றாள்.. கேள்வியாய்
“எனக்கு உன்ன தான் ரொம்ப பிடிக்கும் துளசி மா.. சந்தேகப் படாத! மீறி சந்தேகப்பட்ட.. அப்புறம் இப்படி தான் டார்ச்சர் அனுபவிப்ப.” மிரட்டினான்.
“போங்க மூர்த்தி சார்..” சிரித்தாள்.
அடுத்தடுத்தும் ‘மூர்த்தி சார் மட்டும் தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் அவன் நாமத்தை உச்சரித்தாள். அந்த அழைப்பில்… அந்த உச்சரிப்பிலேயே என்றும் போல் இன்றும் அவனுக்கு அவள் மனதை உணர்த்தி கொண்டிருந்தாள்.
அடுத்த “மூர்த்தி சார்” குழைவாய்..
“மூர்த்தி சார்” சிணுங்கலாய்..
“மூர்த்தி சார்” மயக்கமாய்..
“மூர்த்தி சார்” மோகமாய்..
“மூர்த்தி சார்..” காற்றாய்..
“மூ..ர்..த்தி சார்…” சத்தம் வருவேனா என்றது.
அந்த திடகாத்திரமான மகிழம் பூ மரத்தை தன் மெல்லிய கோடி கொண்டு பற்றிப் பிடித்துப் படர்ந்து பூத்துக் குலுங்கியது இருவாட்சி. இரண்டு மலர்களின் வாசமும் ஒன்று சேர்ந்து இடத்தை நிறைத்தது.
மலர்களை தொடுத்துக் கொண்டே, “ஏங்க.. வீட்டில எல்லாரும் அவங்க பொண்டாட்டிய டி போட்டு கூப்பிடுறாங்க. ஆனா நீங்க மட்டும் அப்படி கூப்பிடுறதே இல்ல..? என்னை மட்டும் தானே அப்படிக் கூப்பிட முடியும். கூப்பிட்டா தான் என்னவாம்?” அவள் ஆசையை முன் வைத்தாள்.
“காலேஜ் ப்ரொபஸர் நான். நானே பொண்டாட்டிய மரியாத இல்லாம கூப்பிடலாமா?” அவள் ஆசையை நிறைவேற்ற போவதில்லை என்று மொழிந்தான்.
“ப்ச்.. மத்தவங்கள டி போட்டா தான் மரியாதை இல்லாத மாதிரி இருக்கும். ஆனா தனியா இருக்கும் போது என்னை அப்படி கூப்பிட்டா அது அர்த்தமே வேற. உரிமையா.. ஆசையா.. நேசமா..”
“போதும் போதும் லிஸ்ட் நீளுது. அந்த மாதிரி எல்லாம் என்னால முடியவே முடியாது.” மறுத்துவிட்டான்.
மரத்துக்கு அருகே, பத்துக்கும் மேற்பட்ட பன்னீர் ரோஜா செடிகளைப் பார்த்தவனுக்குச் சந்தேகம். “ரோஜா நர்சரி ஆரம்பிக்க போறீயா?”
“பதியம் போட்டு தங்கம் கொண்டு வச்சிருக்கா. என்னால நட முடியாது.. அவ நேரம் கிடைக்கும் போது வந்து நடறேன்னு சொல்லி இருக்கா. அது மட்டும் பூக்க ஆரம்பிக்கட்டும்… எப்பவும் அதுக்கு நடுவில தான் இருப்பேன்.”
“விட்ட இங்கேயே குடியும் குடுத்தனமுமா இருந்திடுவ போல..”
“நீங்க குடின்னு சொல்லவும் நினைவு வருது. இந்த மஞ்சு பொண்ணு வீட்டுல நடந்தது தெரியுமா? இந்த மருது.. எவன் கிட்டயோ கடன் வாங்கியிருப்பான் போல. அவன் குடிச்சுட்டு மருது வீட்டுக்கு வந்திருக்கான். அப்போ மருது வீட்டுல இல்லையா.. வந்தவன் ஏதோ பேச.. வீட்டுல இருந்தவங்க ஏதோ பேசன்னு வாக்குவாதம் வந்து, கைகலப்பாகிடுச்சு. தகராறு நடுவில, இந்த மஞ்சு பொண்ணு மாட்டிகிட்டாளா.. அவன் அவள பிடிச்சு தள்ள போய் அவளுக்கும் நல்ல அடி போல. இப்போ அவ ஹாஸ்பிட்டல்ல. நிறைமாசமா.. அதனால் ரொம்ப சிக்கலாம். பிழைச்சா போதும்ன்னு அவ மாமியார் வருத்தபட்டு சொன்னாங்க. நீங்க மெட்ராஸ் போயிட்டு வாங்க.. போய் பார்த்துட்டு வருவோம்.”
“ம்ம்..”
“அந்த ஆள் சரி இல்லங்க. பாவம் அந்த பொண்ண ரொம்ப அழ விட்டான். இப்போ அவ நினைவில்லாம கிடக்கிறா… இவன் கண்ணீர் விட்டுட்டு இருக்கான். இருக்கும் போது அருமை தெரியாது இவனுங்களுக்கு.”
“ம்ம்”
“என்ன புருஷனோ..? பொண்டாட்டி பக்கத்தில உக்காந்து கண்ண கசக்கிட்டு. அவள படுக்கையில போட்டுட்டு, அவன அழ விட்டவன ஒரு வழி ஆக்கிட்டுல்ல அவ முகத்தை பார்த்திருக்கணும். ச்ச! தப்ப தட்டி கேட்காதவன் எல்லாம் என்ன மனுஷனோ? அட்லீஸ்ட்.. அவன் பலத்துக்கு, பொண்டாட்டிய படுக்க வச்சவன் மூக்கை மட்டுமாவது பேத்திருக்க வேண்டாமா? அவ கண்ண திறக்கும் போது இப்படி ஒரு கண்ணீர் விடுற கோழையவா பாக்கணும்?”
“ரொம்ப.. பேசற துளசி… அது அவங்க வாழ்க்கை. நீ கூர் போடாத. அவன் நிலைமையோ… பிரச்சினையோ நமக்கு தெரியாது. அவன் பொண்டாட்டி உயிருக்குப் போராடும் போது அவன் லூசு மாதிரி.. பழி வாங்க போவானா? புரியாம பேசாத.”
“அது பேரு பழி வாங்கிறது இல்ல. அனியாயத்த தட்டி கேக்கிறது! அவ செத்த பிறகாவது போவானா? நமக்குனாலும் இது தான் மூர்த்தி சார். உங்கள யாராவது ஏதாவது பண்ணினா.. அவன் மண்டையை உடைச்சிட்டு தான் உங்க முகத்தில முழிப்பேன். அதுவரைக்கும் உங்க கிட்ட கூட வர மாட்டேன். நீங்க ஒரு வீர மங்கைக்கு வாழ்க்கை பட்டிருக்கீங்க மூர்த்தி சார்! மூக்க உறுஞ்சுகிட்டு ஒரு கோழை மாதிரி நிக்க மாட்டேன்…” வீர வசனம் பேசினாள்.
“போதும் நிறுத்து துளசி மா… என் கிட்டேயே அளந்து விடாத. சிரிச்சிட போறேன்..”
“என் கோபம் உங்களுக்கு சிரிப்பா?” மஞ்சுவை படுக்கையில் போட்டவனுக்கு வசதி அதிகம் என்பதால், கேட்பார் இல்லாது வெளியே சுற்றித் திரிகிறான். அவனை எதிர்த்து ஒரு விரலைக் கூட உயர்த்தாமல் அழுதுகொண்டிருக்கும் மருது மேல் துளசிக்குக் கோபம். அது ஏன் மூர்த்திக்குப் புரியவில்லை? புரியவைக்கும் நோக்கத்தில் அவள்!
“உன் கோபம் நியாயம் தான் துளசி மா. மருது போய் அவன் மூக்க பேத்துட்டு வந்து மஞ்சுவை பார்த்திருக்கணும். அத செய்யாத மருது முகத்தில கண்டிப்பா மஞ்சு விழிக்க விரும்பமாட்டா! தப்பு பண்ணிட்டான்” என்று சரண்டர் ஆகி.. கை கொண்டு, அவள் வாயைப் பொத்தும் வரை அவள் ஓயவில்லை.
“உனக்கு வாயே வலிக்காதா துளசி… ஆனா நீ பேசிறத கேக்கவும் நல்லா தான் இருக்கு.. நல்லா குயில் கூவுற மாதிரி.”
அவனை முறைக்க… “என்ன முறைப்பு?” அவன் விழிக்க..
எங்கிருந்தோ குயில் கூவியது.
“அது நிஜமாவே குயில் சத்தம்! நீங்க என்னை ரொம்ப நக்கல் பண்றீங்க, மூர்த்தி சார்! ” கோபித்துக் கொண்டாளாம்.. முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இல்ல துளசி மா… நிஜமாவே நீ பேசறதே கேட்டுட்டே இருக்கலாம் போல தான் இருக்கு. பொய் சொல்லலை.” சமாதான கொடி ஏற்றி பறக்கவிட்டான்.
திருப்தியானவள், மீண்டும் ஆரம்பித்தாள்..
“எனக்கு குயில் பிடிக்காது, மூர்த்தி சார். சோம்பேறி! காக்கா கூண்டில முட்டைய போட்டுட்டு ஹாயா போயிடும்.” என்றாள்.
ஒரு நொடி நிலைக்காத அவள் கோபமும் வியப்பு தான் அவனுக்கு. “அப்போ இருவாச்சி பிடிக்குமா?”
கேட்டவனை வித்தியாசமாகப் பார்த்தாள். “பிடிக்கிறனால தானே.. அது பூக்க ஆரம்பிச்சதும் தினமும் கட்டி தலையில வைச்சுக்கிறேன்..”
“பறவையைப் பத்தி பேசும் போது.. பூ பத்தி பேசுற? ‘க்ரேட் ஹார்ன் பில்’ தான் இருவாச்சி பறவை.”
“தெரியாதே..”
“எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அலகு அவ்வளவு பெருசு!
இணையோட வாழற பறவை இது. இனப்பெருக்க காலம் வந்ததும் உயரமான மரத்தில இருக்க பொந்த செலக்ட் பண்ணும். பெண் பறவ பொந்துக்குள்ள போனதும்.. ஆண் பறவை, அது இணைக்கு சாப்பாடு குடுக்க கொஞ்ச இடம் மட்டும் விட்டு வச்சுட்டி, அந்த பொந்தோட துவாரத்த அது எச்சம் வச்சு அடச்சிடும்.
பெண் பறவ அதோட இறக உதிர்த்து படுக்கை அமைச்சு அதுல தான் முட்டப் போடுமாம்.
சுமார் ரெண்டு மாசம்.. இரவு பகல்.. வெயில் மழைன்னு பாக்காம… இந்த ஆண் பறவ கொஞ்ச தூரத்தில இருந்து அதோட பொண்டாட்டி பிள்ளைகள காவல் காக்கும்.
வேளா வேளைக்குச் சாப்பாடு கொடுக்கிறதும்.. குடும்பத்தைக் காவல் காக்கிறது மட்டுமே அது வாழ்க்கைன்னு அந்த ரெண்டு மாசமும் வாழும்.
முட்டை பொரிச்சதும்… பெண் பறவை வெளியில வந்தாலும், அதுக்கு சத்து வந்து பறக்கிற வரைக்கும் ஆண் பறவை தான் அதுக்கு பழம் எடுத்துட்டு வந்து வாயில ஊட்டும். அப்புறம் ரெண்டும் சேர்ந்து குட்டிய பாத்துக்கும்”
கதையை ஆர்வமாக கேட்டவள், பொறுமையாக, “அதுக்கு பேரு இருவாச்சி இல்ல மூர்த்தி சார்” என்றாள்.
“இருவாச்சி தான் எனக்கு நல்லா தெரியும் துளசி..”
கையிலிருந்த பூ சரத்தை அவனிடம் கொடுக்க.. சூட்டி விட்டான்.
“ஒழுங்கா படிச்சு பாருங்க. அதுக்கு பேரு மூர்த்தியா இருக்கும்” என்றாள், படு சீரியஸாக.
“துளசி மா..” நெகிழ்ந்து போனான்.
மடியில் அமர்ந்து கொண்டாள். கன்னத்தில் முத்தம் பதித்தாள். “ரொம்ப தாங்க்ஸ் மூர்த்தி சார்” தொண்டை அடைத்தது.
“ச்சு.. என்ன பேச்சிது?”
“பொண்டாட்டியை பார்த்துக்காத மருதுக்காக பேசறீங்க. ரெண்டு மாசம் பாத்துக்கிற பறவையை அப்படி பேசறீங்க. அப்போ நான் உங்கள் பத்தி மட்டும் தானே பேசிட்டே இருக்கணும். உங்களுக்கு தாங்க்ஸ் சொன்னதே இல்ல. ஆனாலும் மனசு முழுக்க அந்த ஃபீலிங் இருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்! நீங்க இல்லேனா.. நான் இல்ல மூர்த்தி சார்.”
கண்ணில் மெலிதான நீர் படலம் மின்னியது. ஆத்மார்த்தமாக, முழு உணர்வையும் முகத்தில் தேக்கி அவள் பேசவும், அவன் வாயடைத்துப் போனான்.
“நான் எங்கேயாது கிளம்பறேன்னா போதும் என் பொண்டாட்டி எமோஷனல் ஆகிடுவா. மனுஷனால அப்புறம் எங்க நிம்மதியா இருக்க முடியும்? வந்து உன் முகம் பார்க்கிற வரைக்கும் உன் நினைப்பாவே போகும்.”
“ம்ம்ம்.. அது தான் ப்ளான் மூர்த்தி சார்” சிரித்தாள்.
“ரெண்டு நாள்ல உங்க பர்த்டே மூர்த்தி சார். ஞாபகம் இருக்கா? ஏமாத்தாம வந்திடுவீங்க இல்ல..?”
“இன்னைக்கு எட்டாம் தேதி. நாளைக்கு தொட்டில்ல குழந்தைய போட்டதும், சாயங்கால ட்ரெயின்ல கிளம்பி, சரியா பத்தாம் தேதி காலையில இங்க இருப்பேன்..”
“காலையில நீங்க இங்க வந்ததும்..இதே மரத்தடியில உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருவேன்..”
“சர்ப்ரைஸ்சா..? என்னன்னு இப்போவே சொல்லேன்..”
“இப்போ இல்ல.. பத்தாம் தேதி உங்களுக்காக இந்த மகிழம் பூ மரத்தடியிலேயே காத்திருப்பேன்.. வந்து சேரனும் சரியா? ஏமாத்தக் கூடாது.”
“ம்ம்”
“என்ன ம்ம்ம்.. கண்டிப்பா இங்க தான் வரணும். பெரிய வீட்டுக்குப் போக கூடாது.”
“சத்தியமா.. நேரா இங்க தான் வருவேன்.. போதுமா?”
“ஷ்ஷ்ஷ்ஷ்.. பாப்பா..” கணவன் கையை வயிற்றில் வைத்துக்கொண்டாள்.
“மூர்த்தி சார்… உங்களுக்கு தெரியுதா?” மடியில் இருந்துகொண்டே அண்ணாந்து பார்த்தாள்.
கொஞ்சும் விழியில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்.
வயிற்றில் சின்ன அசைவு தெரிந்தது. தவம் கிடந்த தருணம். உடல் சிலிர்த்தது. “ம்ம்..” உள்ளம் பூரித்துப் போனது.
மூர்த்தியின் சட்டைப் பையிலிருந்த சிகப்பு பொதியைக் கையில் எடுத்து கொண்டாள்.
“இது நீங்க ஆசை பட்டது.. உங்க பொண்ணுக்காக. அதனால இது அவளுக்கு தான். ரதி மேடம் பாப்பாக்கு அங்க போய் செயின் வாங்கிக்கோங்க”
“துளசி மா..”
“நீங்க எனக்கு நிறைய செஞ்சுட்டீங்க மூர்த்தி சார். நான் கடவுள தினமும் வேண்டிக்கிறேன்.. என் காதல் பரிசா உங்களுக்கு ஒரு பொண்ண பெத்துக் கொடுக்கணும்னு.”
விளையாட்டு மனநிலை முற்றிலும் மாறிப்போனது. உள்ளுக்குள் இறங்கியவள் உள்ளே சென்று படுத்தி எடுத்தாள். “கிளம்புற நேரம் என்னைக் கொல்லாத துளசி மா.. நீ இப்படி எல்லாம் பேசினா, உன்னையே நினைச்சிட்டு.. போற இடத்துல ஒரு வேலையும் ஓடாது”
“என்னையே நினைச்சுகிட்டா? அப்போ உங்க பொண்ண?” பதில் தெரிந்தே அழகாய் சிரித்தாள்.
அந்த சிரிப்பில் ஏதோ கலந்திருக்க வேண்டும். அவனால் விழியை திருப்ப முடியவில்லையே.. அவன் உடலும் உள்ளமும் அவளையே சுற்றியதே.. என்ன மாயம் செய்கிறாய் துளசி?
அவள் சிரிப்பில், அசையும் காற்றின் அரவம் கேட்டான்.
மழை துளிக்கு சிரிக்கும் மலரை, அவள் கண்களில் கண்டான்.
தொண்டை குழியின் வாசத்தில் புதைந்து போனான்.
நாளை இல்லை என்பது போல் இன்றோடு உலகம் அழிந்து போக போவது போல் தீரா தாகத்தைத் தணிக்கும் முயற்சியில், தன்னவளை உணர, இறுக அணைத்துக் கொண்டான்.
“எனக்கு நீ தான் துளசி… நீ மட்டும் தான். உனக்கு அப்புறம் தான் எல்லாமே.. என் உடம்பில உயிர் இருக்க வரைக்கும் நீ மட்டும் தான்.” வசியம் செய்து பிதற்ற வைத்தாள்.
“அடுத்து உன்ன பார்க்கிற வரைக்கும்..”, அவன் ஐம்புலன்களையும் ஆட்டி படைத்தவள், உதட்டில் தெவிட்டா காதல் கவிதை படைத்தான்.
பெண்ணின் கன்னகதுப்பில் தன்னை தொலைத்தான்.
அவள் வாசத்தோடு.. ஒன்று சேர்ந்த மூச்சுக் காற்றோடு..
“மூர்த்தி சார்…” “துளசி..” என்ற சத்தம், மகிழம் பூ மரத்தடியை நிறைத்தது.
இதயமும் இரத்தமும் போல் துளசியும் மூர்த்தியும்… இதில் எதைப் பிரித்தாலும் மற்றது செயலிழந்து விடும்.. அது இருவருக்கும் தெரியும்.