மாயாவி 19 :::
வாழ்க்கை உனக்கு…
தந்த வலிகளையும்…
தனிமையையும் தகர்த்தெறிய…
உன் நட்பு கொடுத்த துணையை…
கூட நான் கொடுக்காமல் போனதற்கு!
என்னையே எனக்கு எதிரியாக்குகிறாயே!
என்னடி மாயாவி நீ !
நால்வரும் உணவருந்தி முடித்ததும் சிறிது நேரம் ஓய்வெடுக்க,
“ஏன் சீனியர்? இவர் எப்படி உங்க பிரெண்ட் ஆனாரு? இரண்டு பேருக்கும் ஒத்து போற மாதிரி ஒரு விஷயம் கூட இல்லையே? அப்புறம் எப்படி?” என்றவளின் கேள்வியில் குழலி கவி இருவரின் முகமும் புன்னகையில் விரிய அமுதனும் இதை முன்னே யோசித்திருந்ததால் அவனும் அவர்களின் பதிலை ஆர்வமாக எதிர்நோக்கினான்.
“ஒரு சில காரணத்தால நான் மறுபடியும் முதல் வருஷத்தில இருந்து காலேஜ் சேர்ந்தேன்… சார் ஏற்கனவே ஸ்கூல் படிக்கும் போதே ஒரு வருஷம் கேப் போல அதனால் அவரும் அப்ப தான் முத வருஷம். ஆனால் அதை வெளிய காட்டிக்காத போல பந்தா…”
“அப்ப இருந்த மனநிலையில நான் யார்கூடவும் பேச மாட்டேன்… ஹாஸ்டெல்ல தான் தங்கி இருந்தேன்.. இவன் ஒரு வருஷம் முடியறதுக்குள்ளவே பசங்க கூட வெளிய ரூம் எடுத்து தங்க ஆரம்பிச்சுட்டான்…”
“கிளாஸ் பசங்க கூட சேர்ந்து அப்ப அப்ப என்னை வம்பிழுப்பான்… கோவம் வர்ற மாதிரி, சிரிக்க வைக்கற மாதிரின்னு ஏதாவது பண்ணி என்னை பேச வைக்க முயற்சி பண்ணவன் கடைசியில் என்னை அவன் கூட பேச வைச்ச அப்புறம் தான் விட்டான்…”
“உனக்கு தான் தெரியுமே காலேஜில யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சனைன்னா சார் தான் முதல்ல போய் நிற்பாருன்னு… சீனியர் என்னை கூப்பிட்டு ராகிங் பண்ண அப்ப சார் தான் வந்து…”
“சீனியர் அவங்க உங்க ஏஜ் குரூப் தான்… லேட்டா இங்க சேர்ந்திருக்காங்க.. நாங்களே அவங்களை அக்கான்னு தான் கூப்பிடறோம்… நீங்க சின்ன பொண்ணுன்னு நினைச்சு ராகிங் பண்ணிடாதீங்கன்னு… என்னவோ என்னவோ சொல்லி அங்கிருந்து என்னை கூட்டிட்டு வந்தான்…”
“நான் உங்களை விட பெரிய பொண்ணுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்னு நானா கேட்க…”
“அப்ப அது உண்மை தானா? நான் ஏதோ உன்னை காப்பாத்த அப்படி சொன்னேன்… நீயும் என் இனமா? நானும் உன் வயசு தான்னு சொன்னவன்… முன்ன விட அதிகமாக என்னை வம்பிழுக்க ஆரம்பிச்சான்… நான் எங்க இருந்தாலும் தூரத்துல எங்காவது பசங்களோட நின்னுட்டு இருப்பான்…”
“அப்ப அப்ப வந்து பிரெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்னு கையை நீட்டுவான்… அப்ப இருந்த மனநிலையில அதை எல்லாம் ஏத்துக்கற அளவுக்கு நான் இல்லை… அதனால அவனுக்கு பதில் கூட சொல்லாம போயிடுவேன்…”
“லீவு நாள்ல ஒருநாள் கடைக்கு போயிருந்தேன்… எனக்கு பெங்களூர் புதுசு… நான் போன ஏரியால ஏதோ கட்சி மீட்டிங் நடந்துட்டு இருந்துச்சு போல… சரி வந்துட்டோம் தேவையானதை வாங்கிட்டு போகலாம்னு கடைக்குள்ள போயிட்டு ஹாஸ்டல் போகலாம்னு கிளம்பறேன் திடீர்னு ரோட்ல ஏதோ பரபரப்பு…”
“அந்த மீட்டிங்கில் ஏதோ அவங்களுக்குள்ள தகராறு… அதுல நடுவுல மாட்டிக்கிட்டேன்… எப்படி அங்கிருந்து போறதுன்னு தெரியாம அப்படியே நின்னுட்டேன்… அங்கிருந்த சேர் எல்லாம் பறக்கவும் பக்குன்னு இருந்தது”
“திடீர்னு என் கையை யாரோ பிடிச்சு இழுத்திக்கிட்டு ஓடறாங்க… எனக்கு ஒன்னும் புரியல… அந்த இடத்துல இருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்த அப்புறம் என்னை கூட்டிட்டு வந்தது யார்னு பார்த்தா இவன் நிற்கிறான்…”
“என்னை கண்டமேனிக்கு திட்ட ஆரம்பிச்சான் என்றபடி அன்று அவன் திட்டியதற்கு இன்று அவன் தலையில் கொட்டினாள்… அவனோ தலையை தேய்த்தபடி,
“பின்ன எப்ப பாரு மூஞ்ச தூக்கி வைச்சிகிட்டு ஏதோ வாழ்க்கையே போன மாதிரி சோகமா தனியா உட்கார்ந்திட்டு இருந்தா பார்க்கற எங்களுக்கு கடுப்பாகுதுல்ல… அதுக்கு தான் அப்ப அப்ப வம்பிழுப்பேன்…
“அந்த கலவரம் அப்ப அப்படியே அசையாம நிற்கறா… அதான் திட்டினேன்… நான் திட்டின திட்டுக்கு மேடம் மறுநாளே வந்து பிரெண்ட்ஸ்னு எனக்கு கையை நீட்டினாங்க…” சிரிப்போடு சொன்னான்.
“ம்ம்ம்! ஆமா அப்ப எனக்காக என் பிரெண்ட் இருக்கான்னு எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது இவன் தான்… அதுக்கு அப்புறம் படிக்காம சும்மா வெட்டியா சுத்தறது, பசங்க கூட சேர்ந்து கலாட்டா, ஏதாவது பிரச்சனைன்னா முன்னாடி ஆஜராகிறதுன்னு இவனுக்கும் எனக்கும் எப்பவும் சண்டை வரும்…”
“இவன் எப்பவும் எல்லாத்தையும் சுலபமா எடுத்துக்கற ஆளு இந்த நேரம் சந்தோஷமா இருக்கோமா அவ்வளவு தான்… நாளைக்கு கதை நாளைக்கு பார்த்துக்கலாம்னு இருக்க ஆளு… நான் அப்படியே எதிர்…”
“அதனால எங்க இரண்டு பேருக்கும் எப்பவும் முட்டிக்கும்… ஆனால் கடைசி வரைக்கும் என்னை இவன் விட்டுக்கொடுக்கவும் இல்லை என்னை விட்டு போகவும் இல்லை…” என்று பெருமையாக சொன்னவளை பார்த்த கவி,
“பின்ன என் கிரகம் உன்கூட கடைசி வரைக்கும் பிரெண்டா குப்பை கொட்டணும்னு இருக்கு…” என்றவனின் குரலில் அதை குறித்த மகிழ்வே இருக்க, சரசும் அமுதனும் அவர்களின் பிணைப்பை ரசனையோடு பார்த்தனர்.
கவிக்கு திடீரென போன் வர அவன் கிளம்பியதும் குழலி தொடர்ந்தாள்.
“அவன் சொன்னான்ல வாழ்க்கையே போன மாதிரி இருந்தேன்னு அப்ப என் வாழ்க்கை போய் தான் இருந்தது… என் விஷயம் தெரிஞ்ச அப்புறம் நீ ஏன் இப்படி இறுக்கமாக இருக்க, இப்படி ஒரு பிரச்சனை நடந்தா இப்படி தான் இருக்கணுமா என்ன? நீ நீயா இரு… சந்தோஷமா சிரிச்சுட்டு இருன்னு என்னை எப்பவும் சிரிக்க வைக்கறவனே அவன் தான்… அவன் இருக்க இடத்துல சிரிப்புக்கும் கலாட்டாவுக்கும் பஞ்சமிருக்காது…”
“என் வாழ்க்கையையும் என்னையும் மீட்டெடுத்தது என் மாறன் மாமான்னா, ஒரு நண்பனா என் சிரிப்பை மீட்டெடுத்து இன்னைக்கு வரைக்கும் என்னை காவல் காக்கிறது அவன் தான்…” என்றவளின் பதிலில் மகிழ்ச்சி இருந்தாலும் அதன்பின் இருந்த வலியை உணர்ந்த அமுதனுக்கு மனம் ரணமாக வலித்தது.
அன்றைய நாட்களின் வலிக்கு மருந்தாக தான் மாறமாட்டோமா? என்று யோசனையில் இருந்தவனை அவள் குரல் எழுப்பியது.
“என்னை மட்டுமல்ல எல்லோரையும் சிரிக்க வைக்கிற அவனும் சிரிப்பை தொலைச்ச நாட்களும் இருக்கு…” என்று குழலி சொன்னதும் இருவரும் குழப்பமாக பார்த்தனர்.
“ஏன் சீனியர்? என்னாச்சு?” என்று சரஸ்வதி கேட்டாள்.
“நாங்க இரண்டாவது வருஷம் படிக்கும் போது எங்க கிளாஸ்லயே சிந்துன்னு ஒருத்தி இருந்தா… அப்ப அப்ப இவன் அந்த பொண்ணை பத்தி என்கிட்ட பேசுவான். நான் அப்ப அதை பெருசா எடுத்துக்கல… திடீர்னு அந்த பொண்ணு இவனை லவ் பண்றேன்னு அவன்கிட்ட சொல்லவும் இவன் என்கிட்ட வந்து கேட்டான்…”
“உனக்கு பிடிச்சிருக்கா? அப்படி பிடிச்சிருந்தா உங்க உறவை கடைசி வரைக்கும் கொண்டு போவோம்னு நம்பிக்கை இருந்தா சரின்னு சொல்லுன்னு சொன்னேன்… அவனும் எனக்கு பிடிச்சிருக்கு நான் அவளை விட மாட்டேன்னு சொல்லி அவளுக்கு ஓகே சொல்லிட்டான்…”
“அவங்க லவ் பண்ண ஆரம்பிச்சு ஒரு மூணு மாசம் கூட இருந்திருக்காது… இவன் எல்லோருடவும் சிரிச்சு பேசறது நாங்க இரண்டு பேரும் பிரெண்டா இருக்கறது அவளுக்கு பிடிக்காம அவன் கூட சண்டை போட ஆரம்பிச்சிருக்கா….”
“இவன் எவ்வளவோ புரிய வைக்க முயற்சி பண்ணாலும், நீ சும்மா டைம் பாஸ்க்கு தான் என்கூட பழகற என்னை விட உனக்கு அவங்க தான் முக்கியம் நீ எப்ப வேணும்னாலும் என்னை கழட்டி விட்ருவ அப்படி இப்படின்னு அவ இவனை சரியா புரிஞ்சிக்காம ரொம்ப பேசிட்டா…”
“பேசியதோட விடாம எப்படியோ கவியோட அப்பாகிட்ட வேற சொல்லியிருக்கா…. இவனை வீட்டுக்கு கூட்டிட்டு போய் இரண்டு வாரம் வரைக்கும் அவனை அவங்க காலேஜ்க்கு அனுப்பவே இல்லை… இவன் அந்த வயசுக்குரிய விளையாட்டு தனம் பண்ற பையன் தான் ஆனால் எந்த தப்பையும் அவன் பண்ணது இல்லை… பெத்தவங்களுக்கு எப்பவும் கெட்ட பேர் வாங்கி தர கூடாதுன்னு அப்பப்ப சொல்லுவான்…”
“இரண்டு வாரம் அப்புறம் வந்தவன் கிட்ட என்ன ஏதுன்னு விசாரிச்சா, இவன் குடிகாரன், சிகரெட் பிடிக்கிறான், பொண்ணுங்க கூட பழகறான்… முக்கியமா என்னையும் அவனையும் தப்பா சொல்லியிருக்கா… மொத்தமா அவன் கேரக்டரையே சிதைச்சிருக்கா…”
“அவன் விளையாட்டு தனத்தால அவ சொன்னதை பாதி நம்பியும் நம்பாம அவனை பெங்களூர்க்கு படிக்க அனுப்ப மாட்டேன்னு சொல்லி அங்கேயே இருக்க வைச்சிட்டாங்க… அவங்க கிட்ட சண்டை போட்டு வந்து என்கிட்ட ஒரே அழுகை… அவங்க அப்பா அவனை தப்பா நினைச்சதை அவனால தாங்கிக்க முடியல…”
“கோபத்துல அவ வீட்டுக்கு போய் பிரச்சனை பண்ற அளவுக்கு போயிட்டான்… இவன் கோபத்தை குறைக்கறதுக்கு ரொம்ப திண்டாட்டமா போச்சு… கோபத்துல வீட்டுக்கு பேசாம இருக்க இருக்க அவங்களும் பையனை புரிஞ்சிகிட்டு அவனை பார்க்க ஊருக்கு வர சொன்னா இவன் போகவே இல்லை…”
“அவனை இந்த பிரச்சனையில இருந்து சரி பண்றதுக்குள்ள அவங்க அப்பா அம்மா கோவிலுக்கு போன போது நடந்த விபத்துல இறந்துட்டாங்க… அதுல இருந்து மொத்தமா நிலைகுலைஞ்சு போயிட்டான்…”
“அவனை சரி பண்ண படிக்க வைச்சு இந்த பிசினஸ் ஆரம்பிக்க வைச்சு அவனை கொஞ்சம் கொஞ்சமா நிற்க வைக்கறதுக்குள்ள ரொம்ப கஷ்டமா போச்சு…”
“ஒருத்தர் இன்னொருத்தரோட வாழ்க்கையை எவ்வளவு ஈஸியா சிதைச்சுட்டு அதை பத்தி எந்த எண்ணமும் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த உலகத்தில சந்தோஷமா வாழறாங்கன்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல…” என்று கிட்டத்தட்ட அவர்களின் பத்து வருட நட்பை ஒரு படம் போல குழலி சொல்ல,
அமுதனும் சரஸ்வதியும் கவியின் பின்புலத்தை நினைத்து திகைத்தனர். அவன் பின்னே இத்தனை வலிகளா?
சரஸ் உடனே, “அந்த சிந்து என்ன ஆனா? நான் அவளை பார்த்திருக்கேனா?” என்று கேட்கவும்,
“அவளுக்கு என்ன? அவ பேசினது கூட அவனை ரொம்ப பிடிச்சதால தானேன்னு இவன் மறுபடியும் அவகிட்ட பேச போனா அவ உனக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு சொல்லி இவனை அனுப்பிட்டு கொஞ்ச நாளிலே வேற ஒருத்தனை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா…”
“வீட்டில விஷயம் தெரிஞ்சு காலேஜ் மூணாவது வருஷம் பாதிலேயே வீட்டை விட்டு வெளியே வந்து அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா… அதுக்கு அப்புறம் இரண்டு பேரும் காலேஜ் வரல… நாங்க மூணாவது வருஷம் படிக்கும் போது தானே நீ முதல் வருஷம்… அதனால நீ பார்த்திருக்க வாய்ப்பு கம்மி தான்…”
“அப்புறம் நாங்க கடைசி வருஷம் படிக்கும் போது தான் உன்னை பார்த்தோம்… அதுவும் பசங்க உன்னை வம்பிழுக்கும் போது நீ அவனங்களை திருப்பி பேசினது எல்லாம் பார்த்துட்டு வந்து என்கிட்ட சொல்லுவான்…”
“பாரு அந்த பொண்ணு எப்படி வாயாடுதுன்னு… அந்த பொண்ணு இப்பவே இப்படி வாயாடுதே இன்னும் கடைசி வருஷம் படிக்கும் போது என்ன எல்லாம் பேசுமோ… நீயும் இப்படி பூனை மாதிரி அமைதியா இருக்கியே…”
“இப்ப தான் முத வருஷம் படிக்க வந்த மாதிரி அமைதியா இருக்கன்னு கேலி பண்ணுவான்… அப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் பழைய ஆளா மாறி உன்னையும் வம்பிழுக்க ஆரம்பிச்சான்…” என்று சிரிப்போடு குழலி சொல்ல,
“ஆமா ஆமா!” என்று அவளும் சிரிப்பில் இணைய,
தன் மனைவியின் சிரிப்போடு அவளின் இன்னொரு பக்கத்தை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த அவள் கணவன் எழிலமுதன் அப்போது அறியவில்லை அவளின் அனைத்து பக்கங்களும் சுவாரஸ்யமாக இருக்காது என்று….