செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 49 (இறுதி பாகம்)
கீழ்வானம் தீ பிழம்பாய் பற்றி எரிய முயன்று கொண்டிருக்க, காலை வெயிலைக் காண ஆவலோடு சேவல் கொக்கரிக்க, விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதில் சொந்த மண்ணில் மீண்டும் கால் பதித்தான், மூர்த்தி.
மீண்டு வருவான் என்று எண்ணவில்லை. எண்ணுவதெல்லாம் நடப்பதில்லையே.. வந்துவிட்டான். ஆனால் இதற்கு மேல் அடி எடுத்து வைப்பதில் தான் எத்தனை போராட்டம்?
யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும்.. பூமி சுழல்வதை நிறுத்துவதில்லை. அந்த விடியற்காலையில் கிரமம் மெல்ல மெல்ல விழிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது.
வெறும் தோட்டம் மட்டுமே இருந்த இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வீடுகள் முளைத்திருந்தது.
வாய்க்கால் வழியே தோட்ட வீடு இருந்த இடத்தை அடைந்தான். அங்கு ஒரு குடில் இருந்ததற்கான சுவடே இல்லை. அங்கிருந்த வீடும் தோட்டமும் காணாமல் போயிருக்க, இடத்தை மரிச்சினி தோட்டம் ஆக்கிரமித்திருந்தது.
மகிழம் மரத்தடியை மறைத்துக் கொண்டு, தோட்டத்தின் இறுதியில் புதிதாய் முளைத்திருந்தது அந்த வீடு. சிறியதும் அல்லாமல் பெரியதும் அல்லாமல் மொட்டை மாடியோடு கூடிய மச்சுவீடு. அதைச் சுற்றி ரோஜா தோட்டம்.
நிலத்தை யாருக்கேனும் விற்றுவிட்டார்களா? தோட்ட வீடு இருந்த இடத்திலிருந்து அந்த வீடு வரை விற்றிருப்பார்களோ?
கடந்த வந்த கரடுமுரடான பாதையில் பயம் இருக்கவில்லை. சுழல் கொண்ட அலை கடலையும் நீந்திவிட்டான். ஆனால்.. எதிரே இருக்கும் சின்ன நிலப்பரப்பைக் கடக்கத் தெம்பில்லை. ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க.. ஒவ்வொரு அடியிலும் புதைந்திருந்த நினைவுகள் அவனைப் பூமியோடு உள்ளிழுக்க.. பலம் இழந்து போனான்.
திருமணத்தின் முன் தினம் இதோ இங்கு வைத்துத் தானே “என் சந்தோஷம் நீங்க தான் மூர்த்தி சார்” என்றாள்.
“லவ் பண்றேன் மூர்த்தி சார் உங்கள, என் மனசார! கல்யாணம் பண்ணிக்கலாம் மூர்த்தி சார்.. கடைசி மூச்சு இருக்க வரைக்கும் சேர்ந்து வாழலாம் மூர்த்தி சார்.” ஏக்கமாய்… காதலாய்.. அன்று மொழிந்த வார்த்தைகள், இன்று அவனை கூறு போட்டது.
அந்த இடம் முழுவதும் துளசி நிறைந்திருந்தாள். துளசி சிரித்தாள், பூ பறித்தாள், அழுதாள், அடம் பிடித்தாள், மடியில் அமர்ந்து கொஞ்சினாள், மிஞ்சினாள், மின்மினிப் பூச்சி பின்னோடு ஓடினாள், கடைசியாக.. அவன் துளசி, அவனை அணைத்து “மூர்த்தி சார்” என்றாள். தளர்ந்து போனான்.
மச்சு வீட்டு பக்கமாகப் போகவுமே நந்தினி, பெரிய வீட்டிற்குப் போகும் குறுக்கு வழியாகத் தூரத்தில் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பின்னோடு கருப்பன். இந்த காலையில் அவளுக்கு இங்கென்ன வேலை? யோசனை நொடி நீடிக்கவில்லை.
வீட்டைக் கடந்து மரத்தை அடைவது மட்டுமே நோக்கமாயிருக்க.. கால் அங்கு தான் அவனைக் கூட்டிச் சென்றது.
அந்த வீட்டின் பக்கமாக நடக்கவும், வீட்டினுள் நாய்க் குட்டியின் சத்தம். அவன் போக்கில் போகவும் அவன் சிந்தனையைத் தடை செய்தது உள்ளிருந்து வந்த கொலுசொலி.
என்ன என்று கூற இயலா உணர்வு. மனம் ஏதோ செய்தது. மீண்டும் அதே சத்தம். அன்று படுக்கையறையில் கீழே கிடந்த இரண்டு ஜோடி கொலுசுகள் கண் முன் வந்து பாடாய்ப் படுத்த.. வேக நடை போட்டான்.
மீண்டும் சலசலத்தது. நின்றுவிட்டான். ‘துளசி மா..’ கண்கள் மூடி திறந்தான்.
அது யார் வீடு.. யார் வசிப்பது? எதுவும் தெரியாது. இருந்தும் திரும்பியவன், முன் வாசல் நோக்கிச் சென்றான்.
கதவருகில் செல்ல செல்ல கொலுசின் ஒலி அதிகமானது. இரண்டு பாதி கதவு. கீழ் ஒன்று.. மேல் ஒன்று. கீழ் கதவு மட்டும் உள்ளே தாழ்பாளிட்டிருந்தது. காற்றோட்டமும் தடைப்படாமல், நாய், ஆடு வீட்டிற்குள் வராமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
கதவின் முன் வந்தவன் பார்வையில் விழுந்தது, தொட்டிலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த இரண்டு பிஞ்சு கால்கள்.
வெண்பனி மலர் கால்களில் வரிசையாகச் சலங்கை வைத்த வெள்ளிக் கொலுசு.
நொடிக்கொரு முறை ஆட்டிக் கொண்டிருந்தாள் குட்டி கால்களை. ஆசை தீரக் கேட்டுக்கொள் என்று நினைத்திருப்பாள் போலும்.
பார்த்ததும் எடுத்து பாதத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.. கொழு மொழு-வென அத்தனை அழகு. ஒரு வருடம் பின் இது தான் முதல் முறை அழகை ரசனையாய் பார்ப்பது.
கேட்க ஆசை பட்ட சத்தம்! கண் கரித்தது. ‘நல்லா இரு’ என்று மனதார வாழ்த்தினான்.
சலங்கை சத்தத்திற்கு உள்ளிருந்து உருண்டு கொண்டே ஓடி வந்தது குட்டியாய் புசு புசுவென்று கருப்பு நாய்க் குட்டி ஒன்று. தொங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றைப் பிடித்து நாய்க் குட்டி இழுக்க.. குட்டி கால் தொட்டிலுக்குள்ளே இழுக்கப்பட பாதம் மட்டுமே தெரிந்தது. மண் பார்க்காத வெண் பாதம் அடியில் கருப்பு பொட்டு.
நாய்க் குட்டி… தொட்டிலை ஒரு முறை சுற்றி விட்டு தொட்டிலில் அதன் தலையை இடிக்க….உள்ளே குழந்தை நெளிவது தெரிந்தது. இது இருவருக்கும் தினமும் நடக்கும் விளையாட்டு போலும். ‘ஆஆய் தாதே..ஆ..ஆ..தா.ஆ..ட..ஆ.” என்று ஏதேதோ மழலையின் மொழி.. மெய் மறந்தான்.
அசைந்தான் இல்லை. சகலமும் மறந்து போனது. தேனாய் உள்ளே இறங்கிய ஒலி.. இனித்தது. உள்ளே நெளிந்து கொண்டிருக்கும் சேட்டை சிங்காரி மேல் தான் அவன் முழு கவனமும்.
வெள்ளை வேட்டியில் கட்டியிருந்த தொட்டில் ஆடிக்கொண்டே இருக்க, உள்ளே குட்டி பெண் உருண்டு கொண்டிருந்தாள். நாய் குட்டி சுற்றிவிட்டதில், தொட்டிலின் தலைப் பக்கம்.. வாசல் நோக்கி நின்றது.
வீட்டிற்கு வெளியே நின்று கண்சிமிட்டாமல் பார்க்க.. ஒருவழியாய் குட்டி தேவதை உருண்டு குப்புறப் படுத்து.. மெல்லத் தலையை வெளியே நீட்டினாள். வழுவழுப்பாய், கரு கருவென இரண்டங்குலத்திற்கு முடி.
நாய்க் குட்டி உள்ளே ஓடவும்.. தொட்டில் மீண்டும் சுற்றவும்.. குழந்தையிடம் சிணுங்கல் ஆரம்பித்தது.
உள்ளிருந்து சத்தம் வந்தது. “நந்து.. பாப்பா எழுந்திட்டா பாரு. சத்தம் வைக்கிறதுக்குள்ள தூக்கு..”
செல்வனின் குரல்!
செல்வனின் வசிப்பிடமா? செல்வனின் குழந்தையா? உரிமை எட்டிப்பார்க்க கதவின் தாழ்ப்பாளை நீக்கினான். சத்தம் கேட்டு குழந்தை தலை தூக்கினாள்.
ஒரு நொடி.. அந்த ஒரே ஒரு நொடி அவனுக்கு போதுமானதாய் இருந்தது.. அவன் ஜீவன் மீண்டு வர. உடலெல்லாம் சிலிர்த்தது.
அவனைப் பார்த்ததும்.. ஈஈஈஈ என்று கீழிருந்த பாதி முளைத்த இரண்டு அரிசி பற்களைக் காட்டி சிரித்தது குழந்தை.
மூர்த்தியின் கண் கரிக்க ஆரம்பித்தது.
பன்னீரும் சந்தமும் குழைத்துச் செய்த பளிங்கு பதுமை.. நீள இமைகள்.. பெரிய கண்கள்.. அதை இன்னும் பெரிதாய் காட்டிய கண் மை. தொங்கிக்கொண்டிருந்த மாம்பழ கன்னங்களில் அவனை உள்ளே இழுத்துப் புதைக்க ஆழமான குழி வைத்திருந்தாள். எச்சிலும் பாலும் வழிந்து ஈர படுத்தியிருந்த சிகப்பு உதடு..
அவன் அருகில் சென்று குனியவும், போராடிய போராட்டத்தின் பலனாய் வாயிலிருந்து எச்சிலோடு இப்பொழுது அருந்திய பாலும் சொட்டச் சொட்ட தலையை உயர்த்தி, ஒற்றை விரலை வாயிலிட்டு இன்னும் பெரிதாய் சிரித்தது மழலை.
திடீர் என்று மழலை முகத்தில் தீவிரம்.. அவன் கால்களில் சாரல். தொட்டில் அடியில் அருவி கொட்டி முடியவும்… ஈரம் பிடிக்கவில்லை போலும்.. சிணுங்கினாள்.
அந்த பன்னீர் உதடு தானாய் பிதுங்கியது. தலையை உயர்த்தி அவன் மேல் தாக்குதல் நடத்திய அந்த மருண்ட விழியில் நீர் படலம். மனதில் ஆழமாய் பதிந்து போன அதே பார்வை.
போதும் கண்ணம்மா.. மூர்த்தி என்ற ஆலமரத்தைச் சாய்க்க இந்த பார்வை போதும். அவன் கோடையின் மழையாய், பாலைவனத்தில் சுனையாய்.. அவன் குட்டி கண்ணம்மா!
யாரும் சொல்ல வேண்டியதில்லை.. அவனைப் பார்த்து உதட்டைப் பிதுக்குவது அவன் குட்டி துளசி என்று.
அவன் மகளே தான்… ஒரு வருடம் அடக்கி வைத்திருந்த எல்லா உணர்வும் வெடித்து வெளி வந்தது.
குழந்தை மீண்டும் சிணுங்கவும் அள்ளிக் கொண்டான்.
அவன் கையில் ஏந்திக்கொள்ளவும்.. இப்பொழுது தான் அவனை ஒழுங்காகக் கவனித்திருப்பாள் போலும்.. கண் விரித்துப் பார்த்தாள்.
அழுது விடக் கூடாதே என்ற எண்ணம் அவனுள். கை நடுங்கியது. ஒரு கை அணைத்துப் பிடித்திருக்க.. மற்ற கை விரல் கொண்டு முகத்தில் விழுந்து கிடந்த முடியை ஒதுக்கினான். எட்டு மாத குழந்தை.. அவன் குழந்தை… ஆவலாய் பார்த்தான், அவன் சிட்டுக் குருவியை.
மகள் அவனைப் பார்த்தாள்.. பார்த்தாள்.. பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சின்ன சின்ன விரல்கள் கொண்ட குட்டி கை அவன் முகத்தில், கண், காது, மூக்கு நெற்றி என்று ஊர்வலம் சென்றது. மகளுக்கு என்ன புரிந்ததோ… உதடு தானாய் பிதுங்கியது. கண் பனித்தது.
ஏதோ கோபம்.. பட்டென்று முகத்தில் அடித்தாள். தலையை முகத்தில் முட்டினாள். கன்னத்தில் உச்சந்தலை முட்டி மோத.. குட்டி சண்டையிட்டாள்!
எங்குச் சென்றாய் என்று கேட்பது போல் தோன்றியது. வேலைக்குச் சென்று தாமதமாக வீடு திரும்பிய அப்பாவிடம் சண்டை போடும் செல்ல சிட்டாய் சண்டையிட்டுக் கொண்டு.. அவன் கையில்.. அவன் கண்ணம்மா! புது காவியம் படைத்துக் கொண்டிருந்தது அவர்கள் வடித்த காதல் கவிதை.
கன்னம் வருடி.. முகம் பார்த்து, “ப்ப..” என்றாள்.
மூர்த்தி கண் உடைப்பெடுக்க.. இரண்டு சொட்டு உருண்டு வரவும்.. மீண்டும் “ப்ப..” என்று கன்னம் வருடியவளை நெஞ்சோடு அணைக்க.. அதே வெண் மேகக் கூட்டத்தை அணைக்கும் உணர்வு.
உச்சந்தலையில் இதழ் பதிக்கவும் நெஞ்சு வெடித்தே போனது. ‘துளசி…’ கண் ஏகத்திற்கும் பனித்தது. கண்ணில் நீர் வழிய மகளைப் பார்த்தான். அப்படியே அவன் கொழு கொழு குட்டி துளசியே தான்.
பன்னீரோடு.. சந்தனத்தோடு.. பால் வாசம் அவன் மனதை நிறைத்தது. இதழ் துடித்தது. பேச்சு வர மறுத்தது. “கண்ணம்மா..” என்றான்.. உயிரை அந்த ஒற்றை சொல்லில் தேக்கி.. ஆசை ததும்ப மகளை அழைத்தான்.
மகள் தெரிந்து செய்தாளா.. தெரியாமல் செய்தாளா.. தெரியவில்லை. ஆனால் தகப்பன் கண்ணீரை அந்த பிஞ்சு கை தொட்டது. “ப்ப” என்று கன்னத்தில் இதழ் பதிக்க வானம் நோக்கிப் பறக்க வேண்டியவன் மண்ணோடு புதைந்தே போனான்.
மகள் ஏன் செல்வன்-நந்துவோடு..? துளசி என்ன ஆனாள்? விக்கிக் கொண்டு வந்தது. ‘துளசி மா…’
இன்று மூர்த்தியின் பிறந்த நாள்.. காத்திருப்பாளே அவன் மனையாள். மகள் சிணுங்கவும், ஈரத் துணியைக் கழட்டி, அங்கிருந்த துண்டை இடுப்பில் சுற்றி விட்டு, துளசியைக் காணச் சென்றான்.
“ப்ப..ப்ப” மகள் கன்னம் வருடி அனத்த ஆரம்பித்தாள். மூர்த்தி வெளியே செல்ல.. கூடவே குட்டி கருப்பனும் அவன் காலை முட்டி மோதிக் கொண்டு.
சத்தம் கேட்டு வெளியே வந்த செல்வன்.. மூர்த்தியின் முதுகைப் பார்த்தான். பார்த்தவன் பார்த்தே நின்றான். அழைக்கவும் இல்லை. அசையவும் இல்லை. ‘ண்ணா..’ கண்ணில் தூசி விழுந்துவிட்டது போலும். துடைத்துக் கொண்டான்.
வீட்டின் பின்புறம் வரவுமே அந்த இடமே பன்னீர் ரோஜா மணம் பரப்பியிருந்தது. மரத்தடி வந்து சேர்ந்தான். எதிரே தெரிந்தது.. சதுரமான முட்டி அளவிலான திண்டு. உள்ளே பூத்துக் குலுங்கியது பன்னீர் ரோஜா. ரோஜாச் செடியின் மத்தியில் என்ன இருக்கும் என்று அவனுக்கு தெரியாதா என்ன? தெரியுமே…
அதற்கு மேல் நடக்கவில்லை. நின்றுவிட்டான். மகிழம் பூ மரத்தடிக்கு வந்துவிட்டான். துளசி ஏன் இல்லை? மூன்று மலரும் மணம் வீசியது. அவன் மனதை நிறைக்கும் மணம் எங்கே?
நூறடி தூரம் நடக்க முடியா தூரமாகத் தோன்ற.. கால்கள் துவள மரத்தடி திண்டில் அமர்ந்துவிட்டான்.
மகளை நெஞ்சோடு அணைத்தவன், “துளசி மா…” வாய் விட்டு அழுதான். ஒரு வருடம் பின் இன்று மீண்டும் கதறினான்.
“துளசி…” ஆத்திரம் தாங்காமல் கத்தினான்.
மகள் பயந்து தகப்பன் கழுத்தைக் கட்டி.. தோளில் முகம் புதைத்து வீறிட ஆரம்பித்தாள்.
“இவள வச்சுகிட்டு தனியா என்னால முடியாது… வா டி..” மகளைக் கட்டிக் கொண்டு கண் மூடி அழுதான். கொலுசு சிணுங்கியது. மகள் அழுதாள். எதுவுமே அவன் கவனத்தில் இல்லை. துளசி வேண்டும்.. மனம் பாரமாய் போனது.
செத்தும் போக முடியாதே… “வா துளசி.. என்னை ஏமாத்தாத..” அடக்க முடியாமல் வெடித்தான்.
நெஞ்சோடு ஒட்டிக் கொண்ட மகளை அணைத்து.. கண் மூடி கண்ணீர் விட்டான். இது தாங்க முடியா பாரம். ஒரு வருடம் காத்திருந்தானே… இதற்கு தானா.. ஒரு வருட வலி.. வாழ் நாள் முதுவதுமா? தாங்க முடியாதே துளசி!
“துளசி மா…” வெடித்தான்.
“மூர்த்தி சார்..” என்றாள், என்றும் போல் இன்றும்.
துளசியின் தொண்டைக் குழியில் இதழ் பதிக்காமலே அவள் மணம் மனதை நிறைத்தது.
“துளசி மா..” விக்கியது.
துளசியின் கை மூர்த்தியின் கேசத்தினுள் நுழையவுமே.. பட்டென்று கண் திறக்க.. அவன் முன்னே முழு உருவமாய் நின்றிருந்தாள். அவன் துளசியே தான். சலனமில்லாமல் அவனைப் பார்த்து நின்றிருந்தாள்.
கண்ணை இறுக்கி மூடி திறந்தான். அவளே தான் அவன் விருப்பட்ட அதே கோலத்தில் அவன் துளசியே தான்.
உண்மையிலுமே மூச்சு, முட்டி மோதி தொண்டையில் நின்று கொண்டது. அவன் துளசி! அவன் துளசியே தான்!
‘துளசி..? துளசி மா…? துளசி…’ மனம் அடித்துக் கொண்டது.
நின்றிருந்தவள் கண்கள் கசிந்தது. கண் மை கரைத்தது… இதழ் துடிக்கச் சிரித்தாள்.
“மூர்த்தி சார்..” என்றாள்.. அவளுக்கே கேட்கா குரலில்.
அம்மாவின் சத்தம் கேட்கவும் மகள் தாயிடம் தாவிக் கொண்டாள். அவனுக்கு அது எல்லாம் தெரியவில்லை. அசைவில்லாமல் அமர்ந்தே இருந்தான். அவன் துளசி மட்டும் தான் அவனை நிறைத்தாள்.
துளசியின் கை மீண்டும் அவன் கன்னம் தொடவும்… ஏதோ உயிர் மீண்ட உணர்வு.
எழுந்தவன் எழுந்த வாக்கிலேயே அள்ளிக் கொண்டான் அவன் ஜீவ நாடியை.
இருவருக்குமிடையே பேச்சில்லை. வெறும் உணர்வு மட்டும் தான். விழிகளை இறுக்கி மூடினாலும்.. கண்ணீருக்குத் தடை போடமுடியவில்லை. கழுத்து வளைவில் முகம் புதைத்து சத்தமில்லாத கேவல்கள். இரண்டு ஜோடி கண்களும்.. இரண்டு இதயமும்.. இரண்டு ஜீவனும் ஒரே உணர்வில். நிம்மதியும்.. துடிப்பும் கலந்த உணர்வு.
மூர்த்தியின் வலி எல்லாம் இறுக்கமாய் மாறி, துளசியை தன்னுள் புதைக்க முயல… “மூர்த்தி சார்… உங்க பாப்பா.. நசுக்காதீங்க” என்றதும் தான் உணர்வு பெற்றான்.
கீழே இறக்கிய பின்னும்.. அடக்கமுடியா கண்ணீரும்… வாஞ்சையும்… முகம் முழுவதும் முத்தமாய் இறங்கியது.
இரு கைகளும் கன்னம் ஏந்தியது. நிறுத்த தெரியாமல் மீண்டும் முகம் முழுவதும் சத்தமான முத்தம் பதித்து.. “நீ இல்லாம.. நான் நல்லாவே இல்ல துளசி” மூச்சு வாங்க, உப்பு நீர் வழிய உரைத்தே விட்டான்.
“ப்ப..” என்ற சத்தம் அவனை மீட்டெடுக்க… அப்படியே தொப்பென்று திண்டில் அமர்ந்துவிட்டான்.
அண்ணாந்து பார்த்து.. “என்னை ஏமாத்திட்டன்னு நினைச்சு..” அதற்கு மேல் பேச்சு வரவில்லை.
கண்ணாளன் தலையை வருடி.. நெற்றியை வருடி, கன்னத்தை வருடிக் கொண்டே.. கண்ணில் நீர் வழிய.. “அப்படி எல்லம் உங்கள விட்டுட்டு போக மாட்டேன் மூர்த்தி சார். உங்களையே சுத்தி சுத்தி வருவேன். என்னையே சுத்தி சுத்தி வர வைப்பேன்..” என்றவளின் இடையை கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.
ஒரு வருடமாய் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்.. தொண்டையில் மாட்டி சுவாசக் குழாயை அடைத்து இம்சித்திருந்த மூச்சுக் காற்று நிம்மதியாய் வெளிவந்தது.
“ஏன் துளசி சொல்லல?”
“நீங்க எடுத்த வேலையை முடிக்கணும்ன்னு.”
“செத்துட்டேன் துளசி..”
“நானும் தான் மூர்த்தி சார். எட்டு மாசமா.. உங்க நினைவிலேயே வாழ்ந்து உங்க கனவ கையில ஏந்திட்டு உங்களுக்காகவே காத்திருந்தேன். உங்க மகளுக்காக.. உங்க மக மாதிரி மத்த குழந்தைகளுக்காக, உங்க உயிர பணயம் வச்சு நீங்க ஒரு வேள்வி நடத்திட்டு இருக்கும் போது குறுக்க வர வேண்டாம்ன்னு ஒதுங்கி.. காத்து நின்னோம்.
நீங்க நேரா இங்க தான் வருவீங்கன்னு வீடு கட்டி இங்கேயே இருக்கேன் மூர்த்தி சார். சும்மாவே செல்வன் என்ன தனியா விடமாட்டான். நீங்க அவன் கிட்ட பாத்துக்க சொன்னீங்களாம்… பொண்டாட்டியும் புருஷனும் எங்கள தரையில விடுறது இல்ல.
எட்டு மாசமா தினமும் இந்த நேரம் இங்க வந்து காத்திருப்பேன்… வருவீங்கன்னு நம்பிக்கையில!
நேத்து வரைக்கும் வருவீங்களான்னு காத்திருந்தேன். ஆனா… கண்டிப்பா இன்னைக்கு வருவீங்கன்னு தெரியும். இன்னைக்கு நீங்க வராட்டி நானே உங்களைத் தேடி வந்திருப்பேன் மூர்த்தி சார்.”
பிரசவம் மறுபிறப்பு.. அன்று துளசி மகளோடு மீண்டும் பிறந்திருக்க, இன்று தன் ஜீவனைக் கண்டவன், மீண்டும் பிறந்தான்.
இடையை விட்டானில்லை. வயிற்றிலிருந்த முகத்தை எடுத்தானில்லை.
மௌனம் பேசியது. கண்ணீர் கொண்டு நீண்ட இடைவெளியை நிரப்ப முயன்றனர்.
“தனியா போராடா விட்டுடேனா துளசி மா..?” முகம் உயர்த்திப் பார்க்க..
“இல்ல மூர்த்தி சார், நான் தனியா ஒரு நாளும் இருக்கல. நீங்க தள்ளி நின்னாலும்.. என் கண்ணு முன்னால இல்லாம போனாலும், அப்பவும்.. என்னை மட்டுமே நினைக்கிற.. என்னோட மூர்த்தி சார், என் கூடவே என் மனசிலேயே இருக்கும் போது நான் தனியா போராட வேண்டி இருக்கல.”
அங்கிருந்த கல்லறையைப் பார்த்தான். “மணி, பானும்மா..” என்றாள். பன்னீர் ரோஜாக்கள் நடுவே படுத்திருந்த பானு அக்காவின் ஆன்மா நிம்மதியாக நீண்ட நித்திரையில்.
இடையை இறுக்கிப் பிடித்திருந்தவனுக்கு விட மனமில்லை. விட்டால் மறைந்து விடுவாள் என்று பயந்தானோ?
கண்ணீர் நின்றது. ஒரு வழியாய் இருவர் மனமும் அமைதி கொண்டது.
கேசத்தை கோதிக்கொண்டிருந்தவள், “கணக்கு வாதிக்கு வயசாகிடுச்சு” என்றாள்.
“ஆங்..?”
“வெள்ளி கம்பி, மூர்த்தி சார்..” இருந்த இரண்டு நரை முடியைப் பிடுங்க..
“ஆ.. வலிக்குது துளசி மா..”
“என்ன மூர்த்தி சார்.. பக்கத்தில இல்லாட்டி தான் டி போடுவீங்களா?” ஆசையாய் பார்த்தாள்.
சிரித்தான். “வலிக்கு டி..” முகத்தில் லேசான வெட்கம். “வெக்க படுறீங்க மூர்த்தி சார்” சிரித்தாள்.
“என்னைக்கும் நீ துளசி மா தான் எனக்கு” என்றான்.
“அது தெரியுமே..” புன்னகைத்தாள். “ஒரு முடிக்கே இந்த அழு அழறீங்க. உங்க பொண்ணு தினமும் எத்தன புடுங்கறா தெரியுமா? ரொம்ப வீக் ஆகிடீங்க மூர்த்தி சார். ஆட்டுக்கால் சூப்பும், முருங்கை சூப்பும் வச்சு தான் உங்கள தேத்தி எடுக்கணும்”
எழுந்தவன் வேட்டியை மடித்துக் கட்டி, மகளுக்காக கை நீட்ட.. குட்டி கண்ணம்மாவும் அப்பா கைக்கு இரண்டு பல்லைக் காட்டிக்கொண்டே “ப்பா.. ப்பா..” என்று தாவ…
கன்னத்தில் இதழ் பதித்து.. “எப்படி?” என்றான்
“உங்க ஃபோட்டோ பாக்காம குளிக்க மாட்டா.. சாப்பிட மாட்டா.. தூங்க மாட்டா.. கண் முழிச்சதும் நீங்க வேணும். போன மாசம் தான் முதல் வார்த்தை சொன்னா.. ‘ப்பா’ன்னு.. உங்க ஃபோட்டோ பார்த்து.
நீங்க தான் அவ அப்பா சிங்கம். காட்டுக்குப் போய் வேட்டை ஆடிட்டு வருவீங்கன்னு சொல்லி வச்சிருந்தேன்.”
“உங்க மக மூர்த்தி சார்… உங்கள தெரியாம போகுமா?”
கூறியவளுக்கும் கேட்டவனுக்கும் உலகையே வசப்படுத்திய உணர்வு.
உலகத்தைத் துளசியின் காலடியில் போட்டவன். நேற்று வரையிலுமே களைகளை அறுத்து ‘இருவாட்சி’ பறவையாய் மனைவியையும் மகளையும் தூர இருந்து காத்தவன்.. அவளுக்காகவே வாழ்க்கை கொண்டதாய் எண்ணி வாழ்பவனுக்கு அவள் கொடுக்கும் சின்ன அன்பின் பரிசு. அவர்கள் தீட்டிய காதல் ஓவியம், குட்டி கண்ணம்மாவின் ‘ப்பா’ என்ற அழைப்பு.
கோயிலின் ‘மூல’ இடத்தில் ‘அமர்த்தப்பட்டுள்ளதால்’ (மூலத்தில்+அமர்த்தி) ‘மூர்த்தி! என இறை வடிவம் அழைக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ‘மூர்த்தி’ என்பது வெறும் பெயராய் இருக்கலாம். ஆனால் துளசியைப் பொறுத்தவரை ‘மூர்த்தி சார்’ அவள் இதயத்தில் வீற்றிருக்கும் ஆராதனைக்குரியவன்.
“ப்ப.. ப்ப.. ப்பா” மழலையில் மயக்கினாள். அம்மாவிற்குத் தப்பாமல், வாய் ஓயாமல் பேசினாள் அவன் பச்சிளம் குருத்து.
“பட்டு கண்ணம்மா.. அப்பாவ தெரியுமா என் செல்லத்துக்கு” உச்சி முகர்ந்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
நிறைவான வாழ்வு. மனம் நிறைந்தால் கூட கண் பனிக்குமாமே. இருவருக்குமே பனித்தது.
காத்திருந்தாள், நினைவு வந்த அன்றிலிருந்தே காத்திருந்தாள், அவள் கண்ணாளன் வர. எதற்குச் சென்றிருப்பான்… ஏன் சென்றிருப்பான் என்று உணர நேரம் எடுக்கவில்லை. போருக்கு சென்ற மன்னனுக்காக.. காத்திருந்தாள். தன் முகம் கூட காணாமல் சென்றவன் கண்டிப்பாக மீண்டு வருவான் என்று காத்தே இருந்தாள். அவன் குடும்பத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தனதாக்கிக் கொண்டாள்.
கோமலை, துளசியாக அவன் மாற்றியிருக்க, அவள், குடும்பத்திற்கும் அவனுக்கும் துளசி மாடமாய் போனாள்.
“ம்ம்ம்.. பொண்ண பார்த்ததும்… பொண்டாட்டி தெரியல மூர்த்தி சாருக்கு..” வம்பிழுக்க..
“வயசாகிடுச்சு… வீக்காகிட்டேன்.. கண்டுக்கல.. இன்னும் என்ன?” கூறிக்கொண்டே குனிந்து ஒரே கையில் குழந்தையைப் போல் அவளையும் ஏந்திக்கொள்ள..
ஒற்றை கை மகளின் முதுகை அணைத்துப் பிடித்திருக்க.. மற்றது மூர்த்தி கழுத்தை கட்டிக் கொள்ளவும், “பச்..” என்று கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
மனைவி மகளோடு வீட்டை நோக்கி நடை போட்டான்.
“ப்பா.. ஆ..தா.. னா ஆ..னா..” மழலை சண்டைக்கு தயாரானது. குட்டிக்குக் குட்டி பொறாமை கூட அழகு தான்.
“போடி… என் புருஷன்..” மீண்டும் ஒரு முத்தம்.
“ப்ப.. ப்ப..” மறுகன்னத்தில் எச்சில்.
இரண்டு நீள கால் கொலுசும் சத்தம் எழுப்ப அங்கு இனியதோர் உரிமை போராட்டம்.
“போடி… உன் அப்பன நீயே வச்சுக்கோ… மொட்ட மாடி ரெடியா இருக்கு… நான் எனக்கு பையன ரெடி பண்ணிக்கிறேன்.. என்ன சொல்றீங்க மூர்த்தி சார்” நமுட்டு முறுவலோடு மீசையை முறுக்கிக் கொண்டே கணவன் முகம் பார்த்தாள்.
வாஞ்சையாய் மனைவி முகம் பார்க்க.. இருவரும் சிரித்துக் கொள்ள..
சண்டை கோழியின் கொலுசு சிணுங்க.. அப்பாவை முழுதும் தனதாக்கிக் கொள்ளும் நோக்கம். ஒரு கை அப்பாவின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு, மறு கை அம்மா இருந்த பக்க கன்னத்தில் பதிய.. “ப்பா..ப்பா” என அடுத்த கன்னத்தை எச்சில் செய்து தனது உரிமையை நிலை நாட்டினாள்.
மூர்த்தியின் கன்னக்குழி எட்டிப் பார்த்தது. மீண்டும் மீசை வருடும் ஆவல்.
“என் பட்டு குட்டி… அப்பா செல்லமா நீங்க..” மகள் கன்னத்தில் மூர்த்தி முத்தம் பதிக்க…
“உங்களுக்காக என் கோலத்தையே மாத்திகிட்டேன்.. நீங்க சர்ப்ரைஸ் ஆகவே இல்ல!” சிணுங்கினாள்
“அது போதாதுன்னு வந்ததுல இருந்தே அவளையே கொஞ்சுறீங்க! அப்போ… நான் மூர்த்தி சார்…” துளசி உதடு பிதுக்க.. மூர்த்தியின் கண்கள் வாஞ்சையாய் இதழை வருட… இன்றைய சமரசம் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்று சொல்லாமலே இருவருக்கும் தெரிந்தது.
தன் குருவிக் கூட்டை கையில் ஏந்திக் கொண்டே மூர்த்தி, வீட்டை நோக்கி நடக்க… வீட்டிற்குள்ளிருந்து மென்மையாய் ஒலித்தது..
“கண்களும் ஓய்ந்தது..
ஜீவனும் தேய்ந்தது..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
இந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்..”
பாடல் காதில் விழவும், “மூர்த்தி சார்…” என்று அவளும் “துளசி மா..” என்று அவனும் எதற்கு ஒன்று சேர அழைத்தார்கள் என்று நமக்கு சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லையே..
இன்று.. வானம் இருட்டவில்லை. இருந்தும் சொட்டு சொட்டாகத் தூரல், வறண்டப் பூமியை நனைக்க ஆரம்பித்தது.
நிறமில்லா.. வாசமில்லா நீர் செம்மண்ணோடு சேர்ந்து குழைந்து மண் வாசம் கொண்டு, சிகப்பாய்.. சேறாய் ஒழுக ஆரம்பித்தது.
செம்புலம் சேர்ந்த நீர்த்துளியாய் மூர்த்தியும் துளசியும்.
சேற்றில் முளைத்த செந்தாமரைகளாய் குட்டி கண்ணம்மாவும், குட்டி கண்ணன்களும்.
அவன் செம்புலம். மூர்த்தியை தன்னுள் புதைத்து.. முற்றிலும் ஆட்கொண்ட நீர்த்துளி அவள், மூர்த்தி சாரின் துளசி மா!
(முற்றும்)