மறுநாள் காலை எழுந்து குளித்து தயாரகிவிட்டு மதிவதனி அறையை விட்டு வெளியே வரவும்,அதே சமயம் மனோரஞ்சனும் வரவும் இருவரும் மோதிக் கொண்டனர்.
“சாரி” இருவரும் ஒரே சமயத்தில் சொல்ல, ஒரு நிமிடம் மனோரஞ்சன் அவளை பார்த்தான், பின்பு விறுவிறுவென்று அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
‘இவருக்கு வேற வேலையே இல்லையா? ஆ ஊ னா இப்படி முறைச்சிக்கிட்டு திரும்பி முதுகை காமிச்சிகிட்டு நடக்க ஆரம்பிச்சிடுவார்’
சென்று கொண்டிருந்தவன் திடீரென்று நின்று திரும்பி அவளை பார்த்து,”இப்போ ஏதாவது சொன்னியா?”
“ஆங்….இல்…இல்லையே…ஒன்னும் சொல்லலியே”
“ஓ” என்று செல்ல போனவன் மீண்டும் அவளிடம் திரும்பி,”எனக்கு உன் மைன்ட் வாய்ஸ் கேட்டுடுச்சு” என்று சொல்லிவிட்டு சென்றான்.
வேலையெல்லாம் முடித்துவிட்டு மதிவதனி தாமரையை பிடித்துக் கொண்டாள்.”ஹேய் தாமரை ப்ளீஸ் பா மீதி கதையையும் சொல்லிடு பா. இல்லேனா எனக்கு தலையே வெடிச்சிடும்”
“சரி சரி அக்கா. சொல்றேன்”
“நானும் ரித்துவும் எப்பவும் சண்டை போட்டுகிட்டே இருந்தாலும் என் மனசுல கொஞ்சம் கொஞ்சமா அவன் வர ஆரம்பிச்சிட்டானு எனக்கு புரிஞ்சிச்சு. அப்போ தான் ஒரு நாள்…..
“தாமரை……தாமரை…..ஒரு நிமிஷம்”
தாமரை திரும்பி யாரென்று பார்த்தாள். அவள் கிளாஸ்மேட் ரம்யா வந்து கொண்டிருந்தாள்.
“ஹாய்….ரம்யா”
“ஹாய்”
“எதுக்கு கூப்பிட்ட?என்ன விஷயம்?”
“ஹ்ம்ம்….அது…..ஹ்ம்ம்…அது வந்து….ஹ்ம்ம்”
‘கடவுளே! என்ன இவ ரொம்ப ஓவரா சீன் போடுறா! என்ன விஷயமா இருக்கும்?!”
“ரம்யா…கிளாஸ் ஆரம்பிக்க போகுது என்னனு சீக்கிரம் சொல்லு”
“ஹ்ம்ம்…ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும் நீ”
“என்ன ஹெல்ப்?”
மீண்டும் அவள் தயங்கி கொண்டு நிற்கவே தாமரைக்கு பொறுமை போயிற்று.
அவள் கிளம்ப ஆரம்பிக்கவும்,”தாமரை….இரு நான் சொல்லிடுறேன்”
“அது வந்து உங்க அத்தான் ரித்துநந்தன் இருக்கார்ல அவரை நான் லவ் பண்றேன். நீ தான் எனக்காக அவர் கிட்ட போய் பேசணும்”
தாமரை தலையில் இடி விழுந்ததை போல நின்றாள்.
“தாமரை ப்ளீஸ் தாமரை…..அவர் கிட்ட பேசுவியா?”
தாமரை எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றாள். உணவு இடைவெளியின் போது ரித்துவை சந்தித்தாள்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ரிதுநந்தன் அவளிடம்,”ஏய்! என்னடி? ரொம்ப அமைதியா இருக்க?”
தாமரை அவன் பேசுவதை கூட கவனிக்காமல் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
“தாமரை…..ஏய் தாமரை…”
“ஹா….என்ன ரித்து?”
“உன்னை பத்து நிமிஷமா கூப்பிட்டுட்டு இருக்கேன். என்னாச்சு உனக்கு?”
“அது…உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”
“சொல்லு”
“அது…..என் கிளாஸ்மேட் ரம்யா இல்ல….”
“ஆமா நல்ல ஹைட்டா கலரா அழகா இருப்பாளே அவ தானே”
“இப்ப அவ எப்படி இருப்பான்னு நான் உன் கிட்ட கேட்டேனா.”தாமரை பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
“சரி சரி விஷயம் என்னனு சொல்லு”
“அவ…அவ…அவ உன்னை லவ் பண்றாளாம்”
“என்னது லவ்வா? லூ…..” லூசா அவள் என்று கேட்க ஆரம்பித்ததை முடிக்கும் முன்பே நிறுத்திவிட்டான். தாமரையின் முகத்தை பார்த்த அவன் அவளிடம் சிறிது நேரம் வம்பிழுக்கலாம் என்று முடிவு செய்தான்.
“என்னது லவ்வா? ரம்யா என்னை லவ் பண்றாளா? வாவ்!டேய் ரித்து உனக்கு அடிச்சிதுடா லக்கு.எங்கேயோ போய்ட்ட டா நீ.அய்யோ!அய்யோ!அய்யோ!என்ன ஃபிகரு அது?”
“ஏய்! தாமரை நீ ஒழுங்கா தானே கேட்ட? அவ என்னை, லவ் பண்றதா தான் சொன்னாளா?அய்யோ!என்னால இதை நம்பவே முடியலையே,இப்போ நான் என்ன பண்ணுவேன்?நான் இப்பவே போய் அவ கிட்ட பேச போறேன். பை டி”
அவன் சென்றதும் அவள் கல்லாய் சமைந்து போய் அமர்ந்திருந்தாள்.இதுநாள் வரை அவள் மனதிற்குள் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருந்த உண்மை முகத்தில் அறைந்தது போல அவளுக்கு விளங்கியது.
இதுவரை மாமன் மகனாகவும்,நல்ல தோழனாகவும் பார்த்த ரிதுநந்தன் உண்மையில் தனக்கு யார் என்பதை தாமரை முழுவதுமாக உணர்ந்தாள்.புதிதாக மலர்ந்த காதல் மொட்டு விரியுமுன்னே உதிர்ந்ததை எண்ணி அவள் கண்கள் கண்ணீர் வடித்தது.
அன்று வகுப்பு முடிவதற்குள் தாமரையின் நிலைமை மிக மோசமானது.என்ன முயன்றாலும் கண்களில் கண்ணீர் திரண்டுக் கொண்டே இருந்தது.தன் தோழிகள் அறியாமல் அதை அடக்குவதற்குள் பெரும்பாடு பட்டு விட்டாள்.
காலேஜ் முடிந்ததும் எப்பொழுதும் போல தாமரையை கூட்டிச் செல்ல ரிதுநந்தன் பைக்கில் காத்துக் கொண்டிருந்தான்.
“ஏய்!லோட்டஸ், என்னாச்சு உன் கண்ணுலாம் கலங்கி இருக்கு? உடம்பு ஏதாவது சரி இல்லையா?காய்ச்சல் அடிக்குதா என்ன?” அவன் கையை நீட்டி அவள் நெற்றியை தொட போக அவள் அதை தட்டி விட்டாள்.
“என்னாச்சு கண்ணம்மா?”
அவனின் கண்ணம்மா என்ற அழைப்பில் மறுபடியும் முணுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது.
“ப்ரியா கிட்ட பேசுனியா?”
“ஹ்ம்ம்…பேசிட்டேன். நான் காதலிக்கிறதா சொல்லிட்டேன்”
“ஓ”
“ஆமா….நான் காதலிக்கிறதா சொன்னேன். தாமரையை காதலிக்கிறதா சொன்னேன்.என் வாழ்க்கையே அவ மட்டும் தானு சொன்னேன்”
சரேலென்று நிமிர்ந்து அவனை பார்த்தவள், அங்கே அவன் முகம் கொள்ளா சிரிப்புடனும்,கண் நிறைய காதலுடனும் நிற்பதை கண்டாள்…..
தன் காதல் கதையை சொல்லி முடித்த தாமாரை அந்த நினைவுகளில் முகம் சிவக்க சில நிமிடம் அமர்ந்திருந்தாள்.
“அக்கா, எனக்கு ரித்துவை ரொம்ப பிடிக்கும்க்கா.எங்க அப்பாவும்,அம்மாவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.பாசத்தை வெளிப்படையா காட்டுனா பிள்ளைங்க கெட்டுடுவாங்கனு நினைக்கிறவங்க.அதனால எனக்கு சின்ன வயசிலிருந்து எல்லாமே ரித்து தான்”
“எங்க அப்பாவும், மாமாவும் சண்டை போட்டு பிரிஞ்சப்போ, இனிமேல் ரித்துவை பார்க்க முடியாதுனு தெரிஞ்சப்போ, எனக்கு எவ்ளோ வலிச்சுது தெரியுமா?அடிக்கடி போன் பண்ணி பேசுவான்.அந்த ஒரு சில நிமஷங்களுக்காக தான் என் வாழ்க்கையே ஓடிட்டு இருக்கிற மாதிரி தோணும்.என் சந்தோஷம்,என் துக்கம்,என் இருட்டு,என் வெளிச்சம் எல்லாமே அவன் தான்க்கா”
“கண்ணம்மா”
ரிதுநந்தன் தான் தன்னை கூப்பிடுகிறான் என்று தெரிந்தும் திரும்பாமல் நின்றாள் தாமரை.
‘ஒருவேளை இவ்வளோ நேரம் நாம பேசுனதை கேட்டிருப்பனோ?’
“கண்ணம்மா” அவன் மறுபடியும் அழைக்கவே தாமரை மதிவதனியிடம் திரும்பி,”அக்கா, அவனை போக சொல்லுங்கக்கா”
“அம்மா தாயே, என்னை ஆளை விடு. உங்க பிரச்சனையை நீங்களே பேசி தீர்த்துக்கோங்க, நான் போறேன்”மதிவதனி அவர்களுக்கு தனிமையை அளித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
“ஹேய்!கண்ணம்மா, சாரி டா.நீ என் கிட்ட எதுவுமே சொல்லலேன்னு தான் என் கோபமே. சாரி டி பட்டு”
“எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கலை. தயவுசெஞ்சு இங்கிருந்து போய்டு”
“ச்சு….சும்மா சொல்லாத…நீ அண்ணி கிட்ட பேசிட்டு இருந்ததை எல்லாம் நான் கேட்டேன்.நான் தான் உனக்கு எல்லாமேனு சொன்ன?நீ என்னை வெறுக்கிரியாக்கும்?”
“அது ரெண்டு நாளைக்கு முன்னாடி.இப்போ இந்த நொடி நான் அதிகமா வெறுக்கிறது உன்னை தான். போ இங்கிருந்து”
“இது தான் உன் கடைசி முடிவா?”
“ஆமா”
“இதுல எந்த மாற்றமும் இல்லையா?”
“இல்லை”
“சரி,ஓகே” ரிதுநந்தன் உடனே தன் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.
“ஹேய் ரம்யா! நான் தான் ரித்து பேசுறேன்.நீ எப்படிடா இருக்க?எனக்கு….”தாமரை அவனை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய்!ஏய்!லூசு…என்னை விடுறி…வலிக்குதுடி….விடுறி…..ஆ….அய்யோ”
“ஏண்டா?நான் வேண்டாம்னு சொன்னா அந்த ரம்யா பின்னாடி போய்டுவியா?உன்னை கொல்ல போறேண்டா நான்”
அவள் மேலும் அடிக்க ஆரம்பிக்கவும், அவன் விலகி ஓடினான்.பின்னாலே துரத்திக் கொண்டு வந்த தாமரை, அவன் திடீரென்று நிற்கவும், தடுமாறி அவன் மேல் சாய்ந்தாள்.
ரிதுநந்தன் அவளை மேலும் அவனருகில் இழுத்துக் கொண்டான்.
“டேய்! ரித்து…விடு டா…விடுன்னு சொல்றேன்ல…”அவள் திமிறவும் அவன் பிடியை இறுக்கினான். அவள் திமிறல் நின்றது. அவன் கண்களை பார்த்தாள்.
“என்னை பிடிக்கலேன்னு சொன்ன?”
“உன்னை எப்படிடா எனக்கு பிடிக்காம போகும்? என்னை நீ முழுசா பேச விட்ட தானே?! எனக்கு பார்த்த அந்த மாப்பிள்ளை கௌதம் இருக்கார்ல அவர் கிட்டயே நான் நம்ம காதலை பத்தி சொல்லிட்டேன்”
“அவரும் டீசன்ட்டா புரிஞ்சிக்கிட்டு அவரே நிறுத்தற மாதிரி கல்யாணத்தை நிறுத்திட்டார்.அதுக்கப்புறம் தான் அப்பா என்னை வேலைக்கு அனுப்ப சம்மதிச்சாங்க. இது எதையாவது என்னை சொல்ல விட்டியா நீ?”
“ரொம்ப சாரி கண்ணம்மா. உன்னை புரிஞ்சிகாம உன் மேல கோபபட்டுட்டேன்”
“உன் சாரி எல்லாம் தூக்கி குப்பைல போடு. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு என் ரித்துவை பத்தி தெரியும்.உன் கோபம் எல்லாம் கொஞ்ச நாள் தான் தாக்குபுடிக்கும்னு தெரியும் டா”
அதை கேட்ட ரித்து கண்களில் காதலுடன் அவள் இதழ் நோக்கி குனிந்தான்.
“ரித்து…வேண்டாம் டா.நடு வீட்ல வச்சு என்னடா இது?யாராவது வந்துடுவாங்க சொன்னா கேளு வேண்டாம்” அவன் காது கேட்கவில்லை.
அவன் அவள் இதழருகில் வரும் சமயம் அவனை பிடித்து தள்ளிவிட்டு அவள் சிரித்துக்கொண்டே ஓடினாள்.ரிதுநந்தன் அவளை பிடிக்க ஓடினான்.
ஓடிய வேகத்தில் யார் மீதோ மோத யாரென்று பார்த்த தாமரையும் , ரிதுநந்தனும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்….
புலரும்