ஆகாயம் 14:
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.
கட்சியை ஆரம்பித்த ஆதித்ய வர்மாவின் செயல்பாடுகள் அதிவேகமாக இருக்க, அவனை ஆரம்பத்தில் ஏளனமாய் பார்த்தவர்கள் இப்போது வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு வேகத்தை யாரும் எதிர் பார்க்கவில்லை. எதை, எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு அவனுக்கு இருந்ததாலும், அவனுக்கு ஏற்கனவே இருந்த செல்வாக்கும், அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் சாதகமாய் அமைந்தது.
சட்ட ரீதியாக வரும் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வை முன்பே தீர்மானித்து வைத்திருந்தான் ஆதித்ய வர்மா. அவனின் ஒவ்வொரு செயலும் அரசியலில் ஏற்கனவே இருந்த பெரிய மனிதர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது என்றால், இப்போது இருக்கும் அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியது.
“சார்..! உங்களை சந்திக்க, இப்ப இருக்குற எதிர்க்கட்சி தலைவர் சக்ரபாணி வந்திருக்கார்..” என்றான் கவின்.
“அவரை வர சொல்லு கவின்..” என்ற ஆதிக்கு, அவர் எதற்காக தன்னைக் காண வந்திருக்கிறார் என்ற சந்தேகம் வேறு மனதிற்குள்.
“வணக்கம் தம்பி..!” என்ற தோரணையுடன் வந்த சக்ரபாணியை இதற்கு முன்பு ஆதி பார்த்த பார்வை வேறு. இப்போது அவன் பார்க்கும் பார்வை வேறு. ஒவ்வொன்றையும் அவன் உற்று நோக்கினான் என்று சொன்னால் தான் அது சரியாக இருக்கும்.
“வாங்க..!” என்றவன், அவருக்கான உபசரிப்புகள் முடிந்தவுடன்,
“என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?” என்றான்.
“அது ஒண்ணுமில்லை தம்பி..! நீங்க கட்சி ஆரம்பிச்ச வேகத்துல எல்லாமே சட்டுபுட்டுன்னு பண்ணிட்டு இருக்கீங்க. புது கட்சி ஆரம்பிச்சு, முதல் தேர்தல்ல ஜெயிக்கிறது அவ்வளவு ஈசி இல்லை தம்பி. நானோ எதிர்க்கட்சி, நீங்களும் நானும் கூட்டணி அமைச்சுக்கிட்டோம்ன்னா, தேர்தல்ல ஜெயிக்கிறது ஈசி பாருங்க.. அதைப் பத்தி பேசிட்டு போகலாம்ன்னு தான் தம்பி வந்தேன்..” என்றார் சக்ரபாணி.
அவர் பேசியதைக் கேட்ட ஆதிக்கு எரிச்சலையும் மீறி யோசனை தான் அதிகமாக இருந்தது. கருணைநாதனுடன் ஒப்பிடும் போது, அவர் அளவுக்கு இவர் ஊழல்வாதி இல்லையென்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்வதை அவன் விரும்பவில்லை.
“நான் எந்த கட்சி கூடவும் கூட்டணி வைக்க விரும்பலை சார். எல்லா தொகுதியிலையும் நாங்க தனிச்சு தான் போட்டியிடுவோம்..” என்றான் ஆதி.
“அது அவ்வளவு ஈசியா நடக்காது தம்பி..” என்று சக்ரபாணி கூற,
“இன்னைக்கு இப்படி சொல்ற நீங்க தான், அன்னைக்கு என்னோட ஆதரவைக் கேட்டு வந்திங்க. நான் தேர்தல்ல ஜெயிக்காம போனாலும் பரவாயில்லை. ஆனா, கூட்டணிங்கிற பேச்சுக்கே இடமில்லை..” என்று திட்டவட்டமாக கூறி விட்டான் ஆதித்ய வர்மா. அவனின் பதிலைக் கேட்டு சக்ரபாணியின் முகம் மாற, அவன் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. அவர் கிளம்பும் போது கூட, ஆதியை முறைத்துவிட்டு சென்றதைப் போல் தான் இருந்தது.
“என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க..?”என்றான் கவின்.
“எல்லாம் காரணமாத்தான் கவின்..” என்ற ஆதி,
“சம்பத்தை லைன்ல பிடிச்சியா இல்லையா..?” என்றான்.
“அவர் நாளைக்கு கண்டிப்பா உங்களை மீட் பண்றதா சொல்லியிருக்கர் சார்..” என்றான் கவின்.
அப்போது, காவல்துறையின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் ஆதியை சந்திக்க வர,
“வாங்க சார்..! உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என்றான் ஆதி.
“சொல்லுங்க ஆதித்யா..! என்னை நீங்க உடனே மீட் பண்ணனும்ன்னு சொன்னிங்க. ஆனா, விஷயம் என்னன்னு சொல்லவே இல்லையே..?” என்றார் அவர்.
“எனக்கு உங்களால ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு..” என்றன ஆதி.
“விஷயத்தை சொல்லுங்க. என்னால முடிஞ்சா, நான் கண்டிப்பா உதவி செய்றேன்..” என்றார்.
“உங்க டிப்பார்ட்மென்ட்ல, உளவுத் துறைல வேலை பார்த்து ரிட்டையர்ட் ஆனவங்க லிஸ்ட், மாவட்ட வாரியா எனக்கு வேணும்.” என்றான் ஆதி.
“அவங்களைப் பத்தின தகவல் எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா மிஸ்டர். ஆதித்யா..?” என்று அவர் கேள்வி கேட்க,
“ஒரு முக்கியமான விஷயத்துக்காகத் தான் கேட்கிறேன் சார். இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்க போதும்..” என்றான்.
“கண்டிப்பா..! இன்னைக்கு ஈவ்னிங், நீங்க கேட்ட எல்லாமே உங்க கைல இருக்கும்..” என்றார் அவர்.
“தேங்க் யு..” என்று ஆதி சொல்ல, அவனிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார் அவர்.
“அவங்க லிஸ்ட் எல்லாம் எதுக்கு சார்..?” என்றான் கவின்.
“கவின் நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. முதல்ல நம்பிக்கையான ஒரு ஆள், நமக்கு வேணும். நீ ஒருத்தனே எல்லாத்தையும் மேனேஜ் பண்ண முடியாது. தென், என்னோட பண்ணை வீட்டை கட்சி ஆபீசா கம்ப்ளீட்டா மாத்த சொல்லியிருக்கேன்…” என்று ஆதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“சார், கட்சி ஆபீஸ் மெயின்ல இருந்தாதான் வசதியா இருக்கும்..” என்றான் கவின்.
“அது எனக்கும் தெரியும் கவின். மெயின்ல ஒரு பில்டிங்க ரெண்ட்க்கு எடுத்துக்கலாம். அங்கயும் ஒரு கட்சி ஆபீஸ் இருக்கும். ஆனா, அது பெயரளவில தான் இருக்கும். பண்ணை வீட்ல இருக்குற ஆபீஸ்ல தான் எல்லாமே நடக்கணும். இது மேக்சிமம் வெளிய தெரியகூடாது. ஒவ்வொரு சோசியல் மீடியாவுலையும் நம்ம கட்சி பேஜ்க்கு ரெண்டு அட்மின், அவங்களுக்கு கீழன்னு ரெண்டு பேரை போடு. ஏன்னா, வெளிய கருத்தை சொல்ல தயங்கற பலபேர், சமூக வலைதளத்தில் மட்டும் முக்கி முக்கி பேசுவாங்க. நமக்கான கன்டென்ட் அங்க நிறைய கிடைக்கும். டீக்கடை பென்ச் மாதிரி, சமூக வலைதளத்துலையும் அரசியல் பேசுற ஒரு குரூப் இருக்கும். அவங்க வெளிய தெரியமாட்டாங்க. ஆனா, அவங்க ஆதங்கம் வெளிய தெரியும். எந்த விதத்துலையும், நம்மளைப் பத்தின பாசிட்டிவ் வெளிய வரவே கூடாது…” என்றான் ஆதி.
“எல்லாம் சரிதான்..! ஆனா, நம்மளைப் பத்தின பாசிட்டிவ் வெளிய வரலைன்னா, அப்பறம் எப்படி மக்களுக்கு நம்மைப் பத்தி தெரியும்..?” என்றான் கவின்.
“கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணு..! கருணைநாதன் கட்சியோட எல்லா நெகட்டிவும் வெளிய வரணும். நெகட்டிவ் எல்லாம் சேர்ந்து கழுத்தை நெறிக்க, மக்களோட கவனம் ஆட்டோமேட்டிக்கா, நம்ம பக்கம் திரும்பும்..” என்றான் ஆதி.
“இது சாத்தியமா சார்..? இது எல்லாரும் பண்றது தானே..?” என்றான் கவின்.
“எல்லாரும் பண்றது தான். கொஞ்சம் மாத்தி பண்ணா, நமக்கு வாய்ப்பு அதிகம் இருக்கு..” என்றான் ஆதி.
“புரியலை சார்..” என்றான் கவின்.
“உனக்குப் புரியற மாதிரி சொல்றேன். உளவுத்துறைல ரிட்டையர்ட் ஆனவங்களை, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருத்தர்ன்னு பிரிச்சு வேலை கொடுப்போம். அந்த பகுதியில இது வரைக்கும் ஜெயிச்ச கட்சி, தோற்ற கட்சி, இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்காங்க..? என்ன பண்ணலை..? யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கு..? மக்களோட நாடி என்ன..?அந்த பகுதியில இருக்குற பிரபலம் யாரு..? அவங்க சென்ட்டிமென்ட் என்ன..? மக்கள் யாருமேல கோபமா இருக்காங்க..? அவங்க என்ன எதிர்பார்க்குறாங்க..? எங்க அடிச்சா, எங்க வலிக்கும்.. இப்படி எல்லாமே, எல்லாமே ஆதியும் அந்தமுமா அவங்களை நம்மக்கு ரிப்போர்ட் தர சொல்லுவோம்..” என்றான் ஆதி.
“சார்…!!!” என்றான் கவின்.
“எஸ் கவின்..! எல்லாத்தையும் ஒரே சார்ட்டா போடணும். அப்படி போடுறப்போ யாரைத் தூக்கணும், யாரைத் தாக்கனும், யாரை காக்கா பிடிக்கணும், யாருக்கு எவ்வளவு குடுக்கணும், யாருக்கு பவர் குடுக்கணும், குடுக்கக் கூடாது..இப்படி எல்லாமே ஒரே கட்டத்துக்குள்ள வந்துடும். உள்ளூர் வார்டு மெம்பர்ல இருந்து, கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், எம்எல்.ஏ வரைக்கும் எல்லாருக்கும் சார்ட் போடணும்.
நம்ம கட்சி சார்பா, ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல்ல போட்டியிட யாருக்கெல்லாம் விருப்பம், அவங்க பேக்கிரவுண்ட் என்ன..? அந்த பகுதியில அவங்களுக்கு இருக்குற பேர் என்ன..? இப்படி எல்லாமே பக்காவா இருக்கணும். விருப்ப மனு பெறப்படுகிறதுன்னு அறிக்கை விட ஏற்பாடு பண்ணு. வர மனுக்கள்ல இருந்து செலக்டேட் மட்டும் தான் எனக்கு வரணும். அதுல இருந்து செலக்ட் பண்ணி, யாருக்கு வாய்ப்பு குடுக்கனும்கிறதை அப்பறம் முடிவு பண்ணிக்கலாம். இதெல்லாம் ஆரம்பம் மட்டும் தான்..” என்று நிறுத்திய ஆதித்யா,
“இதுல என்னென்ன செய்யணும்..? எப்படி செய்யணும்..? அதுக்கு யாரைப் பார்க்கணும்..? அவங்க நம்பர், அட்ரெஸ்..இப்படி எல்லாமே இருக்கு. இதை ஒரு தடவை நீ ஸ்டடி பண்ணிடு.. நமக்கு டைம் ரொம்ப குறைவா இருக்கு. இந்த குறைவான நேரத்துல செய்ற எல்லாத்தையும் கவனமாவும், நேர்த்தியாவும் செய்யணும். இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு லேடி வருவாங்க. அவங்க ரிட்டயர்ட் ஐஏஎஸ். அப்பாவோட பிரண்ட். அவங்க இன்னும் என்ன செய்யனும்ன்னு சொல்லுவாங்க..” என்றான் ஆதி.
அதிர்ந்து தான் போனான் கவின். ஆதி, இவ்வளவு வேகமாக செயலில் இறங்குவான் என்று கவின் நினைக்கவில்லை.
“நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை சார். அதுவும் இவ்வளவு ஸ்பீடா.. கொஞ்சம் பயமா கூட இருக்கு சார்..” என்றான் கவின்.
“கவின், யோசிச்சு இறங்கின பிறகு யோசிக்கக் கூடாது. இறுதி முடிவை நம்மளே முடிவு பண்ணிட கூடாது. வருது,போகுது… அதை மோதிப் பார்க்காம முடிவு பண்ணக் கூடாது..” என்றான் ஆதி தீவிரமான முகத்துடன்.
“இந்த உளவுத் துறை ஐடியா நிச்சயமா வொர்க்அவுட் ஆகும் சார்..” என்றான் கவின்.
“அது எனக்கும் தெரியும் கவின். ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் நமக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும். அரசியல்ல எல்லா நேரமும் நேர்மையா போக முடியாது. சில விஷயங்களை செஞ்சு தான் ஆகணும்..” என்றான்.
“இருந்தாலும், மக்கள் பார்த்து பழகின கட்சிக்கு தான் சார் ஒட்டு போடுவாங்க. வெறும் சின்னத்தை மட்டும் பார்த்து ஓட்டுப் போடுற மக்கள் நிறைய பேர் இருக்காங்க சார். அதனால தான் ஒரே சின்னத்துக்கு அடிச்சுக்கிறாங்க..” என்றான் கவின்.
“சின்னத்தைப் பார்த்து ஓட்டுப் போடுற அவங்க எண்ணத்தை முதல்ல மாத்தணும் கவின். எந்த இலவச அறிவுப்பும் நம்ம தேர்தல் அறிக்கையில இருக்கவே கூடாது. முக்கியமா எல்லா தொகுதிக்கும், ஒரு துணை அமைச்சரையும் போடுவோம்ன்னு சொல்லுவோம். அதுவும் படிச்ச, தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு பெண்ணா இருக்கணும் அவங்க…” என்றான் ஆதி.
“அப்போ கட்சியில இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லையா சார்…?” என்றன கவின்.
“ஏன் இல்லை..? ஆனா, ஆட்சில உட்காருவதை விட, ஆட்சிப் பணியில அவங்களை உட்கார வைக்கணும். அது தான் முக்கியம். இருக்குற எல்லா மாவட்ட ஆட்சியரும் நேர்மையா, திறமையா இருந்துட்டாலே, நமக்கு வேலையே இல்லையே. நாட்டுப் பணி அவங்களுடையது. நலப் பணி நம்மளுடையது..” என்றான் ஆதி.
“எனக்கு நம்பிக்கை வந்திருச்சு சார்..” என்ற கவினைப் பார்த்து சிரித்த ஆதி,
“பேச்சுல மட்டும் எப்பவும் நம்பிக்கை வைக்கக் கூடாது கவின். செயல்லையும் வைக்கணும். அப்படித்தான், நாம நினைச்சது நடக்கும். அடுத்த ஒருவாரம் நான் ஷூட்டிங் முடிச்சுட்டு வர்றதுக்குள்ள, நான் சொன்ன எல்லாமே தயாராகியிருக்கணும். பணத்தைப் பத்தி பிரச்சனையில்லை. எப்ப கேட்டாலும் அம்மா குடுப்பாங்க.” என்றான்.
“ சார், ஷூட்டிங்க்கு நான் கூட வரவேண்டாமா சார்..?” என்றான் கவின்.
“இந்த முறை வேண்டாம் கவின். நான் பார்த்துக்கிறேன்..” என்றான் ஆதி. ஒவ்வொரு நிமிடமும் அவன் மூளை ஏதாவது ஒரு யோசனையில் தான் இருந்தது.
அவனைப் பார்த்த சேதுராமனுக்கு கூட கவலையாக இருந்தது. அதை ஆதியிடம் வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை.
“கருணைநாதனை பழிவாங்க இந்த வழி தான் சரியா ஆதி..?” என்று கேட்டே விட்டார்.
“அப்பா, அந்த ஆளைப் பழிவாங்கனும்ன்னு நான் இதுல இறங்கலை. அதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான். ஆனா, இப்பவே இவ்வளவு ஆட்டம் போடுறவங்க, இந்த முறையும் ஒருவேளை ஜெயிச்சு வந்துட்டா, நாடு நாசமாத்தான் போகும். இது எனக்கான சவால்ப்பா. பேசாம ஒதுங்கியிருந்த என்னை, ஆட்டத்துக்குள்ள இழுத்தது யார்ன்னு மட்டும் தான் எனக்குக் குழப்பமா இருக்கு. மத்தபடி, எதைச் செய்தாலும் அதை திருந்த செய்யனும்ன்னு நீங்கதான சொல்லிக் குடுத்திருக்கீங்க..” என்றான் ஆதி.
“இருந்தாலும் இது ஒருவழிப் பாதை ஆதி. போனா திரும்பி வர முடியாது..” என்றார்.
“நான் நினைச்சா, கண்டிப்பா திரும்பி வருவேன்ப்பா..” என்றான் ஆதி.
“தேர்தல்ல நிற்க போறது கருணைநாதன் இல்லை. உன்னோட மனைவி துவாரகி. ரெண்டு பெரும் இப்படி எதிரெதிரா நின்னா, பார்க்கறவங்க என்ன நினைக்க மாட்டாங்க..?” என்றார் சேது.
“அதைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லைப்பா. ஆனா, துவாரகியை நான் நிற்க சொல்லலை. அவ, அப்பா பேச்சைக் கேட்டு நின்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. அது மட்டுமில்லாம, பொண்டாட்டியை அவளுக்குப் பிடிச்சதை செய்ய வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு நான் கொடுமைக் காரனும் இல்லை. அவ உரிமை இது. வேணும்ன்னு சொல்றதுக்கும், வேண்டாம்ன்னு சொல்றதுக்கும் அவளுக்கு உரிமை இருக்கு. அரசியல் வேண்டாம்ன்னா, அதை அவ தான் சொல்லணும்..” என்றவனுக்கு, எவ்வளவு வெறுப்பு இருந்தாலும், ஏதோ ஒரு சோர்வு அவனைப் பிடித்து ஆட்டியது. மனையாளின் மடியில் தலை வைத்துப் படுத்தால், அந்த சோர்வு எல்லாம் போய்விடுமோ என்னமோ..?
கருணைநாதன் வீடு;
“அப்பா, அவன் போற வேகத்தைப் பார்த்தா, எனக்கே சந்தேகம் வருது..” என்ற சசியின் குரலில் எப்போதும் இல்லாத அளவிற்கு, அப்படி ஒரு சோர்வு.
“கண்டிப்பா அவன் ஜெயிக்க மாட்டான்..! மழைக்கு முளைக்கிற காளான் எல்லாம் ஒரு நாள் தான் சசி..” என்றார்.
“எனக்கு அப்படி தோணலைப்பா..! அவன் மழையில போட்ட விதை மாதிரி, வளர்ந்து நிற்க போறான்..” என்றான் சசி.
“அப்படி ஒரு நிலை வந்தாலும், கடைசி நிமிஷத்துல அவன் கையில இருந்து வெற்றியை தட்டிப் பறிக்குற தந்திரம் எனக்குத் தெரியும். நீ ஏன் கவலைப் படுற..?” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..?” என்றபடி வந்து நின்றாள் பூமிகா.
“என்ன..?” என்றான் சசி.
“துவாரகிக்கு பதிலா நீங்க என்னை ஏன் நிறுத்தக் கூடாது. நியாயப்படி பார்த்தா, நான் தான் இந்த வீட்டு மருமக. துவாரகி இன்னொரு வீட்டுக்கு மருமக. நான் நிக்கிறது தான சரியா இருக்கும்..?” என்று பூமிகா போர்க்கொடி தூக்க ஆரம்பித்தாள்.
“உனக்கு எதுக்கு கட்சி, பதவியெல்லாம்..? அடங்கி ஒடுங்கி வீட்ல இரு. இல்லையா கம்பெனியை பார்த்துக்கோ. தேவையில்லாத விஷயத்துல எல்லாம் தலையிடாத..” என்றான் சசி.
“எது தேவையில்லாத விஷயம்..? உங்க தங்கச்சி எலக்சன்ல நிக்கலாம். பதவியில உட்காரலாம். ஆனா, நான் மட்டும் அடங்கி ஒடுங்கி இருக்கனுமா..? எங்க அப்பாவும் ஒன்னும் சாதாரணம் கிடையாது..” என்று பூமிகா சொல்ல,
“எதையும் புரியாம பேசக் கூடாது பூமிகா. நாங்க துவாரகியை நிறுத்துறது பெயரளவுக்குத்தான். மத்தபடி, வேற எந்த உள் நோக்கமும் கிடையாது..” என்றார் கருணைநாதன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது மாமா. ஒன்னு நம்ம கட்சியில நீங்களே வாய்ப்பு குடுங்க. இல்லைன்னா, நான் என்னோட நாத்தனார் புருஷன் கட்சியில… அதான் ஆதித்ய வர்மாவோட கட்சியில போய் வாய்ப்பு கேட்பேன்..” என்று பட்டென்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
“இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இவ வேற..?” என்று சசிதரன் புலம்ப, கருணைநாதனுக்கு சந்தேகம் கூடிக் கொண்டே சென்றது.
“என்ன அண்ணி சொன்னாங்க..?” என்றாள் துவாரகி.
“எங்க..? சாதகமா ஒரு பதிலையும் சொல்லலை..” என்று பூமிகா உதட்டைப் பிதுக்கினாள்.
“நடக்கிறதை எல்லாம் பார்க்கும் போது, எனக்கே கஷ்ட்டமாத்தான் இருக்கு அண்ணி. நியாயமா பார்த்தா, நீங்கதான் இந்த வீட்டு மருமக. இந்த வீட்டு வாரிசை பெத்துக் குடுக்க போறவங்க. ஆனா, அதையெல்லாம் மறந்துட்டு என்னையத் தலையில தூக்கி வச்சு கொண்டாடிட்டு இருக்குற இவங்களைப் பார்த்தா, எனக்கு கொஞ்சம் பரிதாபமா இருக்கு அண்ணி.. உங்க உரிமையை எல்லாம் நானே எடுத்துக்குற மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு அண்ணி. நீங்க என்னைய தப்பா நினைக்கக் கூடாது. மனசுக் கேட்காம தான் இதை உங்ககிட்ட சொல்லி புலம்பிகிட்டு இருக்கேன்.” என்ற துவராகி, கவலையாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.
“உனக்கு இருக்குற இந்த தெளிவு கூட, இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு இல்லை துவா. வாழவேண்டிய பொண்ணை இங்க வச்சுகிட்டு, உன் வாழ்க்கையோட விளையாடிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேனா இல்லையா பாரு..” என்றாள் பூமிகா, ஆவேசமாக.
“இப்ப கூட என்மேல கோபப்படாம, எனக்கு உறுதுணையா இருக்கேன்னு நீங்க சொல்றிங்க பாருங்க அண்ணி, உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு தான் அண்ணி..” என்ற துவாரகி, அதே கவலையுடனேயே அறைக்குள் சென்றாள். அறைக்குள் சென்றவளின் கவலை முகம் அப்படியே பிரகாசமாய் ஜொலிக்க, எங்கு திரும்பினாலும் தெரியும் ஆதித்ய வர்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். டிவி, நியூஸ் பேப்பர், சோசியல் மீடியா என அனைத்திலும் ஆதி தான்.
“பயபுள்ள தீயா வேலை செய்றான் போலவே..? என்ன பண்ணலாம்..?” என்று தீவிரமாய் யோசித்தவள், நிறுத்தி நிதானமாக பார்கவியின் எண்ணிற்கு அழைத்தாள்.
“சொல்லுமா துவாரகி..” என்றார் பார்கவி.
“டாக்டர்..!எனக்கு ஒரு பிரச்சனை.உங்க பையன் இருக்காரா..?” என்றாள்.
“என்ன பிரச்சனை துவாரகி..?” என்று பார்கவி பதட்டமாக கேட்க,
“அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது டாக்டர் ஆன்ட்டி. உங்க பையன்கிட்ட தான் சொல்ல முடியும். நீங்க அவர்கிட்ட போனைக் குடுக்க முடியுமா பிளீஸ்..” என்றாள்.
“துவா, அவன் ஏற்கனவே கோபமா இருந்த மாதிரி இருந்தது. நாளைக்கு ஷூட்டிங் வேற கிளம்புறான்..” என்றார்.
‘என்னது? ஷூட்டிங் போறானா..? அப்போ எலக்சன் வேலையெல்லாம்..?’ என்று யோசித்தவள்,
“பிளீஸ் ஆன்ட்டி..!” என்றாள் பாவமாக.
“சரிம்மா குடுக்குறேன்..” என்றவர், ஆதியைத் தேடிச் செல்ல,
அவனோ அங்கு அவனுக்குத் தேவையானதை பேக் செய்து கொண்டிருந்தான்.
“ஆதி உனக்கு போன்..” என்றார் பார்கவி.
“உங்க போனுக்கு யாரும்மா கூப்பிட்டது..?” என்றவன் போனை வாங்கி காதில் வைக்க, இடத்தை காலி செய்திருந்தார் பார்கவி.
“யாரு..?” என்றான் எடுத்த எடுப்பில்.
“என்ன ஹீரோ சார்..? எடுத்த எடுப்பில் யாருன்னு கேட்குறிங்க..? யாருன்னு சொன்னாதான் பேசுவிங்களா..?” என்றாள்.
“ஏய்..!!” என்று பல்லைக் கடித்தான் ஆதி.
“பரவாயில்லையே, நான் கூட பேரையும் சேர்த்து சொல்லன்னுமோன்னு நினைச்சேன்..” என்றாள் துவா நக்கலாக.
“என்னடி…? வரவர உனக்கு நக்கல் கூடிகிட்டே போகுது. முன்னாடியெல்லாம் வாயைத் திறக்கவே காசு கேட்ப..? இப்ப என்னடான்னா… பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு..?” என்றான் ஆதி.
“என்ன பண்றது ஹீரோ சார். என்னால பேசத்தான முடியும்..?” என்று அவள் பெருமூச்சு விட்டது அவனுக்கு இங்கே கேட்டது.
“என்ன விஷயம்..?” என்றான் பட்டென்று.
“எனக்கு உங்களைப் பார்க்கணும்.” என்றாள் அமைதியான குரலில்.
“என்னது..?” என்றவனுக்கு காதில் விழுந்த செய்தியை நம்பத்தான் முடியவில்லை. ஆனால் அவளின் குரல் அவனை நம்ப சொன்னது.
“காதுல விழலை.. எனக்கு உங்களைப் பார்க்கணும்..” என்றாள் மீண்டும்.
“எதுக்கு..? உங்கப்பன் எதுவும் சொன்னாரா..?” என்றான் எரிச்சலுடன்.
“உங்களுக்கு அவரை இழுக்கலைன்னா தூக்கமே வராதா. பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் இடையில் அவரெங்க வந்தார்..?” என்றாள்.
“திருப்பித் திருப்பி அப்படி சொல்லாதடி. எனக்கு அப்படி ஒரு உறவே தேவையில்லை..” என்றான் ஆதி.
“நீங்க இப்படி வெறுக்குற அளவுக்கு நான் என்ன பண்ணேன்..?” என்றாள் வேகமாய்.
“என்ன பண்ணலை..! உங்கப்பன் என்ன சாதாரண ஆளா, அவன் தான் என்னோட தம்..” என்று சொல்ல வந்தவன் பேச்சை அப்படியே நிறுத்தினான்.
‘என்ன பண்ற ஆதி..? துவாரகிக்கு தான் விஷயம் தெரியாதே. கல்யாணம் முடிஞ்சு உன்கூட வரலைன்ற கோபத்துல தான் நீ இப்படி பேசுறன்னு அவ நினைச்சுகிட்டு இருக்கா. அவகிட்ட விஷயத்தை உளறப் பார்த்தியே..?’ என்று அவனின் மனம் எச்சரிக்க,
“சொல்லுங்க..? என்னமோ சொல்ல வந்திங்க..?” என்றாள்.
“என்ன திடீர் அக்கறை உனக்கு..? அப்பன் பேச்சை கேட்டு, வீட்டோட இருந்தவ தான..? இப்ப என்ன புருஷன் மேல கரிசனை எல்லாம்..?” என்றான் இயல்பாக. அப்படி இயல்பாக பேசவே அவன் படாதபாடு பட வேண்டியிருந்தது.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு உங்களைப் பார்க்கணும். முடியுமா? முடியாதா..?” என்றாள்.
“என்ன கிண்டலா..? நினைச்ச நேரத்துக்கு எல்லாமே செய்ய முடியாது. ஒழுங்கா போனை வச்சுட்டு, ஆகுற வேலையைப் பாரு..” என்றவன் போனை வைத்து விட்டான்.
அவன் அப்படித்தான் செய்வான் என்று அவளுக்கு முன்னமே தெரியும். இருந்தாலும் அவளுக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது இருந்தது அவனிடத்தில். இப்போது அதை தெளிவாக்கிக் கொண்டாள். அப்படி தெளிந்தவளின் மனதில், ஆதித்ய வர்மாவின் மீதான காதல் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.
‘என்ன இவ..? வரவர இவ செய்றது எல்லாமே வித்யாசமா இருக்கே..? இவ இப்படியெல்லாம் பேசுவாளா..? கல்யாணத்துக்கு முன்னாடியும், அதுக்குப் பிறகும் துவாரகி இப்படி பேசுனதே இல்லையே..? அன்னைக்கு, என்னைப் பார்க்க வந்தப்போ நான் அவ்வளவு திட்டியும் திரும்பவும் போன் பண்றான்னா என்ன அர்த்தம்..?’ என்று அவன் மனதில் நினைக்க,
‘என்ன அர்த்தம்..?’ என்று மனம் அவனைத் திரும்பிக் கேள்வி கேட்டது.
அவளைப் பற்றிய யோசனையிலேயே அவன் தூங்கிப் போனான். தூக்கத்தில் புரண்டு படுத்தவனுக்கு அருகில் யாரோ இருப்பதைப் போன்று தோன்ற, பட்டென்று எழுந்து லைட்டைப் போட்டான் ஆதி. துவாரகி தான் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“இவ எப்ப, எப்படி இங்க வந்தா..?” என்று திகைத்தவன்,
“துவா..துவாரகி..” என்று அவளை எழுப்ப,
“என்ன ஆதி..? எதுக்கு இப்படி கத்துறிங்க..?” என்றாள் சாவகாசமாய்.
“ஏய்..? நீ எப்படி இங்க வந்த..? அதுவும் என்னோட ரூம்க்கு எப்படி வந்த..?” என்றான் எரிச்சலுடன்.
“பதட்டப்படாதிங்க. வாசல் வழியா தான் வந்தேன். பார்கவி ஆன்ட்டி தான் நீங்க இந்த ரூம்ல இருக்கிங்கன்னு சொன்னாங்க..” என்றாள்.
“இந்த நேரத்துக்கு எதுக்கு வந்த..? யாராவது பார்த்தா என்ன ஆகுறது..?” என்றான்.
“என்ன ஆதி..? நான் உங்களுக்கு மனைவி. உங்களுக்கு நியாபகம் இருக்கா, இல்லையா..? யார் பார்த்தாலும் என்ன நினைப்பாங்க..?” என்றாள்.
“ம்ம்..!பகலில் பிரிவு வேஷம், இரவில் உல்லாசம்” ன்னு நாளைக்கு தலைப்பு செய்தியே நம்மளைத் தான் போடுவான். எந்திரிடி முதல்ல, கிளம்பு இங்க இருந்து. இந்த பைத்தியக்காரத் தனமான வேலையெல்லாம் இனி செய்யாத..” என்றான்.
“ஆதி..ப்ளீஸ்..! நான் இயர்லி மார்னிங் எழுந்து போய்டுவேன். நீங்க நாளைக்கு ஷூட்டிங் கிளம்புறிங்கன்னு ஆன்ட்டி சொன்னாங்க. அதான் பார்க்கணும் போல இருந்தது, உங்ககிட்ட கேட்டேன், நீங்க முடியாதுன்னு சொல்லிட்டிங்க. அதான் நான் வந்தேன். வந்து பார்த்தா, சார் நல்ல தூக்கம். சரின்னு நானும் படுத்துத் தூங்கிட்டேன்..” என்றவள் மீண்டும் படுத்து கொள்ள, தலையைப் பிடித்து அமர்ந்து விட்டான் ஆதி.
அவளிடம் பேசினால், கருணைநாதன் மீதிருக்கும் மொத்த வெறுப்பையும் அவளிடம் காட்டி விடுவோமோ என்று தான் அவன் விலகிப் போவது. ஆனால், அவன் விலக, இவள் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
புதிதாய் ஒரு இடத்தில் இருக்கும் உணர்வு இல்லாமல், அவள் மீண்டும் தூக்கத்தை தொடர, ஆதிக்கு இருந்த தூக்கமும் போனது.
‘இவ அப்பன் மட்டும் இந்த காட்சியைப் பார்க்கணும்.. நெஞ்சு வெடிச்சே செத்திடுவான்..’ என்று மனதில் நினைத்தவனுக்கு, அவனையும் அறியாமல், சிறிய புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
“இவளை புரிஞ்சுக்கவே முடியலையே..?என்னை சோதிக்கனும்ன்னே வந்திருப்பா போல. ஆதி, நீ கடந்து வரப்போற சோதனைல இதுவும் ஒன்னு. எங்கயும் சிலிப் ஆகாம, கடந்து வந்துடு..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் ஆதித்யா.
அவள் அருகே தூங்கவும் முடியாமல், நடைபோட்டுக் கொண்டிருந்த அந்த இரவு, அவனுக்கு தூங்கா இரவு.