ஆகாயம் 20:
அடுத்த இருபது நாட்களும் எப்படி சென்றது என்று யாருக்கும் தெரியாது. தேர்தல் நடந்த தினத்திற்கும், ஒட்டு எண்ணிக்கை நாளுக்கும் இடையில் இருந்த அந்த இருபது நாட்களையும் ஆதி ஷூட்டிங்கிலேயே கழித்தான். இடையில் இருந்த படத்தை ஒரு வழியாக முடித்துக் குடுத்திருந்தான்.
அனைத்து அரசியல் கட்சிகளும் பீதியில் இருக்க, ஆதித்ய வர்மா மட்டும் மீண்டும் தன்னுடைய நடிப்பைத் தொடங்கியிருந்தான். அதுவே கருணைநாதனுக்கு எரிச்சலாக இருந்தது.
‘நடிக்கிறவன், நடிச்சுகிட்டு மட்டும் இருக்க வேண்டியது தான..? வீணா அரசியலுக்குள்ள வந்து ஏன் நம்ம உயிரையும் வாங்கணும்..?’ என்று அவர் மனதில் வஞ்சிக்காத நாளில்லை.
கனகவேலும், திவ்யாவும் எலக்சன் ரிசல்ட்டுக்காக காத்திருந்தனர். தேர்தல் முடிவை வைத்து மட்டுமே அவர்களின் அதற்கு மேலான திட்டங்கள் இருக்கும்.
தேர்தல் முடிவுக்கு ஒரு நாளுக்கு முன்பே வந்துவிட்டிருந்தான் ஆதித்ய வர்மா.
அன்று கருணைநாதனுக்கு பிறந்த நாள் என்று ஒரே அமர்க்களமாக இருந்தது. தேர்தல்முடிவு வரும் வரை சில விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், அதிகப்படியான ஆடம்பரங்களை செய்ய முடியவில்லை, அவரது கட்சியினரால்.
அவரது வீட்டிலேயே சிறிய விழா ஒன்றை சசிதரன் ஏற்பாடு செய்திருக்க, அன்று முழுவதும் பிசியாக இருந்தாள் துவாரகி. அவளது முகத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சியில்லை. அன்று கடற்கரையில் ஆதியை பார்த்ததோடு சரி. இன்றோடு இருபது நாட்கள் ஆகிறது. அவன் ஷூட்டிங் சென்றிருக்கிறான் என்று தெரியும். ஆனால், போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.
என்னதான் வெளியே சொல்லாவிட்டாலும், அவள் மனதின் ஏக்கம் முகத்தில் தெரியத்தான் செய்தது. அது அருணாவிற்கு நன்றாகப் புரிந்தது.
கல்யாணம் முடிந்து ஆறு மாதத்திற்கும் மேலாகப் போகிறது. இப்போது வரை அவள் கணவனுடன் வாழவில்லை என்ற உண்மையே அருணாவை கவலையடைச் செய்திருந்தது. அதற்கு அவள் திருமணம் ஆகாமலேயே தங்கள் வீட்டில் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கும் தோன்றாமல் இல்லை.
“இன்னும் எத்தனை நாளைக்கு துவாரகி இங்கயே இருக்குற எண்ணம் உனக்கு..?” என்று பூமிகா கேட்க, அவள் பதிலை எதிர்பார்த்து அருணாவும் நின்றார்.
“ஏன் அண்ணி..? நான் இருக்குறது உங்களுக்கு சிரமமா இருக்கா..?” என்றாள் துவாரகி.
“நீ இருக்குறதுல எனக்கென்ன சிரமம் இருக்கப் போகுது துவா. இது என்ன என் வீடா..? இப்பவும் இது உன் வீடு தான்..! நான் கேட்கிறது உன் மேல் இருக்குற கோபத்துல இல்லை. உன் மேல இருக்குற அக்கறையில..” என்றாள் பூமிகா.
“புரியுது அண்ணி. நானும் அப்படி நினைச்சு சொல்லலை..” என்று நிறுத்தியவள்,
“எனக்கு எது எப்ப என்ன நடக்கணும்ன்னு இருக்கோ, அது கண்டிப்பா நடக்கும் அண்ணி..” என்றவள் அவள் வேலையை செய்து கொண்டிருக்க,
“நீ இவங்களை நம்பாத துவா. இவங்க போக்குக்கு விட்டா, இந்த ஜென்மத்துக்கு உன்னை ஆதி கூட சேர்ந்து வாழ விட மாட்டாங்க. எத்தனை நாளைக்கு அவரும் பொறுமையா போவார். இத்தனை நாள் தான், தேர்தல் வேலை அது இதுன்னு இருந்திங்க. அதான் இப்ப எல்லாமே முடிவுக்கு வரப் போகுதே?இன்னும் என்ன தயக்கம் துவாரகி..?” என்றாள் பூமிகா.
‘எல்லாமே முடிவுக்கு தான் வரப்போகுது அண்ணி’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
“தயக்கமெல்லாம் இல்லை அண்ணி. கூடிய சீக்கிரம் கிளம்பிடுவேன்..” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
அன்று மாலை, வீட்டளவில் பங்க்ஷன் நடந்து கொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்கா வண்ணம் வந்திறங்கினான் ஆதித்ய வர்மா. அவனுக்கு அழைப்பு இல்லையென்றாலும், அவன் வந்திருந்ததைப் பார்த்து, கட்சியினரும், உறவினர்களும் தங்களுக்குள் ஒவ்வொன்றைப் பேசிக் கொண்டனர்.
தன்னுடைய அறைக்குள் இருந்த துவாரகிக்கு, ஆதி வந்ததும் தெரியவில்லை. எதுவும் தெரியவில்லை. ஏற்பாட்டில் முன்னின்று செய்தவள், ஏனோ மனமில்லாமல் அறைக்குள் சென்று விட்டாள்.
“அப்பா, இவன் எதுக்கு இப்ப இங்க வரான்..?” என்று சசிதரன் அவனை முறைக்க,
“வாங்கண்ணா..!” என்று ஆளுக்கு முந்தி சென்று வரவேற்றாள் பூமிகா.
“பூமிகா, என்ன பண்ற..? என்ன திடீர்ன்னு ‘அண்ணன்’?” என்றான் சசி கோபமாக.
“துவாரகியோட புருஷன் எனக்கு அண்ணன் தான..? அதான் அப்படி கூப்பிடுறேன்.” என்றாள்.
“நீதான் அவனை வர சொன்னியா?” என்றான் சசி பல்லைக் கடித்துக் கொண்டு.
“அப்படி சொல்லக் கூடாதுங்க. நான்தான் அவரை பங்க்ஷனுக்கு இன்வைட் பண்ணேன்..” என்றாள் நக்கலாய்.
அனைவரும் இருக்கும் போது, சத்தமாய் அவளை சசியால் திட்டக் கூட முடியவில்லை. அதே சமயம் ஆதித்ய வர்மாவையும் வரவேற்க வேண்டிய கட்டாயம்.
“வாங்க ஆதி..!” என்றான் மனதில் கடுப்பையும், முகத்தில் வலிய தவழவிட்ட புன்னகையுமாய்.
என்றும் இல்லாமல் அன்று அவன் கூடுதல் அழகனாய் இருந்தான். எப்போதும் டீ-ஷேர்ட் சகிதம் இருப்பவன், இன்று பார்மலாக வந்திருந்தான். ஆள் பாதி, ஆடை பாதி என்பதைப் போல, அவனின் உடை தேர்வு இருந்தது.
“ஷூட்டிங்கில் இருந்து நேரா வந்துட்டானா..? ஆளு டக்கரா இருக்கானே..!” என்று அங்கிருந்த முக்கிய அமைச்சர்கள் பேசிக் கொள்ள, கனகவேலுக்கு எரிச்சலாய் இருந்தது.
“நம்ம உசுரை வாங்குறதையே இவன் வேலையா வச்சிருக்கான். ஒரு நாள் நிம்மதியா இருக்க விடுறானா..?” என்று மனதிற்குள் நினைத்து எரிச்சல் படத்தான் முடிந்தது அவரால்.
அங்கு ஆதியும் விருப்பப்பட்டு வரவில்லை. பூமிகா விஷயத்தை சொல்லி அழைத்தவுடன், மறுப்புத் தெரிவித்தவன் தான். ஆனால் துவாரகியைப் பார்த்து பல நாட்கள் ஆக, அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனை வரவழைத்திருந்தது.
வேண்டா வெறுப்பாக வந்தவனின் கண்கள் துவாரகியைத் தேட, அவன் யாரைத் தேடுகிறான் என்பதை அவன் முகத்தை வைத்தே புரிந்து கொண்டார் கருணைநாதன்.
‘இது தாண்டா எனக்கு வேணும். உன்னோட இந்த பலவீனம் தான் என்னோட பலமே’ என்று அவர் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
“யாரை அண்ணா, தேடுறிங்க..?” என்றபடி வந்து நின்றாள் பூமிகா.
“இங்க வந்து நான் யாரைத் தேடுவேன்..? எல்லாம் என்னோட பொண்டாட்டியைத் தான்..” என்றான் ஆதி, சற்றும் அசராமல்.
“துவா, அவளோட ரூம்ல இருக்காண்ணா…” என்ற தகவலை அவள் சொல்லிவிட்டு செல்ல,
‘எல்லாரும் இங்க இருக்கும் போது, இவ ஏன் தனியா இருக்கா..?’ என்ற யோசனை அவன் மூளைக்குள் இடறியது. ஏற்கனவே அவள் நடந்து கொள்ளும் விதம் அவனுக்கு சந்தேகத்தைக் கிளப்பியிருக்க, இப்போது அவளின் தனிமை இன்னமும் அவனின் சந்தேகத்தைக் கூட்டியது.
அந்த வீட்டை பார்வையால் அளந்தவன், கவினின் கையில் இருந்த பூங்கொத்தை வாங்கி கருணைநாதன் கையில் கொடுத்தான்.
“பிறந்தநாள் வாழ்த்துகள்..” என்றான் ஆதி.
“நன்றி..!” என்ற கருணைநாதன் அதை வாங்கிக் கொள்ள, அவரைப் பார்த்து ஆதி சிரித்த சிரிப்பில் என்ன இருந்தது என்று சத்தியமாக அவரால் யூகிக்க முடியவில்லை.
“யாரை உன்னோட கண்ணு தேடிகிட்டே இருக்கு..? என் பொண்ணையா..?” என்றார் கருணைநாதன்.
“என் பொண்டாட்டியை..” என்றான் சற்றும் அசராமல், மிடுக்குடன்.
“நீ எப்படி கூப்பிட்டாலும், அவ உன்கூட வரப்போறதில்லை. அப்பறமும் ஏன் வழிய வந்து அசிங்கப்படுற..?” என்று கருணைநாதன், அவனின் கோபத்தைத் தூண்டி விட,
“இப்ப நான் கோபப்பட்டு கத்திட்டு அப்படியே போய்டுவேன்னு தான நீ நினைக்கிற..? அரசியல்ல நான் கத்துகிட்ட முதல் பாடமே, கோபப்பட்டா.. காரியம் நடக்காது அப்படிங்கிறது தான். எதை எப்படி செய்யனும்ன்னு எனக்குத் தெரியும் மாமனாரே. கூடிய சீக்கிரம் நீங்க உங்க மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போற மாதிரி இருக்கும். எல்லாத்துக்கும் தாயாரா இரு..” என்றான் ஆதி, குரலில் கடுமையையும், முகத்தில் கனிவையும் வைத்துக் கொண்டு.
“என்னடா மிரட்டுறியா..?” என்று அவர் சீற,
“நான் எங்க மிரட்டுனேன். பாருங்க எவ்வளவு அன்பா சொல்லிட்டு இருக்கேன். நான் மிரட்டுனா, நீங்கல்லாம் தாங்க மாட்டிங்க மாமனாரே..” என்றவன், அவரை கண்டுகொள்ளாது, துவாரகியைத் தேடி சென்றான்.
“அண்ணா, எங்க போறீங்க..?” என்றாள் பூமிகா.
“துவாரகி ரூம் இது தான..?” என்றான்.
“இல்லைண்ணா..! அவ ரூமை மாத்திகிட்டா. இப்போ அந்த ரூம்ல இருக்கா..” என்று சொல்லிவிட்டு சென்றாள் பூமிகா.
“ரூமை எதுக்கு மாத்தினா..?” என்று யோசித்தவன், பூமிகா காட்டிய அறையை நோக்கி சென்றான். அவன் கதவை இரண்டு மூன்று முறை தட்டிய பிறகே வந்து கதவைத் திறந்தாள் துவாரகி.
அங்கே ஆதித்யா நிற்பான் என்று அவள் உண்மையாகவே நினைக்கவில்லை. நம்ப முடியாமல் அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
‘இவ ஒருத்தி..? எப்பப் பார்த்தாலும் என்னமோ லவ்வரைப் பார்த்த மாதிரியே பார்க்க வேண்டியது. அப்பறம் கூப்பிட்டா, அப்படி ஒரு எண்ணமே இல்லைன்ற மாதிரி பேச வேண்டியது’ என்று நினைத்தவன்,
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்கணும்..?” என்றான்.
“வா..வாங்க ஆதி. நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. அதான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்..” என்றவள் அவனுக்கு வழிவிட, உள்ளே வந்தான் ஆதி.
“நீங்க எப்படி..?” என்று அவள் நிறுத்த,
“சும்மா, பூமிகா இன்வைட் பண்ணியிருந்தாங்க. அதான் வந்தேன்..” என்றான்.
“அவங்க கூப்பிட்டதுக்காக வந்த மாதிரி தெரியலையே..?” என்றாள்.
“உண்மைதான். அதை சாக்கா வச்சு உன்னைப் பார்க்கத் தான் வந்தேன். இதை சொல்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..” என்று அவன் தோள்களைக் குலுக்கியவாறு சொல்ல, அவனின் அந்த மேனரிசத்தில் அவள் கவரப்பட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“அப்பறம், எதுக்காக துவா, ரூமை மாத்திகிட்ட? உன்னோட ரூம் அங்க தான இருந்தது..” என்றான்.
“அங்க பிடிக்கலை. இங்க வந்துட்டேன்..” என்றாள்.
“அதான், அங்க ஏன் பிடிக்கலை..?” என்றான் நமட்டு சிரிப்புடன்.
“அதுக்கெல்லாம் காரணமா இருக்கும்..?” என்று அவள் மழுப்ப,
“நான் கூட என்னோட ஞாபகம் வந்து, அதை மறக்கத்தான் ரூம் மாறிட்டியோன்னு நினைச்சேன்..” என்றவன் வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள,
‘எப்படி சரியா சொல்றான்’ என்று தனக்குள் நினைத்தவள், அந்த பாவனையை முகத்தில் காட்டிவிட,
“அப்ப நான் சொன்னது நிஜம் தான் போலயே..?” என்றவனின் முகத்தில் குறும்பு புன்னகை இருக்க,
“என்ன இவன்..? இன்னைக்கு இப்படியெல்லாம் பேசுறான். இது நிஜமா இல்லை கனவா..?” என்றவளுக்கு எதையுமே நம்ப முடியவில்லை.
அவள் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டவன்,
“நம்புடி.. நிஜம் தான்..!” என்றான் ஆத்மார்த்தமாக. அவனுடைய அந்த குரல் ஏனோ, அவள் தயக்கங்களை உடைத்தெறிய,
“ஆதி..” என்று கதறியவள், அவன் நெஞ்சிலேயே தஞ்சம் அடைந்தாள். அவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்திருக்க, அவளிடமிருந்து இப்படி ஒரு அழுகையை எதிர்பார்க்கவில்லை.
“என்னாச்சு துவா..?” என்று அவன் கேட்க, அவளோ கண்ணீரை மட்டும் தான் வெளியேற்றினாளே தவிர வார்த்தைகளை இல்லை.
முதலில் அவள் ஏதோ மனக்கவலையில் அழுகிறாள் என்று அவன் நினைத்திருக்க, ஆனால் நேரம் போகப் போக அப்படி தெரியவில்லை அவனுக்கு. மேலும் அவள், அவனுக்குள் புதைந்து போயிருந்தாள்.
‘ஒரு மனுஷனை கட்டிப் பிடிக்கிறப்பயாவது சந்தோஷமா கட்டிப் பிடிக்க விடுறாளா..? எப்ப பாரு சோக கீதம் வாசிச்சுகிட்டு..’ என்று நினைத்தவன்,
“துவா..! கூல்..! இப்ப ஏன் இப்படி ரியாக்ட் பண்ற..? என்ன பிரச்சனை..?” என்றான்.
“ஒன்றுமில்லை” என்பதைப் போல் அவள் தலையாட,
“அப்பறம் ஏண்டி மனுசனைப் படுத்துற. சரி, கட்டுன பொண்டாட்டியைப் பார்த்து பல நாள் ஆச்சேன்னு நினைச்சு பார்க்க வந்தா, இப்படி அழற. இதுல மேடம் சிஎம் போஸ்ட்டுக்கு வேற நின்னுருக்கிங்க..” என்று அவன் கிண்டல் பண்ண,
‘உண்மை தெரிஞ்சா இப்படி நீங்க பேசுவிங்களா ஆதி. என் முகத்துலையே முழிக்க மாட்டிங்க..’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள். அதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, பட்டென்று அவனிடம் இருந்து விலகினாள் துவாரகி.
“நீ பட்டுன்னு விலகுற அளவுக்கு ஒரு சீனும் நடக்கலை இங்க..?” என்றவனை அவளால் பார்க்க முடியவில்லை.
கதவைத் திறந்தவள், அங்கே சசிதரனைப் பார்த்து துணுக்குற்றாள்.
அவளைத் தாண்டி அவன் உள்ளே பார்க்க, சசியை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றான் ஆதித்ய வர்மா.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க துவாரகி..?” என்றான் சசி.
“பார்த்தா தெரியலை, அவ புருஷன் கூட பேசிட்டு இருக்கா..?” என்றான் ஆதி.
“நான் உன்கிட்ட கேட்கலை..” என்றான்.
“நானும் உன்கிட்ட சொல்லலை..” என்றான் ஆதி.
“அப்பா, உன்னை கீழ கூப்பிடுறார் துவா..உடனே வா..” என்று அவன் கையேடு அழைத்து செல்ல நிற்க, அவள் திரும்பி ஆதியைப் பார்த்தாள்.
“உங்க ஆட்டமெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்க்குறேன்..? நாளைக்கு தெரிஞ்சுடும்..” என்ற ஆதித்யா,
“நான் கிளம்புறேன் துவா. டேக் கேர்..” என்றபடி கிளம்பிவிட்டான்.
ஆதியை அவளால் தடுக்கவும் முடியவில்லை. அதே சமயம் இருக்கவும் சொல்ல முடியவில்லை. தன்னுடைய நிலையை அவள் அறவே வெறுத்தாள்.
கிளம்பிய ஆதி, கருணைநாதனைப் பார்த்துக் கொண்டே சென்றதை அவரும் கவனிக்கத் தவறவில்லை.
“என்ன இது..? இவங்க ரெண்டு பேர் பார்வையுமே ஒரு மாமனார், மருமகன் பார்வை மாதிரி இல்லையே..? இவங்களுக்குள்ள அரசியலையும் தாண்டி ஒரு பெரிய அரசியல் இருக்கும் போலவே..?” என்று சரியாக கணித்தார் கனகவேல்.
“அண்ணா..? நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையை ஆட்டுறேன்ற ஒரே விஷயத்துக்காக, நீ அவரை அவமானப் படுத்துற மாதிரி நடந்துக்கிறதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது…?” என்று கோபத்தில் கத்தினாள் துவாரகி.
“அவன் ஏதோ ஒரு விஷயத்தோட தான் இங்க வந்திருக்கான் துவா. சும்மா வந்துட்டு போறதுக்கு அவன் ஒன்னும் லேசுபட்ட ஆள் இல்லை..” என்றான் சசி.
“எப்படியோ இருந்துட்டு போகட்டும். நீ ஏன் அப்படி பேசின..? அந்த இடத்துல நானும் வாயைத் திறந்து பேசியிருந்தா, உங்களுக்குத் தான் அசிங்கம். ஏற்கனவே உங்கமேல அவனுக்கு கொஞ்சம் கூட மரியாதை கிடையாது. இருக்குற கொஞ்ச நஞ்சத்தையும் கெடுக்க வேண்டாமேன்னு பார்க்குறேன்..” என்றாள் துவா.
“யாருக்கு மரியாதை இருக்கு இல்லைன்றது, நாளைக்குத் தெரிஞ்சுடும்..அப்பறம் இருக்கு அவனுக்கு..” என்ற சசிதரன் அவளையும் முறைத்து விட்டுத்தான் சென்றான்.
“சாரி ஆதி..” என்று அவள் போனில் மெசேஜ் அனுப்ப, அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
‘நாளைக்கு வரைக்கும் பொறுங்க ஆதி. நாளைக்கு எல்லா விஷயத்துக்கும் ஒரு முடிவு வந்துடும்..’ என்று நினைத்துக் கொண்டவளுக்கு, தன் மீதான அவனுடைய காதலை எண்ணி களிக்கத்தான் நேரமில்லை.
மறுநாள் ஒட்டு எண்ணிக்கை… என்ற நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் இருந்த அதே படபடப்பும், அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பும் அதிகமாய் இருந்தது. அரசியல் கட்சிகளைத் தவிர, பொதுமக்களுக்கும் அந்த எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
கூட்டணிக் கட்சிகள் எப்படியும் ஜெயித்து விடுவோம் என்ற இறுமாப்பில் இருக்க, சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் ஒரு வித பயத்துடன் இருந்தனர். ஆதித்ய வர்மாவுக்கும் முடிவு எப்படி வரும் என்ற எண்ணம் மனதிற்குள் இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
ஆதரவு தலைவர்களின் வீட்டிற்கு வெளியே, தொண்டர்கள் முதல் நாள் இரவில் இருந்தே காத்துக் கிடக்க, ஆதியின் வீட்டின் முன்பு, ஆதரவாளர்கள், ரசிகர்கள் என அனைவரும் காத்துக் கிடந்தனர்.
ஒருவர் ஜெயித்தால், அவரை ஆதரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் சிலபேர், எதிர்பார்த்த ஆட்சி அமையாவிட்டால், அதை எப்படி கவிழ்ப்பது என்ற யோசனையுடன் சில பேர், அமைச்சரவையில் இடம் பிடிக்க தூண்டிலை வீசிக் கொண்டிருந்த சில பேர், கட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு சிலபேர் என்று மொத்த எதிர்பார்ப்பின் கூடாரமாக மாறிப் போயிருந்தனர்.
“நிலவரம் என்ன சொல்லுது கவின்..?” என்றான் சம்பத். அவனும் ஆதியின் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தான்.
“உறுதியா சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை தான் சார்..” என்றான் கவின்.
சம்பத்திற்கும் அது புரிந்து தான் இருந்தது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஜெயித்து பதவியைப் பிடித்துவிட, இது ஒன்றும் சினிமா இல்லையே. ஒரு மிகப் பெரிய கட்சியை ஒரே அட்டெம்ப்ட்டில் பாதாளத்திற்கு தள்ளுவது என்பது முடியாத காரியம் என்று அவனுக்கும் தெரியும்.
இருந்தாலும் ஆதியின் மீதான மக்களின் நம்பிக்கையும் அவனுக்குத் தெரியும். ஒருவர் மீது ஏற்படும் நம்பிக்கையின்மை தான், அடுத்தவர் மீது ஏற்படும் நம்பிக்கைக்கு காரணமாய் அமைகிறது காலங்காலமாய். மக்கள் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்.
“என்ன ஆதி.. எதுவும் பேசாம இருக்க..?” என்றான் சம்பத்.
“இனி பேசுறதுக்கு ஒண்ணுமே இல்லை சம்பத். நாளைக்கு ரிசல்ட். பாசா, பெயிலா இல்லை என்ன நடக்குதுன்னு நாளைக்குத் தான் தெரியும். அருகம்புல்லை ஆலமரம் ஆக்குவதும், கூழாங்கல்லை கோபுரம் ஆக்குவதும் நம்ம கையில் இல்லையே. எல்லாம் மக்கள் கையில தான இருக்கு.. பார்ப்போம்..” என்பதோடு முடித்துக் கொண்டான்.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, சம்பத்திற்கு போன் வர, துவாரகி தான் அழைத்திருந்தாள்.
ஆதியை பார்த்தவன், சற்று தள்ளி சென்று பேச ஆரம்பித்தான். அவன் பேசிக்கொண்டிருக்க, எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மா.
“சாப்பிடு ஆதி..! நாளைக்கு சாப்பிட நேரம் இருக்குமோ என்னமோ..?” என்றார் பார்கவி.
“நாளைக்கு எனக்கு ஒரு வேலையும் இல்லைம்மா..” என்றவன்,
“அப்பா எங்க..?” என்றான்.
“அவர் சாப்பிட்டு தூங்கிட்டார் ஆதி. கவின் நீயும் சாப்பிடு கவின். இன்னைக்கு கெஸ்ட்ஹவுஸ்லையே தங்கிக்க கவின்..” என்ற பார்கவி,
“துவாரகி என்ன சொன்னா ஆதி..?” என்றார்.
“அம்மா, நாளைக்கு ஒரு நாள் பொறுங்க. அடுத்து அவ வரலைன்னு சொன்னாலும், நானே தூக்கிட்டு வந்திடுறேன். சரியா..?” என்றான்.
“ரொம்ப சந்தோசம் ஆதி..” என்ற பார்கவிக்கு அப்போது தான் மனம் நிறைந்து போனது.
மறுநாள் விடியலே பரபரப்புடன் தான் இருந்தது. யாரும் வெளியே செல்லவில்லை. கருணைநாதன் மட்டும் தான் மற்ற அமைச்சர்களுடன் அவர் வீட்டில் கூடியிருந்தார். துவாரகி அறையில் இருந்த டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, ஆதியும் அதையே தான் செய்து கொண்டிருந்தான். ஆதியின் கூடவே சம்பத்தும் கவினும் இருந்தனர். ஆதியின் ஒவ்வொரு அசைவும் சம்பத்தின் மூலமாக துவாரகிக்கு சென்று கொண்டே தான் இருந்தது.
வாக்கு எண்ணிக்கை மையங்களின் முன்பு, அனைத்துக் கட்சித் தொண்டர்களும் வெடியுடன் நின்று கொண்டிருந்தனர். மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்க, ஒவ்வொரு நொடியையையும் மீடியாவை சேர்ந்தவர்கள் பரபரப்புடன் நகர்த்திக் கொண்டிருந்தனர். அனைத்துக் கட்சி வாக்கு விபரங்களும் வந்து கொண்டிருக்க,
கருணைநாதனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. அதைப் பார்த்து கொண்டிருந்த துவாரகிக்குத் எரிச்சலாய் இருந்தது.முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை, இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அவரே தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
“ரொம்ப ஒட்டு வித்யாசத்துல எல்லாம் அவங்க முன்னாடி இல்லை ஆதி..” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் சம்பத்.
பல அமைச்சர்களுக்கு சாதகமான தகவல் வரவும், அவர்களின் முகத்தில் அப்படியொரு சந்தோஷ அலை வீசிக் கொண்டிருக்க, கருணைநாதனுக்கு இறுமாப்பில் இன்னமும் கொஞ்சம் திமிர் கூடியது.
ஆதி எதுவுமே பேசவில்லை. அவனுடைய அந்த அமைதிக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.
“இந்த அளவுக்கு ஒட்டு வாங்குனதே பெரிய விஷயம் ஆதி. நம்ம ஜெயிக்கலைன்னாலும், முதல் தேர்தல்லையே, நீ ஒரு ஸ்ட்ராங்கான எதிர்கட்சித் தலைவர் ஆகிடுவ..” என்று சேது ராமன் அவனுக்கு நம்பிக்கையாய் சொல்லிக் கொண்டிருந்தார். ஆதித்ய வர்மா போட்டியிட்ட தொகுதியில் அதிக எண்ணிக்கை வித்தியாசத்தில் அவன் மாபெரும் வெற்றி அடைந்திருந்தான். ஆனால், எல்லா தொகுதியிலும் அப்படி நடக்கவில்லையே.
234 தொகுதிகளில் 23 தொகுதிகள் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியிருக்க, 1 சபாநாயகர், 97 தொகுதிகளில் ஆதித்ய வர்மாவும், 113 தொகுதிகளில் கருணைநாதனும் வெற்றி பெற்று, அந்த தேர்தலில் கருணை நாதன் வெற்றி பெற்றிருந்தார்.
துவாரகியால் கருணைநாதனின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் அறையில் இருந்த டிவியை உடைக்க, அமைச்சர்கள் முகத்திலும், கருணைநாதன் முகத்திலும் வெற்றி பெற்ற ஒரு சந்தோஷமே இல்லை.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட, அப்போதும் ஆதியின் அமைதி தான் பதிலாய் கிடைத்தது.
“என்ன ஆதி..? இப்படி நடந்திடுச்சு..?” என்றான் சம்பத்.
“விடு சம்பத், பார்த்துக்கலாம்..” என்றான் ஆதி.
கருணைநாதன் கட்சியினரை சேர்ந்தவர்கள் வெடி வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்க, பிரியாணியும் சரக்குமாய் கலைகட்டிக் கொண்டிருந்தது.
“வெற்றி பெற்ற 23 சுயேட்சை வேட்பாளர்களும், தங்களுடைய ஆதரவு யாருக்கு என்று சொல்லாததால், ஆட்சி அமைக்கத் தேவையான 117 இடங்கள் இல்லாததால், கருணைநாதனால் ஆட்சி அமைக்க முடியாது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.” என்ற செய்தி தலைப்பு செய்தியாக போய்கொண்டிருக்க, அதுவரை அமைதியை மட்டுமே காட்டிக் கொண்டிருந்த ஆதித்ய வர்மாவின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பு வர, அந்த வீடே எதிரொலிக்கும் அளவிற்கு சிரிக்க ஆரம்பித்தான் ஆதி. அவன் மனதின் மொத்த அழுத்தமும், அந்த சிரிப்பில் வெளியேறிக் கொண்டிருந்தது.