ஆதி அவளையே கூர்மையாய் பார்க்க, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு, அப்போது வார்த்தைகள் வரவில்லை.
“போகலாமா..?” என்றான்.
“இதோ வந்திடுறேன்…” என்றவள் மேலே செல்ல எத்தனிக்க,
“எதுவும் வேண்டாம் வா.!” என்றான்.
“எதுவும் வேண்டாமா..? அவ பேர்ல இருக்குற ஹாஸ்பிட்டலும் வேண்டாமா..?” என்றார் நக்கலாய்.
“மன்னிக்கணும்..! அது இப்போ என்பேர்ல இருக்கு. அந்த ஹாஸ்பிட்டலை நான் விலைக்கு வாங்கியாச்சு..” என்றான்.
“அதெப்படி முடியும்..? நான் கையெழுத்துப் போடாம..?” என்றவர் கோபமாய் முறைக்க,
“அது என் பேர்ல இருந்த ஹாஸ்பிட்டல் தானேப்பா. நான் தான் வித்தேன். இன்னைக்கு என்ன ரேட்டுக்கு போகுமோ, அதை விட இருபது கோடி அதிகமாத்தான் இருக்கு..”என்றவள், அந்த செக்கை அங்கிருந்த டேபிள் மேல் வைத்தாள்.
“நீ தப்பு பண்ற துவாரகி..” என்றார் மீண்டும்.
இல்லப்பா.. நான் சரியா தான் பண்றேன். என்ன..? அதை தப்பான நேரத்தில் பண்றேன். அவ்வளவு தான்..” என்றவள், அருணாவைப் பார்க்க, அவருக்கு அப்படி ஒரு சந்தோசம்.
“போகலாம் ஆதி..” என்று அவள் சொல்ல, ஆதியோ எதுவும் பேசாமல் சென்றான்.
“ஆதிக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்குமோ..? கேட்டிருப்பானோ..?” என்று யோசித்தபடியே அவன் பின்னால் சென்றாள் துவாரகி. திருமணம் முடிந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு புகுந்த வீடு செல்கிறாள்.
அன்று இருவரையும் சேர்த்து வைத்தே ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தார் பார்கவி.
“இப்போத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு துவா. இனியாவது சந்தோஷமா இருங்க..” என்று சொல்ல, ஆதியின் முகமோ இறுக்கமாகத் தான் இருந்தது.
அவனின் முகத்தைப் பார்க்க பார்க்க, துவாரகிக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. தயங்கிபடியே தான் அவனுடன் சென்றாள். அறைக்குள் செல்லும் வர அமைதியாக இருந்த ஆதி, அடுத்த நிமிடம் அவளே எதிர்பாரா வண்ணம் அவளை இழுத்து அணைத்திருந்தான். அவள் முகம் முழுவதும் ஆவேசமாய் முத்தமிட, அந்த முரடனின் பிடியில் திகைத்துப் போய் சிக்குண்டிருந்தாள் துவாரகி.
“ஆதி என்னாச்சு..?” என்று அவள் கேட்க கேட்க, காதிலேயே வாங்காதவன் போல் அவனுடைய வேலையை செய்து கொண்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் அவளைப் பேசவே விடவில்லை அவன். அவன் இதழ் கொண்டு அவள் இதழ் அணைத்திருக்க, அத்தனை ஆசுவாசத்தையும் அந்த ஒற்றை முத்தத்தில் தீர்த்துக் கொண்டிருந்தான்.
மணித்துளிகள் மரணித்துக் கொண்டிருக்க, அவளை விலக்கியவன்,
“எதுக்கு துவாரகி இதை என்கிட்டே முன்கூட்டியே சொல்லலை..?” என்றான்.
“எதை..?” என்றாள் புரியாமல்.
“உங்க வீட்ல நீ பேசின எல்லாத்தையுமே நான் கேட்டேன்..” என்று அவன் சொல்ல, அதிலேயே புரிந்து போனது அவளுக்கு.
“உங்களுக்கு என்மேல கோபம் வரலையா ஆதி..?” என்றாள் கண்கள் கலங்க.
“என்கிட்டே சொல்லலைன்ற கோபம் தான். வேற ஒரு கோபமும் இல்லை…” என்றான்.
“எப்படி ஆதி..? விக்ரம் என்னால தான் செத்தான்..” என்றாள்.
“உன்னால இல்லை. நீ உங்கப்பாவுக்கு ஒரு கருவி அவ்வளவு தான். நீ வேணும்ன்னு செய்யலையே. ஆனா, நண்பனுக்காக நீ யாரும் செய்ய யோசிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்க துவா. இந்த ஒரு விஷயம் சொல்லிடும் நீ யாருன்னு..” என்றான் ஆதி.
“என்னைப் புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் ஆதி. தேங்க் யு சோ மச்..” என்று அவன் மேலேயே விழுந்து கதறினாள்.
“இப்ப ஏன் அழற..?” என்றான்.
“நீங்க என்னை மன்னிக்க மாட்டிங்கன்னு நினைச்சேன்..” என்றாள்.
“நான் மன்னிக்கிற அளவுக்கு நீ எதுவும் பண்ணலை..” என்றான் ஆதி.
“விக்ரம், உங்களை ரொம்ப கோபக்காரன்னு சொல்லியிருக்கான்..” என்றாள்.
“அதே நேரம் பாசக்காரன்னும் சொல்லியிருப்பானே..?” என்றான் ஆதி.
“அது என்னவோ உண்மை தான்..” என்றாள்.
“இன்னைக்கு உண்மையை எல்லாம் நீ சொல்லியிருக்க கூடாது துவாரகி. உங்கப்பாவோட முழு கோபமும் உன் பக்கம் தான் திரும்பும்..” என்றான்.
“பரவாயில்லை, அதான் நீங்க இருக்கிங்களே..?” என்றவள், வாகாய் அவனுடன் பொருந்திப் போனாள்.
“இன்னொரு விஷயம் சொல்லேன்..?” என்றான்.
“என்ன..?”
“உன்னோட பிளான்ல சம்பத்தும் இருக்கான் தானே..?” என்றான்.
“ம்ம்..” என்றாள்.
“அதான் ஆரம்பத்துல இருந்து ரெண்டு பேரும் ஒரு தினுசா நடமாடிக்கிட்டு இருந்திங்களா..?” என்றவனுக்கு விக்ரமை நினைத்து அந்த நொடி வேதனை வந்தாலும், இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அதற்கடுத்து அவர்களின் பேச்சு நீண்டு கொண்டிருக்க,
“நாளைக்கு சட்டமன்றம் போகணும்..” என்றான்.
“ம்ம்..” என்றாள்.
“பெரும்பான்மையை நிரூபிக்கணும்..” என்றான்.
“ம்ம்..” என்று சத்தம் வர, அவளைப் பார்த்த ஆதி, முறைத்துப் பார்த்தான். துவாரகி தூங்கிப் போயிருந்தாள்.
“பாவம் எத்தனை நாள் தூங்கலையோ..?” என்றவன், அவளை நன்றாக படுக்க வைத்து விட்டு, வெளியே வந்தான்.
“துவாரகி எங்கடா..?” என்றார் பார்கவி.
“தூங்குறாம்மா..” என்றவன், அவனுடைய அலுவல் அறைக்குள் நுழைந்து கொண்டான். அடுத்து செய்ய வேண்டிய அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்தான்.
“நாளைக்கு எல்லாமே தயாரா இருக்குள்ள கவின். பெரும்பான்மையை நிரூபிச்ச உடனே எல்லா மீடியாவுலையும் நான் சொன்ன நியூஸ் வரணும்..” என்றான்.
“எல்லாமே பக்காவா இருக்கு சார்..” என்றான் கவின்.
“குட். அதே மாதிரி இன்னும் ஒரு மாசத்துக்கு எந்த படத்துக்கும் கால்ஷீட் குடுக்க வேண்டாம்..” என்றான் ஆதி.
“ஓகே சார்..!” என்றான் கவின்.
அடுத்த நாள் விடியல் பல பேரின் வாழ்க்கைக்கு விடியலாகவே அமைந்தது.
ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபித்த ஆதித்ய வர்மா, முதலமைச்சராக பதவியேற்றான். ஓய்வுபெற்ற ஆட்சியாளர் வாசுகி துணை முதல்வராக பதவியேற்றார்.
இதையெல்லாம் செய்தியில் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவுக்கு அப்படி ஒரு எரிச்சல்.
“ஒண்ணுமே செய்ய முடியாதாப்பா..?” என்றாள் கடுப்புடன்.
“கூடிய சீக்கிரம் ஆட்சியை கவுத்துடுவோம் திவ்யா..” என்றார்.
“ம்க்கும்.. இப்படித்தான் சொல்லிட்டே இருக்கீங்க..? எங்க ஒன்னும் நடக்குற மாதிரி தெரியலையே..?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, போலீஸ் வர,
“என்னய்யா..? என்னையத் தேடி வந்திருக்கிங்க..?” என்றார் கனகவேல்.
“உங்களை அரஸ்ட் பண்ண வாரன்ட் இருக்கு சார்..”
“நான் என்னய்யா பண்ணேன்..?” என்றார்.
“உங்க தங்கச்சி பையன் விமலை கொலை பண்ணிட்டு அதை விபத்து மாதிரி சித்தரிச்சு அந்த கேஸ்ல இருந்து தப்பிச்சு இருக்கீங்க. அதுமட்டுமில்லாம, ஜாதி மாத்தி கல்யாணம் பண்ண ரெண்டு ஜோடியில, வேற ஜாதியை சேர்ந்த மாப்பிள்ளை ரெண்டு பேரையும் ஆணவக் கொலை பண்ணியிருக்கிங்க. எல்லாத்துக்குமே ஆதாரம் இருக்கு..” என்று அவர்கள் சொல்ல,
“இதையெல்லாம் உங்களுக்கு கொடுத்தது யார்..?” என்றார்.
“எல்லாமே சிஎம். ஆதித்ய வர்மா சார் சைட் இருந்து வந்திருக்கு. உங்களை உடனே அரஸ்ட் பண்ண சொல்லி வாரன்ட்டும் வந்திருக்கு..” என்றார் அந்த அதிகாரி.
“நான் யாருன்னு தெரியுமா..?” என்றார்.
“முன்னாள் அமைச்சர், இந்நாள் குற்றவாளி..” என்றார் போலீஸ்காரர்.
மகளின் கண் முன்னால் கனகவேல் கைது செய்யப்பட, எல்லாமே செய்தியாக டிவியில் வந்து கொண்டிருந்தது.
“நீ கவலைப் படாத திவ்யா. தொழிலை பார்த்துக்க. நான் சீக்கிரம் திரும்பி வந்துடுவேன். வந்து பார்த்துக்கிறேன். நானா, அவனான்னு..?” என்றபடி அவர் செல்ல, ராதிகா தான் பாவமாய் நின்றார்.
அடுத்ததாக கருணைநாதன் அரஸ்ட் செய்யப்பட்டார்.
“நடிகர் விக்ரம் தற்கொலை வழக்கில் திருப்பம். அவர் கொலைசெய்யப் பட்டிருப்பது அம்பலம். முன்னாள் முதலமைச்சர் தான் குற்றவாளி..” என்று தலைப்பு செய்திகள் போய் கொண்டிருக்க,
அவர் தான் இதை செய்தார் என்பதற்கு சாட்சியாக, அவரின் உதவியாளர் முருகேசன் அப்ரூவராக மாறி, வாக்கு மூலம் குடுத்திருந்தார். மேலும் பல ஊழல் வழக்குகளும் அவர்மேல் பதிவானது.
‘என்னைக்கா இருந்தாலும், உன்னோட அழிவு என்கைல தாண்டா..’ என்று கறுவிக் கொண்டே சிறை சென்றார் கருணைநாதன்.
சசிதரன் அந்த கட்சியின் தலைவராக, இப்போது எதிர்க்கட்சி தலைவன் அவன் தான்.
ஆதித்ய வர்மா ஒரு சிறப்பான ஆட்சியை வழங்குவான் என்று மக்களும் நம்பினர். அவனும் தன்னை நம்பினான்.
“சார், துவாரகி மேடம் ராஜினாமா பண்ணின தொகுதியில ரீ-எலக்சன் நடக்கப் போகுது சார்..!” என்றான் கவின்.
“மறுபடியும் துவாரகியை அதே தொகுதியில நம்ம கட்சி சார்பா மனுதாக்கல் செய்ய சொல்வோம்.” என்றான் ஆதி.
“ஆதி பிளீஸ்..! எனக்கு அரசியல் செட்டாகாது. எனக்கு என்னோட புரோபஷன் தான். என்னை கம்பெல் பண்ணாதிங்க..” என்று உறுதியாய் சொல்லிவிட்டாள் துவாரகி.
அன்றைய நாளின் இரவு தான் அவனுக்கு நிம்மதியான இரவு.
“உனக்கு கோபமில்லையே துவா..?” என்றான்.
“எதுக்கு..?”
“உங்கப்பாவை அரஸ்ட் பண்ணதுக்கு..?” என்றான்.
“கோபம் தான்..!” என்றாள்.
“என்ன சொல்ற..?” என்றான் ஆதி.
“இன்னும் எத்தனை மாசத்துக்கு இப்படி பேசிட்டே இருக்க போறீங்க..?” என்றவள் நமட்டு சிரிப்பு சிரிக்க,
“அடிப்பாவி..! அப்போ நான் தான் மக்கரா..?” என்றான்.
“புரிஞ்சா சரி..” என்றாள்.
“இப்பத்தான் சொல்லியிருக்க.. பாரு இனி ஐயாவோட பெர்பார்மேன்ச..” என்றான் ஆதி.
“எப்படி ஆதி? நான் அத்தனை முறை உங்களை இன்சல்ட் பண்ணியும், நீங்க திரும்பியும் வந்திங்க..?” என்றாள்.
“உண்மையை சொல்லட்டுமா..? முதல்ல எனக்கு கோபம் இருந்தது. ஆனா, எப்போ நீ விக்ரம் பிரண்ட்ன்னு தெரிஞ்சதோ அப்பவே கோபமெல்லாம் இல்லை..” என்றான்.
“எப்படி..?” என்றாள்.
“விக்ரம் யாரையோ லவ் பண்ற மாதிரி தெரிஞ்சது. அதான் முதல்ல அது நீயா இருப்பியோன்னு நினைச்சு டென்சன் ஆகிட்டேன்…” என்றான்.
“அது நான் இல்லை. அவ இங்க இல்லை. லண்டன்ல இருக்கா. இங்க இருந்தா விக்ரமோட நினைப்பு அதிகமா வருதுன்னு சொல்லிட்டு அங்கயே போய்ட்டா..” என்றாள்.
“அப்பறம் தான் விஷயம் ஸ்ட்ரைக் ஆச்சு..” என்றான் ஆதி.
“என்ன விஷயம்..?” என்றான்.
“விக்ரம் என்கிட்டே சொல்லியிருக்கான். என் பிரண்ட் ஒரு டாக்டர் லூசு இருக்கு. அது உன்னை ஒன்சைட்டா லவ் பண்ணுது. அவளுக்கு உன்னை பார்க்கணுமாம். நீ எப்போ ப்ரீன்னு கேட்டான். நானும் ரெண்டு மூணு தடவை ட்ரை பண்ணேன். பட், என்னோட பேட் லக் அவங்களைப் பார்க்கவே முடியலை…” என்று அவன் நிறுத்த,
“அது நான் தான்..!” என்றாள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு.
“அது தான் எனக்குத் தெரியுமே..?” என்றான் ஆதி.
“நிஜமாவா..?” என்றாள்.
“நிஜமா.. உண்மையை சொல்லனும்ன்னா உன்னைப் பார்த்த உடனே எனக்கும் பிடிச்சிருந்தது. அதுக்கு பேரு காதலான்னு எனக்குத் தெரியாது. ஆனா, எந்த சந்தர்ப்பத்துலையும் பிடிச்ச உன்னோட கையை விட்டுடக் கூடாதுன்னு நினைச்சேன்..” என்றான்.
“நான் காதல் பண்றேன் ஆதி உங்களை..” என்றவள், அவனின் அணைப்பில் மூழ்கிப் போக, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அவளின் காதலை எடுத்து சென்றான் ஆதித்ய வர்மா.
நடிகனாக தடம் பதித்து, கணவனாகவும் அவளின் மனதில் இடம் பிடித்திருந்தான்.
கயமைகளை தீயாக்கும் சூரியனாகவும் இருப்பான்.பலரின் வாழ்வில் வெளிச்சம் கொடுக்கும் சூரியனாகவும் இருப்பான் ஆதித்ய வர்மா.
ஒரு மாதத்திற்கு பிறகு,
அனைத்தும் கட்டுக்குள் இருக்க, ஜெயிலில் இருந்த கருணைநாதனை சந்திக்க சென்றிருந்தான் ஆதித்ய வர்மா.
“என்ன மாமனாரே..? எல்லாம் வசதியா இருக்கா..?” என்றான் ஆதி.
“டேய்..! நீ அரசியலுக்கு இப்ப வந்தவன். ஆனா, நான் இதுலையே ஊறிப் போனவன். இதெல்லாம் ஒரு கேஸா..? இதை எப்படி உடைச்சு வெளிய வரேன்னு பாரு..” என்றார் கருணைநாதன்.
“இங்க வந்தும் திமிர் அடங்கலை…” என்றான் திமிராக.
“உனக்கு மட்டும் என்ன கொஞ்சமாவா இருக்கு..?” என்றார்.
“அது கூடவே பிறந்தது..” என்றான்.
“இப்ப எதுக்கு வந்திருக்க..?” என்றார்.
“என்ன மாமனாரே..? கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறிங்க. உங்களுக்குத்தான் பொறுப்பில்லை. எனக்குமா இல்லை..? என்ன இருந்தாலும் நான் உங்க மருமகன் தான. அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்..” என்றான்.
“என்னடா நக்கல் தெறிக்குது. கூடிய சீக்கிரம் வெளிய வந்துடுவேன். அதுக்கப்பறம் இருக்கு கச்சேரி..” என்றார் கருணைநாதன்.
“சிறப்பா பண்ணிடுவோம்..எப்பவுமே மருமகன் தயார் நிலையில தான் இருப்பேன்.. சீக்கிரம் வாங்க, அடுத்த பாகத்தை ஆரம்பிச்சுடுவோம்” என்றவன்,
“வரட்டுமா மாமனாரே..?” என்றபடி வெளியே வந்தான்.
“சீக்கிரமே வரேண்டா….” என்ற கருணைநாதனின் மனதில் அப்போது இருந்தே, எதிர்கால அரசியல் திட்டங்கள் உதிக்க ஆரம்பித்தது.
எந்த அரசியல்வாதியும் திருந்தியதாக சரித்திரமில்லை. எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. எல்லோரும் நல்லவர்களும் இல்லை.
ஆனால், தான் வாழ பிறரை அழிக்க நினைப்பவன் எப்பொழுதும் மனிதனாக மாட்டன்.
சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்காவிட்டால், அடுத்து வரும் அனைத்து தப்புக்கும் அது தலைமையாய் அமையும்.
மீண்டும் சந்திப்போம்…!!!!