ஆகாயம் 21:
“என்னய்யா நடக்குது இங்க..?” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தார் கருணைநாதன்.
“அது தான் தலைவரே எங்களுக்கும் ஒன்னும் புரியலை..? நாம ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது, இப்ப இப்படி ஒரு சிக்கல் வந்திருக்கு..” என்று புலம்ப ஆரம்பித்தனர்.
“இதுல புலம்ப என்ன இருக்கு..? நாம தெளிவா காய் நகர்த்தினா… அவன் நமக்கு மேல தெளிவா காய் நகர்த்திட்டு இருக்கான். அந்த 23 பேர்ல 10 பேரை நமக்கு ஆதரவா மாத்தியிட்டா, நம்ம ஆட்சி தான்..” என்றார் கனகவேல்.
“அதெப்படிய்யா முடியும்..? இப்ப போய் நாம ஆதரவு கேட்ட, கட்சியில அவன் கேட்குற பதவியை குடுத்து தான ஆகணும். அப்போ இதுல பாதிப்பேருக்கு அமைச்சரவையில் இடமே இருக்காது, பரவாயில்லையா..?” என்றார் மற்றொரு அமைச்சர்.
“நமக்கு இப்போ அது முக்கியமில்லை. நம்ம ஆட்சி அமைக்கணும். நம்ம மெஜாரிட்டியை நாம சட்டசபையில நிரூபிச்சு ஆகணும். அது தான் முக்கியம்..” என்றார் கனகவேல்.
“கண்டிப்பா நடக்காது. ஏன்னா, அந்த 23 பேரும் ஆதித்ய வர்மாவுக்கு தான் ஆதரவு குடுப்பாங்கன்னு சொல்றாங்க. அதுல இருக்குற ஒருத்தர் கூட சாதரணமானவங்க இல்லை. எல்லாருமே ஒரு காலத்துல மக்களால கொண்டாடப்பட்ட, முக்கியமான பொறுப்பில் இருந்த அதிகாரிங்க. அவங்களை வளைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை..” என்றார் ஒருவர்.
“நிறுத்துங்கய்யா முதல்ல..! பேசிப் பிரயோஜனம் இல்லை. அந்த 23 பேர்கிட்ட ஆதரவு கேட்போம். தந்தா பார்ப்போம், இல்லையா அவங்க வெற்றியில சந்தேகம் இருக்குன்னு சொல்லி பிரச்சனை பண்ணுவோம். மத்தியில நம்ம கூட்டணிக் கட்சி தான இருக்கு. நமக்குத் தேவையான உதவியை அவங்க கண்டிப்பா செய்வாங்க. அவ்வளவு ஈசியா அவனை பதிவியில உட்கார விட்டுருவேனா என்ன..?” என்று கருணைநாதன் தீர்க்கமாக சொன்னார்.
தேர்தல் முடிவுகள் வந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. இப்போது வரை இவர்களுக்கு இதே யோசனை தான்.
அங்கு வேகமாய் வந்த சசிதரன்,
“அப்பா, டிவியைப் போடுங்க..!” என்றவனின் முகத்தில் அப்படி ஒரு கோபம். முகமெல்லாம் சிவந்து போயிருக்க, கருணைநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னடா சசி..? எதுக்காக இப்படி பதட்டப்படுற..?” என்றவர் புரியாமல் பார்க்க, பார்த்தவருக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.
“எதனால மேடம், நீங்க உங்க கட்சியில இருந்து விலகி, இப்போ உங்க கணவரோட கட்சியில சேரப் போறீங்க..?” என்றனர் செய்தியாளர்கள்.
“அவங்க கொள்கை எனக்குப் பிடிக்கலை..அதான்..” என்றாள்.
“இத்தனை நாள் அவங்க கொள்கை உங்களுக்கு தெரியாதா..? இல்லை தூங்கிட்டு இருந்திங்களா..?” என்றனர் செய்தியாளர்கள்.
“ஒரு கட்சியில இருக்கனுமா, இருக்கக் கூடாதான்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான். நீங்க இல்லை..” என்று கோபமாகவே பதில் கொடுத்தாள் துவாரகி.
“இது உங்கப்பாவுக்கு எதிரா, நீங்க நடத்துற நாடகமா..?” என்றார் ஒருவர்.
“கண்டிப்பா இல்லை…” என்றாள்.
“உங்க கணவர் வெற்றியோட விளிம்புல இருக்குறதால நீங்க அவர் பக்கம் போறிங்களா..?” என்றனர்.
“அப்படியும் சொல்லலாம்..” என்றாள்.
“நீங்க திடீர்ன்னு உங்க கணவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம்..?” என்று கேட்க,
“மன்னிக்கணும். நான் என்னோட கணவருக்கு ஆதரவு கொடுக்கலை. மக்களாட்சி மன்ற கட்சியோட தலைவருக்கு தான் ஆதரவு கொடுக்கிறேன்..” என்றாள்.
“இப்ப நீங்க அப்படி கட்சி மாறும் போது, உங்க எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணனும். அப்படி இல்லைன்னா உங்கமேல கட்சித் தாவல் தடைச்சட்டம் பாயுமே..?” என்றனர்.
“அது தெரியாமையா இவ்வளவு தூரம் வந்திருப்பேன். நான் எம்எல்ஏ பதவியை மட்டுமில்லை, கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில இருந்தும் விலகப் போறேன். அப்போ என்மேல எந்த கட்சித் தாவல் சட்டமும் பாயாது தானே..? எங்களுக்கும் சட்டம் தெரியும்..” என்றாள்.
“இதெல்லாம் உங்க கணவர் ஆதித்ய வர்மா சொல்லித்தான் செய்றிங்களா மேடம்..?”
“கண்டிப்பா இல்லை. சொல்லப் போனா, இன்னும் இந்த விஷயமே என்னோட கணவருக்குத் தெரியாது. இது முழுக்க முழுக்க, என்னோட சுயபுத்தியில் நான் எடுத்த முடிவு தான்..” என்றாள் துவாரகி.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கருணைநாதன்,
“சசி..? இப்போ துவாரகி எங்க..?” என்று கோபமாய் கத்த ஆரம்பித்தார்.
“துவாரகி வீட்ல இல்லைப்பா..” என்று அவனும் கோபமாக சொல்ல, நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூமிகாவுக்கும், அருணாவுக்கும் அப்படி ஒரு சந்தோசம்.
“இப்ப சத்தம் போட்டு என்ன பண்றது தலைவரே..? நான் தான் அன்னைக்கே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். நீங்கதான் அவனைப் பழிவாங்குறேன்னு சொல்லி, உங்க பொண்ணை நிருத்துனிங்க. இன்னைக்கு உங்க பொண்ணே உங்களுக்கு ஆப்பு அடிச்சிட்டா..” என்றார் கனகவேல் கோபமாக.
“யோவ் கனகு, பார்த்துப் பேசுய்யா..?யார்கிட்ட என்ன பேசுற..? என்ன இருந்தாலும் அவ என் பொண்ணு..” என்று கருணைநாதன் கோபப்பட,
“அவர் தப்பா ஒன்னும் சொல்லலையே தலைவரே..? நடந்ததைத் தான சொல்றார். நீங்க தான் நாங்க சொல்றதைக் கேட்காம உங்க பொண்ணை நிருத்துனிங்க. இன்னைக்கு உங்க பொண்ணு சொந்த அப்பான்னும் பார்க்காம, மீடியா முன்னாடி அந்த பேச்சு பேசுது..?” என்று ஆளாளளுக்கு குரலை உயர்த்த ஆரம்பித்தனர்.
“இவருக்கு என்ன..? எப்படி பார்த்தாலும் அவன் மருமகன். ஒருநாள் இல்லை ஒருநாள் அவன் கட்சியிலேயே இவரையே தலைமைக்கு கொண்டுட்டு போவான். இடையில இருக்குற நாம தான் ந***டு திரியனும்..?” என்று கனகவேல் சொல்ல,
“என்னய்யா வாய் நீளுது..?” என்று கருணைநாதன் அவருடன் சண்டைக்குப் போக, அங்கு கைகலப்பே உருவாகத் தெரிந்தது.
ஒவ்வொருவராய் வெளியே செல்ல, அந்த கட்சிக்குள் சிறு விரிசல் விழுந்தது. தோல்வி பயத்தில் சிலர் பேச, தேர்தலுக்கு செலவு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் சிலர் பேச ஆரம்பித்தனர்.
சிலருக்கு எந்த கட்சியானாலும் பரவாயில்லை, ஆனால் பதவி மட்டும் இருந்தால் போதுமென்று நினைக்க, துவாரகியின் அந்த முடிவு, மொத்த கட்சிக்குள்ளும் பிளவை ஏற்படுத்தியிருந்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க வருமாறு, ஆளுநர் அழைப்பு விடுத்திருக்க, மறுநாள் ஆதித்ய வர்மா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருந்தான்.
“இப்ப உனக்கு சந்தோஷமா ஆதி..?” என்றான் சம்பத்.
“இந்த பதவி எனக்கு சந்தோசம் தராது சம்பத். இன்னும் நான் எதிர்பார்க்குற ஒரு விஷயம் நடந்தாத்தான் என்னோட மனசு சந்தோஷப்படும்.” என்றவன்,
“இருந்தாலும், துவாரகி இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை..” என்றான் ஆதி.
“என் மருமக சரியாத்தான் பண்ணியிருக்கா.. நான் இதை எதிர்பார்த்தேன்..” என்றார் சேது ராமன்.
“எஸ் ஆதி. நானும் எதிர்பார்த்தேன். துவாரகி கடைசி வரைக்கும் நீ கூப்பிட்டு வராம இருந்ததுக்கு இதுவும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். நீ கருணைநாதனை ஜெயிக்கனும்ன்னு நினைச்ச.. ஆனா, துவாரகி..அந்த கட்சியே இருக்கக் கூடாதுன்னு நினைச்சிருப்பா போல. இப்போ துவா பத்தவச்ச நெருப்பு, அந்த கட்சிக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆளாளுக்கு உனக்கு ஆதரவு தரேன்னு வருவாங்க. சிலர் வேற கட்சிக்கு மாறுனாலும் ஆச்சர்யமில்லை..” என்றான் சம்பத்.
“உண்மை தான் சம்பத்..! நான் ஒரு பக்கம் பிளான் போட்டா, அவ ஒரு பக்கம் பிளான் போட்ருக்கா..” என்றவன்,
“எனக்கு ஒரு சந்தேகம் தான் சம்பத்..” என்றான் ஆதி.
“என்ன சந்தேகம்..?” என்றவனுக்கு உள்ளே ஏதோ தோன்ற,
“துவா ஏன் இதைப் பண்ணனும். அப்படி எனக்கு ஆதரவா இருக்கனும்ன்னு அவ நினைச்சிருந்தா, நான் கூப்பிட்டப்பவே என்கூட வந்திருக்கணும். அப்போவே என்கூட ஆதரவா நின்னிருக்கணும். ஆனா, அவளோட அப்பாவை இப்படி மொத்தமா அரசியலை விட்டு ஒதுக்கனும்ன்னு நினைக்கிற அளவுக்கு அவளுக்கு என்ன பிரச்சனை..?” என்றான் ஆதி. இது தான் அவனுக்கு புரியாமல் இருந்த புதிர்.
“நீ என்ன விஷயத்துக்காக கருணைநாதனை எதிர்க்க துணிஞ்சியோ, அதே காரணத்துக்காகக் தான், துவாரகியும் இதைப் பண்ணினா..” என்றார் சேது ராமன்.
சம்பத் அவர்களைப் புரியாமல் பார்க்க,
“என்னப்பா சொல்றிங்க..? அப்போ துவாவுக்கு உண்மை தெரியுமா..?” என்றான்.
“அது எனக்கு உறுதியா தெரியலை. ஆனா, பெத்த தகப்பனையே எதிர்க்கனும்ன்னா, துவாரகிக்கு அந்த ஒரு காரணம் தான் இருக்கு..” என்றார் சேது.
இப்போது புரிந்தது சம்பத்துக்கு. ஆனால், ஆதிக்கு விஷயம் எப்படி தெரிந்தது என்று தான் அவனுக்குப் புரியவில்லை.
“என்ன விஷயம்..?” என்றான் தெரியாதவன் போல்.
“உனக்கு விஷயம் தெரியாதுல சம்பத். நம்ம விக்ரமை கொன்றது அந்த கருணைநாதன் தான். அந்த குறி எனக்கு வச்சது. ஆனா, அதுல வீணா விக்ரம் மாட்டிகிட்டான்..” என்று ஆதி சொல்ல, அவன் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது.
“உனக்கு இந்த விஷயம் எப்படி தெரியும் ஆதி..?” என்றான் சம்பத்.
“எனக்கு ஒரு போன் கால் வந்தது. பேசுனது யார்ன்னு தெரியலை, ஆனா, விஷயம் இதுதான்னு சொல்லவும், நான் அப்பாவை விசாரிச்சேன். அப்போ, அப்பாதான் சொன்னார். ஆரம்பத்துல எனக்கு துவாரகி மேல தான் சந்தேகம் இருந்தது. அவளுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்குமோ அப்படின்னு. ஆனா, போகப் போக அந்த சந்தேகமெல்லாம் இல்லை. ஆனா, மறுபடியும் இப்ப அந்த சந்தேகம் வருது..” என்று ஆதி சொல்லவும், சம்பத்திற்கு வாய்வரை வரை வந்த வார்த்தைகளை விழுங்குவது கடினமாக இருந்தது.
‘கண்டிப்பா அந்த போன்கால் துவா தான் பண்ணியிருக்கணும். ஆனா, என்கிட்ட கூட சொல்லலையே..?’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான் சம்பத்.
கருணைநாதனின் வீடே அமைதியாய் இருந்தது. கருணைநாதன் கோபத்தில் அப்படியே வாசலைப் பார்த்து அமர்ந்திருக்க, அவரின் பொறுமையில் பொங்கல் வைத்துவிட்டு, நிதானமாக வீட்டிற்குள் வந்தாள் துவாரகி.
“நில்லு..!!”
அவள் அப்படியே நிற்க,
“எதுக்காக இப்படி பண்ணின துவாரகி..? எத்தனை நாள் என்னை அசிங்கப்படுத்தனும்ன்னு நீ நினைச்சுகிட்டு இருந்த..?” என்று கருணைநாதன் கோபத்தில் அவளை அடிக்க வர,
“இந்த அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிப் போய்டுவேன்..” என்றாள்.
“எங்க போவ..?” என்றார்.
“ஏன்..? என்னால எங்கயும் போக முடியாதா..? நான் என் புருஷன் வீட்டுக்குப் போறேன்..” என்றாள்.
“இத்தனை நாள் இல்லாத தைரியம் இப்ப எப்படி வந்தது உனக்கு..?” என்றார் கோபத்தை அடக்க முடியாமல். சசிதரனும் அதே கோபத்துடன் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவரைப் பார்த்து கடகடவென்று சிரித்தவள்,
“நான் பயந்துகிட்டு இருந்தேனா..? செம்ம காமெடிப்பா.. நான் ஒன்னும் பயந்துகிட்டு இங்க இல்லை. பயப்படுற மாதிரி நடிச்சுகிட்டு இங்க இருந்தேன். எந்த காலத்துல இருக்கீங்க நீங்க..? இன்னும் உங்களுக்கு பயந்துகிட்டு இருப்பாங்கன்னு உங்களுக்கு நினைப்பு வேறையா..?” என்றாள் நக்கல் சிரிப்புடன்.
“துவா..! அப்பகிட்ட என்ன பேசுறோம்ன்னு தெரிஞ்சு தான் பேசுறியா..?” என்றான் சசி.
“ஏன் தெரியாம..? நல்லா தெரியுமே..? தி கிரேட் எக்ஸ்.சிஎம் கருணைநாதன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். பேர்ல இருக்குற கருணை கொஞ்சம் கூட நிஜ வாழ்க்கையில இல்லாதது தான் சோகம்..” என்றாள்.
“நீ இந்த அளவுக்கு பேச காரணம் தான் என்ன..?” என்று அவர் கேட்க,
“காரணமாப்பா கேட்குறிங்க..? காரணம் என்னன்னு உங்க உள்மனசுக்குத் தெரியாது..? நீங்க பண்ணின பாவத்துக்கு எனக்குத் தெரியாமையே என்னைய கூட்டு சேர்த்திங்களே..? அதுக்குள்ள மறந்து போயிடுச்சா..? ஒருத்தனை நேரா மோதி ஜெயிக்க வக்கில்லாம, அல்வாவுல பாய்சனைக் கலந்திங்களே… மறந்து போயிடுச்சா..? அதை என் கையாலயே குடுக்க வச்சிங்க பாருங்க… அங்க தான்ப்பா நீங்க அரசியல்வாதி..” என்று அவள் கோபமாய் அவரைப் பார்க்க, தேவையில்லாமல் கண்கள் வேறு கலங்கித் தொலைத்தது.
“துவாரகி, நான் விக்ரம்ன்னு நினைச்சு அதை பண்ணலை. அது நீ ஆதித்யாவுக்கு குடுப்பன்னு நினைச்சு தான்..” என்று அவர் நிறுத்த சசி புரியாமல் பார்த்தான்.
“என்ன அல்வா..? என்ன விஷம்..?” என்றான் சசிதரன் புரியாமல்.
“ஹோ..! உனக்கு விஷயம் தெரியாதுல. ஆதின்னா என்ன விக்ரம்ன்னா என்னப்பா..? ரெண்டு பேர் உசுரும் ஒன்னு தான..?இந்த கையால தான் அவன்கிட்ட குடுத்தேன். என் கண் முன்னாடியே தான் சாப்பிட்டான். எனக்கு அப்ப தெரியாம போய்டுச்சே. விஷத்தை நண்பனுக்குக் குடுத்துட்டு, எதிர்ல நின்னு சிரிச்சுட்டு இருந்திருக்கேன்னு. காலத்துக்கும் இது என்னை விடாம துரத்தும். ஒரு உயிரை காப்பாத்துற இடத்துல இருக்குற நானே, அவனை கொன்னிருக்கேன். அதுக்கு யார் காரணம்..? நீங்க தான காரணம்..?
எத்தனை கனவோட இருந்தான் தெரியுமா..? எவ்வளவு திறமையானவன் தெரியுமா..? அவன் உயிரோட இருந்திருந்தா, எத்தனை உயிரைக் காப்பாத்தியிருப்பான்னு தெரியுமா..? ஒரு உயிரோட மதிப்பு உனக்குத் தெரியுமா..? சொல்லு தெரியுமா..? இந்த பாவத்தை மட்டுமா நீ பண்ணினா..? எத்தனை கலவரம், எத்தனை வன்முறை, எத்தனை உயிரை உன்னோட சுயலாபத்துக்காக காவு வாங்கியிருக்க.
இதெல்லாம் எதுக்காக பண்ண..? நீ பதவியில இருக்கணும்..? நீ ஆளனும்.. இருக்குறவன் சாகனும்..? அது தான உன் எண்ணம்..? சொல்லு அது தான உன் எண்ணம்..?” என்று அவள் கருணைநாதனின் சட்டையைப் பிடித்து கேட்க,
“ஆமா, நான் தான் பண்ணேன். இப்ப என்னங்குற அதுக்கு. அரசியல்ல இதெல்லாம் சகஜம். ஆனா, பெத்த அப்பனையே இப்படி அசிங்கப் படுத்திட்டு வந்து நிக்கிற..?” என்றார்.
“இதெல்லாம் உனக்கு ஒரு அசிங்கமா..? உனக்கு அப்படி என்ன அரசியல் வெறி..?” என்றாள்.
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது துவாரகி. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. நாளைக்கே மறு அறிவிப்பு குடுத்துடு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்..” என்று அப்போதும் அவர் புத்தியைக் காட்ட,
“துவா சொல்றது எல்லாம் உண்மையாப்பா..?” என்றான் சசி.
“ஆமாடா..! உண்மைதான். இப்ப அதுக்கு என்னாங்குற..?” என்றார்.
“இவ்வளவு பட்டும் உங்க புத்தி மாறலைல..” என்றாள் துவாரகி.
“நான் எப்பவுமே இப்படித்தான். இதெல்லாம் நீயா பேசலை. அவன் மேல இருக்குற மயக்கம் பேசுது. என்னை ஜெயிக்கனும்கிறது தான் அவனோட வெறி. அதுக்கு அவன் உன்னை பயன்படுத்திக்கிறான்..” என்றார் கருணைநாதன்.
அவரைப் பார்த்து துவாரகி சத்தம் போட்டு சிரிக்க,
“இப்ப எதுக்கு சிரிக்கிற..?” என்றார் கோபமாய்.
“இன்னுமா உங்களுக்குப் புரியலை… ஆதியை உங்களுக்கு எதிரா நிற்க வெச்சது நான் தான். ஆதியை அரசியலுக்கு இழுத்ததும் நான் தான். ஆதிக்கு நீங்க பகையாளி அவ்வளவு தான். ஆனா, எனக்கு நீங்க துரோகி. விக்ரமுக்கு அவன் அண்ணன் அரசியலுக்கு வரணும்ன்னு ரொம்ப ஆசை. அவன் ஆசையை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சு, ஆதியை வச்சே உங்க கண்ணை குத்தின மாதிரியும் ஆச்சு.
நீங்க எவ்வளவு பெரிய ஆள், உங்களை என்னால எதிர்க்க முடியுமா..? அப்படியே எதிர்த்து நின்னாலும், இந்த வெற்றியை நான் வாங்கியிருக்க முடியுமா..? முடியாதுல்ல. அதான் ஆதித்யாவை இறக்கி விட்டேன். அவனோட மாஸும் தெரியும். மவுசும் தெரியும்.
காலமெல்லாம் நான் குற்ற உணர்ச்சில தவிக்கிற மாதிரி, இனி நீ தவிப்ப. எல்லாமே இந்த அரசியலுக்காகத் தான பண்ணின. அதான், இந்த அரசியல்ல இருந்து உன்னை ஒதுக்குறது தான் உனக்கு பெரிய தண்டனையா இருக்க முடியும்..” என்றவள்,
“இவர் செஞ்ச பாவத்துல எத்தனைல உனக்கு பங்கிருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆனா, இவர் அளவுக்கு நீ மோசமில்லைன்னு தெரியும். எப்படி இருக்கணுமோ அப்படி இருந்துக்கோ. அதான் இந்த ஆளு சேர்த்து வச்ச சொத்து இருக்குள்ள..?” என்றவள் திரும்ப, அங்கே நெடுமரமாய் நின்றிருந்தான் ஆதித்ய வர்மா. அவனைப் பார்த்தவளின் முகத்தில் அதிர்ச்சி பரவ,
‘பேசின எல்லாத்தையும் கேட்டிருப்பானோ..?’ என்று நினைத்தவள்,
“ஆதி..” என்றாள். அவளுடைய அழைப்பில் கருணைநாதனும், சசியும் திரும்பிப் பார்க்க,
“இங்க எதுக்குடா வந்த..?” என்ற கருணைநாதன் அவன் மீது பாயப் போனார். அவரைப் பிடித்து தடுத்த சசி,
“எதுக்காக வந்திருக்க..?” என்றான்.
“நான் என் மனைவியை கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்..” என்று சொன்னவனின் குரலில் இருந்தது என்னவென்றே அவளுக்குத் தெரியவில்லை.