ஆகாயம் 5:
சம்பத் பேசியதைக் கேட்ட ஆதித்யாவுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. காரணமே இல்லாமல் சில காரியங்கள் அவன் வாழ்வில் குறுக்கே வருவதைப் போன்ற உணர்வு அவனுக்கு. ஒரு வழியாக அதே மனநிலையில் அன்றைய ஷூட்டிங்கை முடித்து விட்டான்.
“சார் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றான் கவின்.
“கொஞ்சம் தலைவலிக்குது கவின். ஒரு காபி ஷாப்ல காரை நிறுத்த சொல்லு..” என்று மந்த மனநிலையில் சொல்ல,
“சார், வீட்டுக்கு போய்டலாமா..?” என்றான் கவின்.
“நான் என்ன சொன்னேன்..? நீ என்ன கேட்டுகிட்டு இருக்க..?” என்ற ஆதி கோபமாக பார்க்க,
“இந்த நேரத்துல காபி ஷாப் போனா, கூட்டம் கூடிடுவாங்க சார். அப்பறம் எப்படி..?” என்று அவன் தயங்கி கேட்க, அப்போது தான் ஆதி அவனுடைய நிலைமையை உணர்ந்தான்.
“ப்ரீயா ஒரு காபி ஷாப்க்கு கூட போக முடியலை. என்ன வாழ்க்கைடா இது..?” என்று நொந்து கொண்டவன்,
“சரி..! காரை நேரா வீட்டுக்கே விட சொல்லு..” என்றவன், பின் சீட்டில் தலைசாய்ந்து அமர்ந்து விட்டான். அவனுடைய இந்த படத்திற்கான ஷூட்டிங் சென்னையில் தான் நடந்து கொண்டிருந்தது.
அவன் செல்லும் நேரத்திற்கு, சென்னை ட்ராபிக் தெரிந்தது தான் என்றாலும், அன்று ஏனோ அதைக் கூட அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“இடியட், இந்த ரூட் ஹெவி டிராபிக்ன்னு தெரியும்ல. அப்பறம் ஏன் இந்த சைட் போற..?” என்று அவன் காரணமே இல்லாமல் கத்த,
“சார், நாம தினமும் போற ரூட் தான்…” என்றான் அந்த டிரைவர்.
அப்போது தான் ஆதியின் புத்திக்கு உரைத்தது, அந்த நேரத்தில் அந்த சாலை அப்படித்தான் இருக்குமென்று.
“சாரி..” என்றவன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.
“எதுக்கு ஆதி இவ்வளவு டென்சன் உனக்கு..? என்னாச்சு உனக்கு..?” என்று அவனின் உள்மனம் கேள்வி கேட்க,
“தெரியலை.. ஆனா, ஏதோ ஒன்னு உள்ள இருந்து குடைஞ்சுகிட்டே இருக்கு. என்னன்னு தான் தெரியலை..” என்றான்.
“காலையில இருந்து நீ நல்லாத்தான் இருந்த. துவாரகி வந்துட்டு போன பிறகு தான், நீ நீயா இல்லை..” என்றது மனம்.
“இருக்கலாம். நான் என்ன எதிர்பார்க்குறேன்னு எனக்கே தெரியலை..” என்றான் ஆதித்யா.
கார் சிக்னலில் நிற்க, அவனுடைய காருக்கு அருகில் வந்து நின்ற காரை வேண்டா வெறுப்பாக பார்த்தான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டு காருக்கும் நடுவில் வந்து நின்றது அந்த புல்லட்.
புல்லட்டின் பின்னால் முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்த பெண்ணைப் பார்க்கும் போது, அவனுக்கு அவளை எங்கோ பார்த்த மாதிரி இருக்க, சற்று கூர்ந்து பார்த்தான்.
“துவாரகி..” என்று அவனின் உதடுகள் முனுமுனுக்க, முன்னால் இருந்தவனின் முகம் முழுமையாக தெரியவில்லை. அவனுடைய சைட் முகம் கூட சரியாக தெரியவில்லை. அப்போது ஆதியால் இறங்கவும் முடியாது. அந்த இடத்தில் அவன் இறங்கினால், அந்த காருக்குள் நடிகர் ஆதித்யா வர்மா இருக்கிறான் என்று தெரிந்தாலே, என்ன ஆகுமென்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
“இது துவாரகி தானா..?” என்றான் மீண்டும் மனதிற்குள்.
“ஏன் உனக்கு சந்தேகமா இருக்கா..?” என்று மனசாட்சி சொல்ல, வேகமாக போனை எடுத்தான் ஆதி. அப்போது தான் அவளுடைய நம்பர் இல்லாதது புத்திக்கு உரைத்தது. வேகமாக சம்பத்திற்கு போன் செய்ய, அவனோ போனை எடுக்கவேயில்லை.
“ஷிட்..” என்று போனை சீட்டில் எறிந்தவன், நிமிர்ந்து பார்க்கும் போது, சிக்னலில் இருந்த வாகனங்கள் நகர ஆரம்பித்திருந்தன. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த புல்லட்டும் சட்டென்று சென்று விட, ஆதிக்கு தான் யோசனையாக இருந்தது.
“துவாரகி எதுக்கு பைக்ல போகணும்..? அதுவும் முகத்தை மறைச்சுகிட்டு..? கூட இருக்குறது யாரா இருக்கும்..? சம்பத் சொன்ன மாதிரி அவளோட லவ்வரா இருக்குமோ..?” என்று பல யோசனைகள் அவன் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதே யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தவனை, வந்த உடனே பிடித்துக் கொண்டார் பார்கவி.
“என்ன முடிவு பண்ண ஆதி..? நாம, துவாரகியை பொண்ணு கேட்டுப் போகலாமா..?” என்றார் ஆர்வமாய்.
“அம்மா, உள்ள நுழைய கூட இல்லை. இப்போ இது தான் உங்க கவலையா..?” என்று எறிந்து விழுந்தான் ஆதித்யா.
“என்னாச்சு ஆதி..? ஏன் கோபமா இருக்க..?” என்றார் பார்கவி புரியாமல்.
“நீங்க இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலையா..?” என்றான் யோசனையுடன்.
“போனேனே..” என்றார்.
“துவாரகி..?” என்றான் கேள்வியாய்.
“அவ இன்னைக்கு வரலைடா. மார்னிங் தான் வீட்டுக்கே போயிருக்கா. அதான் வரலை போல…” என்றார் பார்கவி.
“சோ, நான் பார்த்தது துவாரகியைத் தான்..” என்று நினைத்தவன்,
“இந்த கல்யாணப் பேச்சு உண்மையாக வாய்ப்பில்லை. நீங்க இதை விட்டுட்டு ஆகுற வேலையைப் பாருங்க..” என்றவன், விறுவிறுவென்று சென்று விட்டான்.
“”அம்மா, சார் ரொம்ப தலைவலிக்குதுன்னு சொன்னார். எப்படியும் அவருக்கு இப்போ ஸ்ட்ராங்கா ஒரு காபி தேவைப்படும்..” என்றான் கவின்.
“நான் பார்த்துக்கிறேன் கவின்…” என்ற பார்கவிக்கு ஆதி சொன்னதை நம்ப முடியவில்லை. அவனுக்கும் லேசாக விருப்பம் இருக்கிறது என்று தான் நினைத்தார் அவர். ஆனால், அவன் இப்படி பட்டென்று நிறுத்த சொல்லுவான் என்று நினைக்கவில்லை.
‘நான் ஆசைப்பட்டு என்ன பண்றது..?அவனுக்குப் பிடிக்கணுமே..?’ என்றவர் புலம்பிக் கொண்டே சென்றார்.
விஷயம் கருணைநாதனுக்கு செல்ல, மனுஷனின் கோபத்தை சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
“என் பொண்ணையே வேண்டாம்ன்னு சொல்ல அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..? நான் பொறுமையா இருக்குறதைப் பார்த்து என்னை ரொம்ப ஈசியா எடை போட்டுட்டான் போல..” என்று அவர் கத்திக் கொண்டிருக்க,
“இதுக்குத்தான் அன்னைக்கே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். நம்ம, வழிய போனா, அவன் இன்னும் உச்சாணிக் கொம்புக்கு ஏறத்தான் செய்வான். கூத்தாடிக்கு பொண்ணைக் குடுக்குறேன்னு நீங்க தான சொன்னிங்க..?” என்றான் சசிதரன்.
“கூத்தாடியோ, கொலைகாரனோ.. இன்னைக்கு அவன் தான் செல்வாக்கா இருக்கான். அவனை நம்ப பக்கம் இழுத்து போடணும். அவன் என்ன வேண்டாம்ன்னு சொல்றது..? நான் குடுக்குற டார்ச்சர்ல அவனே வழிய வந்து என் பொண்ணை கட்டிக்குவான், கட்ட வைக்கிறேன்..” என்று கோபமாய் கூறினார் அவர்.
“என்னை வச்சு வியாபாரம் பேசிட்டு இருக்கிங்களா..? நான் அமைதியா இருக்கேன்றது உங்க எல்லாருக்கும் சாதகமா போய்டுச்சு. பிடிக்கலைன்னு சொல்றவங்களை எதுக்கு திரும்ப திரும்ப காட்டாயப்படுத்துறிங்க..? அப்படி எந்த ஒரு அவசியமும் எனக்கு இல்லை..” என்றாள் துவாரகி.
“நீ அப்படி சொல்லாத துவாரகி. உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க அவனுக்குக் குடுத்து வச்சிருக்கணும். அவன் ஏதோ புரியாம பேசுறான். அவங்க அம்மாவுக்கு விருப்பம் இருக்குற மாதிரி தான் தெரியுது..” என்றார் கருணை நாதன்.
“அப்பா, ப்ளீஸ்..! இப்பவும் சொல்றேன்… பிடிக்காத விஷயத்தை செய்யச் சொல்லி, அவரைக் கட்டாயப்படுத்த நம்ம யாருக்கும் உரிமை கிடையாது..” என்றாள் துவாரகி தீர்க்கமாக.
“துவா சொல்றதும் சரிதான்ப்பா. நாம தான் இங்க புலம்பிகிட்டு இருக்கோம். ஆனா, அவன் அங்க சந்தோஷமா அடுத்த பட ஷூட்டிங் வேலையை ஆரம்பிச்சுட்டான். நாளைக்கு கூட ஒரு புதுப் படம் ரிலீஸ் ஆகுது..” என்றான் சசிதரன்.
“என்ன சசி சொல்ற..? எப்பவும் அவன் படம் தீபாவளி, பொங்கலுக்கு தான ரிலீஸ் ஆகும். நாளைக்கு ஒரு விசேஷமும் இல்லையே..?” என்றார் யோசனையாக.
“அது தான் ஒன்னும் புரியலைப்பா. தீபாவளி ரிலீஸ்ன்னு சொன்ன படத்தை இப்பவே ரிலீஸ் பண்றாங்க. இந்த படத்துல அவன் முதலமைச்சரா வேற நடிச்சிருக்கான். இந்த நேரத்துல ரிலீஸ் ஆகி, அது என்னனென்ன பிரச்சனையை கிளப்பப் போகுதோ..?” என்று அவன் கவலையாய் சொல்ல,
“என்ன பிரச்சனை வரும். ஆட்சியே நம்ம கைல தான் இருக்கு. நான் நினைச்சா, நாளைக்கு அவன் படம் ரிலீசே ஆகாது..” என்றார்.
“அப்பா உங்க ரீல் அந்து போய் ரொம்ப நாள் ஆச்சு. எப்ப, அவன் வந்து மிரட்டுனான்னு சொல்லி, நிறுத்துன படத்தை மறுபடியும் ரிலீஸ் பண்ண பெர்மிஷன் குடுத்திங்களோ, அப்பவே அவன் ஜெயிச்சுட்டான். இனி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை..” என்றான் சசி.
இவர்களின் பேச்சில் வெறும் பார்வையாளாராக மட்டுமே இருந்தாள் துவாரகி. அவளுக்கும் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள், கவலைகள்.
“எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் சசி. நான் சொல்றேன், அந்த ஆதித்யா கண்டிப்பா சரின்னு சொல்லுவான். அதுவும் கூடிய சீக்கிரமே நடக்கும். அவன் தான் உனக்கு மாப்பிள்ளை துவாரகி. அதுல எந்த மாற்றமும் இல்லை..” என்று உறுதியாக சொல்ல, துவாரகிக்கு புளியைக் கரைத்தது.
“நான் சொல்றதை கேளுங்கப்பா..” என்று அவள் ஏதோ சொல்ல வர,
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் துவாரகி. இதுவரைக்கும் எந்த ஒரு விஷயத்துக்கும் நான் உன்னை கட்டாயப்படுத்துனது இல்லை. நான் ஒரு முக்கியமான பதவில இருக்கேன். நம்ம வீட்ல என்ன நடந்தாலும், அது பெரிய செய்தியாகும். அந்த அளவுக்கு நீ இடம் குடுக்க மாட்டேன்னு நினைக்கிறேன். என்னோட மரியாதை, கவுரவம் எல்லாமே உன் கைல தான் இருக்கு… உனக்குப் புரியும்ன்னு நம்புறேன்..” என்றவர், வெளியே கிளம்பிவிட்டார்.
“என்னம்மா..? அப்பா இப்படி சொல்லிட்டு போறார்..?” என்று துவாரகி குறையாய் கேட்க,
“அந்த ஆதி தம்பிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு துவா. அவரையே கட்டிக்க..” என்றார் அருணா.
“உனக்குப் பிடிச்சிருந்தா, நீயே கட்டிக்க. அதை விட்டுட்டு வந்துட்டிங்க.. உங்களுக்குப் பிடிச்சா போதுமா..? என்னைப் பத்தி உங்க யாருக்குமே கவலையே இல்லை..” என்றவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது. அவள் எதற்கும் அவ்வளவு சீக்கிரம் அழுதுவிடும் ரகம் இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டாள்.
அடுத்த நாள் முதல் கிசுகிசுக்கள் துவங்கிவிட்டன…
சிஎம் மகளும், முன்னணி நாயகனும் காதலர்களா..? நாயகன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லாததால், மேலிடத்தில் பூசலா..? சுடச்சுட வாங்கிப் படியுங்கள் என்று சில நாளிதழ்கள் செய்தி வெளியிட, சிலர் நேரிடையாக ஆதித்ய வர்மாவுக்கே போன் செய்து கேட்டனர்.
‘விஷயம் இப்படி பரவ வேண்டிய அவசியம் என்ன..?’ என்று யோசிச்சு ஆதிக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம். தொடர்ந்து ஒவ்வொரு வகையிலும் அவனுக்கு தொந்தரவு குடுக்க ஆரம்பித்தார் கருணைநாதன். அவன் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு அனுமதி மறுக்கப் பட்டது. ரிலீஸ் ஆன புதுப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், ரசிகர்களுக்குள் பிரச்சனை, அடிதடி, என்று அவனை எந்த பக்கமும் யோசிக்கவிடாமல் அடித்துக் கொண்டே இருந்தார் கருணைநாதன்.
முதலில் காரணம் புரியாமல் இருந்த ஆதிக்கு, நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் கருணைநாதன் தான் காரணம் என்று மெல்ல மெல்ல புரியவந்தது.
“சார் எங்க போகணும்..?” என்றான் கவின்.
“காரை நேரா, அந்த சி.எம் வீட்டுக்கு விடு..” என்றான் ஆதித்ய வர்மா. படப்பிடிப்பு ரத்து என்று சொன்னவுடன், அவன் முகம் முழுவதும் ரத்தம் பாய்ந்ததைப் போன்ற ஒரு உணர்வு. இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்று முடிவு எடுத்து விட்டான் ஆதி.
“சார்..! அப்பாயின்மென்ட் வாங்கலை..” என்று கவின் பயந்த குரலில் சொல்ல,
“அந்த ஆளு மட்டும், என்கிட்டே அப்பாயின்மென்ட் வாங்கிட்டு தான் பிரச்சனை பண்றாரா..? கள்ள ஓட்டுல கட்சியை வளர்க்குறவனுக்கு, இந்த ஆதித்யா கூட மோத எவ்வளவு தில் இருக்கணும். அந்த ஆளா, இல்ல நானான்னு பார்த்திடுறேன்…எந்த அப்பாயின்மெண்ட்டும் தேவையில்லை. நீ காரை நேரா அந்த வீட்டுக்கு விடு. எவன் என்ன புடுங்குறான்னு நான் பார்க்குறேன்..” என்றான் ஆதித்யா.
அவன் சொன்னதற்கு தலையை ஆட்டிய கவின், அவனுக்குத் தெரியாமல் சேதுராமனுக்கு ஒரு மெசேஜை தட்டி விட்டான். அது அவரின் கட்டளை, ஆதி இப்படி ஏதாவது ஏடாகூடமாக நடந்து கொண்டால், அதை உடனே அவருக்கு தெரிவிக்க வேண்டும் என்று.
“என்ன கவின் மாட்டு வண்டியா ஓட்டுற..? சீக்கிரம் போ…” என்றான் கோபமாக.
“ஓகே சார்..!” என்றவன் வேகத்தைக் கூட்ட, ஆதியின் மனதில் இருந்த கோபத்தின் வேகமும் கூடிக் கொண்டே போனது.
அப்பாயின்மென்ட் இல்லாமல் சென்றதால், முன்னால் இருந்த காவலாளி முதல், அங்கிருந்த போலீஸ் காட்ஸ் வரைக்கும் கவின் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் ஒரு உயரதிகாரி உள்ளே விட மறுத்து விட்டார்.
“சார்..! உள்ள ஆதித்ய வர்மா சார் இருக்கார்..! அவர் தான் சிஎம் சாரை பார்க்க வந்திருக்கார்..” என்று கூட சொல்லிவிட்டான் கவின். ஆனால் அந்த அதிகாரி அசரவில்லை.
“சொன்னா புரிஞ்சுக்குங்க சார். அவர் வெளிய கிளம்புற நேரம். நீங்க இப்படி வந்திருக்கிறதை பார்த்தாலே, பெரிய பிரச்சனையாகிடும். சி.எம் சார்க்கு இன்னைக்கு நிறைய அப்பாயின்ட்மென்ட்ஸ் இருக்கு. எல்லாருக்குமே பத்து நிமிஷம் தான் அலாட் பண்ணியிருக்கார்..” என்று அந்த அதிகாரி எவ்வளவோ சொல்லிப் பார்க்க, ஆதியோ அசையவே இல்லை. காரை விட்டு இறங்கவும் இல்லை. கவினிடம், காரை எடுக்கச் சொல்லவும் இல்லை. கவின் தான் பாவமாய் முழித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நிலைக்கு மேல், கவினைப் பார்த்த ஆதிக்கே, பாவமாய் இருந்தது போலும். தான், கீழே இறங்கினால் அது மீடியாவிற்கு தீனி என்று தான் உள்ளேயே இருந்தான். ஆனால், இப்போது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பட்டென்று இறங்கிவிட்டான். அவனைப் பார்த்த அந்த அதிகாரி, மேற்கொண்டு பேச முடியாமல் திணற,
“சி.எம்ம பார்க்க முடியுமா..? முடியாதா…?” என்றான் ஆதி.
“நான் கேட்டு வந்திடுறேன் சார்..” என்றவர் அங்கிருந்து செல்ல,
“இவ்வளவு நேரம் நானும் சொன்னேன் சார். ஆனா, அவர் கேட்கவே இல்லை. உங்களைப் பார்த்ததும் மனுஷன் அப்படியே அடங்கிட்டாரே..” என்றான் கவின். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்த அந்த அதிகாரி,
“சார்.. வர சொன்னார் சார்..” என்றார்.
“போலீஸ்ன்னு சொல்றிங்க.. பெரிய பதிவியில வேற இருக்கீங்க. அப்பறம் ஏன் இப்படி குனிஞ்சு பேசுறிங்க. அவங்க பதிவிக்காலம் அஞ்சு வருஷம் தான். நீங்க அப்படியில்லை, படிச்சு இந்த பதவிக்கு வந்திருக்கிங்க. எப்பவுமே நிமிர்ந்து நில்லுங்க..” என்ற ஆதி, நான்கே எட்டில் சென்று விட்டான்.
“வாங்க ஆதித்ய வர்மா..” என்று சிரிப்புடன் வரவேற்றார் கருணை நாதன். இந்த முறை சசிதரன் வெளியே எங்கும் செல்லாமல் தந்தை கூடவே இருந்தான்.
“பதவிக்கு மட்டும் தான் மரியாதை. அதுவும் கூடிய சீக்கிரம் முடிய போகுது. எதுக்காக என்னோட பாதையில வரீங்க..?” என்றான் கோபமாய்.
“என்ன தம்பி சொல்றிங்க..? நியாயமா என்ன செய்யணுமோ அதைத் தான் செஞ்சேன். உங்க கூட வம்பு வளர்க்குறது தான் என் வேலையா..?” என்றார் அவர்.
“அதைத் தான் நானும் கேட்கிறேன். நாட்ல எவ்வளவு பிரச்சனை இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு, ஆதித்ய வர்மாங்கிற ஒரு தனி மனிதன் கிட்ட ஏன் உங்க பதவிப் பவரை காட்டிட்டு இருக்கீங்க..?” என்றான் ஆதி.
“நீங்க என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க தம்பி. நீங்க என் வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போறவர். உங்களை எதுக்கு நான் தொந்தரவு பண்ணனும்..?” என்றார்.
“மாப்பிள்ளையா வர முடியாதுன்னு சொன்னதா, எனக்கு நியாபகம்..” என்றான்.
“ஏதாவது கோபத்துல சொல்லியிருப்பிங்க தம்பி. நீங்க எப்படியும் சரின்னு சொல்லுவிங்க. இல்லைன்னா, நாளைக்கே உங்களுக்காக ஒருத்தன் தீக்குளிப்பான், இல்லையில்லை தீ குளிக்க வைப்பேன். தினமும் ஏதோ ஒரு வகையில ஒருத்தன் சாவான். இதையெல்லாம் நீங்க விரும்பவா போறீங்க..? சந்தோஷமா என் பொண்ணைக் கட்டிக்கிட்டு எனக்கு மாப்பிள்ளையா ஆகுறதை விட்டுட்டு, இவ்வளவு பிரச்சனை தேவையா தம்பி..” என்றார் கருணை நாதன்.
“யோவ்..! இப்படி பேச உனக்கு வெட்காம இல்ல..” என்றான் மரியாதை மறந்து.
“ஏய்..! மரியாதையா பேசு..” என்று சசிதரன் சிம்பிக் கொண்டு வர,
“உங்களுக்கு மரியாதை ஒரு கேடா. உங்க சுயநலத்துக்காக எதையும் செய்றவங்க தான நீங்க..பார்ப்போம் நீயா, நானான்னு..” என்றான் சவாலாய்.
“நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க..? கண்டிப்பா இதையெல்லாம் உங்கமேல இருக்குற பழி உணர்ச்சில பண்ணலை. பாசத்துல தான் பண்றேன். எனக்குத் தெரிஞ்சு மீடியா முழுவதும் கிசுகிசு வரத் தொடங்கியிருச்சு. பேசாம அதை உண்மையாக்கிட்டா என்ன..?” என்றார்.
“இதெல்லாம் உன்னோட வேலைன்னு எனக்கு நல்லா தெரியும். உன்னோட பவரை நீ காட்டிட்ட. நான் என்னோட பவரை காட்டினா தாங்க மாட்ட..” என்றான் ஆதி. அவன் அப்படி சொல்லவும் அவருக்கு மனதிற்குள் கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது. அவனைப் பற்று அவருக்கு நன்றாகத் தெரியுமே.
“நான் எதுவுமே பண்ணலை தம்பி. எல்லாமே எதிர்க்கட்சி செஞ்ச சதி வேலை தான் இது. உங்க வீட்ல உறுதி குடுத்த பிறகு, நீங்க மாட்டேன்னு சொல்றது தான் சரியில்லை..” என்றார் கருணை நாதன்.
“எங்க வீட்ல எப்ப உறுதி கொடுத்தாங்க, யார் கொடுத்தாங்க..?” என்றான் கோபமாய்.
“உங்கப்பா தான் எனக்கு உறுதி கொடுத்தார். உங்க மகள் தான் எனக்கு மருமகள் அப்படின்னு அவர் வாக்குக் குடுத்திருக்கார். உங்க அப்பா சொன்ன வாக்கை நீங்க காப்பாத்துவிங்கன்னு நம்புறேன்..” என்றார் கருணை நாதன்.
“எங்கப்பா அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை..” என்றான் உறுதியாக.
“நான் பொய் சொல்லலை..! அவர் சொன்னது உண்மை தான். அதே மாதிரி, இது வரைக்கும் உங்களுக்கு நான் எந்த வகையிலும் பிரச்சனை குடுக்கலை, அது தான் உண்மை. நீங்க என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க..” என்றார் கருணை நாதன்.
ஆதித்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. யார் நடிக்கிறார்கள் என்றே அவனால் கணிக்க முடியவில்லை.
“உங்க பொண்ணுக்கு இதுல சம்மதமா..?” என்றான்.
“அவளுக்கு சம்மதம் தான்..” என்றான் சசிதரன்.
“நான் நம்ப மாட்டேன்..”
“நான் அவளை உங்க முன்னாடியே கேட்குறேன்..” என்ற கருணை நாதன், துவாரகியை அழைக்க,
“அப்பா..” என்றபடி வந்தாள் துவாரகி.
“உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானம்மா..” என்றார்.
“ம்ம்..! விருப்பம் தான்..” என்றவள் ஆதித்யாவை நேருக்கு நேராக பார்க்க, அவன் தான் திகைத்துப் போனான்.
‘இவ நம்மகிட்ட ஒரு மாதிரி பேசிட்டு, இங்க ஒரு மாதிரி பேசுறா..? நான் இவளுக்காகத் தான மாட்டேன்னு சொன்னேன். இப்போ இவளே சரின்னு சொல்றா..? ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசணும்..?’ என்று மனதில் நினைத்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“சொல்ற எல்லாத்தையும் நம்பிட்டு போறேன்றதால, நீங்க என்ன வேணும்ன்னாலும் செய்யல்லாம் அப்படின்னு அர்த்தம் இல்லை. இனி உங்களால ஏதாவது பிரச்சனை வந்தது, நீங்க வேற ஒரு ஆதித்ய வர்மாவைத் தான் பார்ப்பிங்க. ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே உங்களுக்கு எதிரா என்னால மாத்த முடியும்..” என்றான்.
“தம்பி இப்பவும் சொல்றேன், யாராவது வரப்போற மாப்பிள்ளைக்கு தொந்தரவு குடுப்பாங்களா..?” என்றார்.
“அது இன்னும் முடிவாகலை..” என்றான்.
“எல்லாம் முடிவான மாதிரி தான் ஆதி…” என்று சசி தரன் சொல்ல,
“அதை நான் சொல்லணும். நீங்க சொல்லக் கூடாது..” என்றவன் கிளம்ப எத்தனிக்க,
“ஆதி, நானும் கூட வரவா..?” என்றாள்.
அவன் புரியாமல் பார்க்க,
“இல்ல, பார்கவி ஆன்ட்டி, உடம்புக்கு முடியலைன்னு சொன்னாங்க. அதான் பார்க்கலாம்ன்னு..” என்று அவள் நிறுத்த,
“நீங்க உங்க கார்ல வரலாமே..?” என்றான்.
“தேவையில்லாத இஷுஸ் வரும்..” என்றாள்.
“என்கூட வந்தா மட்டும் வராதா..?” என்றான்.
“இது ஷூட்டிங் கார் தானே. இதுல நீங்க தான் இருக்கிங்கன்னு யாருக்கும் தெரியாதே..” என்றாள்.
“நல்லா பேசுறிங்க..” என்றான்.
“எப்பவாவது..” என்றாள் துவாரகி.
“நான் போயிட்டு வந்திடுறேன் டாட்..!” என்றவள், ஆதியுடனே கிளம்பினாள். அவனுடன் துவாரகியும் வருவதை கண்ட கவினுக்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும்.
“அம்மாவுக்கு உடம்புக்கு முடியலைன்னு என்கிட்டே ஏன் சொல்லலை கவின்..?” என்றான் கோபமாக.
“அம்மா தான் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னாங்க சார்..!” என்றான் கவின்.
“நீ எனக்கு பிஏவா இல்லை அவங்களுக்கா..?” என்றான்.
“சார்..!” என்று இழுத்தான் கவின். இதெல்லாம் அவனுக்கு புதிதில்லை என்றாலும், துவாரகியின் முன்பு பதில் பேச அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
அவர்கள் பேச்சு எதிலும் கலந்து கொள்ளாமல், அவள் போனைப் பார்த்துக் கொண்டே வர, அவளை ஓரக்கண்ணால் பார்த்த ஆதிக்கு, பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.
‘குடும்பமே ஒரு தினுசா தான் இருக்காங்க..! எல்லாமே இவங்க நினைச்சது தான் நடக்கணும் போல. வேற ஒருத்தனை லவ் பண்றவ, இப்ப கல்யாணத்துக்கு எதுக்கு ஓகே சொன்னா. லவ் பிரேக்அப் ஆகிடுச்சா..’ என்று பல யோசனைகளை அவனுக்கு.
“என்னாச்சு..?” என்றான் மொட்டையாக.
அவள் கேள்வியாய் நிமிர்ந்து பார்க்க,
“என்ன பிரேக்கப்பா..?” என்றான்.
“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க..?” என்றாள்.
“தெரிஞ்சுக்கிறது தப்பில்லையே..?” என்றான்.
“தேவையில்லாத விஷயத்தை தெரிஞ்சிக்கிறது கொஞ்சம் தப்புத்தான்..” என்றாள்.
“என்னைய விட நல்லா பேசுற..?” என்றவன்,
“அப்பறம் எதுக்கு அன்னைக்கு என்கிட்டே வந்து அப்படி பேசணும்..?” என்று கடுப்பாக எண்ணிக் கொண்டான் ஆதித்யா.
பல குழப்பங்கள்… தீர்வுகள் விரைவில்…!