ஆகாயம் 6:
ஆதித்யாவின் வீடு சென்று சேரும் வரைக்கும் துவாரகி ஒன்றும் பேசவில்லை. கவினின் முன்பு பேச வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ. ஆனால் ஆதிக்கு தான் மனம் காய்ந்து கொண்டிருந்தது. ஆதியுடன் அந்த நேரத்தில் துவாரகியை எதிர்பார்க்காத பார்கவி திகைத்தார் என்றால், சேதுராமன் அமைதியாக இருந்தார். துவாரகியின் வரவை அவர் முன்னமே எதிர்பார்த்திருந்தார் போல.
“அம்மா! உங்களுக்கு உடம்புக்கு முயலைன்னா, என்கிட்டே தான் சொல்லணும். ஆனா, என்னைத் தவிர எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு. நீங்க ஒரு டாக்டர்ன்னு தான் பேரு, ஆனா, உங்க உடம்பு மேல உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை. இனி ஏதாவது ஒண்ணுன்னா, உடனே எனக்கு சொல்லப் பாருங்க. உங்களை விட ஷூட்டிங் முக்கியமில்லை..” என்றான் கொஞ்சம் கோபம் கலந்த குரலில்.
“சாதாரண பீவர் தான் ஆதி. இதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற..? பெரிய பிராப்ளமா இருந்தா சொல்ல மாட்டேனா..?” என்று பார்கவி விளக்கம் கொடுக்க, அதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவனின் அதிருப்தியான முகம் காட்டியது.
“நிஜம் தான் ஆதி..” என்றார் மீண்டும்.
“சாதாரண பீவருக்கு ஏன், இவங்க பார்க்க வந்திருக்காங்க..?” என்றான்.
“நலம் விசாரிக்க மட்டும் பார்க்க வரலை. ஒரு அன்புல பார்க்க வந்தேன்னும் சொல்லலாம்..” என்றாள் துவாரகி பட்டும் படாமல்.
“அது தான் இங்க பயமே..! உங்க வீட்லே எல்லாருக்கும் வம்பு காட்டித்தான் பழக்கம். அன்பு காட்டி பழக்கம் இல்லையே..?” என்றான் நக்கலாக.
“எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க..?” என்றாள் பட்டென்று.
“எல்லாரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க தான..?” என்றான் நக்கலாய்.
“நான் எப்படின்னு எனக்குத் தெரிஞ்சா போதும். எல்லாருக்கும் என்னை நல்லவளா காட்டிக்கனும்ன்ற அவசியம் எனக்குக் கிடையாது..” என்றாள் அவளும் நக்கலாய்.
“அவசியம் எல்லாமே அனாவசியம் தான்..” என்றான் ஆதி.
“ரெண்டு பெரும் இப்ப நிறுத்த போறிங்களா இல்லையா..? ஆதி என்ன இது..? வீட்டுக்கு வந்திருக்க பொண்ணுகிட்ட எப்படி பிகேவ் பண்ணனும்ன்னு தெரியாது. இப்படித்தான் மரியாதை இல்லாம நடந்துக்குவாங்களா..?” என்றார் பார்கவி.
“நீங்க செஞ்சு வைச்சிருக்க வேலைக்கு வேற என்ன பண்ண சொல்றிங்க..?” என்றான்.
“நாங்க என்ன பண்ணோம் ஆதி..?”
“உங்களை யார் வாக்குக் குடுக்க சொன்னது..? நான் இவங்களை திருமணம் பண்ணிக்கிறேன்னு..” என்றான் எரிச்சலுடன்.
“என்ன ஆதி சொல்ற..? நாங்க எங்க அப்படி சொன்னோம்..?” என்றார் பார்கவி புரியாமல்.
“அப்பா சொல்லியிருக்கார். அதுவும் உறுதியா நடக்கும்ன்னு சொல்லியிருக்கார். எதை மனசுல வச்சுகிட்டு அவர் அப்படி சொல்லியிருக்கார்..? விருப்பம் இல்லைன்னு சொன்ன இவங்க இப்போ விருப்பம் இருக்குன்னு சொல்றாங்க..? அதுக்குள்ள என்ன நடந்தது..?” என்றான்.
“ஆதி சொல்றது உண்மையாங்க..?” என்றார் பார்கவி.
“உண்மை தான் பார்கவி..! நான் தான் அப்படி சொன்னேன். என்னோட பையன் எந்த இடத்துலையும் என் மதிப்பை குறைக்க மாட்டான்னு நினைக்கிறேன்..” என்றார் சேது ராமன்.
“அப்பா, அதுக்காக என்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகள் எல்லாத்தையுமே நீங்களே எடுக்கலாம்ன்னு அர்த்தம் கிடையாது..” என்றான்.
“தப்பான முடிவு எடுக்கலைன்னு நினைக்கிறேன் ஆதி..” என்றார் அவர்.
“சரியான நேரத்துல தப்பான முடிவு எடுத்துருக்கிங்க..” என்றான் அவன்.
“நீங்க இவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கனும்ன்னு எந்த அவசியமும் இல்லை மிஸ்டர் ஆதி..” என்றாள் துவாரகி.
“நீங்க வேண்டாம்ன்னு சொன்னா போறதுக்கும், வேணும்ன்னு சொன்னா வரதுக்கும் நான் உங்க லவ்வரா என்ன..?” என்றான் இடக்கான குரலில்.
“பார்த்து பேசுங்க ஆதி. தேவையில்லாம வார்த்தையை விடாதிங்க..” என்றாள் துவாரகி.
“பார்த்து தான் பேசுறேன்..” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க, பார்கவிக்கு ஒரு புறம் ஆயாசமாக வந்தது.
அவனின் பார்வையை நேருக்கு நேராக சந்தித்தாள் துவாரகி. அந்த பால் வண்ண முகத்தில் இருந்தது என்னவென்று சத்தியமாக அவனால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று உள்மனம் எதிர்பார்க்க, தன்னுடைய எதிர்பார்ப்பின் நிதர்சனம் புரிந்தவனுக்கு, அதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை.
“என்ன சாப்பிடுற துவா..?” என்றார் பார்கவி.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஆன்ட்டி. உங்களைப் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன். இப்போ உங்களுக்கு ஹெல்த் ஓகே தானே ஆன்ட்டி.” என்றாள் அவள்.
“நான் வந்துட்டேன் தான… எல்லாமே ஓகே ஆகிடும்..” என்றான் ஆதி.
“நான் உங்ககிட்ட கேட்கலை ஆதி..! நீங்க என்ன டாக்டரா..?” என்றாள் துவாரகி. அவளை ஆழ்ந்து பார்த்தவன் சன்னமாக சிரித்துக் கொண்டான்.
“அவங்களோட மகன்..!” என்றான் உள்ளார்த்தமாய்.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை..” என்றாள்.
“வேற எதுக்கு குறைச்சல் கண்டிங்க..?” என்றான்.
அவள் பதில் பேசும் முன், அங்கே வந்தான் சம்பத்.
“என்னப்பா சம்பத்..? இப்பத்தான் இங்க வர வழி தெரிஞ்சதா..? அன்னைக்கு வந்ததோட சரி..” என்று பார்கவி சொல்ல,
“அடுத்தடுத்து ஷூட்டிங் கவிம்மா, அதான். நீ எப்போ வந்த துவாரகி..?” என்றான் சம்பத்.
“நான் இப்போதான் வந்தேன் சம்பத். ஆன்ட்டியை பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்..!” என்றாள்.
“ஷூட்டிங் எப்படி போகுது ஆதி. பிராப்ளம் எல்லாம் சால்வ் ஆகிடுச்சா..?” என்றான் சம்பத்.
“சார்க்கு நான் இருக்குறது இப்பத்தான் கண்ணு தெரியுது போல..? எனக்கு பிரச்சனை குடுக்குறதையே சிலர் வேலையா வச்சிருக்காங்க. அதை முறியடிக்கிறதையே நான் வேலையா வச்சிருக்கேன். அவ்வளவு தான்..” என்றான் ஆதி குத்தலாக.
“யாரை சொல்ற ஆதி..?” என்றான் சம்பத்.
“யார்ன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரியே கேட்காத சம்பத்..?” என்றான் ஆதி.
“அப்போ நான் கிளம்புறேன் ஆன்ட்டி..” என்றாள் துவாரகி. ஆதியின் பேச்சை அதற்கு மேல் அவளால் கேட்கமுடியவில்லை.
“ஆதி, துவாவை டிராப் பண்ணிட்டு வா..” என்றார் சேது.
“பரவாயில்லை அங்கிள்..! நான் சம்பத் கூட போய்க்கிறேன்..” என்றாள் துவா.
“அவனே இப்பத்தான் வந்திருக்கான். அவன் கிளம்ப எப்படியும் நேரமாகும்..” என்றான் ஆதி.
“இல்லை ஆதி. இந்தபக்கம் ஒரு வேலையா வந்தேன். அப்படியே அம்மாவைப் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். இன்னொரு நாள் ப்ரீயா இருக்கும் போது வரேன், உடம்பை பார்த்துக்கோங்க கவிம்மா..” என்றவன் கிளம்ப, அவனுடனேயே கிளம்பினாள் துவாரகி.
ஆதியைத் தாண்டி அவள் செல்ல முயல, எதுவோ தடுக்கி விழப் போனாள்.
“பார்த்து துவா..” என்றவன் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான். ஆதித்யாவின் கைகள், துவாரகியின் இடுப்பினைப் பற்றியிருக்க, ஒரு நிமிடம் திகைத்தவள்,
“இட்ஸ் ஓகே..! தேங்க்ஸ் ஆதி..” என்றவள் நேராக நிமிர்ந்து நின்று விட்டாள். அவன் கைகள் பட்ட இடம் அவளுக்கு ஒருவித குறுகுறுப்பை ஏற்படுத்த, தன்னைத் தானே நொந்து கொண்டவள்,
“கிளம்பலாம் சம்பத்..” என்றாள். நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சம்பத்தின் மனதில் என்ன இருந்தது என்று சத்தியமாக அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.
ஆதிக்கு அங்கு நடந்த எதுவுமே எதார்த்தமாய் நடந்ததைப் போல் தெரியவில்லை. எல்லாமே பேசி வைத்து நடப்பதை போல் இருந்தது. ஆனால், அவனின் பிடியில் துவாரகி ஒரு நிமிடமே ஆனாலும் உருகி நின்றதை அவன் உணர்ந்திருந்தான். யோசனைகள் பலவாறு செல்ல, சென்று கொண்டிருந்த அந்த இருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தான் ஆதி.
‘இதில் எந்த துவாரகி உண்மையானவள்..? என்னை பிடிக்கவில்லை என்று சொன்னவளா..? பிடித்திருக்கிறது என்று சொன்னவளா..? சிக்னலில் பார்த்த துவாரகியா..? சம்பத்துடன் இணக்கமாக இருக்கும் துவாரகியா..?’ இப்படி அவனுக்குள் பல குழப்பம்.
வீட்டு வாயில் வரை சென்ற துவாரகி, திரும்பி ஆதித்ய வர்மாவைப் பார்க்க, அந்த பார்வையில் என்ன இருந்தது..?
“பொண்ணு அப்படியே தங்க சிலை மாதிரி இருக்கா பார்கவி. எதுக்கும் குறைவில்லை. அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆதிக்கும் அந்த பொண்ணை பிடிக்காத மாதிரி தெரியலையே..?” என்றார் சேது ராமன்.
“அழகு மட்டும் இல்லைங்க..! ரொம்ப பொறுமை, நிதானம்.. இப்படி சொல்லிட்டே போகலாம். கொஞ்சம் கூட திமிர் கிடையாது..” என்றார் பார்கவி.
‘திமிர் கிடையாதா..? என்கிட்டே காட்டுற எல்லா ஆட்டிடியூட் எல்லாமே திமிராதான் இருக்கு. இதை சொன்னா, இவங்களுக்குப் புரியவா போகுது..?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஆதி.
“நெக்ஸ்ட் டென் டேய்ஸ் கர்நாடகா போறேன் மாம். அங்க தான் ஷூட். நாளைக்கு ஈவ்னிங் கிளம்புறேன்..” என்றான் ஆதி.
“கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்க கூடாதா ஆதி..? இப்படி ரெஸ்ட் இல்லாம ஓடிட்டே இருந்தா, வாழ்க்கையில் சலிப்புத் தட்டிடும்..” என்றார் சேது.
“அப்படி மட்டும் ஒரே இடத்துல நின்னுட கூடாதுன்னு தான் ஓடிட்டு இருக்கேன் டாட். நடந்ததை நீங்க மறந்திருக்கலாம். என்னால மறக்க முடியலை..” என்றான் சட்டென்று மாறிய குரலில்.
“கருணைநாதன் கிட்ட நான் கல்யாண தேதியை குறிக்க சொல்லிடவா..?” என்றார் சேது.
“நீங்க அவசரப்படுறிங்கப்பா..! எங்கயோ, எதுவோ தப்பா இருக்கு..” என்றான்.
“உனக்கு அவர் தொடர்ந்து பிரச்சனை குடுத்துகிட்டே இருக்கார். அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா, அடுத்து பிரச்சனை செய்ய யோசிப்பார் ஆதி. அதே சமயம், இப்படி ஒரு பொண்ணு தேடுனாலும் கிடைக்காது. வாழ்க்கையில சில விஷயங்களை ஏன், எதுக்குன்னு ஆராயாம ஏத்துக்கப் பழகிக்கணும். உனக்கு நான் சொல்றதும் அது தான்..” என்றார் சேது.
“ஓகே..! உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்ங்க. ஆனா, என்னோட விஷயத்துல அந்த ஆள் தலையிடவே கூடாது. எந்த லாப நோக்கமும் இல்லாம எனக்குப் பொண்ணு குடுக்க, அந்த ஆள் ஒன்னும் முட்டாள் கிடையாது. எந்த லாப நோக்கமும் என்கிட்டே செல்லாதுன்னு சொல்லிடுங்க..” என்றான் உறுதியாய். அவனின் கணிப்பு தான் எப்போதும் சரியாக இருக்குமே.
சாதாரண மனிதர்களைப் போல், எல்லா விஷயத்திலும் நினைத்த மாதிரியே இவர்களால் நடந்து விட முடியாது. அவர்களுக்கென்று இருக்கும் ஒரு ஸ்டேட்டஸ், சில காட்டாயங்கள், சில நிர்பந்தங்கள் இப்படி எல்லாமே சேர்ந்து தான், அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. லாப, நட்ட கணக்குகள் பார்க்காமல் திருமணம் செய்த திரைப் பிரலபலங்கள் வெகு சொற்பமான சிலரே. அந்த சிலருக்குள் அடங்கி விடத்தான் முயற்சித்தான் ஆதித்ய வர்மா. ஆனால் கருணைநாதன் வடிவில் வந்த விதி அதற்கும் அவனை விடவில்லை.
வாய்ப்புகள் அதிகரிக்க, சிராய்ப்புகளும் அதிகமாகத்தான் செய்யும் என்ற வார்த்தைகள் அவனுக்கு முற்றிலும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய வர்மா -துவாரகியின் திருமணத்தில் பல எதிர்பார்ப்புகள் இருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில். இதில் எதையுமே அறியாத ஒரு ஜீவன் ஒன்று இருக்கிறது. நேரம் வரும் போது.. அந்த ஜீவனுக்குத் தெரியவரும்.
அங்கே காரில் சென்று கொண்டிருந்த சம்பத்…
“எதுக்காக நீ ஆதி கூட வந்த துவா..?” என்றான்.
“நானா கிளம்பினா கேள்வி வரும். அதே ஆதி கூடன்னா, கேள்வி வராது. அதான் கிளம்பி வந்தேன்..” என்றாள்.
“இப்ப நான் டிராப் பண்ணா, உங்க வீட்ல எதுவும் நினைக்க மாட்டாங்களா..?” என்றான்.
“கண்டிப்பா நினைக்க மாட்டாங்க. நான் ஆதி வீட்ல இருந்து வரேன்றதே அவங்களுக்கு எந்த சந்தேகத்தையும் கிளப்பாது…” என்றாள்.
“நீ கேட்டது..” என்று சம்பத் அவளிடம் ஒன்றை நீட்ட, அதை வாங்கிக் கொண்டாள் துவாரகி.
“தேங்க்ஸ் சம்பத்..” என்றாள்.
“என்ன புதுசா…?பிச்சுடுவேன் பிச்சு..” என்றான் சம்பத்.
“இந்த கல்யாணத்தை எப்படித் தடுக்குறது..?” என்றான்.
“அதைத் தடுக்க முடியாது சம்பத். கண்டிப்பா நடத்திடுவார் எங்க அப்பா..” என்றாள் துவாரகி. அவள் சொன்னவுடன் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் சம்பத்.
“நீ என்ன சொல்ற..?” என்றான் அதிர்ச்சி விலகாமல்.
“உண்மைதான். நான் ஆதிகிட்டயே ஓகே சொல்லிட்டேன்..!” என்றாள்.
“என்ன சொல்ற துவா..?” என்றவனின் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
“வேற வழி தெரியலை சம்பத், சாரி..” என்றாள் குனிந்த தலையுடன்.
“கடைசில நீயும் எல்லா பொண்ணுங்க மாதிரி தான்னு காட்டிட்ட இல்லையா துவாரகி..” என்றான்.
“கண்டிப்பா இல்லை..! இந்த கல்யாணம் நடந்தாலும், அதுக்கு பிறகு என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது. எதுவேனும்ன்னாலும் நடக்கலாம்..” என்றாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வேகமாய் காரை எடுத்தவன் மேற்கொண்டு அவளிடம் எதையும் பேசவில்லை.
“கோபமா சம்பத்..?” என்றாள்.
“இதென்ன கேள்வி..? நானும் மனுஷன் தான் துவாரகி..” என்றான்.
அதற்கு பிறகு அவள் பேசவேயில்லை. எதற்கும் கலங்கக் கூடாது என்று அவள் நினைத்தாலும், சில சமயம் அவள் கண்கள் அவள் அனுமதி இல்லாமல் கலங்கித்தான் விடுகிறது. அதை பிறர் அறியாமல் மறைக்கும் அந்த நிமிடங்கள் தான் கொஞ்சம் கடினமானவை.
தொழில்துறை அமைச்சர் கனகவேல் வீடு:
“அப்பா..! எலக்சன் வேலை எல்லாம் எப்படி போகுது..?” என்றாள் திவ்யா.
“இப்ப இருந்து ஆரம்பிச்சா தான் திவ்யா, ஜெயிக்க முடியும். பணத்தை தண்ணீரா செலவு பண்ணாத்தான் இந்த முறை ஜெயிக்க முடியும்..” என்றார் கனகவேல்.
“இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் சக்ரபாணி தான் முதலமைச்சர் ஆவார்ன்னு எல்லாரும் பேசிக்கிறாங்களே, அது உண்மையாப்பா..?” என்றாள் திவ்யா.
“அப்படி நடக்க நாங்க விட்ருவோமா என்ன..? எல்லாம் இந்த ஆக்டர் ஆதித்ய வர்மாவால வந்தது. நடிப்பை மட்டும் பார்க்காம, தேவையில்லாம அரசியல் படம் நடிச்சு, இப்போ மக்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிற மாதிரி பண்ணிட்டான்..” என்று கனகவேல் அவனை திட்டித் தீர்த்தார்.
“ஒரு நடிகன் சொல்றதை வச்சு, ஓட்டுப் போடுற அளவுக்கு மக்கள் முட்டாள் இல்லையேப்பா..?” என்றாள்.
“உனக்கு விபரம் பத்தாது திவ்யா. இந்த மக்களை என்னன்னு நினைச்ச..? ஒரு நடிகனுக்காக என்ன வேணும்ன்னாலும் செய்வானுங்க. அவன் படத்துல மட்டும் தான் ஹீரோவா நடிக்கிறான். நிஜத்துல அவன் யாரு..? என்ன..? அரசியலுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்..?அவன் குடும்பம் என்ன..? அவன் இந்த மாநிலமா..? அடுத்த மாநிலமா..? அவன் உண்மையிலையே நல்லவனா,கெட்டவனா..? இப்படி எதுவுமே தெரியாம, திரையில பார்க்குற பிம்பம் மட்டும் தான் அவனோட கேரக்டர்ன்னு இவங்களே முடிவு பண்ணி, இவங்களே அவனுகளை தூக்கி விட்ருவானுக.” என்றார் கனகவேல்.
“மக்கள், நம்பி ஓட்டுப் போட்டவங்க ஒழுங்கா இருந்தா, அவங்க ஏன் ஒரு நடிகனை தலைவனா நினைக்கப் போறாங்க. நடிகனுக்கும் உங்களுக்கும் ஒரு வித்யாசமும் இல்லைப்பா. அவங்க திரையில நடிக்கிறாங்க. நீங்க மக்கள்கிட்ட நடிக்கிறிங்க. ஆக, ரெண்டு பேரும் ஒன்னு தான். திறமையா நடிக்கிறவங்களுக்கு ஆட்சி, அவ்வளவு தான்..” என்றாள் திவ்யா.
“என்ன திவ்யா..? குத்திக் காட்டுற மாதிரி இருக்கு..?” என்றார் கனகவேல்.
“அப்படி எல்லாம் இல்லைப்பா. நீங்க சொன்னதுக்கு நான் சொன்னேன், அவ்வளவு தான். மத்தபடி எலக்சன்ல உங்களுக்கு என்ன வேலை செய்யனும்ன்னு சொல்லுங்கப்பா, நான் பண்றேன்..” என்றாள் திவ்யா.
“தலைவர், அவரோட அக்கா பையனுக்கு உங்க அக்கா வந்தனாவை பொண்ணு கேட்டு, நிச்சயம் பண்ணி, அந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தா, இந்நேரம் நான் துணை முதலமைச்சர் ஆகியிருப்பேன். என் கனவுல மண்ணை அள்ளிப் போட்ட மாதிரி உங்கக்கா பண்ணிட்டா. ஆனா, என்னோட அரசியல் வாரிசே நீதான் திவ்யா..” என்றார் கனகவேல்.
“அது எனக்கும் தெரியும்ப்பா. தொழில் எல்லாத்தையும் சென்னைக்கு மாத்திட்டு வந்தப்பவே, நான் எல்லாத்துக்கும் தயாரா தான் வந்தேன்..” என்றாள் திவ்யா.
“நாளைக்கு தலைவரைப் போய் பார்த்துட்டு வந்திடலாம் திவ்யா..” என்று கனகவேல் சொல்லிக் கொண்டிருக்க,
“நீங்க பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலைங்க. அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு, அதுக்கப்பறம் நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க. வயசு போய்கிட்டே இருக்கு..” என்றார் ராதிகா. அவர் கவலை அவருக்கு.
“உனக்கு என்ன தெரியும் ராதிகா..? இந்த தடவையும் நாங்க தான் ஆட்சி அமைப்போம். அதுல எந்த சந்தேகமும் இல்லை. அதுக்கப்பறம் திவ்யாவுக்கு ராஜா மாதிரி ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, ஊரே மெச்ச கல்யாணம் பண்ணி வைக்கலை, நான் கனகவேல் இல்லை..” என்றார் பெருமையாய்.
“இப்போ என்னோட கல்யாணத்துக்கு என்ன அவசரம் மம்மி..! பாருங்க, துவாரகியே இன்னும் மேரேஜ் பண்ணிக்கலை..” என்றாள் திவ்யா.
“அந்த பொண்ணு டாக்டர் ஆகிருச்சு திவ்யா. ரெண்டு பேரும் ஸ்கூல் ஒன்னாத்தான் படிச்சிங்க. நான் அப்பவே உன்னை மெடிக்கல் படிக்க சொன்னேன். நீதான் மாட்டேன்னு, அப்பாவுக்கு தொழில்ல உதவியா இருக்கும்ன்னு தொழில் சம்பந்தமா படிச்சுட்டு வந்த. இப்ப உங்கப்பா, உன்னை அரசியலுக்குள்ள இழுக்கப் பார்க்குறார். நமக்கு அதெல்லாம் வேண்டாம் திவ்யா. அரசியலுக்கு போனா, குடும்ப வாழ்க்கை நிம்மதியா இருக்காது..” என்றார் ராதிகா. ஒரு சராசரி தாயின் கவலை அவருக்கு.
“நீங்க பேசாம இருங்க மம்மி. அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..” என்றாள் திவ்யா.
அவள் முகத்தில் அடித்தது மாதிரி பேச, ராதிகாவிற்கு ஒரு மாதிரியானது. சமீப காலமாக, அவள் தன்னை எதற்கும் மதிக்காமல் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு அவருக்கு.
“அப்பா, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அமைச்சராவே காலத்தை ஓட்டுவிங்க. சீக்கிரம் முதலமைச்சர் ஆகுற வழியைப் பாருங்க..” என்றாள் திவ்யா.
“அதைப் பத்தி யோசிக்காமையா இருப்பேன் திவ்யா. காலம் கனிஞ்சு வரட்டும், அப்பத் தெரியும் இந்த அப்பா யாருன்னு உனக்கு..” என்றார்.
படப்பிடிப்பிற்காக, கர்நாடகா கிளம்பிக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மா.
“கவின்.. அடுத்த பத்து நாளைக்கு வேற அப்பாயின்மென்ட்ஸ் ஏதாவது இருந்தா, அதை கேன்சல் பண்ணிடு. வேற எதுக்குமே கால்ஷீட் புக் பண்ணாத..” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஓகே சார்..!” என்றான் கவின்.
அதே நேரம் அவனுக்கு போன் வர, சம்பத் தான் அழைத்திருந்தான்.
“சொல்லு சம்பத்..” என்றான் ஆதி.
“பிசியா ஆதி..?” என்றான் சம்பத்.
“எஸ்..!கர்நாடாக கிளம்பிட்டிருக்கேன். நெக்ஸ்ட் டென் டேய்ஸ் அங்க தான்..” என்றான்.
“ஹோ..” என்று அவன் இழுக்க,
“என்ன விஷயம் சம்பத்..? எனிதிங் இம்பார்ட்டென்ட்..?” என்றான் யோசனையுடன்.
“நத்திங் ஆதி..! மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டியா..?” என்றான்.
“சொல்லிட்டேன் சம்பத். துவாரகியே சரின்னு சொன்ன பிறகு, நான் என்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்குற..?” என்றான்.
“சும்மாதான் கேட்டேன் ஆதி..” என்று அவனிடம் சொல்லிவிட்டு போனை வைத்த சம்பத்திற்கு, ஆதிக்கு விஷயம் தெரிந்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வான் என்ற பதைபதைப்பு ஒரு புறம் இருந்து கொண்டே இருந்தது.
“நான் கிளம்புறேன்ப்பா..!” என்று ஆதி வர,
“ஓகே ஆதி..!” என்றார் சேது ராமன்.
“அம்மா எங்கப்பா, ஆளையே காணோம். நான் வீட்டுக்கு வந்ததுல இருந்து அவங்களைப் பார்க்கவே இல்லையே..?” என்றான்.
“முக்கியமான கேஸ் ஆட்டென் பண்ணனும்ன்னு மதியமே கிளம்பி போய்ட்டா ஆதி..” என்றார்.
“என்னப்பா..? நான் வெளிய ஷூட்டிங் போறப்ப, அவங்களைப் பார்த்துட்டு தான போவேன். தெரிஞ்சும் எதுக்கு இப்படி பண்றாங்க..? அதுவும் அவங்களுக்கு ஹெல்த் இன்னமும் முழுசா சரியாகாத நேரத்துல..” என்றான் ஆதி கோபமாய்.
“பிளைட்க்கு இன்னும் டைம் இருக்கே ஆதி, போற வழியில தானே ஹாஸ்பிட்டல். சொல்லனும்ன்னா சொல்லிட்டு போ..” என்றார் சேது.
“வாய்ப்பேயில்லை..நீங்களே சொல்லிடுங்க” என்றவன், கோபமாய் கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பியவுடன் சிரித்தவர், பார்கவிக்கு போன் செய்து விஷயத்தை கூறினார்.
“சார், அம்மாவைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போகனுமா..?” என்றான் கவின்.
“ஒன்னும் தேவையில்லை, காரை நேரா ஏர்போர்ட்க்கு விடு..” என்றான். சொல்லிவிட்டானே தவிர, அந்த ஹாஸ்பிட்டலைக் கடந்து செல்ல முடியவில்லை.
“ஸ்டாப் பண்ணு..” என்றவன், பார்கவியின் போனிற்கு அழைக்க, அவர் எடுக்கவேயில்லை.
“ஷிட்..!” என்று இறங்கிவன், அப்படியே போகப் பார்க்க,
“சார்.. மாஸ்க், தொப்பி போடலை..” என்று கவின் நியாகப்படுத்த,
“இதுவேற..?” என்று முனங்கியவன், வேகமாக அதைப் போட்டுக் கொண்டு, குனிந்து கொண்டே சென்றான். நேராக டாக்ட்டர்ஸ் இருக்கும் பக்கம் செல்ல, அவனுக்கு எதிர்த்து வந்தாள் துவாரகி. குனிந்து கொண்டே சென்றதில் அவன் கவனிக்காமல் செல்ல, அவள் மீது மோதிவிட, சட்டென்று சுதாரித்து நின்றான்.
“சாரி..” என்றவன், அங்கே துவாரகியைப் பார்த்து மனதிற்குள் நொந்து கொண்டான்.
“இவ தானா..?” என்று நினைத்தவன்,
“ஹெலோ.. ஹூ ஆர் யு..? எதுக்காக இப்படி முகத்தை மறைச்சுகிட்டு, போறீங்க..?” என்றாள்.
“நான் தான்..” என்றான்.
“நான் தான்னா..?” என்றாள் வந்த சிரிப்பை அடக்கியபடி.
“நான் தான்னு தெரிஞ்சும், வீம்புக்கே இப்படி பேசுவா..?” என்று மனதிற்குள் பேசிக் கொண்டவன்,
“அம்மா எங்க..?” என்றான்.
“ரைட் சைட் ரூம்..” என்றாள்.
அவன் உள்ளே நுழைய, அவன் பின்னே அவளும் சென்றாள்.
“ஆதி..! என்ன இங்க..?” என்றார் பார்கவி.
“தெரியாத மாதிரி நடிக்காதிங்க. என்னை இங்க வரவைக்கனும்.. அதான உங்க பிளானே..” என்றான் முறைத்த படி.
“அப்படியெல்லாம் இல்லை ஆதி..” என்றார் பார்கவி.
“ஓகேம்மா..! எனக்கு பிளைட்டுக்கு டைம் ஆச்சு. பத்து நாள் பார்க்க முடியாது.. சோ..” என்று அவரை அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டான்.
“என்ன ஆதி..? இன்னும் எனக்கு முத்தம் கொடுத்துகிட்டு இருக்க..?” என்று பார்கவி சிரிக்க,
“ஒவ்வொரு தடவையும் நீங்க இப்படி தான் சொல்றிங்க. நானும் விடாம இதைத் தான் பண்றேன்..’ என்றவன் கிளம்ப எத்தனிக்க, இதுவரை அங்கு நடந்ததை எல்லாம் பார்த்தும் பார்க்காதவளைப் போல், நின்றிருந்தாள் துவாரகி.
அவளின் அருகில் சென்றவன்,
“வரேன்..!” என்றான். அவளை ஒட்டியும் ஒட்டாமல் அவன் நின்ற விதம், அவளுக்குள் பிரளையத்தையே உண்டு பண்ணியிருந்தது.
‘இப்படியே நீ நின்னா..” என்று ஏதோ சொல்ல வந்தவன், ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டே, அவள் கையில் இருந்த போனை பிடுங்கினான். அதிலிருந்து தன்னுடைய நம்பருக்கு அழைத்து, அவளுடைய நம்பரை வாங்கிக் கொண்டான்.
“நானும் இருக்கேன் ஆதி..” என்றார் பார்கவி சிரிப்புடன்.
“எனக்கும் தெரியும்மா..” என்று கடுப்பானவன்,
போனை குடுக்கும் சாக்கில் அவள் கையை ஒரு அழுத்து அழுத்தினான். அதற்கு என்ன அர்த்தம் என்று அவளுக்கு விளங்கவில்லை. ஆனால், அந்த உணர்வு நன்றாக இருந்தது அவளுக்கு.
“வரேன் டாக்டரம்மா..” என்றான் அடக்கிய சிரிப்புடன்.
“என்ன ஆதி..?” என்றார் பார்கவி.
“வரேன் டாக்டர் அம்மா..” அப்படின்னு உங்ககிட்ட சொன்னேன், என்றவன் அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டான்.
ஏனோ அவன் செல்வது, மனதிற்குள் கொஞ்சம் பாரமாக இருந்தது துவாரகிக்கு.