தன் வீட்டின் முன் வேகமாய் பைக்கை நிறுத்திய ஆரியன் முன்னே வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு,
“அம்மா..” என்ற அழைப்போடு நுழைய அங்கே தொலைக்காட்சி முன் காலாட்டியபடி அமர்ந்திருந்த தங்கை மேக்னா,
“வாசல்ல நின்னு அம்மானு கத்தாதடா.. அம்மா பழைய சாததோடு வந்திட போறாங்க..”
என்று கமெண்ட் அடிக்க,
“ஏ.. ச்சீ.. போடி..”
என்று அதனை தலையை சிலுப்பி ஒதுக்கியவனாய்,
“வந்துட்டியா ஆர்யா.. காபி போடவா..?”
என உள்ளிருந்து வந்த ரம்யாவிடம்,
“ம்ம் ம்மா..” என்றபடி கையில் வைத்திருந்த மளிகை பொருட்கள் அடங்கிய பையை நீட்ட,
“என்ன டா.. நீயே வாங்கிட்டியா..? உன்கிட்ட சொல்லவே இல்லையே..”
என்றார் அதை பார்த்து ஆச்சரியமாய்..
காலையில் தான் தீர்ந்து போன பொருட்களை கவனித்து கடைக்கு போக வேண்டுமே என்று சலிப்போடு தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்.
“என்கிட்ட சொல்லல தான்.. ஆனால் எழுந்ததில் இருந்து அதை தானே புலம்பிட்டு இருந்திங்க.. நான் கேட்டவரை எல்லாம் வாங்கி வந்துட்டேன்.. ஏதாவது விட்டு போய் இருந்தால் அண்ணாச்சி கடை நம்பர் இதுல இருக்கு..நான் சொல்லிட்டேன்.. கால் பண்ணி சொல்லுங்க.. வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பாங்க… சரியா..
உங்களுக்கு பல தடவை சொல்லிட்டேன் ம்மா.. எந்த வேலையா இருந்தாலும் உங்களுக்கு முடியலைன்னா அதை செய்யாதீங்க.. நாம ஆல்டர்நேட்டிவா வேற எதாவது செஞ்சுக்கலாம்.. இதெல்லாம் நீங்க தான் செய்யணும்னு எந்த கடடாயமும் இல்ல..”
என்று விளக்கம் கொடுத்த மகனை கண்டு தாயாய் அவர் மனம் கனிந்தது.
அவரின் சிறு முகசுளிப்பை கூட அவன் கவனிக்க தவறியது இல்லை.
ஆரியன் எப்பொழுதும் அப்படி தான்.
சிறு சிறு விஷயங்களே என்றாலும் அதனை அலட்சியப் படுத்தாது தன் கருத்தில் கொண்டு அதனை சரி செய்ய முனைவான். ஆனால் அப்படி பட்டவனுக்கு ஒரு முறை அந்த கவனம் தவறும்போது விளையபோகும் பாதிப்பு கொஞ்சம் அதிகமே..!!
பெரிய புன்னகையோடு,
“சரி டா..” என்றவர்,
“உன் பொண்டாட்டி கொடுத்து வைச்சவ தான்.. நீ கவலையே படாத.. இந்த ஊர்லயே உன்னை மாதிரியே தங்கமான பொண்ணா பார்த்து தான் கட்டி வைப்பேன்..”
என்று ஆசையாய் சொல்ல கண்களில் எழுந்த கள்ளத்தனத்தை மறைத்துக் கொண்டு,
“சரி சரி ம்மா.. இப்ப காபி கொடுங்க போதும்..”
என்று அவரை அனுப்பி வைத்தான்.
அந்த சம்பஷனையில் ஒரு கண் வைத்திருந்த மேக்னா,
“உன் பேச்சுல ஒரு தடுமாற்றம் தெரியுதே.. என்ன எதாவது பொண்ண கிண்ணு பார்த்து வச்சு இருக்கியா.. சொல்லுடா நான் பார்த்துகிறேன்..”
என நேக்காய் போட்டு பார்க்க,
“ஒரு ஆணியும் வேணாம்.. காலங்காத்தாலேயே என்ன டிவி.. ஏதாவது வேலை இருந்தால் போய் பாரு..பே..”
என்று அதனை நிறுத்திவிட்டு அவளையும் விரட்ட,
“என்ன டா..” என்று கோபமாய் சிணுங்கியவள்,
“படிச்சு முடிச்சு நானே கொஞ்ச நாளா தான் ஃப்ரீயா இருக்கேன்.. அது பொறுக்கலயா..”
என்று முணுமுணுத்தபடி மீண்டும் டிவியை போட்டு அமர்ந்துக் கொண்டாள்.
“எது.. வருஷம் ஆக போகுது.. உனக்கு இன்னும் கொஞ்ச நாளா..?”
“அதெல்லாம் நீ ஏன் கணக்கு வைக்கிற.. போ.. போ.. ஆபீஸ் கிளம்புற வழிய பார்..”
கையை உதறி அலட்சியமாய் சொல்லும் நேரம் தந்தை திருவலவன்
வீட்டிற்குள் வர அண்ணன் தங்கை இருவருமே கப் சிப் தான்.
வந்ததுமே,
“ஆர்யா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. வா..”
என்று சொல்லி உள்ளே செல்ல அவனுக்கு காபியோடு வந்த ரம்யாவும் அவர்களோடே செல்ல,
“ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்களே.. நம்ம தல தான் உருள போகுது..”
என்று எண்ணிக் கொண்டாள் மேக்னா.
அவள் எண்ணியது போலவே,
“அந்த ஆடிட்டர் சம்மந்தம் சொன்னேன்ல.. அவங்க ஃபோன் பண்ணாங்க.. பொண்ணு பார்க்க வரட்டுமான்னு.. வீட்ல கலந்துகிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன்.. ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு.. எனக்கும் உன் அம்மாக்கும் பிடிச்சு இருக்கு.. நீ
என்ன சொல்றடா.. வர சொல்லலாமா.. அந்த பையன் வேலை செய்யும் ஆபீஸ்ல தெரிஞ்சவங்க இருக்காங்கணு சொன்னியே..”
என்று அவனின் கருத்தை கேட்டார். ஆரம்பத்தில் இருந்தே இந்த வரனில்
அவர்களுக்கு ஆர்வம் தான் என்றாலும் பிள்ளைகளில் விரும்பம் அறியவே அவகாசம் கேட்டு இருந்தார்.
ஒரு லெதர் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைய்சராக பணிபுரிகிறார் திரு.
சற்று கண்டிப்பான தந்தை தான் என்றாலும் இறுதியில் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து அதன்படி தான் எதுவும் செய்வார். அன்பை வெளிப்படையாய் காட்ட தெரியாத மனிதர். அதனை அவர்களும் உணர்ந்தே இருப்பதால் தந்தை மீது மரியாதையும் பாசமும் நிறையவே இருக்கும்..!!
“விசாரிச்சேன் ப்பா.. நல்லா விதமா தன் சொன்னாங்க..எனக்கும் திருப்தி தான்.. மேற்கொண்டு பார்க்கலாம்”
என்று அவனும் சொல்லவே திரு ரம்யா இருவர் முகமும் மலர்ந்தது.
“அப்போ சரி.. மேக்னாக்கும் பிடிச்சு இருந்தால் மேல பேசலாம்.. அந்த பையன் போட்டோ காட்டி விபரம் சொல்லி நீயே உன் தங்கச்சி கிட்ட கேளு.. நாங்க பேசினா மனசுல தோன்றதை சொல்ல சங்கடப்படுவா..”
என்று அவர் சொல்லவே,
“சரிங்க ப்பா.. கேட்கிறேன்..”
என்று புன்னகையோடு சொல்ல அதன் பின் இருவருமே தத்தம் அலுவலகம் கிளம்பும் வேலையில் பிஸியாகி விட்டனர்.
காலை உணவு முடிந்து தந்தை பேக்டரி சென்றதும் தான் மேக்னாவை அழைத்து பேசினான்.
“மேகி.. இந்த போட்டோவை பிடி..”
என கவரை அவள் கையில் வைத்து,
“இவர் பேர் கார்த்திகேயன்.. எம்.காம் படிச்சு இருக்கார்.. ஆடிட்டர்.. ஒரே பையன்.. விசாரிச்ச வரை எல்லாம் நல்லவிதமா தான் சொல்றாங்க.. எங்களுக்கு எல்லாம் ஓகே தான்.. நீ என்ன சொல்ற மேகி.. பொண்ணு பார்க்க வர சொல்லலாமா..”
என்றுஅவள் அபிப்ராயம் கேட்க திருதிருவென விழித்தவள்,
“திடிர்னு கேடடால் என்னடா சொல்வேன்..”
என்க,
“சரி.. அப்போ யோசிச்சு ஈவினிங் சொல்லு..” என்று அவன் சொல்லவும்,
“அதில்ல ண்ணா..”
என்று கூறியவள் அருகே ரம்யா இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டு,
“ஒரு போட்டோ பார்த்து எப்படி டிசைட் பண்ண முடியும்.. பார்க்க நல்லா அழகா இருக்கார் தான்.. ஆனால் கேரக்டர் பிடிக்கலைன்னா என்ன செய்யிறது.. அவங்க நல்லவங்களாவே இருந்தாலும் என்னோட கேரக்டருக்கு செட் ஆகலேனா… எனக்கு என்னமோ நெர்வோஸ் ஆஹ் இருக்குடா..”
என்று தவிப்பாய் கூறினாள். வீட்டில் திருமணப் பேச்சு எடுத்தத்தில் இருந்தே அவள் மனம் இனம் புரியா பயத்தில் தான் இருந்தது.
“ஹே லூசு.. அப்படி எல்லாம் உன்னை விட்டுடுவோமா..? இப்ப பொண்ணு பார்க்க தானே வர போறாங்க.. நேர்ல பார்த்து நானும் பேசுறேன்.. உன்னையும் பேச வைக்கிறேன்.. உனக்கு பிடிச்சா தான் எதுவுமே ஓகே வா..”
என்று இதமாய் பேச அவள் தலையும் தானாய் ஆடியது.
“தலையை மட்டும் ஆட்டினால்.. வர சொல்லாம் தானே..” என்கவும்,
“ஆமா.. கேப்ல அழகா இருக்கார்னு எதுவும் சொன்னா மாதிரி இருந்துச்சே..”
என கண்களை சுருக்கி வம்பிழுக்க தான் சொல்லும்போது தெரியாதது அவன் சொல்லி காட்டும் போது வெட்கம் அரும்ப,
” போடா..போடா.. ” என அவனை தள்ளிவிட்டு அறைக்கு ஓடிவிட அவளை தடுக்காது சிரிப்போடு அன்னையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை உடனே சக்தியிடம் பகிரவும் பரபரக்க,
‘எனக்கும் பேச தேவையில்லை..’ என ரோஷம் கொண்டதை காற்றில் விட்டு ஆபீஸ் வந்ததும் முதல் வேலையாய்,
“சக்தி ஒரு குட் நியூஸ்..!!! உன்கிட்ட உடனே சொல்லணும்.. இப்ப கிளாஸ் முடிஞ்சதும் பிரேக்ல பிங் பண்ணு.. சொல்றேன்..”
என்று அனுப்பி ஆர்வக்கோளாறில் தன் வாயாலேயே மீண்டும் சிக்கினான் நம் தானை தலைவன்..
அவன் அனுப்பிய சில நொடிகளிலே நோட்டிபிகேஷனில் ஒரு புகைப்படம் பதிலாய் வர,
“என்னடா இது.. கிளாஸ் ஹவர்ல போன் வச்சு இருக்க மாட்டாளே..”
என்று நினைதுக் கொண்டே திறந்து பார்த்தான்.
பேக்ஸ்டேஜில் கீபோர்டு உடன் அவளும் அருகே சற்று தள்ளி மற்றவர்களும் நிகழ்ச்சிகாக இசைகருவிகளை செட் செய்து கொண்டிருக்கும் படம் அது..!! சுடசுட ஒரு செலஃபீ எடுத்து அனுப்பி இருப்பாள் போலும்..!!!
அதனை கண்டதும் அப்படியே சுவரில் போய் முட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
இன்று ஈவென்ட் இருப்பதாய் சக்தி சொன்னது அவனுக்கு துளியும் நினைவில் இல்லை.
“நீ சரியான மடையன்.. ஒன்னும் சொல்லாம இருந்தாலே தெரிஞ்சு இருக்காது.. மறந்துட்டேன்னு நீயா போய் வாக்குமூலம் கொடுத்து எரியுற நெருப்புல இன்னும் கொஞ்சம் கேரோசினை ஊத்திட்டியே..!!! போச்சு.. வந்து கொல்ல போறா..”
என தன்னுள்ளே புலம்பினான். உண்மையிலே சற்று பதட்டமாக தான் இருந்தது. அவள் செய்யும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவன் இருக்க வேண்டும் என்பது அவளின் ஆசை..!!
அது சாத்தியம் இல்லாதபோதும் முன்பெல்லாம் ‘எங்கு நிகழ்ச்சி.. எத்தனை பேர்.. என்னென்ன காம்பௌசிஷன் தேர்வு செய்து இருக்கிறார்கள்..’ என்பது முதல் மேடையில் அவள் வாசிக்க போகும் நேரம் ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லும் வரை அனைத்திலும் அவன் இருப்பது போலவே உணர வைப்பான்.
இப்பொழுதோ அது ஒவ்வொரு படியாய் குறைந்து இன்று மறந்தே விடடான் அதனை எண்ணி அவனுக்கே கஷ்டமாக இருந்தது.
“ஏன்டா.. இப்படி இருக்க..”
என தன்னையே நொந்து தலையில் கைவைத்து அமர்ந்த நேரம் அவளிடம் இருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்..!!
டென்ஷனோடு அவசரமாய் அதனை ப்ளே செய்ய,
“நீ மறந்து இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. சோ.. ப்ளீஸ்.. சாரி கேட்டு என்னை கடுப்பேத்தாத.. இட்ஸ் ஓகே.. நான் கோபமா எல்லாம் சொல்லல.. சீரியஸா இட்ஸ் ஓகே.. ஈவென்ட் முடிஞ்சதும் நானே கால் பண்றேன்.. என்னை நினைச்சு ஃபீல் பண்ணாம ஒழுங்கா வேலைய பார்.. நைட் பேசலாம்..”
என சாதாரணமாய் சொல்லவும் அவனுக்கே ஆச்சர்யம் தான்.. என்ன இவ்வளவு கேஷ்வலா சொல்றா.. எப்படியோ போன்னு விரக்தியா விட்டுட்டாளோ.. என குழம்பி தவித்தாலும் போட்டோ வழி கிடைத்த தன் தேவதையின் தரிசனத்தை ரசிக்க தவரவில்லை.
மெல்லிய புன்னகையோடு,
“என் அழகி..!!” என ஆசையாய் அவள் பிம்பத்தை வருடினான். நேரில் அவளை வருடும் நாள் என்றோ என ஏங்கியது மனம்..!!
இவன் அளவுக்கு எல்லாம் அங்கே சக்தி யோசிக்கவில்லை. நிச்சயம் மறந்து இருப்பான் என்று தெரியும்.. எதிர்பார்ப்பு வைக்காததால் பெரிதாக ஏமாற்றமும் இல்லை.
“நல்லா பண்ணுங்கடா.. ஆல் தி பெஸ்ட்.. லாட்ஸ் ஆஃப் லவ் அண்ட் கிஸ்ஸஸ்..”
என அவனிடம் வந்த பதிலை பெருமூச்சோடு விடுத்து இன்று வாசிக்கவிருக்கும் நோட்ஸை எடுத்து வைக்க,
“ஹே ஸ்ரீ..” என முன்னே வந்த அமர்ந்தான் லெனின். அவர்கள் பேண்டின் பாடகன்.
ஆர். ஓ. எல் பேண்ட் ஐவர் கொண்ட குழு..!! லெனின் மற்றும் ஸ்வேதா – பாடகர்கள், கெளதம் – கிட்டாரிஸ்ட், யோகி – டிரம்மேர், இவர்களோடு கீபோர்டு ப்ளேயராக நம் சக்திஸ்ரீ.
“ஹாய்..” என்று அவள் புன்னகைக்க அவன் முகமோ வெகு தீவிரமாய் இருந்தது.
“ஏன்.. இவ்வளவு பெரிய உண்மையை நீ மறைச்ச..”
“என்ன உண்மை.. நான் எதுவும் மறைக்கலையே ..”
என்றவளை,
“உன்னையே நீ கேட்டுப்பார் ஸ்ரீ..”
என கேட்டு யோகியும் வர மற்றவர்களும் வந்து சுற்றி அதே பார்வையோடு நிற்கவும்,
“என்னை ய்யா ரவுண்டு கட்டுறீங்க.. சத்தியமா என்ன கேட்குறீங்க புரில..”
என்றாள் குழப்பமாய்.
“என்ன இவ்வளவு சாதாரணமா கேட்கிற.. சேனலோட இன்ஸ்டா பேஜ்ல அந்த ஷோவோட மேக்கிங் பிக்சர் ஷேர் பண்ணி இருந்தாங்க.. அதில் உங்க அம்மாவை பார்த்து எவ்வளவு ஷாக் தெரியுமா.. ஏன் மறைச்ச ஸ்ரீ..”
இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.
ஒருமுறை ஈவென்ட் முடிய தாமதமான போது இவளை வீட்டில் விட கெளதம் வந்திருந்தான். அன்று யாமினியை சந்தித்த நியாபகத்தில் யூகித்து இருப்பான் என புரிந்தது.
“மறைக்கணும்னு ஏதும் இல்ல.. அது அவங்க வேலைடா.. அதை நான் சொல்லிக்க என்ன இருக்கு..”
என்று தோளை குலுக்கினாள்.
“யா.. எங்க அம்மா தான் அந்த ஷோவோட டைரக்டர்னு தெரிஞ்சதும் எல்லாரும் ‘அப்படியானு ஒரு ஜெர்க் கொடுப்பாங்க தான்.. அப்புறம் அடுத்த வேலையை பார்க்க போயிடுவாங்க.. இப்ப உங்களுக்கும் அப்படி தான் இருக்கு.. அவ்வளவு தானே..”
“மத்தவங்க அப்படி கடந்து போகலாம்.. பட் நமக்கு அப்படி இல்லயே ஸ்ரீ.. நம்ம இங்க வாய்ப்புக்காகவும் அங்கிகாரத்திற்காகவும் அல்லாடிட்டு இருக்கோம்.. அது உங்க அம்மா நினைச்சால் கண்டிப்பா கிடைக்கும் என்ற போது நீயே சொல்லி இருக்கணும் தானே..”
என்ற யோகியை புதிராய் பார்த்து,
“இல்ல.. எனக்கு புரியல.. என்ன சொல்ல வர நீ..”
என்று எழுந்தே விட்டாள். அவள் மனம் உணர்த்தும் விஷயத்தை அவன் கேட்டுவிட கூடாதே என்ற வேண்டுதலோடு..!!
“வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ் ஷோல நமக்கு வாய்ப்பு கிடைச்சால் எவ்வளவு நல்லா இருக்கும் நினைச்சு பாரு.. அதுல ஃபைனல்ஸ் போய் வின் பண்ணனும்னு கூட இல்ல.. கொஞ்சம் எபிசொட் இருந்தால் கூட நல்ல ரீச் இருக்கும்.. எவ்வளவு மியூசிஷன்ஸ் வருவாங்க.. நம்மை மாதிரி பேண்ட்டிற்கு அது ஒரு கோல்டன் சான்ஸ் ஸ்ரீ.. நீ உங்க அம்மாட்ட பேசி பாறேன்..”
என்று அவன் சொல்லவே, ‘ஏதே..’ என வாய் பிளந்து முழித்தாள். பாவம்..!! சின்ன தேவைகளுக்கு கூட அவள் அன்னையை நாடியாது இல்லை என்பதை இவர்களுக்கு எங்கனம் புரியவைப்பது.
‘வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்’ என்பது குழுவாய் பங்கேற்க கூடிய பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சி..!!
சிங்கிங், இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ப்ளயர், இத்தனை பேர்.. இத்தனை வயது என எந்த அளவிடும் இல்லை. இசையில் தனித்தன்மையும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ற புதுமையும் மட்டுமே பிரதானமாய் பார்க்கப்படும்..
எல்லாத்திற்கும் மேல் மக்களுக்கு நல்லா பொழுதுபோக்கு நிகழ்ச்சியாய் கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் முதன்மை நோக்கம் என்பதால் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என பொதுவான ஆடிஷன் நடத்தாமல் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற குழுவை தாங்களே தேர்ந்தெடுப்பர். ஆதலால் அதில் பங்கேற்பது அவ்வளவு எளிதல்ல என்று சக்திக்கும் தெரியும்..!!
“திடிர்னு இப்படி சொன்னா எப்படி.. உங்களுக்கே தெரியும் தானே.. எனக்கு மியூசிக்னா உயிர் தான்.. அதை ரசிச்சு அனுபவிக்க தான் ஆசையே தவிர அதை ப்ரோஃபஷ்னலா பர்ஷு பண்ண எல்லாம் நான் நினைக்கவே இல்லை..”
“தெரியும் ஸ்ரீ… நீ லெக்ச்சரர்.. கௌதம் சிவில் என்ஜினீயர்.. உங்களுக்கு இது பேஷன் தான்… ஆனால் நான், யோகி, லெனின் எல்லாம் மியூசிக்கை மட்டுமே லைஃபா நம்புறோம்.. எங்களுக்காக பேசி பாரேன்..”
கெஞ்சும் விழிகளோடு ஸ்வேதா கேட்க மற்றவர்களும் எதிர்பார்ப்போடு பார்க்க மிகுந்த சங்கடமாய் ஆனது அவளுக்கு..!!
“அந்த ஷோ இப்போ முடிய போகுது தானே.. இப்ப நம்மை எப்படி ஜாயின் பண்ணுவாங்க.. அதோட அம்மா.. அம்மாக்கு அவங்க.. ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அவங்க வேலைல மூக்கு நுழைச்சால் பிடிக்காது.. நான் சொன்னால் என்ன செய்வாங்களோ.. ஏத்துப்பாங்களா என்னானு தெரியல..”
என்ன சொல்லி சமாளிப்பது தெரியாமல் தடுமாற்றமாய் வாயில் வந்ததை சொல்ல,
“இப்ப போயிட்டு இருக்க சீசன் யார் சொன்னா.. நாம கேட்கிறது அடுத்த சீசன்காக தானே.. இப்ப முடிய போகுது.. எப்படியும் ஒரு டூ மந்த்ஸ் கேப்ல அடுத்த்து ஆரம்பிச்சுடுவாங்க.. இப்ப கேட்கிறது தான் சரியா இருக்கும்..
நீ சும்மா எல்லாம் சொல்ல வேண்டாம் ஸ்ரீ.. நம்ம வீடியோ ரெகார்டிங் எல்லாம் காட்டு.. அவங்களுக்கு பிடிச்சா நம்மை செலக்ட் பண்ணட்டும்.. அவங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ஸ்ரீ.. ப்ளீஸ் கேளேன்..”
என வலியுறுத்தி கேட்கும்போது மறுக்க வழியில்லை. அவள் சம்மதித்தும் உற்சாகமாய் மற்றவர்கள் அன்றைய நிகழ்ச்சியில் கவனமாகிவிட கெளதம் மட்டுமே அவள் அருகில் அமர்ந்திருந்தான்.
“எல்லாம் இவனால தான்னு நினைக்கிறியா ஸ்ரீ..”
என்று அவன் சொல்ல மறுத்து தலையசைத்து,
“இல்ல கௌதம்.. நீ சொல்லலனாலும் எப்படியும் ஒரு நாள் தெரிய தான்
போகுது.. அது ப்ரோப்லேம் இல்ல.. இது வேற பிரச்சனை..”
என்றாள் சோர்வாய்..
ரி்தம் அஃப் லைஃப் தொடங்கிய போது லெனின், ஸ்வேதா, யோகி மட்டுமே தான்.. பின்னரே கௌதமும் சக்தியும் அதில் இணைந்தனர். ஆதலால் இவர்கள் இருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும்..!!
கெளதம்..!! அவனின் அழகிற்கும் அசாத்தியமாய் கிட்டார் வாசிக்கும் திறமைக்கும் இரசிகைகள் ஏராளம்..!! அவர்கள் பேண்ட் சோசியல் மீடியாவில் வைரலாக அவனும் ஒர் முக்கிய காரணம்..!! ஆனால் அந்த பந்தா எதுவும் இல்லாத நல்லவன்..!!
அவளின் விருப்பம் இன்மையின் காரணம் புரியாமல்,
“அம்மா தானே ஸ்ரீ.. அவங்களுட்ட கேட்க ஏன் இவ்வளவு யோசிக்கிற.. நம்ம பிரண்ட்ஸ்காக தானே..”
“கேட்கலாம் தான்.. ஆனால் இவங்க ரொம்ப எக்ஸ்பெக்ட் பன்றாங்களே.. என் அம்மா பத்தி எனக்கு தெரியும்.. அவங்க நோ சொல்ல தான் சான்ஸ் அதிகம்.. அப்படி அவங்க சொல்லிட்டால் உங்களுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கும் தானே.. அது தான்…”
என்று அவள் சொல்ல,
“சரி.. நீ சும்மா கேட்டு பார்.. அப்படி நோ சொல்லிட்டால் இவங்களை சமாளிச்சு சரி பண்றது ஏன் பொறுப்பு.. உனக்கு ஒரு சங்கடமும் இல்லாம நான் பார்த்துகிறேன்.. ஓகே..”
என அவன் அழுத்தமாய் சொன்னது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக தான் இருந்தது.
“தேங்க்ஸ் கெளதம்..” என புன்னகைக்க,
“ஹே… ச்சில்..” என்று கைமுஷ்டியை நீட்டி ஃபிஸ்ட் பம்ப் கொடுக்க அதோடு அந்த பிரச்சனையை தற்காலிகமாய் தள்ளி வைத்துவோடு அன்றைய நிகழ்ச்சியை பார்த்தனர்.