அத்தியாயம் 2
வாரந்தோறும் ஞாயிறு இரவானால் மூன்று குடும்பமும் யாராவது ஒருவரின் வீட்டில் ஒன்றாகக் கூடி உணவுண்டு பொழுதைக் கழிப்பது அவர்கள் வழக்கமாகும். அன்று இரவும் என்றும் போல் மூன்று குடும்பங்களும் ரகுவின் வீட்டின் டைனிங் அறையில் குழுமியிருந்தது.
தாய்மார்கள் அனைவருக்கும் பரிமாற, தந்தைமார்கள் அனைவரும் தங்கள் தொழிலைப் பற்றிப் பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருக்க, பெரியவர்கள் மூவரும் நாளை கேரளாவில் நடக்கப்போகும் டெண்டர் சம்பந்தமாக அதன் ஏற்பாடுகளைப் பற்றி சில விஷயங்களை உரையாடிக் கொண்டிருந்தனர்.
அட, நம்ம வாண்டுங்க என்ன இவ்ளோ டென்ஷனா உட்கார்ந்திருக்காங்க அதுவும் வாசலை வேற பார்த்துட்டே உட்கார்ந்திருக்காங்க.. சரி வாங்க அவங்க இப்போ என்ன கூத்து பண்ணி வச்சிருக்காங்கன்னு போய் பார்ப்போம்.
“டேய் எருமை என்னடா இன்னும் ஆளை காணோம்” என தான்வி மாதேஷின் காதைக் கடிக்க,
“அட்ரெஸ் கரெக்டா தான கொடுத்துட்டு வந்திங்க??” என இலக்கியாவிடம் சந்தேகமாக நவ்யா கேட்டாள்.
“அதெல்லாம் கரெக்ட் தான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க பொறுங்க டி குறைப்பிரசவத்துல பிறந்த கொரில்லாக்களா” என மாதேஷ் பொதுவாக பதிலளிக்க,
கோவத்தில் அவனின் இருபக்கமும் அமர்ந்திருந்த நவ்யாவும், தானுவும் அவனின் கால்களை ஓங்கி மிதித்து விட, “அம்மாஆஆஆஆஆஆ!!!!” என்று அலறினான் மேடி.
அவனின் அலறலில் அங்கிருந்த அனைவரின் கவனமும் அவன் மேல் திரும்ப, என்னாயிற்று என அனைவரும் அவனை கேள்வியாய் நோக்க, ஜானகி தான் பதறிப்போய் , “என்னாச்சு மாது கண்ணா?? எதுக்கு இப்படி கத்துன?? எதுலயாச்சும் காரம் அதிகம் ஆய்ருச்சா?? இல்லையே எல்லாம் சரியா தான போட்டோம்” என தானே கேள்வி கேட்டு பதிலையும் அவரே கூறிக் கொண்டார்.
‘ஹிஹி’ என எல்லாரையும் பார்த்து சிரித்த மேடி எப்படி சமாளிக்க என யோசித்துக்கொண்டே , “ஹான்!!! பரோட்டா ரொம்ப சூப்பரா இருக்கு அதான் இன்னும் ரெண்டு போடுங்கன்னு சொல்ல கூப்பிட்டேன் மா” என கேவலமாக அவன் சமாளிக்க,
அங்கிருந்த அனைவரும் அவனை ஒரு அற்பப்பார்வை பார்த்து வைத்தனர்.
ரெங்கநாதன் ஒரு படி மேலே போய், ” ஏண்டா சோத்துமூட்டை அதான் ஹாட்பாக்ஸ்ல இருந்த மொத்த பரோட்டாவையும் உன் தட்டுல கொட்டி வச்சிருக்கியே, அதை சாப்பிட்டு முடிக்கிறதுக்கு முன்னாடியே உனக்கு அடுத்த ரவுண்டுக்கு பரோட்டா கேட்குதோ… இந்த ரேஞ்ச்லயே நீ தின்னுட்டு போன சொத்து அழிஞ்சு திருவோட்டோட தெருவுல குடும்பமா பிச்சை தான் டா எடுக்கனும் .. தடிமாடு தடிமாடு.. ” என திட்டத் துவங்க,
“சாப்பிடும் போது பிள்ளையைத் திட்டாதிங்க!!” என ஜானகி அகில உலக அம்மாக்களின் ஆஸ்தான டயலாக்கை எடுத்துவிட,
‘எல்லாம் திட்டி முடிச்ச பின்னாடி இதை நீ சொன்னா என்ன சொல்லாட்டி என்ன மம்மிஈஈஈ!!! சரி நமக்கு சோறு தான் முக்கியம்’ என மனதிற்குள் கவுன்டர் கொடுத்துக் கொண்டு மேடி தன் தட்டைக் காலியாக்கும் பணியை செவ்வனே செய்யத் துவங்கினான்.
“இது எல்லாம் என்ன ஜென்மமோ!!” என முணுமுணுத்துவிட்டு ரெங்கநாதன் சாப்பிடத் துவங்க,
ஜெயராம் அப்போது தான் யோசனை வந்தவராக வாண்டுகளைப் பார்த்து, “ஆமா நாளைக்குத் தான நீங்க IV(Industrial Visit) கெளம்புறீங்க?? எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீங்களா?? நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புறீங்க??” என நம் வாண்டுகளைப் பார்த்து வரிசையாகத் தன் கேள்விகளைத் தொடுக்க,
அப்போது வாசலில் காலிங்க்பெல் சப்தம் அவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நேரத்தில் யார் வந்திருப்பது என்று பார்க்க ராஜேஸ்வரி வெளியில் செல்ல, சிறியவர்கள் நால்வரும் ஓர் அர்த்தமுள்ள பார்வையை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.
அது சரியாக அவர்களின் உடன்பிறப்புகளின் கண்களுக்கு புலப்பட்டுவிட, ‘ஏதோ ஏழரையை இழுத்து விடப்போகுதுங்க உஷாரா இருக்கனும்’ என அவர்களுக்குள் அலாரம் அடித்தது.
வாசலில் ஓர் அழகான பெண்ணொருத்தி நின்றிருக்க, யாரிவள் என்று குழப்பமுற்ற ராஜேஸ்வரி , “யாரும்மா நீ?? உனக்கு யார் வேண்டும்??” என அவளிடம் வினவ,
அவளோ அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் அவரைத் தாண்டி வீட்டின் உள்ளே நுழைந்தாள்,
அதில் மேலும் குழப்பமுற்ற ராஜி, அவள் பின்னாலே ஓடியவர், “இந்தாம்மா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு வீட்டுக்குள்ள போய்க்கிட்டு இருக்க யாரும்மா நீ??” எனக் கேட்க,
அவளோ பதிலேதும் பேசாமல் அங்கு கூடியிருந்த அனைவரையும் பார்வையால் சுற்றி வந்தாள்.
யாரிவள் என பெற்றோர்களும் நம்ம ரகு அண்ட் குழுவும் குழம்பி நிற்க, நம் வாண்டுகளோ அவளைக் கண்டு மகிழ்ச்சியில் சூரியனைக் கன்ட தாமரையாய் மலர்ந்த முகத்தை மறைக்க போராட, அதைக் கண்ட நம் பெரியவர்கள் குழுவிற்கு சந்தேகமே இல்லாமல் இவர்கள் கண்டிப்பாக இவள் தங்களை வைத்து ஏதோ குழப்பம் செய்ய போகிறாள் என மனம் கூக்குரலிட அடுத்து என்ன என்பதைப் போல் அங்கு நடப்பதை கவனிக்கத் தொடங்கினர்.
சிறியவர்களோ இன்றோடு தங்கள் உடன்பிறப்புகளின் மானம் கப்பலேறிவிடும் அடுத்து வீட்டில் நம் ராஜ்ஜியம் தான் என்கிற மிதப்பில் வானில் பறந்து கொண்டிருக்க,
அதைத் தரைமட்டம் ஆக்குவதைப் போல் அந்தப் பெண் நேராக ஓடி வந்து மேடியின் சட்டைக் காலரைப் பற்றியவள், “ஏண்டா பொறுக்கி நாயே!! என்னை லவ் பண்ணி ஏமாத்தி என் வயித்துல ஒரு புள்ளையும் கொடுத்துட்டு இப்போ என்னைக் வெட்டி விடலாம்னு நினைச்சா உன்னை விட்டிருவேன்னு நினைச்சியா???” என ஆங்காரமாகக் கேட்க,
சிறியவர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்து நின்றனர்.
மேடி சித்தம் கலங்கியவனைப் போல் பேய் முழி முழித்துக் கொண்டு நிற்க, அந்தப்பெண்ணோ அவனைப் போட்டு உலுக்கி எடுத்துக் கொண்டு இருந்தாள்.
அவர்களின் முகத்தைப் பார்த்த அவர்களின் எதிரிகளான உடன்பிறப்புகளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர, வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தனர்.
அதைக் கண்டு அதிர்ச்சியில் சிலையாகியிருந்த தான்விக்கு உணர்ச்சிகள் வர, மேடியைப் பிடித்திருந்த அந்தப் பெண்ணைப் பிடித்து தள்ளி விட்டவள், “ஹேய் யாருடி நீ?? நீ பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வந்து என்னென்னமோ உளறிட்டு இருக்க??” என அவள் கேட்க,
அவளோ அதைக்கண்டு அசராமல் தான்வியின் முடியைக் கொத்தாகப் பிடித்து, “வாடி என் சக்காளத்தி!! நீ தான அவனோட கேர்ள் பெஸ்ட்டி .. உன்னால தாண்டி எனக்கு இந்த நிலமை.. இன்னைக்கு எனக்கு நியாயம் கிடைக்காம நான் இங்க இருந்து போக மாட்டேன் டி..” என கத்தியவள் அவளோடு சண்டை போடத் துவங்க,
தான்வியின் கோபத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும் அவளும் அவளோடு சேர்ந்து உருண்டு பிரண்டு சண்டை போட, சற்று நேரத்திற்கெல்லாம் அந்த வீடு கோயம்பேடு மார்க்கெட்டைப் போல் ரணகளம் ஆக, தான்வி,இலக்கியா,நவ்யா மூவரும் அந்தப் பெண்ணோடு அடித்துப் பிடித்து உருண்டு கொண்டிருந்தனர்.
அவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு தடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போக, எக்கேடோ கெட்டொழியுங்கள் என விட்டுவிட்டு வேடிக்க பார்க்கத் தொடங்கி விட்டனர்.
மூவரையும் சமாளிக்க முடியாமல் திணறிய அந்தப்பெண் ஒரு கட்டத்தில் , “யோவ் நிறுத்துங்கயா?? ஒரு பொம்பளை கூட சண்டை போட தான காசு கொடுத்தீங்க இப்போ இன்னாத்துக்கு மூனு பேரை கூட சண்டை போட வுடுறீங்க?? இதுக்கு தனி பேமென்ட் கொடுக்கனும் பார்த்துக்கோங்க” என அந்தப்பெண் தன்னிடம் இந்த நாடகத்தைப் போடச் சொல்லி காசு கொடுத்து புக் செய்ய வந்த மேடி மற்றும் இலக்கியாவைக் பார்த்துக் கூற,
“ச்சை நீங்கெல்லாம் பிள்ளைங்க தானா??” என்கிற ரீதியில் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை முறைத்துக் கொண்டிருக்க, அவர்களின் உடன்பிறப்புகளோ சுவாரசியமாக அடுத்து என்ன நடக்கப்போகின்றது என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேடியோ ஏற்கனவே அவள் ஆளை மாத்தி சொதப்பி காசு கொடுத்த தன் மானத்தையே வாங்கிவிட்டாள் என கடுப்பில் இருந்தவன் அவள் மேலும் பணம் கேட்கவும் சூழ்நிலையை கருத்தில்கொள்ளாது கோவமாக அவளிடம் சென்றவன், “ஹேய் உன்கிட்ட நான் அவன் ஏமாத்திட்டான்னு அவன் கூட வந்து சண்டை போடுன்னு காசு கொடுத்தா நீ என்கிட்ட காசை வாங்கிட்டு என்னையே பழிவாங்குறியா?? உன்னை சும்மா விட மாட்டேன்” என ரகுவை சுட்டிக்காட்டி அவன் உளறிவிட, பெற்றோர்களின் பார்வையில் உஷ்ணம் இன்னும் அதிகமானது.
அதைக் கண்ட நவ்யா அவன் கையைச் சுரண்ட, அதைத் தட்டி விட்டவன் , ” ஓவியாவை அடிச்சு மண்டையை உடைன்னு சொன்னா என்னோட ப்ரெண்ட்ஸ் கூட சண்டை போட்டுட்டு அதுக்கு என்கிட்ட எக்ஸ்ட்ரா பணம் வேற கேட்குறியா?? சல்லி பைசா கிடையாது.. மரியாதையா வெளிய போறியா இல்லை போலிசை கூப்பிடவா??” என அவன் மிரட்ட,
அதில் சிலிர்த்தெழுந்த அந்தப்பெண், “டேய் கூமுட்டை நீ எனக்கு அனுப்புன போட்டவுல நீயும் இந்த மூனு குரங்குங்களும் தான் இழிச்சவாயனாட்டம் ஈன்னு இழிச்சுட்டு இருந்தீங்க… உன்னையை கேவலபடுத்த நீயே காசு கொடுத்து ஆள் புக் பண்றியேன்னு திரும்பி போன் பண்ணா நீ எடுக்கவே இல்லை..ஒருவேளை வூட்டுல உனக்கு புடிக்காத பொண்ணை எதும் கட்டிவைக்கப் பார்க்குறாங்களோ அதான் இப்படி உனக்கு நீயே ஆப்பு வச்சுக்க அமௌன்ட் கொடுத்து ஆள் செட் பண்றியோன்னு நான் நினைச்சு நீ கொடுத்த காசுக்கு என் வேலையை தரமா செஞ்சுட்டேன்.. இப்போ வந்து அந்த நெட்டைக்கொக்கை அசிங்கபடுத்த சொன்னேன்னு அழுதுபொரண்டா நான் என்ன பண்ண? போட்டா தப்பா அனுப்புனது உன் தப்பு.. இப்போ நீ மிச்ச பேமென்டை நாளைக்குள்ள எனக்கு செட்டில் பண்ணலை மூஞ்சை கிழிச்சிருவேன் பாத்துக்க வரட்டா!!” என மிரட்டிவிட்டு அவள் சென்றுவிட,
‘என்னது போட்டோ மாறிப்போச்சா!!’ என சிறியவர்கள் நால்வரும் அதிர்ச்சியாக, அப்போது தான் இந்த பெண்ணிற்கு கொடுக்க ரகு, சர்வா, ஓவியா இருந்த படத்தை எடுத்துச் செல்லும் போது, தான்வி அவள் அண்ணனை வெறுப்பேற்ற அவர்கள் வீட்டின் கூடத்தில் மாட்டிவைக்க அவர்கள் நால்வரின் புகைப்படத்தை ஃப்ரேம் போட்டு கொண்டு வரச்சொல்லி மேடியிடம் கொடுத்தது நியாபகத்திற்கு வந்தது.
இப்போது போட்டோ எப்படி மாறியிருக்கும் எனத் தெரிய மூதேவி சாரி சாரி மூன்று தேவிகளும் மேடியை முறைக்க,
அதற்குள் அவர்கள் நால்வரையுமே மற்றவர்கள் அனைவரும் ரவுண்டு கட்டினர்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என அறிந்து கொண்ட நால்வரும் , “ஸ்டார்ட் ம்யூசிக்” என சரண்டர் ஆகிவிட, அடுது அவர்களின் நிலமை என்னவென்பதை நாங்கள் கூறவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்..