மதுவின் செய்கையில் திகைத்து அதிர்ந்து திரும்பினான் ராஜா..அவள் கைகளை விலக்கி, அவள் முகம் பார்த்தான்..அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தவள்..அவன் மார்பில் முகம் புதைத்து, அணைத்துக் கொண்டாள்..
“மதி..”
“…”
“என்னம்மா??தனியா இருக்க பயமா இருக்கா??”
“….”
“பேச்சியை வேணா, உன் அறையிலே கீழ படுக்க சொல்லு..”
“…”
“என்ன மதி..??ஒண்ணும் பேசமாட்டேங்குற..”
“நான், இன்னிக்கு இங்க தான் தூங்க போறேன்..”
மெல்லிய குரலில், ஆனால் உறுதியோடு கூறினாள் மது..
“மதி..??”
“ஏன், நான் இங்க தூங்குனா என்ன??நான் உங்க மனைவி தானே..இதிலென்ன தப்பு..??”
‘இவளிடம் பேசி புரிய வைக்க முடியாது..ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லுவாள்..’
“சரி போ..போய் பெட்ல தூங்கு..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..நான் முடிச்சுட்டு தூங்குறேன்..”
கீழே பாய் விரித்து தூங்கலாம் என்னும் முடிவில், அதை கூறாமல் சொன்னான்..
“வேலை எல்லாம் அப்புறம் பார்க்கலாம்..நீங்களும் வாங்க..”
“ச்சு.. என்ன மதி..??”
சலிப்புடன் கூறினான்..
“அத்தை மகனோ, மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ!!
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட,
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு,
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு!!
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா..!!”
அந்த பாடலின் மூலம், அவள் விருப்பத்தை கூறினாள்..
அவனுக்கு அது புரிந்தது..
அவள் கைகளின் நடுக்கம், அவள் பயத்தையும் கூறியது..
‘ஏன் இப்படி செய்யுறா??கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டா..’
“மதி..”
அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களுக்குள் உற்று பார்த்தவன்,
“என்ன அவசரம் டா இதுக்கு??கல்யாணம் தான், யாருக்கும் தெரியாம அவசரமா நடந்து போச்சு..
இது, முறை படி எல்லோருக்கும் நம்ம கல்யாணத்தை சொல்லி,அப்புறம் பெரியவங்க ஆசிர்வாதத்தோடு நடத்தலாம்..கொஞ்சம் பொறுமையா இரு..”
அவன் பார்வையை தவிர்த்தவள்,
“நாம கணவன் மனைவி தானே..??கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு..இதுவே லேட் தான்..”
“அதான் நான் சொல்லுறேன்..ஒரு மாசம் பொறுமையா இருந்த, இப்போ என்ன அவசரம் உனக்கு??”
“இப்போ அவசியம் வந்துடுச்சு..”
எங்கோ வெறித்துக் கொண்டு கூறினாள்..
“என்ன சொல்லுற??”
“ச்சு.. எல்லாத்துக்கும் விளக்கம் கேட்காதீங்க வரு..”
சலிப்பாய் கூறினாள்..
‘கல்யாணம் போல, இதுவும் இவள் விருப்பம் போல நடக்கும் வரை விட மாட்டாள்..
இங்கு உள்ள மாடியில் இருந்து குதிப்பேன் என்று மிரட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
காரணமும் சொல்ல மாட்டாள்..
சரி, என் மனைவி தானே??வீண் விவாதம் எதற்கு??’
‘ஆனாலும், அநியாயத்திற்கு இப்படி தலையாட்டி பொம்மை ஆகி விட்டாய் ராஜா..’
மனதின் கேலியில் புன்முறுவல் தோன்ற,அவளை நெருங்கி கைகளில் ஏந்திக் கொண்டான்..
பெரிய வாக்குவாதத்தை எதிர்பார்த்து வந்தவள், அவன் செய்கையில் வியந்து, அவன் முகம் பார்த்தாள்..
அவன் முகத்தில் இருந்த புன்னகை, இவளையும் தொற்றிக் கொண்டது..
அங்கு ஒரு அழகிய சங்கமம் அரங்கேறியது..
கூடலின் முடிவில், அவன் மார்பில் தலை சாய்த்து படுத்திருந்தாள் மது..
அவன் முகம் பார்த்தாள், அவன் தீவிர சிந்தனையில் இருந்தான்..
“என்னாச்சு வரு??”
“மாமா, எப்போ வராங்க மதி??”
“என்ன திடீருன்னு??”
“சொல்லு..”
“ஒரு ரெண்டு மாசம் ஆகும்..”
“ஹ்ம்ம்..சீக்கிரம், நம்ம கல்யாணம் ஊர் அறிய நடக்கனும்..”
“அதுகென்ன அவசரம் வரு.??.”
“அவசரம் வந்துட கூடாதுன்னு தான் சொல்லுறேன்..
ஏதோ தப்பு செய்யுற மாதிரி தோணுது..அதுவும், ஊருக்கு பெரிய மனுஷன் இடத்துல இருந்து கிட்டு..”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல வரு, குழப்பிக்காதிங்க..உங்க குடும்ப வழக்கப்படி, உங்க குலதெய்வம் முன்னால தானே நமக்கு கல்யாணம் ஆச்சு..
அப்போ எதுவும் தப்பில்லை..”
அவள் பேச்சில் சற்று சமாதானம் ஆனான்..
மறுநாள் அவன் எழும் போது, அவள் அருகில் இல்லை..
அவள் அறைக்கு சென்றிருந்தாள்..
இவன் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு, அவள் அறைக்கு சென்றான்..
அவள் குளியல் அறையில் இருந்தாள்..
அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான்..
அருகில் இருந்த மேஜையில், அவள் அலைபேசி இருந்தது..அதில் செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது..
திரும்பி பார்த்தான்..பின் அதை எடுத்து, உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தான்..ஆராயும் நோக்கோடு அல்ல.. மனைவியின் அலைபேசி என்னும் உரிமையோடு..
அதில் சில டிக் டாக் வீடியோக்கள் இருந்தது..இவள் நடித்த வீடியோக்கள் அது..அனைத்திலும், ஒரு பெண் இவளோடு சேர்ந்து நடித்திருந்தாள்.. பெரும்பாலும், நகைச்சுவை வசனங்கள் பேசி இருவரும் நடித்திருந்தார்கள்..
அவர்கள் முக பாவனைகள் சிரிப்பை வரவழைத்தது..
ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..
அப்பொழுது குளியல் அறையில் இருந்து வெளியே வந்தாள் மது..
இவன் கையில் அவள் அலைபேசியை பார்த்து துணுக்குற்றாலும், அவன் முக மலர்ச்சியை பார்த்து ஆறுதல் அடைந்து, அருகில் வந்து நெருங்கி, நாற்காலியின் கை பிடியில் அமர்ந்தாள்..
அவன் தோளில் கையை வைத்துக் கொண்டு,
“என்ன வரு பார்க்குறிங்க??”
“நீ, இவ்ளோ சேட்டை பண்ணுவியா??”
அந்த வீடியோவை காட்டி கேட்டான்..
“அதெல்லாம் சும்மா..உங்களை யாரு இதெல்லாம் பார்க்க சொன்னா??”
அவன் கையில் இருப்பதை பறிக்க போனாள்..
அதை லாவகமாய் தடுத்தவன்..
“ஆமாம் ,இந்த பொண்ணு யாரு..??”
“அவ என் பெஸ்ட் பிரெண்ட், நலம் விரும்பி,எனக்கு எல்லாமே அவ தான்..”
உணர்ச்சி வேகத்தில் அவள் கண்கள் கலங்கியது..
“ஏய்,என்ன ஆச்சு மதி..??”
அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டு கேட்டான்..
“ஒண்ணும் இல்ல வரு..அவளும் நானும் ஸ்கூல்ல ஒரே கிளாஸ்..காலேஜ்ஜும் ஒண்ணா சேர ஆசைப்பட்டோம், பட் முடியல. வேற வேற காலேஜ்..ஆனா, படிப்பு ரீலேட்டட் தான்..
ஒரே இடத்துல தான்…”
பேசிக் கொண்டே வந்தவள், சட்டென நிறுத்தினாள்..
“என்ன படிச்ச??”
அவன் கேள்வியில் சற்று சுதாரித்து,
“பிஇ..”
அவளை நம்பாத பார்வை பார்த்தவன்,அடுத்து அவள் கேல்லெரியை பார்த்துக் கொண்டு வந்தான்..
அவள் தோழியோடு எடுத்த புகைப்படங்கள்.தந்தையோடு எடுத்தது.. அவளின் தனி படங்கள்,இப்படி நிறைய இருந்தது..பார்த்துக் கொண்டே வந்தவன், ஒரு இடத்தில் சட்டென பார்வையில் திகைப்பை காட்டினான்..ஏனெனில், அது அவன் புகைப்படம்..
புன்னகை முகமாய், எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தான், அந்த புகைப்படத்தில்..
அவளும் சற்று திகைத்துப் போனாள்..
“ஏய், இந்த போட்டோ எப்படி வந்துச்சு உன் கிட்ட??”
“அ.. அது..இங்க உங்க ஆல்பம்ல இருந்துச்சு..அகல் கொடுத்தா, அப்போ போட்டோ எடுத்தேன்..”
மறுப்பாய் தலை அசைத்தவன்,
“ஹ்ஹ்ம்..வாய்ப்பே இல்லை.இந்த சட்டை போட்டு, என் கிட்ட போட்டோவே இல்ல..”
“ச்சு.. அப்புறம் என் கிட்ட எப்படி வரும்..??கொடுங்க என் போனை..”
போனை பறிக்க முயன்றாள்..
அதை தடுத்தவன்..
“இந்த சட்டையில, இடது பக்கம் கிரீடம் எம்பிராய்டரி போட்டு இருக்கு பாரு..இது எனக்கு, அகல் அவ எம்பிராய்டரி கத்துக்கிட்ட புதுசுல போட்டு தந்தா.. அதோட கலர் பிடிக்காம, நான் போடவே மாட்டேன்..ஒரு தடவை அவ கம்பேல் பண்ணி, எங்கயோ போட்டுட்டு போனேன்..
அதுக்கு பிறகு துவைக்கும் போது, பேச்சி சாயம் ஒட்டுற துணி கூட ஊற வச்சுட்டா..
சட்டை வீணா போயிடுச்சு..
அகல் அவ கூட ஒரே சண்டை, அதுக்கு
அப்புறம், நான் அதை போடுறதே இல்ல..
அதை, ஒரு இடத்துக்கு தான் போட்டுட்டு போய் இருக்கேன்..”
அது எங்கு என்று யோசிக்க ஆரம்பித்தான்..
அவனை யோசிக்க விடுவது ஆபத்து என்று,
“இதெல்லாம் எதுக்கு இப்போ..??”
“இல்ல மா..இதுல என் கிட்ட போட்டோவே இல்ல..ராஜான்னு பேருக்கு ஏத்த மாதிரி டிசைன் போடுறேன்னு, இதை போட்டா.ஆனா போட்டோ எடுக்கல…”
“சரி, சரி, யாரோ எடுத்துருப்பாங்க.. விடுங்க..இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி..??இந்த ஷர்ட் நல்லா தான் இருக்கு..இதுக்கு என்ன குறை..??ஸ்மார்ட் அஹ் இருக்கீங்க..அதான், இதுல போட்டோ எடுத்தேன்..”
“என்ன??”
“உங்க ஆல்பத்துல இருந்து எடுத்தேன்னு சொன்னேன்..”
“எந்த ஆல்பம் சொல்லு..??”
“அதெல்லாம் தெரியாது..என் போனை கொடுங்க..”
“இல்ல,இந்த சட்டை போட்டு, ஒரு மூணு நாலு வருஷம் இருக்கும்..”
“ஆண்டவா, அதை விடுங்க வரு..”
அவனிடம் பேச்சை மாற்றி, வேறு விஷயங்கள் பேசினாள்..
அந்த ஒரு வார காலமும், ஒருவர் மற்றவர் அறையில் என்று, இனிமையாய் அவர்கள் பொழுது கழிந்தது..புதுமண தம்பதிகளாய்..
மரகதம் வரும் வரை..அவர் வந்த பின்பு, முன் போல பார்வையில் பேசிக் கொண்டார்கள்..
அகலின் மாமியாரை வீட்டிற்கு கூட்டி வந்து விட்டாலும்,கூட இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, அவள் இங்கு வரவில்லை..
ஒரு வாரம் சென்றது..
அன்று மகிழ்ச்சியாய் வீட்டிற்கு வந்தான் ராஜா..
“அம்மா,நாம ஹாஸ்பிடல் கட்ட அப்ரூவல் கிடைச்சிருக்கு..இன்னிக்கு தான் ஆர்டர் வந்துச்சு..”
“சந்தோசம் லே..ரொம்ப நாளா காத்திருந்த, இப்போ நடந்துருக்கு அந்த நல்ல விஷயம்..”
“என்ன அத்தை??”
“நம்ம ஊருல ஆஸ்பத்திரி இல்ல..அவசரத்துக்கு, டவுனுக்கு போக வேண்டிய கட்டாயம்..அதான், இங்க இலவச ஆஸ்பத்திரி கட்ட அரசாங்கத்து கிட்ட இருந்து அனுமதிக்கு காத்திருந்தான்..இப்போ கிடைச்சுருச்சு..”
“வாவ்!!சூப்பர்..வாழ்த்துக்கள்..”
அவன் புன்னகையோடு, அவள் வாழ்த்தை ஏற்றுக் கொண்டான்..
அதன் பிறகு நல்ல நாள் பார்க்கப்பட்டு, பூமி பூஜை போட ஏற்பாடு செய்ய பட்டது..
பூமி பூஜை போடும் அன்று அனைவரும் கிளம்பி, அந்த இடத்துக்கு சென்றார்கள்..
ராஜாவும் பாண்டியும் வேலையில் மும்முரமாய் இருந்தார்கள்..
அகல், சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, நின்று கொண்டிருந்தாள்..
மரகதம், அகல்,மது எல்லாம் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்..
அய்யர் பூஜை வேலைகள் ஆரம்பிக்க ஆயத்தமானர்..
சில சொந்தக்காரர்கள் அழைக்க பட்டிருந்தார்கள்..
ஐயர்,
“முதல் செங்கல் எடுத்து வைக்க, யாராவது கன்னி பெண்ணை வர சொல்லுங்க..
அப்போ தான் மளமளன்னு கட்டடம் வளரும்..”
மரகதம் திரும்பி மதுவை பார்த்தார்..
“கண்ணு,நீ போய் எடுத்து வை..”
மதுவுக்கு திக் என்றது..
“என்ன கண்ணு யோசிக்குற..போ..”
“இல்ல அத்தை..”
அவர் காதில் மெல்ல முணுமுணுத்து விட்டு,
“வீட்டுக்கு போறேன் அத்தை.. எப்படி சொல்லன்னு தெரியாம நின்னேன்..வேற யாரையாச்சும் செய்ய சொல்லுங்க..”
சொல்லிவிட்டு, வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..
தூரத்தில் இருந்து அதை பார்த்த ராஜா
‘ஏன் போறா??’
பின்னால் சென்று விசாரிக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால், மெதுவாய் இவர்கள் அருகில் வந்து,
“என்ன ஆச்சு ம்மா.??. மது போறா..”
“அவளுக்கு உடம்பு சரி இல்லையாம்..”
“திடீருன்னு என்ன??”
“முடியாம வாரது சொல்லிட்டா வரும்..நீ போய் வேலையை பாரு லே..”
அன்னையின் சிடுசிடுப்பில், வேலையை பார்க்க சென்றான்..
அவர் சொந்தத்தில் இருந்த பத்து வயது சிறுமி ஒருத்தி, முதல் கல் எடுத்து வைக்க, பூஜை சிறப்பாய் ஆரம்பித்து முடிந்து, கட்டிட வேலை தொடங்கியது..
வீட்டிற்கு வந்ததும், வேகமாய் மாடிக்கு சென்ற ராஜா,
“என்ன ஆச்சு மதி..??”
“ஒண்ணும் இல்லியே..”
“பின்ன ஏன், பாதியில வந்துட்ட..??”
“அத்தை என்னை, முதல் கல் எடுத்து வைக்க சொன்னாங்க..”
“ஓ…”
“அதான், பொய் சொல்லிட்டு வந்துட்டேன்..”
“அம்மா கிட்ட சொல்லிடுவோம் மதி..எதுக்கு மறைக்கணும்..??என்ன திட்டுவாங்க.. சொன்னா புரிஞ்சுக்குவாங்க..??”
“இல்ல,இப்போ வேண்டாம்..நானே சொல்லுறேன். அப்போ சொல்லுவோம்..”
“ச்சு போடி..நீ ஒரு இம்சை..”
கோபமாய் சொல்லிவிட்டு சென்றான்..
கண் கலங்க அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்..
ஒன்றரை மாதம் கடந்திருந்தது..
“அம்மா, இன்னும் பத்து நாளுல வடக்குல ஒரு சின்ன கிராமத்துக்கு போனும்..ஒரு பதினைஞ்சு இருபது நாள் ஆகும் வர..”
“என்னடா, இவ்ளோ நாள் இங்கயே இருக்கானே அதிசயமான்னு பார்த்தேன்..ஆரம்பிச்சுட்டியா, உன் விவசாய தொண்டை..”
“போன மாநாட்டுலேயே அந்த ஊர் தலைவர் கிட்ட, அவர் கூப்பிடும் போது வரேன்னு சொல்லி இருந்தேன் ம்மா..இப்போ தான் எல்லா ஏற்பாடும் செஞ்சு இருக்காங்க.. அடிப்படை வசதி கூட இல்லாத கிராமம் ம்மா..
விவசாய சந்தேகம் எல்லாம் யார் கிட்ட கேட்பாங்க..இது ஒரு வகை உதவி ம்மா.. முடிஞ்ச வரை சீக்கிரம் வரேன்..”
“அப்போ, போன் பண்ண முடியாதா??அதுக்கு வசதி இருக்குமா??இருக்காதா??”
“ஏதோ ஒரு இடத்துல டவர் கிடைக்கும்னு, அவர் சொன்னார்..நானே அடிக்கடி பேசுறேன்..உங்களால தான், நினைச்சப்போ பேச முடியாது..”
“என்னவோ போ..”
கூறிவிட்டு சென்றதும்..
மதுவிடம் சொல்ல, அவள் அறைக்கு சென்றான்..
ஜன்னல் புறம் பார்த்துக் கொண்டு நின்றாள்..பின்னால் இருந்து அணைத்தான்..
அவனை திரும்பி பார்க்காமல் அவன் மார்பில் தலை சாய்ந்தாள்..
“என்ன பண்ணுற??”
தலையை மட்டும் மறுப்பாய் அசைத்தாள்..
அவளை திருப்பி, அவள் முகம் பார்த்தான்..
அவள் கண்கள் கலங்கி இருந்தது..
“என்ன ஆச்சு டா..??”
வேகமாய் அவன் கழுத்தை வளைத்து, இதழோடு இதழ் சேர்த்தாள்..
முதலில் திகைத்தவன்,பின் அவள் சமநிலை அடையும் வரை, அமைதி காத்தான்..
சில நொடியில் விலகியவள், முகம் சிவக்க அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
“வரு, ஐ ம் சோ ஹாப்பி டுடே..”
“என்ன விஷயம்னு சொல்லு..நானும் சந்தோசப்படுறேன்..”
“சொல்லுறேன்..அதுக்கு முன்ன, நீங்க ஏதோ சொல்ல வந்திங்க போல..சொல்லுங்க..”
“அது, நான் ஒரு கருத்தரங்குக்கு நார்த் சைடு போகணும்..”
முகம் மாற,
“எப்போ??”
“ஒரு பத்து நாளுல..”
“எப்போ வருவிங்க..??”
“பதினைஞ்சு இருபது நாளுல..”
“ஓ..அவ்ளோ நாள் ஆகுமா..??”
“சீக்கிரம் வந்துடுறேன்..வந்ததும், மாமா கிட்ட பேசி..நம்ம கல்யாணம் தான்..”
அவள் முகத்தில் மாற்றம் இல்லை..
“நீ ஏதோ சொல்ல வந்தியே..”
“அ.. அப்பா இன்னும் ஒரு மாசத்துல வராங்க. அதான் சொல்ல வந்தேன்..”
“ஓ..சூப்பர்..அப்போ வந்ததும், நம்ம கல்யாணம் தான்..”
அவன் முகத்தில் மகிழ்ச்சி..இவள் முகத்தில் யோசனை..
“என்ன டா.. உனக்கு சந்தோசம் இல்லியா??”
“அப்படி எல்லாம் இல்ல வரு..ஹாப்பி தான்..”
அதன் பிறகு பத்து நாட்கள் வேகமாய் விரைந்து, அவன் கிளம்பும் நாளும் வந்தது..
மது அவள் அறைக்குள்ளேயே இருந்தாள்..
சமையல் அறையில் இருந்த மரகதம் பேச்சியிடம்,
“மது கண்ணு சரியாவே சாப்பிட மாட்டேங்குது..அதுக்கு பிடிச்ச மாதிரி சமை..”
“நான், நல்லா தான் மா சமைக்குறேன்..”
“நல்லா வாய் பார்த்துட்டே இருந்தா, அப்படி தான்..கவனமா சமை..”
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே மாடிக்கு வந்தான் ராஜா..
அவள் அறைக்குள் சென்றவன்..
“மதி..”
அவன் அழைப்புக்கு காத்திருந்தது போல,வேகமாய் வந்து அவனை அணைத்துக் கொண்டாள்..
“நான் கிளம்புறேன் டா..”
அதற்கு, அவளிடம் எந்த எதிரொலியும் இல்லை..
அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்..
கண்ணில் நீர் ஆறாய் பெருக, மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்து கதறினாள்.
“என்ன மதி, குழந்தை மாதிரி..சீக்கிரம் வந்துடுவேன்..”
அவளிடம் பதில் இல்லை.. அவளே சமாதானம் ஆகட்டும் என்று, அமைதியாய் அவள் முதுகு வருடினான்..
ஒரு வழியாய் அழுது ஓய்ந்தவள்..
“மிஸ் யூ..”
கூறிவிட்டு, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்..
அவன் முகத்தில் புன்னகை..
“நீங்களும் சொல்லுங்க..”
குழந்தையாய் சிணுங்கினாள்..
“ஓகே..மிஸ் யூ..”
“ச்சு.. கடனேன்னு சொல்லாதீங்க..”
“மதி..மதி..இதென்ன குழந்தை மாதிரி..சொன்னா தானா??”
அவள் தலை பிடித்து விளையாட்டாய் அசைத்தான்..
“க்கும்.. சரி, உங்க ஞாபகமா ஏதாவது கொடுத்துட்டு போங்க..”
“என்ன வேணும்..??”
“நீங்க தான் புரிஞ்சு தரணும்..”
அவள் முகத்தை திருப்பி, கன்னத்தில் முத்தமிட்டான்..
“இதெல்லாம் செல்லாது..”
“அதான், உன்னையே கேட்க சொன்னேன்..”
“உங்க செயின் தாங்க..”
புன்னகையுடன் அதை கழட்டி, அவள் கழுத்தில் போட்டு விட்டான்..
“இப்போ ஹாப்பி யா..”
“ஹ்ம்ம்..லைட் அஹ்..”
அவள் தோரணையில் சிரித்தான்..
வேகமாய் அவன் கழுத்தை வளைத்து, ஒரு மின்னல் முத்தம் இட்டவள்..
“மறந்துட மாட்டீங்க தானே??”
“இது என்ன கேள்வி..??மறக்க கூடிய உறவா, நம்ம உறவு..சரி நேரம் ஆச்சு..கிளம்புறேன்..ஒழுங்கா சாப்பிடு..சரியாய் சாப்பிடலைன்னு, அம்மா வருத்தப்பட்டாங்க..”
தலை அசைத்து விடை கொடுத்தாள்..
அவன் திரும்பி வரும் போது, இவள் தான் அவனை, யார் என்று கேட்க போகிறாள் என்று தெரியாமல், அவனும் சென்றான்..
அவன் சென்ற பதினைந்து நாளில், அவளும் சென்னைக்கு சென்றாள்..