வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 18
மனைவியுடனும் தங்கையுடனும் 5 மணி வரை பேசிக் கொண்டிருந்தவன் அப்பத்தாவும் தந்தையும் வரவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு மில்லுக்கு கிளம்பினான்.. தந்தை இன்று நடந்ததை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என சொல்லியிருக்க, வழுக்கி விழுந்ததால் நெற்றியில் காயம் என மட்டும் சொல்லியவன் தந்தையிடம் மட்டும் ஒருவார்த்தை சொல்லிவிட்டு கிளம்பினான்..
அங்கு பாலா, வேலு இருவரின் அன்னையும் ஹாஸ்பிட்டலையே இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்..
ஒப்பாரி வைத்து ஓஓஓவென அழுது தங்கள் கணவர்களிடம் “அருமை பெருமையா வளர்த்த பிள்ளைய எவனோ இந்த அடி அடிச்சிருக்கான்.. ரெண்டுபேரும் குத்துகல்லு மாதிரி நிற்கிறிங்களே அவங்க யாருன்னு கேட்டு போய் அவனுக தலையை சீவிட்டு வர வேண்டாமா..??”
வாழ்க்கையில் முதல் முறையாக கோதண்டம் தன் மனைவியை ஒரு அறை பளார் என வைத்திருந்தார்.. “மூச் சத்தம் வெளியில வரக் கூடாது.. வாய மூடு.. பிள்ளை வளர்த்திருக்காளாம் பிள்ளை.. வாய தொறந்த கொன்னுருவேன் பார்த்துக்க..” ராமையா ஏற்கனவே போனில் தன்னிடம் விசயத்தை சொல்லியிருந்ததால் மகன் மேல் கொலைவெறியில் இருந்த கோதண்டம்.. அவன் முகத்தைக்கூட பார்க்க விருப்பப் படாமல் மனைவியிடம் ஏதும் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பியிருந்தார்.. பார்வதி கன்னத்தில் வைத்த கையை எடுக்கவில்லை..
கந்தப்பனோ “ஏத்தா ரெண்டுபேரும் இப்படி கத்துறிகளே எங்க.. அண்ணன்கிட்ட கேளுங்க யாரு அடிச்சான்னு.. அவங்க வாயத்திறந்து சொல்லட்டும்.. நான் போய் கேட்கிறேன்.. அவனுக என்ன சொன்னாக வண்டி ஆக்ஸிடென்ட் ஆயிருச்சுன்னுதானே அப்புறமும் ஏன் பிரச்சனையை இன்னும் பெரிசாக்குறிக..??”
“ஏண்டா வண்டி மோதிருச்சுன்னு சொன்னா அவனுக போன வண்டி புதுப் பொண்ணாட்டம் அப்படியே இருக்கேடா.. எல்லாம் நீ பொண்டாட்டின்னு ஒருத்திய இழுத்துட்டு வந்தியே அவ இந்த வீட்ல கால வைச்ச நேரம்.. என்ன சாதியோ..? சனமோ.? ச்சீ ச்சீ பிச்சைக்காரி..”
[the_ad id=”6605″]
மாமியார் பேச பேச கண்ணீர் தளும்பி நிற்கும் தன் மனைவியை பார்த்தவன்..பல்லை கடித்து “ஆத்தாஆஆஆ வாய மூடுங்க.. இவன் யாருக்கிட்ட என்ன வம்பு இழுத்தானோ, அடிச்சது யாருன்னு வெளியில கூட சொல்ல முடியாம கிடக்கான்.. போதும் என் பொண்டாட்டிய கரிச்சு கொட்டுனது வீட்ல என்ன நடந்தாலும் அதுக்கு அவதான் காரணமா.. ஏய் வாடி தன் மனைவியின் கையை பிடித்தவன்
நாங்க இனி வீட்டுக்கே வரலை.. அங்க தோப்பு வீட்லயே இருந்துக்குறோம்.. இனி உங்க பாடு உங்க பெரியமவன் பாடு என்னமோ பண்ணித் தொலைங்க.. அப்பு என்ன பேசாம இருக்கிக.. என்னோட வந்திருங்க..” மனைவியை ஒரு கையிலும் தந்தையை ஒரு கையிலும் பிடித்தவன் ஹாஸ்பிட்டலை விட்டு விறுவிறுவென வெளியேற நாயைவிட கேவலமாக மதிக்கும் பெரிய மகனோடும் மனைவியோடும் இருப்பதை விட தன்னை மதிக்கும் சின்ன மகன், மருமகளோடு இருப்பது மேல் என சுப்பையாவும் கிளம்பியிருந்தார். வேலுவின் தாயோ கணவர் சட்டென தன்னைவிட்டு இப்படி சின்ன மகனோடு போனதை தாங்கமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தார்..
..
அங்கு மில்லில் இருந்த சுந்தருக்கு மனக் கொதிப்பு இன்னும் ஆறவில்லை.. வீட்டில் தர்ஷினி மயங்கி கிடந்ததே அவன் கண்முன்னால் வர எந்த வேலையும் பார்க்காமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் பின்னால் தலைசாய்ந்து கைகளால் நெற்றியை மூடியபடி இருக்க பாலாவுக்கும் வேலுவுக்கும் கொடுத்த அடியில் அவனுக்கு திருப்தியில்லை.. தந்தை தடுக்காவிட்டால் என்ன செய்திருப்பானோ.. எழுந்து நடக்க மீண்டும் அமரவென தன் டென்சனை குறைக்க முயல அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை..தர்ஷினியோடு இருக்கும் போது அவளின் பயத்தை போக்குவதே பெரிதாய் இருந்ததால் தன் டென்ஷனை தனக்குள்ளேயே வைத்திருந்தான்.. அப்படியே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவனுக்கு இப்போதுதான் ஒன்று புரிந்தது..
ரெண்டு மாசம் பழகின தன் மனைவி சும்மா மயங்கி கிடந்தத பார்த்ததுக்கே நமக்கு இவ்வளவு டென்ஷன்னா.. தன்னோட குடும்பத்தையே அப்படி ரத்தவெள்ளத்தில பார்த்த தன் மனைவிக்கு எவ்வளவு டென்ஷனும், ப்ரசரும் இருந்திருக்கும். என்னவோ யாருமே இல்லாத இடத்திற்கு மனைவியை அழைத்து செல்ல வேண்டும்போல, 24 மணி நேரமும் அவளோடு மட்டும் செலவழிக்க மனம் கிடந்து அடித்துக் கொள்ள இதுவரை உடலளவில் அவளை விட்டு தள்ளியிருந்தவனுக்கு இனி அது முடியாது போலிருந்தது.. தன் டென்ஷனின் மருந்து மனைவிதான் என்பதை உணர்ந்தவனால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை..
தந்தையை இரண்டுநாட்கள் இங்கு உள்ளவற்றை பார்த்துக் கொள்ள சொல்லலாம் என முடிவு செய்தவன் அப்போதே கிளம்பிவிட்டான்.. நாளை சௌந்தரம் வீட்டுக்கு வரவும் எங்கயாச்சும் ரெண்டுநாள் வெளியூர் போயிட்டு வரலாமா. எங்கன்னு லட்டுவ கேட்டுக்குவோம்.. வேகமாக வண்டியை வீட்டிற்கு விட வாசலில் மதியம் வந்த டாக்டர் நின்றிருந்தார்..
வேகமாக வந்தவன் “அப்பு யாருக்கு என்னாச்சு..??”
ராமையா தன் மகனை பார்க்கவும் “வந்திட்டிய்யா.. நானே போனடிக்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.. மருமகளுக்குதான்ப்பு சாயங்கலாம் லேசா மேலு சுட்டுச்சு.. இப்ப பார்த்தா நெருப்பா கொதிக்கிது அதான் டாக்டர கூட்டிட்டு வந்து ஒரு ஊசிப் போடச் சொன்னேன்..”
“பார்த்துக்கோங்க சுந்தர் பீவர் குறையாம இருந்தா காலையில வர்றேன்..” தலையாட்டியவன் வேகமாக மனைவியை பார்க்க ஓட.. அவள் கட்டிலில் படுத்திருந்தாள்..
அப்பத்தா கவலையோடு அவள் அருகில் அமர்ந்திருக்க.. அவள் நெற்றியை தொட்டு பார்த்தவன் காய்ச்சல் கடுமையாக இருந்தது..
“சுந்தரி தர்ஷினி என்னமும் சாப்பிட்டாளா..??”
“இல்லண்ணே நீ இருக்கும்போது பால் குடிச்சதுதான்.. இப்பவும் பால் காய்ச்சி வைச்சிருக்கேன்.. கஞ்சி காய்ச்சி வைச்சிருக்கேன்.. எதுவுமே வேணாம் வாந்தி வர்ற மாதிரி இருக்குன்னு சொல்றாங்க..”
தன் உடைமாற்றி கைகால் கழுவி வந்தவன் அவளை எழுப்பி பார்க்க அவள் எழாமல் இருக்கவும் அவளை தூக்கி கெஞ்சி சிறிது கஞ்சியை ஊட்டிவிட்டு மாத்திரையை கொடுத்து படுக்க வைத்தான்..
இரவு அவளை அணைத்து படுத்தவன் அவ்வப்போது ஈரத்துணியை அவள் நெற்றியில் போட்டு எடுத்தான்.. இருந்தாலும் பாதி இரவுக்கு மேல் வயிறு வலியால் துடித்தவளுக்கு இன்னும் காய்ச்சல் அதிகமாக.. பதறி எழுந்தவன் அப்பத்தாவை துணைக்கு வைத்துவிட்டு டாக்டரை கூட்டிவந்து பார்க்கச் சொல்ல அவளை சோதித்தவர்..
“சுந்தர் இவங்களுக்கு அம்மை போட்டிருக்கு..” அவள் உடலில் இருந்த இரண்டு மூன்று கொப்புளங்களை காட்டினார்..
அப்பத்தாவோ “ஆத்தா மாரியாத்தா எம்புள்ள உடம்புல வந்து இறங்கியிருக்கியா.. சீக்கிரமே இறங்கிரு எம் பேத்தி உன்விளையாட்ட எல்லாம் தாங்க மாட்டா..”
[the_ad id=”6605″]
டாக்டரை அனுப்பி வைத்தவன் அந்நேரத்தில் குளித்து சாமிக்கு காணிக்கை எடுத்து வைத்து வேப்பிலையை வீட்டில் சொருகி வேப்பிலையாலே படுக்கை போல செய்து அவளை அதில் படுக்க வைத்தான்.. அவனும் ஹாலிலே படுத்துக் கொள்ள தர்ஷினி இரவெல்லாம் உறங்கவே இல்லை..
காலையில் எழும்போதே அவள் உடலெங்கும் கொப்புளங்கள் வந்திருந்தது.. முகத்திலும் வந்திருக்க தர்ஷினி ஒரே அழுகை.. அவள் இதை இப்போதுதான் முதல்முதலாக பார்க்கிறாள்.. என்னவோ ஏதோவென பயந்து அழ.. அப்பத்தாதான் சமாதானப்படுத்தி அதை பற்றி எடுத்துச் சொன்னார்..
விடியலிலே தங்கையை ஹாஸ்பிட்டலில் இருந்து அழைத்து வந்தவன் குளித்து கோவிலுக்கு சென்று மந்திரித்து திறுநீறு வாங்கி வந்து பூசிவிட்டான்.. ஹாஸ்பிட்டலில் இருந்ததால் தெய்வானை வீட்டை சுத்தப்படுத்த ஆரம்பித்தார்..
அடுத்தடுத்த நாட்களில் சுத்தமாக இருப்பதற்காக யாரும் அனாவசியமாக வரவேண்டாம் என நினைத்தவன் கட்டிட வேலையைக் கூட நிறுத்தி, தர்ஷினியின் பொறுப்பை முழுக்க முழுக்க தன் கைகளில் எடுத்துக் கொண்டான்.. காலை மாலை இருவேளை சற்று நேரம் மட்டும் மில்லில் இருப்பவன் மற்ற நேரமெல்லாம் தர்ஷினியோடுதான்.. வேதனை பொறுக்க முடியாமல் அழும்போது ஒரு தாயாய் இருந்து அரவணைத்துக் கொண்டான்.. வேப்பிலை அரைத்து உடலெங்கும் பூசுவது, மாரியம்மன் தாலாட்டு பாடுவது, அதிக அரிப்பு ஏற்படும்போது அந்த கொப்பளங்களை உடைத்துவிடாமல் தானே அதை தடவிவிட்டு வேப்பிலையால் வருடியபடி இருப்பான்..
அதைவிட சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டவள் சாப்பிடும் அனைத்தும் வாந்திதான்.. அப்படி வாந்தி எடுக்கும்போது அருவருப்ப படாமல் அதை சுத்தப்படுத்துபவன் அதிலும் சிலசமயங்களில் கைகளிலே ஏந்தியிருப்பான்.. பார்க்கும் தர்ஷினிக்கு கண்ணீரை மட்டும் நிறுத்தவே முடியாது., அவளுக்கு பேசக்கூட தெம்பிருக்காது.. அப்போதெல்லமாம் தன் தாயைத்தான் அவனுருவில் கண்டாள்.. கணவனாய் உடல்சார்ந்த வாழ்க்கை ஆரம்பித்திருந்தால்கூட இந்த அளவுக்கு அவனை பிடித்திருக்குமோ என்னவோ இப்போது அவனை எல்லாமாய் பிடித்தது.. தாய், தந்தை என குடும்பத்தின் அனைத்து உறவும் சுந்தர் ஒருவனாய் தெரிய அவன் அவள் அருகில் இருக்கும் போதெல்லாம் அவள் பார்வை அவன் மீது மட்டும்தான்..
பார்த்திருந்த குடும்பத்தாருக்கு சுந்தருக்கு தர்ஷினியின் மேல் இருந்த அன்பும் அக்கரையும் புரிய இவர்களும் தர்ஷினியை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டனர்.. பத்து பதினைந்து நாட்கள் வேகமாக ஓட இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அம்மை இறங்க துவங்கியிருந்தது..
இரண்டு மூன்று நாட்கள் கழித்து அன்றுதான் தண்ணீர் ஊற்றியிருந்தார்கள்.. வேலையை அப்படியே விட்டிருந்தவன் தர்ஷினி இப்போது தேறி வாந்தி நிற்கவும் இந்த இரண்டு நாட்களாக மில்லில் அதிகநேரம் வேலைப்பார்த்தான்.. அன்று அவன் வீட்டிற்கு வரும்போது மனைவியும் தங்கைகளும் அரட்டை அடித்தபடி இருக்க இத்தனை நாட்களுக்கு பிறகு மனைவி முகத்தில் சிரிப்பை பார்க்கிறான்.. குளித்து உடைமாற்றி வந்தவன் அவர்களின் அருகில் அமர்ந்து தங்கை மகனை தூக்கி கொஞ்ச துவங்கினான்..
“டேய் கருப்பா.. என்னடா செல்லக்குட்டி.. தங்க குட்டி.. பட்டுக்குட்டி..” அவனுக்கு முத்தமிட, பார்த்திருந்த தர்ஷினிக்கு அவனை முத்தமிட தோன்றியது.. எப்படி ஒருவனால் இப்படி இருக்க முடியும்.. தன் மம்மிக்கு உடம்பு சரியில்லாமல் போனால் ஹாஸ்பிட்டலுக்கு மட்டும் கூட்டிச் செல்லும் டாடி அதற்குமேல் தன் வேலையை பார்க்க சென்றுவிடுவார்.. ஆனால் இப்படி கூடவே இருந்து இரவெல்லாம் தூங்காமல் பார்த்துக் கொள்ளும் கணவன் .. அவளால் அவன் அன்பை தாங்கமுடியவில்லை..
சௌந்தரமோ “அண்ணே… என் மவன கருப்பன்னு சொல்லாத.. அப்படி ஒன்னும் அவன் கருப்பு இல்ல.. நீ வேணா பாரு நல்லா தேய்ச்சு குளிப்பாட்டி சிவப்பாக்கிருறேன்..”
“ஹாஹாஹாஹா இவன் கருப்பன்தானே.. நீ வேற தேய்ச்சு குளிப்பாட்டுறேன்னு தோல உறிச்சு எடுத்துறாத.. என்னடா கருப்பா..?”
அந்த குட்டி என்ன புரிந்ததோ ஒரு கண்ணை திறந்து தன் உடலை முறுக்கி கைகாலை மேலே தூக்கி தன் மாமனை பார்த்து லேசாக மோகன புன்னகை புரிந்தது..
தர்ஷினியோ அவனை தன் மடிக்கு தரச் சொல்லி அவன் கையோடு தன் கணவன் கையை வைத்து “பாருங்க நீங்க ரெண்டு பேரும் சேம் கலர்தான்.. இவன போய் பிளாக்குன்னு சொல்லாதிக..?”
[the_ad id=”6605″]
“டேய் டேய் குட்டி பயலே.. பத்தியா உன்னோட சேர்த்து என்னையும் என் பொண்டாட்டி கருப்பனாக்கிட்டா.. ஏய் போடி இவன் என்னைவிட கருப்பு..” தன் மனைவியின் தோல் மேல் கைப்போட்டு அணைத்துக்கொள்ள அவளும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
சுந்தரி “அத்தாச்சி இந்தாங்க பால்..?”
“ச்சோ போ சுந்தரி இப்பதான ஜீஸ் குடிச்சேன்.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..”
“அது இருக்கும் அரைமணி நேரம் பாருங்க எவ்வளவு மெலிஞ்சிட்டிங்க.. குடிங்க..” வற்புறுத்த இருவரையும் பார்த்த சுந்தருக்கு மனதிற்குள் அவ்வளவு நிம்மதி..
இந்த பதினைந்து நாட்களில் இருவரும் அந்த அளவுக்கு நெருங்கியிருந்தார்கள்.. சுந்தரி தன் அண்ணிக்கு பார்த்து பார்த்து செய்த விதமே அவளின் அன்பை புரியவைக்க தர்ஷினி சுந்தரியின் உருவில் தன் தம்பியை பார்த்தாள்..
அனைவரும் சாப்பிட்டு அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “அப்பு நாளைக்கு வேலைக்கு ஆளுகள வரச் சொல்லிட்டேன்..?”
“சரிய்யா சிமெண்ட்டு கொஞ்சம் குறைவா இருந்துச்சே..”
“நாளைக்கு வெள்ளன வந்திரும்ப்பு..”
அப்பத்தா “சுந்தரு நாளைக்கழிச்சு என் மக குடும்பம் செத்து வருசம் ஒன்னாகப் போகுதப்பு..” தர்ஷினி சௌந்தரத்தின் மகனை தன் மடியில் போட்டு கொஞ்சிக் கொண்டிருந்தவள் தன் கணவனை ஒரு பார்வை பார்த்து மீண்டும் குனிந்து கொண்டாள்..