மாலை ஆறு மணி நெருங்க ‘தேவா விலாஸ்’ஸுக்குள் உற்சாகமாய் நுழைந்தான் ஆதித்யதேவ். பைக்கை நிறுத்திவிட்டு சாவியை தூக்கிப்போட்டு பிடித்தபடி உள்ளே வந்தவன், “ம்மா!! பால் கொழுக்கட்டை ரெடியா?” என கேட்டுக்கொண்டே வர,
“இதோ வந்துட்டானே, உன் உத்தம புத்திரன்! இடுப்புல தூக்கி வச்சு சோறூட்டு!” என நக்கலாக சொன்னார் ஜெயதேவ். அந்த நேரத்தில் அவர் குரலை அவர்கள் வீட்டில் எதிர்ப்பாராதவன், அந்தரத்தில் பறந்த சாவியை கூட பிடிக்க மறந்து அப்படியே நின்றான்.
அவன் அதிர்ந்து நிற்ப்பதை கண்ட மதுதேவா, அடக்கிய சிரிப்போடு மடியில் இருந்த புத்தகத்துக்குள் தன்னை நுழைத்துக்கொள்ள, கிச்சனில் இருந்து தூக்கி வைத்த முகத்துடன் வெளியே வந்தார் தெய்வானை.
கணவனை ஓரக்கண்ணால் முறைத்துக்கொண்டே, “நீ கிச்சனுக்கு வாடா” என அவர் ஆதியை அழைக்க, “ஆமா ஆமா! தனியா கூட்டிட்டு போய் கொஞ்சு, இன்னும் அவன் நல்லா உருப்படுவான்!” என ஜெயதேவ் மீண்டும் நக்கலாய் சொல்ல, “நீ வாடா” என அவன் கைப்பிடித்து அந்த விசாலமான அடுக்களைக்குள் இட்டு சென்றார் அவனை.
பல வருடங்களாய் அங்கே வேலைக்கு இருக்கும் சோனு ஆன்ட்டி, அந்த நவீன கிச்சனில் பாத்திரங்கள் துலக்கிக்கொண்டிருக்க, இவனை கண்டதும் பாசமாய் புன்னகை புரிந்தார் அவர். பதிலுக்கு புன்னகைத்தவன், சமையல் மேடையில் ஜம்மென ஏறி அமர்ந்து, “என்னவாம்..ம்மா அவருக்கு?” என்றான் பின்னே வந்த அன்னையிடம்.
“என்ன கிரகமோ தெரியல! ஐஞ்சு மணிக்கே வந்து வீட்ல உட்காந்துக்கிட்டு நைநைன்னு உசுரை வாங்கிட்டு இருக்காரு” என்ற தெய்வானையின் வாய் பேசினாலும், கை அதன் போக்கில் பால் கொழுக்கட்டையை கிண்ணத்தில் இட்டுக்கொண்டு இருந்தது.
“சரி விடும்மா! ஒரு நாள் தானே! வந்தா வந்துட்டு போகட்டும்!” என்றான் அவன், பெரிய மனது போல.
“எப்பவும் காலைல போனா ராத்திரி பதினொரு மணி இல்லாம வீட்டுக்கு வர மாட்டாரு! நம்மளும் நிம்மதியா இருந்தோம்! இப்ப பாரு வந்த ஒரு மணி நேரத்துல இருவத்தேழு முறை கூவிட்டாரு, ‘தெய்வா…தெய்வா’ன்னு…” என அவர் அவனுக்கு ஊட்டிக்கொண்டே சடைக்க,
“நீதானே இந்த மனுஷன் தான் வேணும்ன்னு காதலிச்சு ஊரை விட்டே ஓடி வந்த!?”
ஆதி கிண்டலாய் அவர் கடந்த காலத்தை நினைவுப்படுத்த, “அதை வேற நியாபகப்படுத்தாதடா! மனசெல்லாம் வலிக்குது” என சிணுங்கினார் சிறு பிள்ளை போல.
வாய்விட்டே சிரித்தவன், “காதலுக்கு கண் இல்லை, இல்ல மா?” என்று தெய்வாவிடம் கேட்க, “கண்ணு மட்டுமா? அறிவும் தான் இல்லை! இருந்துருந்தா இந்த மனுஷன் கூட வந்துருப்பேனா?” என சிரிக்க,
[the_ad id=”6605″]
“ஆமான்டி, எனக்கு கூட அறிவிருந்தா இப்படி ஒருத்தியை கட்டிருப்பேனா?” என கேட்டபடி உர்ரென்ற முகத்துடன் கிட்சன் வாசலில் நின்றிருந்தார் ஜெயதேவ்.
குரலை கேட்டதுமே, ‘வந்துட்டாருடா! இப்ப நான் பயப்படனுமே’ என ஆதியிடம் முனகிய தெய்வா, பதஷ்டமாய் திரும்புவதை போல திரும்பி, “என்னங்க ஆச்சு? எதாவது வேணுமா?” என பவ்வியமாய் கேட்க, ஆதி முகத்தை திருப்பிக்கொண்டான், சிரிப்பது தெரியக்கூடாதே என!!!
ஜெயதேவ் மனைவியை கோவமாய் பார்த்துக்கொண்டு, “நீ பேசிட்டு இருந்ததெல்லாம் நான் கேட்டுட்டு தான் இங்க நிக்குறேன்! அதனால ரொம்ப பயப்படுறமாறி நடிக்காத!” என்றதும்,
நெஞ்சின் மீது கைவைத்து ‘திக்’கென்ற ஒரு பார்வை பார்த்த தெய்வா, “ஐயோ…! என்னங்க சொல்றீங்க? நான் நடிக்குறேனா? அதுவும் உங்ககிட்டயா? என் கணவர் கிட்டயே நான் நடிக்குறேனா?” என அதிர்ச்சியாய் கேட்டுக்கொண்டே அவர் சுவரை நோக்கி போக, அடுத்து அவர் செய்யப்போவதை யூகித்ததை போல,
“போதும் போதும், சுவத்துல போய் முட்டிக்கிட்டு அதான் சாக்குன்னு நாலு நாளு படுத்துக்கிடக்காத! நான் உன்னை ஒன்னும் கேட்கல, ஆளை விடு”
என வந்த வழியே சென்றுவிட்டார் ஜெயதேவ்.
அவர் போனதும், ‘ஹப்பா! போய்டுச்சு… இந்த மனுஷன்கிட்ட நடிச்சதுக்கு சினிமா பக்கம் போயிருந்தாலும், பெரிய ஹீரோயின் ஆகிருக்கலாம்… எல்லாம் போச்சு’ என தன்போக்கில் புலம்பியவர்,
“ஆதி கண்ணா, பால் கொழுக்கட்டை போதுமா? இல்ல இன்னும் வைக்கவாடா?” என அசால்ட்டாய் அம்பியில் இருந்து ரெமோவுக்கு மாறியிருந்தார் தெய்வானை.
சிறிது நேரத்தில் அம்மாவும் புள்ளையும் ஹாலுக்கு வர, “முதல் நாள் காலேஜ் போயிட்டு வந்துருக்கானே? எப்டி இருந்துச்சு? என்ன நடந்துச்சுன்னு? கேட்க தோணுச்சா உனக்கு?” என தெய்வாவிடம் கேட்ட ஜெயதேவ், பின் ஆதியை முறைத்துக்கொண்டே,
“இல்ல, என்னைக்கும் இல்லாம அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்து உட்காந்துருகாரே! நம்மளாவது வந்து இன்னைக்கு நடந்ததை பத்தி பேசுவோம்ன்னு அவனுக்காது தோணுதா?” என முறைக்க,
“எனக்கு இப்போதான் மூணரை வயசாகுது, ப்ரீ.கே.ஜில சேர்த்துவிட்டுட்டு, ஸ்கூல்ல நடந்த கதையை கேட்க வெயிட் பண்ணிட்டு இருக்காரு! நானும் குச்சி மிட்டாய் தின்னுக்கிட்டே கதை சொல்ல போறேன்” என ஆதி சொன்னதும், ‘களுக்’ என சிரித்துவிட்டாள் மதுதேவா.
சட்டென அவளை திரும்பி முறைத்த ஜெயதேவ், மீண்டும் மகனிடம் திரும்பி, “உனக்கு பிடிக்குதோ இல்லையோ இனி நீ தினம் காலேஜ் போய் தான் ஆகணும்! நான் இனிமே அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்! நீ ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துருக்கணும்… இதான் என் முடிவு” என சொல்லிவிட்டு மாடியேறி தன் அறைக்கு சென்றார்.
அவர் போகும் வரை பொறுத்திருந்தவன், “ம்மா.. எனக்கு அஞ்சு மணிக்கு காலேஜ் முடியுது, ஆனா நான் எட்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன்! அதை நீயே அவர்கிட்ட சொல்லிக்கோ” என்றான் கோவமாய்.
“அவர் கடக்குறாரு விடு! காலேஜ் போனியே, என்னாச்சு? எதுவும் பிரச்சனை பண்ணியா?” என்றார் ஆவலே உருவாய். மது புக்கை ஓரங்ககட்டிவிட்டு அண்ணன் அருகே கதைக்கேட்க ஒட்டிக்கொண்டாள்.
சோர்வாய் ‘பொத்’தென சோபாவில் விழுந்தவன், “எங்கம்மா?” என்றான் சலிப்பாய்.
“ஏன்டா ஒன்னும் செய்யலயா நீ?” என்றார் தெய்வானை கவலையுடன்.
“போனா, எல்லாரும் சீனியர் சீனியர்ன்னு சுத்தி சுத்தி வரானுங்க! ஸ்டாப்க்கு கூட இன்னும் நியாபகம் இருக்கு என்னை! அவனுங்க குடுக்குற மரியாதைக்கு என்னால அங்க சில்லி-யா பீகேவ் பண்ண முடியலம்மா!” என்றான்.
மது, “அச்சோ! இப்ப என்ன ண்ணா செய்யுறது?”
“என்ன செய்ய? போற போக்குல போகணும் போல! இல்லன்னா பார்ப்போம்! ஏதாவது தானா மாட்டும்” என்றான் ஆதி. அதன் பின்னே இரவு உணவு முடித்து அவரவர் படுக்கைக்கு சென்றுவிட, ஆதியும் இருந்த களைப்பில் நிர்மலமாய் உறங்கிப்போனான்.
ஆனால், அங்கே பெண்கள் விடுதியில் தன்யா உறக்கம் வராது புரண்டு புரண்டு படுக்கவே, அருகே படுத்திருந்த அம்ருதா அவளது தொடர் அசைவில் கடுப்பாகி, “தூங்குறதுனா தூங்கு, இல்லனா எழுந்து போயேன்டி” என சொல்ல, “ம்ச்! தூக்கம் வர மாட்டேங்குது அம்மு!!” என சிணுங்கினாள் தன்யா.
“கிளாஸ் நடக்கும்போது தூங்காத தூங்காதன்னு சொன்னா கேட்குறியா நீ?” என அரை தூக்கத்தில் அம்ருதா திட்டியதும், “ப்ச்! அதில்ல அம்மு… அந்த சீனியரை எப்படி நாளைக்கு பேஸ் பண்றது?” என்றாள் தன்யா.
“எ…..ந்த சீனியரை…?” ஒரு நீண்ட கொட்டாவிக்கு நடுவே அம்ருதா கேட்க, “ப்ச்! அதான் லூசு, அந்த சீனியர்! நம்மளை சல்யூட் பண்ண சொன்னாரே!” என தன்யா எடுத்துக்கொடுத்ததும், அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த அம்ருதா, “நம்மளை இல்ல… உன்னை” என திருத்தினாள்.
மீண்டும் உச்சுக்கொட்டிய தன்யா, எழுந்து அமர்ந்துக்கொண்டு, “நான் எப்டி தனியா போவேன் அவரைப் பார்க்க?” என்றாள்.
[the_ad id=”6605″]
பக்கத்து பெட்டில் இருந்த நவ்யா, “நீ தனியா தான் வரணும்ன்னு சீனியர் சொல்…லிட்…டாரே” என்றாள் சிரிப்பாய்.
தன்யா, “ப்ச்! சீனியர்ன்னு தெரியாம ரேக்கிங் பண்ணிட்டோம்டி! எல்லாம் நம்ம நேரம்” என வருத்தமாய் சொல்லிட, மூவரும் அட்ட டைமில் எழுந்து அமர்ந்து, “ரேக்கிங் பண்ணது நீ மட்டும் தான்… நாங்க இல்லை” என ஜகா வாங்கவே,
“அடிப்பாவிங்களா? பிரச்சனைன்னு வரப்போ இப்படி தனியா சிக்க விட்டு ஓடப்பார்க்குறீங்கள்ள? ச்ச!” என கோவம் கொண்டு எழுந்து செல்ல போனாள் தன்யா. அவள் கரத்தை பிடித்து இழுத்த அம்ருதா, “ரொம்ப பொங்காத! உட்காரு!” என அடக்கி அமர வைத்து,
“அவரை பார்த்தா ஒன்னும் மோசமான ஆளா தெரியல! நாளைக்கு ‘பாவ்பாஜி’ வாங்கிட்டு போய் நல்லவிதமா பேசி ஒரு ‘சாரி’ கேட்டுடு! ஐ ஹோப் ஹீ வில் எக்ஸ்கியூஸ் யூ!” என்றதும்,
“அப்படியா?” என்றாள் தன்யா கண்கள் மின்ன.
அவள் நிம்மதியை குலைக்கும்படி, “ஐ டோன்ட் தின்க் சோ!” என தீப்தி சுவாதீனமாய் சொன்னதும், மீண்டும் சுருங்கிப்போனது தன்யாவின் முகம்.
நவ்யா, “சும்மா இரு” என தீப்தியை அடக்கிவிட்டு,
“யூ டோன்ட் வொரி! உனக்கு கஷ்டமா இருந்தா நம்ம எச்.ஓ.டி கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்” என்றதும்,
“பண்ணலாம் தான்!!!” என இழுத்த தன்யா, “அவர் எதுக்காக உன்னை சல்யூட் பண்ண சொன்னாருன்னு எச்.ஓ.டி கேட்டா, நம்ம ‘ரேக்’ பண்ண விஷயத்தையும் சொல்ல வேண்டி வருமே?” என அவள் சொல்ல,
“அதுக்கு தான் சொல்றேன்! நீ நேரே அந்த சீனியர்கிட்டேயே போய் சாரி கேட்டு சரண்டர் ஆகிடு!” என்றாள் அம்ருதா.
நகத்தை கடித்து துப்பியபடி மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தவளை சுரண்டிய நவ்யா, “உனக்கு வேற வழி இல்லை! அம்மு சொல்றமாறி பண்ணு” என்றாள் முடிவாய்.
அரைகுறை மனதுடன் ‘ம்ம்ம்’ என முனகினாள் தன்யா.
நேரம் கடக்க, நால்வரும் படுத்திருந்தாலும் உறக்கம் மட்டும் சற்று தூரவே நின்றிருந்தது.
“அந்த சீனியருக்கு ஃபேன் ஃபாலோவிங் அதிகமா இருக்கும் போல தன்யா! நம்ம அவர்க்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்த விஷயம் தெரிஞ்சதுக்கே அந்த சீனியர் குரங்கு நம்மளை கூப்பிட்டு ‘உங்களுக்கென்ன அவர்க்கிட்ட பேச்சு?’ன்னு திட்டுச்சு. இதுல நம்ம ‘ரேக்’ பண்ணத்தான் அவரை கூப்பிட்டோம்ன்னு தெரிஞ்சா அவ்வளோதான்! கேர்ல்ஸ் ஹாஸ்டல் பக்கமே வர முடியாது நம்மளால!!” என்று தீப்தி மெல்லிய குரலில் புலம்ப,
“ப்ச்! அவ்வளோ ஸீன் எல்லாம் இல்ல! நீ ரொம்ப யோசிக்காம தூங்கு” என்றாள் அம்ருதா.
“இல்ல அம்மு, தீப்தி சொல்றது தான் உண்மை! சும்மா பேசுனதுக்கே நம்ம காலேஜ் முடிஞ்சு ஹாஸ்டல் வந்தப்போ அந்த ‘குஷி’ எப்படி கேள்வி கேட்டா பார்த்தீல்ல?” என்று நவ்யா தீப்திக்கு ஆதரவு தர, தன்யாவுக்கு தான் ‘பக்’ ‘பக்’கென்றது.
அம்ருதா, “தன்யா, நாளைக்கு எப்படியாவது அந்த சீனியரோட சமாதானம் ஆகிடு! எந்த பிரச்னையும் இல்ல நமக்கு! புரியுதா?” என சொல்ல,
“ஆமா தன்யா, இது ப்ரோப்ளம் ஆகாம இருக்கிறது உன் கைல தான் இருக்கு” என நவ்யாவும் சொல்ல,
‘ம்ம்ம்’ என தலையாட்டினாள் தன்யா. உறக்கம் எப்படியோ வந்து சேர, மறுநாளை நோக்கி நகர்ந்தது பொழுது.
காலை வகுப்புகளில் என்ன நடந்தது என தன்யாவை கேட்டிருந்தால் அவளுக்கு சத்தியமாய் தெரிந்திருக்காது. ஏனெனில், மனம் முழுக்க, ‘அவனிடம் எப்படி பேசி சமாதானம் ஆவது?’ என்றதிலே சுற்றிக்கொண்டிருந்தது.
மதிய நேர இடைவெளி மணி ஒலித்ததோ இல்லையோ, “கிளம்பு கிளம்பு, ‘பாவ் பாஜியோட’ போய் அவரை மீட் பண்ணு போ!!” என அவளை கிளப்பி விட்டனர் தோழிகள்.
“நான் மட்டும் எப்டிடி? நீங்களும் வாங்க” என தன்யா அழைக்க, “நாங்க தான் வரக்கூடாதே! எங்களை பார்த்து அவர் கோவப்பட்டுட்டா? அதனால நீ மட்டும் கிளம்பு” என்றனர்.
தன்யாவும் குறைமனதுடன் கேண்டீனை நோக்கி சென்றாள். எங்கேனும் அவனை பார்க்க முடிகிறதா என கண்களால் அலசிக்கொண்டே அவள் செல்ல, அவன் எப்டி அங்கே காண கிடைப்பான்?
அவன்தான் லைப்ரரியில் அமர்ந்து அதிமுக்கியமாய் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தானே!
மதிய உணவு நேரத்தில் அவன் அங்கே இருக்க, அவனை கண்ட சில பொறியியல் இறுதியாண்டு மாணவிகள், இதான் சாக்கென்று அவனை நெருங்கினர்.
ஆள் அரவம் கூட தெரியாது விட்டுப்போன பத்துநாள் பாடத்திற்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தான் ஆதி.
“சீனியர் ஜி?”
அருகே கேட்ட குரலில் நிமிர்ந்தவன் எதிரே நிற்கும் நான்கு பெண்களையும் கண்டு சிநேகமாய் புன்னகித்தபடி, “ஹெலோ…” என்றான்.
[the_ad id=”6605″]
அதற்கே ஜில்லென ஆனவர்கள், “லஞ்ச் டைம்? சாப்பிட போலாமே ஜி?” என்றிட, “ஐ ஆல்ரெடி ஹேட் லஞ்ச்! தட்ஸ் வொய்” என சிரிக்க, அதற்குமேல் என்ன பேச அவனிடம் என தெரியாது, “ஓகே ஜி” என நகர்ந்து விட்டனர்.
சற்று தள்ளி சென்றவர்களில், ‘ஓ..காட்… நான் பேசிட்டேன்’ என்ற குரல் அவனிடம் காதை அடைந்தாலும், அதை எப்போதும் போல, சிறு தலைக்குலுக்களுடன் ஒதுக்கிவிட்டு புத்தகத்தின் மறுப்பக்கத்தை புரட்டினான் ஆதி.
கையில் சுட சுட ‘பாவ் பாஜி’யை வாங்கிக்கொண்டு நேற்று அமர்ந்திருந்த அதே கல்பெஞ்சில் அமர்ந்தாள் தன்யா. அங்கும் இங்கும் கும்பலாய் சுற்றிக்கொண்டிருந்த ஆட்களிடம், எங்கேனும் அவன் முகம் தெரிகிறதா? என சல்லடை போட்டுக்கொண்டே அமர்ந்திருக்க, அப்படி ஒருத்தியை வர சொன்னதைக்கூட மறந்தவனாய் தன் வேலையில் மூழ்கியிருந்தான் ஆதி.
அரைமணி நேரம் வரை பொறுத்துப்பார்த்த தன்யாவுக்கு அதற்குமேல் ஒரே இடத்தில் தேவுடு காக்க கடுப்பாகியது.
‘வான்னு சொன்னவனுக்கு வரணும்ன்னு தெரியாதா?’ என்ற சலிப்பு.
அவன் எங்கிருப்பான் என யாரிடம் கேட்பது என்றுக்கூட தெரியவில்லை. நேரம் ஓடி உணவு இடைவெளியும் முடிந்து மதிய வகுப்புகள் தொடங்கும் நேரமும் வந்தது, ஆனால், வர வேண்டியவன் வரவில்லை.
எழுந்து செல்லலாம் என்றால், ஏனோ அவனை காணாது அங்கிருந்து போக தோன்றாது பொறுமையை நீட்டிப்பிடித்து அமர்ந்துவிட்டாள் தன்யா.
மரத்தின் உயரம், இலைகளின் நிறம், உதிரும் சருகுகளின் தன்மை, அதை கையால் பிடித்து நொறுக்கும்போது உடையும் சத்தம், அதில் வந்து அமரும் காக்கைகளின் எண்ணிக்கை என ஒவ்வொன்றாய் நோட்டம் இட்ட தன்யாவுக்கு அந்த வெறிச்சோடிய இடத்தில் அதற்க்கு மேல் எதை பார்த்து நேரத்தை ஓட்டுவது என்று சத்தியமாய் தெரியவில்லை.
லைப்ரரியை விட்டு வெளியே வந்த ஆதியை அந்த நீண்ட காரிடாரில் எதிர்க்கொண்டார் விரிவுரையாளர் கரண்சிங். ஆதியை கண்டதும், “ஹலோ ஆதி? ஹவ் ஆர் யூ மேன்?” என நண்பனை போல அவன் கைப்பிடித்து உற்சாகமாய் குலுக்க, அவர் உற்சாகம் அவனையும் தொத்திக்கொண்டது.
இங்கே அவன் இளங்கலை பயின்ற காலத்தில் எந்த ஒரு இசை சார்ந்த போட்டி என்றாலும், ஆதியை கேட்காமலே அவன் பெயரை எழுதி கொடுத்து விடுவார் அவர்.
பழகுவதற்கும் எளிமையான, ஜாலியான ஆள் என்பதால், ஆதிக்கு மட்டுமல்ல, அங்கே வெகுவாய் பலருக்கு அவரை அதிகமாய் பிடிக்கும்.
வெகு நாட்களுக்கு பிறகு அவரை கண்டதும், “ஹலோ சார்! வெரி க்ளாட் டு மீட் யூ” என்றான் ஆதி அவர் நீட்டிய கரத்தை பற்றிக்கொண்டு.
அவரோ மேற்கொண்டு எதுவும் பேசாது, “தேன்க் காட்! நானே யாராவது கிடைப்பாங்களான்னு பார்த்துட்டு இருந்தேன்! நீயே வந்துட்ட!” என்றவர், “செகன்ட் இயர் ஐ,டி கிளாஸ்க்கு இப்போ நான் தான் போகணும், பட் ஐ ஹேவ் சம் இம்பார்டன்ட் வொர்க் டு டூ! சோ, நான் வர வரைக்கும் நீ போய் என்கேஜ் பண்ணு” என்றார்.
“அய்யோ சார், நான் எப்டி?” ஆதி பதட்டமாய் கேட்க, “ஹே, இது எப்பவும் நடக்கிறது தானே? ஜஸ்ட் என்கேஜ் பண்ணு போதும், நீ வேற எதுவும் செய்ய வேண்டாம்” என்றவர் அதற்கு மேல் நிற்காமல் ஓடியே விட்டார்.
“சார்… சார்…” என அழைத்ததெல்லாம் வீண்…!
‘ப்ச்! இது என்னடா இவருக்கு ஒரு ‘ஹெலோ’ சொன்னதுக்கு கிடைச்ச தண்டனை’ என உள்ளுக்குள் புலம்பிக்கொண்ட ஆதியும் வேறு வழியின்றி அவர் சொன்ன வகுப்பை தேடி சென்றான்.
தன்யா ‘பொருத்தது போதும், பொங்கி எழு’ என்ற நிலைக்கே வந்துவிட்டாள். இதற்குமேல் காத்திருந்தால் கல்லூரி நேரமே முடிந்து விடும் என அவனை நன்றாய் திட்டிக்கொண்டே, கையில் ஆறிப்போன ‘பாவ்பாஜியுடன்’ அவள் வகுப்பை நோக்கி செல்ல, அவள் கொஞ்சமும் எதிர்ப்பாராதபடி, அவள் வகுப்பிலேயே ஸ்டைலாய் டேபிளில் சாய்ந்துக்கொண்டு கைக்கட்டியபடி சிரித்து பேசிக்கொண்டிருந்தான் ஆதித்யதேவ்.
ஒரு நொடி, ‘என்னைத்தேடி தான் வந்துவிட்டானோ? நான் அங்கே காத்திருந்தது தெரியாதோ?’ என அவள் மனம் நினைக்க, வாயிலில் அவளை கண்டதும், வெகு சாதரணமாய், ‘கெட் இன்’ என சொல்லிவிட்டு மீண்டும் தன் பேச்சை சிரிப்புடன் தொடர்ந்துக்கொண்டிருந்தான் ஆதி.
அதை கண்டவளுக்கு கோவம் சுர்ரென ஏற, கடுப்புடன் தன் இருக்கையை தேடி அவள் செல்லவே, தோழி வந்ததை கூட கவனிக்காது, பேசிக்கொண்டிருந்தவனின் வாய் பார்த்தபடி ‘ஈஈஈ’ என அமர்ந்திருந்தனர் அவள் தோழிகள்.
அவர்கள் மட்டும் அல்ல.. அங்கிருந்த எல்லோருமே! ஆண்கள் உட்பட, அவன் பேசும் விதத்திலும், சிரிப்பிலும் தாங்களும் இணைந்து லயித்திருக்க, தான் வந்ததை இன்னும் கூட கவனிக்காத தோழிகளை கண்டு பல்லைக்கடித்தாள் தன்யா.
நறுக்கென பிறர் அறியாது அம்ருதா தொடையில் ஒரு கிள்ளு கிள்ள, கத்தப்போனவளின் வாயை சட்டென மூடினாள் தன்யா.
“ஏண்டி கிள்ளுன?”
[the_ad id=”6605″]
“நான் வந்தது கூட தெரியாம என்ன ஈஈ-ன்னு பார்த்துட்டு இருக்க?”
“அச்சோ…! அதை ஏன் கேக்குற? இவருக்கு ஏன் இவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்கன்னு இப்போதான் தெரியுது! அவர் பேசுறதை கொஞ்ச நேரம் கேளேன், நீயே பிளாட் ஆகிடுவ!” என்ற அம்ருதா ஆதியை நோக்கி திரும்பிக்கொள்ள, எப்போதும் கார சாரமாய் இருக்கும் அம்ருதாவையே வாயில் ஜீரா ஊற வைத்திருக்கிறானே! என ஆச்சர்யமானாள் தன்யா.
அருகே திரும்பினால், நவ்யாவும் தீப்தியும் இந்த உலகிலேயே இல்லை என்பது பார்க்கும்போதே தெளிவாய் தெரிந்தது அவளுக்கு.
‘ஹும்ம்’ என சலிப்போடு அவள் அவனை பார்க்கையில், எதேச்சையாய் பார்த்தானோ, அல்லது அவளை கண்டுக்கொண்டதால் பார்த்தானோ?
ஒரே ஒரு பார்வை… அதுவும் சில நொடிகளே!!! மெலிதாய் சிரிப்பில் விரிந்த உதடுகளுடன், அவளை நோக்கிய அவன் பார்வையில் சட்டென கண்டுண்டுப்போனாள் தன்யா.
சுற்றிலும், ‘ப்ளீஸ் ஜி… ப்ளீஸ் ஜி’ என எதற்க்கோ மாணவர்கள் அவனிடம் கெஞ்ச, இவன் பதிலுக்கு “ஐயம் அவுட் ஆப் ப்ராக்டிஸ்” என இன்னும் ஏதோ சொல்ல, இறுதியாய் அவர்கள் கேட்டதற்கு ஒத்து வந்தவன் போல, “ஓகே, பட் தமிழ் சாங் தான்!” என்றிருந்தான்.
அதற்கும் ‘சரி’ என ஆதரவு கிடைக்க, மெலிதாய் குரலை சீராக்கி, அவன் பாட ஆரம்பித்த போது, அவன் குரலை தவிர தன்யாவின் செவிகளை எதுவுமே அடையவில்லை.
‘அஞ்சு நாள் வரை…
அவள் பொழிந்தது ஆசையின் மழை…
அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்…
அது போல… எந்த நாள் வரும்…?
உயிர் உருகியே…
அந்த நாள் சுகம்…
அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்…’
சின்னதாய் சுருக்கிய புருவங்களும், பாடும்போதும் வாடாத அவன் புன்னகையை கண்களும் கடன் வாங்கியதை போல அழகாய் சிரிக்க, கட்டியிருந்த கைகளை இறக்காமல், எந்த வித மெனக்கெடலும் இன்றி அவன், அவன் போக்கில் பாடல் பாட, தன்யாவுக்கு அவளை சுற்றி இருந்த அனைத்தும் மாயமாய் மறைந்து அவளும், அவன் குரலும் மட்டுமே அந்த அறையில் இருப்பதாய் தோன்றியது.
ஏனோ அவன் பாடிய பாடலை இதற்குமுன் பலமுறை அவள் கேட்டிருந்தாலும், அதை அவன் பாடி கேட்கையில், அந்த பாடலில் ஏதோ ஒன்று இன்னும்… இன்னும் அழகாய் ஒளிந்திருப்பதை போல தோன்றியது.
மொழி புரியாவிடினும் அவன் குரலிலும், பாவத்திலும், ஏற்ற இறக்கத்திலும் கவரவப்பட்டு பலரும் பாராட்ட, அவர்களின் கைத்தட்டல், அவனை சற்றே வெட்கம் கொள்ள செய்ய, அவன் வெட்க சிரிப்பில் தன்னை மீறி கலந்தாள் தன்யா.
அந்த வகுப்பு நேரம் முடிந்து அவன் சென்ற பின்னும் கூட, அவன் பாடியது அவள் செவிகளை விட்டு நீங்காதது போல ஒரு பிரம்மை…!
அவளை மதியத்தில் இருந்து அவன் காக்க வைத்ததில் வந்த எரிச்சல் எல்லாம் எங்கோ ஓடி மறைந்து போனது.
அவள் மட்டும் அல்ல, அந்த வகுப்பில் இருந்த பலரும் அவனது குரல் வளத்தையும், அதில் அவர்கள் லயித்திருந்ததையும் கதையாய் சொல்ல, மனதின் ஓரம் மிக மெலிதாய் ஒரு எரிச்சல் முளைவிட்டது தன்யாவுக்கு.
இது கூட காதல் தானோ? அது எப்படி ஒரே நாளில் சில மணித்துளிகளில் காதல் வரும்!?
ஏன்? அப்படி வந்தால் அது காதல் இல்லையா?
தன்யாவுக்கு ‘காதல்’ என்ற எண்ணம் கூட இப்போது வரை இல்லை… ஆனால் நாளை…?
-கலாட்டா தொடரும்…