அத்தியாயம்-6
காலையில், கதவு தட்டப்படும் ஒலியில் தான் கண் விழித்தாள் மது..நேரத்தை பார்த்தாள்.. அது எட்டு என்றது..வேகமாய் எழுந்து சென்று கதவு திறந்தாள்..
பேச்சி தான் நின்று கொண்டிருந்தாள்..
“தூங்குனீங்களா மா..அம்மா உங்களுக்கு காபி கொண்டு போய் கொடுத்துட்டு வர சொன்னாங்க..அதான்..”
“ஹ்ம்ம்..இங்க வைச்சுடுங்க..”
அங்குள்ள மேஜையில் வைத்து விட்டு சென்றாள் பேச்சி..
அதன் பிறகு காலை கடன்களை முடித்து விட்டு காபி கப்புடன் கீழே வந்தாள்..
“வா கண்ணு..நேத்து ராவுக்கு தூக்கம் வந்துச்சா??புது இடம்..நேத்து வந்த களைப்பு வேற இருக்கும்..
அதான் அசந்து தூங்கிட்ட போல..
விடிஞ்சு வெகு நேரம் ஆச்சு..அதான் காபி குடுத்தூட்டேன்..”
சங்கடமாய் புன்னகைத்து விட்டு,
“சாரி ஆன்ட்டி.. நேத்து நைட் சரியா தூங்கலை, அதான்..”
“இதுக்கு எதுக்கு கண்ணு சாரி.. இது உங்க வீடு மாதிரி..அப்புறம், இந்த ஆண்டி, கீண்டி எல்லாம் கூப்பிட கூடாது..அழகா, அத்தைன்னு கூப்பிடு..”
தலையசைத்து விட்டு,அங்கு உள்ள ஷோபாவில் அமர்ந்து காபி குடிக்க ஆரம்பித்தாள்..
“நீ காபி குடி கண்ணு..அடுபடிக்கு போய், காலை பலகாரம் ஆச்சான்னு பார்த்துட்டு வரேன்..”
கூறிவிட்டு உள்ளே சென்றார் மரகதம்..
காபி குடித்த படி கண்களை சுழல விட்டாள்..
அங்கு உள்ள சுவற்றில் சில புகைப்படங்கள் மாட்டப் பட்டிருந்தது..
காபி கப்பை டேபிளில் வைத்து விட்டு, அதன் அருகில் சென்று பார்த்தாள்.. நேற்று இருந்த களைப்பிலும், மனநிலையிலும், கவனிக்காமல் விட்ட படங்கள்..
ஒவ்வொரு படமாய், அருகில் சென்று பார்த்தாள்..
முதல் படத்தில் மரகதமும், அவர் கணவர் அருள்மொழியும் இருந்தனர்..திருமண கோலத்தில்..
சிறு பெண்ணாய் மரகதம்,இப்பொழுது இருக்கும் கம்பீரத்திற்கும், அப்பொழுது, நாணி, கோணி, ஒல்லியாய் இருப்பவருக்கும், பல வித்தியாசம்..
அந்த வெட்கம் கூட, அழகாய் இருந்தது அவருக்கு..அருள்மொழி, நல்ல உயரமாய்,உயரத்திற்கு ஏற்ற எடையுடன், கம்பிரமாய் இருந்தார்..அவரை எங்கேயோ பார்த்தது போல இருந்தது..சிறிது நேரம் உற்று நோக்கினாள்,கண்டு பிடிக்க முடியவில்லை..
[the_ad id=”6605″]
அடுத்த படத்தை பார்த்தாள் அருள்மொழி,மரகததோடு,ஒரு சிறுவனும்,மரகதத்தின் இடையில், ஒரு சிறு பெண்ணும் இருந்தார்கள்..
இதில் மரகதம் சற்று, சதை பிடிப்பாய் இருந்தார்..
அடுத்த படத்தின் அருகே வந்தவள் திகைத்து நின்றாள்..
அதுவும், அவர்கள் குடும்ப படம் தான்..
அதில் அருள்மொழி, சற்று நரை முடியுடன் காணப்பட்டார்..மரகதம், இப்பொழுது இருப்பதை விட, கொஞ்சம் இளமையாய் இருந்தார்..
இருவரும் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்..
அருள்மொழியின் அருகே, ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.அவர் தோளில் கை வைத்த படி.,சிறு வயது மரகதம் போல,பாவாடை தாவணி, போட்டு இருந்தாள்..மரகதத்தின் அருகே ஒரு இளைஞன், நல்ல உயரமாய், வெகு ஒல்லியான உடல் வாகோடு.கல்லூரி படிக்கும் மாணவன் போல தோற்றம்..அருள்மொழியின் ஜாடையில்..
அந்த இளைஞனை விட்டு பார்வையை எடுக்க முடியவில்லை அவளால்..கண் இமைகள் அசையாது பார்த்துக் கொண்டிருந்தாள்..
அருகில் இருந்த புகைப்படங்களிலும், அவன் தான். தனியாகவோ,அந்த இளம் பெண்ணோடோ..
அதில், மாணவன் தோற்றம் முற்றிலும் மறைந்து. கம்பிரமான ஆண் மகன் தோற்றம் வந்திருந்தது..
அந்த புகைப்படத்தின் அருகே சென்று, அவன் கன்னம் வருடினாள்..அவன் மீசை அருகே விரல் கொண்டு சென்று, அதை இழுப்பதை போல செய்தாள்.. அவள் செய்கை, அவளுக்கே சிரிப்பை வரவைத்தது.. வாய் மூடி
புன்னகையை அடக்கினாள்..
“அது, என் அண்ணன்,அண்ணி..”
பின் இருந்து கேட்ட குரலில்,திடுக்கிட்டு திரும்பினாள்..
அங்கே, புகைப்படத்தில் பார்த்த இளம் பெண்..கையில் ஒரு குழந்தையுடன் நின்றாள்..
‘நான் செய்ததை பார்த்திருப்பாளா..?? என்ன நினைத்திருப்பாள்..??’
சற்று சங்கடமாய் விழித்தாள்..
“என்ன அண்ணி, அப்படி பார்குறிங்க..நான் அகல்யா..உங்க அத்தை பொண்ணு..”
“ஓ..அது,இந்த போட்டோல தூசி, அதான்.. துடைச்சேன்..”
இதற்கு மேல், என்ன சொல்லி சமாளிப்பது, என தெரியாமல் நின்றாள்.
“அப்படியா அண்ணி..யாருன்னு தெரியாம, பார்க்குறீங்க போலன்னு சொன்னேன்..”
சமாளிப்பாய், சிரித்து வைத்தாள்..
“நேத்து நீங்க வர ராவாயுடுச்சுன்னு அம்மா சொன்னுச்சு. அதான், இன்னிக்கு வெள்ளனவே வந்தேன்..
அண்ணன் இப்போ வீட்டுல இல்ல..ஏதோ மாநாடுன்னு போய் இருக்கு..ஒரு வாரம் ஆச்சு..அது இப்படி தான், வீடு தங்காது..மாநாடு ஊரணி,பேரணி,கருத்தரங்குன்னு, சுத்தி கிட்டே இருக்கும்..
என்னை, உள்ளுருலதேன் கட்டி இருக்காக.. அதுனால நிதம் வந்துடுவேன்..இங்க..”
காட்டாறு போல, சலசல வென பேசினாள் அகல்யா..
அதை எதிரில் இருப்பவள், கேட்கிறாளா,இல்லையா?? என்ற எண்ணம் கூட இல்லாமல்..
அவன் வீட்டில் இல்லை என்ற செய்தியிலேயே உளன்று கொண்டிருந்தாள் மது..
அதற்கு மேல், அவள் சொன்னது எதுவும், இவள் காதில் விழவில்லை..
காற்று போன பலூனாய், உற்சாகம் வடிந்து போய், நின்றிருந்தாள்..
“ஏண்டி அகலு, வந்ததும் உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா??அந்த புள்ள வந்த அன்னிக்கே பயந்துட போகுது..”
கூறிக்கொண்டு வந்தார் மரகதம்..
“ஆமா,உன்ற மருமகளை பயமுடுத்துறோம்..மருமக வந்ததும் அவுகளுக்கு சப்போர்ட்டு, மகளை கண்டுக்குறதில்லை..”
இருவரும் கோபமாய் பேசி கொள்கிறார்களோ என்று, இருவர் முகமும் பார்த்தாள் மது..
இருவரும், சாதாரணமாய் இருந்தனர்..
“நீ பயபுடாத கண்ணு..இந்த கழுதை இப்படி தான் பேசும்..”
“க்கும்..”
என்று நொடித்துக் கொண்டாள் அகல்..
[the_ad id=”6605″]
“இல்ல,இல்ல அத்தை.. அவங்க ஏதும் சொல்லல..சும்மா தான், பேசிக்கிட்டு இருந்தாங்க..”
“அப்படி சொல்லுங்க அண்ணி..நான் உங்களை விட சின்ன பிள்ளை தான். நீ ,வானே கூப்பிடுங்க அண்ணி..
என்னை சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டாக., அதுனால வயசு கூடன்னு நினைச்சு புடாதிங்க..”
“ஏண்டி, ஒரு வார்த்தைக்கு ஒன்பது முழத்துல பதில் சொல்லுற..கண்ணு,இவ சின்ன குட்டி தான்.. பேர் சொல்லியே கூப்பிடு..அகல்யா..இவ பேரு..”
“ஹான், சரி அத்தை.. அவங்க,சாரி சாரி.. அவ வந்ததும் சொன்னா..”
“என்ன அண்ணி, ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சு யோசிச்சு பேசுறீங்க..தயங்காம பேசுங்க..”
“நீயும் என்னை, வா, போனே கூப்பிடலாம்..உன்னை விட ஒன்னு,ரெண்டு வருஷம் பெரியவளா இருப்பேன்..”
“சரி அண்ணி..”
அப்பொழுது, கூடத்தில் இருந்த தொலைபேசி இசைத்தது..
வேகமாய் சென்று அதை எடுத்தாள் அகல்..
“ஹலோ..”
“….”
“சொல்லு ண்ணா..”
“…..”
“இப்போ தான் வந்தேன்..அம்மா பக்கத்துல தான் நிக்குது..”
அண்ணன் என்றதும்,மதுவிடம் பரபரப்பு தொற்றி கொண்டது..
மெதுவாய் அவர்கள் அருகில் வந்தாள்..
“நானா,நான் அண்ணி கூட பேசி கிட்டு இருக்கேன்..”
“….”
“எந்த அண்ணியா??சரியா போச்சு போ..சேகர் மாமா பொண்ணு..மது அண்ணி..நேத்து நைட்க்கு இங்க வந்துருக்காக..அம்மா சொல்லலியா??”
“ஏய் வாயாடி, போனை கொடு.விட்டா கதை அளந்து கிட்டே போவியே..”
அவளிடம் போனை வாங்கினார் மரகதம்..
இவள் வந்த தகவல் கேட்டு,அங்கு அவன் முகம் சுருங்கியது..
“ஏலே ராசா.. எப்படி இருக்க??”
“ஹ்ம்ம்..நல்லா இருக்கேன் ம்மா.. சேகர் மாமா பொண்ணு வந்திருக்காளா??”
“ஆமாம் கண்ணு..ரெண்டு நாள் முன்ன, அண்ணன் போன் பண்ணி, மதுவை அனுப்பி விடுறேன்..கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னு கேட்டுச்சு..நானும் சரின்னு சொல்லி வர சொன்னேன்..உனக்கு போன் போட்டா, தொடர்பு எல்லை இல்லைன்னு, அந்த பிள்ளை அதே சொல்லுது..அதான் நீ பேசும் போது சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்..”
“அவ எதுக்கு வந்துருக்கா??எத்தனை நாள் தங்குவா??ஏன் வந்துருக்கா??”
“ஏலே,ராசா…”
அன்னையின் கண்டிப்பில்,
“சரி ம்மா.. கொஞ்சம் வேலை இருக்கு..அப்புறம் பேசுறேன்..”
வைத்து விட்டான்..
‘இவன் பேச்சு சரி இல்லியே..இம்புட்டு கோவமா பேசுறான்..’
“என்ன ம்மா, அண்ணன் என்ன சொல்லுச்சு..??இம்புட்டு சீக்கிரம் வச்சுடுச்சு..நான் சரியாவே பேசல..”
பக்கத்தில் மது நிற்கவும் எதுவும் சொல்ல முடியாமல்,
“அவனுக்கு ஏதோ வேலை வந்துடுச்சாம்..அப்புறம் பேசுவான்..நீ சாப்பிட வா.. மது கண்ணு,நீயும் வாடா..”
இரண்டு நாட்கள் சென்றது..அதன் பிறகு ராஜா பேசவில்லை..மது கொஞ்சம் கொஞ்சமாய் இங்கு பொருந்த ஆரம்பித்தாள்..அகல்யா சொல்லும் ராஜாவை பற்றிய விஷயங்களை ஆர்வமாய் கேட்டு,மனப்பெட்டகத்துள் சேமித்து வைத்தாள்..
அவள் அறியாமல்..
அன்று அவளும் அகலும் பேசிக் கொண்டிருக்கையில் வந்தான் பாண்டி..
“அத்தை, அத்தை..”
அவனை கேள்வியாய் பார்த்தாள் மது..
“அடுத்த வீடு பாருப்பா..வர,வர இந்த பிச்சைக்காரங்க தொல்லை ஜாஸ்தி ஆயிடுச்சு..”
“அகலு புள்ள,இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்..என் பாச மலர் முன்னுக்க,என்னை டேமேஜ் பண்ணுற..”
“க்கும்…”
“யார்,அகல் இவங்க??”
“சொல்லிக்கிற அளவு பெரிய ஆளு இல்ல அண்ணி..இங்க தான் சுத்தும்..இப்போ ரெண்டு நாளா தான், ஆளே காணும்..”
“ஏண்டி,அவன் வந்ததும் ஆரம்பிச்சுட்டியா??மது கண்ணு,அவன் பேரு பாண்டி.. நம்மளுக்கு தூரத்து சொந்தம்..ராசாக்கு தோழன்.ராசாவோட சேர்ந்து, தொழில் எல்லாம் பார்த்துக்குறான்..உனக்கு அண்ணன் முறை..”
‘க்கும்.. இந்த கடைசி வரியை
மறக்காம சொல்லிடுங்க..’
“ஆமாம் மா,நான் உன் அண்ணன்,நீ என் தங்கை..இப்போ, தங்கைக்கு ஒரு கீதம் பாட வந்தேன்..”
“அதான், வீட்டை சுத்தி கழுதை சுத்துதா??”
“அது தெரியல.ஆனா, வீட்டுக்குள்ள ஒன்னு உட்கார்ந்து இருக்கு..”
“ஏலே கருவாயா??”
“ஏண்டி அகலு..”
“இவனை பேசாம இருக்க சொல்லு..இவன் சும்மா இருந்தா, நான் ஏன் பேச போறேன்..”
“ஏம்மா தங்கச்சி நீயே சொல்லு.முதல்ல வம்புக்கு இழுத்தது யாரு..??இப்படி தான் இந்த உலகம் பார்த்துக்கோ..இந்த புள்ளைக்கிட்டே சூதானமா இரு..ஆமா சொல்லிபுட்டேன்..”
“அவுகளுக்கு தெரியும், நீ உன் வேலையை பாரு..”
“பார்த்துட்டா போச்சு..அத்தை, சாப்பிட என்ன செஞ்சுருக்க??”
“வந்த வேலையை கரெக்ட் அஹ் பார்க்குது பாரு பக்கி..”
“ஆமா டா அகலு..பின்ன மாமனுக்கு பசிக்குமில்ல..”
“என்னடி அகலு??சும்மா உட்கார்ந்திருக்க..மாமனுக்கு, காபி போட்டு கொண்டு வா..கூடவே, அந்த முறுக்கு சீடை எல்லாம் எடுத்துட்டு வா..”
நொடித்துக் கொண்டு எழுந்தாள்..
“தண்ணி விடாத, கள்ளி சொட்டு பால்ல, போட்டு கொண்டு வா புள்ள..தண்ணி சேர்ந்தா, மாமனுக்கு ஆகாது..”
“கள்ளி சொட்டு என்ன??கள்ளி பாலுலேயே, போட்டு கொண்டு வாரேன்..”
சொல்லி விட்டு, உள்ளே சென்றாள்..
“ஆத்தி, அத்தை எதுக்கும் ஒரு வாய் நீ குடிச்சுட்டு தா..”
“போடா போக்கத்தவனே..என்ன லே மூணு நாளா, ஆளே காணும்..”
“நல்லா கேட்பியே..உன் புள்ள பத்து நாளா விவசாய மாநாட்டுக்கு போய் உட்கார்ந்து கிட்டான்.. நான் ஒத்த ஆளா அம்புட்டையும் பார்த்து, துரும்பா இளைச்சு போய்ட்டேன்..அதான், நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு, இன்னிக்கு வந்தேன்..”
“ஒரு கேள்வி கேட்டா, அந்த கால நடிகை மாதிரி ஒரு பக்கத்துக்கு வசனம் பேசுறான் பாரு..”
இவ்வளவு நேரம், அவர்கள் பேசுவதை வியந்து பார்திருந்தாள் மது..
[the_ad id=”6605″]
“யெம்மா தங்கச்சி..உன் ரூமை, கூட்டி பெருகி சுத்தம் பண்ண வச்சு, மேற்பார்வை பார்த்ததெல்லாம் நான் தான்..இந்த வீட்டுக்கு, ஆல் இன் ஆல் நான் தான்..”
“கூட்டி பெருக்குன பேச்சியே, அமைதியா இருக்கா.. வேடிக்கை பார்த்துட்டு..பில்டிங் காண்ட்ராக்டர் அளவுக்கு, அளக்குறதை பாரு..பெரிய மேற்பார்வை..”
கூறிக்கொண்டே, காபியும், முறுக்கு சீடையும் கொண்டு வந்தாள் அகல்..
“அகலு,உன்னை நம்பி குடிக்கலாமா..இல்ல, உங்கூட்டு நாய்க்கு ஊத்தி, சோதிச்சு பார்க்கணுமா..??”
“அதான் நீ இருக்கியே..நீயே குடிச்சு தெரிஞ்சுக்கோ..”
“அகலுக்கு எப்போவுமே விளையாட்டு தான்..”
சிறு சிரிப்போடு அவர்கள் பேசுவதை கேட்டிருந்தாள்..அவர்களின் கிண்டல் கேலி பேச்சுக்கள், அவளுக்கு பிடித்திருந்தது..தவறாய் எடுக்காமல்,பதிலுக்கு பதில் பேசிக் கொள்வது, ரசிக்க தக்கதாய் இருந்தது..
சிறு வயதில் இருந்து அவள் கேட்காத பேச்சு வழக்கு.வளராத சூழல்..
கண்கள் விரிய பார்திருந்தாள்..அவளை பார்த்து விட்டு மரகதம்.
“இதுங்க, இப்படி தான் கண்ணு..சின்ன பிள்ளையில இருந்து ஒன்னா வளர்ந்ததுங்க..அதுனால, இப்படி தான் பேசிக்குங்க..நீ பயந்துடாத.. போக போக பழகிடும்..”
அவர் கூறிக் கொண்டிருக்கும் போது,வெளியே பேச்சுக் குரல் கேட்டது..
அதன் பிறகு சற்று நேரத்தில், உள்ளே நுழைந்தான் ராஜா..
அனைவரையும் பார்த்தான்..
அவனை கண்டதும் எழுந்து நின்றாள் மது..
“முதன் முதலில் பார்த்தேன், காதல் வந்ததே!!
என்னை மறந்து எந்தன், நிழல் போகுதே!!
என்னில் இன்று நானே இல்லை!!
காதல் போல ஏதும் இல்லை!!
எங்கே எந்தன் இதயமும் அன்பே
வந்து சேர்ந்ததா!!..”
தொலைக்காட்சியில் பாடல் ஒலித்தது..
“ஏலே ராசா வா, வா..”
அந்த அழைப்பின் ஒலியில், சுயநினைவுக்கு வந்தாள்..
“ஏன்டா மாப்பி..நேத்து கூட பேசுனேன்..வரேன்னு சொல்லவே இல்லை..”
“அண்ணா,வா, வா.. யாரு வந்துருக்கா.. பார்த்தியா??”
பல்வேறு வரவேற்புக்கு இடையில், அவன் பார்வை மதுவிடமே இருந்தது..
கண் இமைக்காது..
அவன் பார்வையின் வீரியத்தில்,இவள் தலை குனிந்தாள்..
“என்ன லே அப்படி பார்க்குற??..உன்ற சேகர் மாமா மக மது..சின்ன பிள்ளையில பார்திருப்ப..”
“ஆமா மாப்பி..என் தங்கை..
தங்கச்சி,தங்கச்சி என் தங்கமான தங்கச்சி..”
‘தங்கமா இவள், தகரம்..’
“யாரு லே இவன்.. சும்மா இரு லே..”
“பாசத்தை பொழிய விடாதீங்க..”
“என்ன கண்ணு,இவன் தான் உன்ற மாமன்..என்ற மவன்..”
என்ன சொல்லுவது என்று தெரியாமல், லேசாக புன்னகைத்தாள்..
அதை கண்டு கொள்ளாமல் முகம் திருப்பினான் ராஜா..
இவள் முகத்தோடு, மனமும் சுருங்கியது..
அதை கவனித்த அகல்,
“என்ன அண்ணன்,அண்ணி கூட எதுவும் பேச மாட்டேங்குற..வான்னு கூட கூப்பிடலை..”
“அண்ணியா??”
“ஆமா லே..அவளுக்கு அண்ணி முறை தானே..அதான் அப்படி கூப்பிடுறா..”
“பேர் சொல்லியே கூப்பிடலாமே.. இப்போ யார் முறை சொல்லி எல்லாம் கூப்பிடுறா..”
இந்த முறை அவனுக்கு பிடிக்கவில்லை என்று, மறை முகமாய் கூறினான்..
யாருக்கு புரிந்ததோ இல்லையோ மதுவுக்கு புரிந்தது..
‘இது அகல்க்கு மட்டும் தானா??இல்லை எனக்குமா??நானும் மாமா என்று அழைக்க கூடாது என்று மறைமுக உத்தரவா..??
போடா போ..நீயே வந்து, என்னை மாமா என்று கூப்பிடு என கேட்க வைக்கிறேன்..’
“முறை சொல்லி கூப்பிட்டா தான் நெருக்கம் இருக்கும் லே..சரி,சரி நீ போய் முகம்,கை கால் கழுவிட்டு வா.. பலகாரம் எடுத்துக்குவ..”
மதுவை ஒரு முறை கூர்ந்து விட்டு,உள்ளே சென்றான்..
‘என்ன பார்வை இது??லேசர் பார்வை..கண்கள் வழியாக உள்ளத்தை ஊடுருவும் பார்வை..ஹப்பா, இவர் கண்களை சந்திக்காமல் இருப்பது நலம்..கடைசி வரை என்னை வா என கூறவில்லை..இவருக்கு என்னை பிடிக்க வில்லையா..??’
கவலையுடன் அவன் போன திசையை பார்த்தாள் மது..
இரவு உணவு வேளை நேரத்தில் மீண்டும் அவனை சந்தித்தாள் மது..
அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தான்..
அகல்,அவள் வீட்டிற்கு சென்றிருந்தாள்..
ராஜாவின் அருகே பாண்டி அமர்ந்திருந்தான்..
பேசிக் கொண்டே சாப்பிட்டான்..
ராஜா, ஓரிரு வார்த்தையில் பதில் கூறினான்..
மரகதம் இவர்களுக்கு பரிமாறிக் கொண்டே பாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தார்..
[the_ad id=”6605″]
முதலில் எழுந்த ராஜா, கை கழுவ பின் முற்றம் சென்றான்..
மதுவும் உண்டு விட்டு பின் புறம் சென்றாள்..
கை கழுவி விட்டு திரும்பையில், ராஜா அவள் அருகே கைகளை கட்டிய படி நின்றிருந்தான்..
இவளையே கூர்ந்த படி.
ஒரு நொடி திகைத்தவள்..தலை குனிந்த படி அவனை தாண்டி செல்லப் போனாள்..
“எப்போ கிளம்புற??”
நம்மிடம் தான் பேசினானா??,கேள்வியாய் திரும்பி பார்த்தாள்..
“உன்னை தான் கேட்குறேன்..எப்போ கிளம்புற,இங்கிருந்து..??”
அவன் கேள்வியில், பதில் அற்று அவனை பார்த்த படி நின்றாள் மது..