வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 3
மறுநாள் காலை மச்சான்கள் மூவரும் ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும் அவர்களை வற்புறுத்தி தங்க வைத்தவன் விருந்துக்கு ஏற்பாடு செய்து அவர்களை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான்.. தங்கைகளை ஒருவாரம் தங்களோடு வைத்திருந்து அனுப்புவதாக சொல்லவும் அவர்களை மட்டும் விட்டுவிட்டு மூன்று குடும்பமும் கிளம்புவதாக இருந்தது..
பேச்சு மெல்ல மெல்ல அவன் திருமண விசயத்திற்குதாவ தன் குடும்பத்தினர் அனைவரையும் அமரவைத்து தன் தந்தையையும் அழைத்தவன்,
“ அப்பு இனி நான் வெளிநாட்டுக்கு போறதா இல்ல.. இங்கனயே தங்கி விவசாயம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. அதான் அடமானத்தில இருந்த நிலத்தை எல்லாம் திருப்ப சொல்லியிருந்தேன்… இனி அடுத்து மழைக்காலம்தானே…அதான் இனி அது சம்பந்தமான வேலைகளை பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..”
மூத்த மச்சான்,” ஏன் மாப்பிள்ள அங்க லட்சக்கணக்கில சம்பளம் வாங்கிட்டு இங்க வானம் எப்ப மழைபொழியும்னு பார்த்துட்டு இருக்க போறிகளா..??”
“இல்ல மச்சான் எவனோ ஒருத்தன்கிட்ட ராப்பகலா கண்முழிச்சு கைகட்டி சேவுகம் பார்க்கிறதுக்கு நிலத்தை நம்பி உழைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. என்னோட வேலைப்பார்த்த நிறைய பேர் அந்த மாதிரி விவசாயத்தில இறங்கி இன்னைக்கு நல்லா வந்துட்டாங்க.. குடும்பத்தை விட்டு எங்கயோ கண்காணாம இருக்கிறதுக்கு கொஞ்சம் வருமானம் வந்தாலும் குடும்பத்தோட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்… இனியாவது மனசுக்கு பிடிச்ச வேலைப்பார்க்கிறேனே.. நிச்சயம் இதுல நான் ஜெயிப்பேன் மச்சான்..”
ராமையாவோ, “இதெல்லாம் எதுக்கு தம்பி எங்ககிட்ட சொல்லிக்கிட்டு உனக்கு தெரியாதா.. உனக்கு எது பிரியமோ அத பண்ணு ..?”
தங்கைகளுக்கும் தாய்க்கும் மிகுந்த சந்தோசம் சுந்தர் தங்களோடு இருப்பதில்.. “ஆத்தா சுந்தரிய பத்தி கவலைப்படாதிக.,. மத்த தங்கச்சிகளதான் என்னால அன்னைக்கு நிலைமையில மேக்கொண்டு படிக்க வைக்க முடியல.. இப்ப அப்படியில்ல அவ விரும்புறத படிக்க வைக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்.. அவ கல்யாணத்தையும் நல்லா சிறப்பாவே செஞ்சிருவேன்தா..”
“ஏன் தம்பி இப்படி பேசுற ..?? இத்தன விளக்கம் தேவையா.. மூனு தங்கச்சிகள கட்டிக் கொடுத்த உனக்கு இது தெரியாதா.. நீ உன் மனசுக்கு எது படுதோ அத தைரியமா பண்ணுப்பு.. நம்மகிட்ட என்ன இருந்திச்சு.. இது எல்லாமே நீ சம்பாரிச்சது..அத எப்படி காபந்து பண்ணனும்னு உனக்கு தெரியாதா.. எனக்கு ஒரே ஒரு ஆசைதாப்பு நீ கல்யாணத்தை மட்டும் உடனே பண்ணிக்க.. ஒரு மருமகள இந்த வீட்டுக்கு கொண்டு வந்திரு.. அது போதும்..”
“அதுதான்தா.. மூத்த மச்சானை பார்த்தவன் மச்சான் நான் இனி இங்கனதான் உங்களுக்கு சம்மதம்னா உங்க தங்கச்சியோட என் கல்யாணத்தைப்பத்தி மேக்கொண்டு பேசலாம்.. இல்ல உங்களுக்கு என்ன விருப்பமோ தைரியமா சொல்லுங்க.. நல்ல வேலையில இருக்கிற மாப்பிள்ளை வேணும்னாக்கூட சொல்லுங்க நானே பார்த்துச் சொல்றேன்..”
சுந்தர் மறுபடி வெளிநாடு போகாதது மூத்த மச்சானுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.. இருந்தாலும்.. ஏதோ சொல்ல வர தடுத்தவன், “ஒன்னுமே அவசரம் இல்ல மச்சான்.. வீட்ல போய் அத்தை மாமாக்கிட்ட நல்லா கலந்து பேசிட்டு சொல்லுங்க..”
சுந்தர் வந்து இரண்டு மூன்று நாட்கள் கழிந்திருக்க இன்று புது பைக் ஒன்று வாங்கலாம் என நினைத்திருந்தான்.. அவன் தந்தை ஒரு டிவிஎஸ் 50 மட்டும் வைத்திருந்தார்.. அதையும் சற்று தூரமாக எங்காவது போகவேண்டும் என்றால் மட்டும்தான் எடுப்பார் இல்லையென்றால் சைக்கிள்தான் அவருடைய வாகனம்..
தன் மகனை அழைத்த தெய்வானை.. “தம்பி மொதமொத வண்டி வாங்கப் போற.. குலசாமி கோவில்ல போய் பொங்கவைச்சு கோழி, சேவல் நறுக்கிட்டு அப்புறமா போப்பு..”
“ம்ம் சரித்தா..” அவனும் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஐந்து வருடங்கள் ஆனதால் எந்த காரியத்தையும் கடவுளை வணங்கியே செய்யலாம் என முடிவெடுத்தான்..
“ஆத்தா நாயகி அந்த சின்னக்குட்டி கோவிலுக்கு வாராளான்னு கேளு போனதரமும் வீட்டுக்கு ஒதுக்கம்னு கூட்டிட்டு போகலை..??” அவர்கள் வீட்டிலேயே கோழி, ஆடு, மாடு என அனைத்தும் வளர்க்க அதில் எந்த கோழியை பிடிக்கலாம் என பார்த்துக் கொண்டிருந்தார்..
[the_ad id=”6605″]
கைகளில் நெயில்பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தவளோ “ஆத்தா நான் வாறேன்.. ஆனா ஒரு வேலைப்பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்.. அப்புறம் அங்கன வந்து அடுப்ப ஊது, கோழி, சேவ றெக்கையை பறி அது வாட்டுன்னு என்னை படுத்தபடாது சொல்லிட்டேன்..”
“ஏட்டி இவளுக்கு இருக்கிற வாயத்தான்பாரேன்.. உனக்கு வார மாமியாகாரி உன் வாயிலே குத்தப்போரா.. பாரு.. மேக்கொண்டு என்னையும் ரெண்டு சேத்து வைவா.. புள்ளைய இந்த லெட்சணத்துல வளத்ததுக்கு..க்கும்..”
“வைவா வைவா.. அப்புடியெல்லாம் பண்ணினா போன அன்னைக்கு போயிட்டு பொதன் கிழமை திரும்பிரமாட்டேன்..”
“ஆத்தா சௌந்தரம் அந்த வெளக்கமாத்த எடேன் இவள ரெண்டு காட்டு காட்டுறேன்..?” தெய்வானை விளக்கமாற்றை தேடுவதை கண்டவள் உள்ளே ஓடத்துவங்கினாள்..
அங்கு அழகம்மை அப்பத்தா வீட்டிலோ தர்ஷினியை பார்வதி தேளாய் கொட்டி கொண்டிருக்க அவர் மகன் பாலாவோ அவளை வல்லூறாய் சுற்ற ஆரம்பித்தான்.. இன்னும் சாப்பிடக்கூட வெளியில் வராமல் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தவளை ஆறுதல் படுத்தாவிட்டாலும் பரவாயில்லை.. இப்படி கொத்தி குதற வேண்டாம் என்றுதான் அப்பத்தாவிற்கு தோன்றியது..
மாமியார் இருக்கும்வரை வாயை மூடி இருப்பவர் அவர் தலை மறையவுமே தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிடுவார்.. அதுகூட பரவாயில்ல அவர் பேரன் பாலா.. எப்போதுமே அவனுக்கு தர்ஷினி மேல் ஒரு கண்தான்.. அதிலும் அவன்தாயே நொடிக்கொருதரம் அவள்தான் உன்மனைவி என ஏற்றிவிட்டிருக்க.. என்றைக்கிருந்தாலும் அவள் அழகு தனக்குத்தான் என்றிருந்தவன் தர்ஷினியின் நிலைமை மாறவும் தாய் வேறு பெண்ணை கைகாட்ட முதலில் சம்மதிக்கவே மாட்டேன் என முரண்டு பிடித்தான்..
பார்வதி அவனை அதட்டி மிரட்டி பயமுறுத்தி தான் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளச் சொல்ல அவளோ சுமாருக்கும் கீழேதான்..!! இருந்தாலும் நகை, பணம் என ஏகப்பட்டது சீராக கொடுத்திருந்ததால் பார்வதிக்கு அது ஒன்றே குறியாக இருந்தது..
[the_ad id=”6605″]
திருமணம் முடிந்து இந்த நான்கு மாதங்களில் பாதிநாட்கள் அவள் தாய்வீட்டில்தான், தன் தாயை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை.. இப்போதும் தாய்வீட்டிற்குதான் சென்றிருந்தாள்.. அதுவும் பாலாவுக்கு உதவியாக இருக்க சின்ன இடைவெளி கிடைத்தாலும் தர்ஷினி ரூமில்தான்.. அவள் மனம் படும் வேதனைகளை புரிந்து கொள்ளாமல் அவள் அழகை அள்ளிப்பருகதான் நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்..
தர்ஷினியை பார்க்க பார்க்க எப்படியாவது அவளை அடைந்தே ஆகவேண்டும் என்ற வெறியே வந்திருந்தது.. தர்ஷினியை பொறுத்தவரை பாலாவின் பார்வையும் புரியவில்லை அத்தையின் துவேசமும் தெரியவில்லை அவள் உலகமே சூன்யமாய் இருந்தது..
அதிகாலையிலேயே சுந்தர் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு வந்திருக்க சௌந்தரத்திற்கு எட்டு மாதங்களாகி விட்டதால் இந்த கோவிலுக்குள் வரக்கூடாது என்று அவளை வீட்டில் விட்டு துணைக்கு வள்ளியை விட்டு வந்திருந்தனர்.. கோவிலும் அந்த ஊர் எல்லையிலேயே இருந்ததால் சுந்தர் பொங்கல் எல்லாம் வைத்து சாமி கும்பிடும் நேரத்திற்கு வந்து வள்ளியை அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தான்..
அங்கு தாயும் அவருக்கு துணையாக நாயகியும் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க சுந்தரி சொன்னது போல எந்த வேலையும் செய்யமாட்டேன் என சற்று தள்ளியிருந்த குளக்கரையின் படித்துறையில் அமர்ந்து அங்கிருந்த மீன்களுக்கு பொறிகளை போட்டுக் கொண்டிருந்தாள்..
இரண்டு பெரிய மண்குதிரைகள் முன்னால் இருகாலை தூக்கியபடி இருக்க கையில் அரிவாளோடு பெரிய கருப்பர் சிலை.. கோவிலாக இல்லாமல் வெட்டவெளியில்தான் நின்றிருந்தார்.. அவரை வணங்கியவனுக்கு மனதில் அப்படி ஒரு நிம்மதி.. சுற்றிலும் தாழைமடல் அப்படியே பெரிது பெரிதாக புதர் போல வளர்ந்திருக்க அந்த தாழம்பூவின் மனம் அப்படி மணத்து இந்த இடத்தையே சுகந்தமாக்கியது..அதன் நடுவில்தான் இந்த கருப்பரும் நின்றிருந்தார்.. அதனால் இதற்கு பெயரே தாழைமடல்கருப்பர்.. அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவனுக்கு அப்பத்தாவின் நினைவு..
சிறுவயதில் அப்பத்தாவின் கையை பிடித்துக் கொண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது இங்கு வந்துவிடுவான்.. ஒருமுறை அப்படி வந்திருக்கும்போது அங்கிருந்த தாழம்பூவை அப்பத்தா கவனிக்காத நேரத்தில் இவன் விளையாட்டு போல பறித்து தன் டவுசர் பையில் போட்டு வீட்டுக்கு கொண்டு வந்திருக்க இரவு அவன் படுக்கைக்கு அருகே பெரிய நல்லபாம்பு ஒன்று படம் எடுத்து நின்றிருந்தது. இரவில் தண்ணீர்குடிக்க எழுந்த அப்பத்தா அதை பார்த்து பதறி அலற அது யாரையும் ஒன்றுமே செய்யாமல் வந்தவழியே திரும்பி போயிற்று..
மறுநாள் காலையில்தான் அவன் டவுசர் பையில் இருந்த அந்த பூவைபார்த்து.. “போச்சு கோவில் பூவை பறிக்கக்கூடாதே சாமி குத்தமாயிருமே..” குடும்பமே பதற அவனை உடனே கோவிலுக்கு அழைத்து வந்த அப்பத்தா அந்த பூவை அங்கேயே போடச் சொல்லி கருப்பனிடம் மன்னிப்பு கேட்டு இதனால் தன் பேரனுக்கு எதுவும் ஆகக்கூடாது என வேண்டிக் கொண்டவர் தொடர்ந்து மூன்று வருடம் மாசிகளரி திருவிழாவின் போது தன்முடியை காணிக்கையாக கொடுத்திருந்தார்.. அது நினைவுவர அப்பத்தாவின் பாசத்தில் இப்போதும் கண்கள் கலங்கியது..
அது அப்போது அவனுக்கு பயமாக தெரிந்தாலும் இப்போது யோசிக்கும்போது இந்த தாழம்பூ காட்டில் பாம்புகள் அதிகமாக திரியும் .. அந்த பூ வாசத்திற்கு அது அந்த இடம்தேடி வர வாய்ப்பிருப்பதால்தான் அதை பறிக்ககூடாது, அதன் அருகே போகக்கூடாது போனால் தெய்வக்குற்றம் வரும் என சொல்லியிருப்பார்களோ என்று யோசிக்க தோன்றியது..
அப்படியே அந்த தாழம்பூவின் மனத்தில் தன்னை மறந்து கண்ணை முடியிருந்தவனுக்கு தான் இந்த உலகத்திலேயே இல்லாமல் அப்படியே வேறு உலகத்தில் இருப்பது போலிருக்க மெதுவாக கண்ணைத்திறந்து பார்த்தவனுக்கு புகை மண்டலத்தின் நடுவே தேவதையாய் தர்ஷினி நடந்து வருவது போலிருந்தது..
அன்று போல் அரைகுறை ஆடையில் இல்லாமல் இன்று ரத்தசிவப்பு நிறத்தில் டிசைனர் சேலை அதற்கேற்றாற்போல பிளவுஸ்.. அவளை இன்னும் எடுப்பாக காட்ட அன்று போட்ட கறுப்பு உடையே தேவலாம் போலிருந்தது.. இவளின் இந்த அழகில் அன்றைவிட அதிகம் மயங்கிவிட்டான்..தலையை விரித்துவிட்டு உச்சியில் கிளிப் குத்தி தலைநிறைய பூவோடு வானுலகத்தில் இருந்து இறங்கி வந்தாற்போல இருக்க.. நாம அந்த பொண்ணையே நினைச்சிட்டு இருக்கதால சேலைகட்டி வந்திருச்சோ.. இன்னும் கனவில் இருப்பது போலவே இருந்தது.. இது உண்மையா, கனவா என்பதே அவனுக்கு தெரியவில்லை..
[the_ad id=”6605″]
அப்படியே மூச்சை இழுத்துப்பிடித்துக் கொண்டிருந்தான்.. அம்மன் சன்னதி முன் இருந்த பெரிய மணியை யாரோ அடிக்க சட்டென சுற்றுப்புறம் உணர்ந்தவன் கண்ணை கசக்கிவிட்டு பார்க்க உண்மையிலேயே அங்கு புகை மண்டலத்திற்கு நடுவில் தர்ஷினி வந்து கொண்டிருந்தாள்.. என்ன அந்த புகை.. தெய்வானை பொங்கல் வைக்கும் அடுப்பிலிருந்து வந்து கொண்டிருந்தது..!!!
அப்பத்தாவோடு தர்ஷினி கோவிலுக்கு வந்திருந்தாள்.. தாயை பார்க்கவும் அப்பத்தா அவர்களோடு பேச்சில் இருக்க தர்ஷினி மெல்ல நடக்கத் துவங்கியிருந்தாள்.. கூடவே ஒரு இளவயது பையன் முகத்தை பார்க்கையில் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.. அம்மன் சன்னதியில் இருவரும் வணங்கி இங்கு கருப்பர் கோவிலுக்கு வர அங்கு அப்பத்தா தெய்வானையோடு பேசிக் கொண்டே அங்கேயே அமர்ந்துவிட்டார்.. தெய்வானை எல்லாரும் சேர்ந்து சாமி கும்பிடலாம் என சொல்ல அப்பத்தாவிறகு பேச்சிற்கு ஒரு ஆள்கிடைத்த சந்தோசம்..