Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என்னுள்ளே💞15

அத்தியாயம் _15

என்னை ஏன்டி டாக்டர் கூப்பிடறாங்க? சுகந்தி புரியாமல் மகளை பார்த்தார்.

தெரியலம்மா… அவளுக்கு பயத்தில் பற்கள் கிட்டி கொண்டது.

தொடர்ந்து முகூர்த்த தேதி வருது. ஏகப்பட்ட ஜாக்கெட் துணி  வாங்கி வச்சிருக்கேன். அதை தைக்கிறதா? உன் கூட அலையறதா? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்… சுகந்தி தலையில் அடித்துக் கொண்டார்.



Advertisement

கதவை தட்டிவிட்டு தயங்கியபடியே தாயை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் ஸ்வாதி.

நிமிர்ந்து பார்த்த டாக்டர்… நீ கொஞ்சம் வெளியில் இரும்மா… என்று ஸ்வாதியை வெளியில் அனுப்பினார்.

சுகந்தியிடம் குடும்பம், தொழில் என்றெல்லாம் கேட்டறிந்த மருத்துவர்…. ஸ்வாதி பற்றிய பேச்சில் வந்து நிறுத்தினார்.

Advertisement

ஸ்வாதி யாரிடமும் கலகலப்பாக பேச மாட்டாள். எந்நேரமும் தனிமையில் தான் இருப்பாள் என்று சுகந்தி கூற…

Advertisement

அவளுடைய இந்த நிலைக்கு நீங்க தான் முதல் காரணம் என்றார் டாக்டர்.

என்ன சொல்றீங்க? என் பொண்ணுக்கு என்னாச்சு? சுகந்தி பயத்துடன் நோக்கினார்.

குடும்பத்தில் கிடைக்காத அன்பு வெளியில் யாரிடமாவது கிடைக்கும் போது பெண் பிள்ளைங்க ஈஸியா ஏமார்ந்துடறாங்க….

Advertisement

“நீங்க என்ன சொல்ல வறீங்க?”

“உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கா…! “

பேச்சிழந்து சிலையாய் அமர்ந்திருந்தார் சுகந்தி.

வருத்தமான விஷயம் என்னான்னா… உங்க பொண்ணுக்கு இது பத்தி எதுவும் தெரியல… பாவம் விளையாட்டு குழந்தையா இருக்கா… எங்கோ ஏமார்ந்திருக்கா.

வழிந்தோடும் கண்ணீரோடு திக் பிரம்மையுடன் அமர்ந்திருந்தார் சுகந்தி.

இதோ பாருங்க….அவ படிக்கிற பொண்ணு…. ஏதோ அறியாமையில் நடந்திருக்கு. ரொம்ப நாள் தள்ளி போயிருக்க வாய்ப்பு இல்லை.
டேபிலேட் கொடுத்தே க்ளீன் பண்ணிடலாம்….. டாக்டர் எடுத்து கூறினார்.

வலிக்கும் இதயத்துடன் படைத்தவனை நொந்தபடி வெளியேறினார் சுகந்தி.

அய்யோ… நான் என்ன பண்ண போறேன்…? ” இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் மானம் மரியாதை போயிடுமே…. “

பயத்துடன் தாயை பார்த்தபடியே வந்தாள் ஸ்வாதி.

டாக்டர் என்ன சொல்லி இருப்பார்? அவளுக்கு கவலையாய் இருந்தது.

வீட்டிற்கு வந்த சுகந்தி கதவை தாழிட்டவர்…. கொத்தாக மகள் தலை முடியை பற்றி இழுத்தார்.

அடிப்பாவி என் தலையில் இடியை இறக்கிட்டியே…!

எவன் கிட்டயோ ஏமார்ந்து வயித்தை ரொப்பிக்கிட்டு வந்திதிருக்கியே… மூலையில் இருந்த துடைப்பத்தை எடுத்து சரமாரியாக வெளுக்க ஆரம்பித்தார்.

ம்மா…. வேண்டாம்மா… வலிக்குதும்மா…அலறினாள் ஸ்வாதி.

எவன்டி உன்னை ஏமாத்தினவன்…? எவன் கிட்ட பிள்ளை வாங்கிட்டு வந்திருக்க….?

துடைப்பம்… பிய்ந்து போனது…. வாரை வாரையாய் அவள் மேனி எங்கும் கீறி ரத்தம் கசிந்தது.

ஸ்வாதிக்கு தாயின் வெளிப்படையான பேச்சில் விபரீதம்  புரிய ஆரம்பித்தது.

மூலையில் சாய்ந்து வாயை பொத்தி கொண்டு அழுதாள்.

சொல்லுடி..! யாரவன்..? மீண்டும் அடிக்க ஆரம்பித்தார் சுகந்தி.

என் கூட  படிக்கிற ரூபேஷ்ம்மா…நடந்த அனைத்தையும் விசும்பலினூடே சொன்னாள்.

நான் எந்த தப்பும் பண்ணலம்மா…. அவள் கை கூப்பினாள்.

இதை விட வேற தப்பு வேணுமா? மறைக்கிற தப்பா நீ செய்திருக்க…?

ஊரே கூடி கூடி பேசும், காரி மூஞ்சு மேல  துப்புமே…. ஏற்கனவே கட்டினவனால் எனக்கு இருக்கிற அவமானம் போதாதா…? பாழும் தெய்வம் என்னை சோதிக்குதே…முகத்தில் அறைந்து கொண்டு அழுதார் சுகந்தி.

யாரிடமும் எதுவும் பேசாத சுகந்தி மகளை அழைத்து கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும்  ரூபேஷ் வீட்டிற்கு புறப்பட்டார்.

ரூபேஷின் தந்தையிடம் அனைத்தும் கூறி அழுதார் சுகந்தி.

ரூபேஷின் தந்தை EB யில் பணி புரிபவர். பெரிய மாடி வீட்டில் வசதியாக வாழ்பவர்கள்.

என்னம்மா… ஊரு தான்டி ஊரு வந்து இப்படி எல்லாம் டிராமா போடறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை…. இதெல்லாம் ஒரு பிழைப்பா…? அவர் கர்ஜித்தார்.

ஐயா வார்த்தையை அளந்து பேசுங்க…. சுகந்தி சீறினார்.

ச்சீ… வாயை மூடு…. என்ன பொம்பள நீ…! என்ன பொண்ணு வளர்த்திருக்க…?
எவன்கிட்டயோ ஏமார்ந்து ஏடாகூடமா போனதும் என் பிள்ளை மேல பழியை போடறீங்களா…? ரூபேஷின் தாய் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார்.

பதினேழு வயசு பையன் மேல் அபாண்டமா பழி போட்றீங்க…
வசதியான வீட்டு பையனா பார்த்து கிளம்பிடுவீங்களே…. நாக்கில் நரம்பில்லாமல் பேசினார் ரூபேஷின் தந்தை.

நடப்பதை பயத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் ஸ்வாதி.

ரொம்ப ஆணவமா பேசாதீங்க..! உங்க பையன் தப்பை மறைக்க பார்க்காதீங்க… சுகந்தி குரலை உயர்த்தினார்.

அதிகம் பேசாதேம்மா… இரு என் பையனை கூப்பிடுறேன்.

ரூபேஷ் இந்த பொண்ணை தெரியுமா?

தெரியும் பா என் கூட படிக்கிற பொண்ணு ஸ்வாதிப்பா.

என்ன ஸ்வாதி எங்க வீடு தேடி வந்திருக்கீங்க… ம்? அவன் இயல்பாய் கேட்டான்.

இந்த பொண்ணு எவன் கிட்டயோ ஏமார்ந்து வயித்துல பிள்ளையோட வந்து உன்னை தான் கையை காட்டறா..!

வெட வெட வென நடுங்க தொடங்கியது அவனுக்கு…. அய்யோ இப்படி ஆகி விட்டதே… அவனுக்கு இதயம் எகிறியது

அப்பா….என் கூட படிக்கிற பொண்ணு அவ்வளவு தான். நான் இந்த பொண்ணு கூட பேசினதே இல்லைப்பா…. அவன் எச்சில் முழுங்கியபடி கோர்வையாய் சொல்லி முடித்தான்.

அவன் பதிலில் ஆடி போனாள் ஸ்வாதி.

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று உருகினானே… இப்போது பழக்கம் இல்லை என்கிறானே…. கொதித்து போனாள்

அவளை நிமிர்ந்து பார்க்காமல் பயத்தில் சில்லிட்ட கைகளை ஒன்றுடன் ஒன்றாய் பிணைத்து கொண்டான்.

நீ உள்ளே போ ரூபன்…. இவங்களை நான் பார்த்துக்கறேன். அவன் அப்பா மிதப்பாய் பேசினார்.

விட்டால் போதும் என்று விழுந்தடித்து உள்ளே ஓடினான்.

அடப்பாவிகளா… இவ்வளவு கேடு கெட்ட மனுஷங்களா இருக்கீங்களே…என் பொண்ணை ஏமாத்திட்டீங்களே…. நீங்க நாசமா போயிடுவீங்க… சுகந்தி வாயிலும் வயித்திலும் அடித்துக் கொண்டார்.

ஷ்ஷ்…. எங்க எவன் கிட்ட எப்படி ஏமார்ந்தாளோ உன் பொண்ணு….  நியாயம் கேட்க
இங்கே வந்து நிக்கிறீங்க…!

மரியாதையா வெளியில் போயிடுங்க…. இல்லை போலீசுக்கு போன் பண்ணுவேன். ரூபேஷின் தந்தையின் முரட்டு கத்தலில் நடு நடுங்கி போன சுகந்தி…. ஆற்றாமையுடன் மகளை இழுத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

அடிப்பாவி மகளே…. இப்படி சோரம் போயி நிக்கிறியே…? உனக்கு என்னடி இந்த வயசுல அப்படி கேடு கெட்ட ஆசை…!

அப்பன் ஆத்தாளுக்கு மாப்பிள்ளை தேட வக்கில்லைன்னு நீயே தேடிகிட்டியா….? உன்னை கொன்னு போட்டாலும் தகும். மீண்டும் சரமாரியாக அடித்து துவைத்தார்.

தாயின் சொல் அவளை கொல்லாமல் கொன்றது. மூச்சிருந்தும் பிணமானாள்.

தாயிடம் விளக்கம் சொல்ல அவளுக்கு தெரியவும்  இல்லை….அவள் விரும்பவும் இல்லை.

தொட்டவனையே கட்டி வச்சிடலாம்னு பார்த்தா…. அவன் நான் காரணம்
இல்லைனு கையை விரிச்சிட்டானே…. நான் என்ன பண்ணுவேன்…. அந்த ஏழை தாய் அழுது அரற்றினாள்.

மறுநாள் மருத்துவமனையில் டாக்டரின் காலில் விழுந்தார் சுகந்தி.

நாற்பது நாள் கடந்து விட்டதால் எதற்கும் DNC பண்ணிடறதே நல்லது என்றார் மருத்துவர்.

தனக்கு நடக்கும் அனைத்தையும் பிரம்மை பிடித்தவள் போல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வாதி.

தன் அறியாமையை எண்ணி துடித்து போனாள். வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை.

வாழ வேண்டும், பெரிய படிப்பு படிக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும். அவள் மனதில் அது தான் ஓடியது.

நீ படிச்சது போதும்… வீட்டோட இருந்து சோறு குழம்பு ஆக்க கத்துக்கோ… சுகந்தி மகளின் முகம் பாராது கட்டளை இட்டார்.

நான் படிக்கணும்….. அவள் நெஞ்சம் நிமிர்த்தி உறுதியாக சொன்னாள்.

அப்படியே….. மிதிச்சிடுவேன்… நீ படிச்ச படிப்பு தான் ஆஸ்பத்திரி வரைக்கும் நாறி போச்சே…. வார்த்தை அணுகுண்டை வீசினார் சுகந்தி.

அம்மா…என்னை நம்பு நான் அறியாமையில் தப்பு பண்ணிட்டேன் சத்தியமா இனிமே சரியா இருப்பேன். என்னை பரீட்சைக்கு அனுப்பு….. தாயின் காலை கட்டிக் கொண்டு கதறினாள்.

பெற்ற மனம் பிசைந்தது, நன்றாய் படிக்கும் மகளின் நிலை எண்ணி… பரீட்சைக்கு செல்ல அனுமதி அளித்தார் சுகந்தி.

படித்தது மறந்து போக… பட்ட அவமானமே அவள் நெஞ்சில் நிறைந்திருந்தது.

வைராக்கியத்துடன் தேர்வு எழுதினாள். இனி படிப்பு தான் வாழ்க்கை என்று உணர்ந்து கொண்டாள்.

அவள் வைராக்கியம் அவளை மேம்படுத்தியது.தொன்னூறு சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாள்.

வேதியியல் ஆசிரியை ஹேமாவை சந்தித்து மேற்படிப்பு படிக்க இயலாத தன் குடும்ப சூழலை கூறி அழுதாள்.

விழுது என்னும் டிரஸ்ட் மூலம் பட்டபடிப்பு படிக்க ஏற்பாடு செய்வதாய் கூறினார் அந்த நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியை.

மேற்படிப்பிற்கு சுகந்தி அனுமதி மறுக்க…. வீட்டிற்கே வந்து பேசினார் ஹேமா டீச்சர்.

குடிகார தணிகாசலம் தெளிவாக மகளை படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அவர் வாழ்க்கையில் சரியாய் செய்த ஒரே செயல் அது தான்.

நல்ல மதிப்பெண் இருந்தும்
B.com படிப்பை தேர்ந்தெடுத்தாள் ஸ்வாதி.

மூன்றாண்டு படிப்பு முடிந்தால் ஏதாவது ஒரு வேலை தேடி கொள்ளலாம் என்பது அவள் எண்ணம்.

கனவு,லட்சியம் பின்னுக்கு போய் குடும்ப சூழலே கண்முன் வந்து நின்றது.

சென்னையில் அரசு கல்லூரியில் சீட் கிடைக்க… தாயிடம் சென்று வருகிறேன் என்று கூட சொல்லாமல் கிளம்பினாள் ஸ்வாதி.

கல்லூரியில் அவள் யாருடனும் நெருங்கி பழகியதில்லை…. ஊருக்கு போக வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை.

அம்மாவின் அம்மா இறந்து விட்டபடியால் ஊருக்கு சென்றவள்…. யாருடனும் ஒன்றி பேசவில்லை.

சுகந்திக்கு மனசு வலித்தது. அவள் பிஞ்சு மனசை பேசி கொன்று விட்டோமே என்று துடித்தார்.

சிறப்பு வகுப்பில் (distinction) தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவள்… முதுகலை படிப்பை தொடர விரும்பாமல் வேலைக்கு செல்ல முடிவெடுத்தாள்.

பத்திரிகை விளம்பரம் பார்த்து மேஜிக் டே ஹோட்டலில் அக்கவுண்டண்ட் வேலைக்கு விண்ணப்பித்தாள்.

பிரபாவிற்கு முதல் பார்வையிலேயே அவளை பிடித்துவிட்டது. முன் அனுபவம் இல்லாத அவளை பணியில் அமர்த்த பாலாஜி யோசித்த போதும் அவள் தகுதி பாராமல் துடிப்பும் ஆர்வமும் பார்த்து வேலை கொடுத்தான் பிரபா.

எந்த சிரமமும் இல்லாமல் முதல் முயற்சியிலே வேலை கிடைத்து விட்டாலும் அந்த வேலையில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் ஸ்வாதி.

பிரபாவின் இறுகிய முகம் கண்டு பல முறை இளகி இருக்கிறது அவள் பாறை போன்ற இதயம்.

பட்ட சூடு போதும் என்றே… பதமாய் விலகி இரும்பு போர்வை போர்த்திக் கொண்டாள்.

அவள் கவனமாக தவிர்த்தும் அவன் பார்வையில் விழுந்து விட்டாள்.

அனைத்தும் சொல்லி முடித்தவள்…. வெறுமை படர்ந்த பார்வையுடன் அவனை நோக்கினாள்.

அதிர்ச்சியில் இருந்து மீளாத பிரபா…. உறைந்து நின்றான்.

எல்லாம் சொல்லிட்டேன்… இனி என்னை தொந்தரவு செய்யாதீங்க ப்ளீஸ்…. அவள் கிடு கிடுவென்று வெளியேறினாள்.

——-தொடரும் ——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!