சமையல் என்பது எப்பொழுதுமே மித்ரனுக்கு விருப்பமான ஒன்று. அவன் எந்த அளவுக்கு ரசித்து உண்பானோ அதே அளவுக்கு ரசித்து சமைப்பான். அன்றைய காலை உணவை தயாரித்து வந்து அவன் சாப்பாட்டு மேஜையில் அமரும் போது வீட்டு வாசலில் வந்து நின்றது மகிழினியின் மகிழ்வுந்து. அவள் மகிழ்வுந்தை அதற்கான நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் மித்ரா.
“அதுக்குள்ள சமையல் முடிச்சாச்சா?” என்றபடி அவளும் அவனுடன் உணவு மேஜையில் வந்து அமர்ந்தாள்.
அவன் எதுவும் பேசவில்லை. மௌனமாகவே உணவை உண்டான். அவளும் தனக்கான உணவை தானே பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள். இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தனர்.
“இனிமே உன்னுடைய ஃபேம்க்காக என்னை யூஸ் பண்ணிக்காத….” என்றபடி அவ்விடம் விட்டு அகன்றான்.
அவன் என்ன கூற வருகிறான் என்பது புரியாமல் அவன் பின்னேயே சென்றவள்… “என்ன சொல்ல வர்றீங்க எனக்கு புரியல” என்றாள்.
“அதான எப்பவாவது பொய் சொல்லி நடிக்கிறவங்களுக்கு தெரியும் என்ன பண்ணோம்ன்னு… எப்பவுமே நடிக்கிற உனக்கு எப்படி தெரியும்?”
இங்க பாரு… நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ ஆனா என்னை அதுல இழுக்க வேண்டாம்.எனக்கு என்னுடைய ப்ரைவசி முக்கியம்”
“ஓ… இன்னைக்கு ஷோல உங்கல பத்தி பேசுனத சொல்ரீங்களா?… நான் உங்கள பத்தி தப்பா எதுவுமே சொல்லலயே? “
“உண்மையாவும் எதையுமே சொல்லலையே நீ சொன்னது எல்லாமே பொய்.” என்றபடி அவளை நோக்கி திரும்பினான்.
“எதைப் பொய் ன்னு சொல்றீங்க… நீங்க வானதியோட ஃபேன்தான?
“நான் அதைப் பத்தி கேட்கலை நான் எதைப்பற்றி கேட்கிறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்… தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்காதே”
“இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை நான் லவ் பண்றேன் சொன்னது பிரச்சனையா இல்ல அத வானதி கிட்ட சொன்னது பிரச்சனையா?”
“இப்ப எதுக்கு டி தேவை இல்லாம அந்த பொண்ண இழுக்குற”
“ஆமா… உங்களுக்கு அவளை தான பிடிக்கும் அவளை பத்தி ஏதாவது சொன்னா கோவம் வரும்”
“ஆமாண்டி எனக்கு அவளை தான் பிடிக்கும்… ஆனா உன்ன மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க… பெயருக்காகவும் புகழுக்காகவும் என்ன வேணா செய்வ நீ…. அத நான் நிச்சயதார்த்தத்துக்கு முந்தின நாளும் பாத்துட்டேன் இன்னைக்கும் அத மறுபடியும் பாத்துட்டேன்…. இந்த பேர் புகழ் இதுக்காக உன்னோட உணர்வுகள கூட பொய்யா உருவாக்கிட்ட இல்ல?” என்றபடி அவன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
மகிழினியின் மனம் கனத்து போனது. தினமும் அவர்களுக்குள் ஏதாவது ஒரு வாக்குவாதம் வருவது வழக்கம் தான். எலியும் பூனையும் தான் இருவரும். வெளியே இருந்து பார்த்தால் அவர்களுடைய பல சண்டைகள் தேவையற்றவையாக தோன்றும். பெரும்பாலும் இந்த வாக்குவாதங்களை ஆரம்பிப்பது மகிழினியாகத்தான் இருக்கும். இவள் மட்டும் பேச்சு கொடுக்கவில்லை என்றால் அப்படி ஒருத்தி வீட்டில் இருப்பதையே அவன் மறந்து விடுவான். அவளே பேச ஆரம்பித்தாலும் அது எப்படியும் சண்டையில் தான் போய் முடியும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல முதன் முதலில் மகிழினி மித்ரனின் மனதில் ஏற்படுத்திய பின்பம் தவறானது. அதனால் எப்பொழுமே அவள் அவன் கண்களுக்கு தவறாகத்தான் தெரிந்தாள்.
அவளுக்கோ அவனுடனான இந்த திருமணமே மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்க இப்படியான வாக்கு வாதங்கள் எல்லாம் அவளை பெரிதாக பாதித்ததில்லை. ஆனால் இன்று ஏனோ ஒரு வலி அவள் மனதில் எழுந்தது. அது எதனால் என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவளுடைய காதல் உணர்வுகளை அவன் பொய் என்பதாலா? இல்லை இன்னொரு பெண்ணை அவள் முன் உயர்த்தி பேசியதாலா?… பொதுவாகவே பெண்களுக்கு தங்களுடைய கணவன் தன்னை விட ஒரு பெண்ணை… அது அவனுடைய அம்மாவாகவோ மகளாகவோ இருந்தாலும் கூட அதிகமாய் நேசிப்பது பிடிக்காது. அப்படி இருக்க யாரோ ஒரு பெண்ணை அவன் பிடிக்கும் என்றது அவள் மனதினை கனக்கச் செய்தது. அவனுடைய இந்த பேச்சிற்கு அவள் தான் காரணம் என்பதும் கூட அவளுக்கு உரைக்கவில்லை.
தன்னுடைய அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள்… அலமாரியில் இருந்து தன்னுடைய பழைய கிறுக்கல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை எடுத்தாள். “மகிழினி ஆறாம் வகுப்பு” என்று முதல் பக்கத்தில் அழகான கையெழுத்தில் எழுதி இருக்க… அவளுடைய எழுத்துக்களின் முதல் அத்தியாயமும் அதில் தான் ஆரம்பித்திருந்தது. கூடவே நம் நாயகனைப் பற்றிய கிறுக்கல்களும். பக்கங்களைப் புரட்டியவளின் கண்கள் ஒரு பக்கத்தில் நிலைத்தது. அதில் இருவரின் பெயர்களையும் அருகருகே எழுதி இருவர் பெயரிலும் உள்ள பொதுவான எழுத்துகளை மட்டும் அடித்திருந்தாள். அவள் படித்த காலத்தில் இது ஒரு பிரபலமான விளையாட்டு. பள்ளி பருவத்திலேயே திரைப்படங்கள் காதலை கற்றுக் கொடுத்திருந்த காலமது. அப்படி திரைப்படம் கற்றுக் கொடுத்திருந்த விளையாட்டு தான் அது. இருவர் பெயரை எழுதி அதில் பொதுவான எழுத்துக்களை அடித்துவிட்டு எஞ்சி இருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கையை கொண்டு ஃப்ளேம்ஸ் ( Flames) என்னும் ஆங்கில வார்த்தையை அடிப்பார்கள் அதில் அனைத்து எழுத்துக்களும் அடிபட்டு இறுதியில் எஞ்சி நிற்கும் எழுத்துக்கு உரிய சொல்லே அவர்கள் இருவருக்குமான பந்தம் என்பதே அந்த விளையாட்டு. அதில் மகிழினிக்கும் மித்தரனுக்கும் வந்த எழுத்து M அதன் பொருள் திருமணம். எப்பொழும் அதை பார்த்து மகிழ்ச்சி அடைவாள். அது விளையாட்டாக இருந்தாலும் அவள் விஷயத்தில் உண்மையில் பலித்திருக்கிறது. ஆயினும் எப்பொழுதும் அவள் மனதில் தோன்றும் மகிழ்ச்சி இன்று அதை காணும் போது அவளிடம் இல்லை. பள்ளி பருவத்தில் திருமணம் என்றாலே அதில் காதலும் அடக்கம் என்று அவள் நினைத்திருக்க… இப்பொழுது தான் எல்லா திருமணத்திலும் காதல் இருப்பதில்லை என்னும் நிதர்சனம் அவளுக்கு புரிகிறது. அவன் தன்னுடைய காதல் உணர்வுகளை நடிப்பென்று கூறியது… அவளுக்கு வலியையும்… இந்த நிலை இப்படியே நீடித்து விடுமோ என்ற பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியது. இப்படியான சிந்தனை ஓட்டத்தால் அவள் கண்களில் வழிந்த நீர் அவள் கையில் இருந்த அந்த புத்தகத்தில் விழுந்து அந்த எழுத்துகள் அழிய ஆரம்பித்தது.
புத்தகத்தை மூடியவளால் கண்களில் வழியும் நீரை நிருத்த முயலவில்லை.
அடுத்த அறையின் கதவை கோபமாய் அடைத்து சென்ற மித்ரனுக்கோ… தன்னுடைய திருமண நிச்சயத்தின் முதல் நாள் அவள் பேசியது நினைவிற்கு வந்தது.
“என்னை யாருன்னு நினைச்சீங்க? மித்ரா… நாளைக்கு நிச்சயத்துக்கு யார் எல்லாம் வர்றாங்கனு தெரியுமா? இப்போ வந்து சொன்னா… கல்யாணத்தை நிறுத்த முடியுமா? இது பாருங்க தப்பு உங்களோடது… முதல்லயே நீங்க சொல்லி இருக்கணும்… இப்போ கல்யாணத்த நிறுத்தினா எனக்குதான் அவமானம்.. எனக்கு என்னோட பேரு புகழ் எல்லாமே ரொம்ப முக்கியம்.. அத யாருக்காகவும் எதுக்காகவும் இழக்க நான்… தயாராக இல்லை… இந்த கல்யாணம் நடக்கணும் என்னோட அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது. புரிஞ்சதா? வேற ஏதாவது பண்ணி கல்யாணத்த நிறுத்தலாம்ன்னு ட்ரை பண்ணீங்க… உங்க மேல மானநஷ்ட வழக்கு போட வேண்டியதிருக்கும்” அவளுடைய வார்த்தைகள் இப்பொழுது நினைத்தாலும் அவனை சினம் கொள்ளச் செய்தது.
‘மிரட்டி கல்யாணம் பண்ணி கிட்டு காதலாம்…. கத்திரிக்காவாம் ச்ச எந்த மாதிரி வாழ்க்கை துணை வரணும்னு ஆசை பட்டேன் இப்படி அகிடுச்சே’ என்று எண்ணியவாரு அறையை அளந்து கொண்டிருந்தான்…
*****
அப்பொழுது தான் வேலையை இழந்திருந்தான் மித்ரன். வேலை போவது அவனுக்கு புதிதில்லை. அவன் ஒரு வேலையில் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தால் தான் ஆச்சரியம். என்ன… இந்த முறை அவனுடைய சான்றிதழ்களும் அலுவலகத்தில் மாட்டிக் கொண்டிருப்பதால் வேறு வேலையும் தேட முடியாமல் இருந்தான்.
அதற்கு முன்பாகவே அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவனுடைய கெட்ட நேரத்திற்கு வேலை போனதும் தான் அவனுக்கு வரன் அமைந்தது. மித்ரனின் குடும்பம் மத்திய வகுப்பைச் சேர்ந்தது தான். தந்தை முருகன் ஒய்வு பெற்ற ஆசிரியர். தாய் கனகவல்லி இல்லத்தரசி. முப்பது வயதை நெருங்கி கொண்டிருந்த அவனுக்கு பார்க்கும் வரங்கள் எல்லாம் தட்டிக்கொண்டே போனது. காரணம் அவனுடைய இந்த நிலையில்லா வேலை. அப்படிபட்ட சூழ்நிலையில் வந்த வரன் தான் மகிழினி.
அவனுக்கு வேலை இல்லை என்பதனை மறைக்க வேண்டும் என்று அவன் தந்தை நினைக்கவில்லை. எப்படியும் பெண் வீட்டாரே அதை தெரிந்து கொள்வர். நாமாக எதையும் தடுக்க வேண்டாம் என்றே அவர் நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அல்லாது பெண் வீட்டினரிடம் இருந்து வந்தது நிச்சயத்திற்கான தேதியும் கூடவே திருமணத்திற்கான தேதியுமே…
அந்த நேரத்தில் மித்ரன் தன் நண்பன் ஒருவன் மூலம் வேலை ஏற்பாடு செய்ய வெளியூர் சென்றிருந்தான். திரும்பி வந்தவன் இந்த செய்தியை கேட்டு…
“ஏன் பா நீங்க அவங்க கிட்ட எதுவுமே சொல்லலயா?”
“இல்லை டா அவங்களுக்கா எப்படியும் தெரிஞ்சிரும்னு தான்….”
“இல்லப்பா அவங்க கிட்ட உடனே சொல்லுங்க எனக்கு வேலை இல்லைன்னு”
“டேய் அந்த பொண்ண பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணா இருக்குடா…. வேலை இப்ப இல்லன்னா என்ன கூடிய சீக்கிரம் கிடைச்சுடும் அதுக்காக அந்த பொண்ண விட வேண்டாம் டா” என்றார் அவன் அன்னை கனகவல்லி.
“நீங்க போய் சொல்லலனா நானே போய் சொல்ல போறேன்…. நான் கிளம்புறேன்” என்றபடி தன் அப்பாச்சியை நோக்கி நடந்தான்.
“டேய் நில்லுடா” என்று அவன் அன்னை அழைப்பதை காதில் கேட்காமல் சென்று விட்டான்.
அவன் அவளுடைய இல்லத்திற்கு சென்ற பொழுது… அங்கே இருந்தது மகிழினி மட்டுமே, அவளுடைய பெற்றோர்கள் இருவரும் திருமண வேலைகள் காரணமாக வெளியே சென்றிருந்தனர். அவனை அங்கே எதிர்பார்க்காத மகிழினி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் அவனோ அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை “இங்கே மகிழினின்றது”….. என்று அவன் கேள்வியாய் நிறுத்த….. தன் நிழற்படத்தை கூட அவன் பார்க்க வில்லை என்பது அவளுக்கு புரிந்தது.
“நான் தான் மகிழினி… வாங்க உள்ள வந்து உட்காருங்க…..” என்று அவள் அவனை உள்ளே அழைக்க அவன் தயங்கியவாரு அவள் பின்னால் நடந்தான்.
அவனுக்கு பருக நீர் எடுத்து வந்தவள்… “என்ன சாப்பிடுறீங்க” என்று கேட்க…. இல்லங்க அதெல்லாம் எதுவும் வேண்டாம்….. “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்….. எனக்கு வேலை போயிடுச்சு… அதோட என்னோட சர்டிபிகேட்ஸ்சும் இப்போ என்கிட்ட இல்ல… மிஸ்டேக் எங்க சைட்ல தான்… ஸோ கல்யாணத்தை நிறுத்திடலாம்” அவனுக்கு அவளுடைய வீட்டினைப் பார்த்ததுமே அவளுடைய செல்வச் செழிப்பு புரிந்துவிட்டது. இந்தப் பெண் தங்கள் குடும்பத்திற்கு சரிவர மாட்டாள் என அப்பொழுதே முடிவு செய்து விட்டான். கூடவே ஒரு கேள்வியும் எழுந்தது… தன்னிடம் என்ன இருக்கிறது என்று இப்படி ஒரு அழகான வசதியான பெண்ணிற்கு தன்னை தேர்ந்தெடுத்தனர்? இவளுடைய பெற்றோர்.
அவன் நிதானமாக தான் பேசினான். ஆனால் அதை கேட்ட மகிழினிதான் படபடத்து விட்டாள்… இருக்காதா பின்னே இந்த திருமணத்திற்காக அவள் எண்ணெற்ற கோல்மால் செய்திருக்கிறாளே… அவனுக்கு வேலை போனது கூட அவள் அறிந்ததே…
ஏற்கனவே இந்த சம்மந்தத்தில் அவளுடைய பொற்றோருக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. ஆனாலும் மகளின் விருப்பத்திற்காகவே இறங்கி வந்திருக்கின்றனர். இப்பொழுது மித்ரனுக்கு வேலையும் இல்லை என்று தெரிந்தால்? இந்த திருமணம் நடப்பது சாத்தியமில்லை.
“என்னை யாருன்னு நினைச்சீங்க? மித்ரா… நாளைக்கு நிச்சயத்துக்கு யார் எல்லாம் வர்றாங்கனு தெரியுமா? இப்போ வந்து சொன்னா… கல்யாணத்தை நிறுத்த முடியுமா? இது பாருங்க தப்பு உங்களோடது… முதல்லயே நீங்க சொல்லி இருக்கணும்… இப்போ கல்யாணத்த நிறுத்தினா எனக்குதான் அவமானம்.. எனக்கு என்னோட பேரு புகழ் எல்லாமே ரொம்ப முக்கியம்.. அத யாருக்காகவும் எதுக்காகவும் இழக்க நான்… தயாராக இல்லை… இந்த கல்யாணம் நடக்கணும் என்னோட அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது. புரிஞ்சதா? வேற ஏதாவது பண்ணி கல்யாணத்த நிறுத்தலாம்ன்னு ட்ரை பண்ணீங்க… உங்க மேல மானநஷ்ட வழக்கு போட வேண்டியதிருக்கும்”
மித்ரா… அவன் ரசித்த எழுத்துகளின் பின்பம். அவளுடைய எழுத்துகளில் அவன் உணர்ந்த காதல்… அது பெருங்கடலை விட ஆழமானது.
ஆனால் இன்று அவள் உறைத்த இந்த வார்த்தைகள்…. காதலை மதிக்கும் ஒருவரால் இப்படியும் பேச முடியுமா?
அவளுடைய எழுத்திற்கும் இன்றைய அவளுடைய பேச்சிற்கும்…. மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை கண்டான் மித்ரன்…. நம்ப முடியவில்லை அவனால் அவள் தான் மித்ரா என்பதனை.
அவள் மகிழினி யாய் இப்படி பேசி இருந்தால் கூட அது அவனை இந்த அளவிற்கு பாதித்திருக்காது. ஆனால் மித்ரா இப்படி பேசியது தான் அவனால் தாங்க முடியாது போனது….
*****
அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மித்ரனுக்கு…. ஏனோ அவளை திட்டுவதற்காகவாவது மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஒரு உந்துதல் அது ஏன் என்று அவன் அறியவில்லை. அவள் அறைக்கு சென்றவன் கண்டது அவளுடைய கலங்கிய கண்களை தான். அவனைக் கண்டதும் சட்டென சுதாரித்தவள் மறுபுறம் திரும்பி அமர்ந்து கொண்டாள். ” என்ன?” என்று அவள் கேட்க… ” சாப்பாடு ரெடி சாப்பிட வா…” என்றான் உண்மையில் அவன் சமைக்க ஆரம்பித்திருக்கவே இல்லை… எதற்கு வந்தோம் என அவனே அறியாத போது என்னவென்று கூறுவான் அவளிடம்?
“எனக்கு பசிக்கல… நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்” என்று அவள் கூறிய உடனேயே அவ்விடம் விட்டு சென்று விட்டான்.
‘ கொஞ்சம் கூட அக்கறையே இல்லை… பசிக்கலை ன்னு சொன்னா இன்னொரு தடவை கூப்பிட்டா என்னவாம்… ஒடனே போயாச்சு’ என்று அவள் அவனை நிந்தித்துக் கொண்டிருக்க….
அவனோ… ‘இப்போ மட்டும் அவ சரி சாப்பிட வர்றேன்னு வந்திருந்தா என்னடா பண்ணிருப்ப… கொஞ்சம் கூட மூளையே இல்லாம இப்படியா கேட்டு வைப்ப?’
‘நான் என்ன பண்றது அவள் அழறத பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்து போச்சு’ என்று தன்னுடனேயே பேசிக்கொண்டான்.
‘சரி இல்லையே தம்பி… ஒரு வேலை லவ் வந்துடுச்சோ….”
‘ச்ச ச்ச நான் ரொம்ப ஓவரா பேசிட்டனோ? அதனால தான் அழுதாலோன்னு நினைச்சேன்…. அவ்வளவுதான் லவ்லாம் ஒன்னுமில்லை’ என்று தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டு சமையலை ஆரம்பித்தான்.
ஞாயிற்றுக்கிழமை… பிரியாணி செய்யலாம் என்று அவன் அதற்கு தேவையானவற்றை ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போதே… சமையல் அறைக்குள் நுழைந்தாள் மகிழினி “சாப்பிடலாமா ?” என்ற கேள்வியுடன்
‘மாட்டுன டா மித்ரா’ என மனதிற்குள் புலம்பியவன்… அவளிடம் கெத்தாக “பசிக்கலன்னு சொன்ன” என்று கேட்க…
“ம்ம்ம்…. இப்போ பசிக்குது” என்றாள் அவள்.
இனி உண்மையை மறைக்க முடியாது என நினைத்தவன் “இன்னும் சமைக்கல” என்றான்
“அப்போவே சமைச்சுட்டேன் சாப்பிட வா ன்னு கூப்பிட்டீங்க?”
“ம்ம்ம்…. இப்போ சமைக்கல” என்றான் அவளைப் போலவே…
அவளை மேலும் பேச விடாமல் தடுப்பதற்காக… “எப்பவும் உனக்கு சமைச்சு கொட்டிக்கிட்டே இருக்க நான் ஒன்னும் சமையல்காரன் இல்ல” என்றான். இது அவன் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான்… அவளும் அவனுக்கு போட்டியாய் “சமையல்காரன் நல்லா இல்லை வேணும்னா செஃப் ன்னு வச்சுக்கலாம்” என்பாள்.
ஆனால் இன்று அவளுடைய மனநிலை அப்படி பேச அனுமதிக்கவில்லை. மாறாக “இனிமேல் நீங்க சமைக்காதீங்க” என்றபடி தன் மகிழ்வுந்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.
‘என்ன ஆச்சு இவளுக்கு… இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்பட்டுட்டு போறா? எப்பவுமே நான் இப்படித்தான பேசுவேன்… கோவமா கூட சொல்லலையே?’ என்று அவன் விதவிதமாய் யோசித்துக் கொண்டே தன் சமையல் பணியை தொடர்ந்தான்.
ஆனால் மதியம் சாப்பிடத்தான் மகிழினி வரவில்லை… அவள் வரும்போது இரவாகி இருந்தது.
அவள் உள்ளே நுழைந்ததும்… வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவனை கண்டும் காணது தன் அறையை நோக்கி நடக்க “எங்க போயிருந்த இவ்வளவு நேரம்? சாப்பிட்டியா?” என்ற அவன் கேள்வி அவளை நிறுத்தியது.
இல்லை என்றவாறு தலையை அசைத்தவள் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். இப்பொழுது அவள் கையை பிடித்து நிறுத்தியவன். ” வா சாப்பிடலாம்” என்று அவளுடைய கைகளை விடாமல் அவளை அழைத்துச் சென்று சமையல் மேஜையில் அமர வைத்து அவளுக்கு பரிமாறினான். முதலில் மறுத்தவள் பின்பு மதியம் முதலே சாப்பிடாமல் இருந்தால் ஏற்பட்ட பசியின் காரணமாகவும்… அவனுடைய பிரியாணியில் இருந்து வந்த வாசனை காரணமாகவும் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவனும் அவளுடனேயே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். “நீங்களும் இன்னும் சாப்பிடலையா? ஏன்?” என்று அவள் கேட்க…
” இவ்வளவு நேரமா உன்ன காணும்… உன் நம்பரும் என் கிட்ட இல்ல… கோபமா வேற போன… எப்படி சாப்பிட சொல்ற? “
இதை கேட்டவளுக்கு இவ்வளவு நேரம் மனதை அறுத்துக் கொண்டிருந்த வலி மாயமாய் மறைந்த உணர்வு.
“அப்போ என்ன தேடிருக்கீங்க….”
“இல்லையே தேடலாம் இல்ல…”
“சரி நம்பிட்டேன்…” என்று அவள் கூற
இருவர் முகத்திலும் மெல்லிய மென்நகை.
இன்று அவள் செய்து விட்டு வந்ததை அவன் அறியும் போது இந்த மென்நகை அவன் முகத்தில் நிலைக்குமா?