இரவு 10:00.
கல்லூரி சாலை முழுவதும் இருள் கவிழ்ந்திருக்க அதன் நிசப்ததை கலைப்பது போல் க்ரீச்சிட்டு ஆரியனின் யமஹா நின்றது.
அந்த சாலை முழுதுமே கல்லூரி தவிர மற்ற இடங்களெல்லாம் வெற்று மனைகள் தான்.அதில் பாதி கே.வி.ஸ் குடும்பத்துடைய சொத்துகளே.. சில இடங்கள் பராமறிப்போடும் சிலவை அடர்ந்த புதர்களால் மண்டியும் இருந்ததே தவிர அவ்விடங்களில் ஆள் நடமாட்டத்திற்கு வாய்பில்லை.
எனவே ஆரியன் தனது யமஹாவை கல்லூரியின் காவலர் இருக்கும்போது முன்பகுதிக்கு கொண்டு செல்லாமல் விடுதி இருந்த பகுதியிக்கு குறுக்கால் பக்கத்து மனைவழியே கொண்டு சென்று நிறுத்தினான்.
இந்த இரவு வேளையில் அவளை பழிவாங்க கங்கணம் கட்டிக்கொண்டு நண்பர்களையும் பிடிவாதமாய் தவிர்த்து தனியாய் வந்துவிட்டான்.யார் கண்ணிலாவது சிக்கினால் என்னாகும் என்பது எல்லாம் அவனது சிந்தனையில் இல்லை. காம்பௌன்ட்டை தாண்டி எப்படி விடுதியில் நுழைந்து சக்தியை பார்ப்பது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருக்க அதே சமயம் அவன் நின்றுக் கொண்டிருந்த இடத்திற்கு சற்று தள்ளி பொத்தென்று ஏதோ விழும் சத்தம் கேட்க திடுக்கிட்டவன் இருட்டில் சுவரோடு ஒட்டி மறைந்துக் கொண்டு சத்தம் வந்த திக்கை பார்க்க ஒரு உருவம் பதுங்கி பதுங்கி மறுதிசையில் நடப்பது தெரிந்தது.
இருட்டில் தெரிந்த உருவத்தை உற்று பார்த்த ஆரியனிற்கு அது ஒரு பெண் என்பது புரிந்தது.
‘காலேஜிலேந்து இந்நேரத்திலே சுவரேறி குதிக்கிறா..சரியான கேடியா இருக்கும் போல..ஒரு வேளை திருடியோ..யாரிது..’
என்று யோசித்தபடி ஆரியன் பார்க்க அதே சமயம் அப்பெண் கையில் வைத்திருந்த அலைபேசியின் டார்ச் லைட் ஒளி யதர்ச்சையாய் அவள் முகத்தின் புறம் திரும்ப அதிர்ந்து போனான் ஆரியன்.
‘சக்தி..!!!!!!’
அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
‘அடிப்பாவி..இவளை பார்க்க நாம வந்தால் இவ இந்த நேரத்தில் எங்க திருட்டுத்தனமா போற..முழியே சரியில்லையே..ஆரியா..இவ என்னமோ பண்ணிட்டு பழிய உன் தலையில கட்டிட்டா..என்னானு பாருடா..”
என்று ஆரியனின் அறிவு எச்சரிக்க சில அடிகள் இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்தான்.
இருள் அடர்ந்த வேளையில் அதன் அசாத்திய அமைதியே அச்சத்தை கொடுக்க அதை பொருட்படுத்தாது
புதர்களை செடி,கொடிகளை எல்லாம் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்து செல்லும் அவளது போக்கு மர்மமாகவே இருந்தது. தன் காலடியின் சத்தம் கேட்காமல் தொலைவிலேயே அவளை பின் தொடர்ந்தான்.
சற்று தூரத்தில் திடீரென்று ஓர் இடத்தில் அவள் நின்றுவிட அவனும் ப்ரேக் போட்டது போல் நின்று விட்டாலும் சுற்றும் முற்றும் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்க பூச்சு பொட்டுக்களை தவிர ஒரு ஜீவனும் இல்லை.
அவளும் அவனை போலவே சுற்றியும் ஏதோ முணுமுணுத்தபடி தேடியவள் கண்டுக்கொண்டது போல் சில அடிகள் எடுத்து வைக்க டார்ச் ஒளியில் அவள் முகம் வேர்வையில் நனைந்திருப்பது தெரிந்தது.
அங்கிருந்த மரத்தின் பின்னால் சாற்றி வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியை எடுத்த சக்தி அதன் அருகில் மண்டியிட்டு செல்பேசியை கீழே வைத்துவிட்டு மணலை தோண்ட துவங்க ஆரியனின் முதுகு தண்டு சில்லிட்டது.
‘பிசாசு மாதிரி என்ன பண்றா இவ…’
சில நிமிடங்கள் வேக வேகமாய் தோண்டியவளின் கை சட்டென்று ஒர் இடத்தில் நின்றுவிட்டது.
மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு நடுங்கும் விரல்களோடு எதையோ எடுக்க அதற்குமேல் தள்ளி நிற்க விரும்பாமல் சத்தமின்றி அவள் பின்னால் நின்று பார்த்தான். அது ஏதோ செய்யின் போல் இருந்தது.
மீண்டும் கைகளாலே மணலை மெல்ல தள்ளியவள் கண்கள் அதிர்ச்சியிலும் பயத்திலும் விரிய,
“அம்மாஆஆஆஆஆஆ..”
என்று அடித்தொண்டையில் இருந்து அலறியவள் குதித்தெழுந்து ஓட எத்தனித்து பின்னால் நின்ற ஆரியனின் மீது மோதி கீழே விழுந்தாள்.
அரண்டிருந்தவள் கண்களுக்கு ஆரியனும் பேய்யாய் தெரிய,
“அம்மா…பேய்..பேய்…காப்பாத்து…அம்மாஆஆஆ..”
எழமுடியாமல் காதை பொத்திக் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு காட்டு கத்தல் கத்த,
“ஏய்…வாயமூடு டி..பேய் மாதிரி நடுராத்திரியில் வந்து குழி தோண்டியது நீ..என்னை பார்த்து பயபடுறியா…”
ஆரியன் உச்சகட்ட கடுப்பில் அவள் தோளை பிடித்து தூக்கி நிறுத்தி திட்டியவன்
“என்னாத்த பார்த்து இப்போ அலறியடிச்சு எழுந்த..”
என்றபடி அவள் மொபைலை எடுத்து டார்ச்சை அவள் தோண்டிய இடத்தில் அடித்தவனுக்கும் தூக்கி வாரிபோட அனிச்சையாய் பட்டென்று மொபைலை கீழே போட்டுவிட்டான்.
ஏனெனில் அதில் புதைக்கப்பட்ட சடலத்தின் கழுத்து பகுதி எழும்பு துருத்தி தெரிந்தது.
அதையும் சக்தியையும் மாறி மாறி பார்த்தவன் முகம் அதிர்ச்சியில் ஸ்தம்பிக்க அவளும் அவனையே பார்க்க இருவருக்கும் இடையில் சில நிமிடங்கள் கனத்த மௌனம் நிலவ அதை முதலில் கலைத்தது சக்தி தான்.
“சீனியர்…இங்கேந்து முதல்ல போலாம் வாங்க..”
என்று அவசரமாய் கூப்பிட்டும் அவன் அவளையே உறுத்து பார்க்க,
“ப்ளீஸ் சீனியர்…நான்..நான் எல்லாம் சொல்றேன்…முதல்ல இங்கிருந்து போவோம்..எனக்கு பயமா இருக்கு…”
என்று அவள் சொல்லும் போது,
“இவ்வளவு நேரம் அது தெரியலையோ..”
என்று கேட்க தோன்றினாலும் அவளது மருண்ட பார்வையிலும் நடுங்கிய குரலிலும் எதுவும் பேசாமல் முன்னால் நடக்க வேகமாய் வந்து அவனோடு இணைந்து நடந்தவள் பின்னால் திரும்பி பார்க்க அவள் தோண்டி வைத்திருந்த இடம் தற்போது அந்த அடையாலமே இல்லாமல் பழையபடி மூடி சாதாரணமாய் இருந்தது.
*******
“அப்போ அது அஸ்வதனோட உடம்பு..அப்படி தானே..”
அவள் கூறிய மொத்தத்தையும் கேட்டபின் ஆரியன் உணர்ச்சியற்ற குரலில் வினவ ‘ஆம்’ என்று தலையசைத்தவள் பின் தயங்கி,
“நீங்க..நீங்க..இங்க எப்படி…”
என்று தடுமாற்றத்தோடு கேட்க மறைந்திருந்த கோபம் மீண்டும் வந்து ஏறிக் கொண்டது.
“உன்னால தான்..வந்து உன்னை ரப்பு ரப்புனு நாலு அரைவிடனும்னு தான் வந்தேன்..நீ மயங்கி விழுந்ததுக்கு நான் தான் காரணமா.என்னால ரொம்ப பயந்துடீயாம்..என்னை சஸ்பென்ட் பண்ணிட்டான்..உன்னால எனக்கும் என் அப்பாக்கும் எவ்வளவு அவமானம் தெரியுமா..இது தான் சாக்குனு என்னை பழிவாங்க பார்க்குறியா..”
என்று ஆத்திரத்தோட சீற அவளுக்கு இது புதிய செய்தி!
“அய்யோ..இதெல்லாம் எனக்கு சத்தியமா தெரியாது சீனியர்..நான் நாளைக்கே உங்களுக்கும் இதுக்கு சம்பந்தம் இல்லைனு சொல்லி உங்க சஸ்பென்ஷனை கேன்சல் பண்ண சொல்றேன்..ப்ளீஸ் சாரி..”
என்று உண்மையான வருத்தத்தோடு சொல்ல,
“ஒரு மண்ணும் தேவையில்லை..எனக்காக நீ பேசக்கூடாது..நீ சொல்லி நான் மறுபடியும் காலேஜ் வரவேண்டும்னு அவசியமில்லை…”
என்று தீர்க்கமாய் சொன்னவன் தொடர்ந்து,
“அறிவிருக்கா உனக்கு..ஏதோ பேய்..சொன்னுச்சு..பிசாசு சொன்னுச்சுனு இந்த இராத்திரி நேரத்தில் இங்க வந்து நிக்குறீயே.. எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா..??? இல்ல வேற எவன் கையிலாவது மாட்டினேனா என்னாவது..?? யோசிக்க மாட்ட..!! அந்த பொண்ணு செத்து போச்சுனா நீ என்ன பண்ண முடியும்.. ஹெல்ப் பண்றேன்..அது பண்றேன்னு மறுபடியும் இந்த மாதிரி லூசுதனமா எதுவும் பண்ணாம காலேஜ் எதுக்கு வந்தியோ அதை மட்டும் பாரு..ஹாஃப்பாய்ல்ட்..”
என்று அவன் சொல்லி முடித்த நொடி வேகமாய் ஏதோ ஒன்று அவனை தாக்க தடுமாறி விழுந்தான்.
அவன் சுதாரிக்குமுன் இடி இடியென அவன் இருக்கன்னத்திலும் அடிகள் இறங்க,
“உன் வீட்டில் யாருக்காவது இப்படி நடந்திருந்தால் இப்படி தான் கண்டுகாமல் போவீயாடா..”
என்ற குரல் ஆத்திரமாய் அவன் செவிப்பறையில் நிரப்பியதே தவிர அக்னிமித்ராவின் துகளுருவம் அவன் கண்களுக்கு தெரியவில்லை.
“அக்னி.. வேண்டாம்..ப்ளீஸ்..”
என்று கத்திய சக்தி,
“யார் என்ன சொன்னாலும் நான் உனக்கு ஹெல்ப் செய்வேன்..தேவையில்லாம யாரையும் காயப்படுத்தாத..உன்னை கையெடுத்து கும்பிடுறேன்…இங்கிருந்து போ..”
என்று அழுத்தமாய் சொல்ல அவளையே பார்த்த அக்னிமித்ராவின் உருவம் அப்படியே காற்றில் கலந்து மறைந்தது.
ஓடிவந்து அவன் கையை பிடித்து தூக்கிவிட முனைந்த சக்தியை பிடித்துக் கொண்டு எழுந்தவனுக்கு தலைசுற்றல் நிற்கவில்லை.தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அவள் ஏதோ சொல்லவர,
“நிறுத்து..நீ எதுவும் சொல்ல வேண்டாம்..நீயாச்சு..அதுவாச்சு….என்னை ஆள விடு..”
என்று மூச்சிரைக்க சொன்னவன் திரும்பி நடக்க,
“இல்ல…வேற யாருட்டையும் இத..”
என்று சொல்லி முடிக்கும்முன்,
“சொன்னால் என்னை தான் பைத்தியம்னு நினைப்பாங்க..”
என்றபடி வேகமாய் தன் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து கிளம்ப எத்தனித்தவன் மறுபடியும் அவளை பார்க்க கல்லூரி காம்பௌன்ட் சுவற்றை பரிதாபமாய் பார்த்தபடி நின்றாள்.
“ஏன் குரங்கு மாதிரி குதிச்சு வர தெரிஞ்சுதுல.. மறுபுறம் தாவி ஏறி போ..இல்ல.. உன் பேய் ப்ரெண்ட்டை கூப்பிடு..”
என்று நக்கலாய் ஆரியன் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் பாவமாய் பார்த்தபடி நிற்க,
‘பண்றதெல்லாம் பண்ணிவிட்டு உடனே முகத்தை பப்பி மாதிரி வச்சுக்க வேண்டியது…’
என்று எண்ணினாலும்
அவனுள் உள்ள நல்லவன் அவளை எக்கேடோ கெட்டு போ என்று விட்டு போக மறுத்து அழிச்சாட்டியம் செய்ய,
‘ஆனாலும் நீ இவ்வளவு நல்லவனா இருக்க கூடாதுடா..’
என்று சலித்தபடி அவள் அருகில் சென்று பைக்கை நிறுத்தினான்.
“என் பைக்கில் ஏறி..அப்படியே சவுத்த பிடிச்சு தாவிக்க..”
என்று சொன்னது தான் போதுமென,
“தேங்க்யூ சீனியர்..”
என்று வேகமாய் வந்து பைக்மீது ஏறியவள் அதிலிருந்து சுவற்றை பிடித்து தாவி நொடியில் மறுபுறம் குதித்துவிட,
“வாலில்லா வானரம்…அவளை மிரட்ட வந்திட்டு பேயிட்ட அடி வாங்கியது தான் மிச்சம்..”
என்று முணுமுணுத்தவன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.
யார் கண்ணிலும் படாமல் மீண்டும் வந்து தன் கட்டிலில் படுத்ததும் தான் மூச்சே சீரானது சக்திக்கு.பக்கத்து கட்டிலில் இருந்த சந்தியாவை பார்த்தவள்,
“சாரி டி.. உன்னிடம் ஃபர்ஸ்ட் டைம் உன்னிடம் பொய் சொல்லி இருக்கேன்..” என்று மனதில் சொன்னவளால் இன்னமும் தான் செய்ததை நம்ப முடியவில்லை.
அங்கிருந்து எடுத்த அந்த செய்னை பார்க்க கறுத்து துண்டாகி இருந்த அந்த செய்னின் துருப்பிடித்த டாலரில் ASWA&AGNI என்று பெயர்கள் கொடிப்போல் பினைந்திருந்தது.
இரவில் தனியாய் பாத் ரூம் போக கூட பயந்து நடுங்கும் தானா தனியாய் போய் பிணத்தை தோண்டி…ம்ச்..ஆரியன் சொன்னா மாதிரி எதாவது நடந்திருந்தால் ஹப்பா..’
நினைக்கவே உடல் சிலிர்த்தது.
சிந்தனை ஆரியன் புறம் திரும்ப தன்னால் சஸ்பென்டாகி கொலை காண்டில் இருந்தவனிடம் தனியாக சிக்கியபோது என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்..ஆனால் அவன் அந்நிலையிலும் அவளது பாதுகாப்பை பற்றி தான் யோசித்தான்..கோவக்காரன் தான் பட் நல்லவன் தான்ல..’
என்று சிந்தித்தவள் “உனக்கு யாரு நல்லவங்க..யாரு..கெட்டவங்கனு.. கண்டுபிடிக்க தெரியலை சக்தி..”
என்று விஜய்யை மனதில் வைத்து தனக்கு தானே சொல்லிக் கொள்ள,
“அது 100% உண்மை சக்தி..”
என்று சிரிப்போடு அவள் முன் தோன்றினாள் அக்னிமித்ரா.
சட்டென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட சக்தி,
“எனனுட்ட பேசாத அக்னி…எதுக்கு அவங்களை அப்படி அடிச்ச..நீ செஞ்சது சரியே இல்லை…”
என்று கோபமாய் சொல்ல,
“ஹே..அவன் சொன்னது மட்டும் சரியா..ஹெல்ப் பண்ணகூடாதுனு சொல்ல அவன் யாரு..நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்…அப்போ நீயும் அவனை போல தான் ஏன் வம்புனு நினைக்கிறியா”
என்றாள் அவளும் கோபமாய்..
“ம்ச்..அப்படி நினைச்சா இந்நேரத்தில் அங்கே போயிருக்க மாட்டேன் அக்னி…”
என்க சில நிமிடங்கள் இருவருமே பேசவில்லை.பின்னர்,
“சரீஈஈ..!!! முடிந்ததை விடு..அடுத்து என்ன செய்யணும்..”
என்று சக்தி தான் முதலில் இறங்கி வந்தாள்.இது தான் சக்தி.கோபத்தை யார்மீது இழுத்து வைக்க தெரியாது.
“நீ எதுவும் செய்ய வேண்டாம்..சொல்ல வேண்டியவங்களுக்கு சொன்னால் மட்டும் இப்போ போதும்..மிச்சத்தை அவங்க பார்த்துப்பாங்க..”
என்று சொன்ன அக்னிமித்ரா மீண்டும் காற்றில் கலந்தாள்.