அத்தியாயம் 24(2)
பதட்டத்துடன் அறைக்குள் வந்தவர், “மாப்பிள்ளை! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லை.” என்று கலக்கத்துடன் சந்துருவிடம் மன்றாட, அவனோ மிருதுளாவை முறைத்துவிட்டு, இவர் பக்கம் திரும்பியவன், “டெஸ்ட் ரிசல்ட் ஆமாம் சொல்லுது. இதைத் தவிர வேற என்ன சாட்சி வேணும். இதுக்கு மேல நான் பேச தயாரா இல்லை. இன்னைக்குச் சாய்ந்திரம், பஞ்சாயத்துல வந்து, நான் கட்டுன தாலியை கழட்டிகொடுத்துட்டுப் போகச் சொல்லுங்க. இந்த அளவுக்கு ஆனதுக்கு அப்புறம், இதுக்கு மேல அவ கூட வாழ எனக்கு இஷ்டம் இல்லை.” என்று கூறிவிட்டு சித்ராவின் அழைப்பை காதில் வாங்கிக் கொள்ளாமல் படிகளில் இறங்கி கீழே சென்றுவிட்டான்.
படிகளில் நின்று மேலே நடந்த அனைத்தையும் சந்தோஷத்துடன் கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியும், சரண்யாவும், சந்துரு வருவது தெரிந்து, முகத்தைப் பாவம் போல வைத்துக்கொள்ள, மீனாட்சியோ, “ஏன் இப்படிச் செஞ்ச தம்பி. அவ பாவம் இல்லையா?” என்று கேட்க, அவனோ “உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இதுல நீங்க தலையிடாதீங்க. அப்புறம் இந்த வீட்டுக்கு இனிமே நான் வரமாட்டேன்.” என்று சொல்லிவிட, “தம்பி அப்படிலாம் பேசாத ப்பா. எனக்குன்னு இருக்கிறது நீ மட்டும்தான்.” என்று அவர் சொல்ல, அவன் கீழே சென்றுவிட்டான். ‘ஐயோ! பாவம்’ என்பது போலத் தங்கள் பார்வையை வைத்திருந்த இருவரும், அவன் சென்றதும், ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
அன்றைக்குச் சந்துருவிற்கு விஷயம் தெரிந்ததும், ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று வருத்தப்பட்ட மீனாட்சியை எப்படியோ பேசி பேசியே மாற்றி இருந்தாள் சரண்யா. மிருதுளாவை சந்துரு வாழ்கையில் இருந்து நீக்க மட்டுமில்லாமல், தன்னை இந்த வீட்டுக்கு மருமகளாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவரை மாற்றி இருந்தாள். காரணம் அவள் கையில் இருந்த விஷயம்.
சந்துரு பேசிவிட்டு போன பின்பும், அப்படியே சிலையென நின்றிருந்த மகளை உலுக்கிய சித்ரா, “மிரு. பேசு டி. இப்படியே நிக்காதடி. எனக்குப் பயமா இருக்கு. அம்மாடி. அம்மு!” என்று பல தடவை கூப்பிட்ட பிறகே நடப்புக்கு வந்தவள், கதறலுடன் தன் அன்னையை அணைத்துக்கொண்டு, “நான் அப்படிச் செய்யல ம்மா. என்னை நம்புமா. ப்ளீஸ் மா. நான் மோசமான பொண்ணு இல்லை ம்மா. என்னை நீங்க அப்படி வளர்க்கலா மா. நான் எந்தத் தப்பும் பன்னல மா. அவர் கிட்ட நீங்க சொல்லுங்க ம்மா. ப்ளீஸ் மா.” என்று அவள் பாட்டுக்கு புளம்பிக் கொண்டிருக்க, சித்ராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “அம்மு, அழாதடா.” என்று கூறியவர், அவளுடன் சேர்ந்து அழுது கரைந்தார்.
தெரிந்தவர் வீட்டிற்குச் சென்றிருத்த மோகன், அப்பொழுதுதான் வீட்டிற்குத் திரும்ப, சித்ரா சொன்ன செய்தியில், தலையில் இடி விழுந்தது போலத் தலையில் கைவைத்தபடி, அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். எந்தத் தந்தையும், திருமணமான தன் மகளைப் பற்றிக் கேட்க கூடாத செய்தி இது.
கைவளைவில் மிருதுளாவை பிடித்துக்கொண்டே, தன் கணவன் அருகில் அமர்ந்த சித்ரா, அவரின் முகத்தில் தெரிந்த சூன்யத்தில், “என்னங்க, வாங்கங்க, நம்ம மாப்பிள்ளைகிட்ட போய்ப் பேசுவோம். இதுல ஏதோ தப்பு நடந்திருக்குங்க. நம்ம பொண்ணு அந்த மாதிரி கிடையாது. இப்படியே இருக்காதீங்க. நம்ம பொண்ணோட வாழ்க்கை. அதுவும் இப்போ குழந்தை பிறக்க போற நேரம். வாங்க.” என்று அவரிடம் வெகு நேரம் பேச, ஒரு வழியாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவர், மனைவி மகளுடன் கீழே சந்துருவை தேடி சென்றார். அவனும் அப்பொழுதுதான் வீட்டிற்குத் திரும்பி இருந்தான்.
சந்துருவிடம் சென்ற மோகன், “மாப்பிள்ளை, என் பொண்ணு எந்தத் தப்பும் செய்யல. இதுல ஏதோ மிஸ்டேக் நடந்திருக்கு. தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க. ப்ளீஸ் மாப்பிள்ளை. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை. உங்க மனைவியோட வாழ்க்கை…” என்று சொன்னவரை தடுத்தவன், “என் பொண்டாட்டின்னு சொல்லாதீங்க. இவ்ளோ தூரம் எனக்குத் துரோகம் செஞ்ச பிறகு, அவ எனக்கு மனைவி இல்லை. நான் சொன்னதை மொதல்ல செய்ங்க.” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், உலகமே அழிந்துவிட்டதைப் போல, நிற்கதியான நிலைமையில், நெஞ்சில் பதைபதைப்புடன் மூவரும் இருக்க, மிருதுளாவிற்கு வேறு மயக்கம் வருவது போல இருக்க, கீழே இருந்த அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் சித்ரா அவளை உட்கார வைக்க, அந்த நேரம் ஆரா போன் செய்தாள்.
இவள் வேறு போன் செய்கிறாளே என்ற அச்சத்தில், தன்னைச் சமாளித்துக்கொண்டு போனை அட்டென்ட் செய்த சித்ரா, பேசிக் கொண்டிருக்கையிலேயே தன்னையும் அறியாமல் அழுதபடி இங்கு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டார். அனைத்தையும் கேட்ட ஆரா, “ச்சீ! இவ்வளவு மட்டமான புத்தி இருக்கிறவரா!!” என்று நினைத்தவள், ‘இவ்வளவு தூரம் சந்துரு பேசியபிறகு, அப்படிப்பட்ட ஒருவனுடன் தன் சகோதரியை இனிமேல் வால அனுமதிக்க முடியாது, மீறி அனுமதித்தால், இவள் வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருக்கும் என்று உணர்ந்தவள், மிருதுளா வாழ்கையில் சந்துரு செய்த அத்தனை கொடுமைகளையும் ஒன்றுவிடாமல் தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டாள்.
“இத்தனை நாளா நமக்காக, நம்ம குடும்பக் கவுரவத்துக்காக எல்லாத்தையும் அக்கா சகிச்சிகிட்டு வாழ்ந்திருக்கா ம்மா. இன்னைக்கு இவ்ளோ தூரம் நம்ம அக்காவை வாய் கூசாம அசிங்கமா பேசின பிறகு எப்படி மா, அவளை அங்க விட முடியும். இனி அவ வாழ்க்கை நிம்மதியா இருக்குமா? தேவை இல்லை ம்மா. இந்த மாதிரி ஒரு ஆள் கூட வாழணும்னு அக்காக்கு எந்த அவசியம் இல்லை. இப்படிப் பேசுறவன் விட்டா, என்னவேனா பேசுவான். இப்போ அவன் சொன்ன வார்த்தையே அதிகம். அவன் செஞ்ச வேலைக்கு மொதல்ல அவனைப் போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ள தள்ளனும்.” என்று சரமாரியாகப் பொரிந்து தள்ள, சித்ராவோ, “ஒருவேளை அந்த ரிபோர்ட் தப்பா கூட இருக்கலாமே ஆரா. தெரியாம மாப்பிள்ளை பேசி இருக்கலாமே டா.” என்று சொல்ல,
“பெத்தவங்க நீங்க இந்த ரிபோர்ட் தப்புன்னு நினைக்குறீங்கலம்மா, அப்போ அதே மாதிரி அந்த ஆளும் நினைச்சு இருக்கனும்ல. யாரு எது சொன்னாலும், ஆதாரம் காட்டினாலும், என் பொண்டாட்டி அப்படி இல்லைன்னு சொல்லி இருக்கணும் இல்லையா, அட்லீஸ்ட் அக்கா கிட்ட கேட்டு இருக்கணும். ஆனா அந்த ஆளுக்குத் தான், அந்த நல்ல குணம்லாம் இல்லையே. ஆரம்பத்தில இருந்தே சந்தேகபட்டுகிட்டு இருந்தவரு. இப்படி ஒரு விஷயம் கிடைச்சா சொல்லவா வேணும். அவர் திருந்த மாட்டாரு ம்மா. நீங்க தயவு செஞ்சு, அங்க இருந்து கிளம்புங்க. இனி அந்த ஆளு நம்ம அக்காக்கு தேவை இல்லை.” என்று பதிலுக்குச் சொல்ல, ஏதோ பேச வந்த தாயை திட்டியவள், “பாழுங்குழின்னு ஒரு வார்த்தைக்குச் சொல்வாங்க ம்மா. ஆனா நிஜம்மா இந்த ஆளு பாழுங்கிணறு தான். நரகம்ன்னு தெரிஞ்சும், உங்க பொண்ணை அங்க விடணும்னு சொன்னீங்கன்னா, உடனே நான் அங்க கிளம்பி வந்து அந்த ஆள் மேல போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன். அந்த ஆள் சொன்ன மாதிரி, அவன் கட்டின தாலியை அவன் மூஞ்சில தூக்கி எறிஞ்சிட்டு வாங்க. சந்தேகபிராணி. நீ மொதல்ல அக்காகிட்ட போனை கொடுமா.” என்றவள் மிருதுளாவிடமும் தன் பெற்றோரிடம் கூறியதையே சொன்னவள், “நான் இப்படிச் சொல்றேன்னு தப்பா நினைக்காத க்கா. அந்த ஆளு உனக்குத் தகுதி இல்லை. இது வரைக்கும் நீ பட்ட கஷ்டம் போதும் க்கா. இனி உனக்கு உன் குழந்தை இருக்கு. நாங்க இருக்கோம். தயவு செஞ்சு அவனைத் தூக்கி எறிஞ்சிட்டு வா அக்கா. அவனுக்கு வேணா நீ முக்கியம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்களுக்கு நீ முக்கியம் அக்கா. இனி நீ அந்த ஆள் கிட்ட சிக்கி கஷ்டபடுறதை என்னால் பாக்க முடியாது க்கா. ப்ளீஸ் அக்கா. குடும்ப வாழ்கை இன்னைக்கு நாளைக்கு முடிய போற வாழ்க்கை இல்லை, அட்ஜஸ்ட் செஞ்சுட்டு போக. உயிர் இருக்கிற வரைக்கும் வாழ போற வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் நீ அந்த ஆள் கூடத் தான் இருக்கனும். உன்னை இந்த அளவுக்குப் பேசினவன் உனக்குத் தேவையா அக்கா? உனக்குன்னு ஒரு டிக்னிட்டி இல்லையா? புருஷன் நல்லவனா இருந்தா, அட்ஜஸ்ட் பண்ணலாம். ஆனா இந்த மாதிரி உன்னை அசிங்கமாகப் பேசுறவன், உனக்குத் தேவை இல்லை அக்கா. ப்ளீஸ் க்கா. யாருக்காகவும் நம்மோட தரத்தை, டிக்னிட்டியை இழக்ககூடாதுன்னு நீ தான எனக்குச் சொல்லி இருக்க.” என்று வெகு நேரம் பேச, இங்கிருந்த மூவருமே, கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தனர்.
மிருதுளா வாழ்கையில் இதுநாள் வரை நடந்ததை இப்பொழுது தான் தெரிந்து கொள்கின்றனர் மோகனும் சித்ராவும். இந்த அளவுக்கு ஒருவன் கீழ் இறங்குவானா? அப்படிப்பட்ட ஒருவனிடம் நம் மகளை விட்டு செல்வதா? இப்பொழுது வாயில் பேசும் இவன், நாளை தவறான சந்தேகத்தில், நம் மகளைக் கொலை செய்யகூடத் துணிவானே, கெட்டவன் என்று தெரிந்தே, தங்கள் மகளை அங்கே விடுவதா? என்று பல மணிநேரம் யோசித்தவர்கள் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவர்கள், தங்கள் உடமைகளைப் பைகளில் எடுத்து வைக்க, அந்த நேரம் அவர்களைப் பஞ்சாயத்துக்கு வரும்படி அழைப்பு வந்தது.
“நான் அங்க வரலப்பா. என்னால அங்க வர முடியாது.” என்று மிருதுளா கதற, பெற்றோரும் தங்கள் மகளின் நிலைமையை அனைவர் முன்னும் காட்சிபடுத்த விரும்பாமல் தயங்க, இறுதியில் கிட்டத்தட்ட வலுகட்டாயமாக மிருதுளா அங்கே அழைத்து வரபட, எனக்கு இவளுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறிய சந்துரு, விஷயத்தைச் சொல்ல, கூட்டத்தில் இருந்த டாக்டர் ஒருவர் சந்துரு கொடுத்த பைலை பிரித்துப் படித்தவர், சந்துரு சொல்வது உண்மை என்று உறுதிபடுத்தினார்.
எந்த விஷயத்தையும் பொறுத்துகொள்ளும் அந்தக் கிராம மக்கள், கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், கொலை போன்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனையைக் கொடுப்பர். மிருதுளா செய்ததும், நம்பிக்கை துரோகம் என்பதால், அந்த ஊர் வழக்கப்படி, தாலியை கழட்டிகொடுத்துவிட்டு, பேப்பரில் கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றுவிடவேண்டும். இப்பொழுதும் அதையே தீர்ப்பாகப் பெரியவர்கள் சொல்லிவிட, தன்னால் முடியவே முடியாது என்று மிருதுளா கதற, மீனாட்சி தன் மகனிடம் ஏதோ காதில் கிசுகிசுக்க, அவனே மிருதுளாவின் அருகில் நெருங்கி, அன்றைக்கு அக்னி சாட்சியாகக் கட்டியை அந்தப் புனிதமான மாங்கல்யத்தை, இன்று அந்த அக்னி கடவுளிடம் அனுமதி பெறாமலே, அவள் கதற, கதற, கழுத்தில் இருந்து அறுத்து எடுத்துச் சென்றான்.
ஆரா எவ்வளவோ சொல்லியும், கணவன் தன்னை நெருங்கவும், மனதளவில் நொறுங்கி போன மிருதுளா, தாலியை இறுக பற்றிக்கொண்டு சந்துருவை தடுத்தாலும், அது அறுபட்ட நேரம், தன் உடலில் இருந்து உயிர் பிரிந்தது போல உணர்ந்தவள், அப்படியே மயங்கி சரிந்தாள்.
இதோ எல்லாம் நடந்து முடிந்து, பல மணி நேரங்கள் கடந்திருந்தது. மிருதுளா, சித்ரா, மோகன் மூவரும் பேருந்தில் சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஜன்னலில் சாய்ந்து தூரத்தை வெறித்தபடி சத்தமில்லாமல் மகள் அழுதுக் கொண்டிருக்க, பெற்றவர்களோ, எல்லாம் முடிந்த விரக்தியில் தலை சாய்த்துக் கண்களை மூடிய நிலையில் மனதுக்குள் துடித்துக் கொண்டிருந்தனர்.
அவரவர் அவரவர் நிலையில் இருக்க, நடந்துமுடிந்த நிகழ்வுகள், மிருதுளாவுக்குள் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்கி இருக்க, சத்தமில்லாமல் அழுதது வேறு அவள் உடலை வருத்தி இருக்க, எல்லாம் சேர்ந்து அவள் அடிவயிற்றில் சுருக்கென்று ஒரு வலியை கொடுத்தது. “ஸ்ஸ்ஸ்!!” என்று பல்லைகடித்து அவள் பொறுத்துக்கொள்ள, அடுத்து சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதே வலி வந்தது. போகப் போக அவளுக்கு வலி அதிகமாக, கட்டுபடுத்த முடியாமல், ஒரு கட்டத்தில் “அம்மா!!!!” என்று அவள் அலற, பஸ்சுக்குள் இருந்த அனைவரும் பரப்பானார்கள்.