அத்தியாயம் 30 (1)
யாழினி, அந்த வருடம் தான், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேட ஏதுவாக, தோழிகளுடன் ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவள் அவள். தாய் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர், தந்தையும் அதே பள்ளியில் கணித ஆசிரியர். யாழினியின் அண்ணன் இனியன், சென்னையில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான். அவனும் நண்பர்களோடு வீடெடுத்து தங்கி இருக்கிறான்.
இண்டர்வியுவில், தேர்வான விஷயத்தை, அடுத்த நாள், தன் அண்ணன் இனியனிடம் இவள் பகிர்ந்துகொள்ள, அவனுக்கோ மிகுந்த மகிழ்ச்சி. தேர்வாகி இருக்கும் நிறுவனம் பெரிய நிறுவனம் என்பது கூடுதல் உற்சாகம். ஏனெனில் மற்ற கம்பனிகளை ஒப்பிடுகையில், அந்த நிறுவனத்தில் நல்ல சம்பளம் கிடைக்கும். பெற்றோரின் கடனை விரைவாக, அடைக்கத் தங்கையின் சம்பளமும் உதவியாக இருக்கும் என்று இனியன் நினைத்தான்.
அவர்களின் பெற்றோர் இருவரும், தங்களது குறைந்த சம்பள பணத்தில், பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்துக்கொண்டே, இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும்பொழுது, லோன் போட்டு, அவர்கள் இருப்பதற்கு என்று நிலம் வாங்கி வீடும் கட்டி இருந்தனர். அதன் கடன் தொகையை, இன்றும் கட்டிக் கொண்டிருக்கின்றனர் அவன் பெற்றோர்.
அவர்களின் பாரத்தைக் குறைக்கவென, இனியனுக்கு வேலை கிடைத்து அந்தச் சம்பள பணம் அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆயினும் அவனாலும் முழுத் தொகையையும் வீட்டிற்குக் கொடுக்க முடிவதில்லை. வீட்டு வாடகை, உணவு தேவை, போக்குவரத்துச் செலவு, அவ்வபொழுது நண்பர்களுடன் வெளியில் சாப்பிட, அலுவகத்தில் நண்பர்களுக்குப் பிறந்தநாள், திருமணநாள், பரிசுத் தொகை செலவு என, கிட்டத்தட்ட பாதிக்கு மேல், இவனுடைய சம்பள தொகை கரைந்து விடும். மீதம் இருக்கும் குறைந்த தொகையைத் தான், வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். தங்கையுடன் சிறுவயதில் இருந்து, கிரமாத்தில், பொறுப்பான பெற்றோர் வளர்ப்பில் வளர்ந்ததால், அவனுக்கென்று, புகை, குடி போன்ற எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாததால், இந்த அளவாவது அவனால், பணத்தை மிச்சபடுத்த முடிகிறது. அவனுடைய பெற்றோரும், இவனின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, எதுவும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கும் மனதுக்குள் கவலை தான், தங்கள் பிள்ளைகள், கண்காணாத இடத்தில, கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்களே என்று.
அதிலும் பெண் பிள்ளையான, யாழினியை பக்கத்தில் இருந்த கல்லூரியில் சாதாரணப் படிப்பில் சேர்த்து விடலாம் என்று தான் நினைத்திருந்தனர். ஆனால் இனியன் தான், தங்கையின், படிப்பு திறமையைப் பார்த்து, பெற்றோரிடம் பேசி அவளைச் சென்னைக்குப் படிக்க அனுப்ப சம்மதிக்க வைத்தான். அவனுக்குத் தெரியும், யாழினியின் அறிவுக்கு, படித்தவுடன் வேலை கிடைக்கும் என்று. இன்று அதே போல நடந்துவிட்டது. இதைவிடக் கூடுதல் சந்தோஷம், தன்னைவிட நல்ல கம்பனியில் தங்கைக்கு வேலை கிடைத்திருப்பது. தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அவள் வேலை செய்தால், கூடிய சீக்கிரத்தில், உயர் பதவிகளை அடைந்து, கூடுதல் சம்பளம் பெறலாம்.
தங்கையின் மகிழ்ச்சி இவனையும் தொற்றிக்கொள்ள, சந்தோஷத்துடன், “கன்க்ராட்ஸ் பாப்பா. செம்ம கம்பனி அது. போகஸ்ஸா வேலை பார்த்தா, கூடிய சீக்கிரம் நல்ல பொசிஷன் ரீச் பண்ணலாம். எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு உன்னை நினைச்சு. என்னைக்கு ஜாயினிங் டேட் பாப்பா?” என்று அவன் கேட்க, “வர்ற மண்டே அண்ணா, அண்ட் தேங்க்ஸ் அண்ணா. எனக்குத் தெரியும் என்னை விட, நீ தான் ரொம்பச் சந்தோஷபடுவன்னு. அதான், உன்கிட்ட மொதல்ல சொன்னேன். இன்னும் அம்மா, அப்பாக்கு கூடச் சொல்லல.” என்றாள் பதிலுக்கு. அவள் பதிலில் சந்தோஷமும், அதே நேரம் அதிர்ப்த்தியும் அடைந்தவன், “என்ன பாப்பா நீ, அம்மா, அப்பாகிட்ட மொதல்ல சொல்ல வேண்டாமா?!. அவங்க எவ்வளவு சந்தோஷ படுவாங்க. நான் பேசி முடிச்சதும், மறக்காம உடனே வீட்டுக்கு போன் போட்டு சொல்லிடு.” என்று சொல்ல, “சரி அண்ணா.” என்றாள் யாழினி.
“அப்புறம் இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பி ரெடியா இரு பாப்பா. ஒரு இடத்துக்குப் போகணும்.” என்று இனியன் பீடிகை போட, “எங்கண்ணா போகணும்?” என்றாள் குருகுப்புடன். “அங்க போய்ச் சொல்றேன். இப்போ நீ வீட்டுக்கு போன் போடு. எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு. வச்சுடறேன். ஈவ்னிங் அஞ்சு மணிக்கு ஹாஸ்டல் வாசலில வெயிட் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு இனியன் போனை வைத்துவிட, “எங்க இருக்கும்??!” என்ற யோசனையோடு போனை வைத்தவள், அடுத்து பெற்றோருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
“இனியன், எப்பவும் சொல்வான், என் தங்கச்சி அறிவுக்கு, அவ பெரிய இடத்தில வேலை பார்ப்பான்னு. அதே மாதிரி நடந்திடுச்சு. ரொம்பச் சந்தோசம் டா. அப்புறம், வேலைக்குப் பார்த்துப் பத்திரமா போயிட்டு வரணும். வேலை முடிஞ்சதும் நேரா ஹாஸ்டலுக்கு வந்திடனும். வேலை செய்ற இடத்தில அனாவசியமா யார் கிட்டையும் பழக வேண்டாம்…” எனப் பெற்றவர்களாக அவர்கள் தங்கள் அறிவுரைகளைச் சொல்ல, எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தலையாட்டினாள் யாழினி. இறுதியில், “அப்புறம் பாப்பா, உன்னோட ட்ரெஸ் எல்லாம் பழசாகிடுச்சுன்னு சொன்னியே, அண்ணனுக்கு லீவ் இருக்கப்போ, அவனைக் கூட்டிட்டு போய் நாலு ட்ரெஸ் நல்லதா எடுத்துக்கோ. சரியா.” என்று சொல்ல, “ஆமாம் அம்மா, மறந்தே போயிட்டேன். ஒரு நாள் அண்ணன் கூடப் போய் எடுத்துட்டு வரணும்.” என்று இவள் பதில் சொல்ல, “எடுக்கும்போது, நல்ல ட்ரெஸ்ஸா எடு. அடுத்தவங்க சொல்றாங்கன்னு, கழுத்து இறக்கமா, குட்டி ட்ரெஸ் எடுக்காத. அழகா சுடி எடுத்துக்கோ. சரியா பாப்பா.” என்று உடை விஷயத்திலும் அவள் தாய், பார்த்து பார்த்து சொல்ல, “எனக்குத் தெரியாதா மா. அதெல்லாம் பார்த்து எடுத்துக்கிறேன்.” என்று இவள் சொல்லி சிரிக்க, அடுத்து சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தவள், மதிய உணவு சாப்பிட சென்றாள்.
சொன்னது போலவே, மாலை ஹாஸ்டலுக்கு வந்த இனியன், நிர்வாகியிடம் தெரிவித்துவிட்டு, யாழினியை அழைத்துக்கொண்டு பஸ் பிடித்து, சென்னையின் அந்தப் பிரபல ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றான். சென்னை வந்ததில் இருந்து ஷாப்பிங் என்று, அதிகபட்சமாக யாழினி சென்ற இடம் டி.நகர் தான். அதுவும் கல்லூரி படிக்கும்பொழுது, ஹாஸ்டலில் வெளியே அனுப்ப மாட்டார்கள். வருடத்திற்கு ஒரு சில நாட்கள், பல முறை கெஞ்சி முன் அனுமதி பெற்ற பின்பே, இனியனுடன் கடை தெருவுக்குப் போவாள். அப்பொழுதுகூட இந்த மாதிரி உயர்ரக மாலுக்கு எல்லாம் அவள் வந்ததே இல்லை.
இன்று முதல் முறை வரவே, மாலின் உள்ளே நுழைந்ததில் இருந்து, அந்தப் பிரம்பாண்ட சுற்றுப் புறத்தை ஆர்வமாகவும், வியப்புடனும் பார்த்தாள். “இங்க எதுக்கு அண்ணா, கூட்டிட்டு வந்திருக்க, எப்போவும் போல டிநகர் போயிருக்கலாமே. இங்க ட்ரெஸ் எல்லாம் காஸ்ட்லியா இருக்கும்ன்னு ப்ரிண்ட்ஸ் சொல்லி இருக்காங்க. எதுக்கு அண்ணா வீண் செலவு.” என்று யாழினி சொல்ல, இனியனோ, “அதெல்லாம் ஒரு செலவும் இல்லை. நீ பேசாம வா பாப்பா.” என்று மென்மையாக அதட்டியவன், மூன்றாம் மாடியில் இருந்த அந்தப் பிரபல மொபைல் கடைக்குத் தங்கையை அழைத்துச் சென்றான்.
“அண்ணா, இப்போ எதுக்கு இந்தக் கடைக்கு வந்திருக்கோம்?? நீ போன் வாங்க போறியா?? ஏற்கனவே வச்சுருக்கியே!!” என்று மீண்டும் யாழினி பல கேள்விகளை எழுப்ப, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அவளை உள்ளே அழைத்துச் சென்றவன், சென்ற கல்லூரி விடுமுறையில் தங்கை ஆசைப்பட்டுச் சொன்ன அந்தக் குறிப்பிட்ட மொபைல் மாடலை எடுக்கச் சொல்ல, விற்பனை பிரதிநிதி, அந்த மாடலில் சமீபத்தில் அறிமுகம் ஆகி இருக்கும் மூன்று நிற மொபைலை எடுத்து காட்ட, “இதுல எந்தக் கலர் வேணும் பாப்பா உனக்கு?” என்று இனியன் தங்கையைப் பார்த்து கேட்டதும், “அண்ணா, எனக்கா போன் வாங்க போற!!” என்று ஆச்சரியமாக அண்ணன் காதை கடிக்க, ‘ஆமாம்’ என்பது போல அவன் தலை அசைக்க, “விலை ஜாஸ்தியா இருக்குமே ண்ணா.” என்று அவள் கவலைப்பட, “அதெல்லாம் ரொம்ப அதிகம் இல்லை பாப்பா. பதினஞ்சாயிரம் தான். அண்ணன் கிட்ட சேவிங்க்ஸ் மணி இருக்கு. ரேட் பத்தி நீ கவலைபடாத. உனக்குப் பிடிச்ச கலர் மட்டும் சொல்லு.” என்றான் கண்டிப்புடன்.
ஆனால் அவளோ, “இப்போ எதுக்குண்ணா போன். அதான் நான் வச்சுருக்கேனே!” என்று அவள் மீண்டும் மறுத்து பேச, அவள் கையில் இருந்த அந்தப் பட்டன் செல்லை ஒரு பார்வை பார்த்துவிட்டு, இவளை முறைத்தான். ஆம்! அவள் வைத்திருப்பது பட்டன் இருக்கும் பழைய மாடல் மொபைல். கல்லூரி படிக்கும்பொழுது, போன் எதற்கு என்று அவளுக்கென்று அவள் வீட்டில் போன் வாங்கித் தரவில்லை. அவள் ஹாஸ்டலில் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். மேலும், மற்ற சில பெண்களைப் போல் இல்லாமல், ஆண் நண்பர்களோடு பேசவோ, சமூக வலைத்தளத்தில் உலாவவோ, தெரியாத நபருடன் சாட்டிங் செய்யவோ இவளுக்கு எந்த ஆர்வமும் இருந்ததில்லை. கல்லூரி முடிந்து ஹாஸ்டல் வந்ததும், சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, பின் அன்றைய தினம் வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடங்களைப் படிக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். எப்பொழுதாவது தோன்றினால், அதிகபட்சம், தோழிகளின் போனில், கேம் விளையாடுவாள். அதுவே அவளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.
அப்படி விளையாடிய பொழுது தான், தோழி ஒருத்தி வைத்திருந்த ஒரு குறிப்பிட்ட மாடல் போன், மிகப் பெரிய திரையுடன் பார்க்க ஜம்மென்று இருந்ததால் அவளுக்கு அதில் விளையாட மிகவும் பிடித்துப் போனது. அந்தப் போனை பற்றித் தான், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த நேரம், அலுவக விடுமுறைக்கு என்று வந்த அண்ணனிடம் சென்ற வருடம் சொல்லியிருந்தாள். எந்நேரமும் படிப்பு என்றே அவள் கல்லூரி நாட்கள் முடிய, இப்பொழுது வேலை தேடவேண்டி, வேறு இடத்தில் தங்கவேண்டி இருப்பதாலும், இண்டர்வியு என்று வெளியே செல்லவேண்டி இருப்பதாலும், கல்லூரி இறுதி தேர்வு முடிந்து வீட்டிற்குச் சென்று திரும்பிய பொழுது, இனியனின் பழைய மொபைலை எடுத்து வந்திருந்தாள்.
ஆனால் இனிமேல் அவள் அலுவகம் செல்லபோவதால், அவள் பாதுகாப்புக்காகவாவது அவளுக்கு மொபைல் தேவைப்படும் என்பதால், பெற்றோரிடம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு, இதோ இன்று அவளைக் கடைக்கு அழைத்து வந்துவிட்டான் இனியன். வாழ்கையில் முதல் முறையாகத் தன் தங்கைக்கு மொபைல் வாங்கித் தரும்பொழுது, அதில் கணக்கு பார்க்க தோன்றுமா அவனுக்கு. அதான் அவள் எப்பொழுதும் புலம்பும் அந்த மாடலையே வாங்கித் தர முடிவு செய்துவிட்டான்.
“ரொம்ப யோசிக்காத பாப்பா. சீக்கிரம் ஒரு கலர் சொல்லு. விலைய பத்தியெல்லாம் நீ யோசிக்க வேண்டாம். வீட்டில பேசிட்டேன். அப்பா அம்மா சரின்னு சொல்லிட்டாங்க.” என்று அவன் சொல்லவும், இவள் பார்வையில் உற்சாகம். அதன்பின்னே ஒரு கலரை யாழினி தேர்ந்தெடுக்க, அதைப் பில் போட்டு வாங்கிக்கொண்டு, தங்கையுடன் வெளியே வந்தவன், அடுத்து அவளை ஆடை கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு வைத்து அவளுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளச் சொல்ல, அவளோ குறைந்த விலையில் மூன்று சுடிகளைச் செலக்ட் செய்து எடுத்துவர, இனியனோ, “என்ன பாப்பா நீ, ஆபிஸ் போற, நல்லதா போட்டுட்டு போக வேண்டாமா!! போ, போய்க் கொஞ்சம் காஸ்ட்லியா எடு.” என்று விரட்டினான்.
யாழினியின் குடும்பம், அடிப்படை தேவைகளில் குறை வைக்காத, மிடில் கிளாஸ் குடுமபத்தைச் சேர்ந்தது. அவளின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், பிள்ளைகளின் உணவு தேவையிலோ, உடை தேவையிலோ எந்தக் குறையும் வைத்ததில்லை. ஆனால், அவள் ஊரில் ஆடைகளின் விலை ஓர் அளவுக்கு எடுக்ககூடிய வகையில் இருக்கும். துணியின் தரமும் நன்றாக இருக்கும். அத்தோடு எப்பொழுதும் அவள் ஆடைகளை அவள் அன்னை தான் தேர்ந்தெடுப்பார். அதனால் அவளுக்கு உடைகள் விஷயம் அவ்வளவாகத் தெரியாது. கலர், டிசைன் மட்டும் பிடித்திருக்கிறதா என்று பார்ப்பாள் அவ்வளவே. துணியின் தரம், பெண் பிள்ளை போடக்கூடிய விதத்தில் இருக்கிறதா என்பதெல்லாம் அவள் அன்னை தான் பார்ப்பார்.
இதே எண்ணத்துடனே, இந்த உயர்ரகக் கடையில், இவள் உடைகளைப் பார்க்க, அவையோ, யானை விலையில் இருந்தது. அதிலும் மெல்லிய துணியால் ஆன டாப் ஒன்று ஆயிரத்து ஐநூறு என்று விலை போட்டிருந்தது. அதைப் பார்த்ததும், “இந்தத் துணிக்கு இவ்ளோ விலையா?? நம்ம ஊர்ல எல்லாம், இவ்வளவு விலை கிடையாது. துணியும் திக்கா இருக்கும். இந்தத் துணி என்னடான்னா அலசலா இருக்கு. தரமே இல்லை.“ என்று நினைத்துக் கொண்டாள். அங்கே இருந்த முக்கால்வாசி ஆடைகள், குறைந்தது ஆயிரத்துக்கு மேலே விலையில் இருக்க, அதிகம் எடுக்கவேண்டி இருப்பதால், அங்கிருப்பதிலேயே குறைந்த விலையில், மூன்று சுடி மட்டும் செலெக்ட் செய்திருந்தாள்.
ஆனால் இனியனுக்குத் தெரியுமே. நகரத்தில் எப்பொழுதும் விலைவாசி அதிகம் இருக்கும் என்று. டவுனில் ஒரு விலையில் கிடைக்கும் அதே உடை, நகர்புறங்களில் அதை விட அதிகம் விலை இருக்கும். அதற்காக, எப்பொழுதும் குறைந்த தர ஆடையை எடுக்க முடியுமா. வேலைக்கு என்று செல்லும்பொழுது, கொஞ்சமாவது நல்ல ஆடையை உடுத்தி செல்ல வேண்டும். இல்லையேல் ஏதோ, வேற்று கிரகவாசியைப் போல் விதயாசகமாகவும், இழிவாகவும் பார்ப்பார்கள்.
சில சமயம் இனியனுமே, அந்த மாதிரி பார்வைகளைச் சந்தித்து இருக்கிறான். வீட்டுக்கு சம்பள தொகையைக் கொடுக்கவேண்டுமே என்று ஆரம்பக் காலங்களில், தன்னிடம் இருக்கும் ஆடைகளைத் தான் போட்டு செல்வான். அப்படிச் செல்லும்நேரம், ஒருசிலரின் பார்வை அவனை வித்தாயசமாகப் பார்ப்பதும், சில நண்பர்கள், “ஏன்டா நல்ல சம்பளம் தான வாங்குற, நல்ல ட்ரெஸ்ஸா எடுத்து போட்டுட்டு வரகூடாதா.” என்றுகூடச் சொல்வதும் உண்டு. ஆனால் சொல்பவர்களுக்கு என்ன தெரியும், தன் வீட்டுக் கஷ்டம் என்று இவன் நினைத்துக்கொள்வான். அதைச் சொன்னாலும், “டேய்! ரொம்பச் சீன் போடாதடா. எல்லார் வீட்டுலயும் தான் கஷ்டம், கடன், அது இதுன்னு இருக்கு. அதுக்காக நம்ம அத்தியாவசிய சந்தோஷத்தை விட்டுகொடுக்க முடியுமா!!” என்று வேதாந்தம் பேசுவார்கள்.
அதன்பின்பே, வேறு வழியில்லாமல் கொஞ்சம் அதிகம் விலையுள்ள உடைகளை உடுத்த ஆரம்பித்தான் இனியன். தன் நிலைமை தன் தங்கைக்கு வரகூடாது என்பதால் அவளுக்குக் கூடுதல் விலையில் நல்ல ஆடைகளை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, இங்கே அழைத்து வந்திருக்கிறான். அவனும் தான், தான் வேலை செய்யும் அலுவகத்தில் பார்க்கிறானே. பெண்கள் எவ்வளவு அழகாக, நேர்த்தியாக உடை அணிந்து வருவதை. தங்கை இப்பொழுது எடுத்திருக்கும் உடைகளை அவள் போட்டு சென்றாள், நிச்சயம் மதிப்பாகத் தெரியாது. ஆகையாலே அவளிடம் வேறு எடுக்கச் சொன்னான்.
அடுத்தச் சில நிமிடங்களில் யாழினி எடுத்து வந்த வேறு சில உடைகளும், அவள் நிறத்திற்கு எடுப்பாக இல்லாமல் இருக்க, மறுபடியும் சலித்துக் கொண்டவன், தானே சென்று அவளின் நிறத்தை எடுத்துக்காட்டும், அதே நேரம் நாகரீகமான தோற்றம் தரும், ஐந்து சுடி செட்களை எடுத்து வந்தான். ஆனால் யாழினியோ, ‘அம்மாடியோ, இவ்ளோ விலையா!!‘ என்று வாயை புளக்க, பதிலுக்கு அண்ணனின் முறைப்பை பரிசாக வாங்கினாள். அதற்குப் பிறகு அவள் வாய் கப்சிப் தான். உடைகளோடு அவளுக்குத் தேவைப்படும் பிற ஆடைகளையும் எடுத்துக்கொண்டு, தனக்கும் இரண்டு சட்டைகளை வாங்கிகொண்டு, வெளியே வந்ததும், அதே தளத்தில் இருந்த உணவகத்திற்கு மதிய உணவு சாப்பிட சென்றனர்.
ஹோட்டலுக்குள் சென்றதும், இருக்கையைத் தேடி பிடித்து, அங்கே சென்று யாழினி வெளி இருக்கையில் அமரப்போக, இனியனோ, “உள்ள உட்காரு பாப்பா. போறவங்க வரவங்க இடிச்சிட்டு போவாங்க. இடைஞ்சலா இருக்கும்.” என்று கூற, அதன்படி யாழினி உள் இருக்கையில் அமர்ந்துகொள்ள, அவளுக்கு எதிர் இருக்கையில் இனியன் அமர்ந்துகொண்டான்.
தங்கைக்குப் பிடித்த உணவுகளை இனியன் ஆர்டர் செய்ய, அடுத்த அரைமணி நேரத்தில், அனைத்தும் அவர்கள் முன் இருந்தது. தங்கைக்குப் பிடிக்கும் என்று தன் தட்டில் உள்ளதையும், அவள் தட்டில் எடுத்து வைக்க, அவளோ, “போதும்னா, நீ சாப்பிடு.” என்று மறுக்க, “நான் தினமும் சாப்பிடுறேன் பாப்பா. நீ நல்லா சாப்பிடு. எப்பவும் ஹாஸ்டல் சாப்பாடு தான் சாப்பிடுற. இன்னைக்காவது, ருசியா சாப்பிடு.” என்று கூற அது வேண்டுமா, இது வேண்டுமா என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டே அண்ணன், தங்கை இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க,
அதே நேரம் இவர்களுக்கு வலபக்க டேபிளில், கெளதம், தன் குடும்பத்துடன் உணவருந்திக் கொண்டிருந்தான். என்றாவது விடுமுறை தினத்தில், இப்படிச் சேகர், மற்றும் ஜெய்யுடன் வெளியே கடைத்தெருவுக்கு வருபவன், அப்படியே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு செல்வான். அப்படித்தான் அன்றும், வெளியே வந்திருந்த பொழுது, உணவருந்தி கொண்டிருக்க, ஜெய் தான், இனியனின் ‘பாப்பா’ என்ற பேச்சை கேட்டு, ‘யாரடா அது, பாப்பா, பாப்பான்னு பாசபயிரை வளர்த்திட்டு இருக்கிறது.’ என்ற யோசனையுடன், திரும்பி இவர்கள் பக்கம் பார்த்தவன், இந்தக் காலத்தில் ‘இப்படி ஒரு அண்ணனா!!’ என்ற ஆச்சரியத்துடன், கெளதம் பக்கம் திரும்பி அவர்களின் உரையாடலை பற்றிச் சொல்ல, யாழினிக்குப் பக்கவாட்டில் எதிர் இருக்கையில் இருந்த கெளதம் தம்பியின் பேச்சில், நிமிர்ந்து பார்க்க, அங்கே யாழினியை அவன் எதிர்பார்க்கவில்லை.
அதே நேரம், உணவை வாயில் போட்டுக்கொண்டே, நிமிர்ந்த யாழினியும், கௌதமை பார்த்துவிட்டாள். நேற்று ஒரு நாள் பார்தவனிடம், எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் இவள் முழிக்க, அவனோ இவளை பார்த்து, சிநேகமாகப் புன்னகைத்தான். பதிலுக்கு இவளோ உதடு பிரியாமல் சிரிக்க, எதேர்ச்சையாக நிமிர்ந்த இனியன், “யாரை பார்த்து சிரிக்கிற பாப்பா?!” என்று கேட்க, “நேத்து இண்டர்வியுல பார்த்தவரு அண்ணா.” என்று இவள் விளக்கம் கொடுக்க, ‘நேத்து பார்த்துட்டு, அதுக்குள்ள வெளி இடத்தில ஸ்மைல் பண்றானா? எவன் டா அது??’ என்பது போல இனியன் கெளதம் பக்கம் திரும்பி பார்க்க, அவனோ இவனையும் பார்த்துப் புன்னகைத்தான்.
டக்கின் செய்யப்பட்ட ஷர்ட், பார்மல் பேன்ட், பாஷன் என்ற பெயரில் முடியை பங்க, ஸ்பைக் என்று கொதறி வைக்காமல், நீட்டான ஹேர் ஸ்டைல் என் அவனின் நாகரீகமான தோற்றம் இனியனுக்குப் பிடித்துவிட, அத்தோடு, எப்போதடா நேரம் கிடைக்கும் என்று காத்திருந்து, காதலிகளுடன் ஊர்சுற்ற போகும் நண்பர்களைப் பார்த்திருந்தவனுக்கு, விடுமுறை நாளில் கூட, குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் அவனின் குணம் வெகுவாகப் பிடித்துப்போனது. ‘நம்மளை போல.’ என்ற எண்ணம் இனியனுக்குள் உதிக்க, அதன் வெளிப்பாடாக இவனும் பதிலுக்குக் கௌதமை பார்த்துப் புன்னகைத்தான்.
சாப்பிட்டு முடித்து, கவுன்டரில் பணம் செலுத்த இனியன் சென்றபொழுது, அங்கே வந்த கெளதம், “ஹாய் நண்பா! என் பேரு கெளதம். இது என் அப்பா, அண்ட் இது என் தம்பி ஜெய். காலேஜ் படிக்கிறான்.” என்று தானாகவே அறிமுகம் செய்துகொள்ள, மீண்டும் ஒருமுறை இனியனுக்குக் கௌதமை பிடித்துப்போனது. புன்னகையுடன், “ஹாய் நண்பா, என் பேரு இனியன், யாழினியோட அண்ணன். ஏபிசி கம்பனில வொர்க் பண்றேன்.” என்று பதிலுக்குத் தன்னை அறிமுகம் செய்துகொண்டவன், கௌதமின் தந்தையிடமும், ஜெய்யிடமும் மரியாதைக்குச் சில வார்த்தைகள் பேசினான். அதற்குள் வாஷ்ரூம் சென்றிருந்த யாழினி அங்கே வர, அவளையும் தன் குடும்பத்துக்கு அறிமுகம் செய்துவைத்தான் கெளதம். பதிலுக்கு, கைகூப்பி “வணக்கம் அங்கிள்.” என்று யாழினி சொல்ல, சேகருக்கு யாழினியை பார்த்ததுமே பிடித்துப்போனது. இவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்குள் இருவரும் பில் தொகை கட்டிமுடிக்க, கேட் அருகில் செல்லும் வரை, இரு ஆண்களும் பேசிக்கொண்டே வர, வெளியே வந்ததும் இரு குடும்பமும் விடை பெற்றுக்கொண்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்குப் புறப்பட்டனர்.