அத்தியாயம் 4
நாட்கள் வேகமாகச் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாக, ஆரா கெளதம் வீட்டோடு நன்கு பழக ஆரம்பித்து இருந்தாள். அவ்வபொழுது கௌதமை பார்க்கும் நேரம், வணக்கம் சொல்பவள் பொதுவாக ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். ஜெய்யிடம் மட்டும் அவ்வளவாகப் பேசுவது இல்லை. அவன் சிரித்தாள் மட்டும் பதிலுக்குச் சிரிப்பாள். அலுவகத்திலும் அப்படிதான். சந்தேகம் கேட்பது, அலுவலக ரீதியாகப் பேசிக் கொள்வதோடு நிறுத்திக்கொள்வாள். அதற்காக அவனைப் பிடிக்காது என்று கிடையாது அதே நேரம் சிரித்துப் பேசும் அளவுக்கு அவனுடன் பழகவும் இல்லை.
அவளின் அலுவலகத்தில் பெண்கள் எழு மணிக்கு முன்பே அனுப்பபடுவார்கள். இது அவள் கம்பனியின் விதிமுறைகளுள் ஒன்று. ஜெய்யோ, டீம் லீடாக இருப்பதால் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர, இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும். கௌதமிற்கும் அப்படிதான். இவர்கள் இருவரும் வரும் வரை சேகரும் குழந்தையும் மட்டுமே தனியே இருப்பர்.
சீக்கிரமே வீடு வரும் ஆரா, ரெப்ரெஷ் செய்து முடித்ததும், நேரே கௌதமின் வீட்டிற்குச் சென்று குழந்தை தேஜஸ்வினியை தூக்கிக்கொண்டு தங்கள் பிளாட்டிற்கு வந்துவிடுவாள். ஆரம்பத்தில் குழந்தையைக் கொடுக்க யோசித்த சேகர், நாட்கள் போகப் போக, தன்னால் குழந்தையுடன் ஓடி ஆடி விளையாட முடியாத காரணத்தாலும், குழந்தையும் ஆராவிடம் நன்றாக ஒட்டிக்கொள்வதாலும் குழந்தையைத் தூக்கிபோக அனுமதி அளித்தார்.
அப்படிதான் முதன் முதலில், குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்த ஆரா, நேரே தன் அறைக்கு வந்தவள், தனது சூட்கேஸில் இருந்த அவளது குடும்பப் புகைப்பட ஆல்பத்தை எடுத்து, தன் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் ஒவ்வொருவராகச் சுட்டி காட்டி, அவர்களுக்கும் இவளுக்கும் இருக்கும் உறவை சொல்லி கொடுத்தாள்.
“இது ஆச்சி, இது தாத்தா, இது அப்பத்தா, அப்புறம் இது அம்மா டா செல்லகுட்டி.” என்று தினமும் சொல்லி கொடுக்கக் கொடுக்க, அக்குழந்தைக்குப் புரிந்ததோ இல்லையோ, நாள் செல்ல செல்ல, ஆல்பத்தைப் பார்த்ததும் குழந்தை தானாகவே, தெளிவில்லாத தன் மழலை குரலில் ஒவ்வொருவரின் புகைப்படத்தைப் பார்த்ததும் சரியாகச் சொல்வாள். குறிப்பாக மிருதுளாவின் புகைப்படத்தைப் பார்த்ததும் குழந்தை தானாகக் குஷியாகி துள்ளி குதித்து, “ ம்ம்ம்ம் ….ம்ம்ம” என்று சொல்வாள்.
இப்படியாக அந்தக் குட்டி ராதைக்கு, ஆரா பேச கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள், ஒரு சிற்றன்னையாக. இவை அனைத்தும் நடந்தேறுவது நித்யாவிற்குத் தெரியாமல் தான். பொதுவாக இருவரும் அலுவகம் முடிந்து வந்ததும், ரெப்ரெஷ் செய்த பின், கொறிக்க எதையாவது எடுத்துக்கொண்டு டி.வி முன்போ இல்லை லேப்டாப் முன்போ அமர்ந்து விடுவாள் நித்யா. எப்போதாவது தான் குழந்தையுடன் அமர்ந்து விளையாடுவாள். அத்தோடு இருவருக்கும் தனித் தனி அறை என்பதால், ஆரா தனது அறையிலேயே இந்தக் கற்றல் வேலையைச் சத்தமில்லாமல் செய்வாள்.
இப்படியாகக் கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியும் தருவாயில் இருந்தது. ஆரா அலுவகலத்தில் ட்ரைனிங் முடிந்ததும், தேர்வு வைப்பார்கள். அதில் மிகவும் மோசமாகப் பெர்பார்ம் செய்பவர்களை அலுவலகத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். அப்படி வைக்கப்பட்ட தேர்வில் ஆரா ட்ரைனிங் பாட்ச்சிலேயே பெஸ்ட் பெர்பார்மராக வெற்றி பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றாள். கூடவே அனைவரும் சொன்னது, “ஜெய் செம்மையா ட்ரைன் செய்வான். அவன் டீம்ல இருக்கிறவங்க யாரும் வெளிய போய்ப் பார்த்தே இல்லை.” என்று.
நிச்சயம் ஆராவுக்கும் அது நன்றாகத் தெரியும். ட்ரைனிங் பொழுது, அவன் காட்டிய பொறுமை, எளிதாகப் புரியும்படி சொல்லிக்கொடுத்தது, சந்தேகம் கேட்டாள், தெளிவாகச் சொல்லிக் கொடுப்பது, தவறு செய்துவிட்டால், முகம் சுளிக்காமல் அதை விளக்குவது என்று அவனின் ஒவ்வொரு முயற்சியால் தான் இன்று ஆரா பெஸ்ட் பெர்பார்மர் ஆனது.
புன்னகையுடன் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றவள், ஜெய்யை பார்த்து நன்றியுடன் புன்னகைக்க, அவனும் பதிலுக்குப் புன்னகைத்தவன், இரண்டு கைகளின் கட்டை விரலை தூக்கி காட்டி, “காங்கிராட்ஸ் அண்ட் ஆள் த பெஸ்ட்.” என்று தனது வாழ்த்துக்களைச் சத்தமில்லாத இதழ் அசைவில் தெரிவிக்க, பதிலுக்கு அவளும் “தேங்க்ஸ்.” என்றாள் அவனைப் போலவே. நித்யாவும் இதில் தேறி இருந்தாள்.
அதன்பின் வந்த நாட்களில், மெல்ல மெல்ல ஆரா, ஜெய் நட்பு வளர ஆரம்பித்தது. இன்றும் ஜெய் டீம்மிலையே ஆரா இருந்தாள். அதனால் அவர்களுக்குள் பேசுவதற்குச் சந்தர்ப்பம் அவ்வபோது கிடைத்தது. அலுவலகச் சம்பந்தம் இல்லாமல், மதியம் லஞ்ச நேரத்திலும், தேநீர் இடைவேளையின் பொழுதும், நேராகப் பார்த்தாள் புன்னைகைப்பதும், சில சமயம் வேலைக்கு நடுவே ஜோக் சொல்லி சிரிப்பதுமாக நாட்கள் சென்றது அவர்களுக்கு. ஜெய்யின் நண்பர்களும் ஆராவின் நண்பர்களும் ஒன்றாகக் குழுவாக மாறினார்.
ஆராவின் அலுவலகத்தில் அனைவருக்கும், தனித் தனி டெஸ்க் உண்டு. ஒவ்வொரு டெஸ்க் இடையிலும் கண்ணாடியால் ஆனா தடுப்புகள் இருக்கும். அதே போல ஒவ்வொரு டீமும் ஒரு வட்டவடிவ குழுவாக அமர்ந்திருப்பர். எதேர்சையோ இல்லை ஜெய்யின் அதிர்ஷ்டமோ அவனின் எதிர் இருக்கை ஆராவுக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டு பேருக்கும் நடுவில் இருந்த கண்ணாடி தடுப்பு வழியே, அவளின் முகம், கழுத்து வரை ஜெய்யால் பார்க்க முடியும்.
வேலை நேரத்தில், ஜெய்யின் முகமும் கை விரல்களும் கணினியில் இருந்தாலும், அவன் பார்வை எதிரில் இருக்கும் ஆராவின் முகத்தில் தான் குடி கொண்டிருக்கும். வேலை செய்துகொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தோழியுடன் சிரித்துப் பேசும் அவள் இதழ்களையும், நடுநடுவே நெற்றியில் புரளும் கற்றை முடியை காதோரம் ஒதுக்கி விடும் அவள் விரல்களையும், கணினி திரையையும், கீபோர்டையும் மாறி மாறி பார்த்துப் பம்பரமாகச் சுழலும் அவள் கண்களின் கருவிழிகளையும், இவன் கண்கள் ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கும்.
சில சமயம் ஏதோ உணர்வு தோன்ற சட்டென்று ஆராதனா இவனை நிமிர்ந்து பார்க்கும் நேரம், “டேய்! ராஜேஷ் உன்னோட கோடிங்ல எரர் காட்டுது. கொஞ்சம் இங்க வா.” என்று கடமை வீரனாக யாரையோ அழைப்பது போல நடிப்பான். ஆனால் அவள் நம்பமாட்டாமல் இவனையே பார்த்தாள், “டேய்! சீக்கிரம் வாயேண்டா. எனக்கு டைம் இல்லை. இதை இன்னைக்கு முடிச்சாகணும்.” என்று மேலும் சத்தத்தைக் கூட்டி எரிந்து விழுவது போலப் பாவனைச் செய்வான். அப்பொழுது அவனின் கை கால்களைப் பார்க்க வேண்டுமே, ‘பில்டிங் ஸ்ட்ராங்! பேஸ்மென்ட் வீக்! ’ என்ற ரேஞ்சுக்கு மினி ஷேக் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்.
அவள் குனிந்ததும், ‘அப்பாடா!’ என்று ரிலாக்ஸ்சாக மூச்சு விட்டுக்கொண்டே திரும்புவனை, பக்கத்தில் அமர்ந்திருக்கும் ராஜேஷ், “நான் பக்கத்தில இருக்கேன். அங்க எவனடா கூப்டிட்டு இருக்க?!” என்று முறைக்க, ஜெய்யோ அசடு வழிந்துக்கொண்டு, “ஒஹ்! நீ இங்க இருக்கியாடா. எனக்குத் தெரியாம போச்சே. நீ சீட் மாறிட்டன்னு நினைச்சு அங்க கூப்ட்டேன்.” என்று கூறி ‘ ஈ!!’ என்று பல்லைக்காட்ட, ராஜேஷோ, “நீ சைட் அடிக்கிறதுக்கு. எரர்ன்னு சொல்லி என் பேரை டேமேஜ் செஞ்சுட்டியே டா. உன்னைக் கொள்ளாம விட மாட்டேன்!” என்று கொலை பார்வை பார்க்க, ஜெய்யோ, “கூப்பிட்டியா மச்சி, இதோ வரேன்.” என்று சுவற்றைப் பார்த்துக் கூறிக்கொண்டே, இல்லாத அழைப்பை காரணம் காட்டி எழுந்து செல்கையில், எதிர் இருக்கையில் இருந்து சிரிப்புச் சத்தம் கேட்கும். வேறு யாரு, நம் ஆராதான்!
ஜெய்யின் அளப்பரைகளைப் பார்த்து, இவன் ஆராவை காதலிப்பதை புரிந்துகொள்ளும் நண்பர்கள், மதிய லஞ்ச நேரத்தில் இவனை ஓட்டு ஓட்டு என்று ஓட்டுவார்கள். அதிலும் ராஜேஷ், “டேய்! பச்சை புள்ள மாதிரி இருக்கிற இவன் என்னமா சைட் அடிக்கிறான் தெரியுமா டா. விட்டா அந்தப் புள்ளையை இப்பவே தாலி கட்டி கூட்டிட்டுப் போய்டுவான் போல.!” என்று போட்டுக் கொடுக்கும்போது, நண்பர்கள் பட்டாளம் இவனை வம்பிழுக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லடா.” என்று சிரிப்புடன் மறுத்துப் பேசினால், “ஏய்! ஏய்! ஏய்!” என்று அனைவரும் கோரஸ் பாடும்போது, இவன் முகம் அப்படியே சிவப்பு வன்னம் பூசிக்கொள்ளும்.
“டேய்! சத்தம் போடாதீங்கடா!” என்று வெட்கத்துடன் ஜெய் பதில் கூற, அதற்கும் அவனின் நண்பர்கள், “இப்பவே லவ்வருக்கு இப்படிப் பயப்படுறான் டா! இவன் எல்லாம் நாளைக்குக் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் ம்ம்ம்ம்ம்ம்ம்….” என்று ‘ஓ‘ போட ஜெய்யோ கைகழுவும் சாக்கில் எழுந்து ஓடியே விடுவான். இப்படியாக இனிமையாக நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.
அன்று ஆராவிற்குப் பிறந்த நாள். காலையிலேயே அவள் வீட்டில் இருந்து போன் மூலம் அவள் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்து கூற, சித்ரா அவளிடம், பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு நித்யாவுடன் சென்றுவரும்படி கட்டாயமாகக் கூறினார். அவரிடம் சரி என்று கூறியவள், தோழியுடன் கிளம்பி அலுவலகம் சென்றாள். அங்கேயும் அனைவரும் அவளை வாழ்த்து மழையில் நனைத்துவிட்டனர். ஆனால் பாவம் ஜெய்க்கு தான், வேலைப்பளுவில் அன்று ஆரா பிறந்தநாள் என்று தெரியாமல் போய்விட்டது. அலுவகலம் முடியும் நேரம் தான் தான் தெரிந்துகொண்டான். இதில் அவன் நண்பர்கள் வேறு, கொலை குற்றவாளியை போல் அவனைப் பார்த்து வைத்தனர்.
ஆரா, நித்யா மற்றும் அவளுடன் புதிதாகச் சேர்ந்த சுரேஷும், வேலை முடிந்து தினமும் ஒன்றாகப் பேசிக்கொண்டே வெளியே வருவது வழக்கம். அன்று தனக்குச் சின்ன வேலை இருப்பதால் ஐந்து நிமிடத்தில் அதை முடித்துவிட்டு தான் வருவதாகவும், அதுவரை இருவரையும் கீழே பார்க்கிங்கில் காத்திருக்கும்படி நித்யா கூறிவிட்டதால், ஆராவும் சுரேஷும் மட்டும் கீழே இறங்கி வந்தனர்.
பார்கிங் ஏரியா வழியாகத் தான் வெளியே போக வேண்டும். பேசிக்கொண்டே இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது, ஆராவை கொஞ்சம் நிற்கும்படி சொன்ன சுரேஷ் தன் பையில் இருந்து, ஒரு சின்னக் கிஃப்ட் பாக்ஸ்சை எடுத்து பிறந்தநாள் பரிசாக அவளிடம் கொடுத்தான். “எதுக்கு இதெல்லாம் சுரேஷ்.” என்று தயக்கத்துடன் அவள் மறுக்க, வற்புறுத்தி அவளை வாங்க வைத்தவன் அப்போதே பிரித்துப் பார்க்கும்படி கூறினான்.
சங்கடத்துடன் அவள் அதைப் பிரித்துப் பார்க்க, உள்ளே, ஜோடியாக ஒரு ஆண் மற்றும் பெண் பொம்பை ஒரு குடுவைக்குள் சுற்றிக்கொண்டு இருக்க, அவர்கள் மேல் பூக்களும், பனி துளிகளும் பொழிவது போல இருந்தது. அதில் சிவப்புக் கலரில் ‘I LOVE YOU’ என்ற வார்த்தைகள் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியுடன் அவள் நிமிர்ந்து பார்க்க, சுரேஷோ அவள் முன் ஒற்றைக் காலை மண்டியிட்டு வெள்ளைகாரர்கள் செய்வது போல, ரோஜா பூ ஒன்றை அவள் முன் நீட்டி, “லைஃப்லாங் நீ என்கூட இருக்கணும்னு ஆசைபடுறேன் ஆரு. Will you marry me?” என்று தனது காதலை அவளிடம் சொல்லி, திருமணம் செய்வதற்குச் சம்மதம் கேட்டான்.
எழு மணிக்கு மேல் ஆனதால், எங்கும் இருள் சூழ்ந்தபடி இருந்தது. பைக் எடுக்கவென்று ஒரு சிலரின் நடமாட்டத்தைத் தவிர அங்கே எவரும் இல்லை. அப்படிச் செல்பவர்கள் கூட, காதலிக்கு லவ் ப்ரொபோஸ் செய்கிறான் என்று நினைத்து, லேசாகச் சிரித்துவிட்டு கடந்து சென்றனர்.
ஆனால் ஆராவோ அதிர்ந்தபடி பின்னால் நகர்ந்தவள், “என்ன சுரேஷ் இது! தயவு செஞ்சு எழுந்துருங்க.” என்று மெதுவாகச் சொல்ல, அவனோ, “நீ சம்மதம் சொல்லு ஆரு. அப்புறம் நான் எழுந்துகிறேன்.” என்று அடம் பிடிக்க, அவளோ அவஸ்தையாக உணர்ந்தாள். தெரியாத ஒருவன் இப்படிச் செய்திருந்தால், திட்டியோ, அறைந்துவிட்டோ அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்பாள். ஆனால் சுரேஷ் அவளுடன் வேலை செய்பவன், அத்தோடு இது அலுவலக இடம் வேறு. இங்கே ஸீன் கிரியேட் செய்து போவோர் வருவோர் எல்லோரும் தன்னைப் பார்ப்பதை அவள் விரும்பவில்லை.
அதனால் மெதுவாக அதே நேரம் அழுத்தமாக, “தயவு செய்து எழுந்துகோங்க சுரேஷ். எனக்கு லவ் பண்ற ஐடியாலாம் இல்லை. அதுக்காக நான் இங்க வரல.” என்று சற்றே கடுப்புடன் கூறினாள். ஆனால் சுரேஷோ, “ப்ளீஸ் ஆரு. நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாது….” என்று ஏதேதோ பிதற்ற ஆரம்பிக்க, ‘என்னடா இது தொல்லை’ என்றாகி விட்டது ஆராவிற்கு. யாரவாது பார்த்து விடுவார்களோ என்று அவள் பயந்து கொண்டிருக்க, அப்பொழுது, “அவங்க தான் இஷ்டம் இல்லைன்னு சொல்றாங்கல சுரேஷ். அப்புறம் எதுக்கு அவங்களைக் கட்டாயப் படுத்துறீங்க?!” என்று சொல்லிக்கொண்டே, தீ பார்வையுடன் அவர்கள் இருவர் அருகில் வந்து நின்றான் ஜெய்.
யாரையோ தேடி கீழே வந்த ஜெய், பார்கிங் ஏரியாவில் ஆரா நின்று கொண்டிருக்க, அவள் அருகில் மண்டியிட்டபடி சுரேஷ் நிற்பதை பார்த்தவன், விஷயம் என்னவென்று யூகிக்க, அவனுக்குள் கோபத்தீ எரிந்தது. ‘காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போனானான்ன்ற மாதிரி நானே இப்போதான் அவ மேல இருக்கிற லவ்வை புரிஞ்சிகிட்டேன். அவளும் இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் சிரிச்சு பேசுறா! இவன் என்னடானா ஸ்ட்ரைட்டா ப்ரொபோஸ் பண்றதுக்குப் போய்ட்டான்.’ என்று மனதுக்குள் சுரேஷை வருத்தெடுத்தவன், வேகமாக இவர்கள் அருகில் வந்திருந்தான் .
ஜெய்யை அங்கே பார்த்ததும் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்ட மாணவனைப் போல, சட்டென்று எழுந்துகொண்ட சுரேஷ், அவன் சொன்ன வாக்கியத்தில் முகம் வருத்தமுற, ஆறுதலாக எதாவது சொல்வாளா என்று ஆராவை பார்த்தான். அதையும் கண்டுகொண்ட ஜெய், அவளிடம் திரும்பி, “நீங்க இவரை லவ் பண்றீங்களா?”என்று சற்றே கோபத்துடன் கேட்க, அவளோ பதற்றத்துடன், “இல்லை ஜெய். நான் இவங்களை லவ் பண்ணல. திடீர்ன்னு இவங்க இப்படிச் செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கல. ஏதோ பர்த்டே கிப்ட்ன்னு நினைச்சேன். ஆனா….” என்று மேலே பேச போனவளை கை காட்டி தடுத்தவன், சுரேஷிடம் திரும்பி, “பிடிக்கலன்னு சொல்றவங்களைக் கம்பல் பண்றது நல்லது இல்லை சுரேஷ். உங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க. அவங்க கிட்ட யாராவது இப்படிச் சொன்னா அவங்களுக்கு எப்படி இருக்கும்?! ஒரு அண்ணனா நீங்க எப்படிப் பீல் பண்ணுவீங்க?! இது ஆபீஸ். யாராவது பார்த்தா உங்க நிலைமை என்ன ஆகுறது?! வேலைக்குச் சேர்ந்து முழுசா மூணு மாசம்கூட ஆகல. இப்படி நீங்க நடந்துகிட்டது தெரிஞ்சா ஆஃபீஸ்ல சிவியர் ஆக்க்ஷன் எடுப்பாங்க. ஈவன் ஜாப்ல இருந்து ரீமூவ் கூடப் பண்ணலாம்.” என்றவனின் குரலில் மறைமுக எச்சரிக்கை தெரிந்ததோ?
ஆனால் சுரேஷுக்கோ, சம்பந்தப்பட்ட ஆராவே அமைதியாக இருக்க, சம்பந்தமே இல்லாத ஜெய் அவனைத் தவறாகப் பேசவும் மனதுக்குள் கடுப்பேறியது. ‘இப்போ நான் என்ன செஞ்சுட்டேன்! கையைப் பிடிச்சேனா? இல்லை கிஸ் பண்ணேனா? எதுக்கு இவரு இந்தக் காண்டாகுறாரு.’ என்று மனதுக்குள் புகைந்தவன், அதையே எரிச்சல் குரலில், “ஜெய், ஏதோ ஈவ் டீசிங் செஞ்ச மாதிரி பேசுறீங்க. எனக்கு அவளைப் பிடிச்சு இருந்தது. கல்யாணம் செஞ்சுக்கத் தான் ப்ரொபோஸ் பண்றேன். அவ்வளவுதான். ஆராவே அமைதியா இருக்கிறா. நீங்க என்னமோ கத்துறீங்க.” என்று படபடவெனப் பேச, தனது இருகைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நின்ற ஜெய், “ஒஹ்! அப்போ அவ வேற ஒருத்தரை லவ் பண்றான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?! ம்ம்….” என்று ஒற்றைப் புருவத்தைத் தூக்கி கோபத்துடன் பதிலுக்குக் கேட்டான் ஜெய்.
அவன் பதிலில், இருவருமே அதிர்ச்சி அடைய, சுரேஷோ அதிர்ந்த பார்வையுடன் ஆராவை பார்க்க, அவளோ, குழப்பமான பார்வையுடன் ஜெய்யை பார்த்தாள். இவர்களின் பார்வையைச் சட்டை செய்யாத ஜெய், “ம்ம், சொல்லுங்க சுரேஷ். அப்போ என்ன சொல்வீங்க?!” என்று மீண்டும் கேட்க, அவனோ, “நீங்க பொய் சொல்றீங்க. அவ யாரையும் லவ் பண்ணல. எனக்குத் தெரியும்.” என்று பரிதவிப்புடன் கூறினான்.
அதற்குச் சிரித்த ஜெய், “உங்களுக்குத் தெரியாது பட் எனக்குத் தெரியும்.” என்றவன் திரும்பி ஆராவின் தோளில் கைபோட்டு, ‘இவன் என்ன சொல்ல போறான்’ என்ற மிரண்ட பார்வையுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவின் கண்களையே பார்த்துக் கொண்டு, மென்மையான குரலில் “நானும் ஆராவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்.” என்று கூறி சுரேஷ் அறியாவன்னம் ஆராவை பார்த்து கண்ணடிக்க, ஆராவோ, திக்பிரம்மை பிடித்தவள் போலத் தன்னையே மறந்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.
ஜெய் கூறியதில், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற சுரேஷ், கேள்வியாக ஆராவை பார்க்க, அவள் நிற்கும் நிலைமையே அவனுக்குள் கலக்கத்தை உண்டு பண்ணியது. “ஆரு ….” என்று சொல்ல போனவனை ஜெய் முறைக்க, “ஆ…ஆராதனா, ஜெய் சொல்றது உண்மையா?! நீ அவரை லவ் பண்றியா?!” என்று ஏமாற்றத்துடன் கேட்க, அவளோ பதில் சொல்லும் நிலைமையில் இல்லை.
‘இவன் எப்பொழுது தன்னைக் காதலிக்க ஆரம்பித்தான்?! சுரேஷ் சொல்லும்பொழுது எரிச்சல் வந்த எனக்கு இவன் சொல்லும்பொழுது ஏன் கோபம் வரவில்லை?! உள்ளுக்குள் எனக்கும் அவனைப் பிடித்திருக்கிறதா?! நானும் அவனைக் காதலிக்கிறேனா?!’ என்று மனதுக்குள் எழுந்த கேள்விகளுக்கு, விடைகான முடியாத அதிர்ச்சியில் அல்லவா அவள் நிற்கிறாள்.
தான் கேட்டும், சிலையென அவள் நிற்பதை பார்த்த சுரேஷுக்கு, அப்பொழுதே மனம் நொடிந்துபோனது. இருந்தும், “ஆராதனா, அவர் சொல்றது உண்மையா?!” என்று மீண்டும் அவன் சத்தமாகக் கேட்ட பின்பே, நடப்புக்கு வந்தவளுக்கோ, “இல்லை” என்று சொல்ல நா எழவில்லை. என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும்பொழுதே, தலைவலிக்க ஆரம்பிக்க, அப்பொழுது தூரத்தில் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த நித்யாவை பார்த்ததும், அந்தச் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாகத் தப்பிக்கும் எண்ணத்துடன், “எனக்குத் தலைவலிக்குச் சுரேஷ். நான் கிளம்புறேன்.” என்று அவன் முகம் பார்க்காமல் கூறிவிட்டு, ஜெய்யை நிமிர்ந்தும் பாராமல் நித்யாவுடன் அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள்.
அவள் போவதையே பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷின் அருகில் சென்ற ஜெய், “தேங்க்ஸ் மச்சான்!” என்று சின்னச் சிரிப்புடன் கூற, “என்னது மச்சானா?!” என்று அதிர்ந்து தன்னைப் பார்த்தவனிடம், “ஆமாம், என்னோட வைப் உனக்குத் தங்கச்சினா, அப்போ நீ எனக்கு மச்சான் தான சுரேஷ்!” என்று சொல்லவும் ‘ங்கே!‘ என்று விழித்துக் கொண்டிருந்தவனிடம், “எப்படியோ மச்சான், உன்னோட தயவில ஒருவழியா நான் என்னோட லவ்வை சொல்லிட்டேன். ரொம்பத் தேங்க்ஸ் மச்சான்.” என்று வார்த்தைக்கு வார்த்தை மச்சான் சொன்னவன், “சொல்லிட்டேனே! என் காதலை!” என்று கும்கி படப் பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டே சென்றான். இங்கே சுரேஷோ, “அப்போ இவங்க ஆட்டத்தில நான் தான் அவுட்டா! மச்சான் இப்படிச் சாச்சுபுட்டியே மச்சான்!” என்று புலம்பியவன் மயங்கி சரிந்தான்.
வீட்டுக்கு போன ஆராவோ, நித்யாவிடம், பார்க்கிங்கில் நடந்த அனைத்தையும் கூறினாள். அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த அவள், “ச்சே! ஸ்பாட்ல நான் இல்லாம போயிட்டேனே.” என்று வருத்ததுடன் சொல்ல, அதில் மகிழ்ச்சி அடைந்த ஆரா, “எனக்குன்னு நீயாவது சப்போர்ட் இருக்கியே டி..” என்று அவள் தனக்காகப் பேசி இருப்பாள் என்று நினைத்து கூற, நித்யாவோ, “அட உனக்கு யாரு சப்போர்ட்ன்னு சொன்னா! நான் மட்டும் அங்க இருந்திருந்தனா, லவ் சொன்ன அடுத்தச் செகண்ட் ஜெய் அண்ணா கையைப் பிடிச்சு, ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா, தயவு செஞ்சு இந்தக் குரங்கை கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு போய்டுங்க. தொல்லை தாங்க முடியல. ஒரே குஷ்டமப்பான்னு சொல்லி அண்ணனனுக்கு வாழ்த்து மடல் வாசிச்சு அவர் மாதிரியே ஒரு சிலை திறந்திருப்பேன்.” என்று கிண்டல் அடிக்க, “உன்னை!!! “ என்று பல்லைகடித்தாள் ஆரா. அதற்கும் நித்யா, “ஐயோ! ஆரு கோப படாதா. சிலைல எந்தத் தப்பும் நடக்காது. அண்ணன் மாதிரியே பக்காவா இருக்கும். நோ எரர்.” என்று கூறிவிட்டு சிட்டாகத் தனது அறைக்குப் பறந்து சென்றாள்.
ஆனால் இங்கே ஆராவோ தனக்கு இருக்கும் சின்ன மூளையைக் குடைந்து யோசித்து யோசித்துப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. “நான் வந்த வேலையையே இன்னும் முடிக்கல, இதுல லவ் வேறையா! ஆண்டாவா!” என்றவள் “அட போங்கடா நீங்களும் உங்க காதலும்.” என்று நொந்தபடி குறட்டையுடன் உறங்கி போனாள்.
அடுத்த நாள் தனது மேல் அதிகாரிகளிடம் எப்படியோ பேசி சுரேஷை வேறு டீமிற்கு மாற்றி இருந்தான் ஜெய். இதை அறிந்த சுரேஷ், “டேய்! ஏன்டா இந்த அநியாயம் பண்றீங்க! அவ்வ்வ்வவ்” என்று கிட்டத்தட்ட அழாத குறையாக முகத்தை வைத்திருந்தான்.
நேற்று தான் சொன்ன காதலுக்கு ஏதாவது ரியாக்க்ஷன் இருக்கிறதா? என்று ஜெய் ஆராவின் முகத்தையே பார்த்தபடி சுத்திக் கொண்டிருக்க, அவளோ அப்படி ஒரு சம்பவமே நடவாதது போல நடமாடிக் கொண்டிருந்தாள். இதில் நடுவராகப் போனது நமது நித்யாதான். “என்னங்கடா நடக்குது இங்க?! இவ என்னடானா அம்னீசியா பேஷன்ட் மாதிரி சுத்துறா. அண்ணன் என்னடானா வீட்டில மாமியார் காணாம போன மருமக மாதிரி முகத்தில ஸ்மைலோட சுத்துறாறு.” என்று நினைத்தவள், ‘பே!’ என்று திருவிழாவில் காணமல் போன குழந்தை போலத் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.
ஆம்! ஆராவிற்கு ஜெய்யின் காதலை மறுக்கவும் முடியவில்லை. உடனே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஆதலால் அது நடக்கும்போது பார்க்கலாம். இப்போதைக்கு நமது வேலையைப் பாப்போம் என்று விட்டுவிட்டாள். அதையே ஜெய்யிடமும் தனிமையில் சொல்லிவிட்டாள். “எனக்கு இப்போதைக்கு எதுவும் சொல்ல தோனல. ஐ நீட் சம டைம்.” என்று கேட்க, அவனும், “சுயூர். டேக் யுவர் டைம் ஆரா.” என்று கூறிவிட்டு ஒதுங்கி கொண்டான்.
அவன் நினைத்திருந்தது, தன் மனதில் இருக்கும் காதலை ஆராவிற்குத் தெரியபடுத்த வேண்டும் என்றுதான். அது நடந்துவிட்டது. சுரேஷ் தன் காதலை சொன்ன அடுத்த நொடி இல்லை என்று மறுத்த ஆரா தன்னிடம் அப்படிக் கூறவில்லை என்பதே, நிச்சயம் அவள் தன் காதலை ஏற்றுக் கொள்ளவாள் என்ற நம்பிக்கையை அவனுக்குக் கொடுத்தது. அதனாலே மேற்கொண்டு அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க, ஒரு நாள் மாலை, வேலை முடிந்து தங்களது அபார்ட்மெண்ட்டுக்குத் தோழிகள் இருவரும் வர, அதே நேரம் நித்யாவின் அண்ணன் ரகுவும் பதற்றத்துடன் இவர்கள் பிளாட்டிற்கு வந்து சேர்ந்தான். அவன் வந்து சொன்ன பிறகு தான் தெரிந்தது, நித்யாவின் பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் என்று.
இருவரையும் உடனடியாக அவன் கிளம்பச் சொல்ல, அப்பொழுதுதான் இருவருக்கும் நியாபகம் வந்தது இன்னும் மூன்று நாட்களில் ஒரு ப்ராஜக்ட் முடிக்கவேண்டும் என்று. இப்பொழுதுதான் வேலைக்குச் சேர்ந்துள்ளதால் என்ன செய்வது என்று இருவரும் குழம்ப, ஆராவோ, நித்யாவை கிளம்பச் சொன்னவள், அலுவலகத்தில் தான் எப்படியாவது பேசி சமாளித்துக் கொள்வதாகவும், வேலை முடிந்ததும் தானும் புறப்பட்டு வருவதாகவும் கூற, ரகுவிற்கோ அவளைத் தனியாக விட்டுச்செல்ல மனம் இல்லை.
உடனே ஆராவின் பெற்றோருக்கு போன் போட, அவர்களோ கட்டளையிடாத குறையாக இவளை கிளம்பி வர சொல்லி அதட்டிக் கொண்டிருந்தனர். இவள் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்காதவர்கள், “நம்ம ஆச்சிக்கும் இப்படி ஏதாவதுனா, இப்படிதான் வேலை இருக்குன்னு சொல்லுவியா தனம்” என்று சித்ரா கோபமாகக் கேட்கவும், “என்னம்மா நீ! ஏன் இப்படி எல்லாம் பேசுற.” என்று கூறி வருத்தபட்டவள், “நீ மொதல்ல அக்கா கிட்ட போனை கொடு.” என்று சொல்ல, லைனில் வந்த மிருதுளாவிடம் அலுவலகச் சூழ்நிலையைப் பற்றி எடுத்து சொல்லி, மூன்று நாளில் தான் வந்துவிடுவதாக ஆரா சொல்லவும், அதன்பின் ஒருவழியாக மிருதுளாவே பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினாள், பல கண்டிஷன்கள் அடிப்படையில். இறுதியாக, நித்யாவை மட்டும் அழைத்துக் கொண்டு புறப்பட்ட ரகு, பக்கத்து வீட்டில் இருந்த தம்பதிகளிடம் ஆராவை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றான்.
அடுத்த மூன்று நாட்கள் எப்படியோ கழிய, அதற்கடுத்த நாள் காலை ஆராவை தொலைபேசியில் அழைத்த சித்ரா, அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னவர், மேலும் இவளது கனவிலும் இடியை இறக்கினார்.