நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
“வெண்மதி நீங்க லவ் பண்ணது எனக்கு ஒரு பிரச்சனை கிடையாது. இப்போ உங்க மனசுல அவன் இல்லைன்னு சொன்னீங்களே அதுவே எனக்கு போதும். இந்த விஷயத்தை நீங்க என்கிட்ட சொன்னதுனால உங்க மேல எனக்கு மதிப்பு அதிகம்தான் ஆயிருக்கு. உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க ஓகேனா
சொல்லுங்க. நான் எங்க வீட்ல சொல்லி பெரியவங்களை கூட்டிக்கிட்டு வந்து பொண்ணு கேட்க இல்லை இல்லை, கல்யாண தேதி குறிக்க வர்றேன். உங்களுக்கு எவ்வளவு நாள் வேண்டும்னாலும் எடுத்துக்கோங்க . நான் உங்களுக்காக வெயிட் பண்றேன். உங்களுக்கு எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க தோணுதோ அப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்று உறுதியாக கூறினான்.
சமையலறையில் இருந்த சர்க்கரை தீர்ந்து விட்டதனால் ஸ்டோர் ரூமில் இருந்த சர்க்கரையை எடுக்க வந்த லட்சுமியின் காதுகளில் ஸ்டோர் ரூமின் ஜன்னல் வழியாக வசந்த் கடைசியாக பேசியது மட்டும் அவர் காதில் விழுந்தது. அவருக்கு பூரிப்பாக இருந்தது.
முதன்முறையாக வசந்தை பார்த்த பொழுதே லட்சுமிக்கு பிடித்து விட்டது. தன் மகளுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாக இருப்பான் என்று நம்பினார். ஆனால் அவன் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சென்றது அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதற்கு பிறகு அவனை பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு அதே நினைப்புதான். எனினும் மகளிடம் இதைப்பற்றி பேச அவர் தயங்கினார். ஏனென்றால் அவளுக்கு இப்பொழுது திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது அவருக்கு நன்றாக தெரியும். மேலும் வசந்த்க்குமே இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பொழுது என்ன செய்ய முடியும் என்று அமைதியாக இருந்து விட்டார்.
இப்போது வசந்த் பேசியதை கேட்ட அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மகளிடம் இதைப் பற்றி பேசலாமா என்று முதலில் யோசித்தார். ஆனால் அவள் திரும்பவும் திருமணம் வேண்டாம் என்று கூறி மறுத்து விடுவாளோ என்று தயங்கினார்.
எனவே வெண்மதியின் நெருங்கிய தோழியான கவிதாவின் மூலம் பேசலாம் என்று முடிவெடுத்து கவிதாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.
இதனை தெரிந்துகொண்ட கவிதாவுக்கும் இன்ப அதிர்ச்சிதான்.
வசந்தின் பார்வை வெண்மதி மீது இருப்பது கவிதாவுக்கு தெரிந்த விஷயம் தான். அவன் மீது நல்ல அபிப்ராயம் கவிதாவுக்கு இருந்தது. எனினும் வசந்த் தானே வந்து தன் காதலை வெண்மதியிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் நாம் இதைப்பற்றி வெண்மதியிடம் பேசலாம் என்று எண்ணி காத்திருந்தாள். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்த்தாள் அப்படி அவள் காத்திருந்தது வீண் போகவில்லை.
நாம் வெண்மதியிடம் பேசி இந்த திருமணத்திற்கு அவளை ஒத்துக்கொள்ள செய்யவேண்டும் என்று முடிவு செய்தாள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை வெண்மதி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த போது செல்போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்து கவிதா என்று தெரிந்து கொண்டவள்.
“என்ன கவி காலையில 7 மணிக்கெல்லாம் போன் அடிச்சி இருக்க என்ன விஷயம்?” என்று ஆர்வமாக விசாரித்தாள்.
“சும்மா உன்கூட காலையில் வாக்கிங் போகலாம்னு நினைச்சேன். அதான் கால் பண்ணினேன். வரியா போகலாம்.”
“சரி கவி. நான் பத்து நிமிஷத்துல கிளம்பி வரேன். போகலாம்.” என்று கூறிவிட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி முடித்து விட்டு கிளம்பினாள்.
அந்த பூங்காவின் பிளாட்பாரத்தில் இருவரும் நடந்து கொண்டிருந்தனர். “இன்னிக்கு நல்ல காத்து வருது இல்லையா மதி? என்றாள் கவிதா.
“ஆமாம் கவி. நல்ல வேலை நீ வாக்கிங் கூப்பிட்ட. அதனாலதான் இந்த வெதரை நான் என்ஜாய் பண்ண முடியுது. நீ எப்பவுமே கரெக்ட்டு தான்.” என்று கவிதாவை புகழ
‘இதுதான் நேரம்’ என்று கேட்க நினைத்தாள் கவிதா.
“மதி நிஜமாவா சொல்ற?” என்றாள் அவள் கண்களை நேராகப் பார்த்து.
“இதுல என்ன சந்தேகம் உனக்கு கவி. நீ எப்பவுமே எல்லாத்துலயும் . அதுவும் என்னோட விஷயத்தில் நீ எப்பவுமே ரொம்ப அக்கறையா கேர்ஃபுல்லா இருப்ப.” என்று மனதார உறுதியாக கூறினாள் வெண்மதி.
“சரி. அப்போ நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா? “
“இது என்ன கேள்வி? கவி. நீ எது வேணாலும் என்கிட்ட கேட்கலாம்.”
“ சரி கொஞ்சம் நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசலாமா மதி?”
“ஓகே பேசலாம்.” என்று வெண்மதியும் கூற இருவரும் அந்த நாற்காலியில் உட்கார்ந்தனர்.
“வசந்த் உன்னை பார்க்கிற பார்வையை நீ கவனித்து இருக்கியா?” என்று அவள் முக மாற்றத்தை கவனித்த படி ஆரம்பித்தாள்.
“நான் அதை கவனித்தது கிடையாது. ஆனால் வசந்த் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவதாக சொன்னாரு.” என்று தயங்கியபடியே கூறினாள் வெண்மதி.
“ஓ அப்படியா விஷயம்?” என்று இவள் மூலமாகவே தெரிந்து கொண்டது போலவே கேட்டுக்கொண்டாள் கவிதா.
“அதுக்கு நீ என்ன சொன்ன?”
“எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு சொல்லிட்டேன்.”
“ஏன் அப்படி சொன்ன மதி?”
“என்ன கவி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு நீயே இப்படி கேக்குற. என்னோட சூழ்நிலைக்கு கல்யாணம் செட்டாகாது. பெரியம்மாவும் கதிர்வேலனும் எந்த நேரத்தில் எந்த பிரச்சினை பண்ணுவாங்கன்னு தெரியாது. அதுவுமில்லாம அந்த வீட்டை விட்டு நான் வெளியே வந்துவிட்டேன்னா பெரியம்மா கொஞ்சம் கொஞ்சமா எங்க அம்மாவை பழையபடி அவங்க அதிகாரத்துக்கு கீழே கொண்டு வந்துடுவாங்க. எங்க அம்மா பழையபடி அவங்களோட விருப்பு-வெறுப்பு எல்லாத்தையும் மறந்துட்டு பெரியம்மா சொல்றதை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். அந்த நிலைமைக்கு எங்க அம்மா வர்றதுக்கு நான் விடமாட்டேன்.”
“அதுக்காக நீ கல்யாணமே பண்ணிக்காம இருக்க போறியா?”
“நான் அப்படி சொல்ல வரல. இது மட்டும் காரணம் இல்லை. ஏற்கனவே ஒருத்தனை நம்பி நான் முட்டாள் ஆகிட்டேன். இப்போ இன்னும் ஒருத்தனை நம்ப என்னால முடியல.”
“மதி லூசு மாதிரி பேசாத. யாரை யார் கூட கம்பேர் பண்ணி பேசுற. அந்த விஜய் உன்னை லவ் பண்ணவே இல்ல. சும்மா டைம் பாசுக்கு உன்னை சுத்தி சுத்தி வந்தான். ஆனா வசந்த் அப்படி இல்லை. வசந்த் ரொம்ப நல்லவன். அவன்கிட்ட ஒரு மெச்சூரிட்டி தெரியுது. அதை நான் விஜய் கிட்ட பார்த்தது கிடையாது. பொறுப்பா ஒரு பிசினஸ் பண்ணி அதுல நல்ல வருமானம் பார்த்துக் கொண்டும் இருக்கிறான். முதல் முதல்ல நீ அவனைப் பற்றி சொல்லும்போது நான் கூட தப்பா தான் நினைச்சேன். ஆனால் அவனை நேரில் பார்த்து பழகினதுக்கு அப்புறம் எனக்கு அந்த அபிப்பிராயம் மாறி அவன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் வந்துடுச்சு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா நல்லா இருக்கும்னு நானே நினைச்சேன். தெரியுமா?” என்று கவிதா கேட்க.
வெண்மதி ஆச்சரியமாக கவிதாவை பார்த்தாள்.
“ஆமாம் மதி. உங்க வீட்டுக்கு பக்கத்துல தான் பில்டிங் கட்டிக்கிட்டு இருக்கான். உன் மேல அவருக்கு லவ்வும் இருந்திருக்கு. ஆனால் உன்னை பார்க்கிற இடத்தில எல்லாம் துரத்திக் கொண்டு வந்து டிஸ்டப் பண்ணது கிடையாது. உங்க வீட்டுக்கு வந்து உன் கிட்ட சொல்லி இருக்கிறார். இதுல இருந்தே தெரியலையா அவர் எவ்வளவு பக்குவமான மனுஷன்னு நீயே யோசிச்சு பாரு மதி. உன்னோட தகுதிக்கும் திறமைக்கும் விஜய் சரியான ஆள் கிடையாது. வசந்த் தான் சரி. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் எப்பவுமே உனக்கு நல்லது தான் செய்வேன்னு அதுவும் கரெக்டா செய்வேன்னு சொன்ன இல்ல, அது நீ மனப்பூர்வமா சொன்னதா இருந்தா நான் சொல்றதை கேளு. வசந்த் உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன். நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும். நீ சந்தோஷமா இருப்ப. என்னை நம்பு. உங்க அம்மாவுக்கும் இதுவேதான் ஆசை.” என்று கவிதா கூறவும் வெண்மதி ஆச்சரியமாக அவளைப் பார்த்தாள்.
“ஆமாம். நான் சொல்றது உண்மை தான். உங்க அம்மாவுக்கு வசந்த்தை பிடிச்சிருக்கு. என்கிட்ட சொன்னாங்க. நீ அவனை கல்யாணம் பண்ணிகிட்டா எங்க எல்லாருக்குமே சந்தோஷம்.”
“சரி கவி. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் யோசிச்சு சொல்றேன். அப்போ இதைப்பற்றி பேச தான் மேடம் என்ன கூட்டு இருக்கீங்க. அப்படி தானே?” என்று கவிதாவின் கண்ணத்தை பிடித்து கிள்ளினாள் வெண்மதி.
“ஆமாம். உன்னோட வாழ்க்கையில ஒரு நல்லது நடக்க போகுதுன்னா அதை விட வேற முக்கியமான வேலை எனக்கு என்ன இருக்கு?”
“அப்புறம் இன்னொரு விஷயம். சந்துரு என்னை லவ் பண்றதா சொன்னான்.” என்று தரையை பார்த்து வெட்கப்பட்டபடி கூறினாள் கவிதா.
“யாரு நம்ம சந்துருவா? சாரி சாரி இனிமே உன் சந்துரு!” என்றாள் வெண்மதி கண்ணை சிமிட்டி.
“அப்புறம் மேடம் என்ன சொன்னீங்க? உன் கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு டைம் கேட்டு இருக்கேன்.”
“அடிப்பாவி இதையெல்லாமா என்கிட்ட வந்து கேட்ப?”
“உன்கிட்ட கேக்காம வேற யார்கிட்ட கேட்கிறது? சொல்லுடி. நான் என்ன சொல்றது?”
“சந்துரு ரொம்ப நல்ல பையன். உனக்கு பொருத்தமானவன். ஆனா உனக்கு பிடிச்சிருக்கா?” என்று அவள் முகத்தை பார்த்தாள் வெண்மதி.
பார்த்தவள் “உன் மூஞ்சில எரியிற பல்பை பார்த்தா அவனை உனக்கு பிடிச்சிருக்கு என்று தான் நினைக்கிறேன். என்ன கரெக்ட் தானே?” என்றாள் அவள் கண்ணம் தொட்டு நிமிர்த்தி.