கதிர்வேலன் வாயடைத்து போய் இருந்தான். இவள் இந்த விஷயத்தை தந்தையிடம் எப்பொழுதும் கொண்டு செல்ல மாட்டாள் என்று நம்பி இருந்தான். இப்பொழுது அவள் கூறியதை கேட்டவன் அதிர்ந்தான். ‘இவளோட வீக் பாயிண்ட் இவ அப்பா மீது வைத்திருக்கும் பாசம்தான் இப்போ இப்படி சொல்லிட்டு போறா. நாம இவ கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் இருக்கணும்.’ என்று நினைத்துக்கொண்டான் .
கதிர்வேலன் இடம் அப்படி கூறினாலே தவிர அவளுக்கு பெரியப்பாவிடம் பெரியம்மாவையும் கதிர்வேலனையும் காட்டிக் கொடுக்கும் எண்ணம் இல்லை. இவர்களை இவர்கள் வழியிலேயே சென்று இவர்கள் மனதை மாற்றி எல்லோருடனும் ஒற்றுமையாக அந்த வீட்டில் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான் அவளின் ஆசை. எனினும் கதிர்வேலனை மிரட்டுவதற்காகவே அவள் அப்படி கூறினாள்.
வீடு வந்தவளை பார்த்த லட்சுமி
“என்னமா எங்கேயோ அவசரமா போனியே. என்ன விஷயம்?” என்று பதட்டமாக கேட்டார்.
“நீங்க பதட்டபடுற அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. உங்க வேலைக்கு ஆள் தேடி தான் போனேன். கூடிய சீக்கிரம் நமக்கு ஆள் கிடைத்து விடுவார்கள். நீங்க நிம்மதியா இருங்க.” என்று கூறியவள் தோட்டத்திற்கு சென்றாள்.
அங்கு செல்வி துணிகளை காய வைத்து கொண்டிருப்பதை பார்த்தாள். செல்வியை பார்த்த வெண்மதிக்கு ஒரு யோசனை தோன்றியது. அதனை செயலாற்றும் விதமாக வெண்மதி செல்வியை அழைத்தாள்.
“என்ன வெண்மதி என்ன விஷயம் சொல்லு.” என்று விசாரித்தாள் செல்வி.
“அக்கா இந்த வீட்ல நடக்கிற எல்லா விஷயமும் உங்களுக்கு நல்லாவே தெரியும். நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது கிடையாது.”
“ஆமாமா பெரியம்மா உன்னை படிக்க விடாம தொந்தரவு பண்ணது, அதையும் சமாளிச்சு நீங்க படிச்சு பட்டம் வாங்கி வேலையில சேர்ந்து இப்போ இந்த வீட்டிலேயே இரண்டு குடித்தனம் பண்ற வரைக்கும் எல்லாமே எனக்கு தெரியும் என் பொண்ணு கிட்ட கூட உன்னை பத்தி பெருமையா சொல்லுவேன் .
எவ்வளவு தடை வந்தாலும் எல்லாத்தையும் சமாளிச்சு, படிச்சு பட்டம் வாங்கி நல்ல நிலைமைக்கு வரணும்னு உன்னை உதாரணம் காட்டி சொல்லுவேன்.
இன்னும் நீ நல்ல நிலமைக்கு வரணுமா.”
“ரொம்ப தேங்க்ஸ் கா. உங்களை மாதிரி நல்ல மனுஷங்களோட ஆசிர்வாதம் தான் எனக்கு வேணும் . அம்மா ஸ்வீட் செஞ்சு குடுத்துட்டு இருக்காங்க.
உங்களுக்கு தெரியும் இல்லையா?”
“ஆமாம் அதுவும் தெரியும். வேலைக்கு ஆள் வராம கஷ்டப்படுறாங்கன்னும் எனக்கு தெரியும்.”
“எனக்கு இதுல தான் உங்க ஹெல்ப் வேணும் .”
“என்ன செய்யணும் சொல்லு கண்ணு.”
“வேலைக்கு வச்ச ஆட்கள் வராம போறதுக்கு காரணம் உங்களுக்கு தெரியுமா அக்கா?”
“தெரியாது சொல்லு கண்ணு.”
“அதுக்கு காரணம் கதிர்வேலன் தான். அவன் அந்த பையனுங்க கிட்ட பணம் கொடுத்து வரவிடாம பண்ணிட்டான்.”
“அடப்பாவி இப்படி கூடமா பண்ணுவாங்க? உங்க பெரியம்மா தான் மோசம் ன்னு பாத்தா, அந்த அம்மாவோட பையன் அதைவிட மோசம் போல இருக்கே.” என்று மோவாயில் கைவைத்தபடி ஆச்சரியமாக கேட்டால் செல்வி.
“ஆமாம் அக்கா. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. நீங்க யாருகிட்டயும் சொல்லாதீங்க. இது தெரிஞ்சா வீட்ல தேவையில்லாத குழப்பம் வரும்.”
“சரி கண்ணு. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்ட. யாரோட குடும்பத்திலும் குழப்பம் வர நான் காரணமா இருக்க மாட்ட. நான் என்ன செய்யணும் சொல்லு.”
“நீங்க எங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு ஆள் ஏற்பாடு பண்ணனும். அவங்க எப்படி இருக்கணும்னா கதிர்வேலன் பணம் கொடுத்து வேலைக்கு போகாதீங்கன்னு சொன்னாலும் அவங்க வேலைக்கு வரணும். அந்த மாதிரி ஆள் யாராவது உங்களுக்கு தெரியுமா?” செல்வி யோசித்தாள்.
“என்னோட பிரண்டு ரெண்டு பேரு வேலை தேடிக்கிட்டு இருக்காங்க. ஆனா கொஞ்சம் சம்பளம் கூட எதிர்பார்ப்பாங்க.” என்று தலையை சொரிந்தாள்.
“அக்கா நீங்க அவங்களை வரச்சொல்லுங்க. ரெண்டு மாசம் வேலை செய்யட்டும். அம்மாவுக்கு இன்னும் நிறைய ஆடர் கிடைக்கும். அதுக்கப்புறம் நாங்க சம்பளம் ஏத்தி கொடுக்கிறோம். ஆனா தினமும் வேலைக்கு வரணும். எந்த காரணமும் சொல்லிட்டு வராமல் இருக்க கூடாது.”
“அதெல்லாம் அவங்க ரொம்ப பொறுப்பா இருப்பாங்க. அதுவுமில்லாம என்னோட நெருக்கமான தோழிகள். நான் சொன்னா கேப்பாங்க.”
“ரொம்ப சந்தோஷம். நீங்க அவங்ககிட்ட கதிர்வேலனை பத்தி சொல்லி கூட்டிட்டு வாங்க.”
“சரி கண்ணு. நான் அப்படியே செய்யறேன். நீ கவலையை விடு. நான் பாத்துக்குறேன்.” என்று தைரியம் கூறினாள் செல்வி.
அடுத்தநாள் வேலையில் இருந்து வீடு திரும்பிய வெண்மதியை ஆனந்தமாக எதிர்கொண்டார் லட்சுமி.
“இன்னிக்கி ரெண்டு பேரு வந்திருந்தாங்க. நல்லாவே வேலை செஞ்சாங்க. எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு . இனிமே எந்த பிரச்சனையும் இல்லை.” என்று கூறி அன்று அவர் செய்திருந்த லட்டை அவளுக்கு கொடுத்தார்.
அதனை வாங்கி ரசித்து சாப்பிட்டாள் வெண்மதி.
இதற்கு மேலும் கதிர்வேலன் எந்த சூழ்ச்சியும் செய்யாமல் இருந்தாலே போதும் என்று ஒரு மனம் நினைத்தது. இன்னொரு மனம் அப்படியே அவன் செய்தாலும் அதனையும் நாம சமாளிக்கணும். என்று உறுதி கொண்டது. அப்பொழுது திறந்திருந்த வீட்டு கதவை தட்டி வசந்த்
“உள்ள வரலாமா?’ என்று கேட்டான்.
“வாங்க தம்பி வாங்க.” என்று லட்சுமி வரவேற்றார்.
“என்னோட போன்ல பேட்டரி தீர்ந்து போயிடுச்சு. நான் பேட்டரி போட்டுக் கட்டுமா?” என்று கேட்டான்.
“தாராளமா போட்டுக்கோங்க தம்பி.” என்றார் லட்சுமி.
அவன் கையிலிருந்த செல்போனை சார்ஜில் போட்டான்.
வெண்மதியை கவனித்து கொண்டிருந்த வசந்த் அவள் சில நாட்களாக பதட்டமாக இருப்பது தெரிந்தது. அவளிடம் அதைப்பற்றி கேட்க விரும்பினான். எனினும் அவனுக்கு வேலை சரியாக இருந்ததால் அவனால் கேட்க முடியவில்லை. ஆனால் இன்று அவனுக்கு சிறிது நேரம் கிடைத்தது. எனவே அவளிடம் பேசுவதற்காகவே ஆகவே ஏதோ ஒரு காரணத்தை சொல்லிவிட்டு அங்கு வந்தான்.
வெண்மதி ஒரு மஞ்சள் நிற சல்வாரில் அழகாக இருந்தாள்.
“இன்னைக்கு வெதர் நல்லா இருக்கு இல்ல வெண்மதி?” என்று அவளை பார்த்து கேட்டான்.
“ஆமாம் வசந்த். இன்னைக்கு வெயில் கம்மியா இருக்கு. நல்ல காத்து வருது.”
“தோட்டத்துக்கு போகலாமா?’ என்று இவன் கேட்க அவள்
“போகலாமே.” என்று அவனை உற்று கவனித்த படி கூறினாள்.
லட்சுமி “நான் உங்க ரெண்டு பேருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று கூறி விட்டு சமையல் அறைக்குள் சென்றார்.
வெண்மதி வசந்த் இருவரும் தோட்டத்திற்கு சென்று அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தனர்.
“கொஞ்ச நாளா நீங்க ஏதோ பதட்டமா இருக்கிற மாதிரி தெரியுது. ஏதாவது பிரச்சனையா?” என்று அக்கறையாக விசாரித்தான்.
“ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. இப்போ அதுவும் சரி ஆயிடுச்சு. அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை.” என்றாள்.
அந்த மாலை நேரத்தில் தென்றல் வீச பூக்களின் நறுமணம் மனதை மயக்கியது. அந்த இடமே ரம்மியமாக தோன்றியது. வசந்தின் மனம் ‘சிச்சுவேஷன் நல்லா இருக்கு. உன் மனசுல இருக்குற காதலை அவ கிட்ட சொல்லிடு.’ என்று கூறியது .
அவன் லட்சுமி வருகிறாரா என்று வீட்டை ஒரு பார்வை பார்த்தான். அவர் வரவில்லை. சரி சொல்ல வேண்டியதுதான். என்று முடிவு எடுத்தவன்
“வெண்மதி நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்.” என்று கூறிவிட்டான்.
அவள் திகைத்தாள்.
“வசந்த் நான் உங்களை ஒரு நல்ல பிரண்டா தான் பார்க்கிறேன். அதை தாண்டி வேறு எதுவும் யோசித்தது கிடையாது.”
“எனக்கு அது தெரியும் வெண்மதி. உங்களுக்கு இந்த மாதிரி எண்ணம் இருக்க வாய்ப்பு இல்லை தான். ஆனா எனக்கு அந்த எண்ணம் இருக்கு. அதை உங்ககிட்ட பிராங்கா சொல்லணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன். நீங்க யோசிச்சு பதில் சொன்னா போதும்.”
“வசந்த் எனக்கு நிறைய ஆசை இருக்கு. இந்த வீட்ல எங்க அம்மா எங்க பெரியம்மாவுக்கு சமமா வாழனும்னு நான் ஆசைப்படறேன்.”
அந்த வீட்டில் நடப்பதை ஓரளவு தெரிந்து வைத்திருந்தான் வசந்த் எனவே
“இப்பவே அப்படி தானே வாழ்ந்துட்டு இருக்கீங்க.”
“ஆமாம். ஆனா இதில் பெரியம்மாவுக்கு இஷ்டம் கிடையாது. அவர்களை எதிர்த்து கிட்டு தான் இங்கே இருக்கிறோம். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளியே போயிட்டா, பழையபடி பெரியம்மா எங்க அம்மாவை சமையல்காரியா நடத்த ஆரம்பிச்சிடுவாங்க. அது எப்பவுமே நடக்கக்கூடாது.”
“அதுக்காக நீங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டீங்களா?”
“அப்படி இல்லை வசந்த். பெரியம்மா எங்க அம்மாவை மனசார ஏத்துக்கணும். எங்க அம்மா, பெரியம்மா இவங்க ரெண்டு பேருமே சம உரிமையுடன்
ஒத்துமையா இந்த வீட்டில இருக்கணும். அதுதான் என்னுடைய ஆசை.கூடிய சீக்கிரம் இது நடக்கும். அது நடக்கிற வரைக்கும் நான் இந்த வீட்டை விட்டு வர முடியாது. அதுவுமில்லாமல் நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணேன்.” என்று அவள் கூற
அவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான். தெருவில் நடக்கும்போது கூட எந்த ஒரு ஆணையும் பார்த்திராத இவள் ஒருவனை காதலித்து இருக்கிறாளா? என்று யோசித்தான்.
“ஆமாம் வசந்த் நான் ஒருத்தனை லவ் பண்ணேன். அவன் என்னை விட்டுட்டு வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டான். ஆனால் இப்போ என்னோட மனசுல அவன் இல்லை.” வசந்த்க்கு சந்தோஷமாக இருந்தது.
“இதை நீங்க தெரிஞ்சுக்கனும்னு தான் சொன்னேன்.”
‘நல்லவேளை பிரேக்கப் ஆயிடுச்சு இல்லைன்னா. இந்த மாதிரி ஒரு தேவதை எனக்கு கிடைக்க சான்ஸ் இருந்திருக்காது.’ என்று நினைத்துக்கொண்டான் வசந்த்.