அத்தியாயம் 40 (2)
“தேஜா, இப்படி அங்கயும் இங்கையும் ஓடாத. ஒழுங்கா சாப்பாடு வாங்கிக்கோ!!” என்ற படி அந்த அதிகாலை வேளை தேஜாவின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அதற்குள் அங்கே வந்த கெளதம் தேஜாவை பிடித்துத் தூக்கிக்கொள்ள, மூச்சு வாங்க இவர்கள் அருகில் வந்தவள், “நல்லா ஓட கத்துகிட்டா உங்க பொண்ணு. ஷப்பா என்ன ஓட்டம்.” என்றவாறு குழந்தைக்கு ஊட்டிவிட, திடீரென்று குமட்டிக்கொண்டு வருவது போல இருந்தது அவளுக்கு.
இருந்தும், பொறுத்துக்கொண்டு குழந்தைக்கு உணவை பிசைந்து எடுக்க, அவ்வளவு தான், சட்டென்று கிண்ணத்தை டேபிளில் வைத்தவள், வேகமாகத் தங்கள் அறைக்குள் ஓட, “அம்மு!! என்ன ஆச்சு!!” என்றபடி அவள் பின்னே கௌதமும் ஓட, ஆராவும் ஜெய்யும் கூடப் பதற்றமாகக் கௌதமை பின் தொடர்ந்தார்கள்.
வேகமாகக் குளியல் அறைக்குள் நுழைந்தவள், வயிற்றை பிடித்துக்கொண்டு, வாந்தி எடுக்க, ஆராவோ ஓடிச்சென்று தன் அக்காவின் தலையைத் தாங்கி பிடித்துக்கொண்டாள். அவள் வெளியே வருவதற்குள் கௌதமிற்குப் பக்பக் என்று இருந்தது. ‘என்ன ஆச்சு இவளுக்கு, எதுவும் பிடிக்காததைச் சாப்பிட்டாளா?!’ என்ற யோசனையுடன் கட்டிலில் அமர்ந்திருக்க,
உள்ளே மிருதுளாவோ முகத்தைக் கழுவிவிட்டு நிமிர, அவளின் முகத்தில் சோர்வையும் மீறி தெரிந்த பிரகாசம், ஆராவை சந்தேகம் கொள்ளச் செய்ய, தன் சந்தேகத்தை அக்காவிடம் கேட்க, அப்பொழுதுதான் மிருதுளாவிற்கு அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் எழ, கூடவே உடம்பெல்லாம் ஒரு படபடப்பு.
வெளியே வந்த ஆரா, ஆண்கள் இருவரையும் ஹாலில் உட்கார சொல்லிவிட்டு, home pregnancy kit எடுத்து வந்து, மிருதுளாவை டெஸ்ட் செய்து பார்க்கச் சொல்ல, மிருதுளா கர்ப்பமாக இருப்பது ஊர்ஜிதம் ஆக, சந்தோஷத்தில், “யாஹூ!!!” என்று கத்திவிட்டாள் ஆரா. உற்சாகத்தோடு அக்காவை கட்டிக்கொண்டு சுற்றியவள், அவளைக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, வெளியே வந்தவள், “அத்தான்!!!!!!!” என்று துள்ளலுடன் ஓடி வந்து கௌதமின் கைகளைப் பிடித்து ஆட்டியவள், “நீங்க அப்பா ஆகா போறீங்க!!!! தேஜா குட்டிக்கு, தம்பி பாப்பவோ தங்கச்சி பாப்பவோ வரபோகுது. கங்கிராட்ஸ் அத்தான்.” என்று உற்சாகத்தில் கூதுகளிக்க, அவள் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கெளதம், தன் மனைவியைப் பார்க்க அறைக்குள் விரைந்தான்.
சோர்விலும் ஒரு வித மகிழ்ச்சியில் அமர்ந்திருந்த மிருதுளாவின் அருகில் சென்றவன், “அம்மு!!!” என்றபடி அவள் முன் மண்டியிட்டு, அவள் வயிற்றில் இதழ் பதித்து, “ரொம்பத் தேங்க்ஸ் டா அம்மு..!!” என்றபடி அவள் இடுப்பை கட்டிக்கொண்டான். மிருதுளாவும் தன் கணவனை வயிற்ரோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். இருவரும் மகிழ்ச்சியையும் தாண்டி ஒருவித உணர்வில் இருந்தனர்.
அதன் பின் தன் மனைவியைத் தரையிலேயே நடக்கவிடவில்லை கெளதம். யாழினிக்கு ஏற்பட்ட நிலைமை இவளுக்கு வரகூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தான். பத்து மாதங்கள் ஓடி, இதோ டெலிவரி அறையில், குழந்தையைப் பிரசவிக்கப் போராடிக் கொண்டிருந்த தன் மனைவியின் அருகில் நின்றுகொண்டு, அவளின் கைகளைப் இறுக பற்றியபடி, நெற்றியில் அவ்வபொழுது இதழ் பதித்துக்கொண்டும், “அம்மு!! இன்னும் கொஞ்சம் தான். உன்னால முடியும் டா. புஷ் பண்ணு.” என்று தன் பயத்தை மறைத்துக்கொண்டு அவளுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருந்தான். இப்படியாக நேரம் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்க, இறுதியில், “அம்மா!!!!!!” என்ற மிருதுளாவின் அலறலில், இவர்களின் சீமந்த புத்திரன் இந்த உலகத்திற்குள் அவதரித்தான்.
ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தந்தையாக இருந்தாலும், முதன் முறை, தொப்புள் கொடியோடு தன் கைகளில் இருக்கும் தன் ரத்தத்தை, தன் குழந்தையைக் கையில் ஏந்தியவனுக்கு, உடம்பெல்லாம் ஒருவித புது உணர்வு ஏற்பட, கைகால் எல்லாம் நடுங்கி, உடல் வேர்த்துக்கொட்ட, கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது. கண்ணீருடன் குழந்தையை மிருதுளாவிடம் காட்டியவன், அவள் கன்னத்தில் இதழ் பதித்து, அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் மருத்துவரின் அனுமதியோடு, கெளதம் குழந்தையை வெளியே எடுத்து வந்து காட்ட, பெரியவர்கள் தங்கள் பேர குழந்தையைக் கைகளில் வாங்கிக்கொள்ள, தன் ஐந்து மாத மேடிட்ட வயிறுடன், சேரில் இருந்து எழுந்து வந்த ஆரா, அக்காவின் குழந்தையை ஆசையாகக் கொஞ்சினாள். அவள் அருகில் நின்றிருந்த ஜெய், கற்பமாக இருக்கும் தன் மனைவியின் மீது கவனத்தை வைத்துக்கொண்டு அண்ணனின் குழந்தையை ஆசையாகப் பார்த்தான்.
சில வருடங்கள் கழித்து…
பெங்களூரில் இருக்கும் அந்த மண்டபம் அழகிய மலர்களால் வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. வாசலில் கௌதமும், ஜெய்யும் பட்டு வேஷ்டி சட்டையில், வருவோரை முக மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டிருந்தனர். உள்ளே மேடையில், முழுவதும் மலர்களால் அலங்கரிக்கபட்ட சேர் ஒன்று வீற்றிருக்க, அதன் பக்கவாட்டில் இருந்த மேக்கப் அறையில், அக்காவும் தங்கையும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் மூத்த மகளை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அம்மாவும் சித்தியும் செய்யும் அக்கபோரை சிரிப்புடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பதிமூன்று வயது தேஜஸ்வினி.
ஆம்! அவளுக்கு இன்று பூப்புனித நீராட்டு விழா.
அந்த வானுலகத் தேவதை போல, அழகிய பிங்க் நிற பட்டு புடவையில், அதற்கேற்ற பிங்கும் வெள்ளை கற்களும் பதித்த செட் நகைகள் உடல் முழுவதும் பளிச்சிட, அந்தக் கற்களின் ஒளியோடு போட்டிபோடும் அழகிய சிரிப்பும், கன்னத்து குழியுடனும், தலையை ஒருபக்கம் சரித்து, அன்னைமார்கள் செய்யும் அலங்காரங்களைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த இளம் மங்கை.
அந்த நேரம், “சித்தி!! அக்கா ரெடியான்னு சித்தப்பா கேட்டுட்டு வர சொன்னாங்க.” என்றபடி அங்கே வந்தான், மிருதுளாவின் பத்து வயது மகன், ராம். அவனுடன் ஆராவின் ஒன்பது வயது மகன் லக்ஷ்மன். இவர்களின் வாலை பிடித்துக்கொண்டு கூடவே ஆராவின் ஐந்து வயது மகள், அபினையா.
“ரெடி ஆகியாச்சுன்னு அப்பாகிட்ட சொல்லு ராம்.” என்று மிருதுளா சொல்லவும், மகன்கள் இருவரும் ஓட, அண்ணன்களின் பின்னே ஓடினாள் அபி.
அடுத்து விழா நேரம் ஆரம்பிக்க, மகளின் இருபுறமும், இரு தாய்மார்கள்களும் வர, தேஜாவை அழைத்து வந்து மேடையில் இருந்த சேரில் அமர வைத்துவிட்டு, அவளின் ஆடைகளைச் சரிசெய்து விட, தேஜாவின் கண்களோ தந்தைமார்களைத் தேடியது. அதற்குள் கௌதமும், ஜெய்யும் மேடை அருகில் வந்ததும், மிருதுளாவும், ஆராவும் மேடையை விட்டு கீழிறங்கி தங்கள் கணவன்மார்களின் அருகில் சென்று நின்று கொண்டனர்.
மேடையில் அழகிய மங்கையென அமர்ந்திருக்கும் மகளைப் பார்த்த கௌதமிற்கு, கண்கள் கலங்கிவிட்டது. அவள் அருகில் நின்ற மிருதுளா, கணவனின் புறம் திரும்பி, “என்னங்க!! நல்ல நாள் அதுவுமா, கண்ணு கலங்கிட்டு. கண்ணைத் துடைங்க. பாப்பா உங்களைத் தான் பார்க்கிறா. நீங்க அழறதை பார்த்தா, ஆப்புறம் அவளும் அழ போறா.” என்று காதை கடிக்க, பூரிப்புடன் கண்களைத் துடைத்துக் கொண்டான் கெளதம். “இப்போதான், பாப்பா சின்னக் குழந்தையா, வாயில பொம்மையை வச்சுக்கிட்டு, தவழ்ந்து வந்த மாதிரி இருக்கு அம்மு. அதுகுள்ள இவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டா. அப்படியே கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் செஞ்சுருக்க அம்மு. பாக்கவே அழகா இருக்கா என் பொண்ணு. சினி ஸ்டார் எல்லாம் தோர்தாங்க போ.” என்று தன் மனைவியிடம் பெருமையாகச் சொன்னான் கெளதம்.
“பின்ன அப்பா அழகுனா, பொண்ணும் அழகா தான் இருப்பா.” என்று பதிலுக்கு மிருதுளா சொல்ல, “என்னைவிட நீ தாண்டி அழகு. இப்போகூடப் பாரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி அப்படியே இருக்க. அந்தக் கன்னத்தை அப்படியே கடிச்சு வச்சுடலாம் போலத் தோணுது.” என்று ஹஸ்கியாகக் கெளதம் சொல்லவும், “வயசுக்கு வந்த பொண்ணை வச்சுக்கிட்டுப் பேச்சை பாரு….அமைதியா பேசாம இருங்க.” என்று வெட்கத்துடன் மிருதுளா பதில் சொல்லவும், “என்னடி என்னமோ வயசான கிழவனைச் சொல்ற மாதிரி சொல்ற. இப்போகூட நீ ஓகே சொன்னா போதும், அடுத்தப் பத்தே மாசத்தில, தேஜாக்கு ஒரு தங்கச்சியைக் கிப்ட் செஞ்சுடலாம். ஹம்!! நீதான் ஒகே சொல்ல மாட்டேங்குற…!” என்று அவன் பெருமூச்சுவிட,
“இன்னும் நீங்க அந்தக் கிஃப்ட் நினைப்பை விடலையா!!” என்று மெதுவாகச் சொன்னவள், யாருக்கும் தெரியாமல் அவன் முழங்கையைக் கிள்ள, “ஹா!!! ஸ்ஸ்ஸ்” என்று துல்லியவன், “வலிக்குதுடி..!!” என்று முகத்தைச் சுருக்க, “இனிமே இந்தப் பேச்சு பேசுனீங்க, அப்புறம் இந்த வாயில சூடு வச்சுடுவேன்.” என்று பல்லை கடித்துக்கொண்டு அவள் மிரட்ட, கெளதமோ, “லிப் டு லிப் சூடு தானே அம்மு சொல்ற. ஐயம் ஆல்வேஸ் ரெடி.” என்று கூறியபடி தன் மனைவியை இடித்துக்கொண்டு நிற்க, “ம்ம்!!! வீட்டுக்கு வாங்க, எந்தச் சூடுன்னு தெரியும்.” என்று சொன்னவளின் முகத்தில், கோபத்துக்குப் பதில் வெட்கம் மட்டுமே நிறைந்து இருந்தது.
அதற்குள் விழா ஆரம்பிக்க, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பரிசு பொருட்கள் கொடுக்க ஆரம்பிக்க, அனைவரின் கண்களும் தங்கள் செல்ல மகள் தேஜா மேலேயே நிலைத்தது. அவளும் இவர்களைப் பார்த்து அழகாகச் சிரித்துக்கொண்டு இருந்தாள்.
ஒருவழியாக விழா முடிய, போட்டோ எடுப்பவர், குடும்பப் போட்டோ எடுக்கவேண்டும் என்று சொல்ல, மிருதுளா, கெளதம், ஆரா, ஜெய், மோகன், சித்ரா, சேகர் என அனைவரும் தேஜாவை சுற்றி நிற்க, அபினையா அடம்பிடித்துத் தேஜாவின் மடியில் அமர்ந்துகொள்ள, ராம், லக்ஷ்மன் இருவரும், தேஜாவின் இருபக்கமும் அரண்போல நின்று கொண்டனர்.
ஸ்மைல் ப்ளீஸ் என்று போட்டோக்ராஃபர் சொன்னதும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பெரியவர்கள் சிரிக்க, சிறியவர்களோ, பற்களுக்கு இடையில் அங்கங்கே ஓட்டை தெரிய, ‘ஈ’ என்று சிரிக்க, தேஜாவோ, கன்னக்குழி தெரிய, இதழ் பிரிக்காமல் அழகாகப் புன்னகைத்தாள்.
அனைவரின் சிரிப்பையும், அழகாகத் தனக்குள் உள்வாங்கிக் கொண்டது அந்தக் கேமரா!
********முற்றும்********