கணினித் திரையில் தெரிந்த விஜய்யின் உருவத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா. எப்படிப் பார்த்தாலும் அவனைப் பிடித்தது அவளுக்கு.இத்தனை நாள் எப்படி இவனைப் பார்க்காமல் போனேன்..? என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க,
“இப்ப எதுக்கு அவன் போட்டோவையே உத்து உத்து பார்த்துகிட்டு இருக்க..?” என்றான் விமல் எரிச்சலாய்.
“நான் பார்க்கிறதுல உனக்கென்ன பிரச்சனை..?” என்றாள் கேள்வியாக.
“அதான் மாமா தெளிவா சொல்லிட்டாரே…! கண்டிப்பா இது நடக்காதுன்னு..!” என்றான்.
“யாரு அப்பாவா…? அவருக்கு என்னைவிட இந்த உலகத்துல எதுவுமே பெரிசில்லை..! இந்நேரம் என்னோட முடிவை எப்படி செயல்படுத்தலாம்ன்னு யோசிச்சுட்டு இருப்பாரு..!” என்றாள் கர்வ சிரிப்புடன்.
“அவரு சரின்னு சொன்னாலும்.. அவன் சரின்னு சொல்லணும். ஆனா, அது இந்த ஜென்மத்துல நடக்குற மாதிரித் தெரியலை.ஏன்னா அவனைப் பத்தி உன்னைவிட எனக்கு நல்லாத் தெரியும். பார்க்க எப்படியோ…ஆனா கோபம்ன்னு வந்துட்டா எதிர்ல இருக்குறவன் சர்வ நாசம் தான்..!” என்றான் விமல்.
“ரொம்ப அனுபவம் போல…! அடி ரொம்ப பலமோ..?” என்றாள் கிண்டலாய்.
“என்ன திவ்யா..? கிண்டலா..? நான் சொல்றப்போ உனக்குத் தெரியாது. பட்டாத்தான் தெரியும் புத்தி. அதுக்கு மேல உன் விருப்பம்..!” என்றவனின் மனதிற்குள் ஆயிரம் திட்டங்கள்.
“அதாகப் பட்டது மாமா..! ஒரு சிலர் இருக்காங்க. நம்ம கூட முகத்துக்கு நேரா நல்லா பேசுற மாதிரியே இருக்கும். ஆனா, அட் த சேம் டைம் மனசுக்குள்ள பக்காவா பிளான் பண்ணிட்டு இருப்பாங்க. நீங்களும் இப்ப இந்த வகையில தான் சேர்த்தி..!” என்றாள் கூர்மையான பார்வையுடன்.
“உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிறதில் தப்பில்லையே..?” என்றான்.
“கண்டிப்பா தப்பில்லை.நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிறதுக்கும், அப்படி நடிக்கிறதுக்கும் சில பல வித்யாசங்கள் இருக்கு. அது உங்க மூஞ்சியில அப்படியே தெரியுது..!” என்றாள் நக்கலாய்.
“அப்படி எல்லாம் எதுவுமில்லை திவ்யா.ஏற்கனவே இருக்கிற பிரச்சனையில் இப்போ புதுப் பிரச்சனை வேறயா…அதான் சொன்னேன். மாமா பார்த்து எது செஞ்சாலும் சரி தான்..!” என்றவன்,
‘மாமாவே பார்த்து செய்வாருடி..! நான் செய்ய வைக்கிறேன்..!’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டான். (https://ctlsites.uga.edu/)
அங்கே பிரவீனோ நடந்த விஷயங்களை வித்யாவிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“நீ என்ன சொல்ற பிரவீண்..?” என்ற வித்யா அதிர்ந்தார்.
“ஆமாம்மா..! துளசி பண்ணி வச்ச வேலைக்கு அவனுக்கு கோபம் வரலைன்னு சொன்னாத்தான் ஆச்சர்யம்.விஜய் எப்படியும் இதைத் பத்தி வீட்டில் பேச மாட்டான். ஏன்னா..தாத்தா மனசு கஷ்ட்டப்படும் அப்படின்னு நினைப்பான். நான் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா.., இப்ப துளசி வீட்டுக்கு வந்தா, உங்களையும் அப்பாவையும் கிளப்பி நம்ம வீட்டுக்குப் போறதுக்குத் தான் பிளான் பண்ணுவா..? நீங்கதான் அவளைச் சமாளிக்கணும்…!” என்றான் பிரவீண்.
“இவ ஏன் இப்படி இருக்கா பிரவீண்…? இவ பழைய துளசியாவே இருந்திருக்கலாம்..!” என்ற வித்யாவின் குரலில் சோகம் கலந்த ஏக்கம் வழிந்தோடியது.
“காலமும் நேரமும் தான்ம்மா எல்லாத்தையும் முடிவு பண்ணனும்..!” என்று பெருமூச்சுடன் சொன்னவன் போனை வைத்தான்.
பிரவீண் போனில் சொன்னதை யோசித்துக் கொண்டே வித்யா வீட்டின் ஹாலிற்கு வந்திருக்க,
“அத்தை..!” என்ற சத்தமான குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தார். அவரின் எதிரில் முழுப் புன்னகையுன் நின்றிருந்தாள் பவித்ரா.
“பவி…! எப்படா வந்த..? காலேஜ் டூர் எல்லாம் முடிஞ்சதா..? எப்படி இருந்தது..?” என்றார் வித்யா, அண்ணன் மகளைக் கண்டு விட்ட ஆசையுடன்.
அவளின் குரல் கேட்டு உள்ளே இருந்து வந்த நீலாவதி, அவளைக் கண்டு..
“எப்போ பவி வந்த…?” என்றார்.
“ஜஸ்ட் நவ்..! இப்போதான் வந்தேன். நேரா பார்த்தா வித்யா அத்தை. மிகத் தீவிரமா எதையோ திங்க் பண்ணிட்டு இருந்தாங்களா..? அதான் விஷயம் என்ன ஏது..? என்னால ஏதும் தீர்த்து வைக்க முடியுமான்னு பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருந்தேன்ம்மா..!” என்றாள் பவி சிரிப்புடன்.
“அடி வாலு..! நீ இல்லாம இந்த பத்து நாளும் வீடு வீடா இல்லை…!” என்ற வித்யா அவளை பாசமாக அனைத்துக் கொள்ள, அவளும் பாந்தமாக அடங்கிக் கொண்டாள் வித்யாவினுள்.
அவர்களைக் கண்டு சிரித்த நீலா..” நல்லா அத்தை..நல்ல மருமக..!” என்றார்.
வித்யாவிற்கு அண்ணன் மகள் பவித்ரா என்றாள் கொள்ளைப் பிரியம்.எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அவளின் சுபாவமே அதற்குக் காரணம். எல்லோருடனும் ஈசியாக பழகிவிடுவாள். அவள் இருக்கும் இடத்தில் சந்தோஷத்திற்கு பஞ்சம் இருக்காது.
“ஆமா…எங்க மிஸ்டர் ரூல்..அன்ட் மிஸ்ஸஸ் ரூல் இவங்க ரெண்டு பேரையும் காணலை..!” என்றாள் சிரிக்காமல்.
“பவி..! தாத்தா பாட்டியை அப்படி பேசாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..!” என்று நீலா அதட்ட,
“வந்துட்டாங்கப்பா…மாமியார் மெச்சும் மருமகள்..! அட ஏன்ம்மா நீங்க வேற…தினமும் நீங்க போன் பன்றிங்களோ இல்லையோ…வள்ளி விடாம போனைப் போட்டு, இப்படி இருக்கக் கூடாது, அப்படி இருக்கக் கூடாது…போன இடத்துல பத்திரமா இருக்கணும் அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு அட்வைஸ்.டூர் போன இடத்துலையும் உங்க மாமியார் எனக்கு அட்வைஸ் பண்ணியே கொன்னுட்டாங்க..! ஏதோ நானா இருக்கப் போயி தலையை ஆட்டுனேன். என் இடத்துல துளசி இருந்திருந்தா…பாட்டியோட நிலைமை என்ன ஆகுறது..?” என்றாள் சிரிக்காமல்.
அதைக் கேட்ட வித்யாவிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. விஷ்வ துளசி உண்மையில் அப்படித்தான்.எதையும் பட்டென்று உடைக்கும் ரகம்.ஆனால் பவித்ரா, பிடிக்கவில்லை என்றாலும், அவர்களுக்காக கேட்டுக் கொள்ளும் ரகம்.
“சரி சரி..! என்ன ரெண்டு பெரும் இப்படியே நின்னுட்டு இருக்கீங்க…? பத்து நாள் வீட்டு சாப்பாடு இல்லாம நாக்கு செத்துப் போய்டுச்சு. இன்னைக்கு ஊர்வன, பறப்பன, நடப்பன..இப்படி எல்லாமே ஒரே இடத்தில் சந்திக்கணும்..!” என்றாள்.
“ஒரே இடம்ன்னா..?” என்றார் நீலா சந்தேகமாக.
“என்னோட சாப்பாட்டுத் தட்டு தான் மம்மி…இன்னும் பச்சைப் புள்ளையாவே இருக்கீங்க.போங்க பார்ப்போம்…போய் உங்க கைவரிசையைக் காட்டுங்க.அதுக்குள்ள நான் என் ரூமுக்குப் போயி குளிச்சு ரெடியாகி வந்திடுறேன்..!” என்றாள்.
“வாய்ப்பே இல்லை..! இன்னைக்கு வெள்ளிக் கிழமை.எதுவா இருந்தாலும் நாளைக்குத்தான். இன்னைக்கு செடி, கொடி மட்டும் தான்..!” என்றார் நீலாவும் சிரிக்காமல்.
“நாக்கு செத்து வந்த நங்கை, நளபாகம் ருசிக்க முடியாதபடி, நயவஞ்சகம் செய்து விட்டீர்களே அம்மா..!” என்று கைகளால் கண்களை மறைத்தபடி சொல்ல,
“இப்படி டயலாக் பேசுனா பத்தாது. கொஞ்சமாவது சமைக்கவும் கத்துக்கணும். நாளைக்கு போறவன் வீட்ல பொங்கிப் போடத் தெரியனும். இல்லைன்னா பிள்ளை வளர்த்திருக்க லட்சணத்தைப் பாருன்னு, என்னைத்தான் பேசுவாங்க..!” என்றார் நீலா.
“அப்பக் கூட உங்களைத்தான் பேசுவாங்க மம்மி. என்னை விட்டுருவாங்க..!” என்று சொல்லி சிரிக்க,
“ஏன் அண்ணி அப்படி சொல்றிங்க…? என் மருமகளுக்கு நானே செஞ்சு குடுப்பேன்..!” என்றார் வித்யா.
“இங்க இருக்க வரைக்கும் சரி…நாளைக்கு வரப்போற மாமியார் ஏதாவது சொன்னா..?” என்றார் நீலா.
“பவி என் வீட்டுக்குத்தான் மருமகளா வருவா..? இல்லையாடாத் தங்கம்..!” என்று வித்யா கேட்க, பவித்ரா சிரிப்புடன் தலையை குனிந்து கொண்டாள். நீலாவிற்கோ முகமே மாறி விட்டது.
“அது நடக்குறப்போ பார்ப்போம் அண்ணி..! நீ போய் குளிச்சுட்டு வா பவி..!” என்று நீலா அவளை அனுப்பி வைக்க, நீலாவின் பேச்சில் இருந்த மாறுதலை கவனிக்கத் தவறி விட்டார் வித்யா.
அலுவலகத்தில் எதுவும் செய்ய தோன்றாமல் தலைவலியோடு அமர்ந்திருந்தாள் விஷ்வ துளசி. அப்போது அழைப்பு வர,
“மேடம் உங்களைப் பார்க்க ரோஸ்லின் அப்படின்னு ஒருத்தவங்க வந்திருக்காங்க மேம்..!” என்று ரிஷப்ஷனிஸ்ட் சொல்ல,
“அனுப்புங்க..!” என்றாள்.
உள்ளே வந்த ரோஸ்லின் அவளுக்கு ஆருயிர்த் தோழி. ஆதியும் அந்தமுமான உயிர்த்தோழி.
“ஹேய் ரோசு..!” என்று துளசி சந்தோஷமாய் அழைக்க, அவளோ மூஞ்சியத் திருப்பிக் கொண்டாள்.
“என்னடி..?” என்றாள் துளசி.
‘பேசாத மாடே..! எத்தனை தடவை கால் பண்ணேன். எடுக்கவே இல்லை. அட்லீஸ்ட் ஒரு மெசேஜ்..அதுவும் இல்லை.என்ன நினச்சுட்டு இருக்க உன் மனசுல..?” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.
“சாரி..சாரி ..! கொஞ்சம் பிஸிடி. வேற ஒண்ணுமில்லை..!” என்று துளசி கெஞ்ச,
“ஏதோ போனா போகுதுன்னு மன்னிக்கிறேன்..! இன்னொரு தடவை இப்படி இருந்து பாரு. அப்ப இருக்கு உனக்கு..!” என்றாள் ரோஸ்லின்.
“நீ எப்படி இருக்க..? வீட்ல அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க..?” என்றாள்.
“எல்லாரும் நல்லா இருக்கோம்..! நீ எப்படி இருக்க..? எவ்வளவு நாள் ஆச்சு உன்னைப் பார்த்து..” என்றாள் ரோஸ்லின்.
“அப்பாக்கு டிரான்ஸ்பர்ன்னு நீங்கதான் போனிங்க..!” என்றாள் துளசி குற்றம் சாட்டும் தொனியில்.
“அகைன் அப்பா இங்கயே டிரான்ஸ்பர் வாங்கிட்டார்டி..! நானும் வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டேன்..!”என்றாள்.
“வாவ்..! என்ன ஒரு நல்ல செய்தி..!” என்ற துளசிக்கு முகம் முழுவதும் அப்படி ஒரு சந்தோசம்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு ரோசு.நான் உன்னைய ரொம்ப மிஸ் பண்ணேன். இனி அப்படி இல்லை.நல்லா என்ஜாய் பண்ணலாம்..” என்றாள்.
“மிஸ் பண்ணவ தான், போன்ல பேசித் தள்ளிட்ட. அடிப் போடி..!” என்ற ரோசு, அவளை மேலும் கீழும் பார்க்க,
“என்னடி அப்படிப் பார்க்குற..?” என்றாள் துளசி.
“முன்ன விட ஆள் இப்போ செம்ம பிகர் ஆகிட்டடி.கண்ணம் எல்லாம் பயங்கரமா ஜொலிக்குது…? என்ன விஷயம்..?” என்றாள் கண்ணடித்து.
விஜய் கழுத்தை இருக்கிப் பிடித்து, அந்த வலியின் பொருட்டு கண்கள் கலங்கி கண்ணம் சிவந்திருந்தது. அது ரோஸ்லின் பார்வைக்கு இன்னும் அழகாகத் தெரிந்திருந்தது.
“அப்படியா சொல்ற..?” என்று துளசி சிரித்து வைத்தாள்.
“அப்படித்தான் சொல்றேன்..! சரி வா..! எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கு.போயிட்டு வரலாம்..!” என்றாள்.
“ஹலோ மேடம்..! உடனே கூப்பிட்டா எப்படி வர முடியும். அண்ணாவும் இல்லை. அப்பாவும் பிஸ்னஸ் விஷயமா போயிருக்கார்.சோ நான் தான் இங்க பொறுப்பு..!” என்றாள்.
“எல்லாம் என் நேரம்டி..! ஓகே..!அப்ப நாளைக்குப் போகலாம்..! நான் நேரா உங்க வீட்டுக்கு வந்துடுறேன்…சரிதானே..!” என்றாள்.
“ம்ம் ஓகே..!” என்றாள் துளசி.
“ஓகே..! அப்போ பாய். நாளைக்கு மறந்துடாத..!” என்றபடியே சென்றாள் ரோஸ்லின்.
அவளையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் விஷ்வ துளசி. அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் நினைவடுக்கில் வந்து வந்து போக, அந்த நினைவுகள் தந்த சுகத்தில் அவளுக்கு இருந்த தலைவலி தடம் தெரியாமல் மறைந்திருந்தது.
அதிலும் விஜய்யின் முகம் வர, அந்த நினைவில் இருந்து வெளியே வந்தாள் விஷ்வ துளசி.
கனகவேல் வீட்டில்…
“என்ன டாடி முடிவு பண்ணி வச்சிருக்கிங்க..?” என்றாள் திவ்யா எடுத்த எடுப்பில்.
வீட்டிற்குள் நுழைந்தும் நுழையாமலும் மகள் இதைக் கேட்க, ராதிகாவிற்கு அவள் பிடிவாதம் கண்டு உள்ளே திகில் எடுத்தது.
“இப்ப வந்த உடனே இதைப் பத்தி பேசணுமா…? கொஞ்சம் யோசிக்க டைம் குடும்மா..!” என்றார் கனகவேல்.
“இதுக்குமேல யோசிக்க இதுல என்ன இருக்கு…? நீங்க நாளைக்கே போய் விஜய் வீட்ல பேசுங்க..!” என்றாள்.
“திவ்யா..! இதென்னா மிட்டாய் வாங்குற மாதிரி சொல்ற. எதுக்கும் ஒரு நேரம் காலம் வேண்டாம். இதுக்கு முதல்ல அவங்க ஒத்துக்கணும். அந்த பையன் சம்மதிக்கணும். இதெல்லாம் முடிஞ்சாதான் நீ சொன்னது நடக்கும்..!” என்றார் கனகவேல்.
“அப்ப சம்மதிக்க வைங்க..!” என்றாள் அதிகாரமாக.
“அதான் எப்படி..?” என்றார் கனகவேல் புரியாமல்.
“என்ன டாடி..? சின்ன பிள்ளை மாதிரி பேசுறிங்க..! முதல்ல பேசிப் பார்ப்போம்..சரிப்பட்டு வரலைன்னா…அவங்களை எங்க அடிச்சா வழிக்கு வருவாங்களோ அங்க அடிப்போம்..!” என்றாள் அசால்ட்டாய்.
“இதென்னா கிரிமினல் மாதிரி பேசிட்டு இருக்க திவ்யா..!” என்று ராதிகா அதட்ட,
“சும்மா என்னை அடக்குறதை விட்டுட்டு நான் சொன்ன வேலையைப் பாருங்க. என்னமோ நீங்க எல்லாம் நல்லவங்க மாதிரி…நான் மட்டும் கெட்டவ மாதிரி.உங்க ரத்தம் உங்களை மாதிரி தான் இருக்கும். நடந்த எல்லா விஷயமும் எனக்குத் தெரியும்ன்னு சொல்லியிருக்கேன். சும்மா சும்மா என்னை சொல்ல வைக்காதிங்க..!” என்றபடி அவள் அறைக்கு சென்று விட்டாள்.
“என்னடா விமல் இவ இப்படி சொல்லிட்டுப் போறா..?” என்றார் கனகவேல் சோர்ந்தவராய்.
“அவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா மாமா..! விடுங்க பார்த்துக்கலாம்…” என்றான்.
“இல்லை விமல்..இதை அப்படியே விட முடியாது..!” என்றார் ராதிகா.
“அதுக்கு..? என்ன செய்யனும்ன்னு சொல்றிங்க அத்தை..!” என்றான்.
“நீங்க நாளைக்குப் போய் அங்க பேசுங்க. என்ன ஆனாலும் பரவாயில்லை..!” என்றார் ராதிகா.
கனகவேலுக்கு நெருப்பிற்குள் தலையைக் குடுத்தது போல இருந்தது. ஏற்கனவே பிரவீண் வந்து அவரிடம் பேசிச் சென்றதில் இருந்து திவ்யா மேல் கடுப்பில் இருந்தவருக்கு, இப்போது இன்னமும் அதிகம் தான் ஆனது.அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை.
“நாளைக்குப் போய் பேசிப் பார்க்கிறேன்..!” என்றபடி உள்ளே சென்றார். அரசியலில் எவ்வளவு பெரிய புத்திசாலி அவர். ஆனால் சொந்த வாழ்க்கையில்…?
“என்ன இன்னும் விஜய்யை காணோம்..?” என்றார் வள்ளியம்மை. நேரம் இரவு ஒன்பதைத் தாண்டிக் கொண்டிருந்தது.எப்பொழுதும் சீக்கிரம் வந்துவிடுவான்.ஆனால் இன்று இன்னும் வரவில்லை.
“நானும் அண்ணாக்காகத் தான் வெயிட் பண்றேன் பாட்டி..! நான் இன்னும் அவரைப் பார்க்கவே இல்லை..!” என்றாள் பவித்ரா சிறுபிள்ளையாய்.
“வந்துடுவான்..! நீ சாப்பிடு..!” என்றார் வள்ளியம்மை.
“நீங்க வேற பாட்டி..! அவ அப்பவே சாப்பிட்டுட்டா…! அண்ணன் வந்தா அவரை சாக்கா வச்சு இன்னொரு முறை கொட்டிக்குவா…!” என்றான் அருண் சிரிக்காமல்.
“அருண் அண்ணா வேண்டாம்..! நான் இன்னைக்கு நல்ல மூடுல இருக்கேன்.வீணா என்னை பத்ரகாளி ஆக்காத…!” என்றாள்.
“இப்பவும் நீ காளி மாதிரித்தான் இருக்க..!” என்று சொல்லி அருண் சிரிக்க, பவித்ரா முறைத்தாள்.
இவர்கள் யார் பேச்சிலும் கலந்து கொள்ளாமல் விஷ்வ துளசி தன் போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அவளுடைய கவனம் எல்லாம் கையில் இருந்த செல்போனில் இருந்தது.
“அந்த செல்லை அந்த பக்கம் வச்சுட்டு சாப்பிடு துளசி..!” என்றார் வள்ளி.
ஆனால் அவள் காதில் வாங்கியதைப் போல் தெரியவில்லை. அவள் போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் சாப்பிட்டு முடித்து அறைக்குள் செல்ல,
“ஏன் துளசி டல்லா இருக்கா..?” என்றாள் பவித்ரா.
“அவ உனக்கு அண்ணி முறை. அவ, இவன்னு பேசாத..!” என்றார் வள்ளி.
“அய்யோ..! மிஸ்ஸஸ் ரூல்ஸ்… என்னால முடியல.சும்மா இதைப் பேசாத, அதைப் பேசாதன்னுட்டு..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் விஜய்.
“ஹாய் அண்ணா..!” என்றபடி பவி அவனிடம் ஓட,
“பவிக்குட்டி எப்ப வந்திங்க..?” என்றான் விஜய்.
“நான் எப்பவோ வந்துட்டேன். நீங்கதான் லேட்..! எங்க போயிட்டு வரீங்க..? என்ன இவ்வளவு நேரம்..?” என்று சாய்ந்து நின்றபடி கேட்க,
“முக்கியமான விஷயமா ஒருத்தரை மீட் பண்ண போனேன். போன இடத்துல கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..! போதுமா..?” என்றான்.
“ம்ம். ஏதோ சொல்றிங்கன்னு விடுறேன்..!” என்று சொல்லிக் கொண்டிருக்க,
“பவி முதல்ல விஜய்யை உள்ள விடு..! அப்பறம் பேசு.” என்று வள்ளியம்மை சொல்ல,
“என்னால முடியலை..! காதுல ரத்தம் வருது. நீங்க முதல்ல சாப்பிடுங்க அண்ணா. நான் அப்பறம் உங்ககிட்ட பேசுறேன்..!” என்று பவி சொல்ல,
“இந்தாங்க அத்தை மாத்திரை..!” என்றபடி நீலா மாத்திரையை குடுக்க,
“இதுல இன்னொரு தூக்க மாத்திரையை சேர்த்துக் குடுத்தா நல்லா இருக்கும். ம்ம்… என் கஷ்ட்டம் யாருக்குப் புரியுது..!” என்றாள் பவி.
“அடிங்க..!”
“நான் உள்ள போயிட்டேன்..! குட் நைட்..!” என்ற குரல் மட்டும் வந்தது.
“பவி வந்த பிறகுதான் வீட்ல கொஞ்சம் சத்தமே கேட்குது. இனி வீட்ல அடிதடி சண்டைக்குப் பஞ்சம் இருக்காது..!” என்று அருண் சொல்ல, சிரித்தான் விஜய்.
இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் அறையில் இருந்து இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் துளசி. அவள் கையில் இருந்த புகைப்படத்தில் இருந்தவனைப் பார்த்தவளுக்கு அழுகை வர,அடக்க முயன்றும் முடியாமல் அழுது விட்டாள்.
“நீ ஏண்டா இப்படிப் பண்ணின..?” என்று ஆயிரம் முறை கேட்டிருப்பாள் அந்த புகைப்படத்திடம். ஆனால் புகைப்படம் பேசுமா என்ன..?
“எனக்கு எல்லாமே நீதான்னு நினச்சேன்.ஆனா இப்போ..! எதுவுமே என்கிட்டே இல்லை.இப்படியே போனா, நான் என்ன ஆவேன்னு எனக்கேத் தெரியலை.என்னோட ஆசை செத்துப் போய்டுச்சு.என் உணர்வுகள் செத்துவிட்டன.எல்லாமே போய்டுச்சு. கடைசியில நீயும் போய்ட்ட..” என்று மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.
கீழே சாப்பிட்டு விட்டு மேலே வந்த விஜய்க்கு ஏனோ அவள் அறையைக் கடக்கும் போது மனதிற்குள் சிறு வலி. அவள் அங்கு எதற்கோ துடிப்பதைப் போன்று தோன்றியது அவனுக்கு.அதை ஒதுக்கிவிட்டு கடந்து செல்ல முற்பட்டான். ஆனால் முடியவில்லை.அதற்காக அவள் அறைக் கதவை தட்டவும் முயற்சி செய்யவில்லை.அப்படியே நின்றிருந்தான்.
“நீ நடந்துகிட்டது ரொம்ப தப்பு விஜய். கழுத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தி நெரிச்சு இருந்தன்னா…அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா…?” என்று யோசிக்க,
“ஒருவேளை அப்படி எதுவும் இருக்குமோ..! அப்போவே கண்ணு கலங்கி இருந்துச்சே. ரொம்ப வலிக்குதோ..!” என்று கேள்வியும் அவனே.பதிலும் அவனே என்பதைப் போல பேசிக் கொண்டிருந்தான் மனதிற்குள்.
“என்னாச்சு விஜய்..? ஏன் இங்கயே நிக்குற..?” என்றார் வித்யா.
“அது..வந்து ..அது சும்மாதான் அத்தை..!” என்றபடி அவன் நகரப் போக,
“எனக்கு எல்லாம் தெரியும் விஜய்.பிரவீண் சொன்னான்.துளசி அப்படி பண்ணது தப்புத்தான். அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்குறேன். நீ எதுவும் நினைச்சுக்காத விஜய்..!” என்றார் வித்யா.
“என்ன அத்தை நீங்க..? என்கிட்டே சாரி கேட்குறிங்க..! அந்த நேரம் எனக்கும் கோபம்.கண்ட்ரோல் பண்ண முடியலை. நானும் அப்படி நடந்துகிட்டது தப்புத்தான். முடிஞ்சா அவகிட்ட சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க அத்தை..” என்றபடி பக்கத்தில் இருந்த அவன் அறைக் கதவை திறந்து கொண்டு சென்று விட்டான்.
வித்யாவிற்கு தான் ஒரு மாதிரி இருந்தது.அவனை எந்த வகையில் சேர்ப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. கோபம் வந்தால் கத்தும் அவன் தான்…கோபம் தணிந்தால் தன்னிலை விளக்கமும் கொடுப்பவன்.அதனால் தானோ என்னவோ அவனை எப்போதும் எதிலும் விட்டுக் கொடுக்க மாட்டார் வித்யா. அதிலும் தாயில்லாப் பிள்ளை என்ற பாசம் வேறு.
“இந்த துளசி சரின்னு சொன்னா, இவ்வளவு பஞ்சாயத்து இல்லை.இந்த வீட்டுக்கும் நிம்மதிக்கும் ரொம்ப தூரம் போல..” என்று நினைத்தவர் துளசியின் அறைக்கதவைத் தட்டினார்.
சில பல நிமிடங்களுக்குப் பிறகு கதவைத் திறந்தாள் துளசி.முகம் கொஞ்சம் சிவந்திருந்தது.
“என்னாச்சு துளசி..!” என்றார் உள்ளே நுழைந்தபடி.
“ஒண்ணுமில்லை மாம்..!” என்றாள்.
“ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..!” என்றார்.
“எப்பவும் போலத்தான் இருக்கு மாம். எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்கப் போறேன். போகும் போது கதவை லாக் பண்ணிட்டு போங்க..!” என்று அவரின் பதிலை எதிர்பார்க்காதவளாய் போய் படுத்துக் கொண்டாள்.
அவளையே சில நிமிடம் பார்த்த வித்யா,
“நீ தூங்கலைன்னு எனக்குத் தெரியும். தேவையில்லாம யோசிச்சு, உன் வாழ்க்கையை நீதான் கெடுத்துக்குற.விஜய், நீ நினைக்குற மாதிரி எல்லாம் கிடையாது. தேவையில்லாம யோசிக்காம தூங்கு..!” என்று சொல்லிச் சென்றான்.
“நான் எங்க அவனை யோசிச்சேன்…!” என்றபடி அந்த போட்டோவைப் பார்த்தாள்.
“நான் யோசிச்சது உன்னைப் பத்திதான்னு அவங்களுக்கு எங்கத் தெரியப் போகுது..!” என்று பேசியபடி இருந்தவள், அதைப் பத்திரப்படுத்தி விட்டு, ஒரு வழியாக உறக்கத்திற்கு சென்றாள்.
பக்கத்து அறையில் இருந்தவனோ உறக்கம் தொலைத்து, நிம்மதி தொலைத்து, நினைத்தவளைத் தொலைத்து….புத்தருக்கு போதி மரம் போல், அவனுக்கு அந்த அறையில் பால்கனி.
அந்த பால்கனி மட்டுமே அறியும் அவன் இரவுகளின் ரகசியத்தை. அவன் சோகங்களின் கனத்தை.தூக்கம் தொலைத்த பல இரவுகளில் அவனுக்கு உணர்வுகளின் வடிகாலாய் இருந்திருக்கிறது அந்த பால்கனி.இன்றும் அப்படித்தான்.
காரிருள், கருமேகம் சூழ்ந்திருக்க,அவனோ அவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். விடிந்தால் வரும் பூகம்பத்தை அறியாமல்.
உன்னால் தானே பல… வண்ணம் உண்டானது…
நீ இல்லாமல் தானே… அது மாயம் என்றானது…