அத்தியாயம் 5
நித்யா, ஊருக்கு சென்ற அன்று ஆராவிடம் பேசிய நித்யா, பாட்டிக்குக் கொஞ்சம் சீரியஸாக இருப்பதாகக் கூறினாள். அதற்குப் பிறகு அவளிடம் இருந்து போன் ஏதும் வரவில்லை. இவளாக அழைத்தாலும், போன் எடுக்கப்படவில்லை. சரி என்று தன் பெற்றோருக்கு அழைத்தாள் ஆரா. அவர்களோ, அப்புறம் பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்கள். இவளும் வேலையில் பிஸியாக இருந்ததால், அதன்பின் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இப்படியே மூன்று நாட்கள் சென்றது. ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிந்தது. நித்யாவின் சார்பாக இவளே அவளின் நிலைமையை ப்ராஜெக்ட் மேனேஜரிடம் எடுத்து சொன்னதோடு, நித்யாவும் எமர்ஜென்சி லீவ் பற்றி மெயில் அனுப்பி வைத்ததால், அலுவலகத்தில் அதற்கு மேல் பெரிதாகக் கண்டிக்கவில்லை.
மூன்று நாட்கள் முடிந்தும், ஊரில் இருந்து பாட்டி நலமாக இருக்கிறார்கள் என்பது மாதிரியான செய்திகள் வராததால், அன்று மாலை கிளம்பலாம் என்று முன்பே முடிவு செய்து தட்கல் டிக்கெட் எடுத்து வைத்திருந்தாள் ஆரா. சனி, ஞாயிறு உட்படத் தொடர்ந்து அரசு விடுமுறை தினங்கள் இருந்தது வேறு அவளுக்கு வசதியாகப் போனது. அன்று காலை துணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவளது வீட்டில் இருந்தது போன் வந்தது. ஒருவித பதட்டத்துடனே இவள் போனை அட்டென்ட் செய்ய, அந்தப் பக்கம் இவள் தாய் சித்ரா பேசினார். போன் எடுக்கப்பட்டதும் ஆரா,
“அம்மா, நித்யாவோட ஆச்சிக்கு எப்படிமா இருக்கு?”
“ஹ்ம்ம், அவங்க இப்போ நல்ல இருக்காங்க தனம். நான் இப்போ சொல்ல வந்தது வேற விஷயம்?”
தாய் சொன்னதும் குழம்பிய ஆரா, “என்னமா?! என்ன விஷயம்?!” என்று கேட்க,
“நித்யாவுக்கு நேத்துக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இனிமே அவங்க வீட்டில வேலைக்குப் போகவேண்டாம் சொல்லிட்டாங்க. அதனால நீ மட்டும் அங்க தனியா இருக்க வேண்டாம். வேலையை விட்டுட்டு இங்க வந்திடு. இங்க ஏதாவது வேலை கிடைச்சா பார்க்கலாம்.” என்று கூற அதிர்ந்து தான் போனாள் அவள்.
“என்னம்மா சொல்றீங்க?!!!!!” என்று கேட்க, சித்ரா நடந்ததைச் சுருக்கமாகக் கூறினார்.
அதாவது நித்யாவும் ரகுவும் ஊருக்குப் போய்ச் சேர்ந்த அடுத்த நாள், அவர்கள் பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைய, எல்லோரையும் அழைத்த அவளது பாட்டி, தனது கடைசி ஆசையாக நித்யாவின் திருமணத்தைக் கண்குளிர பார்த்துவிட வேண்டும் என்று கூறினார். பிள்ளைகள் சிறுவயதாக இருந்தபொழுது, தனது ஒரே பேத்தியான நித்யாவிற்கும் அவளின் அத்தை மகனுக்கும் ஊரே மெச்சும் அளவுக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் நினைத்திருந்தனர். காலம் செல்ல செல்ல பிள்ளைகள், தங்களது படிப்பு, வேலை என்று இருந்துவிட அதன்பின் இந்த மாதிரியான் பேச்சுக்கள் பேசப்படவில்லை. ஆனால் இன்று, தான் இறந்து விடுவோமோ என்று பயந்த நித்யாவின் பாட்டி, நித்யாவின் திருமணத்தைத் தான் உயிரோடு இருப்பதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று தனது நீண்ட நாள் ஆசையைக் கூறினார்.
அவர் மூச்சுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் பெரியவர்கள் அதற்குச் சரி என்று சம்மதிக்க, பிள்ளைகளின் சம்மதத்தோடு பாட்டியின் முன்பே மருத்துவமனையில் வைத்தே நித்யாவின் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவருக்குத் தீவிர சிகிச்சை ஆரம்பிக்க, பேத்தியின் திருமணத்தைப் பார்த்துவிட்ட பூரிப்பின் காரணமாக மெல்ல மெல்ல அவரின் மூச்சு சீராக, மருத்துவர்களின் சிகிச்சையில் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்.
ஆராவின் பெற்றோரும் நித்யாவின் திருமணத்தின் பொழுது அங்கேதான் இருந்தனர். ஏற்கனவே சொல்லி இருந்ததைப் போல மாப்பிளை வீட்டினர், நித்யாவை வேலைக்குப் போகவேண்டாம் என்று உறுதியாக் சொல்லிவிட்டனர். நடந்த இந்தக் கலவரத்தில் நித்யாவால் ஆராவிற்கு எந்தத் தகவலும் அனுப்ப முடியவில்லை.
இதையெல்லாம் இப்பொழுது சொல்லி முடித்த சித்ரா, “நீங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனின்றதால தான், உன்னை அங்க போகச் சம்மதிச்சேன். இப்போ நீ மட்டும் அங்க தனியா இருக்க வேண்டாம். உடனே வேலையை விட்டுட்டு கிளம்பி வா.” என்று கட்டளையாக் கூறினார்.
அவர் நித்யாவிற்குத் திருமணம் என்றதுமே அதிர்ச்சியில் உறைந்தவள், தன்னை வேலையை விட்டுவிட்டு அங்கே வந்து விடும்படி கூறியதும், திக்கென்று இருந்தது. அவள் வெறும் வேலைக்காகவா இங்கே வந்திருப்பது? வெண்ணைத் திரண்டுவரும்பொழுது பானை உடைந்துவிட்டதே! என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இங்கே வெண்ணைத் திரண்டு வராவிட்டாலும், வெண்ணை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்தாகிவிட்டது. இப்பொழுது வந்து அதைப் பிடுங்கி தூக்கி எறிந்தால், அவள் நினைத்திருந்தது என்ன ஆவது? யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு என்ன செய்து தன் தாயை சமாளிப்பது என்று யோசனையாக இருந்தது. அதற்குள் சித்ரா, “தனம்! தனம்! லைன்ல இருக்கியா?” என்று பலமுறை அழைத்துவிட்டார்.
அதன் பிறகே தன் யோசனையில் இருந்து வெளிவந்தவள், “ஹா! என்னம்மா?” என்று கேட்க, அவரோ, “இவ்ளோ நேரம் நான் சொன்னதே காதில விழலையா. அப்படி என்னதான் யோசனை உனக்கு? ஒழுங்கா இன்னைக்குச் சாயந்திரமே அங்க இருந்து கிளம்பு. நாளைக்குக் காலையில அப்பா ஸ்டேஷனுக்குக் கூப்பிட வந்துடுவாரு. இங்க வந்த பிறகு ரகு மூலமா உன்னோட ஆபீஸுக்கு ரெசிக்நேஷன் லெட்டர் எழுதி கொடுத்துக்கலாம்.” என்று அவர் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே போக, எரிச்சல் அடைந்த ஆரா, அவரை இடைமறித்து, “என்னம்மா நீ! அவ்ளோ ஈசியா வேலையை விடச் சொல்ற!! இந்த வேலைக் கிடைக்க நான் எவ்ளோ கஷ்டபட்டேன் தெரியும்ல. எவ்ளோ பெரிய கம்பனி. அவனவன் இங்க வேலை கிடைக்காதான்னு கவலைபடுறான்.” என்று இவள் பதிலுக்கு எகுறினாள்.
“அதுக்கு?! இப்போ என்ன சொல்ல வர நீ?!”
“நான் வேலையை விடல அம்மா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.”
“உதைவங்குவ தனம். ஒழுங்கா மரியாதையா நாங்க சொல்றதை கேட்டு நட.”
சித்ரா போனில் சத்தமாகப் பேசுவதைப் பார்த்த அனைவரும் அவர் அருகில் வர, தன் கணவரிடம் போனை கொடுத்தவர், “இந்தாங்க! அவ என்னமோ சொல்றா. ஒழுங்கா இங்க வர சொல்லுங்க. ரொம்ப அடம். எந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கிறதுன்னு அறிவு இல்லை. பொட்ட பிள்ளையை அப்படித் தனியா விட்டுட முடியுமா. அப்படி ஒன்னும் இவ வேலை செஞ்சு இங்க சாப்பாடு சாப்பிட போறதில்லை. இங்க பக்கத்தில வேலை கிடைச்சா போகட்டும். அங்கதான் வேலை செய்யணும்னு ஒன்னும் கட்டாயம் இல்லை.” என்று பொறிந்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சொன்னது அனைத்தும் ஆராவின் காதில் விழத்தான் செய்தது. ‘படிச்சவங்களா இருந்துகிட்டு அம்மாவே இப்படிச் சொல்றாங்களே! இந்தக் காலத்தில பொண்ணுங்க வெளிநாட்டுக்கே தனியா போய் வேலை செய்றாங்க. இங்க பக்கத்தில இருக்கிற ஊருக்கு விட மாட்டேங்குறாங்க.’ என்று அவர் மீது கோபப்பட்டாள்.
அவளுக்கு எங்கே புரிய போகிறது பெண்ணைப் பெற்ற ஒரு அன்னையின் பரிதவிப்பு. பெற்றோருடன் வசிக்கும் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காத இந்தக் காலத்தில், பருவ வயதில் இருக்கும் தன் பெண் எங்கோ கண்காணாத இடத்தில் தனியே இருக்கிறேன் என்று சொன்னால், எந்தத் தாய் தான் ஒத்துக் கொள்வார்.
அடுத்துப் போனில் பேசிய தன் தந்தையிடம், தன் ஆதங்கத்தை எல்லாம் கூறியவள், “நீங்களே சொல்லுங்க அப்பா, எப்படியும் இன்னும் ரெண்டு வருஷமோ இல்லை மூணு வருஷமோ தான் நான் வேலைக்குப் போகப் போறேன். அதுக்கு அப்புறம் கல்யாணத்தைக் காரணம் காட்டி எப்படியும் வேலைக்குப் போக விட மாட்டீங்க. அதுவரைக்கும் வேலைக்குப் போறேனே அப்பா, ப்ளீஸ்!! இவ்ளோ பெரிய கம்பனியான்னு அன்னைக்கு நீங்க எவ்ளோ சந்தோஷப்பட்டீங்க. இப்போ இப்படிச் சட்டுன்னு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வான்னு சொன்னா, எப்படி ப்பா?! எனக்குனு சில கனவுகள் இருக்கும்ல ப்பா. தயவு செஞ்சு நீங்க அம்மாகிட்ட எடுத்து சொல்லுங்க.” என்று காலில் விழாத குறையாக் கெஞ்சினாள். தனக்கும் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்பத்தை இழக்க அவள் சுத்தமாக விரும்பவில்லை.
ஆரா சொன்ன அனைத்தையும் கேட்ட மோகன், “சரி மா. நீ சொல்றதை புரிஞ்சிக்க முடியுது. ஆனா அங்க எப்படி உன்னைத் தனியா விடுறது? அதையும் நீ யோசிச்சு பார்க்கணும்ல டா. அம்மா சொல்றதுலயும் நியாயம் இருக்குல மா.” என்று அவர் சொன்னதும், ஆராவிற்குள், கொஞ்சம் நிம்மதி வந்தது.
அவர்கள் சொல்லும், ‘தனியே எப்படி இருப்பாய்’ என்ற கேள்விக்கு மட்டும் எதாவது வழி செய்துவிட்டால் போதும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் எப்படி? என்று யோசித்தவளுக்கு ஹாஸ்டல் என்று சொல்வதும் சரிபட்டு வராது என்று தோன்றியது. தீவிரமாக யோசித்தவளுக்குச் சட்டென்று அந்த எண்ணம் உதித்தது. எதற்காக நாம் இவ்வளவு போராடுகிறோமோ, அதற்கான சந்தர்பமாக ஏன் இதைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாதென்று. சில நிமிடங்கள் யோசித்தவளுக்கு அதுவே சரி என்று தோன்றியது. சம்பந்தப்பட்டவர்கள் அருகருகே இருந்தால் தான் நினைத்தது நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தாள்.
பல நிமிடங்கள் யோசித்தவள், தன் தந்தையிடம், “அப்பா, நான் தனியா இருக்கிறது தான பிரச்சனை. பேசாம அக்காவையும் ஆச்சியையும் இங்க அனுப்பி வைச்சிடுங்க. அக்காக்கும் ஒரு சேஞ்சா இருக்கும் ப்பா. அங்கயே இருந்தா நடந்ததையே நினைச்சிட்டு இருப்பா.” என்றாள் கெஞ்சலாக.
அதைக் கேட்டவரோ சில நொடிகள் கழித்து, “ஹம்! சரி மா. ஆனா ஆச்சி வயசானவங்க. எப்படித் தனியா விடுறது?”
“அதான் நானும் அக்காவும் இருக்கோமே ப்பா. அதுவும் அக்கா ஆச்சி கூடவே தான் இருக்கப் போறா. இங்க பக்கத்திலையும் நிறையப் பேர் இருக்காங்க ப்பா. அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. ப்ளீஸ் ப்பா. சரின்னு சொல்லுங்க அப்பா.”
“எதுக்கும் நான் அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன் மா.”
“அப்பா! அம்மாகிட்ட கேட்டா வேண்டாம்ன்னு தான் சொல்வாங்க. நான் முடிவு செஞ்சுட்டேன். நீங்க இன்னைக்கே அவங்களை அனுப்பி வைங்க. நான் நாளைக்கு ஸ்டேஷன்ல வெயிட் பண்ணுவேன். டாட்டா ப்பா. பை.” என்று அவளே முடிவு செய்துகொண்டு போனை வைத்துவிட, இந்தப்பக்கம் மோகனோ, “சரியான வாலு.” என்று சிரித்துக் கொண்டார்.
அதன்பின் வழக்கம் போல ஆராவின் தாய் “அதெல்லாம் வேண்டாம்” என்று சத்தம் போட, மோகனோ மிருதுளாவிடம் கேட்டார். அவளும், “ஆரா சொல்றது சரி தான ப்பா. இந்த வேலைக்கு அவ ரொம்ப ஆசைபட்டா. இப்படித் தூக்கிபோட்டுட்டு வர சொன்ன எப்படி ப்பா? எங்களுக்கு அங்க போறதுல எந்தப் பிரச்னையும் இல்லாப்பா.” என்று பாட்டியையும் சேர்த்துக்கொண்டு தனது கருத்தையும் சம்மதத்தையும் சொல்ல, பார்வதியும், தனது பேத்திகளைப் பார்த்துகொள்வதை விட வேறு என்ன வேலை, மிருதுளாவிற்குச் சம்மதம் என்றால், எனக்கும் சம்மதம் என்று கூறிவிட்டார். அதன் பின் தன் மனைவியிடம் தனியே பேசிய மோகன், ஆரா மிருதுளாவை பற்றிச் சொன்னதை எடுத்து சொல்லி புரியவைக்க, எப்படியோ ஒருவழியாகச் சித்ராவை சம்மதிக்க வைத்துவிட்டார்.
அதன் பின் ஒரு நாள் கூட இனி ஆராவை தனியாக இருக்கவிட வேண்டாம் என்பதால், அன்று மாலையே மிருதுளாவும் பார்வதியும் பெங்களூருவுக்குப் புறப்பட்டனர். இந்தச் செய்தியை ஆராவிடம் தெரிவித்து விட, அவளும் அலுவலகத்தில் நேற்றே ஊருக்கு செல்ல வாங்கியிருந்த விடுப்பை கான்சல் செய்தவள், நாளை சனிக்கிழமை வேலைக்கு வந்துவிடுவதாகக் கூறி விட்டாள். அடுத்தநாள் சீக்கிரம் புறப்பட்டு ஸ்டேஷன் சென்று அக்காவையும் பாட்டியையும் அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிட்டு, அலுவலகம் செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டாள்.
ஆனால் வரும் வழியில் சிறு பழுது ஏற்பட்டதால், ரயில் வர சில மணி நேரங்கள் தாமதாகும் என்ற செய்தி ஆராவிற்குத் தெரியவந்தது. அலுவலகம் செல்லவேண்டி உள்ளதால், என்ன செய்ய என்று யோசித்தவள், வேறு வழியில்லாமல் கௌதமிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று அவன் வீட்டிற்குச் சென்றாள். சனிக்கிழமைகளில் அவனுக்கு விடுமுறை என்பது ஆராவிற்குத் தெரியும்.
“என்ன விஷயம் ஆராதனா?!” என்று கேட்டவனிடம் விவரத்தை சொன்னவள், “நீங்க கொஞ்சம் போய்க் கூட்டிட்டு வர முடியுமா கெளதம் சர். அவங்க பேங்களூருக்கு புதுசு. அதோட பாட்டி வேற வராங்க. ப்ளீஸ் சர், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று தனது நிலைமையை எடுத்து கூறி கேட்கவும், “சரி ஆராதனா. நான் போய்க் கூட்டிட்டு வரேன். யு டோன்ட் வொர்ரி.” என்றான் தன்மையாக.
“தேன்க் யு சோ மச் சர். அப்புறம் தேஜா பாப்பாவை நேத்துப் ஃபுள்ளா பார்க்க முடியல. என்ன ஆச்சு சர்?!”
“அவளா!! அவ அத்தை கூட ஊருக்கு போயிருக்கா.”
“ஒஹ்! உங்களுக்குத் தங்கச்சி இருக்காங்களா?”
“சொந்த தங்கச்சி இல்லை. சித்தப்பா பொண்ணு.”
“நீங்க இல்லாம தனியா இருந்துப்பாளா குட்டி பாப்பா.”
“ஹா….ஹா….அவ அத்தைன்னா எத்தனை நாள்னாலும் இருந்துப்பா.” என்று கூறி சிரிக்க, அவனுடன் சிரித்தவள், அடுத்து வருபவர்களைப் பற்றியை விவரங்களை அவனிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றாள். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போதே அக்காவிற்குப் போன் செய்தவள் கெளதம் அழைக்க வரும் விவரத்தை கூறிவிட்டு வைத்தாள். தற்செயலாக இந்தச் சம்பவம் நடந்தாலும், இருவரும் முதல்முறை சந்திக்கப் போவதை நினைத்து உள்ளுக்குள் சின்னச் சந்தோசம் ஆராவிற்கு. அந்த மகிழ்ச்சியிலேயே அலுவலகம் போய்ச் சேர்ந்தாள்.
காரை எடுத்துக்கொண்டு ரயில் நிலையம் சென்ற கெளதம், வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றான். ஆரா சொன்ன அடையாளத்தின் படி, பச்சை நிற சுடிதார் அணிந்த பெண்ணையும் வயதான பாட்டியையும் தேடிக் கொண்டிருந்தான். தூரத்தில் ஆரா சொன்ன அடையாளங்கள் படி ஒரு இளம்பெண்ணும் வயதான் பெண்மணியும் பெட்டிகளுடன் இறங்கி வந்தனர்.
அவர்களை பார்த்ததுமே மிருதுளாவின் அமைதியான முகம் அவனுக்குள் ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியது. ‘இவங்க முகம் ஏன் இவ்ளோ அமைதியா இருக்கு. ரொம்பச் சாப்ட் டைப் போல.’ என்று மனதுக்குள் நினைத்தவன் அவர்கள் அருகில் சென்றான். அதே நேரம் பெட்டிகளை எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கிய மிருதுளாவும் பார்வதியும் தங்களை யாராவது தேடுகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருக்க, கெளதம் அவர்கள் அருகில் சென்று,
“நீங்க மிருதுளா வா, ஆராதனா வோட அக்கா?!” என்று சந்தேகத்துடன் கேட்க, அவள் “ஆமாம் சர். நீங்க?” என்று பதிலளிக்க, “நான் கெளதம். ஆராதனாவோட ஆப்போசிட் பிளாட்.” என்று அவன் சொன்னதும், “ஆஹ்! இப்போதான் ஆரு போன்ல சொன்னா. தேங்க்ஸ் சர். இவ்ளோ தூரம் வந்ததுக்கு.” என்றாள் நன்றியுடன்.
“பரவாலங்க இதுல என்ன இருக்கு.” என்றவன் அவர்களிடம் பெட்டியை வாங்க கை நீட்ட, “பரவால சர். நாங்க எடுத்துட்டு வரோம். உங்களுக்கு எதுக்குச் சிரிமம்.” என்றாள் பவ்யமாக. “இருக்கட்டும்ங்க. பெட்டி ஹெவியா இருக்கு. பாட்டி எப்படித் தூக்கிட்டு வருவாங்க. இப்படிக் கொடுங்க.” என்று கூறியவன் அவர்களின் பெட்டியை வாங்கிக் கொண்டான். அதன்பின் வெளியே பார்கிங் வந்ததும், காரில் அனைத்தையும் வைத்துவிட்டு, அவர்களை அழைத்துக்கொண்டு அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தான்.
தங்கள் தளத்திற்கு வந்ததும் பெட்டிகளை அவர்கள் வீட்டின் முன் வைத்துவிட்டு, தனது வீட்டிற்குச் சென்ற கெளதம், ஆரா கொடுத்துவிட்டுச் சென்றிருந்த சாவியை எடுத்து வந்து கொடுத்தான். மீண்டும் தன் நன்றிகளைக் கூறிவிட்டு சாவியை வாங்கிகொண்டாள் மிருதுளா. வீட்டை திறந்து உள்ளே எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு பார்க்க, மணி பனிரெண்டை கடந்திருந்தது. அன்றைய தினம் பொன்னம்மா விடுமுறை என்பதால், வீட்டில் சாப்பிட எதுவும் இல்லை. சரி நாமே சமையல் செய்யலாம் என்று நினைத்தவள், பிரிட்ஜில் பார்க்க, காய்கறிகள் ஒன்றும் இல்லை. மளிகை சாமான்களும் கொஞ்சமே இருந்தது. ஏற்கனவே இங்கே பக்கத்தில் சூப்பர் மார்க்கெட் இருப்பதாக ஆரா கூறி இருந்ததால், பையை எடுத்துக்கொண்டு பார்வதியிடம் சொல்லிக்கொண்டு கீழே சென்றாள் மிருதுளா.
ஆரா அந்த அபார்ட்மெண்ட்டிற்குக் குடி வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, கடையில் எப்பொழுது சென்றாலும் மளிகை சாமான் இல்லை என்று புகார் வந்துகொண்டே இருந்ததால், அபார்ட்மெண்ட் உரிமையாளர் என்னவென்று பார்க்க, பக்கத்துத் தெருக்களில் வசிப்பவர்களும் இங்கே வந்து சாமான் வாங்கிச் செல்வது தெரிந்தது. ஆதலால், இனிவரும் காலங்களில் அபார்ட்மெண்ட்டில் குடி இருப்பவர்களுக்கு மட்டும் தான் மளிகை சாமான்கள் கொடுக்க வேண்டும் என்று அந்தக் கடைகாராருக்கு உத்தரவிட்ட உரிமையாளர், அதற்காக, அனைத்து வீடுகளுக்கும் அடையாள அட்டை போன்று ஒன்றையும் ஏற்பாடு செய்தார். அதன்படி அந்தக் கார்ட் உள்ளவர்கள் மட்டும்தான் கடையில் பொருட்கள் வாங்க முடியும்.
இது தெரியாமல் கடைக்குச் சென்ற மிருதுளாவை அங்கிருந்த ஊழியருக்கு அடியாளம் தெரியாமல் போக, கொடுக்கபட்டிருக்கும் அடையாள அட்டையை அவர்கள் கேட்க, இவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே ஆராவிற்குப் போன்போட, அவளோ அப்பொழுதுதான், கார்டை தன் பார்ஸில் மறந்து போய் எடுத்து வந்துவிட்டதாகச் சொன்னவள், அவளே நேரடியாகக் கடை ஊழியரிடம் பேச, அவரோ, கார்டை ஸ்கான் செய்யாமல் பொருட்கள் கொடுத்தால் உரிமையாளர் தங்களுது காண்ட்ராக்ட்டை கேன்சல் செய்துவிடுவார் என்று சொல்ல, வெளியே வருவதைத் தவிர வேறு வழி இல்லை மிருதுளாவிற்கு.
வெளியே வந்தவள், படிகளில் ஏறப்போக, எதிரில் கெளதம், இறங்கி வந்து கொண்டிருந்தான். இவள் கையில் வெறும் பையுடன் வருவதைப் பார்த்தவன் என்ன விவரம் என்று கேட்க, நடந்ததைச் சுருக்கமாகக் கூறினாள். ‘அன்று பொன்னம்மா வரவில்லை என்பதால், ஊரில் இருந்து வந்தவர்கள் சமைத்து சாப்பிட நினைத்து, பொருள் வாங்க சென்றிருப்பார்கள் என்று நினைத்தவன், “சரி வாங்க. என்னோட கார்டில வாங்கிக்கலாம்.” என்று இவளை அழைக்க, “இல்ல பரவாலங்க. ஈவ்னிங் ஆரு வந்ததும் வாங்கிக்கிறோம்.” என்று வெளியே கிளம்பிக் கொண்டிருக்கும் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து இவள் சொல்ல, அவனோ இவளை கட்டாயபடுத்தி அழைத்துச் சென்றான்.
கடைக்குள் சென்றதும், ஊழியரிடம் விவரத்தை கூறிவிட்டு மிருதுளாவை சென்று பொருட்கள் வாங்க சொல்லிவிட்டு, இவனும் குழந்தைக்குச் சில உணவு பொருட்களை வாங்கிக் கொண்டவன், அவள் வந்ததும் தனது கார்டை கொடுக்க, அதற்கான பில் தொகையை இவள் கட்டினாள். அதன்பின் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்ததும், கௌதமிடம் நன்றியை தெரிவித்துக் கொண்டு மிருதுளா விடைபெற்றாள். இவனும் தனது வண்டியை எடுக்கச் சென்றான்.
இனி தாங்கள் இருவரும் ‘தேஜஸ்வினி’ என்ற ஒற்றைப் பாதையில் தான் பயணிக்கப் போகிறோம் என்ற உண்மை தெரியாமல், இருவரும் தங்கள் திசைகளில் சென்றனர்.