அத்தியாயம் 9(2)
அதைப் பார்த்து அதிர்ந்த மிருதுளா “அம்முகுட்டி!!” என்ற அலறலுடன் தேஜாவின் அருகில் ஓடியவள், கட்டில் அருகில் மண்டியிட்டு, குழந்தையின் உடலை பிடித்துக்கொண்டாள். தான் பார்த்துக் கொண்டிருந்த காட்சியில் அரண்டவளின் உதடுகள் துடிக்க, உடல் நடுங்கியது. அந்த நடுக்கத்தில் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது. குழந்தையைப் பார்த்து கௌதமுமே அதிர்ச்சி அடைந்தவன், டாக்டரிடம் என்னவாயிற்று என்று கேட்க, குழந்தைக்கு ஜன்னி வந்திருக்கு என்றார் அவர். அதைக்கேட்டதும் வாய்விட்டே அழுதுவிட்டாள் மிருதுளா. ஏனெனில் ஜன்னி வந்தால் எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே அனுபவத்தவள் அல்லவா அவள்.
கலங்கிய கண்களுடன் கைகளைப் பிசைந்துகொண்டு கெளதம் நிற்க, மிருதுளாவோ, “அம்முகுட்டி, எழுந்துருடா. கடவுளே!!” என்ற புலம்ப ஆரம்பித்தவள், குழந்தையின் நிலைமை மோசமாவதை பார்த்ததும் இன்னும் பயந்தவள், அழுகையுடன் “அம்முகுட்டி, கண்ணைத் திறடா. அம்மா இருக்கேண்டா பக்கத்தில. கண்ணைத் திறந்து அம்மாவை பாரு டா.” என்று கூறியவாறே, தேஜாவின் நெஞ்சுபகுதியை தடவி கொடுத்துக்கொண்டே, குழந்தையின் நெற்றியிலும் கன்னத்திலும் அழுத்தமாகத் தனது இதழை பதித்தாள்.
மிருதுளா, ‘அம்மா’ என்று சொன்னதுமே, அதிர்ந்துப்போன கெளதம், தேஜாவை விடுத்து, மிருதுளாவின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் தெரிந்த உணர்வுகள் அவனை அசைத்துப் பார்த்தது. பொதுவாக எல்லோரும் குழந்தைகள் என்றாள் பாசம் வைப்பார்கள். ஆனால் இவளின் இந்த அதீத அன்பு, அவனை வியப்படைய செய்தது. பாசம் இருக்கும், ஆனால் இந்த அளவுக்குப் பாசம் வைக்க முடியுமா ஒருவரால், என்ற எண்ணம் அவனின் மனதை குழப்பியது. அதற்குமேல் அங்கிருந்த சூழ்நிலை அவனை யோசிக்கவிடவில்லை. இவனை அழைத்த நர்ஸ், மிருதுளாவை வெளியே அழைத்துசெல்ல சொல்ல, அவளோ அங்கிருந்து நகர்வதாக இல்லை. “அம்முகுட்டி! அம்முகுட்டி!” என்ற மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருந்தாள்.
அவளின் அழுகையைப் பார்த்த டாக்டர், வேறு வழியில்லாமல் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார். டாக்டர் தங்களது சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டிருக்க, மிருதுளாவோ குழந்தையின் கைகளைப் பரபரவென்று தேய்த்துகொண்டே அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டு இருந்தாள். தனது குரலை கேட்டால் குழந்தை எழுந்து விடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு. அதன் பலனாகவோ என்னவோ சில மணிநேர போராட்டத்துக்குப் பிறகு, கண்விழித்து மிருதுளாவின் வயிற்றில் பாலை வார்த்தால் தேஜா. இதில் வெறும் பார்வையாளனாகி போனான் கெளதம்.
குழந்தை கண்விழித்ததும், “ஓ!!” வென அழ ஆரம்பிக்க, சந்தோஷத்தில் கண்ணீருடன் அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்த மிருதுளா, குழந்தை முகம் முழுவதும் முத்தமழை பொழிந்துவிட்டாள். அதன்பின் தேஜாவை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளை எழுதி கொடுத்தவர், “இனி பேபிக்கு ப்ராப்ளம் எதுவும் இல்லை. ஷி இஸ் அவுட் ஆப் டேஞ்சர் நவ். நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சர். குழந்தைக்கு அம்மா இல்லைன்னு இனிமே சொல்லாதீங்க.” என்றவர், மிருதுளாவாய் சுட்டிக்காட்டி, “இவங்களை விடப் பெஸ்ட் அம்மா உங்க குழந்தைக்குக் கிடைக்க மாட்டாங்க. குழந்தைக்கு ஒன்னுன்னதும், ரொம்பத் துடிச்சு போய்ட்டாங்க. இவங்க அழுததைப் பார்க்கும்போது எனக்கே ஒரு நிமிஷன் குழப்பம், இவங்க உண்மையா யாருன்னு.” என்று சிரித்தவர், “சின்னக் குழந்தை இருக்கும்போது எந்த நேரத்திலையும் கவனமா இருக்கணும் சர். இன்னைக்குப் ஃபுள்ளா குல்க்ந்தகி இங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும். நாளைக்கு டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டலாம். டோன்ட் வொர்ரி. டே கேர் ஆப் த பேபி. முடிஞ்சா அவங்களையும் கன்சோல் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
டாக்டர் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் கௌதமின் செவிகளில் மீண்டும் ஒலித்தது. அப்படியே திரும்பி மிருதுளாவை பார்த்தான். அவள் முகத்தில் தெரியும் தவிப்பு, அவளைப் பார்க்கும் யாரையுமே ஒரு நொடி அவள்தான் தேஜாவின் தாய் என்றுதான் நினைக்கவைக்கும். இந்த அன்பு எதனால் என்று அவனால் சத்தியமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படியே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன் தேஜா தன்னை நோக்கி கை நீட்டவும், நினைவுக்குத் திரும்பியவன், அப்போதைக்கு அந்த யோசனையை விட்டுவிட்டுக் குழந்தையிடம் சென்றான். கெளதம் குழந்தையை நெருங்கியதும், கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து சற்று தள்ளி நின்றுகொண்டாள் மிருதுளா.
அதன்பின் ஜெய்யிற்குப் போன் செய்து கெளதம் செய்தியை சொல்ல, அதே நேரம் அவனும் அப்பொழுதுதான் வீட்டிற்கு வர, சேகரும் ஊரில் இருந்து வந்திருந்தார். உடனடியாக அனைவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தான். நேரம் இரவை நெருங்கி விட்டதால், வரும்பொழுதே பார்வதி, அனைவருக்கும் உணவு சமைத்து எடுத்துவந்தார். வந்ததும் குழந்தை நன்றாக இருப்பதைப் பார்த்ததும் தான் நிம்மதியே வந்தது அவர்களுக்கு. சேகர் கௌதமிடம் நடந்ததைக் கேட்டு தெரிந்துகொண்டவர் அவரும் ஒருமுறை டாக்டரை சென்று பார்த்துவிட்டு வந்தார்.
அதன்பின் கெளதம், மிருதுளா இருவரும் காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று தெரிந்ததும், பார்வதி மிருதுளாவிடம், அவள் உடல்நிலையைப் பற்றிப் புலம்பியவர், “இதுக்குதான் சொன்னேன். என்கூட வா. சாய்ந்திரம் வந்து பாக்கலாம்னு. இப்போ பாரு நாள்பூரா சாப்டாம இருந்திருக்க.” என்று புகார் பட்டியல் வாசித்தவர், அடுத்து அனைவரையும் சாப்பிட வைத்த பின்னரே அமைதியானார். அன்று இரவு குழந்தையுடன் தான் தங்கிகொள்வதாக ஜெய் கூறவும், மற்றவர்கள் வீட்டிற்குக் கிளம்பினர். வேறு வழியில்லாமல் மிருதுளாவும் அனைவருடன் கிளம்பி சென்றாள்.
அன்று இரவு தனது அறையில் படுத்திருந்த கௌதமிற்கு, மிருதுளாவை பற்றிய யோசனை தான். கூடவே வேறொரு சந்தேகமும். ஒருவேளை அது உண்மையாக இருந்தால்? என்று யோசிக்கும்போதே அவனுக்குள் சிறு கலக்கம்.
அடுத்தநாள் கெளதம் மட்டும் சென்று குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தான். தனது அலுவலகத்துக்குப் போன் செய்தவன், நான்கு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான். டாக்டர் சொன்னதுபோலக் குழந்தைக்கு வேளாவேளைக்கு மருந்துகள், சரியான உணவுகள் கொடுத்து நன்றாகப் பார்த்துக்கொண்டான். இங்கே மிருதுளாவிற்குத் தான், அதுநாள் வரை, தினமும் குழந்தையுடனே இருந்தவளுக்கு இப்பொழுது, அதுவும் தேஜா உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தன்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமும், குழந்தை எப்படி இருக்கிறாளோ என்ற கவலையும் ஏற்பட, அவ்வபோது பார்வதியிடம் சொல்லி கெளதம் வீட்டிற்குச் சென்று பார்த்துவர செய்தாள்.
பார்வதி அடிக்கடி வந்து விசாரித்துவிட்டு சென்றதை பார்த்துக்கொண்டிருந்த கெளதம், மிருதுளாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவன், மூன்றாம் நாளில் குழந்தையை அவளிடமே கொடுத்துவிட்டவன், இரவு நேரம் தேஜா தூங்கியதும் வந்து வாங்கிசெல்வான். இப்படியே இருவரின் கவனிப்பிலும் தேஜாவின் உடல்நிலை குணமானது. அன்றில் இருந்து இரவில் வெகுகவனமாக அலாரம் வைத்து பார்த்துக்கொண்டனர், கௌதமும் ஜெய்யும்.
அன்று தேஜாவின் பிறந்தநாள். காலையிலேயே குழந்தையை அழைத்துக்கொண்டு கெளதம் கோவிலுக்குச் செல்ல, இவனுக்கு முன்பே மிருதுளா அங்கே இருந்தாள். கண்களை மூடி அவள் வேண்டிகொண்டிருக்க, இவனும் அங்கே சென்று குழந்தையின் பெயர் ராசி, நட்சத்திரத்தை சொல்லி, ஐயரிடம் பூஜைக்குக் கொடுக்க, தேஜாவின் பெயரை கேட்டதும் கண்விழித்த மிருதுளாவிற்கு, எதிரில் கௌதமின் கைகளில், குட்டி பட்டுப் பாவாடை, தலையில் பூ எனப் பார்க்க அழகாக இருந்த தேஜாவின் மேல் இருந்து பார்வையை எடுக்க முடியவில்லை. அதற்குள் ஐயர் வந்து இருவரின் அர்ச்சனை தட்டுகளைக் கொடுக்க, மிருதுளா அவரிடம், தேஜாவை காட்டி, “பாப்பாக்கு இன்னைக்குப் பிறந்தநாள் சுவாமி. பெரியவங்க நீங்க அவளை ஆசீர்வாதம் பண்ணனும்.” என்று கேட்டுக்கொள்ள, “அதற்கென்னமா பேஷா பண்ணிடலாம்.” என்றவர் குழந்தையிடம் திரும்பி தலைமேல் கைவைத்து, “தீர்க்க்காயசா சேமமா இருக்கணும்.” என்று ஆசீர்வதித்துவிட்டு சென்றார்.
சன்னதியில் இருந்து வெளியே வந்ததும் தேஜா இவளை நோக்கி தாவவும், குழந்தையை அவளிடம் கொடுத்தான் கெளதம். வாங்கியவள் தேஜாவிற்குத் திருநீர் பூசிவிட்டு, கணத்தில் முத்தம் வைத்தவள், “பாப்பாக்கு இந்த ட்ரெஸ் அழகா இருக்கு.” என்று கூற, “அவ தாத்தா செலக்க்ஷன். ஆனா டிரெஸ்ஸை போடுறதுக்குள்ள தான், எங்களை ஒருவழி பண்ணிட்டா.” என்று கூறிவிட்டுக் கெளதம் சிரிக்க, மிருதுளாவின் முகத்திலும் புன்னகை. இவர்கள் இருவரும் சிரிப்பதை பார்த்து தேஜாவும் பல் எல்லாம் தெரியும்படி சத்தமாகச் சிரித்துப் போவோர் வருவோரை திரும்பி பார்க்க வைத்தாள்.
தேஜாவிற்கு இது முதல் பிறந்தநாள் என்தால் பக்கத்தில் இருந்த நட்சத்திர ஹோட்டலில் மாலை விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தான் கெளதம். விழா ஏற்பாடுகளைக் கவனிக்க ஜெய்யும் சேகரும் முன்பே சென்றுவிட, ஒருமணிநேரம் கழித்துப் புறப்பட்டான் கெளதம். வீட்டை பூட்டிக்கொண்டிருக்கும் பொழுது, ஆராவும் பார்வதியும் கிளம்பி அவர்கள் வீட்டின் வாசலில் நின்றிருக்க, சீக்கிரம் வரும்படி தனது சகோதரியை அழைத்துக் கொண்டிருந்தாள் ஆரா. அதற்குள் இவர்களைப் பார்த்துவிட்ட கெளதம் தன்னுடன் வருமாறு அழைக்க, “இல்லை தம்பி. நாங்க ஆட்டோல வந்துடறோம். நீங்க கிளம்புங்க.” என்று கூறி மறுக்க, “என்ன பாட்டி?! என் பொண்ணோட பர்த்டேக்கு வரீங்க. அப்போ நீங்க என்னோட கெஸ்ட். கெஸ்ட்டை ஒழுங்கா கூட்டிட்டு வரலானா அப்புறம் தேஜா என்னை ரூம்குள்ள பூட்டிவச்சு அடிப்பா.” என்றவன் தேஜாவிடம் திரும்பி, “அப்படித்தான குட்டிமா!” என்று கேட்க, குழந்தைக்கு என்ன புரிந்ததோ, தலையை மேலும் கீழும் ‘ஆம்’ என்பதுபோல வேகமாக ஆட்டினாள். அதற்கு ஆரா “அப்பாவை அடிக்கிறியா நீ!!” என்று அவளுடன் விளையாடி கொண்டிருக்க, அப்பொழுது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள் மிருதுளா.
அழகிய பிங்க்நிற டிசைனர் புடவையில் எளிமையான மேக்கப்பில் பார்போரை ‘வாவ்’ என்று சொல்லும்படி வசீகரிக்கும் அழகுடன் இருந்தாள். இவளை இப்படி ஒரு கோலத்தில் இப்பொழுதுதான் பார்க்கிறான் கெளதம். எப்பொழுதும் எளிமையான புடவை இல்லை சுடியில், கழுத்தில் சின்னச் செயின், காதில் சின்னத் தொங்கட்டான், நெற்றியில் குட்டி ஸ்டிகர் பொட்டு என்று பார்க்கவே மிகவும் எளிமையாக இருப்பாள். இன்றோ கண்களைக் கவரும் புடவையில் அதற்கேற்ற நகைகளுடன் சூப்பராக இருந்தாள். அதிலும் அவளின் தோற்றத்துக்கு ஏற்ப போடபட்டிருந்த சிம்பிள் மேக்கப் அவளின் அழகை மேலும் மெருகேற்றிக் காட்டியது. எல்லாம் ஆராவின் வற்புறுத்தல் தான்.
எப்பொழுதும் தலைமுடியை தூக்கி கொண்டை போட்டிருப்பவள், இன்று காதோர முடியை மட்டும் தூக்கி கிளிப் போட்டிருக்க, இடுப்பை தாண்டி அலையலையாக நீண்டிருந்தது அவளின் கூந்தல். இவளுக்கு இவ்வளவு நீண்ட கூந்தல் இருப்பதையே இப்பொழுதுதான் பார்க்கிறான் கௌதம். அவளைப் பார்த்ததும் மனதுக்குள் தோன்றிய எண்ணம், ‘எந்தக் காலத்தில இருக்காங்க இவங்க?! புருஷன் பிரிஞ்சு போயட்டான்றதுக்காக, இவங்க ஏன் அப்படி இருக்கணும். அழகா இருக்காங்க. ஒரு தடவைகூடப் பூ வச்சு நான் பார்த்ததில்லை. சம்மதிச்சு தான பிரிஞ்சு இருப்பாங்க. அப்புறம் ஏன் இவங்களை இவங்களே கஷ்டபடுத்திக்கணும்?!’ என்பதுதான். ஆனால் அவனுக்குத் தெரியாது, இருவரும் சம்மதித்துப் பிரியவில்லை, வலுகட்டாயமாக இவள் பிரிக்கபட்டாள் என்று.
அதன்பின் அனைவரும் கௌதமின் காரிலேயே ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கே இருந்த அனைவரின் கண்களிலும் முதலில் பட்டது, கெளதம், மிருதுளா மற்றும் தேஜாவின் ட்ரெஸ் கலர் தான். ஆம்! மூவருமே பிங்க் நிறத்தில் தான் உடையுடுத்தி இருந்தனர். தற்செயலாக இது நடந்திருந்தாலும், பார்பவர்களுக்கு வித்யாசமாகத் தான் தெரிந்தது. ஜெய் கூடக் கௌதமை அழைத்து இதைச் சொல்ல, “இதுல என்ன இருக்கு டா. இட் இஸ் ஜஸ்ட் அன் கோஇன்சிடென்ட்.” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான். இந்தக் காட்சி ஆராவிற்குத் தான் சுவாரசியமாக இருந்தது.
ஆரா தனது அக்காவை பற்றி யோசித்துக்கொண்டிருக்க, ஜெய்யோ ஆராவை சைட் அடித்துக் கொண்டிருந்தான். ஸ்கை ப்ளூ கலர் பார்டி வியர் அனார்கலி சுடியில், சைடில் ஸ்ப்ளிட் கட் செய்யபட்டிருக்க, அதற்கு ஏற்ற ஆக்சசரீஸ்சுடன் உயர்த்தி போடப்பட்டிருந்த போனிடைலில் பார்க்கவே ஸ்டைலாக இருந்தாள். அவளைப் பார்த்ததும் ‘ஷப்பா!!!!’ என்ற பெருமூச்சுடன் தலை முடியை கோதிக்கொண்ட ஜெய், ‘அந்தக் கிளியோபாட்ராவே நடந்து வர மாதிரி இருக்குடா சாமி. அதிலையும் அந்தக் கண்ணு, ஸ்மோக்கி லுக்ல ஆளை கிறங்கடிக்குது.’ என்று நினைத்துக் கொண்டவன் மனதுக்குள் அந்தக் கண்களுக்கு மிருதுவான முத்தம் ஒன்றை பதித்துவிட்டு தான் அங்கிருந்து நகர்ந்தான். அதன்பிறகு கேக் வெட்டப்பட, அனைவரின் வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியுடனும் பிறந்தநாள் விழா இனிதே நிறைவேறியது.
அவர்களின் இந்தச் சின்னச் சந்தோஷம்கூட அந்தக் கடவுளுக்குப் பொறுக்கவில்லை போல, தற்பொழுதுதான் ஒரு துன்பத்தில் இருந்து மீண்டு வந்தவர்களை நோக்கி அடுத்து ஒரு மிகபெரிய துன்பம் வந்து கொண்டிருந்தது. ஆனால் இதன் முடிவில் கெளதம் – மிருதுளாவின் வாழ்க்கை திசை திரும்பப் போகிறது என்பது நன்மையே!