நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஒரு அத்தியாயம் மட்டுமே உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலை 8 மணி அளவில் கண்விழித்த வெண்மதி தாயின் உதவியுடன் குளித்து சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்தவள் தாயிடம்
“அம்மா நான் தோட்டத்தில போய் கொஞ்சம் நேரம் காத்து வாங்கிட்டு உட்கார்ந்துட்டு வருகிறேன்.” என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றாள். மல்லிகைப் பந்தலின் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். அப்பொழுது அங்கு கதிர்வேலன் வந்தான்.
அவனைப் பார்த்த வெண்மதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அவளது அலுவலகத்திற்கு புகைப்படத்தையும் கடிதத்தையும் இவன் தான் அனுப்பி இருப்பானோ என்று இன்னமும் வெண்மதி சந்தேகத்துடன் தான் இருந்தாள். எனவே அவனிடம் அதைப்பற்றி தனிமையில் கேட்க நினைத்து காத்திருந்தாள்.
ஆனால் அதற்கு முன்பு அவன்
“வெண்மதி எங்க அம்மாவை ஒரு பெரிய ஆபத்தில் இருந்து உன் உயிரை கூட பெருசா நினைக்காம காப்பாத்தி இருக்க. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு எனக்கு தெரியல.
நானும் எங்க அம்மாவும் இந்த வீடு எங்களுக்கு மட்டுமே வேண்டும் என்கிற பேராசையில் உனக்கு நிறைய டார்ச்சர் கொடுத்து இருக்கிறோம். இப்படி உனக்கு வெறும் கெட்டதை மட்டும் நினைச்ச எங்களுக்கு நீ நல்லது நினைச்சிருக்க. நினைச்சது மட்டும் இல்லாம அதை செஞ்சும் காட்டியிருக்க. உன்மேல பொறாமையாகவும் கோபமாகவும் இருந்த எங்க அம்மா மனசையே நீ மாத்திட்ட. எனக்கு எல்லாமே எங்க அம்மா தான். அவங்களுக்கு அப்புறம் தான் மத்த எல்லாமே. இந்த வீடும் கூட. என் உயிரே எங்க அம்மாதான். என்னோட உயிரையே காப்பாற்றி கொடுத்திருக்க. இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் வேண்டாம். இந்த வீட்டை மொத்தமா உனக்கு எழுதி தரேன். நீயே வச்சுக்கோ. இனிமே நான் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.” என்று கண்கலங்கியபடி கூறினான். இதனைக்கேட்ட வெண்மதிக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘கதிர்வேலனா இப்படி பேசுவது’ என்று அவளால் நம்ப கூட முடியவில்லை. ஆனாலும் கதிர்வேலனின் தாய்ப்பாசம் அவளுக்கு தெரிந்த விஷயமே. அந்த தாய் பாசத்தால் தான் அவன் லலிதாவின் கெட்ட போதனையை கேட்டு இவளை முன்னேற விடாமல் தடுத்ததும். இப்போது அதே தாய்பாசம் தான் அவனை நல்லவனாகவும் மாற்றியிருக்கிறது. என்று நினைத்தாள்.
கதிர்வேலன் தொடர்ந்தான்.
“உன்னைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு தடவை தோல்வியை பார்த்த போதே நான் சோர்ந்து போய் என்னால எதுவுமே முடியாதுன்னு உட்கார்ந்து விட்டேன். ஆனால் உன்னால மட்டும் எப்படி எத்தனை முறை தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்து போராடி ஜெயிக்க முடிஞ்சது?
ஆமாம்வெண்மதி. நீ ஜெயிச்சுட்ட. “என்று தன் தோல்வியை அவளிடம் ஒத்துக்கொண்டான்.
“நீ என்னை தண்டிக்கிறாயோ இல்லையோ. உனக்கு செஞ்ச பாவத்துக்கு எனக்கு சரியான தண்டனை கிடைச்சிருச்சு.” என்றான் கலங்கிய கண்களுடன்.
“என்ன?” என்று புரியாமல்அவனை பார்த்தாள்.
அவன் “என்னோட வேலை போயிடுச்சு. இனிமே நான் என்ன பண்ண போறேன்னு தெரியல. இதை அப்பா, அம்மா, வைஷ்ணவி, மாமா இவங்க கிட்டயெல்லாம் எப்படி சொல்ல போறேன்னு தெரியல. இவங்க முகத்துல எல்லாம் முழுக்கவே எனக்கு வெட்கமாயிருக்கு. நீயும் இப்படி தானே கஷ்டப்பட்டு இருப்ப. எனக்கு இப்பதான் புரியுது.
அப்பா ஏன் வேலை போயிடுச்சுன்னு கேட்டா, நான் என்ன சொல்றது? என் வாழ்க்கையே போச்சு. எனக்கு பைத்தியம் பிடிக்கிறமாதிரி இருக்கு.” என்று வெறுத்துப்போய் கூறினான்.
வெண்மதி பேச ஆரம்பித்தாள்.
“சின்ன வயசுல இருந்து ஒரு சின்ன கஷ்டம் கூட தெரியாம ஒரு தோல்வியைக் கூட சந்திக்காம சக்சஸ்ஃபுல்லா வர்ற குழந்தைகளை விட சில கஷ்டங்களையும் தோல்விகளையும் சந்தித்து அதுக்கப்புறம் அதிலிருந்து வெளியே வந்து சக்சஸ்ஃபுல்லா இருக்கிற குழந்தைகளுக்கு மனவலிமை அதிகமா இருக்கும். அது அவங்க ஃப்யூச்சருக்கு ரொம்ப நல்லது .
வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒருத்தங்க தோல்வி, ஏமாற்றம், துரோகம் இதையெல்லாம் சந்திக்கும்போது அவங்களுக்கு வாழ்க்கை மேலே ஒரு வெறுப்பு வரும். நம்மளால எதுவுமே முடியாது அப்படின்னு தோணும். இந்த கஷ்டத்தில் இருந்து நம்மளால மீள முடியாது அப்படின்னு தோணும். ஆனா அந்த நேரத்தை கடந்து விட்டோம் என்றால் அதற்கு அப்புறம் நமக்கு நல்லது நடக்கும் அப்படின்னு நாம நம்பனும். ஒருத்தங்க கஷ்டப்படும்போது அவங்க கூட இருக்கிறவங்க அவங்களுக்கு சப்போட்டா இருந்தாலே போதும். அந்த சப்போர்ட் பெத்தவங்க, கூட பிறந்தவங்க, ஃபிரண்ட்ஸ் இவங்க மூலமா கிடைச்சாலே போதும்.
நான் கஷ்டப்பட்ட போது எனக்கு என்னோட அம்மா, அப்பா, கவிதா மூணு பேரோட சப்போர்ட்டும் இருந்ததால என்னால அந்த கஷ்டத்திலிருந்து ஈஸியா வர முடிஞ்சது. அந்த வகையில் நான் ரொம்ப லக்கி. கஷ்டப்படுகிற எல்லாருக்குமே இந்த மாதிரி ஆறுதலான பேச்சு கிடைச்சாலே அவங்க அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிடலாம்.
முதல் தடவை அடி வாங்கின போது வலித்தது.
எனக்கு வலித்த முதல் அடி, விஜய்யின் துரோகம். கவிதாவின் ஆறுதல் பேச்சு என்னை அதிலிருந்து மீட்டு எடுத்தது.
இரண்டாவது தடவை அடி வாங்கின போதும் ரொம்ப வலித்தது.
கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி கிடைக்காமல் போன வேலை.
அம்மாவின் ஆறுதலான பேச்சும் அக்கறையும் என்னை மீட்டெடுத்தது.
மூன்றாவது தடவை அடி வாங்கின போது பெருசா வலிக்கல.
இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண போய் அட்டன்ட் பண்ண முடியாம திரும்பி வந்தது. நானே என்னை அந்த ஏமாற்றத்தில் இருந்து மீட்டு எடுக்க பழகிட்டேன்.
அப்போ வலி எனக்கு பழகி இருந்தது. அதனால அந்த வலியை தாண்டி இதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சு நாலாவது தடவை அடி என் மேல விழாத மாதிரி என்னை பாத்துக்கிட்ட.
அப்படித்தான் நான் யார்கிட்டயும் சொல்லாமல் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி வேலை வாங்கினது.
அஞ்சாவது அடி திரும்ப விழுந்தபோது அது சுத்தமா வலிக்கவே இல்ல. திரும்ப அடி விழாத மாதிரி எப்படி வாழறதுன்னு கத்துக்கிட்டேன்.
அப்படித்தா நாங்க ஸ்வீட் செய்ய வேலைக்கு வச்ச பசங்களை வர விடாம நீ தடுத்தபோது பெரியப்பா கிட்ட சொல்ல போறேன்னு உன்னை மிரட்டி அடக்கி வைத்து திரும்பவும் ஸ்வீட் செய்ய ஆள் போட்டு அந்த வேலையை ஆரம்பித்தது.
ஆறாவது அடி நீ அடிச்ச போது .
அதான் என்னோட ஆபீஸ்க்கு அனுப்பிச்ச இல்ல அந்த போட்டோஸ், லெட்டர். அந்த அடி எனக்கு உங்க மேல கோபத்தை வரவழைத்தது. அதுக்கான நியாயத்தை கேட்க தான் பெரியம்மாவை தேடி போனேன்.”
வெண்மதியின் பேச்சின் கடைசி வாக்கியத்தை கேட்ட கதிர்வேலன் புரியாமல் முழித்தான்.
இதனை கவனித்த வெண்மதி “என்ன முழிக்கிற? அந்த போட்டோஸ் லெட்டர் எல்லாம் அனுப்புனது நீதானே?” என்றாள் அலட்சியமாக.
“எந்த போட்டோஸ் எந்த லெட்டர்?” என்று புரியாமல் கேட்டான் கதிர்வேலன்.
“இங்கேயே இரு நான் போய் எடுத்துட்டு வரேன்.” என்று கூறி அவள் எழுந்து உள்ளே சென்று அந்த புகைப்படங்களையும் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தாள்.
அவனிடம் நீட்டி “இதெல்லாம்தான். என்ன அதுக்குள்ள மறந்து போச்சா? இதையெல்லாம் நீ தானே ஆள் வச்சி எடுத்த?”
“ஆமாம் இந்த போட்டோஸ் எல்லாத்தையும் ஆள் வச்சு எடுத்தது நான் தான். ஆனா இதையெல்லாம் நான் உன்னோட ஆபீஸ்க்கு அனுப்பல. அதுவும் இந்த லெட்டரை நான் எழுதவே இல்லை. இந்த லெட்டரை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்னை நம்பு வெண்மதி.” என்று கெஞ்சும் குரலில் கூறி அவள் முகத்தை பார்த்தான்.
வெண்மதிக்கு குழப்பமாக இருந்தது.
“நிஜமாவா சொல்ற?” என்று மீண்டும் அவன் கண்களைப் பார்த்து கேட்டாள்.
“சத்தியமா தான் சொல்றேன்” என்று உறுதியாக கூறினான்.
கதிர்வேலன் உண்மை கூறுவது போல அவளுக்கு தோன்றினாலும் வெண்மதிக்கு குழப்பமாக இருந்தது.
தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்கும் சிறு குழந்தை போல நின்று கொண்டிருந்த அவனை கண்டதும் அவன் மீது இருந்த கோபம் தணிந்து பழைய பாசம் திரும்பியது.
எனவே அவள் “எனக்கு இந்த வீடு முழுசும் வேணும்னு எப்பவும் நினைத்ததே கிடையாது. இந்த வீட்டுல பெரியம்மாவும் எங்க அம்மாவும் சம உரிமையோடு வாழனும்னு தான் ஆசைப்பட்டேன். இந்த வீட்ல நம்ம ரெண்டு குடும்பமும் ஒத்துமையா நிம்மதியா சந்தோஷமா வாழனும்னு தான் இன்னமும் ஆசைப்படறேன்.
நீங்க என்னை” கஷ்டப்படுத்தியதும் ஒரு வகையில் நல்லதாதான் போச்சு. ஏன்னா அதனாலதான் நான் விஜய் மாதிரி ஒரு துரோகியை தெரிஞ்சிக்க முடிஞ்சது. சென்னையில் எனக்கு வேலை கிடைக்காததால் தான் பாண்டிச்சேரியில் வேலையில் சேர்ந்தேன். இப்போ எனக்கு இன்கிரிமெண்ட் கிடைச்சு 40,000 சம்பளமும் கிடைச்சிருக்கு .
சென்னையில் போய் தனியா எங்க அம்மா கூட வாழ நினைச்ச நான் இப்போ இதே வீட்டில் உங்க எல்லார் கூடவும் அதே சம்பளத்தோடு சேர்ந்து வாழ்ந்துட்டு இருக்கேன். நீங்க கொடுத்த கஷ்டத்தால் தான் ஒருதடவை ஒரு விஷயத்தில் தோற்றுப்போனா அதோட சோர்ந்துபோய் உட்காரக்கூடாது திரும்பத் திரும்ப முயற்சி செய்யணும். அப்படி முயற்சி செஞ்சா தான் நாம வாழ்க்கையில் முன்னேற முடியும். அப்படின்ற உண்மையை நான் அனுபவ பூர்வமா தெரிஞ்சுகிட்டேன். இந்த அனுபவத்தை வச்சி தொடர்ந்து முயற்சி செஞ்சு தான் என்னோட ப்ராஜக்டை நான் சக்சஸ்ஃபுல்லா முடிச்சு இன்கிரிமெண்ட் வாங்கி இருக்கேன். அதே அனுபவத்தை வச்சு தான் அந்த திருடனுங்க கிட்ட இருந்து போராடி என்னையும் பெரியம்மாவையும் மீட்டு எடுத்தேன். எல்லாத்துக்கும் மேல எங்க அம்மா நான் நினைச்ச மாதிரி இந்த வீட்டில ராணி மாதிரி வாழ போறாங்க. எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்?” என்றாள் பூரிப்புடன்.