கள்வன் – 21
“விழா எப்படி போச்சு பாப்பா…” இனியா வீட்டில் நுழைந்தவுடன் அவளின் சோர்ந்த உருவையும் மீறி வினா எழுப்பினார் ரமேஷ்.
“அவளே களைத்து போய் வந்திருக்கா. நீங்க இப்போ தான் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.” செய்கைகள் உல்டாவாக கீதா ரமேஷை கடிய, அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
“பாப்பாவுக்கு எதுவும் குடிக்க கொண்டுவா,” என்று மனைவியை விரட்டியவர் சோர்ந்திருந்த தன் மகளிடமிருந்து அவளது கைப்பையை வாங்கிக் கொண்டு,
“சாப்பிட்ட தானே பாப்பா?”
மொழியின்றி இனியா தலையசைக்க, ஒருவித தேடலுடன் மகளின் முகத்தை ஆராய்ந்தார் தந்தை.
“எப்போதும் அவள் வெளியில் சென்று வந்தவுடன் அவளிடம் நான் ஏதும் கேள்வி எழுப்பினால் என்னை அடக்கி அவளை ஓய்வெடுக்க அனுப்பி விடுவீர்கள்… இன்று என்ன? எல்லாம் நேர்மாறாய் நடக்கிறது?” ஏற்கனவே காய்ச்சி வைத்திருந்த பாலை வேகமாக சூடு செய்து இனியாவிற்கு குடிக்க எடுத்து வந்த கீதா கிடைத்த சாக்கில் சந்தேகத்துடன் புகுந்துவிட, மனைவியின் கூர்மையில் சுதாரித்துக் கொண்டார் மனிதர்.
“அந்த தம்பி அஜய் எவ்வளவு தெளிவா நற்சிந்தனைகளை தன் பேச்சினூடே சொல்கிறான் தெரியுமா… என்னையும் இன்று கூப்பிட்டான் என்னால் தான் கல்லூரியில் கல்சுரல்ஸ் வருவதால் அந்த வேலையில் பிசி ஆகிட்டேன். அதுதான் இப்போ கேட்டு தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்.”
“அதை இப்போவே தான் தெரிஞ்சிக்கணுமா என்ன?” அஜயை சந்திக்கவில்லை எனினும் ஏனோ அவன் மீது நன்மதிப்பு ஏற்படவில்லை கீதாவிற்கு. அதுவே அவரின் வார்த்தைகளில் பொதிந்து வெளியேறியது.
பெற்றவர்களின் எதிரெதிர் எண்ணங்களை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாது அபாய மணி ஒன்று இனியாவின் சோர்ந்த உருவத்தை பதம் பார்த்து தட்டி எழுப்பியது.
‘அஜய் அப்பாவை அழைத்தானா? எப்போது? எப்படி?’ என்ற நினைப்பே அவளுக்கு பக்கென்றது. அவள் அஜயின் விழாவிற்கு சென்றதன் காரணம் என்ன? வீட்டிற்கு தெரியாமல் அவள் வைத்திருக்கும் கோரிக்கை என்ன? இங்கு தனக்கு தெரியாமல் தன் தந்தையும், அவனும் உறவு பாராட்டுவது என்ன?
“எப்போது உங்களை அழைத்தார் அப்பா? இருவருமே என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே…” குற்றச்சாட்டும், கேள்வியும் இணைந்து பதைபதைத்த குரலில் வந்தது இனியாவிடமிருந்து.
“ரெண்டு நாள் முன்னாடி எங்க கல்லூரியில் நிகழ்ந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினரே அஜய் தம்பி தான். அப்போது பார்த்தது.” என்று ரமேஷ் பதில் கூற தாயும், சேயும் கூட்டாக அவரை முறைத்து வைத்தனர்.
தன் தந்தை அஜயுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் இதயன் சம்பந்தமாக அஜயிடம் வாய் திறந்திருக்க மாட்டாளே…
இப்போது இதயனை சிகிச்சைக்கு அவனிடம் அழைத்துச் சென்றால் தன் அப்பாவிடம் அல்லவா அதை சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. இதயனை தோழன் என்று தான் அஜயிடம் கூறியிருக்கையில், அது தன் தந்தைக்கு தெரியவரும் பட்சத்தில், தன்னுடைய அதிகப்படியான முயற்சி தந்தைக்கு குழப்பத்தை அல்லவா ஏற்படுத்தும். அப்படி ஒரு சூழல் வந்து ரமேஷ் அவளை கேள்வி கேட்டால் அவர் முகத்திற்கு நேரே அவளால் பொய் உரைக்க முடியுமா… ஏற்கனவே இவ்வளவு பெரிய விஷயத்தை முதல் முறையாக வீட்டில் மறைக்கிறோம் என்ற நினைப்பே அவள் நெஞ்சுக்குழியில் ஒரு ஓரமாய் குறுகுறுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போதோ பிடித்தம் இருப்பது வேறு உறுதியாகிவிட்டது. கீதாவின் எண்ணங்களை கணித்து இதைப் பற்றி சொல்லவும் முடியாமல் இப்போது சொல்லாமல் இருக்கவும் முடியாமல் மாட்டிக்கொண்ட நிலை தான்.
அஜயை அப்பாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கவே கூடாதோ? காலம் தாழ்ந்த யோசனை வேறு…
[the_ad id=”6605″]
ஆனால் இதில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று அவள் நினைக்கவே இல்லையே… ஆனால் இப்போது வந்துவிட்டது. தீர்வை கண்டுபிடிக்கத் தானே வேண்டும்.
‛இதயன் போன்ற ஒரு தோழன் இருப்பதை அஜய் சொல்வதற்கு முன் தானே சொல்லிவிட்டால் என்ன?’ என்றுகூட சிந்தை எழுந்தது.
‛அன்று கூட தந்தை இதயன் நிலையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தாய் மட்டுமே கண்டனம் தெரிவிக்க… தந்தையிடம் இதை மறைப்பதற்கான அழுத்தமான காரணி ஏதும் இல்லையே…’ என்று மனதில் அசை போட்டவள் தந்தையிடம் சொல்லும் முடிவுக்கே வந்துவிட்டாள்.
“நீ போய் தூங்குமா. நானும் அப்பாவும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கோம்.” என்று தாயை அங்கிருந்து வெளியேற்ற முயல, ரமேஷுக்கு ஒருவித ஆர்வம் ஒட்டிக்கொண்டது. அவளுடன் பேசத்தானே காத்திருக்கிறார் மனிதர்.
“அதுதான் பாப்பா சொல்றால்ல… நீ போ. நான் பேசிட்டு வரேன்.” ரமேஷும் கீதாவை அங்கிருந்து நகர்த்துவத்திலே குறியாய் இருக்க நெற்றி சுருங்க இருவரையும் பார்த்துவிட்டு, “நான் உனக்கு தோதா பேசுனா என்னையே கழட்டி விடுறீயா இனியா?…” என்று மகளிடம் குற்றம் வாசித்து பாலை அவள் கையில் கொடுத்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.
மகளை எதிர்பார்ப்புடன் நோக்கியவாறு அவளின் கைப்பையை அங்கிருந்த சிறிய மேசையில் வைத்துவிட்டு சாய்விருக்கையில் அமர, இனியாவும் அவர் அருகில் அமர்ந்து பாலை உறிஞ்சத் துவங்கினாள்.
“என்னவோ பேசனும்னு சொன்னியே பாப்பா… என்ன?” மகள் பாலை ருசித்து பருகி முடிக்கும்வரை காத்திருக்க முடியாமல் கேட்க,
“ம்… சும்மா தான் அப்பா… இன்னைக்கு என்ன நடந்தது என்று கேட்டீர்களே, அதுதான் அப்படியே பேசிட்டு இருக்கலாம்னு…” என்று இழுத்தவள் எதிலிருந்து துவங்குவது என்று யோசிக்க,
“அஜய் ஏதாவது பேசினாரா பாப்பா?” அவரே பெண்ணிற்கு எடுத்துக் கொடுத்தார்.
“அவர் அழைத்ததே அவர் பேச்சை கேட்கத்தானே,” என்று இதழை குறும்புடன் வளைத்தவள் தொடர்ந்து அவன் பேசியதை மறுஒலிபரப்பு செய்தாள்.
“வைட்டனர் கூட ஒரு போதை பொருள்னு இப்போ தான் தெரியுதுப்பா… நான் கூட ஸ்கூல் நாட்களில் வைட்டனர் வாசனை ஆள மயக்குறது போல இருக்கேன்னு அதை உபயோகப்படுத்திய போதெல்லாம் மோந்து மோந்து பார்த்திருக்கேன்… தெரியாமலேயே நானும் அப்போ அதற்கு அடிமையாகி இருந்திருக்கிறேன் என்று புரிந்ததும் ஒரு மாதிரி குற்றவுணர்வு வந்துடுச்சு…” என்று ஒருவித கலக்கத்துடன் இனியா அகத்தை திறக்க, ரமேஷ், “நீ கவலைப்படுகிற அளவுக்கு ஒன்னும் இல்லடா… அறியாத வயதில் ஏதோ அறியாமையில் செய்துட்ட… நாங்க தான் அதெல்லாம் கவனித்து உனக்கு சொல்லி குடுத்திருக்கணும்… இப்போது தெரிந்து விட்டதல்லாவா இனி உனக்கு தெரிந்தவற்றை தெரியாதவர்களுக்கு பரப்பனும்.” என்று மகளின் வருத்தத்தை குறைக்கும் விதமாய் பேசினார்.
அவள் எண்ணமோ இன்று இதோடு சேர்ந்து உணர்ந்துகொண்ட தன் அகத்தின் உணர்வுகளை மறைப்பதற்கு என்ன சொல்லி தன்னைத் தானே சமாதானம் செய்வது கொள்வது என்று புலப்படவில்லை… இதயன் மட்டும் திடமாய் இருந்திருந்தால் மறைக்காமல் அவளுள் மாற்றம் ஏற்பட்ட அன்றே வீட்டில் தன் குழப்பத்தையும் சேர்த்தே சொல்லியிருப்பாள். அவள் வீட்டில் அதற்கான சுதந்தரம் இருந்தது. நடுவில் கீதாவின் வார்த்தைகளே அவளை பயமுறுத்தி இருந்தது. பயம் குழப்பத்தை உண்டு செய்திருந்தது.
“அப்பா… நான் அங்கு சென்றதே வேறு ஒரு காரணத்திற்காகத் தான்…” என்று மெதுவாய் பேச்சை துவங்க, பரபரப்பு வந்து தொற்றிக்கொண்டது ரமேஷிற்கு. அவருக்கு அவர் பிரச்சனை, இனியாவுக்கு அவள் பிரச்சனை… ஆக, இருவருமே மற்றவரின் மனநிலையின் மாற்றத்தை உணரவில்லை.
“என் பிரெண்ட் ஒருவர் விபத்தில் சிக்கி உடல்நிலையில் சமனில்லாமல் இருக்கிறார். அதுதான் அஜயிடம் உதவி கேட்கலாம்னு போனேன்…” என்று மென்குரலில் தயங்கி பாதி மெய் உரைக்க, அவள் தயக்கப்பட்டதற்கு அவசியமேயில்லை என்பது போன்று இருந்தது அவரின் பேச்சு.
“நல்ல காரியம் செய்திருக்க பாப்பா… அஜய் தம்பி என்ன சொன்னாரு? சரி செய்திடலாம் தானே?”
அவரை ஒருவித வியப்பு கலந்த ஆசுவாசமாய் ஏறிட்டவளுக்கு அந்தக் கணம் விளங்கவில்லை இதயன் மீது துளிர்விட காத்திருக்கும் அவளது உணர்வுகள் அவள் மட்டுமே அறிந்த இரகசியம்… அவள் தந்தையைப் பொறுத்தவரை அவள் கூறிய தோழன் என்ற உறவிலேதான் தான் பார்த்திராத இதயனை நிறுத்தியிருந்தார்.
“நாளை வரச்சொல்லி இருக்கிறார் அப்பா… பார்த்துட்டு மேலே என்ன செய்யலாம்னு சொல்வார்… அப்புறம், அது வேறு யாரும் இல்லைப்பா, யுக்தா கல்யாணம் செய்துக்கபோற இன்பனோட அண்ணன் தான்…” என்று மேலும் விபரம் உரைக்க,
“ஓ… சரி பாப்பா… எப்படியோ குணமாகிவிட்டால் சரி…” யுக்தாவின் உறவு என்றதும் அதை பெரிதுபடுத்தவில்லை. அதற்கு மேல் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவுமில்லை. யுக்தாவுடம் சேர்ந்து ஏதோ அவளுக்கு உதவுகிறாள் என்றே நினைத்தார்.
“வேறு என்ன?” மேலும் அவளை நோண்ட, புருவம் சுருக்கியவள், “வேறாயா வேறு ஒன்னுமில்லையே… சரி, எனக்கு தூக்கம் வருதுப்பா… நான் தூங்கப் போறேன்… குட் நைட்…” என்றுவிட்டு அவள் எழுந்து சென்றுவிட, அவளையே ஒருவித யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் யோசனையை கலைக்கும் விதமாய் அலைபேசி ஒலி எழுப்ப, அதில் ஒளிர்ந்த பெயரைப் கண்டு இதழ்கள் விரிய அதை உயிர்ப்பித்தார்.
“இனியா பத்திரமா வீட்டிற்கு வந்துட்டாளா அங்கிள்?”
“வந்துட்டா அஜய். தூங்கப் போயிட்டா…” என்றவர் மறுபக்கம் எதுவும் செய்திவருமோ என்று காத்திருக்க சில நொடி அமைதிக்குப் பிறகு, “இனியா என்கிட்ட ஒரு உதவி கேட்டு இருக்கா அங்கிள். நாளைக்கு கூட்டிட்டு வரச்சொல்லி இருக்கேன்…” என்றவன் செருமிவிட்டு, “இன்னும் கொஞ்சம் டைம் வேணும் அங்கிள்…” என்று தயக்கத்துடன் இழுத்தான்.
[the_ad id=”6605″]
“ஓ… இனியா சொன்னா… நீ கொஞ்சம் சீக்கிரமே சொல்லுப்பா… ரொம்ப நாள் கடத்தக்கூடாது.” என்று சற்று கண்டிப்பை வார்த்தைகளில் காட்டாது ஒலியில் காட்ட அதை புரிந்துக் கொண்டவன், “கண்டிப்பா அங்கிள்… எனக்கும் விரைவிலேயே எல்லாம் நல்லபடியாக நிகழ்ந்தால் மகிழ்ச்சி தானே…” என்றதுடன் அழைப்பை துண்டித்தான்.
◆◆◆
காலை ஐந்தரை மணிக்கு வழக்கம் போல காயத்ரி மந்திரம் அவ்வீட்டை நிறைத்துக் கொண்டிருக்க, வழக்கத்திற்கு மாறாய் இனியாவின் தலை பூஜையறையில் தென்பட்டு கீதாவிற்கு அதிர்வலையை ஏற்படுத்தியது.
“ஏய் இனியா!!! உண்மையாகவே நீதானா இல்லை உன்னோட ஆவி எதுவும் வீட்டுக்குள்ள அலையுதா?” என்று அங்கலாய்த்துக் கொண்டே பூஜையறைக்குள் நுழைய,
“அம்மா! குளிக்காம என்ன பூஜையறைக்கு வர? போ போய் குளிச்சிட்டு வா…” என்று கீதாவை விரட்ட,
“ஏய்!!! என்னடி ரொம்ப பண்ற?” என்றும் இல்லாத திருநாளாய் யாரும் அவளை எழுப்பிவிடாமல் அவளே எழுந்து குளித்துக் கிளம்பி பூஜையறை வந்து ஈசனை வேண்ட, கீதாவிற்கு விவரிக்க முடியாத வியப்பு.
செய்கையாலே அவரை அமைதி காக்கச் சொன்னவள் கண்களை மூடி, மனதில் இருப்பதை மனமுருகி வேண்டலாய் இறைவனடி சேர்ப்பிக்க, அவளை குழப்பத்துடன் பார்த்த கீதா தன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்திலேயே வெளியே வந்த இனியா தனக்காக காபியை கீதாவிடமிருந்து வாங்கிக் கொண்டு கூடத்தில் இருந்த செய்தித்தாளை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அவளைத் தொடர்ந்து ரமேஷும் அவள் அருகில் அமர, சன்னச் சிரிப்புடன் காலை வணக்கங்களை இருவரின் இதழ்களும் பரிமாறிக் கொண்டன.
“எழுந்துட்டீங்களா? நீங்களே உங்க பாப்பாகிட்ட என்ன விபரம்னு கேளுங்க… என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு காலையிலேயே கிளம்பி உட்கார்ந்து என்னை அதிகாரம் செய்திட்டு இருக்கா.” இனியாவின் மாற்றத்தை கண்டுபிடிக்கும் வேலையில் தன் கணவரை இழுத்துவிட, இனியாவை அப்பொழுது தான் நன்கு கவனித்தார்.
“என்ன பாப்பா காலையிலே கிளம்பிட்ட? சீக்கிரமே வேலைக்கு போக வேண்டுமா என்ன?”
“அதுதான் நேற்றே சொன்னேனே அப்பா.” என்றதும் ரமேஷின் மனதிலோ வேறு சிந்தனைகள். அதில் இதயன் இருப்பு பற்றியோ, அவனின் சிகிச்சை பற்றியோ துளியும் இல்லை.
“நேற்றுக்கே உங்களுக்கு தெரியுமா? என்ன விஷயம்? அப்பாவும் பெண்ணும் நல்லா கமுக்கமாக இருக்கீங்க…”
“ஒரு விஷயமும் இல்லை. அவள் எதுவும் செய்யவில்லை என்றாலும் குறை சொல்ற, இப்போ செயத்தாலும் குறை படிக்கிற… அவள் என்ன தான் பண்ணனும்னு நீ விருப்பப்படுற?” மகள் செல்லப்போகும் இடம் மற்றும் சந்திக்கப்போகும் நபர் பற்றித் தெரிந்தால் மனைவி நிராகரிக்கக்கூடும் என்பதால் சாமர்த்தியமாக சமாளித்தார்.
“அப்பாவும் பெண்ணும் என்னிடம் எதையோ மறைத்து நல்லா சமாளிக்கிறீங்க. பார்ப்போம் எத்தனை நாளுக்கென்று!” என்று கீதா அவர்களின் அகத்தை கணித்து அடுப்பறையில் இருந்தே அங்களாய்க்க, தந்தை மகள் இருவருமே ஒருவிநாடி திகைத்து பின் மீண்டனர்.
“பார்த்து போயிட்டு வா பாப்பா… அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்.” தான் மெய்யை மறைப்பது இனியாவிற்கு நல்ல எடுத்துக்காட்டாய் இராது என்பதை உணர்ந்து அவர் அறியாமலேயே இனியாவிற்கு உதவினார்.
“சரிப்பா நான் பார்த்துட்டு சொல்றேன்.” என்று அவள் இதயனை மனதில் வைத்து குறிப்பிட, ரமேஷின் மனதில் அந்த இடத்தில் இருப்பதோ மற்றொருவன்.
…
“தில்லாலங்கடி வேலை செய்ய நல்லா கத்துகிட்ட இனியா.” திடீரென தன் செவியில் மெல்லிய ஓசையில் வந்து விழுந்த வார்த்தைகளில் சாப்பாடு புரையேறி, கண்கள் குளம் கட்ட இருமியவள் தலையை வேகமாக தட்டினான் இனியன்.
[the_ad id=”6605″]
கண்களில் நீர் தழும்பி பார்வையை மறைத்தாலும், இனியனை முறைக்கத் தவறவில்லை அவள்.
“சாப்பிடுறவளிடம் என்னடா வம்பு செய்திட்டு இருக்க? ஒழுங்கா உன் சாப்பாட்டை சாப்பிடு. உனக்கு நேரமாகிறது.” என்று கீதா மகனை அதட்ட,
“என்னவோ காலையில் இனியா கிளம்பி இருந்ததை அதிசயம் போல பேசுன? இப்போது என்னவென்றால் உன் ராசாவை திட்டிட்டு இருக்க… அம்மாவும், பெண்ணும் ஒருமுடிவோட சேர்ந்து எங்களை வம்பிழுக்கிறீர்களா?” காலையில் மனைவி பேசியதை அச்சு பிசகாமல் அவருக்கே திருப்பித் தந்தார் ரமேஷ்.
“உங்களுக்கு வேற வேலையிலைன்னு என் வாயை கிளராதீங்க… போங்க… போய் உங்க ஸ்டூடன்ஸை படிக்க வைங்க…” என்று கீதா வழக்காட, இனியாவும் இனியனும் ஒருவரை ஒருவர் புரியாத பார்வையை பரிமாறிக் கொள்ள, இனியா,
“என்னடா லூசு மாதிரி பேசுற?”
“நான் தெளிவா தான் பேசுறேன்… நீ தான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு புரியல…”
‛இவன் எதைப்பற்றி கேட்கிறான்?’ என்று புரியாமல் இனியா வார்த்தையை வளர்க்க விரும்பாது முடித்துக்கொள்ள,
அங்கு, முக்கோண புரிதல் ஒன்று அரங்கேறியிருந்தது.
◆◆◆
வீட்டிலிருந்து விடைப்பெற்றவள் இதயன் வீட்டிற்கு சென்று உள்நுழையாமல் வாயிலிலேயே நின்று தன் அலைபேசியில் என்னவோ நோண்டிக் கொண்டிருந்தாள்.
“உள்ள வராம இங்க ஏன் நிற்கிற இனியா?” என்று அவளின் வரவு தெரிந்து வாயிலுக்கு கேள்வியுடன் வந்தான் இன்பன்.
அவனை ஏறிட்டு மெலிதாய் முறுவலித்தவள், “ஒன்னு ஆர்டர் செய்திருக்கிறேன். அது வருவதற்கு தான் வெயிட்டிங்.” என்றவளுக்கு அலைபேசியில் அழைப்பு வர, அதை உயிர்ப்பித்து அந்த வீட்டிற்கு வர யாருக்கோ வழி சொல்லிக் கொண்டிருப்பவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் இன்பன்.
அவள் அழைப்பில் இருக்கும்போதே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த ஒருவன் வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்தி அவன் பின் சற்று பெரிதாய் காகிதத்தால் சுற்றி மடித்து வைத்திருந்ததை எடுத்து இனியாவிடம் நீட்டினான்.
இனியாவின் பெரிய அலைபேசியே அவள் கையை நிறைத்திருக்க, இன்பன் முன்வந்து கண்களால் அதை ஆராய்ந்தபடியே வாங்கிக் கொண்டான். பொதுவாய் இருவருக்கும் அவள் நன்றி தெரிவிக்க, அந்த ஆடவன் இனியாவிடம் விடைப்பெற்று கிளம்பினான்.
“என்ன இவ்வளவு பெரிய பார்சல்?” மரியாதை நிமித்தமாய் அது என்னவென்று பிரித்து பார்க்காமல் இன்பன் வினவ,
“பிரித்துத் தான் பாருங்களேன்…”
இன்பன் பரபரவென அந்த காகிதத்தை பிய்த்து எறிய, அதனுள்ளே இரு சக்கரங்களை தாங்கியபடி சக்கர நாற்காலி ஒன்று மடித்திருந்தது.
‛நேற்று தான் நாம் வாங்க நினைத்தோம்; இன்று இனியா வாங்கியே வந்துவிட்டாளே…’ என்ற வியப்பு இன்பனை விட்டு நீங்க வெகு நேரம் பிடித்தது.
“உனக்கு எதுக்குடா சிரமம்… இதுவரை வாங்கியதெல்லாம் பணத்தால் குறைவாயிருந்தாலும் அதற்கு மதிப்பு அதிகம். இது விலையே அதிகம் இருக்குமே?!” அதுவரை அமைதியாய் இதை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி முன்னே வர,
“நீங்க நினைக்கிறது போல இதை விலைக்கு வாங்கவில்லை ஆன்ட்டி… இன்று மருத்துவமனை செல்ல வேண்டுமென்று நான் தான் வாடகைக்கு எடுத்தேன்…” என்ற இனியாவின் பதிலில் சிவகாமியும் வாயடைத்துப் போனார்.
இவள் இதெல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஒன்றுமில்லையே?!
இதுவரை இன்பன் மட்டுமே இதயன் மீதான அவளின் அதீத ஆர்வத்தை கண்டு துணுக்குற்று இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்க, இப்போது சிவகாமியையும் அந்த யோசனை தொற்றிக் கொண்டது.
இவள் யுக்தாவின் தோழி அல்லவே; இவள் இதயனின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் அவனின் நலம்விரும்பி!…
யுக்தாவின் தோழி என்பதை கடந்து வந்து, இனியாவாய் குடும்பத்தின் நலனை பேணுபவள் என்பதையும் தாண்டி, இப்போது இதயனின் இருப்பைக் கொண்டு அவளது உறவை தீர்மானிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது!
*^*^*