கள்வன் – 29
“இந்த பெண்ணை புரிஞ்சிக்கவே முடியலையே.” என்று நினைப்பது வேறு யாராக இருக்கமுடியும் இன்பனைத் தவிர… ஏனெனில் அவளின் உள்ளத்தை களவாடிய கள்வனுக்குத் தெரியும் இனியா ஏதாவது முயற்சி செய்வாள் என்று…
இனியாவின் அசுரவேகம் அவர்களை பீதியாக்கினாலும் அவளின் உத்வேகம் அவனை வெகுவாய் ஈர்த்தது. அவளின் காதலும் வியப்பாய் தான் இருந்தது. பிரதிபலன் எதிர்ப்பாராத இந்த பாசம் எப்படி சாத்தியம்? என்ற மலைப்பு ஒருபுறம் என்றாலும் இந்த பெண் தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த அரியபொக்கிஷம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
இவனுக்குக் கூட ஆங்கில மருத்துவத்தை விடுத்து வேறு சிகிச்சை முறையை நாடிப்பார்போமே என்ற எண்ணம் எழவே இல்லை. இனியாவிற்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோன்றுகிறது? அவளுக்கு காலமும் நேரமும் வேறு வசதியாய் இருக்கிறதே, ஏதோ அவளுக்காகவே எல்லாம் நடப்பது போன்று…
“என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு?” விட்டத்தை நோக்கி இலக்கில்லாமல் வெறிப்பவனை தன் கேள்வி கொண்டு உசுப்பினாள் இனியா.
“உன்னை பத்திதான் யோசிட்டு இருந்தேன். உனக்கு மட்டும் எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? நான் எல்லாம் சத்தியமா இப்படி யோசிக்க மாட்டேன், இப்படியெல்லாம் ஒருவரை விரும்ப முடியுமா என்றுகூட தெரியவில்லை. நீயும் சரி யுக்தாவும் சரி உங்களுடைய விருப்பத்தில் எவ்வளவு தெளிவா, உறுதியா இருக்கீங்க. எங்களால் உங்கள் அளவுக்கு பாசம் வைக்க முடியுமான்னு சந்தேகம் தான். அவனுக்கும் சேர்த்து நீயே அளவில்லா காதல் வச்சிருக்க.” என்று சொல்லவும் தன் இருக்கையிலேயே நெளிந்தவள் மென்முறுவளுடன், “அப்படியெல்லாம் இல்லை. ஒவ்வொருவருடைய பாசமும் ஒவ்வொரு மாதிரி, அது அவங்களுக்கு மட்டுமே ஸ்பெஷலானது. அதை மூன்றாய் நபராய் வெளியிலிருந்து பார்க்கும் போது குறைவாகவோ, நிறைவாகவோ தோன்றும் ஆனால் அதை அனுபவிப்பவருக்கு எப்போதுமே நிறைவு தான். நீங்க வேண்டுமென்றால் யுக்தாவை கேட்டுப் பாருங்க, நீங்க செய்யுற சின்ன விஷயம் கூட அவளுக்கு அவ்வளவு நெருக்கமாய், பெரியதாய் தோன்றும்.”
“எங்களைவிட நீதான் அதிக ரிஸ்க் எடுக்குற.”
“காயப்பட்டு விடுவோம்னு நமக்கு விருப்பமானதை கைவிட்டால் இறுதியில் இதை செய்யாமல் விட்டுட்டோமேனு வேதனையும் குற்றவுணர்ச்சியும் தான் இறுதிகாலம் வரை நம்மோட இருக்கும். ஆனால் செய்துதான் பார்ப்போமே, என்ன தான் நடந்துவிடப் போகிறது என்று ரிஸ்க் எடுத்து அதை வெற்றிகரமா நிறைவேற்றிட்டா அது கொடுக்குற களிப்பே தனிதான். இறுதிவரை தென்றலாய் நம் மனதை வருடிக்கொண்டே இருக்கும்.”
“ஆனாலும் இது கொஞ்சம் அதிகப்படி தான். அம்மாவையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாம். நீயே பார்த்துக்குறேனு சொல்லிட்ட.”
[the_ad id=”6605″]
“வேற என்ன செய்யமுடியும்? இதில் சரியாகிடும்னு நாம நம்பினாலும் எதிர்மறை ரிசல்ட் வந்தால் இனியொருமுறை அவங்களால தாங்க முடியாது. அதோடு மொழிப் பிரச்சனை வேறு இருக்கு. யாருடைய துணையும் இல்லாம நாள் முழுதும் அவங்களால் அங்க சமாளிக்க முடியுமான்னு தெரியல… அதோடு இன்னும் ஒரு முக்கிய காரணம்…” என்று இழுத்தவள் தலை குனிந்து விரல்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து உள்ளடங்கிய குரலில், “ஆயிர்வேத எண்ணை வைத்தியத்தில் வலி அதிகமாவே இருக்கும்னு கேள்விப்பட்டேன். அவரால இப்போ அந்த வலியை உணர முடியாம போனாலும் அந்த சிகிச்சை வேலைசெய்ய ஆரம்பித்தால் தாங்க முடியாத வலி இருக்கும். அதை ரெண்டு பேருமே தாங்குவாங்கனு தோணல.”
என் அம்மாவிற்காக இவ்வளவு யோசிக்கும் மருமகள் எங்கள் வீட்டிற்கு கிடைத்திருப்பது வரமே! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவன் சட்டென்று பிறந்த சந்தேகத்தில் நெற்றி சுருங்க, “ஏன் அஜய்க்கு தெரியாம வரச் சொன்ன?”
பதில் வருவதற்கு முன் உறக்கத்தில் இருக்கும் இதயன் புறம் பார்வை சென்று மீள, தன் சுற்றத்தை ஒருமுறை பார்த்த இனியா இன்பனுக்கு கண்ணாலே சைகை காட்டிவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தாள். இன்பனும் இதயனின் துணைக்காக என்று அந்த ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த செவிலியிடம் இதயனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இனியாவை தேடி அந்த கம்பார்ட்மென்ட் விட்டு வெளியே வந்தான். இருளை விரட்ட அனைத்து இடங்களிலும் லைட் போடப்பட்டிருக்க, யோசனையுடனே முன்னேறினான்.
அந்த கோச் முழுதுமே இவர்களுக்காய் ஒதுக்கப்பட்டிருக்க அந்த ரயில் பெட்டியின் கதவு அருகே இருக்கும் இருக்கையில் இவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள் இனியா.
“ஏதாவது பிரச்சனையா இனியா?” என்று இன்பன் கேட்க, கவலை தோய்ந்த முகத்துடன் நிமிர்ந்தவள், “ஆமா… செல்வியை மறந்துட்டோமே. அந்த செவிலி செல்வி அக்கா அஜய் அனுப்பியவர்தானே? இப்போ உங்க அண்ணனை நான் கொச்சி கூட்டிட்டு போவதை அஜயிடம் சொல்லிடுவாங்களே… இப்போ என்ன செய்யறது?” என்று குழப்பமாய் கேட்கவும் மண்டை காய்ந்தது இவனுக்கு.
“அஜய்க்கு எதுவுமே தெரியக்கூடாதுன்னு ஏன் நினைக்கிற இனியா? இவ்வளவு வருடம் அவர் தானே எல்லாம் பார்த்தது.”
“எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? உங்க அண்ணனுக்கும் அஜய்க்கும் பகையோ கோபமோ இதில் ஏதோ ஒன்னு இருக்கு. அது என்னனு ரெண்டு பேரில் யாராவது சொன்னால் தான் தெரியும்.” என்றவள் மனதிலும் என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற சிந்தனையே.
“அதை காரணமா வைத்து அண்ணன் சிகிச்சையில் ஏதாவது குளறுபடி பண்ணியிருப்பானு நினைக்கிறீயா?” தன் அண்ணனிற்கு சமமாய் நினைத்த அஜய்க்கு கொடுத்துவந்த மரியாதை கொஞ்ச கொஞ்சமாய் தேய்ந்தது.
“இருக்கலாம். எனக்கு அஜய் மேல நெருடல் வந்ததும் ஆண்டிக்கு போன் போட்டு நான் கூகுளில் பார்த்த சிலவற்றை வைத்து விசாரிச்சேன். பொதுவாக முடக்குவாதம் வந்தவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே பிசியோதெரபியும் சேர்த்து கொடுக்க ஆரம்பித்து விடுவார்களாம். அப்படி செய்வதனால் தசைகள் இறுகாமல் தொடர் சிகிச்சையின் மூலம் கை, கால்களை சுலபமாக இயக்க முடியுமாம். இது எல்லாருக்கும் பொருந்தாது என்றாலும் இந்த சிகிச்சையில் குறைந்தது ஒருசதவிகித முன்னேற்றமாவது ஏற்படும் அல்லவா? இங்கேயோ அஜய் பிசியோதெரபி பற்றி மூச்சு விடவில்லையாமே. மருந்து மாத்திரையைத் தவிர வேறு எந்த சிகிச்சையையும் அவர் முயற்சிக்ககூட இல்லை. இது சந்தேகப்படுகிற மாதிரி தானே இருக்கு? வேண்டுமென்றே இவர் குணமாகக்கூடாது என்று தான் இப்படி எல்லாம் அஜய் செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் தான் இவரை வேறு இடத்திற்கு கூட்டிட்டு போய் சிகிச்சை எடுக்கலாம் என்ற யோசனையை தந்தது.” என்று அவளின் சந்தேகத்தையும் அதன் மூலம் கிடைத்த தெளிவையும் பகிர்ந்துகொள்ள, இதை எல்லாம் இத்தனை வருடம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்ற தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்துக்கொண்டான். பணம் செலவழித்தால் மட்டும் போதாது, செய்யும் செலவிற்கேற்ற முன்னேற்றம் இருக்கிறதா என்று இவன் பார்த்திருக்க வேண்டுமே… என்ன ஒரு மடத்தனம். படித்து என்ன பயன்? நடப்பது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கண்காணித்திருக்க வேண்டுமே… இன்னும் என்னவோ வசவுகள் அவன் மனதிற்குள்.
“இப்போ அண்ணனை கொச்சிக்கு சிகிச்சைக்கு தான் கூட்டிட்டு போறோனு தெரிந்தால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். இது தெரிந்தால் அவருடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்னுகூடத் தெரியல. அவரை மட்டுமே நம்பி இருந்திருக்க கூடாது.” என்று அவன் வருந்த,
“உங்களிடம் சந்தேகம் வரமாதிரி அஜய் நடந்துக்கல, அதற்கு நீங்க என்ன செய்வீங்க? ஆனால் இதுவும் ஒருபாடம் தானே. எந்த ஒன்றின் மீதும் அதீத நம்பிக்கை வைக்ககூடாது. முதல் முயற்சி கைகொடுக்கவில்லை என்றால் அதையே பிடித்துக்கொண்டு தொங்காமல் அடுத்தடுத்து வேறு வேறு விதமா முயற்சி செய்திடணும்.” என்று அவள் சொல்லவும் ஆமோதிப்பாய் தலையசைத்தவன் மென்முறுவளுடன் அவளை பார்த்துக்கொண்டிருக்க மீண்டும் தொடர்ந்தாள் அவள்.
“ஆரம்பத்தில் எனக்குமே இந்த ஆயுர்வேதம் எல்லாம் நினைவே இல்லை. டக்குனு அலோபதி மருத்துவமுறை தான் நியாபகம் வந்தது. அஜய் இல்லைனா வேறு டாக்டரை பார்ப்போம்னு தான் நினைச்சேன். கொச்சிக்கு போயாக வேண்டிய கட்டாய சூழல் வந்ததும் தான் மாற்று ஏற்பாடு செய்ய தோணுச்சு. நம்முடைய மருத்துவமுறையை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாதுனு ஒரு எண்ணம். நாம ஆங்கில மருத்துவத்திற்கு பின்னாடி ஓடிட்டு இருக்கோம், நிறைய வெளிநாட்டினர் நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையை தேடி வராங்க. கொச்சிக்கு மாறுதல் கிடைக்கலைனா இந்த முறை சிகிச்சையை முயற்சி செய்து பார்க்க எண்ணியிருப்பேனா என்பது சந்தேகம் தான்.”
“நம்முடைய அருமை நமக்கே தெரியல. பக்கவிளைவு இல்லாத நம் நாட்டு மருத்துவத்தை விட்டுவிட்டு, பொறுமை இல்லாமல் தலைவலி வந்தவுடனேயே சரியாகிடணும்னு வீரியமும், பின்விளைவுகளும் அதிகம் உள்ளதை தேடிப்போறோம்.” என்று இன்பன் அங்கலாய்க்க, கிளிக்கிச் சிரித்தவள்,
“உங்க அண்ணனும் அலோபதி டாக்டராக போயிட்டாரு அதனால பொழைச்சு போட்டும், அலோபதியும் வாழட்டும்.”
“விவரம் தான்.” என்று அவனும் சிரித்தான்.
“செல்வியை அக்காவை எப்படி சமாளிக்கிறது இப்போ?” மீண்டும் குழப்பம் முன்வர,
“இப்போதைக்கு நான் வீட்டிலிருந்தே வேலை செய்றேன், அதனால் நானே பார்த்துக்குறேன்னு சொல்லிடுறேன். லீவ் இருக்கும் போதெல்லாம் எப்போதும் நான் தான் பார்த்துப்பேன் சோ இப்படி சொன்னால் பெரிதா சந்தேகம் வராது. அம்மாகிட்டேயும் இப்படியே சொல்லச் சொல்லிடுறேன்.”
[the_ad id=”6605″]
“முடிந்த அளவு அவங்களை சமாளிக்க முயற்சி செய்யுங்க. ஏன்னா அங்கே ட்ரீட்மென்ட் எவ்வளவு மாதம் போகும்னு சொல்ல முடியாது.”
“சரி நான் பாத்துக்குறேன். நாம எறிட்டோம்னு அம்மாகிட்ட சொல்லிடுறேன், அப்போ தான் நிம்மதியாக தூங்குவாங்க.” என்றுவிட்டு அவன் நகரவும் இனியாவின் அலைபேசி அலறியது.
யாரென்று கண்டுகொண்ட பின் திரும்பவுமா என்று தான் இருந்தது இனியாவுக்கு. ஓயாமல் அலைபேசி அலற வேறுவழியின்றி அதை உயிர்ப்பித்து காதில் வைத்தாள். மறுநொடியே ஆரம்பமானது பட்டாசு மழை.
“உனக்கு புத்தியே வராதாடி, என்ன காரியம் செஞ்சிட்டு இருக்க? ஒழுங்கா இருப்பேன்னு கொச்சிக்கு மாற்றல் வாங்கித் தந்தால் நீ என்ன அவரையும் இழுத்துட்டு அங்க போயிட்டு இருக்க? கொஞ்சமாவது உன் குடும்பத்தை பற்றி நினைச்சி பார்த்தியா? உன்னோட விருப்பம் தான் பெருசுன்னு யாரைப் பற்றியும் கவலைப்படாம நீ பாட்டிற்கு அவரையும் சேர்த்து அங்கே பேக் பண்ணிட்டு போற? நீ இப்படியே செஞ்சிட்டு இருந்தால் நான் உங்க வீட்டில் எல்லாத்தையும் சொல்லிடுவேன்.” என்று தோழி மிரட்ட,
காதை தேய்த்துக்கொண்ட இனியா, “வீட்டில் தெரியும். சொல்லிட்டேன்.” என்றாள் சாதாரணமாய்.
“என்ன? சொல்லிட்டியா? தெரிந்த பிறகும் இன்னுமா உன்னை இவ்வளவு சுதந்திரமா விட்டிருக்காங்க?” அதிர்ச்சியை தாங்கி யுக்தாவின் குரல் ஒலிக்க, தேய்ந்தது இனியாவின் குரல்.
“என்ன செய்ய முடியும்? திட்டுனாங்க, அப்பா பேசவே இல்லை என்கூட. அம்மா கூட தேவையென்றால் தான் பேசுறாங்க.”
“பின்னே கொஞ்சுவாங்களா? இனியாவது இதை விடேன்டி. அம்மா, அப்பாவை விட இவர் என்ன அவ்வளவு முக்கியமா போயிட்டாரு?”
“இனியா இனி எதையும் விடமாட்டா யுக்தா. இவ்வளவு தூரம் வந்துட்டேன், இனி கண்டிப்பா பின்வாங்க மாட்டேன். நான் உனக்கு மெசேஜ் போட்டதுக்கு காரணம் ஒரு நன்றியுணர்வில் தான். நீ மட்டும் என்மேல் உள்ள கோபத்தில் கொச்சிக்கு மெனகெட்டு எனக்கு மாற்றல் வாங்கி தரவில்லை என்றால் இப்போது இருக்கும் நம்பிக்கை வந்திருக்காது. உன்னளவில் நல்லது செய்றேன்னு நீ ஆரம்பித்தது உண்மையாகவே எனக்கு நல்லதில் முடிஞ்சிருக்கு.”
“மண்ணாங்கட்டி, நீ இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் செய்வேன்னு தெரிந்திருந்தால் இதை செய்திருக்கவே மாட்டேன்.” என்று யுக்தா மறுபுறம் புலம்ப அவளது குரலில் தெரிந்த தொனியில் சட்டென்று சிரித்துவிட்டாள் இனியா.
“சிரிடி, நல்லா சிரி… நாங்க எல்லாம் உன் வாழ்க்கை என்ன ஆகுமோன்னு கவலைப்பட்டுட்டு இருக்கோம் உனக்கு குதூகலமா இருக்கோ. நீ செய்றது எதுவுமே சரியில்லை பேபி, அவ்வளவு தான் சொல்லுவேன். இதற்கு மேல் உன் விருப்பம். உன் அம்மா அப்பாக்கு பிடிக்கவில்லை என்று தேர்ந்தே இதெல்லாம் செய்யுற, அப்புறம் நானெல்லாம் எம்மாத்திரம்? உன் வாழ்க்கையை தீர்மானிக்க நான் யாரு? பழகிய பழக்கத்திற்கு உனக்கு நல்லது செய்யணும்னு தோணுச்சு என்னால முடிந்த அளவுக்கு உன்னை மாற்ற முயற்சி செஞ்சேன். இதற்கு மேல ஒன்னுமில்லை…” என்று அழுத்தமான குரலில் வருத்தத்தை பதிவு செய்தவள் அழைப்பை துண்டித்துவிட, யுக்தா வீசிய வார்த்தைகளிலிருந்து வெளிவர வெகுநேரம் பிடித்தது அவளுக்கு.
இனியாவிடம் பேசிய பின்பும் வேகம் குறையாது இன்பனை அழைத்த யுக்தா அவனையும் வறுத்தெடுத்தாள்.
“நீங்க எப்படி உங்களுடைய கடமையை இனியா தலையில் கட்டலாம்? கொச்சிக்கு போய் சிகிச்சை எடுக்கலாம்னு அவள் கேட்டதும் நீங்க எப்படி உங்க அண்ணனை அனுப்பலாம்? உங்க குடும்பம் மட்டும் தான் உங்களுக்கு முக்கியம் அப்படித்தானே? அதனால் தானே என்னிடம் கூட சரியான பயண விவரங்களை சொல்லவில்லை?”
“இப்போ எதற்கு சம்மந்தம் இல்லாமல் பொறியுற?”
“சம்மந்தம் இல்லாமையா? இப்போ எங்கே போயிட்டு இருக்கீங்க?” குரலில் காரம் எகிறியிருக்க, இன்பன் கொஞ்சம் தணிந்தான்.
“அதுதான் முதலிலேயே உன்கிட்ட சொன்னேனே கொச்சிக்கு.”
“விளையாடாதீங்க… இனியாகூட எதற்கு போறீங்க?”
“இது என்ன கேள்வி? இனியா தான் இந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுறா, அப்போ போய்தானே ஆகணும்.” இதென்ன புரியாமல் கேள்வி கேட்கிறாள் என்று இன்பனுக்கு சலிப்புதட்ட, அவள் தன் கேள்விகளால் சொல்ல முற்படும் விஷயத்தை இவன் தான் புரிந்து கொள்ளவில்லை.
“இனியா இல்லாமல் நீங்க போயிருந்தா நான் ஏன் இதெல்லாம் கேட்கப்போறேன்?”
“சுற்றி வளைக்காமல் உன் பிரச்சனை என்னனு முதலில் சொல்லு.”
“நேராகவே கேட்கிறேன். உங்கள் அண்ணனை பற்றி மட்டும் யோசிக்கிறீங்களே இனியாவை பற்றி என்றைக்காவது யோசிச்சீங்களா? அவள் குடும்பத்தை பற்றி நினைச்சி பார்த்தீங்களா? அவள் பொறுப்பில் உங்க அண்ணனை கொச்சி வரை அனுப்புவது எவ்வளவு பெரிய முடிவுன்னு புரியுதா இல்லையா உங்களுக்கு? அவள் வீட்டில் இதற்கெல்லாம் எப்படி ஒத்துப்பாங்களானு யோசனையாவது வந்ததா? உங்க அண்ணன் சரியானால் போதும் இனியா எந்த சிக்கலில் இருந்தாலும் பரவாயில்லை, அப்படித்தானே? இதை எப்படி அத்தை ஒத்துகுட்டாங்கனு தெரியல. பெரியவங்க அவங்களுமா இவள் பேச்சை கேட்டு எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருக்காங்க. ஒரு பொண்ணோட தன்னோட பையனை அனுப்புறோமே, அந்த பொண்ணு வீட்டுக்கு இந்த விஷயம் தெரியுமா? அவங்க இதை பற்றி என்ன நினைப்பாங்கனு எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இல்லை. யார் வீட்டு பெண்ணாய் இருந்தால் என்ன நம்ம பையன் சரியானால் போதும்,” தோழிக்காக என்பதைவிட மூன்றாம் நபராய் இந்த நிகழ்வுகளை வெளியிலிருந்து பார்க்கும் போது என்ன தோன்றுமோ அதை அப்படியே அவள் வெளிப்படுத்திவிட, அது சென்று சேர்ந்த விதம் தான் பிழையாகிப் போயிற்றா இல்லை புரிந்துகொண்ட விதம் பிழையா என்று கண்டறியக் கூட கடினமாகிப்போனது.
“என்னவோ நாங்கள் எல்லாம் சுயநலவாதி மாதிரி பேசுற? அம்மாவையே குறை சொல்ற? உங்க அம்மா அன்றைக்கு பேசிய பேச்சுக்கு நான் அமைதியாக போனதால் என் தலையில் மிளகாய் அரைக்குறியா?”
விவாதங்கள் திசை மாறிச் செல்வதை உணர்ந்தவள் நெஞ்சம் பகீரென்றது. இப்போது தான் ஒருவழியாய் சமாதானமாகி இருக்கிறார்கள், மீண்டுமா என்று ஆயாசமாய் வந்தது. இருந்தாலும் அமைதியாகிவிட்டால் அவனின் பேச்சை நியாயப்படுத்தியது போன்றாகிவிடும் அதை எப்படி ஏற்பது? அதனால் உண்மையை புரியவைக்காமல் அவள் வாதத்திலிருந்து பின்வாங்குவதாய் இல்லை.
“எதனுடன் அதை முடிச்சி போடுறீங்க? உங்களையும் உங்களை சுற்றி உள்ள வட்டத்தையும் விட்டு முதலில் வெளியே வாங்க, வந்து இனியா நிலையிலிருந்து யோசித்து பாருங்க. அவங்க குடும்பத்தினர் மனநிலையில் இருந்து அவங்களுடைய எண்ண ஓட்டத்தை நினைச்சு பாருங்க.
தன்னோட பெண்ணுக்கு ஆஹோ ஓஹோன்னு வாழ்க்கை அமைத்து கொடுக்கணும்னு ஆசைக்கோட்டை கட்டி வைத்திருப்பவர்களுக்கு, தன் பொண்ணு அவளுக்கு சற்றும் பொருந்தாதவரை விரும்பி, அந்த பையனுக்காக தங்களையே எதிர்த்துட்டு இருக்கானு தெரியும் போது பெற்ற மனது எப்படி பதறும்? பெரிதாக கஷ்டம் நஷ்டம் தெரியாமல் வளர்த்த பொண்ணு ஒருவர் மேல ஆசை வச்ச ஒரே காரணத்திற்காக இவ்வளவு கஷ்டப்படனுமானு அவங்க ஆதங்கப்படுவது எவ்வளவு நியாயமானது? அப்படி அவங்க அடிவயிற்றில் நெருப்பை கட்டிட்டு இருக்கும்போது அந்த பையனையே பல மையில் கடந்து தன்னுடைய புது இடத்துக்கு கூட்டிட்டு போறான்னு தெரிந்தால் அவங்க துடிச்சிப் போயிட மாட்டாங்க? ஏற்கனவே அவள் தனியாக தங்களை விட்டு தூரமா போறான்னு வருத்தம் இருக்கும், இதில் இப்படி வேற?
நாளைக்கே இந்த விஷயம் தெரிய வரும்போது உங்களையும், அத்தையையும் தான் கேள்வி கேட்பாங்க அவளோட பெற்றோர். எங்களை கேட்காமல் எப்படி என் பெண்ணோட உங்க பையனை அனுப்புனீங்கனு கேட்பாங்க அப்போ என்ன பதில் சொல்லுவீங்க? இப்படி தான் அடுத்த வீட்டு பெண்ணை அவள் வீட்டு சம்மதம் இல்லாமல் உங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திப்பீங்கலானும் கேள்வி வரும். அவள் மேஜர்னு நீங்க சொல்லலாம், ஆனால் அதெல்லாம் சட்டப்பூர்வமானதும் வெளயுலகிற்கு சொல்லும் சால்ஜாப்பு மட்டும் தான். அவங்க மனசுக்கு இனியா இன்னுமே அவங்களுடைய குட்டிப்பொண்ணு தான். அவங்களுடைய கட்டுபாட்டில் தான் இவள் இருக்கா, அந்த கட்டுப்பாடை பாசம் என்றும் சொல்லலாம் இல்லை சட்டபூர்வமா கார்டியன்/ கேர்டேக்கர் என்று கூட சொல்லலாம். இந்த ரெண்டுக்குமே நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்.” என்று மூச்சைப்பிடித்து பேச, யாரோ தன்மேல் அம்பு எய்தார் போல் இருந்தது இன்பனுக்கு.
[the_ad id=”6605″]
இந்த சின்ன விஷயத்தில் இவ்வளவு உணர்வுச் சிக்கல்கள் இருக்கிறதா என்ற நினைப்பே மலைப்பாய் இருந்தது அவனுக்கு. இனியாவுக்கு தன் அண்ணனை பிடித்திருக்கிறது, அவளே அண்ணனின் வாழ்க்கைத் துணையாய் வந்தால் இதயனின் வாழ்க்கை அமோகமாய் இருக்கும் என்றமட்டிலே இவனுடைய யோசனை இருந்திருக்க, இப்போது யுக்தா கேட்கும் கேள்விகள் அனைத்தும் அவனை தாக்குவது போலவே உணர்ந்தான். இதயன் நிலையும் அவ்வளவு உயர்வாய் இல்லை எனும்போது என்ன பதில் சொல்ல முடியும்?
“நீ சொல்வது சரிதான், நாங்க எங்க பக்கம் மட்டும் தான் யோசித்தோம். இனியாவை பற்றி யோசிக்கவே இல்லை. அவளுக்கும் குடும்பம் இருக்கும்ல. அவங்களும் நிறைய ஆசை வச்சிருப்பாங்க, இனியா வாழ்க்கை அப்படி இருக்கனும், இப்படி இருக்கணும்னு… அன்றைக்கே அவள் தம்பி முறைத்தான், நான் தான் அதை அப்படியே விட்டுட்டேன். விசாரித்து இருக்கனும், ஆனால் இன்னைக்கு இனியா தம்பி நல்லா பேசுனான். அண்ணனைக் கூட மாமானு கூப்பிட்டான்.” புரிதல் வந்தவுடன் தவறிழைத்தது உரைத்துவிட, குற்றவுணர்வு தானே சேர்ந்து கொண்டது.
“இப்போதாவது புரிஞ்சிதே உங்களுக்கு. இனியன் சின்ன பையன், அவனை எதாவது சொல்லி மிரட்டி இருப்பா இந்த இனியா. அவன் உங்க அண்ணனை ஏற்றுக் கொண்டானு அவள் அம்மா, அப்பாவும் ஏத்துப்பாங்கனு தப்பு கணக்கு போடாதீங்க. அவங்க கோவமா இருக்காங்க. இவள் கூட பேசுறதே இல்லையாம்.” என்று யுக்தா நடப்பை கூறி வருந்த, இதயனையும் கொச்சிக்கு அழைத்துச் செல்வது அவள் பெற்றோருக்கு தெரியுமா என்று யுக்தாவும் சொல்லவில்லை, இன்பனும் கேட்டுக் கொள்ளவில்லை. அதுவும் தெரிந்திருக்கும் என்றே நம்பினான் இன்பன், அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கணித்திருந்தாள் யுக்தா. எது எப்படியோ சந்தேகங்களை பரிமாறிக்கொண்டு தெளிவு பெறாமல் தானே ஒன்றை யூகித்துக் கொண்டு அதுவே சரியாக இருக்கும் என்று நம்பி செயலில் இறங்குவது என்றுமே சிக்கலில் தான் சென்று முடியும் என்று புரிந்திருக்கவில்லை இருவருமே.
“இனியா தானே சிகிச்சைக்கு கொச்சி கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் அம்மா முதலில் வேண்டாம்னு தான் சொன்னாங்க. இனியா தான் பேச்சிலே அவங்களை கரைத்து அனுமதி வாங்கிட்டா. அவங்களுக்கு அண்ணன் எப்படியாவது சரியாகிட மாட்டானானு ஒரு ஏக்கம்.” அன்னையை தவறாக எண்ணிவிடுவாளோ என்று இவன் அன்னைக்கு பரிந்து பேச,
“நீங்க நடப்பை புரிஞ்சிக்காம இருந்ததை கூட ஏத்துக்கலாம் ஆனால் அத்தை இந்த விஷயத்தில் சுதாரிப்பா இருந்திருக்கலாம். என்னைக்கு என்றாலும் இதை வைத்து ஒரு பேச்சு கண்டிப்பாக வரும். உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் நீங்களும், அத்தையும் இதுபோல செய்ய அனுமதித்து இருப்பீங்களா? உங்க வீட்டு பெண்ணை இப்படி அனுப்புவீங்களா? நீங்க பையனை பெற்றதால் அமைதியா இருக்கீங்க, எந்த கெட்ட பெயர் வந்தாலும் அது இனியாவுக்குத் தானே.” இன்பன் புரிந்துகொண்டேன் என்று வருந்தினாலும் அவள் மனது ஆறவில்லை. இவர்கள் வீட்டில் ஒரு பெண் இருந்திருந்தால் அந்த பெண்ணின் விருப்பு தான் முக்கியம் என்று இப்படி அனுமதிப்பார்களா? வாங்கும் இடத்தில் இருப்பதால் எப்படி கிடைக்கிறது என்ற கவலையின்றி பெற்றுக் கொள்கிறார்கள், இதுவே கொடுக்கும் இடத்தில் இருந்தால்?
“சரி விடு, ஏதோ தெரியாம அண்ணன் மேல உள்ள பாசத்தில் செஞ்சிட்டாங்க.”
இதே போலத்தான் நல்லது என்று நினைத்து இவள் அன்னையும் நிச்சயத்தன்று அப்படி பேசினார்கள், அது எப்படி தவறோ இதுவும் அப்படித்தான் என்று மனதில் நினைத்துக் கொண்டவள் அதை வேறு விதமாய் வெளிப்படுத்தினாள், “அத்தை நிலைமை புரியுது ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு அவங்க மேல வருத்தம் தான்.” என்று முடித்துக்கொள்ள, வாழ்க்கை வட்டமென்பது அவனுக்கு நன்றாகவே விளங்கியது. அன்று அவள் அன்னை மேல் இருக்கும் சினம் அவ்வளவு எளிதில் போகாது என்று இவன் முறுக்கினான், இன்று யுக்தா அதேபோல அவளுக்கு தவறென்றுபட்டதை மறையாமல் வெளிப்படுத்தி அவன் அன்னை மீதிருக்கும் வருத்தத்தை தெளிவாக விளக்கிவிட்டாள்.
“நான் ஏதாவது செய்ய முடியுதான்னு பார்க்கிறேன்.” என்றவன் மேலும் சில நிமிடங்கள் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசிவிட்டு அழைப்பை வைத்துவிட, சிந்தை முழுதும் இனியா பற்றிய யோசனை தான். திருமணப்பட்டு எடுக்கவென கடைக்கு சென்ற தினத்திலிருந்தே இனியா அவர்கள் இல்லத்திற்கு வரவில்லை என்று அன்னை புலம்பியது நினைவுவர அதற்கு முந்திய தினம் தான் அவள் வீட்டில் இந்த விஷயம் தெரிந்திருக்கும், அதுவும் அவளுக்கு துணையாய் தான் வீடு வரை சென்றதால் கூட தெரிய வந்திருக்கலாம் என்ற யூகம் அவனை நெருடியது. எது எப்படியாகினும் நடந்ததை மாற்றும் வலிமையும், சக்தியும் யாரிடமும் இல்லை. ஆனால் நடக்கப்போவதில் திருத்தங்கள் சில செய்ய இயலும்.
*^*^*