கள்வன் – 30
சென்னை போன்றல்லாது ஈரப்பதம் மிகுதியாய் மெல்லிய குளிர் காற்று வீச, அதை அனுபவித்தபடியே கொச்சி ரயில் நிலையத்திலிருந்து ஆயுர்வேத மருத்துவமனை அனுப்பியிருந்த காரில் தங்களின் அடுத்த பயணத்தை துவங்கினர். சிறிதுநேர நகரப்பயணத்திற்கு பிறகு நெரிசல் குறைவான இயற்கை எழிலுக்கு இடையில் கார் பயணப்பட, சாலையின் இருபுறமும் மரங்கள் அணிவகுத்திருப்பதை கண்குளிர ரசித்து அனுபவித்தனர் மூவருமே.
முன் இருக்கையிலிருந்து ஒருக்களித்து தலையை மட்டும் பின்புறம் திருப்பிய இன்பன், “இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு. இதை பார்த்ததுமே மனதில் இருக்கும் பாரம் எல்லாம் குறைந்த மாதிரி இருக்கு.”
“எல்லாமே இயற்கையுடைய மேஜிக்.” என்று கண்சிமிட்டிய இனியா தன் அருகில் முறுவலுடன் அமர்ந்திருக்கும் இதயனை கண்டு மென்னகை சிந்தினாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த இதயனும் கண்களை சிமிட்டி அதரங்கள் விரிய பெருநகையை பதிலாய் கொடுத்தான்.
உடம்பை வளைத்து அமர்ந்தபடியே சோம்பல் முறித்த இன்பன் இயல்பாய், “அந்த ஹாஸ்பிடலே நமக்கு இப்படி வண்டியெல்லாம் அனுப்பி பிக் அப் செய்யுறது எல்லாம் நல்லா இருக்கு. நாம அலைஞ்சு திரிய வேண்டாம்.”
“எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் பீஸ். அதோட நாளைக்கே நான் இங்க ஆபீசில் ஜாயின் செய்யணும். அதற்குள் இங்க எல்லாம் முடித்திடனும்.” என்று இனியா பதில் கூற, இதயனின் முகம் கூம்பிவிட்டது. வெகுநாள் கழித்து தன்னுடனே இருப்பவள் இந்த பயண அலுப்பெல்லாம் ஓடியபின் ஒருநாளாவது உடன் இருப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவள் மறுதினமே செல்ல வேண்டும் என்று கூறிய செய்தி அவனுக்கு களிப்பானதாய் இல்லை.
“நீ கவலைப்படாம போய் ஜாயின் பண்ணு. நான் இன்னும் இரண்டு நாள் இங்கேயே தான் இருப்பேன்.”
“அந்த தைரியத்தில் தான் நானும் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். எல்லாம் செட் ஆகணும் தானே. அவங்களும் என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியல. ரிப்போர்ட்ஸ் இருந்தால் மெயில் செய்ய சொல்லி இருந்தாங்க, ரிப்போர்ட் எல்லாத்தையும் தான் லூசு மாதிரி அஜயிடம் கொடுத்து வச்சிருக்கோமே, அதனால் ரிப்போர்ட்ஸ் தொலைந்துடுச்சுன்னு சொல்லியிருக்கேன்.” என்று இனியாவும் பேச்சை வளர்க்க,
“ரிப்போர்ட் தொலைஞ்சிடுச்சுனு சொன்னால் நம்புற மாதிரியா இருக்கு?” என்று புருவம் உயர்த்தினான் இன்பன்.
“அஜயிடம் போய் அந்த ரிபோர்ட் வாங்குவதைவிட வேறு வினையே வேண்டாம். கொஞ்சம் பங்கமா திட்டுனாங்க, அதெல்லாம் பார்த்தால் முடியுமா? நாளைக்கு இவங்க தனியா டெஸ்ட் எதுவும் எடுத்துப் பார்ப்பாங்கனு நினைக்கிறன், அதற்கு தான் இதெல்லாம் சொல்றேன். நீங்க என்னனு எல்லாம் தெளிவா கேட்டு வச்சிக்கோங்க.” என்று இனியா குறிப்புகள் தரவும், மாணவன் போல அவள் சொல்லும் எல்லாவற்றுக்கும் இன்பன் தலையாட்டுவது இதயனுக்கு சிரிப்பை வரவழைத்தது.
முன்னர் இருந்ததற்கு மாறாக, இப்போதெல்லாம் ஏனோ இனியா பேச்சுக்கு தன் குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்காது அனைத்திற்கும் தலையாட்டுவது பிடித்திருந்தது. அவள் பேச்சே இறுதிப் பேச்சாய் இருப்பதில் கர்வம் கூட வந்து ஒட்டிக்கொள்கிறது. இவ்வளவும் தாண்டி அவள் கட்டளைகளுக்கு தானும் தலையாட்ட மனம் ஏங்கியது. அவள் அன்புக்கு அடிமையாக மனம் துடித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு இணையான அன்பை அவள் மீது வாரி இறைக்கும் நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.
“ஒன்றை கவனிச்சீங்களா? உங்க அண்ணன் இப்போதெல்லாம் டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வருவது போல எப்போதும் ‘ஈ’னு பல்லை காட்டிட்டு இருக்காரு.” இதயனின் சிந்தியை கலைக்கும் விதமாய் குறைபடித்தாள் இனியா.
[the_ad id=”6605″]
திரும்பி தன் அண்ணனின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவன் வதனமும் மலர்ந்துவிட, குறும்பு மேலெழும்பியவனாய், “அவனுக்கென்ன அவனுக்கு புடிச்ச பேஸ்ட் அவன்கூடவே ஒட்டிட்டு இருக்குறதால சிரிச்சிட்டே இருக்கான், அதற்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேண்டும்.” என்று போலியாய் சலித்துக்கொள்ள,
“ஹலோ என்ன? என்னை பார்த்தால் பேஸ்ட் மாதிரி இருக்கா?”
“இல்லையா பின்னே? நீ வந்தாலே பளிச்சினு ஆகிடுறான்.” என்று கேலி பேச, இதயனின் இதயம் முழுதும் கூச்சம் படர்ந்துவிட, அவன் முகத்தில் அது நன்றாகவே வெளிப்பட்டது.
“எனக்கு சிரிப்பே வரல.” என்று முகத்தை சுழித்தாள் இனியா.
சட்டென்று தீவிரமானவன், “உன் வீட்டில் இங்க வந்து சேர்ந்ததை சொல்லிட்டியா? உன்னை பற்றியே நினைச்சிட்டு இருப்பாங்க.” யுக்தாவின் அதட்டல் நன்றாகவே வேலை செய்தது இன்பனிடம்.
“இங்கே ரீச் ஆனதும் சொல்லிட்டேன்.” என்று அவள் முடித்துக்கொள்ள, அவர்கள் இறங்கும் இடமும் வந்தது.
தங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டவர்கள் அங்கிருந்த உதவியாளரின் வழிகாட்டுதலின்படி, வரவேற்பறையில் தங்களுடைய வரவை பதிவு செய்து காத்திருந்தனர். தோராயமாக பன்னிரெண்டு மணிநேர பயணத்திற்கு பின் மூவருமே களைத்திருக்க, அவர்களை மேலும் காக்க வைக்காமல் வந்த முதல்நிலை ஆயுர்வேத மருத்துவர் இதயனின் ரத்த அழுத்தம், அவனின் தொடுவுணர்வை மற்றும் நாடித்துடிப்பையும் குறித்துக் கொண்டு மேலும் சில விவரங்களை சேகரித்துவிட்டு உண்மை நிலையை மறைக்காமல்,
“உணவே மருந்து என்பதால் ஆயுர்வேதத்தில் எல்லா உபாதைக்கும் மருந்து உண்டு. இவருக்கு Quadriplegia, அதாவது கழுத்துக்கு கீழே எங்கேயும் உணர்வு இருக்காது. விபத்தால் முதுகு தண்டுவடத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஏற்கனவே ஆறு வருடம் கழித்து சிகிச்சைக்கு வந்திருப்பது ரொம்பவே காலதாமதம். இன்னும் கொஞ்சம் முன்னரே அழைத்து வந்திருந்தீங்கன்னா சீக்கிரமே குணப்படுத்தி இருக்கலாம். கோல்டன் பீரியட் முடிஞ்சிடுச்சு. ஸ்டில், நாம முயற்சி செய்து பார்ப்போம்.
நாங்க கொடுக்கும் மூலிகையும், எண்ணை மசாஜும் அவர் உடல் ஏற்றுக்கொண்டால் சீக்கிரமே சரி பண்ணிடலாம். ஒவ்வொருவருடைய சிகிச்சை காலமும் மாறுபடும். சோ இப்போதைக்கு எல்லாம் சரியாக எவ்வளவு மாதம் ஆகும்னு சொல்ல முடியாது. இன்றைக்கே இங்கே அட்மிட் ஆகிடுங்க. ரிசப்ஷனில் வேறு என்ன செய்யணும்னு சொல்லுவாங்க.” என்று அவர் முடிந்துகொள்ள, கலக்கத்துடனே அங்கிருந்து நகர்ந்தனர் மூவரும்.
“என்னை இவரும் உறுதியாக சொல்லல… நாம ரொம்ப தாமதமா வந்துட்டோமோ?” இதுவரை இல்லாத பயமும், குழப்பமும் இனியாவை வெகுவாய் ஆட்டிப் படைத்தது. அவள் தோய்ந்து போனால் இதயன் மட்டும் எப்படி இருப்பான், அவன் முகமும் சுருங்கிவிட்டது. அந்த தொய்வு இன்பனையும் பிடித்துக்கொள்ள அவனாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“சார் இங்கே வந்து இந்த டீடைல்ஸ் எழுதிக் கொடுங்க. ஒருவருக்கு ரூம் வாடகை, மூன்று வேலை இயற்கை உணவு, மூலிகை சூப்பு, மூலிகை தைலங்கள், தினம் இருமுறை எண்ணை மசாஜ், ஸ்பீச் தெரபி, உளவியவள் ஆலோசனை என்று நாள் ஒன்றுக்கு முப்பதாயிரம் பேஸ் ப்ரைஸ், இதில் வி.ஐ.பி, மகாராஜா ஸ்வீட் முறையே நாற்பதாயிரம், அறுபதாயிரம் என்று உயரகமும் உண்டு. அதைத் தவிர்த்து காம்ப்ளிமென்டரியாக மனம் இலகுவாக தினமும் மூலிகை தோட்டம், வாரம் இருமுறை யோகா, சுற்றியுள்ள கிராமங்களுக்கு சிறிய சுற்றுலா, ஜிம், ஸ்விமிங் பூல், லைபிரரி என்று எல்லாவற்றுக்கும் எங்கள் ஹெல்பர் கூட்டிட்டு போவாங்க. இது சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு மட்டும். உடன் துணைக்கு தங்கினால் அவர்களுக்கு தனி காஸ்ட். இதையெல்லாம் தவிர்த்து இவருக்குன்னு தனியாக சிறப்பு சிகிச்சை கொடுக்கும்படி வந்தால் அதற்கும் நீங்கள் பணம் கட்டனும். இப்போ ஒரு வாரத்திற்கானதை கட்டிடுங்க, மீதியை கொஞ்ச கொஞ்சமா கட்டலாம், அது எப்போன்னு நாங்களே சொல்லுவோம். இன்று காலை உணவிலிருந்தே கொடுக்க ஸ்டார்ட் பண்ணிடுவோம்.” என்று உதவியாளர் வந்து சொல்ல தலைசுற்றியது இன்பனுக்கு.
மனம் வேகமாக ஒருநாளுக்கு முப்பதாயிரம் என்றால் குறைந்தது ஒரு மாதத்திற்கு எவ்வளவு ஆகும் என்று கணக்கு போட, தூக்கி வாரிப்போட்டது இன்பனுக்கு. கையிருப்பாய் கடனடைத்தது போக அவனின் சேமிப்பும், வீட்டை அடமானம் வைத்துக் கிடைக்கும் தொகையையும் சேர்த்து கால் கோடி தேறும் என்றாலும் அது போதுமா என்ற சந்தேகம் எழ, மனது பதறியது. எப்படி இதை சமாளிக்கப் போகிறோம், திருமணச் செலவு வேறு இருக்கிறதே என்ற பீதியும் சேர்ந்து கொண்டது.
[the_ad id=”6605″]
“நீங்க ரொம்ப குழப்பிக்காதீங்க. நாம பார்த்துக்கலாம்.” மெல்லமாய் இன்பனுக்கு மட்டும் கேட்கும் குரலில் இன்பனை கலைத்தாள் இனியா.
முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டவன், “இல்லை, அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் சும்மா யோச்சிட்டு இருந்தேன்.”
“நீங்க எதை பற்றியும் இப்போ யோசிக்க வேண்டாம். முதலில் இங்கே இவரை சேர்க்க ஏற்பாடு செய்யுங்க. நான் இருக்கேன், யுக்தா இருக்கா, எதுனாலும் பார்த்துக்கலாம். இங்கே வந்தாச்சு இதையும் முயற்சி செய்யாம போகக்கூடாது.” அவன் மட்டும் இதில் தனியல்ல, நாங்களும் இருக்கிறோம் என்று அவள் சூசகமாய் சொல்ல, அவனுக்கு வேறு வழியின்றி போயிற்று. இரு பெண்களில் யாருடைய துணையுமின்றி இந்த விஷயம் சாத்தியப்படாது என்று புரிந்தது. நானே எல்லாம் செய்வேன் என்ற அவனின் பிடிவாதமும் கர்வமும் எப்போதோ ஓடிவிட்டது.
உடனே அங்கு இதயனின் விவரத்தை பதிந்து, ஒரு வாரத்திற்கான பணத்தையும் கட்டிவிட மளமளவென இதயனுக்கு அறை தயாரானது. அந்த மருத்துவமனையையே சிறிய கிராமம் போன்று இருக்க, வரவேற்பறை இருக்கும் இடத்தை தாண்டி சீரான இடைவெளியில் தனித்தனித் வீடுகள் போன்ற அமைப்பை கொண்டு இருந்தது அவ்விடம். தோட்டங்களுக்கு இடையில் சிறிது தூரம் நடந்த பின் இதயனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறையை அடைய, அதுவே சிறிய வீடு போன்ற அமைப்புடன் வெளியே பால்கனி போன்ற திண்ணை, அதில் இரு மரநாற்காலிகள், சிறிய டீ மேசை இருந்தது. அதைத்தாண்டி உள்ளே விசாலமான பெரிய அறை. நடுவில் மரக்கட்டில், பெரிய வார்டோப், சிறிய டீவி, சாப்பிட சிறிய உணவு மேசை ஒருபுறம், நாழிதள்கள் தாங்கிய ஸ்டடி மேசை என்று ஒருவர் தங்க அனைத்து வசதியும் இருந்தது. உதவியாளரை துணையாய் வைத்து இதயனை வசதியாய் கட்டிலில் படுக்க வைக்க, அவனின் உடமைகளுடன் அதன் இடத்தில் வைக்கப்பட்டது.
பயண அலுப்பு உடலை வறுத்த, இன்பன் குளித்துவிட்டு வருகிறேன் என்று குளியறை சென்றுவிட இனியா இதயனின் பையை பிரித்து அதில் இருந்த அவனது உடைகளை அதன் இடத்தில் அடுக்கினாள். இடையே வந்த உதவியாளர் இதயனுக்கு என்று பிரத்யேக மூலிகை டீயை கொடுத்துவிட்டு செல்ல, அதிலிருந்து வந்த வாடையே அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. கடினப்பட்டு தன் முகத்தை சீராய் வைத்தவள் இதயனுக்கு ஊட்டப்போக, தன்னை தூய்மையாக்கிவிட்டு வந்த இன்பன் அந்த பொறுப்பை தனதாக்கிக் கொண்டான்.
“நீ ப்ரெஷ் ஆகு, இனியா. அவனுக்கும் கசகசனு இருக்கும், அவனை சுத்தப்படுத்தி நானே டீ கொடுத்துறேன்.” என்று அவன் அந்த கோப்பையை வாங்கிக்கொள்ள, இனியா குளிக்கச் சென்றாள்.
“உன் பேஸ்ட் உனக்காக என்னலாம் செய்யுது பாரு.” இதயனை கேலி பேசியபடி அவனை சுத்தபடுத்த, அவனை முறைப்பதை விட வேறு எதுவும் செய்ய முடியவில்லை இதயனால்.
“உனக்கு மட்டும் முதலில் டீ வந்திருக்கு பாரேன். கலர் நல்லாயிருக்கு, ஆனால் இந்த வாசனை தான் கொஞ்சம் கொடூரமா இருக்கு.” என்றபடியே இதயனின் வாயில் அந்த டீயை சாய்க்க, ஒரே சொட்டு தான் உள்ளே விழுங்கியிருப்பான் இதயன், அதற்குப்பின் தன் இதழ்களை கெட்டியாக மூடிக்கொண்டான். அந்த டீயின் சுவை இதயனின் நாக்கை பதம்பார்த்திருக்க, அவன் முகம் அஷ்டகோணலாகியது.
“என்ன டேஸ்டும் கொடூரமா இருக்கா? ஆனால் வேற வழியில்லை ராசா, நீ இதை குடிச்சி தான் ஆகணும்.” என்றவன் இதயனின் தாடையை பிடித்து வலுக்கட்டாயமாக அவன் வாயில் ஊற்றப் போக இதயன் தன்பலம் கொண்டு அதரங்களை சேர்த்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
“டேய் குடிடா.” என்று அதட்ட, இதயன் தலையை மறுப்பாய் அசைத்து மறுபுறம் திருப்பிக் கொண்டான்.
“கொஞ்சம் குடிடா. உனக்காக தான் கொடுத்திருக்காங்க.” அதட்டல் கெஞ்சலாக மாறிவிட, இதயன் மட்டும் தன் நிலையில் எந்த மாற்றமும் காட்டவில்லை.
“இன்னுமா டீயை குடிக்க வைக்குறீங்க?” அதற்குள் குளித்து வந்திருந்தவள் இதயனிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை கண்டு அருகில் வந்தாள்.
“இது நல்லாயில்லை போல. குடிக்க மாட்டேங்குறான்.” இன்பன் அவளிடமே அந்த கோப்பையை கொடுத்து குறைபடிக்க,
[the_ad id=”6605″]
“உங்களுக்கு சாமர்த்தியம் பத்தல,” என்று தோளை குலுக்கிக்கொண்டவள், வெகுஇயல்பாய் இதயனின் தலையை தன் மடியில் தாங்கிக்கொள்ள, இதயனின் இதயம் நெஞ்சுக்கூட்டினுள் எகிறிக் குதித்தது. நா வறண்டு, உடலெங்கும் புது இரத்தம் பாய, விழிகள் அவளையே ஆசையோடும், ஆர்வமுடனும் படம்பிடிக்க, இனியா அந்த டீ முழுதையும் அவனை குடிக்க வைத்ததைக்கூட உணரவில்லை இதயன்.
“டேய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லை. நான் கொடுக்கும்போது மட்டும் வாயை இறுக்க மூடிகிட்ட. இப்போ மட்டும் ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி மடமடனு உள்ளே தள்ளிட்டு இருக்க.” இன்பனின் அங்கலாய்ப்பு கூட அவன் செவி அடையவில்லை. இடையில் அழைப்பு மணி ஒலிக்க,
“ப்ரேக்பாஸ்ட் சொல்லியிருந்தேன். அவங்க தான் கொண்டு வந்திருப்பாங்க.” என்று இன்பனை வெளியே விரட்டினாள் இனியா.