அதை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவன் ஆளுக்கொன்றாய் பிரித்துக் கொடுத்தான். இதயன் உணவையும் இனியாவிடமே கொடுத்துவிட்டு தன்னுடைய உணவை வாயில் வைத்த மறுநொடி, “சாப்பாடு என்ன இப்படி இருக்கு?” வழக்கமான உணவாய் இல்லாமல் பத்திய சாப்பாடாய் இருக்க, முகத்தை சுழித்தான் இன்பன்.
இயல்பாய் இதயன் தலையை இலகுவாக தன் மடியில் கிடத்தியிருந்தவள் கொஞ்ச கொஞ்சமாய் அவனுக்கு உணவை ஊட்டிக்கொண்டே, “பத்திய சாப்பாடு இப்படி தான் இருக்கும். இங்கே இருப்பவர்களுக்காக தனியாய் சமைத்தது. நாம் சாப்பிடுகிற மாதிரி உணவு வேண்டுமென்றால் ஆர்டர் செய்யணுமாம், இவர் இதுதான் சாப்பிட்டு ஆகணும் எனும்போது நமக்கு மட்டும் ஏன் வழக்கமான உணவுன்னு நான் தான் இதுவே போதும்னு சொல்லிட்டேன்.” என்று அவள் உரைக்க, விழிகளை மேலுயர்த்திய இதயன் பிரம்மிப்பாய் அவளை காண, அதற்கு மாறாய் அவளை முறைத்துக் கொண்டிருந்தான் இன்பன்.
“உன் காதலை காட்டுறதுக்கு, என் நாக்கை சாவடிச்சிட்ட.” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டான் அவன்.
“என்ன சொன்னீங்க?”
“சீக்கிரம் அவனுக்கு ஊட்டிவிட்டுட்டு நீயும் சாப்பிடு, உன் ஹாஸ்டல் போகணும். உனக்கு அங்கே செட்டில் ஆகி நாளைக்கு ஆபீஸ் போக வேண்டாமா?” என்று அவன் நினைவுப்படுத்தவும் இரு ஐ-ஸ்கொயரின் முகமும் சிறுத்தது.
இனியா இதை மறுத்து மாலை வரை தன்னுடனே இருப்பாளா என்ற ஏக்கத்தை தாங்கி நிமிர்ந்து இதயன் அவளைக் காண, அவள் மறுப்பேதும் கூறவில்லை. அவளுக்கே புரிந்திருந்தது, பகல் பொழுதிலே அங்கு சென்று தன் உடமைகளை வைத்துவிட்டு நாளை ஆபீஸ் செல்லும் வழி கேட்டறிந்துவிட்டு, சாப்பாட்டிற்கு எல்லாம் சொல்ல வேண்டுமென்பது. அதோடு அவள் உடலும் எப்போது என்னை கட்டிலில் தளர்த்தி தூங்கவிடுவாய் என்று இறைஞ்சிக் கொண்டிருந்தது. மனது அவனுடனே இருக்க விருப்பப்பட்டாலும் சூழ்நிலையும், உடலும் ஒத்துழைப்பு தராத காரணத்தால் மறுக்க முடியாது, இதயனிற்கு ஊட்டிவிட்டு பின் தானும் உண்டுமுடிக்க, அவளின் உடமைகளை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினான் இன்பன்.
[the_ad id=”6605″]
அவனுடனான ஏகாந்தம் களிப்புக்கு மாறாய் இம்முறை துக்கத்தை தர, அவனின் பிரிவை எண்ணி மனம் சோர்ந்தது. முன்னர் எப்படியோ இப்போது இதயனின் பார்வை அவளையே வட்டமிட்டுக் கொண்டிருக்க, அவளால் இந்த சூழலைவிட்டோ, உணர்வுகளை விடுத்தோ அவ்வளவு எளிதில் வெளியேற முடியவில்லை. ஊர்விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி நானே பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்து அழைத்து வந்துவிட்டு அவனை தனிமையில் விட்டுச் செல்வதை நினைத்தாலே நெஞ்சம் கனத்து, விழிநீர் பெருகியது. அதுவும் என்னை தனியே விட்டு போய்விடாதே என்ற வேண்டல் தாங்கி, அவன் கண்களில் அவளுக்காக வழியும் ஏக்கம் சிறுக்குழந்தையினது போலத் தெரிய, அவளால் ஒருஅடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவனுடனே இருந்திடலாமா என்ற எண்ணம் கூட எழ, மறுநொடியே பெற்றோரின் நிழல் அகக்கண்ணில் வந்து அந்த யோசனைக்கு தடாப் போட்டது. ஏற்கனவே அவர்களின் நம்பிக்கைக்கு அவள் செய்து கொண்டிருக்கும் சன்மானம் போதாதென்று இவனுடனே தங்கி அவர்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டுமா என்று மனம் வாதாட, பெற்றோரின் பெண்ணாக, ஒருவனின் காதலியாக என்று இருபுறமும் மத்தளமாய் அடிவாங்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் தவிப்பை உணர்ந்த இதயன் அவளுக்காக கடினப்பட்டு தன் உணர்வுகளை அடக்கி கண்சிமிட்டி அவளை அருகில் அழைத்தான். இனியா அமைதியாய் சென்று அவன் அருகில் அமர்ந்துகொண்டு, விழியின் ஓரத்தில் திரண்டிருந்த நீருடன் அவனைக் காண, அவன் மீண்டும் கண்சிமிட்டி தலையை இடப்புறமும் வலப்புறமும் மறுப்பாய் அசைத்தான். அவன் சொன்ன செய்தி புரிந்துகொண்டதன் அர்த்தமாய் திரண்டிருந்த ஒருதுளி மட்டும் கீழே வழிய, அவள் விழிகள் நாலாப் புறமும் சுழன்றது.
“இந்த இடம் நல்லாயிருக்குள்ள? சுற்றிலும் பச்சை பசேலென மரங்களும் அதன் வாடையும் நம்முடைய பிராணவாயுவொடு கலந்து நம் நாசியை அடியும்போது சுகமா இருக்கு, இந்த ரூமையும் பாருங்க, எவ்வளவு சுத்தமா, வழவழன்னு, மரச் சாமான்களோடு பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கு. நம்ம ஊர் மாதிரி இங்கே ஏ.சி எல்லாம் வேண்டாம், இங்கிருங்கும் பெரிய சன்னலை திறந்து வைத்தாலே போதும் சிலுசிலுன்னு காத்து அடிக்கும். தேவையில்லாத காற்று மாசும் இல்லை. நீங்க நிம்மதியா இருக்கலாம். இருக்கனும். தனியா இருக்கீங்கனு என்றைக்குமே நினைக்காதீங்க,” என்றவள் குரல் பிசிறடிக்க, பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தவள் கண்களில் வலி கூடிக்கொண்டே போனது.
“நீங்க எப்போதுமே, எந்த நொடியுமே தனியாக இல்லை, உங்ககூடவே தான் நான் இருக்கேன். உருவமா இல்லையென்றாலும் இப்போ இந்த நொடி என்னோட மூச்சுக்காற்றும் இந்த அறையில் உங்களுக்கு துணையா கலந்திருச்சு. உள்ளே நுழையும் நிறமற்ற, தோற்றமற்ற காற்றிலும் என்னோட பேச்சுக்கள் திசுவோட திசுவா பின்னி பிணைந்திருக்கு. அதேபோல இந்த அறையின் ஒவ்வொரு அங்குலத்திலும் என்னுடைய எண்ணங்களும் சேர்ந்து உங்களோடவே எப்போதும் இருக்கும். உங்க மனசுல என்னுடைய நினைவுகள் அழியாமல் இருக்குனு எனக்குத் தெரியும்.” என்றவள் மறந்தும் காதல், அன்பு, பாசம் என்ற வார்த்தையை வெளியே விடவில்லை. அவள் விருப்பப்பட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக அவனையும் காதல் என்ற வலைக்குள் இழுக்க தோன்றவில்லை அவளுக்கு.
“நான் அடிக்கடி உங்களை வந்து பார்த்துட்டு போறேன். தினமும் போனில் கூப்பிடுறேன், இங்கே உங்களை பார்த்துக் கொள்ளப் போகிற உதவியாளரிடம் என் நம்பர் கொடுத்திருக்கேன்,” என்றவள் தொண்டையை உணர்ச்சிகள் மலையென சேர்ந்து அடைக்க, அவன் முன் அழுது அவனை பலகீனப்படுத்த விரும்பாமல் அறையை விட்டு வெளியே ஓடிவிட்டாள். ஓடியவள் ஒருநொடி நின்று திரும்பிப் பார்த்திருந்தால் அவனை விட்டு சென்றிருக்க மாட்டாளோ என்னவோ! அவளை களவாடியவன் மனது அவளுக்காய் ஏங்க அதை வெளிபடுத்த வழியறியாது உதடுகள் உணர்ச்சி வேகத்தில் பிதுங்கி நடுங்க, நாசியும் துடிக்க, கண்களில் நீர் சுரந்து கன்னத்தின் ஓரத்தில் நிற்காமல் வழிந்தோடியது. ஆண்கள் அழக்கூடாது என்று யார் சொன்னது? இதயனால் அவனது துக்கத்தை கண்ணீரால் மட்டுமே வெளிபடுத்த முடிந்தது. இந்த பிரிவு ஏன் அவனை வெகுவாய் தாக்குகிறது என்ற சிந்தையெல்லாம் எழவில்லை. அவள் வேண்டும் என்ற ஒற்றை வேண்டலே பூதாகராமாய் வளர, கண்ணீரும் பெருகியது.
அவளின் இருப்பை வெறுத்தவனே இன்று அவளின் இருப்புக்காக கண்ணீர் சிந்தினான். யாருடைய பரிதாபமும் நட்பும் வேண்டாம் என்று வீம்பாய் இருந்தவன் அவளின் பாசத்தில் கரைந்து அவளுக்காய் ஏங்கிக் கொண்டிருந்தான். இப்படியெல்லாம் நடக்கும் என்று என்றும் சிந்தித்ததில்லை. இருண்ட வாழ்க்கை இருளாகவே முடிந்துவிடும் என்று எண்ணியிருக்க, ஒளியேற்ற வந்தவள் தற்காலிகமாய் மீண்டும் அவனை இருளிலே தள்ளுவது போல இருந்தது. அதனின் தாக்கம் இன்பன் சென்னை கிளம்பிச் சென்ற இரண்டொரு நாளில் தெரியவர, மருத்துவமனையிலிருந்து இனியாவுக்கு அவசரமாய் பறந்தது அழைப்பு. என்னவோ ஏதோவென்று பதறியடித்துக் கொண்டு அலுவலகம் முடிந்து அவனைக் காண வர,
[the_ad id=”6605″]
“தனியா இருக்கோம்னு தன்னையே வருத்திக்கிட்டு டிப்ரஸ் ஆகுறாரு. இது சிகிச்சையின் வேகத்தை குறைக்கும். நாங்களும் அவருக்கு முடிந்த அளவு கவுன்சலிங் கொடுக்குறோம், அவர் கூடவே ஒரு ஆள் எப்போதும் பேச்சு கொடுத்துகிட்டே தான் இருக்காரு, பட் எங்களைவிட அவருடைய குடும்பம் அவருடன் இருந்தால் கொஞ்சம் தெளிவாகிடுவாருனு நினைக்கிறோம்.” என்று சொல்ல, அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவளுக்கு சட்டென்று என்ன செய்வதென்று புரியவில்லை. யோசனையுடனே அவன் அறைக்கு செல்ல முதல் முறை எப்படி தெளிவற்று, வெறுமையாய் அவன் காட்சித் தந்தானோ அதேபோலவே விட்டத்தை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தான். அவனது வெறுமை மனதை பிராண்ட, அங்கு அவனுக்கென்று துணைக்கு இருந்தவரை அனுப்பிவிட்டு அறைக்கதவை தாழிட்டு வந்தவள் நேரே மெத்தையில் ஏறி அவன் அருகில் அவனைப்போல மல்லாக்க படுத்துக்கொண்டாள்.
திடுமென அவளது சுகந்தம் அருகில் வீச, புருவம் சுருங்க பார்வையை விட்டத்திலிருந்து பிரித்தவன் அந்த அறையின் வாயிலைப் பார்க்க,
“நான் இங்கே இருக்கேன்.” என்று கிசுகிசுத்து தன் இடக்கரத்தை அவன் கழுத்து சுற்றி போட்டு அவனின் தோளில் முகம் பதித்தாள்.
அவளின் வருகையை எதிர்பாராதவன், அவளின் வருகையைவிட செயலில் திக்குமுக்காடிப் போனான். அவளின் சிரம் அவன் கன்னத்தை உரச, உணர்வற்ற தன் இடப்பக்கம் அவள் சாய்ந்து படுத்திருப்பது சிந்தையில் பதிய, சிலிர்ப்பு ஓடியது அவனுள்.
“நான் இங்கே தான் இருக்கேன்னு சொல்லிட்டு போனபிறகு என்ன கவலை உங்களுக்கு? மறுபடியும் சிடுமூஞ்சியா மாறிட்டீங்க, எனக்கு சிரிச்சமூஞ்சியை தான் பிடிச்சிருக்கு.” என்றவள் அவனின் இறுகிய அதரங்களை தன் விரல்கள் கொண்டு விரித்துவிட, விழி விரிய அவளைக் கண்டான் இதயன்.
கண்களை சுருக்கி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து மீண்டவள், “ஆனால் என் பேச்சை கேட்காதவருக்கு ஏதாவது பனிஷ்மெண்ட் கொடுக்கணுமே. என்ன செய்யலாம்?” என்றபடி அவன் தாடையில் பதிந்திருந்த தன்விரல் கொண்டு அவன் இதழ்களை வருட, அவன் நிலையை கேட்கவும் வேண்டுமா. மூளை ஸ்தம்பித்துவிட விழிகள் ஆர்வமாய் அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று பார்த்தது.
“என்ன பட்டிக்காட்டான் பஞ்சுமிட்டாய் பார்க்கிற மாதிரி பார்க்குறீங்க? அவ்வளவு அவசரம்?” என்று அவள் விழி விரிக்க, அசட்டையாய் சிரித்து மறுபுறம் தலையை திருப்பிகொண்டான் இதயன். இமைகள் படபடவென அடித்துக்கொள்ள, நாணச் சிரிப்பு அவனைவிட்டு அகல மறுத்தது.
தாடையில் இருந்த விரல்களை மேலே உயர்த்தி அவன் கன்னத்தை அழுந்த பிடித்து தன்புறம் திருப்பியவள், மறுகையை மெத்தையில் ஊன்றி சற்று எம்பி அவன் விழியோடு தன் விழி கலந்து, “இதோ… இப்படி… இப்போ பார்க்குற மாதிரி நீங்க எழுந்து நின்று என்னை பார்க்கணும். என்கூட நிறைய பேசணும். என்கூட தினமும் நிறைய தூரம் நடக்கணும். என்கூடவே எப்போதும் இருக்கனும்.” வார்த்தைகளுக்கு வலித்துவிடுமோ என்று அவள் இலகுவாய் இடைவெளிவிட்டு பேச, அவன் தலை வேகமாய் ஆடியது.
அவனின் வேகத்தை கண்டு சிரித்துக்கொண்டவள் படிய வாரியிருந்த அவனின் சிகை கோத, தன்னால் முடிந்தவரை தலையை நிமிர்த்தி அண்ணார்ந்து பார்த்தவன் அவள் நாசியோடு நாசி உரசி ஓசையின்றி நகைத்தான். அவன் செயலில் அவளின் அனைத்து ரோமங்களும் சிலிர்த்து நிற்க, கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தவள் அப்படியே அவன் முகத்தில் தன் சிரம் பரப்பி அவனை அணைத்து படுத்துக்கொண்டாள். தினமும் மாலை இதுவே தொடர அவனின் சிகிச்சையிலும் முன்னேற்றம் இருந்தது. உடலில் உணர்வு இல்லாததால் வலிகள் இல்லை என்றாலும், சிரத்தில் உபயோகப்படுத்தும் எண்ணையும், ஸ்பீச் தெரபியும் வலி மிகுந்ததாகவே இருந்தது. அதை மறந்தும் இனியா இருக்கும் போது காட்டிக் கொள்ளவில்லை அவன். அவ்வப்போது அவன் பேச முற்படும்போது ஓசை எட்டிப்பார்த்தது. விரல்களில் மட்டும் உணர்வு இருப்பது போன்ற பிரம்மை அவனுக்கு ஆனால் அவன் மணிக்கட்டிலிருந்து உள்ளங்கை மற்றும் விரல்களுக்கு உணர்வு திரும்பிக் கொண்டிருந்தது. அவனின் சிகிச்சையை தவறாது கண்காணித்துக் கொண்டாள் இனியா. வாரவிடுமுறை நாட்களில் பகல் முழுதும் அவனுடம் இருந்துவிட்டு இரவு உறங்க மட்டுமே ஹோஸ்டல் சென்றுவந்துக் கொண்டிருந்தாள். அப்படியிருக்க ஒருநாள்,
[the_ad id=”6605″]
“அவர் உடம்பில் நச்சுத்தன்மை அதிகமா இருக்கு. அதனால் தான் இவ்வளவு நாள் குணமாகும் காலம் தள்ளி போயிருக்கு. முதுகு தண்டுவடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் கண்டிப்பாக இவரை குணப்படுத்திவிடலாம். ஆனால் இந்த நச்சு கொடியது, இது எப்படி இவருக்குள் வந்தது என்று தான் தெரியவில்லை. நீங்க அவருடைய பழைய மருந்து மாத்திரைகள், ரிப்போர்ட்ஸ் எது இருந்தாலும் கொடுங்க, எதனால் இது வந்ததுன்னு கண்டுபிடிப்போம். அதன் பிறகு சிகிச்சை இன்னும் சுலபமாகிடும்.” என்று இருவாரம் கழித்து மருத்துவர் சொன்ன போது இனியா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
அதை அப்படியே இன்பனுக்கு தெரிவித்துவிட்டு இதயனிடம் வந்தவள், வேகமாக கட்டிலில் ஏறி அவளை அணைத்துக் கொண்டாள்.
“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். டாக்டர் உங்களை சரி பண்ணிடலாம்னு சொன்னாரு.”
அவளின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக்கொள்ள, தன் முகத்திற்கு மேலே படர்ந்திருந்த இனியாவின் கன்னத்தில் இதழ் குவித்து ஓசையற்ற ஈரமுத்தம் ஒன்று பதிக்க, முதல் பரிமாற்றத்தில் சிலிர்த்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். இத்தனை வருடம் ஏங்கிய வரம் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் இதயன் அவளின் சுகந்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு சுகமாய் கண்களை மூடிக்கொள்ள, தன்னுடைய தேடலின் விடை கிடைத்துவிட்ட திருப்தியில் கண்களை மூடி அந்த ஏகாந்தத்தை அணுஅணுவாய் அனுபவித்தாள் இனியா.
*^*^*