தாழம்பூ வாசம் நீ…..
28
தாமுக்கு, மாப்பிள்ளை சொல்லிவிட்ட பிறகு.. எந்த தயக்கமும் இல்லை… ஆனால், ஒரு மகளின் தந்தை எனும்போது.. அவரும் என்ன செய்வார்.. அளவாக ஒரு இடம் வாங்கி போட்டார்.. சக்தியின் பெயரில்.
அவருக்கு, லிங்காவின் வீட்டிலிருந்து வந்த.. பணம். அதை பிள்ளைக்கு செய்த சீர் என்ற கணக்கில் வைத்திருந்தார். ஆனால், எதிர்பாரா விதமாக திரும்பி வரவும்.. அதை எப்படி சக்திக்கு கொடுக்காமல் விடுவது என எண்ணம்.. எனவே சக்திக்கு ஒரு பங்கு செய்தார். தந்தை மனம் எப்போதும்.. ஒரு பினாஸ்சியல் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளும் போல.
மற்றதை.. எல்லாம் லிங்கா சொல்லியபடியே செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் தாமு, தங்களின் வக்கீலின் உதவியுடன். லிங்காவும் தனக்கு தெரிந்த ஒரு சில NGOக்களை இதில் இணைத்திருந்தான், தன் பங்கும் இதில் இருக்க வேண்டும் என. எனவே பணிகள் சிறப்பாக தொடங்கியது.
[the_ad id=”6605″]
காவ்யா… எப்போதும் கல்யாண கனவுடன் இருந்தாள். சக்தி அடிக்கடி போன் செய்து பேசினாள். நாட்கள் விரைந்தது. சக்தி தன் அத்தையிடம் கேட்கவே செய்தாள் “எத்தனை நாள் லீவ் போடணும் அத்தை” என.
காமாட்சி… கல்யாணம் முடிந்துதான் லீவ் வேண்டும் சக்தி. நீங்கதான் அவ கூட ஈரோடு போக வர… மறுவீடு அழைக்க.. செய்ய.. இருக்கணும். அதனால் கல்யாணம் முடிஞ்சி லீவ் இருக்கிற மாதிரி பார்த்துக்கோ..” என்று விட்டார்.
கல்லூரியில் சக்தி என்றாலே லீவ் என்றாகிவிட்டது. இவளை பார்த்தாலே hod தகிக்க தொடங்கினார்.. மாற்ற முடியவில்லை அவரின் பார்வையை. சக்திக்கு அதில் சங்கடம்தான்.. என்ன செய் முடியும் முயன்று எல்லோரிடமும் நட்பு பாராட்டிக் கொண்டாள்.
லிங்காக்கு, சக்தி எப்போது வருவாள் என்றாகி விட்டது. தினமும் காலை மாலை அழைத்து பேசுகிறான்தான், ஆனால் அது போதவில்லை அவனுக்கு.
நடுவில் வந்த விடுமுறை தினத்தில் ‘அவளை பார்த்து வரலாமா’ என கூட எண்ணினான். எங்கே, தாமு அவனை பிடித்துக் கொண்டார்.. அந்த ட்ரஸ்ட் சம்பந்தமாக விசாரிக்க. எனவே அப்போதும் போக முடியவில்லை அவனால்.
“எப்ப டி வருவ…” என ஆயிரம் முறையேனும் கேட்டிருப்பான்.. கணவன். ஆனால், அவளுக்கே இன்னும் எப்படி விடுப்பு எடுப்பது என தெரியாததால்.. “சொல்றேங்க.. கேட்டுட்டு சொல்றேன்” என்றாள்.
இரண்டு வாரம் முடிந்திருந்தது.
புதன் கிழமை திருமணம். சக்தி, திங்கள் மாலையில் கிளம்பினாள். மருத்துவ அனுமது சீட்டு தன் தந்தை மூலம் வாங்கி கொடுத்துதான் கிளம்பினாள் வேறு வழி இருக்கவில்லை.
அவர்களின் டிரைவர் அண்ணா தான், வந்திருந்தார் அவளை அழைத்து செல்ல.. லிங்காவுக்கு நகர முடியவில்லை, வேலை அதிகம்.
மாலையில் கல்லூரி முடித்து கிளம்பினாள் சக்தி. தன் கணவனுக்கு அழைத்து சொல்லிவிட்டாள். “நான் கிளம்பிட்டேன் லிங்கு” என்றாள் உற்சாக குரலில்.
கணவனுக்கு ஆனந்தம். ரெண்டு வாரம்… பெரியத் தாக்கம் அவன் மனதில்.. ‘தான், சொன்னதை அவள் சரியாக புரிந்து கொண்டாளா.. நான் சரியாக இருக்கிறேனா.. அவளுக்கு.’ என மனதில் ஒரு தாக்கம் அவனுக்கு.
ஆனால், மனையாள் இப்போதுதான் இத்தனை நாட்களில், கொஞ்சம் பயமெல்லாம் தீர்ந்து, தன்னிடம் அவன் எல்லாம் பகிர்வான் என்று அவளின் மனம் சொல்லியிருக்க, அதில் கணவனை தூரத்திலிருந்து நெருங்கி பேச பழகி இருந்தாள். அதில் இப்படிதான்.. ‘லிங்கு… மாப்ள..’ என தன் தந்தையை போல் அழைப்பது கணவனை.. என அவளின் குறும்புகள் தொடங்கியிருந்தது.
கணவனும் அவளின் நெருக்கத்தில் ‘ஒருதரம் மாமா சொல்லுடி..’ என எத்தனையோ முறை.. கதறிகூட விட்டான்.. பாவம், மனையாள் மனமிறங்கவில்லை இன்னும். அதற்காக எல்லாம் லிங்கா சங்கடப்படவில்லை.. எப்போதும் போல.. அவளை ‘ப்யார்.. ப்ரியா.. சக்தி…’ என வகை வகையாக கொஞ்சி கொஞ்சி அழைப்பான். ஆக, இவர்களின் அவசர திருமணத்தில் இந்த பிரிவு ஒரு வகையில் நல்லதே போல.
தன்னவளை பற்றிய நினைவை ஒதுக்கி விட்டு வேலைகளில் கவனம் செலுத்தினான். இன்னும், லிங்காவால் கிளம்ப முடியவில்லை.. அடுத்த இரண்டு நாட்கள்.. தாங்கள் யாரும் கம்பெனிக்கு வர முடியாது என்பதால்.. முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான் லிங்கா.
சக்தி எட்டு மணிக்கு வீடு வந்திருந்தாள்.
மனையாள் சிட்டிக்கு வந்த உடன் தன்னை அழைப்பாள்.. நாம் இங்கிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும் என நினைத்து லிங்கா அலுவலகத்திலேயே காத்திருந்தான்.
சக்தி இங்கே.. வீட்டிற்கு வந்ததும் பேச்சு மும்முரத்தில் கணவனை மறந்திருந்தாள். அவர் வந்துவிடுவார் என எண்ணி சற்று கவன குறைவாக இருந்தாள் அவ்வளவே.
காவ்யா லதா சக்தி என மூவர் கூட்டணி பலமாக சேர்ந்து கொண்டது. சக்தி வந்ததும்.. காபி குடித்து அப்படியே அமர்ந்து கொண்டாள்.. இன்னும் உடை கூட மாற்றவில்லை. இந்த புடவை, இந்த டிசைன் ப்ளவுஸ்… காவ்யாக்கு என்ன மேக்கப் என பேசியே தீரவில்லை பெண்களுக்கு.
இப்போது வீட்டில் சமையலுக்கு கோபி என ஒருவரை பணி அமர்த்தியிருந்தனர். எனவே சமையல் வேலை இல்லை.. பிள்ளைகள் விளையாடியபடியே இருக்க ஒரு மணி நேரம் சென்றது.
லிங்கா, சக்தியின் போன் சுவிச் ஆப் என வரவும், வீடு வந்துவிட்டான்.
உள் நுழையவுமே.. வீடு.. சத்தமாக இருந்தது.. பிள்ளைகளின் சத்தத்தையும் தாண்டி பெண்களின் சத்தம் கேட்கவும், உள்ளே பார்த்தால் பெரிய மாநாடு நடந்து கொண்டிருந்தது, பெண்கள் மூவரிடமும்.
நடுநாயகமாக மனையாள் நின்றிருந்தாள். கோவமே வராத லிங்காக்கு கோவம் வந்தது.. ‘வந்தவ.. ஒரு வார்த்தை சொல்லாமல், இங்க நின்னு பேச்சை பாரு…’ என எண்ணியபடியே.. அமர்ந்தான் சோபாவில், அவர்களை நோட்டம் விட்டபடி.
ஆனால், பேச்சு மும்முரத்தில் முதலில் தெரியவில்லை யாருக்கும்.. கவனிக்கவில்லை. பின் லிங்காவை பார்த்தும்.. காவ்யா “ண்ணா.. எப்போ வந்த, அண்ணி ஊரிலிருந்து வராங்க… நீ அவங்களை பிக்கப் பண்ணலேன்னாலும் பரவாயில்ல.. இவ்வளோ லேட்டாவா வரது..” என சற்று கிண்டலாக கேட்க…
லிங்கா ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றான்.
காவ்யாவும் லதாவும், சக்தியை குறுகுறுவென பார்க்க.. சக்திக்கு தன் தவறு புரிந்தது.. என்ன செய்வது என தெரியாமல்.. நின்றாள் மனையாள்.
லிங்கா ஏதும் பேசாமல் சட்டென எழுந்தது பார்த்து லதாக்கே என்னவோ போல் இருந்தது, லிங்காக்கு கோவம் வரும் என்பது இப்போதுதான் தெரிந்தது. சக்தி மேலே செல்ல பார்க்க… அந்த நேரம்தான் மூர்த்தி வந்தார் “வாம்மா.. எப்போ வந்த.. படிப்பெல்லாம் பரவாயில்லையா” என சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
[the_ad id=”6605″]
அடுத்த இளா வந்தான் அவனும் பொதுவாக சில வார்த்தைகள் பேச.. நேரம் சென்றது. சக்தி மேலே செல்ல வில்லை.
பிள்ளைகளுக்கு லதா ஊட்ட தொடங்க.. பெரியவர்கள் உண்ண அமர்ந்தனர். காமாட்சி இயல்பாய் “காவ்யா, லிங்காவை சாப்பிட கூப்பிடு” என சொல்லி அமர்ந்தார்.
சக்தி பரிமாற தொடங்கினாள். இனி அவள் அந்த வீட்டின் மருமகள் அதன்பின்தான் மற்ற பொறுப்புகள் எல்லாம். எனவே முதலில் அதை செய்ய தொடங்கினாள். அது சட்டென வந்தது அவளுக்கு.
லிங்கா இறங்கி வந்தான்.. தன் மனையாளை ஏதோ போல் பார்த்தான்.. நேற்றுவரை.. வீடியோ காலில் பார்த்த முகமில்லை இப்போது.. கொஞ்சம் இறுகி இருந்தது.. ‘நீ என்கிட்டே சொல்லலை’ என்ற செய்தியை மனைவிக்கு சொல்லியது அந்த முகம்.
சக்திக்கு உடைந்தே போனது மனது.. ஒரு சின்ன செயல்.. எப்படி மறந்தேன்.. என மனம் அல்லாட தொடங்கியது. உண்ண தொடங்கினர்.. “சப்பாத்தி… இன்னும் ஒன்னு போட்டுக்கோங்க..” என அவளும் என்ன இறங்கி வந்து பேசினாலும் லிங்கா.. வெறும் சைகையில் மட்டுமே பதில் சொன்னான். மற்ற எல்லோரிடமும் நன்றாக பேசினான். சக்திக்கு என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருந்தாள்.
பொதுவாக பேசியபடியே உண்டனர் அனைவரும். பின் ஆண்கள் நாளைய நிகழ்வுகள் குறித்து பேச தொடங்க.. நேரம் சென்றது.
சக்தி உண்டு, சீக்கிரமே மேலே வந்தாள். தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள். குளித்து.. தன் உடைகளை அடுக்கி, கணவன் ஆசையாக எடுத்து வர சொல்லி இருந்த.. வயலினை பாதுகாப்பாக வைத்து.. என தன் வேலைகளை பார்த்தாள்.
இன்னும் லிங்கா வரவில்லை.. அசதியில் அப்படியே பெட்டில் படுத்தவள் உறங்கிவிட்டாள்.
லிங்கா அதன்பின் அரைமணி நேரம் சென்றுதான் வந்தான். மனையாள் மீது பார்வையை பதிக்க.. அவள் ஒருக்களித்து படுத்து… உடலை குறுக்கி.. உறங்கியிருந்தாள்.. அலைச்சல்.. அவளை எழுப்ப மனம் வரவில்லை அவனுக்கு. மேலும் கோவம் வேறு முன் நின்றதே.
சக்தியையே இரண்டு நிமிடம் பார்த்தான்.. ‘ஏன் வந்த உடன் என்னை தேடவில்லை… நீ’ என ஏதோ ஒரு ஆதங்கம் அவனுக்கு, மானசீகமாக அவளிடம் முறையிட்டான்.
[the_ad id=”6605″]
அப்படியே அந்த இரண்டு நிமிடம்… பத்து நிமிடமாக கூடியது. இன்னும் பார்வையை அவளிடமிருந்து எடுக்கவில்லை அவன்.
ஒரு சாதாரண நிகழ்வுதான்.. ஆனால், அதன் அழுத்தம் இன்னும் நின்றது கணவன் மனதில். எதிலோ ஏமாந்தவன் அல்லவா… அதன் தாக்கமாக கூட இருக்கலாம், அதில் போல இதிலும் தோற்று விடுவோமோ என பயமாக கூட இருக்கலாம், ஏதோ ஒன்று சொல்ல முடியாமல் ஒரு அழுத்தம் அது தன்னவள் மேல் கோவமாக எழுந்து நின்றது.
தன்னை மீட்டுக் கொண்டவன் மறுபக்கம் சென்று அமைதியாகப் படுத்துக் கொண்டான், கண்கள் மூட.. அவனின் ப்யாரே வந்தாள்… அதுவும், இதுவும் ஒன்றல்ல என சொல்லுவது போல அவனின் ப்ரியா வந்தாள் மூடிய கண்களுக்குள்.
‘ச்ச்ச… அவ்வளோதானா நீ’ என தன்னையே கேட்டுக் கொண்டான். மெல்ல மனது குழப்பத்தை விடுத்தது.. திரும்பி, அவள் புறம் படுத்துக் கொண்டான் “சக்தி கொடு…” என இப்போதும் அவனை விளையாட சொல்லியது அவளின் ஆழ்ந்த உறக்கம்.
சிரிப்பு வந்தது.. தன்னை நினைத்தே… ‘முத்தி போச்சு டா, லிங்கா…’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டான். மனைவியை பார்த்தபடியே கண்களை மூடிக் கொண்டான் கணவன். உறக்கமும் அவனை அரவணைத்துக் கொண்டது.