கள்வன் – 36
“எப்படி இருக்கீங்க மிஸ்டர். அஜய்? நாம பேசியே பலவருடம் ஆச்சே?” அஜயின் அறையில் அவனுக்கு எதிரே சுவாதீனமாய் அமர்ந்து அசிரத்தையாய் கேள்வி எழுப்பினான் இதயன்.
“இப்போ உனக்கு என்ன வேணும்?” அஜயின் முகம் இறுகியிருக்க அவன் என்ன நினைக்கிறான் என்று இதயனால் யூகிக்க முடியவில்லை.
“பரவாயில்லை. நேராவே விஷயத்துக்கு வந்துட்டியே.” பேச்சை வளர்க்கவென இதயன் தூண்டிலைப் போட, அதில் விழுவேனா என்று போக்கு காட்டினான் அஜய்.
“நீ தான் சுத்தி வளைத்து பேசிட்டு இருக்க இதயன். எனக்கு புரியுது, இப்போதைக்கு உன்னால் மருத்துவம் பார்க்க முடியாது. ஆனால் ஓசியில் சாப்பாடும் கிடைக்காதே, உனக்கு ஏதாவது வேலை வேண்டுமென்றால் சொல்லு நான் ரெகமன்ட் செய்றேன். ஏதாவது லேபில் சேர்த்து விடறேன், இல்லை இங்கேயே கூட லேபில் சேரலாம். இப்போதைக்கு என்னால அதை மட்டும் தான் செய்ய முடியும்.” பதவியும், அதிகாரமும், அகந்தையும் அவனின் குரலில் தொனிக்க, அலட்சியமாகவே பேசினான் அஜய்.
“புல்ஷிட். நீ எனக்கு வேலை கொடுத்து அதை செய்றதுக்கு நான் தண்டமாவே இருக்கலாம். ஆனாலும் ஒன்றை சொல்லியே ஆகணும், ஆறு வருடமா யாரிடமும் சிக்காமல் நல்லா லாபம் பார்த்துட்டு இருக்க.”
“என்ன மிஸ்டர். கார்டியாலாஜிஸ்ட் போட்டு வாங்கி அதை கேமராவில் பதிந்துகொண்டு எனக்கு எதிராக ஆதாரம் திரட்ட வந்திருக்கீங்களா?”
“ஸ்மார்ட்… நீ அந்தளவு முட்டாள் இல்லைன்னு தெரியும். இவ்வளவு வருடமா உன்னை பற்றிய உண்மை இம்மியளவும் கசியாமல் இருக்கும்போதே எவ்வளவு முன்னெச்சரிக்கையாக எல்லாவற்றையும் கையாள்கிறாய் என்ற அடிப்படை அறிவு கூடவா எனக்கு இருக்காதுன்னு நினைச்ச?”
“அப்புறம் எதற்கு இங்கே வந்து நேரத்தை வீணாக்கிட்டு இருக்க? ஏதோ அதிர்ஷ்டவசமா புழைச்சி பழையபடி வந்தோமா நம்ம வேலையை பார்ப்போமானு இல்லாமல் இங்கே எதற்கு வந்த?” இதயனின் வருகை துவக்கத்திலிருந்தே நல்லதாய் படவில்லை அஜய்க்கு.
“என் வேலையைத் தான் பார்க்க வந்திருக்கேன்.”
“எனக்குத் தெரியாமல் நீ எப்போதிலிருந்து இங்கே என் அறையில் வேலை செய்யுற?”
“பல உயிர்களை காப்பது மட்டும் மருத்துவனுடைய வேலை இல்லை. தன்னுடைய மருத்துவத் துறையில் அறநெறிக்கு மாறாக யார் உயிருடன் விளையாடினாலும் அதை தட்டிக் கேட்க வேண்டும். அதைத்தான் செய்ய வந்திருக்கேன்.” என்று நெஞ்சை நிமிர்த்தி இதயன் மொழிய, நேர்மைக்கே உரித்தான திமிரும், கர்வமும் அவனிடத்தில் வெளிப்பட்டது.
“தட்டிக்கேட்க வந்தவன் இப்படியா சாவுகாசமா பேசிட்டு இருப்பான்? எனக்கு எதிராக ஆதாரம் இருக்குனு போனில் வீரவசனம் எல்லாம் பேசுனீங்க? அதை எடுத்துட்டு போலீசிடம் போக வேண்டியது தானே?” சாமர்த்தியப் பேச்சில் ஆதாரம் பற்றிய தகவல்களை போட்டுவாங்க முற்பட்டான் அஜய். மெய்யாகவே அவனைப் பற்றிய ஆதாரம் இதயனிடம் ஏதும் இருக்கிறதா என்று கேள்வி பலநாட்களாகவே அவனுள் பூதாகரமாக இருக்க, அதை கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் இறங்கித் தேட, இதயனிடம் எதுவும் இல்லை என்ற விடையே கிடைத்தது. ஆனால் வெளியிலிருந்து யாரையும் வைத்து இதயன் காய் நகர்த்துகிறானா என்பதை கண்டறியவே முடியவில்லை. அதில் தான் அவனது சந்தேகம் பெருகியது.
[the_ad id=”6605″]
“என்னிடம் ஆதாரம் இல்லைனு கண்டுபிடுச்சிட்டீங்க போலிருக்கு. நான் ஒரு சாமானியன் மிஸ்டர். அஜய். என்னால் உங்களைப் போன்ற பெரிய இடத்தில் உள்ளவர்களிடம் மோத முடியாது தான், ஆனால் ஆளுங்கட்சி என்று ஒன்று இருந்தால் எதிர்கட்சியும் இருக்கும் என்பதை மறந்துட்டீங்களே அஜய். நான் எதுவுமே செய்யல, உங்களுடைய எதிராளியிடம் என்னோட சந்தேகத்தை தான் கொளுத்திப் போட்டேன் அவங்க அடிமட்டம் வரை சென்று ஆதாரத்தை புடிச்சிட்டாங்க. அனேகமா இன்னும் ஒரு வாரத்திற்குள் உங்களுடைய ஆட்டத்திற்கு முடிவு கட்டிடுவாங்க.” என்று கேலி இழையோட இதயன் அழுத்தமாகவே பேச, அஜயின் முகத்தில் பதட்டம் வந்தது. தந்தை அரசியலில் இருக்க, ஒன்றா இரண்டா எதிராளிகள் அதில் எந்த எதிராளியிடம் இவன் சென்றிருப்பான் என்று யூகிக்கவும் முடியவில்லை.
“லேசா பயம் வருதா?” இதயன் குரலில் கடுமை கூடியிருந்தது.
பதட்டத்தை எதிராளியிடம் காட்டுவதா? அது தன்னை பலகீனமானவனாக காட்டும் என்பதை நன்கு உணர்ந்திருந்தவன், “இதிலிருந்து எப்படி வெளிவரனும்னு எனக்குத் தெரியும் மிஸ்டர். இதயன். இது வெறும் உயிர்களை காக்கும் சேவை இல்லம் இல்லை இதுவொரு அரசியல். அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. எங்கே யாரை எப்படி தட்டுனா காரியம் நடக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.”
அஜயின் எடுத்தெறிந்து பேசும் பேச்சுக்கள் இதயனுக்கு கோபத்தை வரவழைக்க, மேசையில் டமாரென ஒரு தட்டு தட்ட எழுந்த வேகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு கைமுஷ்டிகளை இறுக்கியவன், “இவ்வளவு வசதி இருக்கும் போது உயிர் காக்கும் இந்த தொழிலில் ஏன்டா தில்லாலங்கடி பண்றீங்க? உங்களுக்கு பணத்துக்கா பஞ்சம்? எதற்கு அப்பாவி மக்களின் உயிரில் விளையாடுறீங்க? நீ இப்போ உட்கார்ந்திருக்கியே இந்த சீட்டில் வேறொரு உண்மையான மருத்துவன் அமர வேண்டியது.”
“உங்களுக்கு வேணும்னா இந்த டாக்டருக்கு படித்து சேவை செய்வது எல்லாம் வாழ்நாள் கனவா இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இது கெளரவம்.” குரலிலுல் முகத்திலும் கடுமை கூடியிருக்க, இதயனைப் போல உணர்ச்சிவசப்படாமல் அழுத்தமாய் பதில் பேசினான் அஜய்.
“இதிலென்ன கெளரவம்னு என்று எனக்கு புரியல? மருத்துவத்துக்கு படிப்பவர்கள் எல்லாருமே நம்மால முடிந்த உயிரைக் காக்கனும்னு நினைத்து தான் படிக்குறாங்க. ஆனால் நீ பிராடு செய்து பரிட்சையே எழுதாமல் பட்டம் வாங்கி இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சட்டமாய் உறுத்தலின்றி அமர்ந்திருக்க.” இதயனுக்கு அஜயின் போலித்தனத்தை எண்ணி கொதித்துக்கொண்டு வந்தது.
“என்னது நான் பட்டம் வாங்குனேனா? நீ பார்த்தியா அதை?” கொஞ்சமும் அலட்டலின்றி, உறுத்தலின்றி மொழிந்தவனுள் எள்ளல் கூடிவிட, பார்வையில் கூர்மையை தீட்டி, “இன்னொன்னு சொல்லவா இவ்வளவு பெரிய அறையில் உறுத்தலின்றி உட்காரத்தான் பொது மருத்துவம் பார்ப்பதையே விட்டுட்டேன்.” என்றான் ஏதோ தொண்டு செய்பவன் போல…
“அதை உறுத்தல்னு சொல்லி குற்றவுணர்ச்சியை கேவலப்படுத்தாதே அஜய். நீ அவ்வளவு யோக்கியனா இருந்திருந்தால் இந்த தொழிலை விட்டே போயிருப்ப. ஆனால் எங்கே என்னைப் போல எல்லோருக்கும் தவறான மருந்து கொடுத்து மாட்டிப்போமான்னு பயந்து உன் பேச்சால் அனைவரையும் வசியப்படுத்தி வச்சிருக்க.”
“தொழில்னு நீயே சொல்லிட்டியே. தொழில் என்று வந்துவிட்டால் காசும் கவுரமும் தான் பெருசு. நான் படித்து பெரியாளாகி இந்த ஹாஸ்பிடலை நிர்வகிப்பேனு என் அப்பா ஆசை ஆசையா கட்டுனாரு. ஆனால் இந்த மருத்துவம் இருக்கே… படிப்பது ரொம்பவே சிரமம். எப்படித்தான் இதில் கோல்டு மெடல் எல்லாம் வாங்குகிறார்களோ… என்னால ஒரு கட்டத்திற்கு மேல் முடியல. ஊரு முழுதும் என் பையனுக்காக மருத்துவமனை கட்டுறேன், அவன் டாக்டர்னு என் அப்பா தம்பட்டம் அடிச்சிட்டாரு. குடும்ப மானத்தை காக்கணுமே பார்த்தேன், காசு இருந்தது கொடுத்து பட்டம் வாங்கிட்டேன். ஆனால் வாங்கின பிறகு என்ன செய்வது ஏது செய்வதுன்னு புரியல… உனக்கும் சந்தேகம் வந்துச்சு… என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போது சரியா அந்நேரம் உனக்கும் விபத்து ஆகிடுச்சு… கெட்ட நேரத்திலும் எனக்கு நல்லநேரம்… உனக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது சீப் டாக்டருக்கு ஜஸ்ட் உதவி தான் பண்ணேன். பட் சறுக்கிடுச்சு… குணமாக வாய்ப்பிருந்தும் என்னோட பயிற்சியின்மையால் நீ படுக்கைக்கு போயிட்ட. ஆனால் என் மனசு கேட்கல, நியாயம் தர்மம் பார்த்து என் கையால் யாருக்கும் மருந்துகள் பரிந்துரைப்பதையே நிறுத்திட்டு ஆலோசகராக மாறிட்டேன். சிம்பிள். இப்போ என்ன செய்வதா உத்தேசம்?” இனி மறைத்து என்ன பயன்? எதிராலியால் என்ன செய்ய முடியுமோ செய்யட்டும் நம்மால் ஆனதை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவில் அஜய் தன் திருட்டுத்தனத்தை வாக்குமூலமாக சொல்ல, இவ்வளவு எளிதாக அனைத்தையும் சொல்லிவிட்டானே என்று தான் பார்த்தான் இதயன்.
“என்ன பயம் இல்லாமல் இவன் எல்லாத்தையும் நம்மிடம் சொல்றானேன்னு பார்க்குறீங்களா மிஸ்டர். இதயன்? நீ பேச துவங்கியதுமே கூடிய சீக்கிரமே என்னைத் தேடி நீ வருவேன்னு எனக்கு தெரியும் . தெரிந்தும் நீ எளிதா ஆதாரம் திரட்டுற மாதிரிய நான் நடந்துப்பேனு நினைக்குற? இட்ஸ் ப்ரீபிளான்ட். ஸ்பை டிடக்டர்ஸ் முதற்கொண்டு எல்லாவற்றையும் மாட்டியாச்சு.” என்று கைவிரித்தவன் கர்வமாய் நகைக்க, இவனுக்கு இன்னுமே தவறு செய்கிறோம் என்ற உறுத்தல் வரவில்லையே என்று தான் தோன்றியது இதயனுக்கு.
“நான் ஏற்கனவே சொன்னது தான். எனக்கு உயிரை காக்கத் தான் தெரியுமே ஒழிய, உன்னை மாதிரி தந்திரமா யோசித்து ஹீரோ மாதிரி என்னால் உன்னை கம்பி எண்ண வைக்க முடியாது தான்…” என்று இதயன் வேண்டுமென்றே தன்னை தாழ்த்தி அஜயை உயர்த்திப் பேசுவதுபோல பேச, அஜய் இலகுவாகி அமர்ந்திருந்தான்.
“ஆனால் சமயோசிதமா யோசிக்க முடியும். புரியலையா? இவ்வளவு திருகுதாளம் செய்தியே ஒரு சின்ன விஷயத்தில் கோட்டை விட்டுட்ட அஜய்,” அர்த்தமாய் சிரித்து நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த இதயன் எள்ளல் சிரிப்பை உதிர்த்து,
“இந்தியாவில் மருத்துவராக ப்ராக்டிஸ் செய்ய வேண்டுமென்றால் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டுமே. நீ செஞ்சியா?”
அஜயின் முகம் பதட்டத்தை தத்தெடுக்க அதை மறைக்க அரும்பாடுபட வேண்டியதாயிருந்தது, “அதுகூடவா தெரியாதுனு நினைக்குற?”
“இளநிலை பொது மருத்துவத்துக்கு தான் நீ பணம் கொடுத்து தேர்வில் வென்று பட்டம் வாங்கியிருக்க. முதுநிலையில் நீங்க பரீட்சையே எழுதலையே மிஸ்டர். அஜய். பின்னர் எப்படி பதிவு செய்வீங்க? அப்படியே ஏதாவது செய்து பதிந்திருந்தாலும் என்றைக்காவது ஒருநாள் மாட்டித்தான் ஆகணும். அந்த ஒருநாள் தான் இன்றைக்கு.” என்றவன் நாற்காலியில் கையை ஊன்றி மெல்ல எழுந்து,
“கடைசியா ஒரு விஷயம் இனியாவை சாதாரணமா உன்னோட வாழ்க்கையில் இழுக்கப் பார்த்தியா இல்லை அதிலும் ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கியா?” என்றவன் கண்களில் பழைய அனல் மீண்டும் ஏறியிருந்தது.
தான் எதிர்பாராத நிகழ்வு நிகழப் போகிறது என்ற நிதர்சனம் புரிய இறுகிப் போய் அமர்ந்திருந்தான் அஜய். கைகள் வேகமாக யாருக்கோ அலைபேசியில் அழைக்க, அதற்குள் நாலைந்து பேர் உள்ளே நுழைந்தனர்.
[the_ad id=”6605″]
“சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு விசாரணைக்கு வாங்க மிஸ்டர். அஜய். உங்கள் மீது ஆள்மாறாட்ட வழக்கும், படிப்பை முடித்ததாக சொல்லி பட்டம் வாங்கி அனைவரையும் ஏமாற்றி, போலி மருத்துவம் பார்த்து சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மோசடி சட்டத்திலும் புகார் கொடுத்திருக்கிறார் மிஸ்டர். இதயன். அதோட அவருடைய சிகிச்சையில் கோளாறு பண்ணியிருக்கீங்க. இனியும் நீங்க பொதுவில் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. நீங்களே வாக்குமூலம் கொடுத்துட்டீங்க.” என்று அவ்வறையின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மைக்கை காட்டி அவனைக் கைது செய்ய, இதயனை முறைத்தான் அஜய். இதயனோ இதெல்லாம் எதிர்பார்த்துதான் ஒரு வாரம் முன்னதாகவே தன்னுடைய நிலையை விளக்கி கேரளாவில் இருந்தபடியே சென்னையில் அஜய் மீது வழக்கு பதிந்திருந்தான். அனைத்துவித பியர் பிரஸரையும் தாண்டி இன்று தான் ஆதாரத்தோடு கைது செய்ய கட்டளை வந்திருக்கிறது மேலிடத்திலிருந்து…
“என்னோட சகலத்தையும் தெரிஞ்சிக்கிட்டியே இதில் மட்டும் என்ன ரகசியம் இருக்கு… என்னோட துணையும் டாக்டராகவோ இல்லை அது சம்மந்தமான துறையிலோ இருந்தால் என்னோட குட்டு வெளிப்பட்டுவிடுமே…சோ செலக்டட் இனியா, பட் ஷீ எஸ்கேப்ட். இப்போ வேண்டுமென்றால் என்னை காட்டிக் கொடுத்து நீ ஹீரோ ஆகியிருக்கலாம் ஆனால் இதிலிருந்து எப்படி வரணும்னு எனக்குத் தெரியும்.” என்றவன் அகம்பாவம் கொஞ்சமும் குறையாமல் அனல் வீசிவிட்டு வெளியே சென்றுவிட, ஓரமாக நின்றுகொண்டியுர்ந்த இன்பன் பதட்டத்துடன் இதயனை நெருங்கினான் .
“என்னடா இப்படி பேசிட்டு போறான்? அவன் வெளியே வந்து உன்னை எதுவும் செஞ்சிட்டா என்ன பண்றது?”
“எனக்கும் அவனுக்கும் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை. பொதுமக்களின் உயிரோடு விளையாட நினைத்தான், நான் அதை சுட்டிக்காட்டினேன் அவ்வளவு தான். இதற்கு வஞ்சம் வைத்து என்னை பழி வாங்கணும்னு நினைத்தால் அதை அப்போ பார்த்துக்கலாம். நமக்குன்னு நாலு பேர் இல்லாமலா போயிடுவாங்க. அது நடக்கும் போது பார்த்துக்குவோம்.”
இன்பன் கேட்ட அதே கேள்வி இனியா மனதிலும் ஓட அந்நேரம் அவள் வாய் திறந்து அக்கேள்வியை எழுப்பவில்லை. அனைத்தும் முடிந்து நேரில் கொடுக்க வேண்டிய கம்பளைண்ட் மற்றும் அதற்கான ஆதாரம், அவனது ரிப்போர்ட்ஸ் என அனைத்தையும் போலீசிடம் ஒப்படைத்துவிட்டு மறுநாளே வீடுவந்து சேர்ந்து நடந்தவற்றை சொல்லிக் கொண்டிருந்தான் இதயன்.
அவன் கடத்திய செய்தியில் மிகவும் அதிர்ந்து போனது ரமேஷ் தான். மகளுக்கான தன்னுடைய தேர்வு இப்படி பொய்த்து, பொய்யாகவே இருக்கும் என்று நம்பவே சிரமமாக இருக்க, இனியா மருத்துவத் துறையில் இல்லாதிருப்பதால் தான் அவளை தேர்ந்தெடுத்தேன் என்று அஜய் கூறியது இடியாய் இறங்கியது. இவ்வளவு சுயநலத்தோடு, அனைத்தையும் தந்திரமாக செய்யும் போலியே உருவாகிய அவனுடன் தன் மகள் மகிழ்ச்சியாக வாழ்வாள் என்று நினைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியும் சேர்ந்துகொண்டது. இதயனின் நிலைக்கு காரணமாகிய போலியை தான் தேர்ந்தெடுத்திருக்க, அந்த போலியால் பாதிக்கப்பட்டவனை மகள் தேர்ந்தெடுத்திருப்பது விந்தையிலும் விந்தை. தான் அவசரப்பட்டு அஜயுடன் நிச்சயம் செய்திருந்தால் அனைத்தும் நாசமாகியிருக்கும். இப்போதோ தன் குடும்பம் மொத்தமும் அவசரப்பட்டு இனியாவின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறார்கள் என்று தோன்றும் போதே இதயனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. குறை என்று சொன்னதும் இப்போது குறையாய் தெரியவில்லை. குறையை நிறையாய் மாற்றிக்காட்டிய மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும், இல்லையென்றாலும் அவள் மகிழ்ச்சியாகிக் கொள்வாள் என்ற நம்பிக்கை பிறந்துவிட, அனைவருடனும் ஒன்றிவிட வழியறியாது முழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“அவன் பேச்செல்லாம் விஷம், அதைப்போய் வேதவாக்கு போல கேட்டுட்டு இருந்திருக்கிறோமே.” மகனின் அருகே அமர்ந்து அவன் சொன்ன செய்தியை செமிக்கமுடியாமல் அமர்ந்திருந்தார் சிவகாமி.
“பார்க்க நல்லவன் மாதிரி இருந்துட்டு எப்படி ஏமாற்றி இருக்கிறான் பாருங்களேன்.” யுக்தாவும் தன் அதிர்வை வெளிப்படுத்த, அதை ஆமோதித்த இதயன்,
“தகுதி உள்ளவர்களின் வாய்ப்பை பறித்து தகுதியற்ற பணம் படைத்தோர் இத்துறைக்கு வந்தால் இப்படித்தான் ஆகும். மற்ற துறையில் குறுக்கு வழியில் ஜெயித்தால் என்றோ ஒரு நாள் அவன் சறுக்குவது நிச்சயம். அதுவே உயர் காக்கும் உத்யோகத்தில்… மற்றவர் உயிர் அல்லவா பலியாகிறது. கெட்டதிலும் நல்லதாய் எனக்கு தவறான மருந்து கொடுத்ததில் சுதாரித்து பொது மருத்துவம் பார்ப்பதையே நிறுத்திவிட்டான். இல்லையென்றால் எத்தனை பேருடைய உயிரை குடித்திருப்பானோ.”
“இந்த பிராடுத்தனத்தை கேட்கவே பயமாக இருக்கு மாம்ஸ். நாமெல்லாம் டாக்டரை இன்னோரு கடவுளாக பாவித்து அவரின் பேச்சை அப்படியே நம்பி நம் உயிரையே அவர்களிடம் ஒப்படைக்கிறோம். ஆனால் அஜய் போன்றோர்… இந்த சமூகத்திற்கே ஆபத்து… எப்படி மாம்ஸ் அவன் மேல உங்களுக்கு சந்தேகம் வந்தது? அவன் எதை உங்களுக்கு கொடுத்து இத்தனை வருடம் முடக்கிட்டான்? அதெல்லாம் வேணும்னே செய்தானா? அப்போது உங்களுக்கு அவன் கொடுத்த சிகிச்சையும் பொய்யா? இப்போ எப்படி மாட்டுனான்?” இனியன் தனக்கே உரித்தான ஆர்வத்தில் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.
“நாங்க ரெண்டு பேருமே ஒரே பேட்ச் தான் இனியன் ஆனால் வேற வேற காலேஜ். எம்.டி முடித்ததும் நிறைய இடத்தில் முயற்சி செய்து கடைசியில் ஏ. ஆர் ஹாஸ்பிடலில் சேர்ந்தேன். அந்த மருத்துவமனை அவனுடையது என்பதால் அவனுக்கு எக்ஸ்ட்ரா பவர் உண்டு. சுலபமா நாங்களே அவனை நெருங்கிட முடியாது. அவனும் ஜுனியரா தான் இருந்தான். எதேர்ச்சியா ஒருநாள் அவன் லீவ் எடுத்த போது அவனிடம் ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு இருந்த பேஷண்ட் என்னிடம் வந்தாங்க. அவன் பரிந்துரைத்த மருந்துகளை பார்த்ததுமே எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. தவறான மருந்தை சஜஸ்ட் செய்திருந்தான். அதிலிருந்து தான் நான் அவனை கண்காணிக்க ஆரம்பித்தேன். அடுத்த மாதமே அந்த பேஷண்ட் அவனிடம் போய் நான் மாற்றிக் கொடுத்த மாத்திரைகளை பற்றி சொல்லியிருப்பாங்க போலிருக்கு, அவன் உஷார் ஆகிட்டான். அந்த வாரத்திலேயே விபத்திலும் சிக்கிட்டேன். அப்புறம் இப்போ அவனைப் பற்றிய ஆதாரத்தை திரட்டும் போதுதான் அவன் படிக்கவே இல்லைனு தெரிந்தது. அதோட இங்கே மருத்துவம் பார்க்கணும்னா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யணும். அவங்க ஒவ்வொருவருக்கும் பதிவு எண் கொடுப்பாங்க. அதைக் கட்டாயம் மருத்துவருடைய ப்ரெஷகிரிப்ஷனில் மென்ஷன் செய்யணும், லெட்டர் பேடிலும் செய்யணும். அந்த நம்பரை இந்திய மருத்துவ கவுன்சில் ரெகார்டில் தேடினால் அந்தந்த மருத்துவருடைய எல்லா தகுதியும் நாம தெரிஞ்சிக்கலாம். இதில் தான் அவன் கோட்டை விட்டுட்டான். நிறைய பேருக்கு இந்த ரெஜிஸ்டர் எண் பற்றி தெரியாததால் அவன் லெட்டர் பேடில் இருந்த எண்ணை செக் செய்து பார்க்கல.”
“அவன் ஒன்னும் சிறிய மருத்துவமனையில் வேலை செய்யலையே வெளியில் தெரியாது இருக்க? அவ்வளவு பெரிய மருத்துவமனையில் இருப்பவன் மீது ஒருவருக்கு கூடவா சந்தேகம் வரல?” இனியனே நம்பாது மீண்டும் கேட்க,
“அதுதான் சொன்னேனே, எனக்கு விஷயம் தெரிய வாய்ப்பிருக்குனு அவனுக்கு புரிந்ததும் சீப் டாக்டரை தன் பக்கம் இழுத்துட்டான். அதோடு அவனுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு இல்லை, அவன் ஒரு அரைகுறை. என் விபத்துக்கு பின் பொது மருத்துவத்தையே சுதாரிப்பா நிறுத்திட்டான் சோ யாருக்கும் சந்தேகம் வரல.”
“நல்லா திட்டம்போட்டு எல்லோரையும் ஏமாற்றி இருக்கான்.”
[the_ad id=”6605″]
“உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தானா இல்லையா? அதை சொல்லுடா,” இந்தமுறை இன்பன் முன்வர, ரமேஷின் பார்வை கூர்மையாய் அவனை நோக்கியது.
“கொடுத்தான். ஆனால் அதெல்லாம் வீரியம் குறைந்த மருந்து, மாத்திரைகள். அதெல்லாம் வைத்து பராலிஸிஸ் போன்ற தீவிர நோயை குணப்படுத்த முடியாது.”
“தனியாரில் நல்லா பார்ப்பாங்கனு தானே நாம் அவங்களைத் தேடிப் போறோம், அவங்களே இப்படி இருந்தால்?” சற்று முன்னேறிய நடுத்தர வர்க்கத்தின் எண்ணமாய் கீதாவின் வார்த்தைகள் பிரதிபலித்தன.
“தனியார் என்றாலே உசத்தி தான்னு நாம் அங்கே போனால் அதிலும் அட்டைப்பூச்சிகள் போன்று தேவையற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்… அதே போல்தான் அரசு மருத்துவமனையிலும்… நல்ல தரம் வாய்ந்தவர்களும் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். எங்கே இருப்பினும் நாம் ஒருமுறைக்கு நான்கு முறை விசாரித்துக்கணும் அத்தை. அஜய் மாதிரி தகுதியற்ற கிருமிகள் கரும்புள்ளியாக நம்முடனே இருந்துட்டு தான் இருப்பாங்க. நாம தான் அவங்களை அடையாளம் கண்டு களையெடுக்கணும். எவரையும் அவர் இருக்கும் இடத்தை வைத்து எடைபோட்டுவிட முடியாது. தெருவில் குமியும் குப்பைகளைவிட மனிதர்கள் மனதில் குமிந்திருக்கும் குப்பை பெருசு.”
“என்னவோ மாப்பிள்ளை உங்க விஷயத்தில் அடுத்தவர்களுடைய அலட்சியத்தால் நீங்க ஆறு வருடத்தை இழந்துட்டீங்க… இனியாவது நீங்க ரெண்டு பேரும் பிரச்சனை இல்லாமல் வாழனும்.” என்றுவிட்டு கீதா நகர்ந்துவிட, இனியாவைத் தான் பார்த்தான் இதயன்.
அவளோ அப்படி ஒருவன் அங்கிருக்கிறான் என்பதையே அறியாதது போல் அவளுடைய அலைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள். வந்ததிலிருந்து வாயை திறக்காது அவள் அமைதியாக இருப்பது நினைவு வர, குழப்பத்துடன் அவளை நோக்கிய இதயன் அதை கேட்டும்விட,
“இனியா ஏன் அமைதியா இருக்க?” இப்போது தான் அது உனக்கு தெரிகிறதா என்ற பார்வையை அவனுக்கு பதிலாய் வீசி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள் இனியா.
“மாம்ஸ் உங்க மேல செம்ம காண்டுல இருக்கு உங்களோட இதயம்,” இனியன் மாமன் காதை கடிக்க, சட்டென்று எழுந்துவிட்டான் இதயன்.
அவளை சமாதானம் செய்யும் நோக்கில் தங்கள் அறை நோக்கி அடியெடுத்து வைக்க,
“அவன் இப்படி அயோக்கியனா இருப்பான்னு நினைக்கல.” என்று குரல் திடுமென அவன் முதுகுக்கு பின் கேட்க, புருவங்கள் முடிச்சிட திரும்பியவன் ரமேஷை கண்டு அமைதியாய் நின்றான்.
“அன்றைக்கே நீங்க சொன்னீங்க அவன் நல்லவன் இல்லைனு. உங்க காதலுக்காக அவனை குறை சொல்றீங்கனு நினைச்சேன்.” என்று அவர் இழுக்க, கீதா போல இதயனை மாப்பிள்ளை என்று சட்டென்று அழைத்து இழைய முடியவில்லை.
“பரவாயில்லை மாமா. நம்மிடம் நல்ல முறையில் பேசுபவர்களை நல்லவர்கள்னு நம்புவது இயற்கை தானே. இப்போ தான் எல்லாம் சுமூகமா முடிஞ்சிடுச்சே… நீங்க கவலைப்படாதீங்க. ஒருவாரம் இங்கே எங்ககூட தங்கிட்டுத் தான் போகணும்.”
“சந்தோசம் மாப்பிள்ளை…” என்றவர் புன்னகையுடன் நகர்ந்துவிட, தன்னுடைய ஆறுவருட வலிக்கான முடிவு வந்துவிட்ட திருப்தியில் மனநிறைவுடனேயே மனைவியத் தேடிச் சென்றான் இதயன்.
காப்பவனே இங்கு அழிவிற்கு வழிவகுக்க நம்பிக்கை பொய்த்தாலும், அதை கட்டிக்காத்து மக்களின் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க பற்பல மருத்துவர்கள் தங்கள் பணியை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அதே போலத்தான் தகுதியற்ற பலர் தங்களின் செல்வாக்கை கொண்டு சிறியது முதல் பெரியதுவரை என்று வரைமுறையற்ற செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களுக்கு இடையூறு கொடுத்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படி மற்றவர்களின் அலட்சியத்தால் மட்டுமே வாழ்க்கையின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கிறான் இதயன். இதில் யாரை குறைசொல்ல? பேனர்கள் வைத்த பகட்டுப் பிரியர்களையா? இல்லை அஜய் போன்ற பித்தலாட்டக்காரர்களையா? எவர் இவன் இழந்த வாழ்க்கைக்கு பொறுப்பு? இதுபோன்று அலட்சியங்கள் அவனுக்கு மட்டுமா நடந்தேறியிருக்கிறது?
மற்றவர்களை பாதிக்கும் வகையிலான சிறுசிறு அலட்சியங்கள் பெருதுளியாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சுலபமாக நடந்தேறும் அலட்சியங்கள் ஒருவரின் வாழ்க்கை தலைவிதியையே மாற்றி அமைப்பதாகவே இருக்கிறது. அதை கண்டுகொள்வோர் தான் யாருமில்லை. மனிதாபிமான அழிந்துவிட்டது என்று கூறுவதைவிட நமக்கெதுக்கு வம்பு என்று அசாதாரண சூழ்நிலையை கண்டும்காணாமல் செல்வோர் தான் அதிகம். அந்த தயக்கம் மட்டும் நீங்கினால் போதுமே…
*^*^*