ஜெயதேவ் கட்டிய கைகளுடன் விறைப்பாய் நின்று முறைத்துக்கொண்டிருந்தார். மதுதேவா ஒரு மணி நேரம் முன்பு காய்ச்சிய பாலை, ஒரு பெரிய டம்ளரில் நிறைத்து, அதை வேறொரு டம்ளர் கொண்டு ஆத்திக்கொண்டே ஹாலுக்கு வர, கழுத்தில் இருந்த தனது ‘டை’யை விசிறியாக்கி, அதை தன் கழுத்தில் இருந்து கழட்டாமலே, மாங்கு மாங்கென தனது அன்னைக்கு விசிறிக்கொண்டிருந்தான் ஆதித்யா.
தெய்வானை மூடிய கண்களை திறக்கவேயில்லை. கண்களை கொஞ்சம் திறந்தால் கூட, “சொல்லு, எதுக்கு சென்னைக்கு வந்த?” என்று ஆரம்பித்து விடுகிறாரே ஜெயதேவ்.
கேள்வி எங்கே நம் பக்கம் பாய்ந்துவிடுமோ என ஆதி விசிறுவதில் பிசியாக, மது அந்த ஆறிய பாலை ஆத்து ஆத்து என ஆத்துவதில் பிஸியாய் இருந்தாள்.
ஜெயதேவும் கொஞ்சமும் சளைக்காமல், இவர்கள் ‘டிராமா’ எப்போதுதான் முடிகிறது என்று பார்ப்போம் என ஈடுக்கொடுத்து நிற்க, இறுதியில் கோகுல் சுட சுட வாங்கி வந்த ரவா தோசையும், கொத்து புரோட்டாவுமே அதற்க்கு ஒரு முடிவை தந்தது.
உணவு முடித்து ‘ஏப்பம்’ விட்ட ஆதியை அப்படியே பிடித்துக்கொண்டார் ஜெயதேவ்.
“உங்கம்மா எதுக்குடா சென்னை வந்தா?” என கிடுக்குப்பிடியாய் அவர் கேட்க, “அதை அம்மா கிட்ட தானேப்பா கேட்கணும்” என பாவமாய் பதில் சொன்னான் ஆதி.
“இந்த பச்சைப்புள்ள லுக் எல்லாம் என்கிட்ட காட்டாத! அதுக்கெல்லாம் நான் ஏமாற மாட்டேன்! சென்னை வந்தவ நேரே நீ இருக்க வீட்டுக்கு வந்து ‘டேரா’ போட்டுருக்கான்னா, அது நீ சொல்லாமையா?” என கேட்க, ‘யம்மா, காப்பாத்தும்மா’ என தெய்வானையை தேடினான் ஆதி.
ஆனால் அவரோ மூன்று தோசையை முழுங்கிய பின், “ஏம்ப்பா, தோசைக்கு தேங்கா சட்னி மட்டும் தான் இருக்கு! கார சட்னி கேட்டு வாங்கிருக்கலாம்ல? என்ன புள்ள நீ?” என கோகுலை சாடிக்கொண்டிருந்தார்.
ஜெயதேவ், “சொல்லு ஆதி” என மிரட்டலாய் கேட்க, “இப்ப அம்மா எதுக்கு வந்தா என்னப்பா? வந்ததுல எவ்வளோ பெரிய நல்லது நடந்துருக்கு? இத்தனை வருஷ ‘வாய்க்கா சண்டையை’ எங்கம்மா அசால்ட்டா முடிச்சு விட்டு, ரெண்டு பிரண்ட்ஸயும் சேர்த்து வச்சுருக்காங்க! அதுக்கே நீங்க ஒரு பாராட்டு விழா நடத்தனும்! அதை விட்டுட்டு…. சும்மா….” என அவன் நியாயம் பேசிக்கொண்டிருக்க, ஜெயதேவின் அலைபேசி அழைத்தது.
ராஜகோபால் தான் அழைத்திருந்தார்.
“சொல்லு ராஜா” உற்சாகமாய் அழைப்பை ஏற்றார் ஜெயதேவ். அவருக்கு குறையாத உற்சாகத்துடன் மறுபுறம், “எப்படி இருக்க ஜெயா?” என்றார் ராஜகோபால்.
இரு மணி நேரங்களுக்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து பிரியாவிடை பெற்று பிரிந்திருந்தனர் இருவரும். அதற்குள் பல நாட்கள் காணாமல் விசாரிப்பதை போல, ‘எப்படி இருக்க?’ என அவர் கேட்க, ஜெயதேவிற்கு மீண்டும் அவர்களின் இளமைக்காலத்திற்க்கே சென்றுவிட்டதை போன்றதொரு நிறைவு.
“நல்லா இருக்கேன் ராஜா… தெய்வாவும் இப்போ நல்லா இருக்கா” என்றார் கூடுதலாய்.
“இன்னைக்கு நடந்ததை எல்லாம் என் மனைவிக்கிட்ட சொன்னேன்! உன்னை ஏன் நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வரலன்னு ஒரே சண்டை” என ராஜகோபால் சொல்லும்போதே, “நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லுங்க” என அருகே லட்சுமி பேசுவது மங்கலாய் ஒலித்துக்கொண்டிருந்தது.
“உனக்கு தோதுப்படும்ன்னா நாளைக்கு என் தங்கச்சியை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வாயேன்!” என ராஜகோபால் அழைக்க, நொடிக்கூட யோசிக்காமல், “கண்டிப்பா வரேன் ராஜா, நீ அட்ரஸ் மட்டும் அனுப்பிவை” என்றிருந்தார் ஜெயதேவ்.
மறுபொழுது விடிந்ததில் இருந்தே பலமுறை அழைத்து விட்டார் ராஜகோபால். ‘எழுந்துட்டியா!?’ ‘கிளம்பிட்டியா?’ ‘எப்போ வர?’ என அவர் கேட்டுக்கொண்டே இருக்க, வெகு சீக்கிரமே கிளம்பிவிட்டார் ஜெயதேவ்.
மதுதேவாவும் தெய்வாவும் கிளம்பி இருக்க, ஜெயதேவ், “கிளம்பிட்டியா ஆதி?” என்றார் அவனிடம்.
“இப்போவேவா? ஆபிஸ்க்கு இன்னும் நேரம் இருக்கு” என அவன் சொல்ல, “ஆபிஸ்க்கா!? நான் உன்னை என் பிரண்ட் வீட்டுக்குப்போக கிளம்பிட்டியான்னு கேட்டேன்” என்றதும், “நானா? நான் எதுக்கு?” என ஷாக்கானான் ஆதி.
“பின்ன, நேத்தும் அவனை நீ பார்க்கல… இன்னைக்கு வீட்டுக்கு போறப்போவும் வரலன்னா எப்டி? இதே ஊருல வேற இருக்க நீ!” என சொல்ல, சற்று யோசித்தவன், “சரிப்பா.. நீங்க முன்னாடி போங்க.. நான் பின்னாடி வரேன்” என்றான்.
“ஏன்டா போறதுன்னு ஆகிடுச்சு….” என ஜெயதேவ் பேசும்போதே ராஜகோபால் மீண்டும் அழைத்திருக்க, “அவன்தான் வரேன்னு சொல்லிட்டான்ல? சொன்னா வந்துடுவான்… நீங்க வாங்க கிளம்புவோம்…” என்று ஜெயதேவை சரிக்கட்டி அழைத்துப்போனார் தெய்வா.
அப்போதும், “வராம ஏமாத்தலாம்ன்னு நினைக்காதடா… வந்துடு ஒழுங்கா” என பலமுறை சொல்லிவிட்டே சென்றார் ஜெயதேவ்.
அவர்கள் சென்றதும், “கூடவே போக வேண்டியது தானேடா? அப்டியே கல்யாணம் பேச்சுக்கு அடிப்போட்ட மாறியும் இருக்கும்ல?!” என கோகுல் கேட்க,
[the_ad id=”6605″]
“அது தான் தவறான விஷயம்” என்ற ஆதி, “இப்போ என் மாமனாருக்கு நான் யாருங்குற விவரம் எதுவும் தெரியாது… அதனால முன்னாடி போற எங்கம்மா என்னை பத்தி ஒரு பில்ட்அப் குடுத்து வைக்கட்டும்… கரெக்ட் டைம்ல நான் என்ட்ரி குடுத்து, ஸீனை மாஸாக்கிடுறேன்” என்றான் காலரை தூக்கிவிட்டபடி.
“என்னத்தையோ பண்ணித்தொல. நான் ஆபிஸ் போறேன்” என கிளம்பிவிட்டேன் கோகுல்.
முதல் நாள் ராஜகோபால், ஜெயதேவ் கண்களில் அகப்படாமலே, நைசாக நழுவி வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தனர் கோகுலும் ஆதியும்.
ஜெயதேவிற்கு ராஜஉபச்சாரம் என்றால், தெய்வாவிற்கு மஹாராணி உபசாரம் தான் ராஜகோபாலின் வீட்டில். லட்சுமி நிமிடத்திற்கு 100 அண்ணன் போட, ‘அருமையான சொந்தத்தை இத்தனை ஆண்டுகள் வீணடித்துவிட்டோமே’ என மருகினார் ஜெயதேவ்.
அலுவலகம் கிளம்பி வந்த தன்யா, புதியவர்களை அந்நியமாய் நோக்க, ராஜகோபால் தன்யாவை பெருமையாய் அறிமுகப்படுத்தி வைத்தார்.
“உனக்கு எங்களை தெரிய வாய்ப்பில்லைமா! நாங்கல்லாம் பழங்கால சொந்தம்! நடுவுல கொஞ்சம் ‘டவர்’ கிடைக்காததால, கனெக்ட் பண்ணிக்க முடியல” என்று தெய்வா விளையாட்டாய் சொல்ல, தன்யாவுக்கு அவரை நொடியில் பிடித்து போனது.
தன் வயதுக்கு தோதாய் அங்கிருந்த மதுதேவாவுடன் சிறிது நேரம் பொதுவாய் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் தன்யா.
தெய்வாவும் மதுதேவாவும் அவளை ஆதியின் மனைவியாகவே உரிமையுடன் பார்க்க, விஷயம் அறியாத ஜெயதேவ், “நான் இப்போவே கேட்குறேன்னு கோச்சுக்காத ராஜா… உன் மகளை பார்த்துட்டு என்னால விஷயத்தை தள்ளிப்போட முடியல…” என பீடிகை போட்டார்.
ராஜகோபாலும் லட்சுமியும் என்னவோ? என குழம்ப, “உன் பொண்ணை பார்த்ததுமே, என் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போய்டனும்ன்னு ஆசையா இருக்குடா… ஒரு கல்யாண பேச்சால பிரிஞ்சு நம்ம நட்பு, இன்னொரு கல்யாண பேச்சால உறவா மாறினா என்ன? நீ என்ன சொல்ற?!” என்றார் எதிர்ப்பார்ப்பாய்.
ஜெயதேவின் பேச்சை கேட்டதுமே சட்டென அங்கிருந்து எழுந்துவிட்டாள் தன்யா.
“எனக்கு ஆபிஸ்க்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்” என பொதுவாய் சொல்லிவிட்டு வேகமாய் சென்றவளை லட்சுமி கூட தடுக்கவில்லை.
மகளின் காதல் விவகாரம் அறிந்த பெற்றவருக்கு ஜெயதேவின் சம்பந்தத்தை மறுக்க தான் தோன்றியது. ஆனாலும், பல வருட பிரிவின் பின் இணைந்த நட்பில் இதனால் மீண்டும் பிளவு வந்துவிடுமோ என்ற ஐயத்தில் சங்கடமாய் மௌனித்திருந்தனர்.
தான் கேட்டதும் ராஜகோபால் சந்தோசமாய் மகளை தர ஒப்புக்கொள்வார் என நம்பிய ஜெயதேவிற்கு அவரின் மௌனம் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
“நீங்க என் பையனை பார்த்தது இல்லைல அண்ணே?! அதான் யோசிக்குறீங்க போல… உங்க மக அழகுக்கு கொஞ்சமும் குறையாம அம்சமா இருப்பான் என் புள்ள… ரெண்டு டிகிரி கோல்ட் மேடலோட முடிச்சான்” என்ற தெய்வா, “எங்க கம்பெனியே அவன் அறிவுலையும், தயவுலையும் தான் ஓடுதுன்னா பார்த்துக்கோங்களேன்” என சொல்ல, ‘அடியேய்!’ என்ற பாவத்துடன், வெடுக்கென திரும்பி மனைவியை முறைத்தார் ஜெயதேவ்.
சளைக்காத தெய்வா, “மூத்தவனுக்கு கூட அவ்வளவு திறமை பத்தாது… அவன் அப்டியே அவங்கப்பா மாதிரி… ஆனா சின்னவன் ரொம்ப சூட்டிகை. அவன் என்னோட செராக்சு…” என சிரிக்க, ஜெயதேவின் முறைப்பு ஏறியது.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ராஜா, இவ ரொம்ப புகழ்றா! சின்னவன் சரியான வாய்! வாய் மட்டும் இல்லன்னா அவனை நாய் கூட மதிக்காது!” என ஜெயதேவ் சொல்ல, மீண்டும் தெய்வா அவரிடம் மல்லுக்கு வர,
ராஜகோபால் பேச்சை திசைத்திரும்பும்படி, “பெரியவன் என்ன செய்யுறான்ம்மா?” என்றார்.
“கிருஷ்ணாவா? அவன் ரெண்டு டிகிரி முடிச்சுட்டு அமெரிக்கா போனான்… அங்கிருந்து சும்மா சும்மா வீடியோ கால் பண்ணிக்கிட்டு இருப்பான்…” என தெய்வா மூத்தவனை பெருமையாய் சொல்ல,
“ஹீ இஸ் அ சாப்ட்வேர் டெவலப்பர் அங்கிள். அண்ணிக்கும் அமெரிக்கால தான் வேலை… இப்போ குட்டி பையன் வந்துட்டதால, அண்ணி வீட்ல இருக்காங்க!” என தகவல் சொன்னாள் மதுதேவா.
அவள் பேசுகையில் லட்சுமியின் பார்வை மதுவை மொய்த்தது.
வயது வந்த ஒரு மகனின் தாயாய், ஒரு பெண்ணை பார்க்கும்போது, “இந்த பொண்ணு நம்ம பையனுக்கு தோதாகுமே!” என்று இயல்பாய் எழும் அதே எண்ணம் தான் அவருக்கு மதுவை பார்க்கும்போதும் தோன்றியது.
‘ச்ச… இப்படித்தானே தன்யாவை பார்க்கும்போது இந்த அண்ணனுக்கும் தோனிருக்கும்?’ என சரியாய் புரிந்துக்கொண்டவர், ‘அவங்க பக்கம் எந்த குறையும் இல்லை.. அதனால பொண்ணு கேட்டுட்டாங்க… ஆனா, நம்ம பையனோட குறை தெரிஞ்சா எப்டி இந்த பொண்ணை குடுக்க சம்மதிப்பாங்க?!’ என்றெண்ணி முகம் வாடினார் லட்சுமி.
வீட்டைச் சுற்றி பார்வையை சுழற்றிக்கொண்டிருந்த மது, சுவரில் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஆளுயர குடும்ப புகைப்படத்தைக்கண்டு அதன் அருகே செல்ல, லட்சுமியும் உடன் சென்றார்.
லட்சுமி ஓர் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் தோள்களை பற்றியபடி நின்ற ராஜகோபாலின் இருபுறமும் அவர் கையை கோர்த்து பிடித்தபடி சிரித்துக்கொண்டு நின்றிருந்தனர் தன்யாவும், சுரேனும்.
தன்யாவை சிறிது நேரம் முன்பு பார்த்திருந்தவளுக்கு, இந்த புகைப்படம் எடுத்து குறைந்தது பத்து வருடங்களாவது இருக்கும் என்பதை எளிதாய் கணிக்க முடிந்தது. ஏனெனில், அதில் தன்யா மிகவும் சிறு பெண்ணாக தெரிந்தாள்.
ராஜகோபால், லட்சுமியை அளவெடுத்த கண்கள், சுரேனை அடைந்த போது, சில நிமிடங்கள் நகர தான் மறுத்தது. பளீரென்ற அவன் புன்னகை, உதட்டில் இருந்து மட்டும் நான் வரவில்லை, முழுமனதாய் பூரித்து உள்ளிருந்து வருகிறேன் என தம்பட்டம் போட்டது.
சிரிக்கும் உதடுகளோடு போட்டிப்போடும் அவன் கண்களை கண்டவள், அடர்ந்த அவன் புருவத்தின் வனப்பில் மேலும் சில நொடிகள் உற்று கவனிக்க,
“என்னமா பாக்குற!? இது ரொம்ப வருஷம் முன்ன எடுத்த போட்டோ… இவன்தான் என் பையன் சுரேந்தர்! இப்போ வேலை விசயமா வெளியூர்ல இருக்கான்” என்றார் லட்சுமி அவள் கேளாமலே.
“ஓ!” என கேட்டுக்கொண்டவள், புகைப்படத்தை பார்த்தபடியே சோபாவை நோக்கி வர, “எங்க வீட்டுலையும் இந்தமாறி குடும்ப சகிதமா ஒரு போட்டோ எடுத்து வைக்கணும்ன்னு பல வருஷமா கேட்டுக்கிட்டு இருக்கேன்! ஆனா, இவர்தான் கண்ணு படும், காலு படும்ன்னு எடுக்கவே விடல” என ஜெயதேவை குற்றம் சொன்னார் தெய்வானை.
[the_ad id=”6605″]
“ஏன் ஜெயா? எடுத்து வச்சா அழகா இருக்குமே?” என ராஜகோபால் கேட்க, கசப்பாய் முறுவலித்தவர், “இத்தனை வருஷம் பகையாளியா இருந்துட்டு, ஒண்ணா சேர்ந்த முதல் நாளே, பார்த்த மாத்திரத்துல உன் பொண்ணை கேட்குறேன்னு என்னை தப்பா நினைக்குறியா ராஜா?” என்றார்.
“ஏய், என்ன ஜெயா பேசுற நீ?” நண்பனின் அருகே வந்து அவர் கரத்தை பற்றிக்கொண்டார் ராஜகோபால்.
“பின்ன, நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, பேச்சை மாத்திட்டு இருக்கியே?” என்று சொல்ல, லட்சுமியும், ராஜகோபாலும் ஒருவரையொருவர் சங்கடமாய் பார்த்துக்கொண்டனர்.
ஜெயதேவ், “எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு ராஜா!” என்றிட,
“உன் வீட்டுக்கு என் பொண்ணை குடுக்குறதுல எந்த தயக்கமும் இல்லடா! ஆனா, என் பொண்ணு கல்யாணம் வேண்டாம்ன்னு இத்தனை நாளும் பிடிவாதமா இருந்ததுக்கு காரணம் என்னனு கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரிஞ்சுது! கூட படிச்ச பையனை விரும்பியிருந்துருக்கா! அவ ஆசைப்பட்ட பையனுக்கே கட்டிவைப்போம்ன்னு முடிவெடுத்து, அந்த பையன்க்கிட்ட பேசிட்டேன்! ரொம்ப நல்ல பையன்! வெரி டேலன்டட் பர்சன்!” என்றவர்,
“இன்னும் இந்த விஷயத்தை நான் தன்யாக்கிட்டயே சொல்லல! என்னைத்தவிர பையன் யாருங்குற விவரம் லட்சுமிக்கு கூட தெரியாது” என மனைவியை கைக்காட்டினார் ராஜகோபால்.
தெய்வாவுக்கும் மதுவுக்கும் சிரிப்பு சிரிப்பாய் வந்தது. இருப்பினும், அந்த சூழ்நிலையின் கனத்தை தாங்க வேண்டி, உதடுகளுக்கு சிறையிட்டு அமைதி காத்தனர்.
ராஜகோபால் சொன்னதை கேட்ட ஜெயதேவ், “ம்ம்ம்! என் பையனுக்கு குடுத்து வைக்கல!” என சொல்ல, “உன் பையனுக்கு கண்டிப்பா அருமையான பொண்ணா கிடைக்கும் பாரு” என நம்பிக்கை கொடுத்தார் ராஜகோபால்.
ஜெயதேவ், “ம்கும்! அருமையான பொண்ணு’ அவனை ஏன்டா கட்டிக்க சம்மதிக்க போகுது?” என ஆதியின் மானத்தை வாங்க, “அப்போ என்னோட அருமையான பொண்ணை எதுக்குடா உன்புள்ளைக்கு கேட்ட?” என்றார் ராஜகோபால்.
“அதான் நீ குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டியே!? நான் சொல்லல? அருமையான பொண்ணெல்லாம் அவனுக்கு கிடைக்காது!” என்று சொல்லி சிரிக்க, ராஜகோபாலும் சிரிப்பில் இணைந்துக்கொண்டார்.
சிரித்துக்கொண்டிருந்த ஜெயதேவின் முதுகில் ஒரு அடி போட்ட தெய்வா, “என் புள்ளையை கரிச்சு கொட்டலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே” என முறைக்க, ராஜகோபாலிடம் ரகசியம் சொல்பவர் போல குனிந்த ஜெயதேவ், “பொதுவா வீட்டோட கடைக்குட்டி தான் அம்மாக்களுக்கு செல்லம்ன்னு சொல்லுவாங்க! ஆனா, எங்க வீட்ல, அந்த தடிமாடி தான் இவளுக்கு செல்லம்” என சொல்ல, “என்ன சொல்றீங்க அங்க?” என அதட்டினார் தெய்வா.
“ம்ம்ம்! வரேன்னு சொன்ன உன் புள்ளையை இன்னமும் காணோம்ன்னு சொல்லிட்டு இருந்தேன்” என ஜெயதேவ் சொல்லும்போதே, ராஜகோபால் வீட்டிற்க்குள் பிரவேசித்திருந்தான் ஆதித்யா.
அவனை கண்டதும், “இதோ என் புள்ள!” என தெய்வாவும், “அடடே! மாப்பிள்ளை!?” என ராஜகோபாலும் ஒரே சுருதியில் சொல்ல, இதுவே ஹிந்தி சீரியலாய் இருந்திருந்தால், ஒவ்வொருவரின் முகத்திற்கும் ஏழு முறை ‘ஜூம்’ போட்டிருக்கலாம்!
ராஜகோபால், “உன் பையனா தங்கச்சி?”
ஜெயதேவ், “எது? மாப்பிள்ளையா?”
லட்சுமி, “இவர்தான் மாப்பிள்ளையா?”
விதவிதமான கேள்விக்குறிகளுக்கு நடுவே பிரம்மாண்டமாய் நடந்து வந்த ஆதி, சுவாதீனமாய் மாமனார் வீட்டு சோபாவில் அமர்ந்துக்கொண்டு, “சிட் டவுன், சிட் டவுன்” என்றான் எல்லோரையும்.
ராஜகோபால், “ஆதி நீ ஜெயதேவ் சன் ஆ?” என்றார் ஆச்சர்யம் தாளாது.
ராஜகோபாலின் கேள்விக்கு ஆதி பதில் சொல்லும் முன்னே, “டேய் என்னடா பண்ணி வச்சுருக்க? ராஜாவை உனக்கு முன்னமே தெரியுமா? தெரியும்ன்னா ஏன்டா சொல்லல?” என பொரியத்தொடங்கினார் ஜெயதேவ்.
கிடைத்த கேப்பில் புகுந்த தெய்வா, “அண்ணே, நான் சொல்லல? என்னோட செராக்சு! எங்க வீட்டு தங்கக்கட்டி!” என்றார் ஆதியை பிடித்துக்கொண்டு பெருமை பொங்க!
“வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்! நான் என் பொண்ணுக்கு பார்த்துருக்கேன்னு சொன்ன பையன் நம்ம ஆதி தான்” என குதூகலமாய் சொன்னார் ராஜகோபால்.
“அப்போ நீ சொன்ன, ‘வெரி டேலன்டட் பர்சன்’ இவனா?” என ஜெயதேவ் இறங்கிய குரலில் கேட்க, “ஆதிக்கு என்னடா குறைச்சல்? என் பொண்ணே தானா வந்து காதலை சொன்னாளாம்!” என சொல்லும்போதே, “ஐயோ பாவம்!” என்றிருந்தார் ஜெயதேவ்.
ராஜகோபால், “ஆதியை தான் நீ இவ்ளோ நேரம் குறை சொன்னியா?” என்றிட, “விடுங்க சார்! கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என ஆதி சந்தடி சாக்கில் சொல்லிட, ஜெயதேவ் அவன்மீது பாயும்முன், “என்ன மாப்பிள்ளை? இன்னும் சாரு மோருன்னு சொல்லிட்டு இருக்கீங்க! நம்ம எல்லாரும் தான் ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோமே! நல்லா வாய் நிறைய ‘மாமா’ ‘அத்தை’ன்னு சொல்லி பழகுங்க!” என்றார் லட்சுமி.
ஆதி, “அதுக்கென்ன அத்த! வார்த்தைக்கு நாலு ‘மாமா’ சொல்லிடுறேன் பாருங்க” என சொல்ல, ஜெயதேவை தவிர அனைவரும் இன்பமாய் நகைத்தனர்.
ராஜகோபால், “அப்பறம் என்னடா? இப்போவே ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயத்தை வச்சுக்கிட்டா என்ன?” என்று அடுத்த கட்டத்திற்கு அதிரடியாய் தாவினார்.
“அதுக்குள்ள நிச்சயமா? என் பக்கம் பிசினஸ் ஆளுங்க நிறைய பேருக்கு அழைப்பு குடுக்கணுமேடா?” என்றார் ஜெயதேவ்.
“அட, நிச்சயம் இங்க இருக்கட்டும்! நம்ம ஊருல கல்யாணத்தை வச்சுப்போம்! நீ மும்பை போய் ஒரு ரிசெப்ஷன் வச்சுடு கிராண்ட்டா” என்றார் ராஜகோபால். யோசிக்காமல் கடகடவென திட்டங்கள் மேற்கொண்டு செல்ல, ஆதி திகைத்துப்போய், “ஐயோ மாமா, நான் ஒரு மாசம் டைம் கேட்டேனே!” என நினைவுப்படுத்த,
“சாரி மாப்பிள்ளை! அது நீ ‘ஆதி’யா இருந்தப்போ கொடுத்த அவகாசம். எப்போ நீ என் ஜெயாவோட பையன்னு தெரிஞ்சுதோ, அப்போவே என் வாக்கு காலாவதி ஆகிடுச்சு! அதனால உங்க சண்டையை கல்யாணத்துக்கு பிறகு ‘ஜாம் ஜாம்’ன்னு வச்சுக்கோங்க” என்றார் ராஜகோபால்.
“அய்யய்யோ! நான் இன்னும் தன்யாவை கன்வின்ஸ் பண்ணவே இல்லை மாமா! அதுக்கு முன்ன நீங்க என்கேஜ்மென்ட் வச்சா, கண்டிப்பா அவ ஒத்துக்க மாட்டா!” என சொல்ல,
“அவளை ஒத்துக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு! நீங்க கவலையை விடுங்க மாப்பிள்ளை” என்ற லட்சுமி, “ஏங்க, நம்ம ஜோசியரை வர சொல்லுங்க, நல்ல நாளா பார்த்துடுவோம்” என்றார்.
ஜோசியர் வரும் இடைவெளியில் ஆதியின் குடும்பத்திற்கு, தனக்கு தெரிந்தவரை விலாவாரியாக ‘ஆதி-தன்யா’வின் காதல் கதையை கடைப்பரப்பினார் ராஜகோபால்.
மொபைலில் சேமித்து வைத்திருந்த ஆதியின் ஜாதகமும், தன்யாவின் ஜாதக நோட்டும் ஜோசியர் கைக்குப்போக,
‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு!
தன்யாக்கு ஆதி மேல காண்டு’ என கணக்கிட்டவர், “அடடே, இன்னும் ரெண்டு நாள்ல வர முகூர்த்தம் அமோகமா இருக்கே! ரெண்டு பேருக்கும் பொருத்தமான நாள்” என சொல்ல,
“அப்புறம் என்ன அதையே வச்சுடலாம்” என முடிவெடுத்தனர் தலைவர்கள்.
‘கடைசில உனக்கும் பொண்ணு கிடைச்சிடுச்சே!’ என ஆதியின் காலை வாரினார் ஜெயதேவ்.
ஆதி அங்கே ஒப்புக்கு சப்பானாய் போய்விட, விழா காரியங்களை அலசி ஆராய ஆரம்பித்தனர் பெருசுகள். அவன் நிலையை கண் கொண்டு பார்த்த ஒரே ஆள் மதுதேவா மட்டுமே…
“என்ன ப்ரோ? முகத்துல கல்யாண கலை இப்போவே தாண்டவமாடுது!” என கிண்டலடிக்க, “ரெண்டடி தள்ளியே உட்காரு! கடுப்புல காதை கடிச்சு துப்புனாலும் துப்பிடுவேன்” என்றான் ஆதி.
“ஜில் ப்ரோ! உனக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா?” என நக்கலாக மது கேட்க, “ம்ம்ம்… உனக்குன்னு ஒருத்தன் வருவான்ல? அப்போ அவன் கோவப்பட்டா நீ எப்டி சமாளிக்குறன்னு பார்க்குறேன்… இப்போ வழிய விடு” என எழுந்து போனான் ஆதி.
ஆதி அவ்வாறு சொல்ல மது தன்னையறியாமல், தன்யாவின் குடும்ப படத்தில் தன் பார்வையை செலுத்தினாள். கண்கள் சிரிக்க, ரம்யமாய் நின்றவன், அவள் கண்களை நிறைத்தான்.
வீட்டை விட்டு வெளியே ‘வராண்டா’விற்கு வந்த ஆதி கடுப்புடன் கோகுலுக்கு அழைக்க, “சொல்லுடா கல்யாண மாப்பிள்ளை” என்றான் அவன்.
[the_ad id=”6605″]
ஆதி ஷாக்காகி “அதுக்குள்ள விஷயம் உனக்கு வந்துடுச்சா?” என கேட்க, “டேய், மாமனார் வீட்டுக்கு குடும்பத்தோட போயிருக்க! கூடிய சீக்கிரமே கல்யாணம் தானே” என்றான் அவன்.
‘ஓ! நீ குத்துமதிப்பா தான் சொன்னியா?’ என முனகிய ஆதி, “நான் ரொம்ப கடுப்புல இருக்கேன்டா” என்றான்.
கோகுல், “என்னடா? வயித்து கடுப்பா?” என்றான் கிண்டலாய், நேரம் காலம் தெரியாமல்.
ஆதி, “ம்ம்ம்… ரத்தக்கடுப்பு” என பல்லைக்கடித்தவன், இரண்டு நல்ல வார்த்தைகளோடு அழைப்பை துண்டித்து விட்டு, ‘அவசரமாய் கிளம்ப வேண்டும்’ என வீட்டினரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம் என்பதால், ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் திட்டமிடும் வேலையில் மூழ்கியிருந்தனர் வீட்டினர்.
பைக்கை கிளப்பிக்கொண்டு சென்றவனுக்கு, தன்யாவை எப்படி சமாளித்து, சம்மதிக்க வைப்பது என்ற அதீத குழப்பம்!
ராஜகோபால் சொன்னது போல திருமணம் செய்துக்கொண்டு சமாதானம் செய்யலாமா என்றால், ‘அது சரிவராது’ என அவன் மனம் திடமாய் அடித்து சொன்னது.
குழப்பத்துடனே வண்டியை செலுத்துக்கொண்டிருந்தவன் ஒரு ட்ராபிக்கில் சிக்கி நிற்க, கடும் வெயிலில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு சுற்றிலும் பார்வையை செலுத்தியவன் விழிகளில் விழுந்தாள் தன்யா.
ஒரு காஃபி ஷாப்பின் உள்ளிருந்து வேகமாய் வெளியேறிக்கொண்டிருந்தவளை பின்தொடர்ந்து ஓடி வந்தான் ஒரு ஆடவன்.
அடிக்கும் வெயிலுக்கு ‘ப்ளேசர்’ அணிந்துக்கொண்டு, செல்வராகவன் பட செகன்ட் ஹீரோ போல அம்சமாய் இருந்தவன், தன்யாவிடம் ஏதோ சொல்ல, அவளும் அவனுக்கு இணையாய் நின்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்த ஆதி, ‘யார்ரா நீ புது கோமாளி?’ என முகம் சுருக்க, அவனை ‘முன்னால், முன்னால் முன்னால் முன்னால் போடா’ என ஏ.ஆர். ரகுமான் டியூனில் வசைப்பாடிய சென்னைவாசிகள், அங்கிருந்து நகர்த்திவிட்டிருந்தனர்.