கள்வன் – 7
“இவன் தான் என் மூத்த மகன் இதயன்… இதயா இந்தப் பொண்ணு தான் நான் மயங்கி விழுந்த போது உதவி செஞ்சுதுபா… நீ கொஞ்ச நேரம் தூங்கு நான் சாப்பாடு எடுத்து வந்து உன்னை எழுப்புறேன்.” இருவரையும் அறிமுகப்படுத்தி மகனை உறங்க சொல்லிவிட்டு இனியாவையும் வெளியில் கூட்டிச் செல்ல முற்பட்டார்.
அதற்கு மேல் அங்கு நின்றால் தன் மகனைப் பற்றி கூற வேண்டுமென்பதால் அங்கிருந்து சீக்கிரம் நகர்வதே உகந்ததாய் பட்டது. அனுதாபப் பார்வை மற்றும் வார்த்தைகளை எல்லாம் கேட்டு மறுகி, இறுகிய இதயம் மீண்டுமொரு முறை அதை எதிர்கொள்ள திராணியற்று அங்கிருந்து நகரவே பார்த்தது.
ஆனால் அவனின் வசீகரப் புன்னகையில் வீழ்ந்து தன் நிதானமிழந்த அவளின் கூறுகெட்ட இதயமோ அவனின் பெயரை மனதில் ஒரு முறை சொல்லிப் பார்த்து சிலிர்த்தது. ஆயினும் சிலிர்த்த மறுநிமிடம் சுடுநீரை மேலே ஊற்றியது போல் இதயம் துள்ளிக்குதித்து அவனின் நிலையை கண்டு பரிதவித்து கண்ணீர் சிந்தியது. அது அவள் முகத்தில் அப்படியே பிரதிபலிக்க, புன்னகை சிந்தியவனோ இறுக்கமாய் தன் இதழ்களை சேர்த்துப் பூட்டிக் கொண்டு முகத்தினை திருப்பிக் கொண்டான்.
தாயும், மகனும் எங்களின் உள்விஷயத்தில் தலையிடாதே என்பதை நாசூக்கா வெளிப்படுத்த அதைப் புரிந்து கொண்டவள், தாயின் புறம் திரும்பி, “அப்போ நான் கிளம்புறேன் ஆன்ட்டி… நீங்க உடம்பை நல்லா பார்த்துக்கோங்க… சீக்கிரம் விரதம் முடிச்சிட்டு சாப்பிடுங்க…” என்றுவிட்டு மேலே எதுவும் கேட்காமல் அவ்வறையை விட்டு வெளிவந்தாள்.
“நீயும் பார்த்து பத்திரமா வீட்டிற்கு போமா…” அவளின்பால் அக்கறை கொண்டு சொன்னார் அத்தாய். இனியா எதுவும் சொல்லாமல் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பறந்தாள்.
மனம் முழுதும் அவன் குறித்த சிந்தனைகளே… அவனின் படுக்கையில் படுக்கையான உருவம், அவனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது. கலவையான உணர்வுகளை மாறிமாறி வெளிப்படுத்தும் அவனின் பொலிவற்ற விழிகளும், கூர் நாசியும், ஒன்றிரண்டு நாட்களாக மழிக்கப்படாத சிறு தாடியும், தாடிக்கிடையில் மறைந்திருந்த உலர்ந்த அதரங்களும், தொய்ந்து போயிருந்த புஜங்களும் அதைத் தொடர்ந்து போர்வைக்குள் மறைக்கப்பட்டிருந்த அவனின் உருவம் அவள் மனக்கண்ணில் வந்து போனது.
‘அவரால் பேச முடியாதோ?’ மனதில் கேள்விகள் எழ, ‘பேச முடிந்தால் ஏன் தனக்கு வேண்டியதை விழியால் யாசிக்க வேண்டும்? ஆன்ட்டிக்கு அவர் என்ன கேட்கிறார் என்று புரிந்துகொள்ள நேரம் பிடிக்கிறது, அப்படியானால் இவர் பிறவிலேயே வாய் பேச முடியாதவராக இருக்க வாய்ப்பில்லை. ஏதாவது விபத்து நடந்திருக்குமோ? காது நன்றாக கேட்கிறது மனுஷனுக்கு…’ மனமே விடையும் கண்டுபிடித்தது.
‘நடப்பாரா என்று தெரியவில்லையே… ச்ச கால் இருக்கானு பார்த்துட்டு வந்து இருக்கலாம்.’ மனம் எல்லையற்று ஓடியது, ‘அவரால் அசையவும் முடியாது போல் தெரிகிறது இல்லையென்றால் அருகில் இருந்த தண்ணீரை யாரையும் நாடாமல் எடுத்துக் குடித்திருப்பார்.’ என்று மனம் கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடியது.
[the_ad id=”6605″]….
“ஏய் இனியா என்னடி ஆச்சு உனக்கு? சீக்கிரமே வந்து விட்டாய். நானும் கூப்பிட்டுட்டே இருக்கேன் எந்த ஊர் கோட்டையைப் பிடிக்க இப்படி பகல்கனவு காண்கிறாய்?”
“ஆங்…” திடுக்கிட்டு தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். வண்டி அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. கீதா அவள் கண்ணெதிரே நின்று முறைத்துக் கொண்டிருந்தார்.
“உடம்பு எதுவும் முடியவில்லை என்றால் வண்டியை வைத்துவிட்டு உள்ளே வர வேண்டியது தானே? இப்படி நின்று என்ன யோசிச்சுட்டு இருக்க?” மீண்டும் அவள் மேல் பாய்ந்தது கேள்வி.
“ஐயோ அம்மா சும்மா தொனதொனவென்று கத்தாதே. அதான் குத்துக்கல்லு மாதிரி உன் முன்னால் நன்றாகத் தானே இருக்கிறேன்.” என்று சிடுசிடுத்தவள் வண்டியை அவர்கள் வீட்டின் உள்ளே நிறுத்தினாள்.
“வேலை பெரிதாக இல்லைமா. ரொம்ப கடுப்பாக இருந்தது அதனால் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் என்று சொல்லி வந்துவிட்டேன்.” விடுப்பு எடுத்ததை மறைத்து இப்படி காரணம் கூறினாள் இனியா. விடுப்பு எடுத்தேன் என்றால் என்ன காரணம் என்று அம்மா கேட்டு துளைத்துவிட மாட்டார்?
“என்னவோ நீ சரியில்லைடி… சரி சரி உள்ளே வா… சாப்பிட்டியா? நான் இனி தான் சாப்பிடப் போகிறேன். நீ சீக்கிரம் உடை மாற்றிவிட்டு வா… உன் லஞ்ச் பாக்ஸை கொடுத்துவிட்டு போ, நான் சூடு செய்து வைக்கிறேன்.” என்று அம்மாவாய் தன் கடமையை அனாசியமாய் செய்தார்.
அம்மாவின் உபசரணையில் அவனைப் பற்றிய சிந்தனைகளை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு உடை மாற்றச் சென்றாள். அம்மாவும், மகளும் ஏதேதோ அவர்களுக்கான பிரத்யேக நத்திங்க்ஸை பேசிக்கொண்டே உண்டு முடித்தனர்.
“நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் இனியா. நீ வீட்டை தாழிட்டுவிட்டு உன் வேலையைப் பார்.”
“சரிம்மா… நானும் கொஞ்சம் தூங்குறேன்… ஐயோ இதை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் பாரேன்… இன்று வரும் வழியில் ஒரு ஆன்ட்டி மயங்கி விழுந்துவிட்டார். அவருக்கு உதவி செய்து வீட்டில் விட்டு தான் வந்தேன்.” என்று அறைக்கு சென்று கொண்டிருந்த கீதாவை நிறுத்திச் சொன்னாள்.
“உதவி சரியான நபருக்கு சென்று சேர்ந்தால் நல்லது தான். ஆனால் பார்த்து பத்திரம்டா… இப்போது நிறைய வழிப்பறிகள் மயங்கி விழுவது, குழந்தைகளை விட்டு விலாசம் கேட்பது போன்ற வழிகளை கையாண்டு நாம் சுதாரிக்கும் முன் நம்மை ஏய்த்து விடுகிறார்கள்.” என்றவர் கண்ணிலும், மொழியிலும் மகளின் மீதான பயம் கலந்த அக்கறை வெளிப்பட்டது. அதை கண்டுகொண்ட மகள் தாயின் கவலையைப் போக்கும் பொருட்டு,
“புரிகிறதுமா… அந்த ஆன்ட்டி நம்ம பக்கத்து தெரு தான்மா… நான் முன்னரே அவரை பார்த்திருக்கிறேன், இன்று தான் வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்தது.”
[the_ad id=”6605″]“ம்… எப்போதும் சூதானமாக இருக்கணும்டா… பார்த்துக்கோ…” என்றுவிட்டு அவர் சென்றுவிட இனியா தன் அறைக்கு சென்று கவிழ்ந்ததும் அவனின் வசீகர புன்னகையே அவள் மனக்கண்ணை நிறைத்தது. அதே நினைவோடு சற்று நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
மாலை…
“ஓய்… என்ன மேட்டரு…” இனியன் தமக்கையின் தோளை இடித்துக் கொண்டு அவள் அருகில் சோபாவில் அமர, அவனை முறைத்துக் கொண்டே தள்ளி அமர்ந்தாள் இனியா.
“என்ன கொழுப்பா? ஒழுங்கு மரியாதையாக உண்மையை சொல்லு, எதற்கு வொர்க் ஃபிரம் ஹோம்னு போட்டுட்டு வந்துட்ட? நீ இதெல்லாம் செய்ய மாட்டியே… வாட் இஸ் குக்கிங்?” இனியன் மீண்டும் வினவ, கேலிப் பார்வை பார்த்த இனியா,
“ஐ அம் நாட் குக்கிங்… அம்மா இஸ் குக்கிங் உப்புமா…” என்க,
“அம்மா அக்காக்கு உப்புமா வேண்டாமாம்… பொங்கல் வேண்டுமாம்…”
“நல்லதா போச்சு. பொங்கல்னா குக்கரில் வைத்துவிட்டால் வேலை முடிந்துவிடும் உப்புமா போல் அருகிலே நின்று கிண்ட வேண்டாம்…” என்று கீதா குஷியில் மெனுவை மாற்றிவிட இனியனை வேகமாய் சிணுங்கலுடன் கிள்ளினாள் இனியா.
“கொழுப்பாடா உனக்கு… எனக்கு பொங்கல் பிடிக்காதுடா…”
“அப்போ உண்மையை சொல்லு… நீ வேலை இருந்தாலே உன் தோழியர் கூட்டத்தோடு மாலுக்கோ இல்லை பீச்சோ போகிற ஆள்… நீ வீட்டிற்கு வேலையை எடுத்து வருகிறாயா?” சரியாய் கிடுக்கிப்பிடி பிடித்தான் இனியன்.
‘இவனுக்கு பதில் சொல்வதற்கு பொங்கலே சாப்பிட்டு விடலாம்…’ என்ற முடிவெடுத்து அங்கிருந்து கழண்டு கொண்டாள். அவளுக்கே புலப்படாத காரணத்தை அவள் எப்படி சொல்லுவாள். ஏதோ மனம் நிதானமிழந்து சோர்வாய் இருந்தது, யுக்தா விடுப்பு எடுக்கச் சொல்லவும் வந்துவிட்டாள். ஆனால் வரும் வழியில் நிகழ்ந்தேறிய ஒரு சந்திப்பு மனதை விட்டு நீங்காமல் அல்லவா இருக்கிறது. அதை இனியனிடம் உளறி அவன் அதற்கு ஒரு அர்த்தம் கண்டுபிடித்து… தேவையா இதெல்லாம் என்றே தோன்றியது.
“என்னங்க… நம்ம ஜோதிடர் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு அடுத்த வாரஇறுதியில் தான் இங்கு வருகிறாராம் அப்போது போய் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம். நாம் பார்த்து சரியாக வரும் போல் தோன்றினால் அந்த பையன் வீட்டில் பேசுவோம்.” என்று கீதா ரமேஷிடம் கூறிக் கொண்டிருந்தது இனியாவின் காதில் விழுந்தது.
அப்பாடா… என்று பெருமூச்சிலித்து தன் அறைக்கு சென்றாள். அலைபேசியில் விரல்கள் தானாக யுக்தாவிற்கு அழைப்பு விடுத்தது. முதலில் ஆபீஸ் விஷயம் பேசியவர்கள் பின்பு அரட்டைக்கு வர இனியாவே ஆரம்பித்தாள், “உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டுமடி…”
[the_ad id=”6605″]“சீக்கிரம் சொல்லுங்க மேடம்… எங்கம்மாகிட்ட சுடச்சுட மொறுமொறுனு தோசை ஊத்த சொல்லிட்டு வந்து இருக்கிறேன். சூடு குறைவதற்குள் சாப்பிட வேண்டும்.” என்று யுக்தா கூற, தலையிலடித்துக் கொண்டு மதியம் நடந்தவற்றை கூறினாள் இனியா.
அமைதியாக கேட்டுவிட்டு யுக்தா அதிமுக்கிய சந்தேகத்தை கிளப்பினாள், “அதுசரிங்க மேடம் அவர் அம்மா அவர் கேட்க வேண்டுவதை புரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது என்று சொல்லும் நீ எப்படி அவர் கண்களால் யாசிப்பது புரிகிறது? சம்திங் சம்திங் மிஸ்ஸிங்…”
“ஆங்… அவர் பார்வை சுற்றி முற்றி தண்ணீர் பாட்டிலையே வந்து நின்றதா… அது தான் அவருக்கு தேவை என்று புரிந்தது. இட்ஸ் சிம்பிள்.” என்று தோள்களை குலுக்கினாள் இனியா.
“அடிப்பாவி சிம்பிள் சிம்பிள்னு அவரை சைட் அடிச்சியாடி?” வாய் பிளந்து அதிர்ச்சியாய் கேட்டாள் யுக்தா.
“ஏய் லூசு… நான் சும்மா பார்த்துட்டு இருந்தேன்.”
“நோ… நோ… இது செல்லாது செல்லாது…”
“போடி… உன்னிடம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்… நானே அவருக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்… நீ வேறு இம்சை செய்கிறாய். போர்வையால் மூடி இருந்ததா கால் இருக்கானு கூட பார்க்காமல் வந்து விட்டேன்…” என்றாள் யோசியாது.
“ஏய்… ஏய்… என்னடி அவர் புன்னகையை பார்த்து வழிஞ்சிட்டு வந்து அவருக்கு கால் இருக்கிறதா… கை இருக்கிறதா என்றெல்லாம் பேய் ரேஞ்சிற்கு ஆராய்ச்சி செய்கிறாய்?”
“ச்சு… நான் ஒன்றும் வழியில… நீ சும்மா உசுப்பேத்தி விட்டுடாதடி. நான் ஒரு ஆர்வத்தில் தான் அவரைப் பார்த்தேன். அவர் வேறு என்னை பிரம்மிப்பாய் பார்த்தாரா…”
“நீ அப்படியே அவரிடம் தொபக்கடீர்னு விழுந்துட்ட… பெயர் பொருத்தம் கூட அருமை பேபி. இனியா, இதயன் – ஐஸ்கொயர்…” என்று கேலியாய் முடித்தாள் யுக்தா. ஐஸ்கொயர் என்றதும் நேற்று இனியன் சொன்னது நினைவு வந்தது. அதை புறந்தள்ளி, பேச்சு செல்லும் திசை அறிந்து பல்லைக் கடித்தாள் இனியா, “யுக்தா…”
“சரி… சரி… புரிகிறது…. டோன்ட் ஒர்ரி… பீ ஹாப்பி… தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற உன்னோட ஆர்வத்தோடு நிறுத்திக்கோங்க இனியா மேடம். ஆவலை தாண்டிவிட்டால் கஷ்டம் தான்…” என்று சற்று தீவிரமாய் முடித்தாள் யுக்தா.
தன் ஆர்வம் கட்டுக்கடங்காமல் செல்ல வாய்ப்பிருப்பதை உணர்த்திய யுக்தாவின் வார்த்தைகள் இனியாவை தெளிவுப்படித்தியது.
“புரியுதுடி… நான் சும்மா ஒரு கியூரியாசிட்டியில் அவரை ஆராய்ந்துவிட்டேன்டி, மத்தபடி வேறு எதுவும் இல்லை.” தேவையற்ற எண்ணங்களை மனதில் வளர விடக்கூடாது என்பது புரிந்து மனதிலிருந்து வந்த வார்த்தைகள் இனியாவை மட்டுமல்ல யுக்தாவையும் அமைதிப்படுத்தியது.
“ஓகேடி மீதியை நேரில் பேசலாம். அம்மா தோசை சுட்டுட்டு கூப்பிடுறாங்க…”
“நல்லா கொட்டிக்க போ… இங்கே பொங்கல்…” சிணுங்கினாள் இனியா.
மறுபுறம் சிரிப்பே பதிலாய் வந்தது. நண்பியுடன் பேசிய தெளிவில் இனியா சற்று தெம்பாய் சஞ்சலமில்லாமல் உணர இதயனை கொஞ்ச நேரம் மறந்திருந்தாள். நிம்மதியாய் உறங்கியுமிருந்தாள்.
*^*^*