பகுதி – 17
தன் மருமகள் மட்டும் தனியாக இருப்பதால்… அவளைப் பார்த்து விட்டு செல்ல வந்த ராஜ்மோகன், அறையில் அவள் இல்லாததால்…. சாப்பிட சென்றிருப்பாள் என யூகித்தவர், சரி பிறகு வருவோம் என நினைத்து மின் தூக்கியின் அருகே வர… சாதனாவும், நேகாவும் பேசியது அவர் காதில் தெளிவாக விழுந்தது.
ராஜ்மோகனை எதிர்பார்க்காததால் பெண்கள் இருவரும் திகைத்து போய் நின்றனர்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று நேகாவை பார்த்து சொன்ன ராஜ்மோகன், “ரூம் கதவை திறம்மா…” என்றார் சாதனாவை பார்த்து.
சாதனா அறையின் கதவை திறந்ததும், முதலில் நேகாவை உள்ளே செல்ல விட்டு பிறகு ராஜ்மோகன் உள்ளே சென்றார். அவருடைய உதவியாளர் அறைக்கு வெளியவே நின்றார். வரவேற்பு அறையில் மூவரும் உட்கார்ந்தனர்.
“இங்க பாரு மா நேகா… எங்களுக்குன்னு ஒரு கெளரவம் இருக்கு. எப்படி வேணா வாழறவங்க இல்லை நாங்க.”
ராஜ்மோகன் பேசியதை கேட்ட நேகா “ஏன் என்னோட கௌரவத்துக்கு என்ன குறைச்சல்?” என்றாள் அலட்சியமாக.
[the_ad id=”6605″]“உன்னைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா… ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் தெரியும். நீ யாரு? உங்க அம்மா யாரு? உங்க அப்பா யாரு? நீ படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்த… படத்துல நடிக்க ஆரம்பிச்ச புதுசுல என்ன பண்ண? எல்லாம் தெரியும்.”
எல்லாம் தெரியும் என்பதில் ராஜ்மோகன் கொடுத்த அழுத்தத்தில் நேகாவிற்கு வியர்க்க ஆரம்பித்தது.
அதுவரை கால் மேல் கால் போட்டு அலட்சியமாக உட்கார்ந்து இருந்தவள், இப்போது முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல்… உட்கார முடியாமல் இருக்கையின் நுனிக்கு வந்திருந்தாள்.
“உன்னை இப்படிக் கூப்பிட்டு வச்சு பேசிட்டு இருக்கனும்னு எனக்கு அவசியமே இல்லை… நான் நினைச்சா ஒரே நிமிஷத்துல உன்னை ஒண்ணுமே இல்லாம பண்ணிடுவேன். ஆனா நான் ஏன் தெரியுமா அப்படிப் பண்ணலை….”
“கைல பிச்சி எரிய வேண்டிய களைக்கு எதுக்குக் கடப்பாரைன்னு பார்க்கிறேன்.”
“நீ என்ன சொன்ன? சாதனா நடுவுல வரலைன்னா ரிஷி உன்னைக் கல்யாணம் பண்ணி இருப்பானா….”
“அவன் மும்பை வந்து உன்னைக் கல்யாணம் செஞ்சிக்கக் கூப்பிட்டது எனக்குத் தெரியும். கண்டிப்பா நீ கல்யாணத்துக்கு ஒதுக்க மாட்டேன்னு தெரியும். அப்படி நீ ஒத்துகிட்டு இருந்தா… நான் வேற வழியில இந்தக் கல்யாணம் நடக்க விடாம செஞ்சிருப்பேன். அதனால இனிமே நீயா கற்பனை பண்ணிக்கிட்டு பேசாத.”
“என் மகனை தனியா சந்திச்சுப் பேசுறது, என் மருமகளை மிரட்றது. இதெல்லாம் இனி வேண்டாம்.”
“உன் வாழ்க்கை உன் விருப்பம் போல வாழ உரிமை இருக்கு. ஆனா என் வீட்ல கலகம் பண்ணனும்னு நினைச்சா… நான் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன்.”
“நிறையப் படங்கள் நடிச்சி பேரும் புகழும் வாங்கனும்னு ஆசை இருக்கு இல்லையா… அப்ப அதுக்கான முயற்சியை மட்டும் பாரு…. இல்லைனா எதுவும் இல்லாம வீட்டோட உட்கார வேண்டியது வரும்.”
ராஜ்மோகன் பேசியது எல்லாமே நறுக்கென்று இருந்தாலும் அவர் கடைசியாகச் சொன்னது, நேகாவின் மனதில் சுறுக்கென்று தைத்தது. இதை மட்டும் அவள் தாய்க் கேட்டிருந்தால்… அவ்வளவு தான். நேகாவை கொன்றே போட்டிருப்பார்.
மகள் சினிமா உலகின் ராணியாக வளம் வர வேண்டும் என்ற கனவில் இருப்பவர், இனி வீட்டோடு இருக்க வேண்டியது வரும் என்ற வார்த்தையை அவரால் நிச்சயமாகத் தாங்கி இருக்க முடியாது.”
அவர் வேண்டாம் என்று சொல்ல சொல்லக் கேட்காமல்தான் ரிஷியின் வரவேற்பிற்கு வந்திருந்தாள். வந்த இடத்தில் வாயை வைத்திக்கொண்டு சும்மா இருக்காமல்… தானே வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்கொண்டது தெரிந்தால்… சும்மா விட மாட்டார் என அஞ்சியவள், “நான் போகணும்…” என்றாள் எழும்பாத குரலில்…
“சரி போ… ஆனா நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்.”
ராஜ்மோகன் பேசி முடித்த நொடி, விட்டால் போதும் என்று நேகா அங்கிருந்த கதவை திறந்து கொண்டு வெளியில் விரைந்து சென்று விட்டாள்.
அவள் சென்றதும் தன் மருமகளைத் திரும்பி பார்த்த ராஜ்மோகன் “எனக்குத் தெரியும் சாதனா… இதெல்லாம் உனக்குப் பார்க்க எவ்வளவு கஷ்ட்டமா இருக்கும்னு. ஆனா வேற வழியில்லை…. அவ கிட்ட இப்படித்தான் பேசணும்.” என்றார்.
[the_ad id=”6605″]உண்மையில் சாதனாவிற்கு நேகாவிடம் எந்தப் பயமும் இல்லை…. ரிஷி தானே உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவளுக்கு ரிஷி மனதில் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை… அதோடு அவன் இந்தத் திருமணம் தன்னை எந்த விதத்திலும் கட்டுபடுத்தாது என்றது வேறு மனதில் ஒரு பக்கம் நெருஞ்சி முள்ளாகக் குத்தியபடி இருந்தது.
ரிஷி தான் மாற வேண்டும். ஆனால் யாரும் கட்டாயபடுத்தியும் அவன் மாறக்கூடாது என்று நினைத்தாள். அதனால் அவள் எதையும் தன் மாமனாரிடம் காட்டிக்கொள்ளவில்லை… அமைதியாக இருந்தாள்.
“நீ கதவை சாத்திக்கோ மா…. நானும் கிளம்புறேன்.”
அவர் சென்றதும் கதவை சாற்றிவிட்டு வந்த சாதனா கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். ரிஷி காலை உணவு அருந்திய சிறிது நேரத்திற்கெல்லாம் வெளியில் கிளம்பி இருந்தான். இங்கேயும் அவர்கள் தொழில்கள் விரிந்து கிளைகள் பரப்பி இருப்பதால்… இங்கேயும் அவர்களுக்கு அலுவலகம், வீடு எல்லாம் உண்டு.
வரவேற்புக்கு கிளம்ப வசதியாக இருக்கட்டும் என்று தான் ஹோட்டலில் தங்கி இருந்தனர். நல்லவேளை புத்தகம் கொண்டு வந்தோம் என நினைத்தவள், படுத்தபடியே புத்தகத்தைக் கையில் எடுத்தாள்.
காலையில் இருந்து படித்துக்கொண்டு தான் இருந்தாள். இரவும் சரியாகத் தூங்காதது கண்களைச் சுழற்ற செய்ய…. சிறு நேரத்தில் அப்படியே உறங்க ஆரம்பித்தாள்.
தொடர்ந்து அடித்த அழைப்பு மணியின் ஓசையில் வேறு வழியில்லாமல் எழுந்துகொண்டவள், அறை வேறு இருட்டாக இருந்ததும் முதலில் பயந்து விட்டாள். பிறகே சுதாரித்து விளக்கை ஒளிர விட்டாள்.
இன்னும் தூக்கம் தெளியவில்லை… மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க…. ரிஷி தான் வந்து விட்டானோ என நினைத்து வேகமாகச் சென்று கதவை திறந்தவள், அங்கே நின்ற தன் மாமனாரை பார்த்ததும் ஏமாற்றம் அடைந்தாள்.
“தூங்கிட்டு இருந்தியா மா…. நான் ஊருக்கு கிளம்புறேன். அதுதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். இனி எலெக்ஷன் வேலை பார்க்கணுமே…. அந்த வேலையா தான் உங்க அப்பாவும் காலையிலேயே கிளம்பி போயிட்டார்.”
“ரிஷி இன்னுமா வரலை…. நீ அவனுக்குப் போன் பண்ணியா….” என்ற ராஜ்மோகன் தனது செல்லை எடுக்க…
“அவங்க கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க. இல்லைன்னா நானே போன் பண்றேன்.” சாதனா சொன்னதும், சரி என ராஜ்மோகனும் சென்று விட்டார்.
அவர் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றவள், அவர் சென்றதும் தான் கவனித்தாள். நட்சத்திர ஹோட்டல் எனபதால் ஆட்கள் நடமாட்டமே இல்லை…. உடனே கதவை தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்து விட்டாள்.
முகம் கழுவி தலை வாரியவள், தனியாக இருக்கும் போது… காபி கொண்டு வர சொல்ல கூடத் தயக்கமாக இருக்க… அங்கிருந்த காபி மேக்கரில் அவளே காபி தயாரித்துக் குடித்தாள்.
தனியாக இருக்க ரொம்பவே ஒரு மாதிரி இருந்த போதும், அவள் ரிஷியை மட்டும் அழைக்கவில்லை…. சத்யாவோடு பேசி ரொம்ப நாட்கள் ஆனதால் அவனை அழைத்தாள்.
“ஹலோ கல்யாணப் பொண்ணு எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா….” சத்யா கேலி செய்ய….
“நியாபகம் இருக்கிறதுனால தான் போன் பண்ணேன். ஆனா நீ அதுக்கூடப் பண்ணலை….”
“நீ எப்ப ப்ரீயா இருப்பேன்னு எனக்கு என்ன தெரியும்? டிஸ்டர்ப் பண்ணக்கூடாது இல்லை…”
சத்யா எப்போதுமே அப்படித்தான். அநாவசியமாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என நினைப்பான். திருமணத்தின் அன்று கூடக் கூட்டமாக இருந்ததால் மேடைக்கு வராமல் தூரத்தில் இருந்தே கை மட்டும் காட்டி விட்டு சென்றுவிட்டான்.
[the_ad id=”6605″]
“ஓகே… அப்புறம் என்ன பண்ற? படிச்சிட்டே இருக்கியா…”
“ஆமாம், ரிஷி எப்படி இருக்காங்க? எப்படி இருக்கு உன்னோட கல்யாண வாழ்க்கை?”
“ரிஷி நல்லா இருக்காங்க. நான் இப்ப சென்னையில இருக்கேன். நேத்து தான் ரிஷப்ஷன் முடிஞ்சது.”
“உன் கல்யாணம் இந்த நேரத்தில போய் வச்சிட்டாங்களே…. இன்னும் மூன்னு வாரத்தில பரிட்சை இருக்கே… நீ என்ன சாதனா பண்ணுவ?” சத்யா கவலையுடன் கேட்க….
“நீ ஏன் டா இவ்வளவு பில் பண்ற? நானும் படிச்சிட்டு தான் இருக்கேன்.” சாதனா சொன்னதைக் கேட்ட சத்யா ஆச்சர்யபட்டுப் போனான்.
“எப்படிச் சாதனா?”
நான் அந்த லட்சனதில தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் என்பதைச் சொல்ல முடியாமல், “பரீட்சை வருதே படிச்சு தான ஆகணும்.” என்றாள் சாதனா.
“இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் படிக்கிறது கஷ்ட்டம் இல்லை…”
நான் பண்ண மாதிரி கல்யாணம் பண்ணா படிக்கலாம் என நினைத்தவள் “நீ எதுவரை படிச்சிருக்க?” எனப் பேச்சை மாற்றிவிட்டாள்.
சத்யாவோடு போன்னில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தாள். அவளுக்குத் தெரியும் அவனைப் படிக்க விடாமல் நேரத்தை வீணடிக்கிறோம் என்று…. ஆனால் தனிமை மிரட்டியதால்… போன்னை வைக்காமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
அந்நேரம் அழைப்பு மணி ஒலிக்க… சாதனா செல்லின் தொடர்பை துண்டிகாமலே பேசியபடியே சென்று யார் என்று பார்க்க… வெளியே ரிஷி தான் நின்று கொண்டிருந்தான்.