காதல் 7:
சில வருடங்களுக்கு முன்னால்…
காலையிலேயே வீட்டிற்கு பரபரப்புடன் வந்த மஞ்சரியைக் கண்டு வசுந்தராவிற்கு பயம், யாருக்கும் என்னவோ ஏதோவென்று..?
“என்னாச்சு மஞ்சு? ஏன் இப்படி வந்திருக்க..?” என்றார் வசுந்தரா.
“எல்லாம் நல்ல விஷயம் தாம்மா.. நம்ம காயத்ரி பெரிய பொண்ணாயிட்டா. அவரும் வீட்ல இல்லை. அதான் நான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்..” என்று மஞ்சு சொல்ல, வசுந்தராவுக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“ரொம்ப சந்தோசம் மஞ்சு..! ஈஸ்வரனுக்கு போனைப் போட்டு சொல்லிடுறேன். அவனும் கிளம்பி வந்துடுவான்..” என்றார் வசுந்தரா.
“சரிம்மா..! நான் வீட்டுக்குப் போறேன். அந்த மகாவை கூட இருக்க சொல்லிட்டு வந்தேன்..” என்ற மஞ்சு உடனடியாக கிளம்பி விட்டாள்.
அங்கே காயத்திரியின் அருகில் இருந்த மகா அவளை வம்படித்துக் கொண்டிருந்தாள். காயத்ரி அவளை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி முழிக்கிற..? நாங்க வயசுக்கு வந்தப்ப உங்கம்மா என்ன பாடு படுத்துனாங்க. இப்படி நடக்காத, அப்படி நடக்காத, குனியாத, நிமிராதன்னு. இனி உனக்கும் அதே தான். பெண்களின் கஷ்ட்ட காலத்திற்குள் உன்னை சலிப்புடன் வரவேற்கிறோம்..” என்று மகா வம்பிழுத்துக் கொண்டிருக்க, மகாவோ அழுதுவிடுபவளைப் போல் அமர்ந்திருந்தாள்.
“பொய் சொல்லாத மகா. வயசுக்கு வந்தா ஸ்கூலுக்கு லீவ் போடலாம். நிறைய பலகாரம் குடுப்பாங்க. யாரும் திட்டவே மாட்டாங்க. எல்லாரும் புது டிரஸ் எடுத்துட்டு வருவாங்க.. இப்படின்னு தான் என் பிரண்ட்ஸ் சொன்னாங்க. நீ என்னை பயமுறுத்துற..?” என்றாள் பாவமாய்.
“நீ சொன்ன எல்லாமே 90S கிட்ஸ்க்கு தான் பொருந்தும். என்ன பண்றது நீ 2k கிட்ஸ்ல பிறந்துட்டியே..? ஜஸ்ட் த்ரீ டேஸ்… உங்கம்மா உன்னை ஸ்கூலுக்கு பேக் பண்ணிடுவாங்க..” என்றாள் மகா.
“மூணு நாளா..? பதினஞ்சு நாள் ஸ்கூல் போக வேண்டாம்ன்னு நினைச்சேன்..” என்றாள் அப்பாவியாய்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டாள் மஞ்சரி.
“ஏதாவது சாப்பிடுறியா காயத்ரி..?” என்று மகளைக் கேட்க, மகாவோ வாய்க்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கென்ன சிரிப்பு..?” என்ற மஞ்சு,
“ஆமா, இதென்ன டிரஸ்..?மேல ஷாலும் போடாம ஒன்னும் போடாம. சுடிதார் போட்டா ஷால் போடத் தெரியாதா..? வரவர நீ சின்ன பிள்ளையா..? ஊர்ல எல்லார் கண்ணும் ஒரே மாதிரி இருக்குமா..?” என்று மஞ்சரி பேசிக் கொண்டே போக,
“ஐயோ சித்தி..! ஆளைவிடுங்க. இது சுடிதார் இல்லை..லெகின்,டாப். இதை இப்படித்தான் போடணும். நான் கிளம்புறேன்..” என்ற மகா, ஆளை விட்டால் போதுமென்று கிளம்பிவிட்டாள்.
வீட்டிற்குள் சென்ற மகா முனங்கிக் கொண்டே செல்ல,
“என்னடி? எதுக்கு முனங்கிட்டே வர்ற..?” என்றாள் நிவேதா.
“இந்த மஞ்சு சித்தி தொல்லை தாங்க முடியலை நிவி. எப்பப் பார்த்தாலும் எதையாவது சொல்லிட்டு. இவங்க எப்பத்தான் மாறப் போறாங்களோ..? காயத்ரிக்காகத் தான் போனேன். இனி அங்கயெல்லாம் போக மாட்டேன்…” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
“ஒன்னு சொல்லிடக் கூடாது. உடனே மூக்கு மேல கோபம் வந்துடும்..” என்று கமலா அவளைத் திட்ட ஆரம்பிக்க,
“என் பொண்ணு யார் பேச்சையும் கேட்கத் தேவையில்லை. அவளுக்கு எப்படி இருக்க பிரியமோ அப்படியே இருக்கட்டும்.” என்று பாண்டியன் சொல்ல,
“நீங்க தான் அவளைக் கெடுக்குறதே..? பாருங்க, யாரையாவது மதிக்கிறாளான்னு?” என்று கமலா ஆதங்கப்பட,
“விடு கமலா..! நம்ம பிள்ளைங்க நம்ம வீட்ல இருக்குற வரைக்கும் தான் சுதந்திரமா இருக்க முடியும். போற வீட்ல எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா..? எதுவும் இல்லைன்னு இல்லாம என் பொண்ணுங்க சந்தோஷமா இருந்தா சரித்தான்..” என்றார் பாண்டியன்.
“கொஞ்சமாவது கஷ்ட்டத்தை சொல்லிக் குடுத்து வளர்க்கணும். இப்படி கேட்ட உடனே எல்லாமே வாங்கிக் குடுத்து குடுத்து தான் குட்டி செவுரா ஆக்கி வச்சிருக்கிங்க. வீட்ல இருக்குற கஷ்ட்டம் ஏதாவது தெரியுதான்னு பாருங்க. ஸ்கூட்டி வேணும்ன்னு ரெண்டு நாளா பிடிவாதம்..” என்றார் கமலா.
“என்னது ரெண்டு நாளாவா..? இதை ஏன் என்கிட்டே சொல்லலை..!” என்றவர்,
“மகா..!” என்றார்.
“என்னங்கப்பா..”
“ஸ்கூட்டி கேட்டியாம்மா..?” என்றார்.
“ஆமாப்பா..! ஆனா, அம்மா திட்டிட்டாங்க..” என்றாள் புகாராய்.
“உனக்கு இல்லாததா..? இன்னைக்கே போய் வாங்கிடலாம்..!” என்றார் பாண்டியன்.
இது தான் பாண்டியன். அவரைப் பொறுத்தவரை அவருடைய மகள்கள் எதற்கும் கலங்கக் கூடாது. அவர்கள் வேண்டும் என்று கேட்டால் அடுத்த நிமிடம் அந்த பொருள் வீட்டில் இருக்கும். அவருடைய சக்திக்கும் மீறிய ஸ்கூல், காலேஜில் தான் சேர்த்து விட்டார். படிப்பில் இருவரும் பயங்கர சுட்டி. அதனால் கட்டிய பீஸ், அவருக்கு மனதுக்கு நிறைவானதாய் போனது. ஆனால் அவர்களுக்காக வாங்கிய கடன் ஒரு பக்கம் மேலே ஏறிக் கொண்டிருப்பதை அவர் மறந்துவிட்டிருந்தார்.
அவருடைய அனைத்து சொத்தும் நிலமாகத்தான் இருந்தது. அந்த விவசாய வருமானத்தை நம்பித்தான் அனைத்தையும் செய்திருந்தார். ஒரு கட்டத்தில் அது தன்னுடைய கழுத்தை இறுக்கும் என்று தெரியாமல்.
அன்று ஏழாம் நாள் காயத்திரிக்கு சடங்கு சுத்தி, வீட்டிற்குள் அழைப்பதாக இருந்தது.
காலையிலிருந்தே மகா வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
“உங்கப்பாவுக்கு தம்பி பொண்ணு. நம்ம போகலைன்னா நல்லா இருக்காது மகா. ஒழுங்கா கிளம்புற வழியைப் பாரு..” என்று கமலா கண்டிப்புடன் சொல்லி விட்டார்.
“ஒன்னு விட்ட தம்பி பொண்ணு. இதை மட்டும் மறந்திடுறாங்க..” என்ற மகா, புலம்பிக் கொண்டே நிவேதாவைப் பார்க்க, அவள் ஏதோ யோசனையில் இருப்பதைப் போல பட்டது.
“என்ன நிவி..? கிளம்பலையா..?” என்றாள்.
“கிளம்பனும் மகா..!” என்று அசிரத்தையாய் சொன்னவள், குளிக்க சென்று விட்டாள்.
“இவ ஹாஸ்ட்டல்ல இருந்து வந்ததுல இருந்து ஆளே சரியில்லையே..? என்னவா இருக்கும்..?” என்ற யோசனையுடன் இருந்தவளுக்கு, நிவியைப் பற்றி தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கலகலப்பாய் இருந்த நிவேதா, சமீப காலமாய் அமைதியாய் இருப்பதை மகாவும் அவ்வப்போது கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
குளித்துவிட்டு வந்த நிவேதா, தாவணியை கட்டிக் கொண்டிருக்க, அவளைப் பார்த்த மகா அரண்டு விட்டாள்.
“நிவி.. என்ன ஆச்சு..? இப்ப ஏன் தாவணியை கட்டிட்டு இருக்க..? அம்மா வந்து பார்த்தா என்னையும் கட்ட சொல்லுவாங்க..” என்று கோபத்துடன் முறைத்தாள் மகா.
“இது ட்ரடிஷனல் பங்க்சன் மகா. இது தான் ஆப்ட்டா இருக்கும். நீயும் இதையே கட்டு..” என்பதோடு முடித்துக் கொண்டாள் நிவேதா.
“கிராதகி..? இதை கட்டிக்கிட்டு எப்படி நடக்குறது..?உனக்கு முதல்ல சொத்துல விஷத்தை வச்சு கொல்லனும்..” என்று அவளைத் திட்டியபடியே தானும் கிளம்பினாள் மகா.
“கிளம்பியாச்சா..?” என்றபடி வந்த கமலா மகள்கள் இருவரையும் பார்த்து அப்படியே நின்று விட்டார். நிவேதா கொஞ்சம் மாநிறம். வட்ட வடிவ முகத்துடன் லட்சணமாய் இருப்பாள். மகாவோ கூடுதல் நிறம் அவள் அப்பாவைப் போல். அவளுக்கு காஜல் என்றால் அப்படி ஒரு பிரியம். அதுவே இன்று அவளை அழகியாகக் காட்டியது.
“எவ்வளவு சொன்னாலும் இந்த மையை மட்டும் குறைச்சிடாத..?” என்று தலையிலடித்துக் கொண்ட கமலா, வேறு எதுவும் சொல்லவில்லை.
“பாரு நிவி..! அம்மா, அப்படியே நம்ம அழகுல மயங்கி நின்னுட்டு, இப்ப அப்படியெல்லாம் இல்லைன்ற மாதிரி பேசிட்டு போறதை..” என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள் மகா.
“அம்மாவுக்கு எப்பவுமே நாம அழகுதான் மகா..!” என்றாள் நிவி.
“வர வர நீ கிழவியாகிட்ட..! இனி வயசான பீசோட சேரக் கூடாது…” என்று வம்படித்துக் கொண்டே சென்றாள் மகா.
இங்கே பிரகதீஸ்வரனின் வீட்டில்,
“அம்மா நேரமாச்சு..!” என்று கத்திக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.
“நான் கிளம்பிட்டேன் ஈஸ்வரா. பாட்டி காலையிலேயே அங்க போய்ட்டாங்க..!” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தவர்,
“கிளம்பலாம்..!” என்றார்.
உறவுக்கார பெண்கள் அனைவரும் அங்கிருந்த சீர்வரிசையை தூக்கிக் கொள்ள, வெள்ளை வேட்டி சட்டை சகிதம் தாய்மாமன் சீர் செய்வதற்காக புறப்பட்டான் ஈஸ்வரன். முடிந்த அளவு சிறப்பாகவே செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான்.
சீருடனும், மேள தாளத்துடனும் வந்தவனைப் பார்த்த மகா,
“ஹேய் நிவி..? யாரு இந்த சரத்குமாரு…?” என்றாள்.
“சரத்குமாரா..?” என்றாள் நிவி புரியாமல்.
“பின்ன இல்லையா..? சரி வேட்டி கட்டுன விஜய் சேதுபதின்னு சொல்லவா..?” என்றாள் கிண்டலாய்.
“இல்ல, சரத்குமாரே நல்லாத்தான் இருக்கு..” என்று சிரித்தாள் நிவி.
“ஞாபகம் வந்திடுச்சு, நம்ம காயத்ரியோட தாய்மாமா தான..?” என்றாள் மகா.
“அதான் உனக்குத் தெரிஞ்சுருக்குள்ள. அப்பறம் என்ன என்கிட்டே கேள்வி..?” என்றாள் நிவி.
“கன்பார்ம் பண்ணிக்கலாம்ன்னு தான். எனக்கு எட்டு, ஒன்பது வயசுல பார்த்தது. இப்ப என்ன ஹீரோ கணக்கா இருக்கான்..?” என்றாள் மகா.
“உனக்குப் பிடிச்சிருந்தா கட்டிக்க..” என்றாள் நிவி.
“ஐய, எனக்கு இந்த மல்லுவேட்டி மைனர் எல்லாம் செட் ஆகாது. என் ஆளு, கோட் சூட்ல சும்மா, ஆளை அசர வைக்கிற மாதிரி இருக்கணும். நாங்கல்லாம் வேற லெவல் தான்..” என்றாள் மகா.
“இப்படி சொன்னவங்க பாதிப் பேருக்கு, இப்படி மாப்பிள்ளை தான் அமைஞ்சிருக்கு..” என்றாள் நிவி சிரித்துக் கொண்டே.
“நீயெல்லாம் கூடப் பிறந்த அக்காவா..? உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன். இனி வாய் வார்த்தைக்குக் கூட இப்படி சொல்லாத..? இப்படி ஆளையெல்லாம் சைட் வேணா அடிக்கலாம். கல்யாணமெல்லாம் பண்ண முடியாது. அதுமட்டுமில்லாம, நான் இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவுலையே இல்லை. கொஞ்ச வருஷமாவது வேலை பார்க்கணும். நிறைய கனவு இருக்கு..” என்றாள் மகா.
“என்னை ஆளை விடுடி.. இந்த படிச்ச பஞ்சாங்கத்தையே எத்தனை தடவை தான் படிப்ப…?” என்று நிவி கடுப்புடன் கேட்க,
“உனக்குப் பொறாமைடி..!” என்றாள் மகா.
ஈஸ்வரன் உள்ளே வந்தபோதும், தாய்மாமனாய் அனைத்தையும் எடுத்து செய்த போதும், பலரின் பார்வை அவன் மேல் தான் இருந்தது.
“பையன் நல்ல ராஜாவாட்டம் இருக்கான்ப்பா. அப்பா இல்லைன்னாலும், ஒரு குறையுமில்லாம கூடப் பிறந்தவளுக்கு செஞ்சுட்டான்..” என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றை பேசிக் கொண்டனர்.
‘பரவாயில்ல, பக்கத்துல பார்க்கும் போது கொஞ்சம் அழகாத்தான் இருக்கான்..ஆனா, முகத்தை ஏன் இப்படி கடப்பாரை மாதிரி வச்சிருக்கான்…’ என்று மனதிற்குள் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தாள் மகா.
அவன் முகமே அப்டித்தான் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.
அதேநேரம், வசுந்தராவும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அத்தை..! நம்ம மாப்பிள்ளையோட அண்ணன் பொண்ணுங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்காங்கல்ல..” என்றார் ருக்குவிடம்.
“அழகாத்தான் இருக்காங்க. ஆனா அவங்கப்பன், சீமையில இல்லாத படிப்பு படிக்க வைக்கிறானாமே..? பொண்ணுங்களை உள்ளூர் மாப்பிள்ளைக்கு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டானாம்…” என்றார் ருக்கு.
“உங்களுக்கு எப்படியத்தை தெரியும்..?” என்றார் வசுந்தரா.
“நம்ம மஞ்சரி தான் சொன்னா..” என்றார் ருக்கு.
“எனக்கு என்னவோ, நம்ம ஈஸ்வரனுக்கு கேட்டுப் பார்க்கலாம்ன்னு தோணுது அத்தை. ரெண்டு பேரும் மகாலட்சுமிங்க மாதிரி இருக்காங்க..!” என்றார் வசுந்தரா.
“மஞ்சு புருஷன் சபரிகிட்ட சொல்லி வேணா கேட்டுப் பார்ப்போம்..” என்றார் ருக்கு.
அதே நேரம் சபரியும், ஈஸ்வரனும் அருகில் வர,
“மாப்பிள்ளை..,உங்க அண்ணன் பாண்டியன் பொண்ணை ஏன் நம்ம ஈஸ்வரனுக்கு கேட்க கூடாது..?” என்றார் வசுந்தரா.
“அட ஆமாம்..அத்தை. கேட்டுப் பார்க்கலாம். எனக்கு இந்த நினைப்பு வராம போய்டுச்சே..?” என்ற சபரி,
“என்ன ஈஸ்வரா..? கேட்ருவோமா..?” என்றான் ஈஸ்வரனைப் பார்த்து.
“இப்பவே என்ன அவசரம் மாமா..?” என்றான் சபரி.
“என்ன மாப்பிள்ளை இப்படி சொல்லிட்ட..? இப்ப இருந்து ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்..” என்ற சபரி,
“நிவேதா..அம்மாடி நிவேதா..” என்றார். கூட்டத்தில் அவளுக்கு சரியாக கேட்கவில்லை. மீண்டும் கொஞ்சம் சத்தமாக கூப்பிட,
“சித்தப்பா கூப்பிடுறார், இவ என்ன யோசனையில இருக்கா. இன்னைக்கு ஆளே சரியில்லையே..?” என்று நினைத்த மகா,
“என்னங்க சித்தப்பா..?” என்றாள் திரும்பி. அப்போது தான் அவளைப் பார்த்தான் ஈஸ்வரன். அதற்குள் சபரியைத் தேடி பாண்டியனே வந்துவிட,
“ஒண்ணுமில்லைம்மா..!” என்றவர், பாண்டியனுடன் பேச ஆரம்பித்து விட்டார்.
“அப்ப நாங்க கிளம்புறோம் சபரி..” என்ற பாண்டியன்,
“ரொம்ப சிறப்பா செஞ்சுட்டிங்க தம்பி..” என்று ஈஸ்வரனைப் பார்த்து சொன்னார்.
“செய்ற முறையைத் தான் செஞ்சோம் மாமா. இதுல பெருசா பேசுற அளவுக்கு ஒன்னும் பண்ணலை மாமா..” என்றான்.
“தம்பி ரொம்ப பொறுப்பா பேசுறாரு சபரி..” என்றார் பாண்டியன்.
“அண்ணா, உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்..” என்றான் சபரி.
“என்ன விஷயம் சபரி..?” என்றார் பாண்டியன்.
“நம்ம நிவேதா கல்யாண விஷயம் தான்..” என்றான் சபரி.
“பேசலாம் சபரி. நிவேதாவுக்கும் படிப்பு முடியப் போகுது. இன்னொரு நாள் பேசலாம்..” என்ற பாண்டியன், மனைவியை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
மற்றவர்கள் எழுந்து சாப்பிட சென்று விட, பாண்டியன் கிளம்புவதைப் பார்த்த மகா,
‘என்ன? நம்மளை விட்டுட்டு போறார்..?’ என்று நினைத்தவள்,
“அப்பா நாங்களும் வர்றோம்..” என்று கத்திக் கொண்டே ஓடினாள். அதற்குள் பாண்டியனும்,கமலாவும் கிளம்பி விட்டிருந்தனர்.
“ச்ச்ச..!” என்று சலித்துக் கொண்டு வேகமாய் திரும்பியவள், பின்னால் வந்து கொண்டிருந்த ஈஸ்வரனின் மீது பலமாக மோதிக் கொண்டாள்.
“ஆத்தாடி..” என்று நகரப் பார்க்க, பாவாடை தடுக்கி, மீண்டும் அவன் மீதே விழப் போனாள். ஆனால் இந்த முறை சுதாரித்து அவளைப் பிடித்துவிட்டான் ஈஸ்வரன்.
“பார்த்து போங்க..! எதுக்கு இப்படி ஓடுறிங்க..?” என்றான் மரியாதையாய்.
அவனை ஏதோ ஒன்பதாவது கிரத்தில் இருப்பவனைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டே சென்றாள் மகா.
“இப்ப எதுக்குடி ஓடுன..?” என்றாள் நிவி.
“அப்பா கிளம்பிட்டார் நிவி..” என்றாள்.
“நான் தான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றோம்ன்னு சொன்னேன்..” என்றாள் நிவி.
“அடிப்பாவி..! இனி நமக்கு இங்க என்ன வேலை..?” என்றாள் மகா.
“காயத்ரியைப் பாரு.. பாவமா இருக்குறா. கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்..” என்றாள் நிவேதா.
“எல்லாருக்கும் பாவம் பார்க்குறியே..? எனக்குப் பார்க்குறியா..? இந்த மஞ்சு சித்தி என்னைப் பார்த்தாலே, அறிவுரையை அவுத்து விட்ருவாங்க..காது ஜவ்வு கிழியப் போகுது..” என்றாள் மகா.
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..! நீ எங்கயும் ஓடி விழுந்து வைக்காத. அவர் பிடிக்க போய் சரியா போய்டுச்சு. இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்..?” என்றாள் நிவி.
“இல்லைன்னாலும் ஒன்னும் ஆகியிருக்காது, தரையில விழுந்திருப்பேன். அவன் மேல விழுந்ததுக்கு,தரை எவ்வளவோ மேல். ரெண்டுக்கும் அப்படி ஒன்னும் வித்யாசம் தெரியலை..” என்று அசால்ட்டாய் சொல்லி விட்டு சென்றாள் மகா.
“அடிப்பாவி..!” என்று அப்பாவியாய் நின்றிருந்தாள் நிவேதா.இவர்களின் பேச்சு புரியாவிட்டாலும், மகாவின் பேச்சில் இருந்து, அவள் தன்னைத் தானே ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டான் ஈஸ்வரன். அவனையும் மீறி அவனுடைய உதடுகள் புன்னகைத்து வைத்தன.
“என்னம்மா சொல்றிங்க? நிஜமாவா..?” என்றாள் மஞ்சரி புரியாமல்.
“இதுக்கு ஏன் இப்படி அதிர்ச்சியாகுற..? நல்ல விஷயம் தானே..?” என்றான் சபரி.
“ஏங்க? இதெல்லாம் நடக்குற காரியமா..? உங்க அண்ணன் இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டாரு. அவரு பொண்ணுக்கு கோடீஸ்வரனைத் தான் தேடிகிட்டு இருக்காரு. அப்பறம் எப்படி பொண்ணு குடுப்பாரு?” என்றாள் மஞ்சு.
“ஏன்? நம்மளும் என்ன ஒன்னுமில்லாதவங்களா?” என்றார் ருக்கு.
“நான் அதுக்கு சொல்லலை பாட்டி. அவங்களை விட நமக்கு தான் நிலம் புலம் எல்லாம் அதிகமா இருக்கு. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, இப்பல்லாம் இருக்குறவங்களை விட, இருக்குற மாதிரி காட்டிக்கிறவங்களுக்கு தான் மதிப்பு அதிகம்…” என்றாள் மஞ்சு.
“நாமளா ஏன் பேசணும்..? அவங்ககிட்ட நேரா பொண்ணு கேட்டு போனா தெரிஞ்சிடப் போகுது..?” என்றார் வசுந்தரா.
ஈஸ்வரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“என்ன ஈஸ்வரா..? நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்குற..?” என்றான் சபரி.
“நான் இனி விவசாயமே பண்ணலாம்ன்னு இருக்கேன் மாமா..” என்று குண்டைத் தூக்கிப் போட்டான் ஈஸ்வரன்.
“என்ன ஈஸ்வரா சொல்ற..?” என்றான் சபரி.
“ஆமாம் மாமா..! நான் முடிவெடுத்துட்டேன். பொண்ணு விஷயமெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க..” என்று முடிவை அவர்கள் பக்கம் விட்டுவிட்டான்.
“சரி, அப்ப பேசி முடிச்சுடுவோம்..” என்றான் சபரி.
நினைவுகளில் இருந்தவனை தட்டி எழுப்பியது, மகாவின் போன். விடாமல் அடித்துக் கொண்டிருக்க, சில நிமிடங்களுக்குப் பிறகே எழுந்தாள்.
“யாரு இந்த நேரத்துல..?” என்று புலம்பிக் கொண்டே போனை எடுத்தவள், அழைப்பு நின்று போகவும், மீண்டும் படுத்துவிட்டாள்.
படுத்தவள் என்ன நினைத்தாளோ, மீண்டும் எழுந்து..
“ஏன் இன்னும் நீங்க தூங்காம இருக்கீங்க..? ஒருவேளை, என்னை கொலை பண்ண பிளான் போட்டுட்டு இருக்கிங்களோ..?” என்றாள் அந்த தூக்கத்திலும்.
அதைக்கேட்ட ஈஸ்வரனுக்கு, உண்மையாகவே அவளை கொன்றுவிடும் எண்ணமே வந்துவிடும் போல் இருந்தது.
“ஆமான்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்..?” என்றான் ஈஸ்வரன்.
“என்னது ஆமாவா..?” என்றவளின் தூக்கம் அவளை விட்டு சிறிது தூரம் சென்றிருந்தது.
“உங்க அக்கா ஏன் சூசைட் பண்ணிகிட்டா..?” என்றான் சபரி.
“என்ன? தாலி எனக்குக் கட்டிட்டு நினைப்பு எங்க அக்கா மேல வருது..?” என்றாள் சந்தேகமாய்.
அவளைப் பார்த்து முறைத்தவன்,
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..” என்றான் எரிச்சலாய்.
“ஆமா, இவரு திருத்துவாருன்னு தான் நாங்க காத்துகிட்டு இருக்கோம்..” என்றாள் இடக்காய்.
“சொல்ல இஷட்டம்னா சொல்லு. இல்லையா பேசாம படு. சும்மா நொய்யி நொய்யின்னுட்டு…” என்றவன், எழுந்து வெளியே செல்ல முற்பட்டான்.
“இப்ப எங்க போறீங்க..?” என்றாள் அவசரமாய்.
“ஏன்? உன்கிட்ட சொல்லிட்டு தான் போகனுமா..?” என்றான் எரிச்சலாய்.
“நீங்க எங்கயும் போங்க..எப்படியோ போங்க. ஆனா, இந்த நேரத்துல போகாதிங்க. அதுக்கும் என்னைத் தான் பேசுவாங்க…” என்றாள்.
“அம்மா தாயே..யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்படியே சொன்னாலும் அதை நான் பார்த்துக்கிறேன்..தயவு செஞ்சு கொஞ்ச நேரம் அமைதியா இரு..” என்றான் ஈஸ்வரன்.
“ஹோ..அப்ப என்னைய யாரும் எதுவும் சொல்லவிடாம வச்சுக்குவிங்கன்னு சொல்லுங்க. இதுவல்லவோ பத்தினன்..” என்றாள்.
“பத்தினனா..?” என்றான் புரியாமல்.
“ஹிம்..! பத்தினியோட ஆண்பால் வெர்ஷன்..” என்றாள்.
“நீ பிறக்கும் போதே பேசிகிட்டே தான் பிறந்தியா..?” என்றான் எரிச்சலாய்.
“தெரியலையே..? நாளைக்கு எங்க வீட்டுக்கு போகும் போது, அம்மாகிட்ட கேட்டு சொல்லவா..?” என்றாள்.
“ஆண்டவா..?” என்றான் முடியாமல்.
“அவரு தூங்கிட்டு இருப்பாரு..” என்ற மகா, அவனின் முறைப்பை மேலும் அதிகப் படுத்தாமல் அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள்.
‘என்ன நடக்குது ஈஸ்வரா..? உன்னோட பொறுமை எந்த அளவுக்கு இருக்க போகுதுன்னு தெரியலையே..? இப்படி பேசியே உன்னை ஒரு வழியாக்கிடுவா போலயே..? இனி இவளை இப்படியே விட்டு வச்சா கதைக்கு ஆகாது…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஈஸ்வரன்.
‘இதைத்தான் நீயும் நேத்து இருந்து யோசிக்கிற..? எங்க அவ தான் உன்னை பேசவே விட மாட்டேங்குறாளே..? அவ ஒரு மார்டன் மகாலட்சுமி’ என்று அவனின் மனசாட்சி அவனை கிண்டல் செய்ய,
அவளைத் திரும்பி ஆழ்ந்து பார்த்தவன், அமைதியாக வெளியேறிவிட்டான். அந்த நேரத்திற்கு அந்த மொட்டை மாடி தான் அவனின் மன அழுத்தங்களுக்கு ஆறுதல்.