“அடிச்சீங்களா?”
அதிர்வா? திகைப்பா? என பிரித்தறிய முடிவா பாவனையில், அவளது சுளித்த முகத்தை கேள்வியாய் பார்த்து அவன் நிற்க,
“ம்ம்ம்” என முனகினாள் அஷ்டா.
‘இல்லை’ என அவள் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தவனுக்கு, அவள் ‘ஆம்’ என்றதும் எப்படி இருந்தது என்பதை சொல்லி விளக்க இயலாது.
முழுதாய் ஒரு நிமிடம்! நீண்ட அறுபது நொடிகள் தன்னை சமன் படுத்தி, குரலை செருமி, நிதானத்துக்கு கொண்டு வர முயன்று,
“ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையில் தன் பொறுமையை நிரூபித்தான் வீரா.
எழுந்து அமர்ந்த அஷ்டா, “எதுக்கு என்னை தொட்டீங்க?” என்றாள்.
இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவனுக்கு.
“இப்போ தொட்டதால என்னாச்சு?”
“எனக்கு இஷ்டம் இல்லாம என்மேல எப்டி நீங்க கை வைக்கலாம்?”
“இஷ்டம் இல்லாமையா?”
‘இதை நான் நம்பனுமா?’ என்ற தொனி அவனிடம்.
முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“இந்த ஒரு மாசத்துல ஒரு நாளாவது நான் உங்கக்கிட்ட நெருங்கி வந்துருக்கேனா?”
“……….”
“உங்கக்கிட்ட தான்ங்க கேட்குறேன்! சொல்லுங்க!” அவன் குரல் உயர்த்த அப்போதும் அமைதியாய் இருந்தாள்.
“எனக்கு தயவுசெஞ்சு பதில் சொல்லுங்க” அவன் பொறுமை கரைய ஆரம்பிக்க, “இல்ல” என முனுமுனுத்தாள் அஷ்டா.
“அப்பறம் ஏங்க என்னை அடிக்குற அளவு?”
அவனால் அவள் அடித்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. வேறு எதற்க்காக வேண்டுமானாலும் அவள் அடித்திருந்தால் அதை பெருதுப்படுத்தாமல் விளையாட்டாய் கடந்திருக்க அவனால் முடியும்.
ஆனால், ‘இந்த’ விஷயத்தில் அவளிடம் தன் நன்மதிப்பை இழந்துவிட கூடாது என கண்ணியமாய் காத்திருந்தவனுக்கு, இது அவன் தன்மானதிற்க்கான பெரும் அடியாகவே இருந்தது.
“அது என்னவோ! அந்த நேரம், கோவத்துல… தெரியாம….”
“தெரியாமன்னு சொல்லாதீங்க! நான் நம்ப மாட்டேன்” என்றவன் அறையை விட்டு வெளியேறி கூடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டான்.
அவன் மனம் அமைதியின்றி அலறியது.
‘எப்படி தன்னைப்போய்?’
‘நான் தானே? தொட்டால் தான் என்ன?’
மனம் கேள்வியாய் கேட்க, உள்ளே இருந்த அஷ்டாவுக்குமே, தான் கை நீட்டியது சற்று அதிகப்படி என்று தோன்ற தான் செய்தது.
‘வேண்டாம்’ என ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலே விலகியிருப்பான் என்பது அவளுக்கு நன்றாய் புரிந்தது. ஆனாலும், அந்த நொடி… அவசரத்தில் செய்த தவறு, அவனை பாதித்ததை நினைத்து வருத்தமாய் இருக்க, எழுந்து வெளியே சென்றாள்.
தலையில் கைவைத்து சுருங்கிய புருங்களுடன் அவன் அமர்ந்திருக்க, “எழுந்து உள்ள வாங்க! தூங்கலாம்” என்றாள் இயல்புபோல.
திரும்பி ஒரு பார்வை பார்த்தான். அதில் அத்தனை ஆதங்கம் கொட்டிக்கிடந்தாலும், “நீங்க தூங்குங்க! போங்க” என அமைதியாய் சொன்னான் வீரா.
“நீங்களும் வாங்க, நேரமாச்சு”
“வரேன், போங்க” மீண்டும் அவன் கண்களை மூடிக்கொள்ள, அத்துடன் ‘தன் வேலை முடிந்தது, இவ்வளவு தான் என் சமாதானம்’ என அறைக்குள் சென்று படுத்துவிட்டாள் அஷ்டா.
நேரம் வேகமாய் ஓட, விடியற்காலை விழிப்பு தட்டியது அவளுக்கு. அருகே அவன் இல்லை.
‘எழுந்துவிட்டான் போலும்’ என எண்ணிக்கொண்டாள்.
திரும்பி படுக்க தோன்றினாலும், அவனை பார்க்க வேண்டும் போல் தோன்ற வேகமாய் குளித்து வெளியே வந்தாள்.
வந்தவள், உண்மையில் திகைத்துத்தான் போனாள்.
இரவு அந்த சோபாவில் எப்படி அமர்ந்திருந்தானோ, அதே போல இன்னமும் தலையை கையில் தாங்கி யோசனையிலேயே அமர்ந்திருந்தான் வீரா.
உள்ளுக்குள் திடுக்கென ஆனாலும், வெளியே அதை மறைத்து, “நீங்க தூங்கலையா?” என அவன் அருகே சென்றாள் அவள்.
அவள் குரலில் கண் திறந்தவன், இமைக்காது அவளையே பார்க்க, “என்ன?” என்றாள் தாளமிடும் நெஞ்சுக்கூட்டை மறைத்து.
அவன் பார்வை அவளை நடுங்க வைத்தது.
“ஒன்னும் இல்ல” வெறுமையாய் வந்தது அவனிடம் இருந்து.
“ப்ச்! நான் தான் நேத்தே சாரி சொல்லிட்டேன்ல… அப்பறம் என்ன இன்னும்? எழுந்துரிங்க”
“சாரி சொன்னீங்களா? எப்போ?”
“அதான்! உள்ள வந்து படுக்க கூப்பிட்டேனே”
“ஓஹோ! அதான் சாரி கேட்குறதா?”
மௌனமாய் தலைகுனிந்தாள். வார்த்தைக்கு வார்த்தை பேசினாலும் ஏதோ தவறாய் நடக்க போவதாய் ஒரு அபாய சங்கு அவளுள் நிசப்தமாய் ஒலித்துக்கொண்டு தான் இருந்தது.
“எப்படிங்க உங்களால இயல்பா பேச முடியுது? என்னால… என்னவோ… ஒருமாதிரி இருக்கு” தலையை அழுத்திப்பிடித்துக்கொண்டு அவன் சொல்ல, ‘அந்த அளவுக்கு நாம் என்ன செய்துவிட்டோம்?’ என புரியாமல் நின்றாள்.
ஒருவேளை, தன் அன்னை விளையாட்டாய் கூட தந்தையை லேசாக அடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என ஒரு நொடி நினைத்திருந்தால் கூட, செய்ததன், செய்த சூழ்நிலையின் கணம் அவளுக்கு விளங்கியிருக்கும்.
இருப்பினும், “இப்போ என்ன நான் உங்களை அடிச்சது தானே உங்க பிரச்சனை? நீங்க வேணுன்னா பதிலுக்கு என்ன அடிச்சுக்கோங்க!” என்றாள் விறைப்பாய்.
“நீங்க என்னை அடிச்சது எனக்கு பிரச்சனையே இல்லை! ஆசையா, கோவமா, விளையாட்டா எப்படி வேணாலும் நீங்க என்னை அடிக்கலாம்! ஆனா, ‘அந்த’ மாதிரி ஒரு சூழ்நிலைல, முகம் முழுக்க வெறுப்போட…. அதை தான் என்னால தாங்கிக்க முடியல”
“வெறுப்பு எல்லாம் ஒன்னும் இல்ல! நீங்களா கற்பனை செஞ்சுக்காதீங்க!”
“வெறுப்பு இல்லன்னா வேற என்ன? எதனால அடிச்சீங்க?”
“நான் தான் ஆறு மாசத்துக்கு ஒன்னும் வேண்டாம்ன்னு சொன்னேன்ல? சரின்னு சொல்லிதானே கல்யாணம் செஞ்சீங்க? இப்போ வார்த்தை மீறினா என்ன அர்த்தம்” சூடாக வந்தது அவள் வாதம்.
“ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க தானே அந்த ஆறு மாச அவகாசம்? இத்தனை நாள்ல நான் எப்படின்னு உங்களுக்கு புரியலையா?”
“ஒரு மாசத்துல எப்படிங்க ஒருத்தர் குணத்தை என்னால புரிஞ்சுக்க முடியும்?” மறுகேள்வி கேட்டாள் அவள்.
ஆழ மூச்செடுத்து தன்னை தானே அமைதிப்படுத்திக்கொண்டிருந்தான் வீரா.
அவன் அமைதியாகவும், “என்ன யோசிக்குறீங்க?” என்றாள்.
நிதானமாய் அவளை ஏறிட்டவன், “நீங்க என் தலைல மொளகா அறைக்குறீங்கன்னு தோணுது! நான் இல்லாம, வேற ஒருத்தனா இருந்தா ஆறு மாசம் இல்ல… ஆறு நாள் கூட சும்மா இருந்துருக்க மாட்டான்!” என்றான்.
“மத்தவங்களை விடுங்க… நான் உங்ககிட்ட கேட்டு தானே கல்யாணம் செஞ்சேன்! அப்பல்லாம் நல்லவன் மாதிரி தலையாட்டிட்டு இப்போ என்ன வந்துச்சாம்?”
“நல்லவனை நல்லவனாவே இருக்க விட்டுருந்தா தான் பிரச்சனை இல்லையே”
“இப்போ யார் என்ன செஞ்சுட்டாங்க?”
“உங்களுக்கு தெரியாதா?” என்றான்.
“தெரியாது!!!” என்றாள்.
“ஒருவாரமா நீங்க உருப்படியா தான் ட்ரெஸ் பண்றீங்களா?” நேரிடையாய் கேட்டு விட்டான்.
பதில் சொல்ல துணிவின்றி விக்கித்து நின்றாள் அவள்.
“சொல்லுங்க! தன்னால விலகுற புடவைக்கும், தானா விலக்குற புடவைக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது எனக்கு?” கூர்ப்பார்வையுடன் கேட்டான் வீரா.
படபடவென வந்தது அவளுக்கு.
“உள்ளுக்குள்ள ஆசை, எதிர்ப்பார்ப்பு எல்லாம் இருந்தும், நீங்க கேட்டுக்கிட்டதுக்காக தான் நான் தள்ளி நிக்குறேன்! அப்படி இருக்கப்போ திடீர்ன்னு நீங்க எக்குத்தப்பா ட்ரெஸ் பண்ணா, நான் என்ன நினைக்கட்டும்? நேரிடையா ‘சம்மதம்’ சொல்ல கூச்சப்பட்டு தான் இப்படி மறைமுகமா சொல்றீங்கன்னு தோணாதா எனக்கு?”
அவனை பரிசோதிக்க அவள் அப்படி செய்தது, தவறான அர்த்தத்தில் அவனுக்கு புரிந்திருக்கிறது என்றதும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அவளால்.
“எப்பவுமே நீங்க உடுத்துறது அப்படிதான்னா நான் ஒன்னும் நினைக்க போறது இல்ல! திடீர்ன்னு இந்த ஒருவாரமா அப்டி செஞ்சா?” என நிறுத்தியவன்,
“நானும் மனுஷன் தானே? எனக்கும் எல்லா உணர்வும் இருக்கும் தானே?” என்றான்.
என்ன சொல்லி சமாளிக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தாள்.
“அது…. நான்… சும்மா…” சொல்ல தெரியாமல் அவள் தயங்க,
“கல்யாணம் ஆன எல்லாரும் பிடிக்குதோ பிடிக்கலையோ சேர்ந்து வாழ்ந்துட்டு தாங்க இருக்காங்க! யாரும் இப்படி அவகாசம் கேட்டு கல்யாணம் செய்யுறதும் இல்ல… மனைவி சொன்னதுக்காக எவனும் தொடாம இருக்குறதும் இல்ல”
“ஆரம்பத்துல ஏதோ ஒரு காரணத்துக்காக சொல்றீங்க! கல்யாணம் ஆன பிறகு சரி ஆகிடுவீங்கன்னு நினைச்சேன்! ஒருமாசம் கூட இருந்தும், என்னை இன்னும் ஏன் நீங்க நம்பலன்னு தெரியல”
வீரா பேச, “ஒரு மாசம் ஒருத்தன் நடிக்குறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை! நீங்க இயல்பாவே இப்படிதானா இல்ல நடிக்குறீங்களான்னு நான் தெரிஞ்சுக்க கொஞ்சம் டைம் எடுக்காதா?” என்றாள் அஷ்டா.
படபடவென அவள் பொறிய, “நடிக்குறேனா?” திகைத்து நின்றான் அவன்.
“நடிப்புன்னு நான் சொல்லல! எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கனும்ன்னு ஆரம்பத்துல முயற்சி செய்வீங்க! ஆனா நாளாக நாளாக தான் அது உங்க உண்மையான குணமா என்னனு தெரிய வரும்! இல்லையா?” என்றவள்,
“ஒரு பேச்சுக்கு சொல்றேன்…! அன்னைக்கு அம்மா பணம் கேட்டதும் ஏன்? எதுக்கு?ன்னு கேட்காம காசை எடுத்துக்க சொன்ன நீங்க, நான் பணம் எடுத்தப்போ எதுக்கு அவ்ளோ பணம்ன்னு கேட்டீங்க!
உங்களுக்கு ஒரு பணகஷ்டம் வந்தப்போ அம்மா நகையை கூட வாங்கிக்கக்கூடாதுன்னு நினைக்குற அதே நீங்க, தேவைப்பட்டா மாமனார்கிட்ட கேட்குறேன்னு சொல்றீங்க!
எல்லாத்துக்கும் மேல ‘அது நம்ம பங்க்! சொந்த பங்க்’ன்னு வார்த்தைக்கு வார்த்தை பேசிட்டு, இப்போ கடைசியா அதுல வெறும் நாற்பது பர்சன்ட் தான் இருக்குன்னு சொல்றீங்க! மூணு நாலு லட்சம் வருமானம் வருதுன்னு பொய் சொல்லி தானே என்னை கல்யாணம் செஞ்சீங்க அப்போ!!!
இத்தனை விஷயம் இந்த ஒரு மாசத்துல எனக்கு பிடிக்காம இருக்கப்போ இன்னும் நாளாக நாளாக எத்தனை விஷயம் வரும்?
ஒருவேளை இன்னும் கொஞ்சநாள்ல எனக்கு உங்களை பிடிக்காம போய், மனவருத்தம் வந்து, சேர்ந்தே வாழ முடியாதுங்குற சூழ்நிலைக்கு நம்ம தள்ளப்படுறப்போ, நமக்கு ஒரு குழந்தைன்னு இருந்துச்சுன்னா,
பிடிக்காத உங்களை விட்டு விலகவும் முடியாம, குழந்தைக்காக உங்களோட சேர்ந்து வாழவும் முடியாம நான் கஷ்டப்படனும்! என்னோட சேர்ந்து என் குழந்தையும் கஷ்டப்படனும்… தேவையா இதெல்லாம்? சொல்லுங்க? அதான் ஒரு ஆறு மாசம் போன பிறகு ‘அதெல்லாம்’ பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்!
என்னை பொறுத்த வரைக்கும் அந்த ஆறு மாசமே ரொம்ப கம்மியான டியூரேஷன் தான் தெரியுமா?”
அவள் பேச பேச அப்படியே சமைந்து நின்றான் வீரா.
“என் பிரன்ட் ஒருத்தி இதே நிலைமைல தான் இருந்து கஷ்டப்படுறா! அது தெரிஞ்ச பிறகு தான், நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்! சரியா அந்நேரம் உங்களை அப்பா காட்டவும், முதல்ல பேசி பார்ப்போம், ஒத்து வரலன்னா விலகிடுவோம்ன்னு தான் நினைச்சேன்! ஆனா, நீங்க ‘சரி’ன்னு சொல்லவும் தான் உங்க வார்த்தையை நம்பி கல்யாணம் செஞ்சேன்”
‘வார்த்தை தவறிவிட்டாய்’ என மறைமுகமாய் குத்திக்காட்டினாள் அஷ்டா.
அதோடு கூட நிறுத்தியிருக்கலாம். அவள் நாக்கில் இருந்த ‘வெள்ளிக்கு அடுத்தவன்’ எங்கே விட்டான்!?
“நான் கேட்டதும் நீங்க ‘சரி’ன்னு சொன்னதே எனக்கு டவுட் தான்! அதெப்படி ஒரு ஆம்பளை ‘இந்த’ விஷயத்துக்கு சட்டுன்னு ஓகே சொல்றாருன்னு! அப்பறம் என் பிரன்ட் சொன்னா! ஒருவேளை உங்கப்பக்கம் ‘இந்த’ விஷயத்துல எதுவும் தப்பு இருக்குமோன்னு!
நானும் யோசிச்சு பார்த்தேன்… இத்தனை வருஷமா கல்யாணம் செஞ்சுக்கல! நல்லா சம்பாதிக்குறீங்க! அழகா இருக்கீங்க! ஆனாலும், ஏன் கல்யாணம் ஆகாம போச்சுன்னு!
அந்த டவுட்ல தான் கொஞ்சம் அப்படி இப்படி ட்ரெஸ் பண்ணி உங்களை டெஸ்ட் பண்ணேன்! நீங்க என்னை கண்டுக்காம இருந்தப்போ எல்லாம் ரொம்ப பயந்துட்டேன்! உங்களுக்கு தான் ‘இது’ல எதுவும் பிரச்சனையோ!? அதான் நான் கேட்டதும் ‘சரி’ன்னு சொல்லி என்னை கல்யாணம் செஞ்சீங்களோன்னு!!! ஆனா, அப்படி ஒன்னும் இல்லன்னு நேத்து கிளியர் ஆகிடுச்சு!”
அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் கண்கள் சிவப்பதை அறியாமல் பேசிக்கொண்டே போனவளை,
“வீட்டை விட்டு வெளில போ” என அடக்கப்பட்ட குரலில் சீற்றமாய் சொன்னான் வீரா.
அவன் சொன்னது சரியாய் புரியாமல், “என்ன சொன்னீங்க?” என அவள் திரும்ப கேட்க,
“வீட்டை விட்டு வெளில போ’ன்னு சொன்னேன்! கேட்டுச்சா இல்லையா?
இனி உன் மூஞ்சியை கூட நான் பார்க்கக்கூடாது.. போடி வெளில”
கண்கள் சிவக்க, கழுத்து நரம்பு புடைக்க, அடக்கி வைத்த ஆக்ரோஷத்துடன், வீடதிர, அவன் போட்ட சத்தத்தில் அவளது கைகள் கிடுகிடுவென நடுங்கியது.
வீராவை இப்படி ஒரு பரிமாணத்தில் அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை.
கல்லென அவள் அப்படியே நிற்க, வாசலை நோக்கி கைக்காட்டி, “போடி வெளில” என அவன் கர்ஜித்த நேரம்,
“வீரா!!!” என வாசலில் வந்து நின்றனர் சண்முகமும் நீலாவும்.