காதல் 12:
ஊருக்கு வந்து நிவேதாவைப் பார்த்த மகாவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி. புதிதாய் கல்யாணம் ஆன எந்த ஒரு மகிழ்ச்சியும் அவள் முகத்தில் இல்லை. முகத்தில் பேருக்கு இருந்த புன்னகையைக் கண்டு கொண்டாள் மகா.
“நிவி உண்மையை சொல்லு..! நீ நிஜமாவே சந்தோஷமா இருக்கியா..? உன்னைப் பார்த்தா அப்படி தெரியலையே..?” என்றாள் மகா.
“உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் தான் மகா. எனக்கென்ன குறை? நான் நல்லாத்தான் இருக்கேன். ஒரு பிரச்சனையுமில்லை. நீ எப்படி இருக்க? வேலையெல்லாம் எப்படி போகுது..?” என்றாள் நிவேதா.
“எனக்கென்ன நிவி..? திவ்யமா இருக்கேன். பிடிச்ச வேலை, பிடிச்ச சூழல், இப்படி எல்லாமே நல்லாத்தான் போகுது..” என்றாள் மகா. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வந்தான் அசோக்.
“என்ன மகா..? ஆளையே பார்க்க முடியலை. கல்யாணத்துல பார்த்தது. போன்ல கூட பேசுறது இல்லை..” என்றான் அசோக்.
“என்கிட்டே பேசி என்ன செய்ய போறீங்க..?எங்கக்கா கூட நல்லா பேசினாலே போதும்…” என்றாள்.
“உங்க அக்காவை ராணி மாதிரி வச்சிருக்கேன்… அவளையே கேட்டுப் பாரேன்..” என்றான்.
“பார்த்தா அப்படி தெரியலையே..? எங்கக்கா காஞ்ச கருவாடு மாதிரி ஆகிட்டா..என்ன பண்றிங்க அவளை..?” என்றாள் முகத்தில் சிரிப்பே இல்லாமல்.
“என்ன மகா..? என்னை நம்பலையா..? வேணும்ன்னா நீயும் உங்கக்கா கூட வாயேன் துணைக்கு. பக்கத்துல இருந்து பார்த்தாத்தான தெரியும்..” என்றான் ஒரு மாதிரியான குரலில்.
“என்னது..??” என்றாள் கோபமாக.
“இல்லை, உங்கக்காவை நல்லா வச்சிருக்கேனா இல்லையான்னு தான்..” என்றான்.
“அவ எங்க இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சுடும். பார்த்து நடந்துக்கோங்க..” என்று மிரட்டல் தொனியில் சொன்னவள், அதற்கு பிறகு அவனிடம் பேசக் கூட இல்லை. ஆனால் அவனின் பார்வை சரியில்லை என்பதை மட்டும் உறுதியாக நம்பினாள் மகா.
அது தான் நிவேதாவை அவள் கடைசியாக உயிருடன் பார்த்தது. அடுத்த முறை பார்க்கும் போது அவளை பிணமாகத்தான் பார்ப்பாள் என்று கனவா கண்டாள்.
இப்போதும் அதைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். மனைவியே ஆன போதும் ஈஸ்வரனின் கண்களில் ஒரு நாளும் அப்படி கள்ளப் பார்வையை அவள் பார்த்தது கிடையாது. இது எல்லாமே அவள் மனதிற்கு புரிந்தாலும், மூளைக்கு ஏறவிடாமல் ஏதோ ஒன்று அவளைத் தடுத்துக் கொண்டே இருந்தது.
“மகா சாப்பிட வாம்மா..” என்று கமலாவின் குரல் கேட்கும் வரை அவள் இந்த யோசனையில் தான் இருந்தாள்.
“எனக்குப் பசியில்லைம்மா..” என்றாள்.
“சாப்பிட்டு மாத்திரை போடணும். அதுக்காகவாவது கொஞ்சம் சாப்பிடு..” என்றார் கமலா.
“எத்தனை நாளைக்கு மாத்திரை குடுத்திருக்காங்கம்மா..?” என்றாள்.
“ஒரு மாசத்துக்கு குடுத்திருக்காங்க..! அதுக்கப்பறம் வர சொல்லியிருக்காங்க மகா..” என்றார் கமலா.
‘சாதாரண மயக்கத்துக்கு எதுக்கு ஒரு மாசம் மாத்திரை..?’ என்று யோசித்தவள், அந்த மாத்திரையை எடுத்துப் பார்த்தாள்.
“என்ன இத்தனை மாத்திரை..?” என்று மாத்திரையின் பெயர்களை உடனடியாக கூகுள் பண்ணிப் பார்க்க, அனைத்துத் தகவலையும் கூகுல் அவளிடம் கொட்டியது.
தனக்கு இருக்கும் பிரச்சனையை உணர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு அவள் சின்னப் பெண்ணும் இல்லையே. தனக்கு இருந்த அறிகுறியும், நோயின் அறிகுறியும் ஒன்றாய் இருப்பதைப் பார்த்தவள், பிரச்சனையை ஈஸ்வரன் சொல்லாமலே உணர்ந்து கொண்டாள்.
“இதனால தான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு போனாரா..?” என்று தனக்குள் நினைத்துக் கொண்டவளுக்கு, மனம் ஏனோ ஒரு மாதிரியாக உணர்ந்தது. சின்ன பிரச்சனை கூட, அருகில் யாரும் இல்லாத போது பெரியதாய் தோன்றும். மகாவிற்கும் அப்படித்தான் தோன்றியதோ என்னவோ..?
கமலாவிடம் எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு, மாத்திரையும் முழுங்கிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
அங்கே ஈஸ்வரனோ இவளின் ஞாபகத்தில் தான் இருந்தான். விட்டுவிட்டு வந்து விட்டாலும், நினைப்பு என்னவோ அவளைச் சுற்றி தான் இருந்தது.
மனசு கேட்காமல் அவளுக்கு போன் போட, முதல் ரிங்கிலேயே எடுத்தாள்.
“ஹலோ..!”
“ம்ம்..சொல்லுங்க..” என்றாள்.
“சாப்பிட்டியா மகா..”
“அதெல்லாம் ஆச்சு..” என்றாள்.
“மாத்திரை..!”
“அதுவும் முழுங்கியாச்சு..” என்றாள்.
“சரி, நீ ரெஸ்ட் எடு..” என்றவன் போனை வைத்து விட்டான்.
அவன் கேட்ட விதம் இவளுக்குப் பிடிக்கவில்லை. இவள் பதில் சொன்ன விதமோ அவனுக்கும் பிடிக்கவில்லை.
‘ஈஸ்வரா பேசிப் பேசி சண்டையை பெருசு படுத்துறதுக்கு பதிலா, பேசாம இருந்து பிரச்சனையை குறைக்கிறது தான் நல்லது..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
என்னதான் மனதிற்கு கடிவாளம் இட்டுக் கொண்டாலும், ஈஸ்வரனின் மனது அவளைத் தான் தேடியது.
“என்னாச்சு ஈஸ்வர்..? எதுக்கு இப்படி நடந்துகிட்டே இருக்க..?” என்று வசுந்தரா கேட்க,
“சும்மாதான்ம்மா..! நீங்க போய் தூங்குங்க..!” என்றான்.
“மகா வரலையேன்னு கவலைப் படுறியா ஈஸ்வர்..” என்றார் வசுந்தரா.
“அப்படியெல்லாம் இல்லைம்மா. அவ வரேன்னு தான் சொன்னா. நான் தான் வேண்டாம்ன்னு சொல்லி விட்டுட்டு வந்தேன். அவளுக்கா எப்ப தோணுதோ அப்ப வரட்டும். அது வரைக்கும் நீங்களும் எதுவும் சொல்லாதிங்க..” என்றான் ஈஸ்வரன்.
“அவ சின்ன பொண்ணு ஈஸ்வரா.. எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா..” என்றார்.
“இல்லைம்மா.. இது எடுத்துச் சொல்லி புரிஞ்சுக்குற விஷயம் இல்லை. தானா புரிஞ்சுக்குற விஷயம். அவ நல்லா யோசிக்கட்டும்மா..” என்றவன் அதோடு பேச்சை முடித்துக் கொண்டான்.
அவனின் பயமே வேறு. ஏற்கனவே தன்னைக் கண்டால் கோபத்தில் கத்துபவள், மீண்டும் மீண்டும் அப்படியே செய்தால், அது அவளுக்குத் தான் பாதிப்பு என்பதை அவன் உணர்ந்திருந்தான். அவளுக்கு இப்போது அமைதி தான் தேவை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
ஒருவாரம் எப்படி போனதென்று தெரியாத அளவிற்கு வேகமாய் சென்று முடிந்திருந்தது. இந்த ஒரு வார காலத்தில் அவள் என்ன செய்தாள் என்று கேட்டால் அவளிடம் பதிலில்லை.
ஈஸ்வரனும் முக்கியமான வேலையாக வெளியே சென்றிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான்.
மகா அங்கயே இருந்தது பாண்டியனுக்கும், கமலாவிற்கும் புளியைக் கரைத்துக் கொண்டு தான் இருந்தது.
“என்னங்க இவ பேசாம இப்படியே இருக்கா..? மாப்பிள்ளையும் அவர் பேசாம இருக்கார். இப்படி ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா இருக்குறதுக்கா கல்யாணம் பண்ணி வச்சோம். நீங்களாவது மாப்பிள்ளைகிட்ட பேசக் கூடாதா..?என்றார் கமலா.
பாண்டியனுக்கும் அது தான் சரியென்று பட்டது. ஈஸ்வரனை சந்தித்து பேசி விட வேண்டும் என்று அவர் நினைத்திருக்க, மகாவோ அதற்கு நேர் மாறாக உச்சகட்ட எரிச்சலில் இருந்தாள்.
அவர்கள் எதிர்பாராத விதமாக, ஈஸ்வரனே அங்கு வந்தான்.
“உங்களுக்கு ஆயுசு நூறு தம்பி, இப்பத்தான் பேசிட்டு இருந்தோம்..” என்றார் கமலா.
“மகா எப்படியிருக்கா அத்தை… உடம்புக்கு பரவாயில்லையா..?” என்றான்.
“அவளுக்கென்ன மாப்பிள்ளை..! அதெல்லாம் நல்லாத்தான் இருக்கா. எங்க கவலையெல்லாம் நீங்க ரெண்டு பேரும் இப்படியே இருக்கிங்களேன்னு தான்..” என்றார்.
“நான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டு தான் போனேன் அத்தை. என்னோட பொண்டாட்டியா வர்றதா இருந்தா மட்டும் வரட்டும் அவ. இல்லைன்னா இங்கயே இருக்கட்டும்..” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை, புயல் வேகத்தில் வெளியே வந்தாள் மகா பத்ரா.
“சொல்லிட்டு உங்க இஷ்ட்டத்துக்கு போய்ட்டிங்க..? வெளியூர் போன விஷயம் கூட இன்னொருத்தர் சொல்லித்தான் தெரியுது. அந்த லட்சணத்துல இருக்கு..” என்றாள்.
“இப்ப எதுக்கு மகா தேவையில்லாம கோபப்படுற..? நான் அவசரமா கிளம்பிப் போனேன். அதான் சொல்ல முடியலை. ஏன் உன்கிட்ட போன் இருந்தது தான..? நீ எனக்கு போன் பண்ணியிருக்கலாமே..?” என்றான் பொறுமையாக.
“நீங்களே பண்ணாதப்ப, நான் ஏன் பண்ணனும்..?” என்றாள் கோபமாய்.
“இதையே நானும் சொன்னா..?” என்றான் கேள்வியாய்.
“மகா அமைதியா இரு. நீங்க முதல்ல உட்காருங்க மாப்பிள்ளை..” என்றார் கமலா.
“இல்லத்தை… இத்தனை நாள் ஆகியும் உங்க மக கொஞ்சம் கூட மாறலை. அன்னைக்கு அவ்வளவு தூரம் நான் பொறுமையா சொல்லிட்டு போனேன். இவ மாறவே மாட்டா. நான் வர்றேன்..” என்று அவன் கிளம்ப போக,
“எனக்கு உடம்புல இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்ச உடனேயே என்னை கழட்டி விட பார்க்குறிங்க..? இதை நேராவே சொல்ல வேண்டியது தான..?” என்று ஆங்காரமாய் சொல்ல,
அவ்வளவு தான்…! கட்டிக் காத்த பொறுமையெல்லாம் காற்றில் பறந்தது. கோபமாய் திரும்பிய வேகத்தில் அவளை ஓங்கி அறைந்திருந்தான். ஈஸ்வரனின் கண்களில் அப்படி ஒரு சிவப்பு.
“நானும் எவ்வளவு தூரம் தான் பொறுத்து போறது..? எதுக்கும் ஒரு அளவு இல்ல..?” என்று அவன் கத்திய கத்தலில் அந்த வீடே எதிரொலித்தது.
“என்ன ஈஸ்வரா.. என் கண் முன்னாடியே என் பொண்ணை அடிக்கிற..?” என்று பாண்டியன் ஏதோ சொல்ல வர,
“நீங்க வாயை மூடுங்க முதல்ல. எல்லாம் உங்களால வந்தது தான். நான் அன்னைக்கே என்ன சொன்னேன், இவளுக்கும் எனக்கும் செட்டே ஆகாதுன்னு சொன்னேன். கேட்டிங்களா நீங்க.. விடாம கல்யாணம் பண்ணி வச்சது யாரு..? என்னோட வாழ்க்கையை கெடுக்குற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தா..? கொஞ்சம் பொறுமையா போனா, என்னை இளிச்சவாயன் ரேஞ்சுக்கு உங்க மக வச்சிருக்கா..போதும், இதோட எல்லாமே போதும்..” என்றான் தீர்மானமாய்.
“அவமேல தான் தப்பு, நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக அவளை அடிக்கிறது எல்லாம் தப்பு தம்பி..” என்றார் பாண்டியன்.
“அடிக்கிற வயசுல நீங்க அடிச்சு வளர்த்திருந்தா, இன்னைக்கு நான் ஏன் அவளை அடிக்கப் போறேன். பொண்ணை வளர்க்கத் தெரியாம வளர்த்து வச்சது நீங்க. என்னை குறை சொல்றிங்க..? இன்னும் இப்படியே செல்லம் குடுங்க, விளங்கிடும்…” என்று கோபமாய் சொன்னவன்,
“என்னைப் பார்த்தா, வியாதி வந்த உடனே விட்டுட்டுப் போறவன் மாதிரியா தெரியுது..? சொல்லுடி..அப்படியா தெரியுது..?” என்றான்.
அவள் மிரண்டு போய் பார்க்க, அவளின் முகத்தைப் பார்த்தவன்..
“ச்ச்ச..!” என்று வெளியே வந்துவிட்டான்.
“மாப்பிள்ளை..!” என்று அவர் பின்னாடியே வந்த கமலா அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“தம்பி..உங்களைக் கெஞ்சி கேட்டுக்கிறேன். உள்ள வாங்க..! எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்..” என்றார்.
“இனி பேசுறதுக்கு ஒன்னுமில்லைத்தை. இந்த ஜென்மத்துல அவ திருந்த மாட்டா..” என்றவன் செல்ல எத்தனிக்க,
“அவ இபப்டி ஆனதுக்கு நீங்களும் தான் காரணம்..” என்றார் கமலா.
“என்ன சொல்றிங்க..? நான் என்ன பண்ணேன் அவளை..?” என்றான் கோபமாக.
“அவங்க அப்பா ஒரு வகையில அவளைக் கெடுத்தா, நீங்க ஒரு வகையில அவளைக் கெடுத்து வச்சிருக்கிங்க. அவளைத் தாங்கித் தாங்கித் தான் இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்ருக்கிங்க. எப்பவுமே அவ பேசுறதை நாம கேட்கிற வரைக்கும் தான் அவ பேசிட்டே இருப்பா. அவளுக்கு மேல நம்ம சத்தத்தை கூட்டினா, அப்படியே அமைதியாகிடுவா. இந்த வித்தை உங்கக்கா மஞ்சுக்கு நல்லாவே தெரியும்.அதானால தான் மஞ்சுகிட்ட மட்டும் வாயைக் குடுக்க மாட்டா..” என்றார் கமலா.
“என்னால வித்தை காட்டியெல்லாம் பிழைக்க முடியாது அத்தை..” என்றான் வெடுக்கென்று.
“நீங்க அவளை பொண்டாட்டி மாதிரி நடத்துனாலே போதும். இந்த ஒரு தடவை எனக்காக அவளை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை.” என்று கமலா கெஞ்ச, அவரையும் மீறி அவனால் செல்ல முடியவில்லை.
“நீங்க உள்ள போங்க..! நான் வர்றேன்..” என்றான்.
“சரிங்க மாப்பிள்ளை..!” என்ற கமலா உள்ளே செல்ல, நின்று நிதானமாய் மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டான் ஈஸ்வரன். ஒருநிமிடம் கண்ணை மூடி தன்னை சமாதானம் செய்து கொண்டவன், மீண்டும் உள்ளே சென்றான்.
மகா அறைக்குள் சென்று அழுது கொண்டிருந்தாள். அறைக்குள் வந்தவனைப் பார்த்து அழுகையை நிறுத்திவிட்டு எழுந்து நின்றாள்.
“கிளம்பு போகலாம்..!” என்றான்.
“நான் வரலை..” என்றாள் வீராப்பாய்.
“நீ வர்றீயா இல்லையான்னு நான் கேட்கவேயில்லை. கிளம்புன்னு தான் சொன்னேன்..!” என்றான்.
“நான் வர..” என்று அவள் முடிக்கவில்லை.
“கிளம்புடி..!” என்று அவன் போட்ட அதட்டலில், அப்படியே அரண்டு விழித்தாள்.
“பத்து நிமிஷம் தான் உனக்கு டைம். கிளம்பி வெளிய வர்ற. இல்லைன்னா, இன்னைக்கு நீ வேற ஈஸ்வரனை பார்க்க வேண்டியது இருக்கும். உனக்கு வசதி எப்படி..?” என்று அவன் கேட்க,
“ம்ம்..” என்று அவள் பயந்து கொண்டே கிளம்ப, இவளிடம் அடங்கிப் போவது எல்லாம் இனி கதைக்காகாது என்று அந்த நிமிடம் முடிவு செய்தான் ஈஸ்வரன்.
வெளியே சென்றவன்,
“இனி அவளைப் பத்தி கவலைப் பட வேண்டாம்ன்னு உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லிடுங்க அத்தை. இதுக்கு மேலயும் அவளை இங்க இருக்க வச்சா, அவளை சுத்தமா கெடுத்துடுவார் மனுஷன். கஷ்ட்டம் தெரியாம வளர்த்தது தப்பில்லை. நீங்க பட்ட கஷ்ட்டத்தை சொல்லி வளர்க்காம விட்டது தான் தப்பு. அடிப்படையில அவ அப்படி கிடையாது. இனி எதுன்னாலும் அவளுக்கு அங்க தான்..” என்று முடிவாக சொல்லிவிட்டான்.
அதற்குள் மகா வெளியே வர,
“போலாமா..?” என்றான்.
“ம்ம்..!” என்றாள்.
பையை பாண்டியன் எடுக்க, அவரை முறைத்தான் ஈஸ்வரன்.
“இங்க இருந்து வீட்டு வாசல் வரைக்கும் பை தூக்கினா, உங்க பொண்ணு ஒன்னும் குறைஞ்சிட மாட்டா..?” என்றவன்,
“என்ன நிக்கிற..? பேக்கை எடுத்துட்டு வா..” என்றான்.
‘அவ பொருளை எல்லாம், ஆளை வரச் சொல்லி எடுத்துக்கிறோம்..’ என்று சொன்ன ஈஸ்வரன் நினைவில் வந்து போனான் மகாவிற்கு.
அவனின் பின்னால் பைக்கின் ஓரத்தில் உட்கார,
“முன்னாடி தள்ளி வாடி. இல்லன்னா, அப்படியே நடந்து வான்னு சொல்லிட்டு போய்டுவேன்..” என்றான் எரிச்சலுடன். அவளும் கடுப்பாக அவனை ஒட்டி அமர,
“நல்லா பிடிச்சு உட்காரு. விழுந்து கிழுந்து வச்சிட்டா, அதுக்கும் உங்கப்பா என்னையத்தான் பேசுவாரு..” என்று சொல்ல, சைடில் இருந்த கம்பியைப் பிடிக்க போனாள். அவளின் கையை வெடுக்கென்று இழுத்த ஈஸ்வரன், அவனுடைய தோளில் வைத்தான்.
வெடுக்கென்று அவன் வண்டியை எடுக்க, மேலும் அவன்மீது ஒட்டிக் கொண்டாள்.
“இத்தனை நாள் இந்த விஷயம் தெரியாம போய்டுச்சே ஈஸ்வரா..” என்று தன்னை நூறாவது முறையாக நொந்து கொண்டவன், வேண்டுமென்றே மேடு பள்ளங்களில் விட்டு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“வீடு வந்திருச்சு இறங்கு..”என்றவுடன் தான் அவளும் இறங்கினாள். அவன் முன்னால் இருந்த பேக்கை எடுத்து அவளின் கையில் குடுத்தவன்,
“நீயே எடுத்துட்டுப் போ..” என்று சொல்லிவிட்டு வண்டியை நிறுத்திவிட்டு வந்தான்.
பேரனுடன் வந்தவளைப் பார்த்த ருக்கு பாட்டி,
“வசுந்தரா,ஈஸ்வரன் அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்திருக்கான் பாரு..” என்ற சொன்னவுடன் வேகமாய் வெளியே வந்தார் வசுந்தரா.
“வாம்மா மகா..! நல்லாயிருக்கியா..?” என்றார்.
“அவ நல்லத்தான் இருந்திருப்பா. அவளால நம்மதான் நல்லா இல்ல..” என்றார் ருக்கு.
“அத்தை பேசாம இருங்கத்தை..” என்ற வசுந்தரா,
“உள்ள வாம்மா..!” என்றார்.
“என்ன? இன்னும் யாராவது வந்து உன்னை அழைக்கணுமா..? என்னமோ முதல் தடவை வர்ற மாதிரி. உள்ள போடி..” என்றான் ஈஸ்வரன். அவன் தொனியே மாறியிருக்க, வசுந்தரா வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
“அம்மா, இவளுக்கு வீட்ல இருக்க எல்லா வேலையும் சொல்லிக் குடுங்க. சும்மாவே இருக்குறதுனால தான் கண்டதையும் யோசிக்கிறா. இனியெல்லாம் அதுக்கு வாய்ப்பேயில்லை..” என்றான் ஈஸ்வரன்.
“நான் கிளம்புறேன்..” என்றவனைப் பார்த்து,
“எங்க கிளம்பிட்ட ஈஸ்வரா..வெளியூர் போய்ட்டு காலையில தான் வந்த. வந்த உடனே அங்க போய்ட்ட. இப்பவும் வெளிய கிளம்புனா என்ன அர்த்தம்..?” என்றார்.
“வேலையிருக்கும்மா..! இன்னைக்கு இவளால எல்லாமே கெட்டுப் போச்சு. உட்கார்ந்திருந்தா வந்திடுமா என்ன..? மதியம் வந்துடுவேன்..” என்றவன், அவளிடம் சொல்லவும் இல்லை, அவளை சட்டை செய்யவும் இல்லை. கிளம்பி சென்று விட்டான்.
“ஈஸ்வரா, இவ அன்னைக்கு வரேன்னு சொன்னப்பவே நீ கூட்டிட்டு வந்திருக்கணும். திருந்தி வரட்டும்ன்னு நீ விட்டுட்டு வந்தது எவ்வளவு பெரிய தப்பு. அவங்க அப்பா பக்கத்துல இவ இருக்குற வரைக்கும் இந்த ஜென்மத்துக்கு திருந்த மாட்டா..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே சென்றான் ஈஸ்வரன்.
“எந்த பிரச்சனைன்னாலும் இனி நீ இங்க இருந்து தான் சமாளிக்கணும் மகா. எதுக்கெடுத்தாலும் கிளம்பிப் போறதை விட்ரு..” என்றார் வசுந்தரா.
“ம்ம்..” என்றாள்.
“இவ பேச்சை தண்ணியில தான் எழுதணும். புருஷன் வீட்ல பொழைப்பு ஓட்டுற லட்சணமே இவ மூஞ்சியில இல்லை.. ஏதோ உள்ளூருங்க போய் சரியா போய்டுச்சு. இதுவே வெளியூரா இருந்தா என் பேரன் காசெல்லாம் பெட்ரோலுக்கே சரியா போய்டும்” என்றார் ருக்கு.
“வேற என்ன லட்சணத்தைக் கண்டிங்க..?” என்று எதுவோ பேச வந்தவள், படக்கென்று வாயை மூடிக் கொண்டாள். எதுவும் பேசாமல் ருக்குவை முறைத்துக் கொண்டே சென்று விட்டாள்.
“எதுக்கு அத்தை அவளை வம்புக்கு இழுக்குறிங்க..? நானே பயந்துகிட்டு இருக்கேன். நீங்க பேசியே அவளை திருப்பி அனுப்பிடுவிங்க போல..” என்றார் வசுந்தரா.
“இனி அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை வசுந்தரா. என் பேரன் முகத்தை பார்த்தியா இல்லையா..? அவன் ஏதோ முடிவோட தான் இவளைக் கூட்டிகிட்டு வந்திருக்கான். பொண்டாட்டியை எப்படி கைக்குள்ள வச்சிருக்கனும்ன்னு இப்பத்தான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு போல..” என்றார் ருக்கு.
“இதேன்னத்தை புதுசா இருக்கு..புருஷனைத் தான கைக்குள்ள வச்சுக்கனும்ன்னு சொல்லுவாங்க..” என்றார் வசுந்தரா.
“ஏன் இல்லாம..? பொண்டாட்டியை கைக்குள்ள வைக்கிற வித்தை தெரியாமத்தான் பல பயலுக அல்லாடிகிட்டு இருக்கானுக. என் பேரனுக்கு இப்பத்தான் பிடி பட்டிருக்கு போல..” என்றார் ருக்கு.
“என்னமோ சொல்றிங்க அத்தை..எப்படியோ ரெண்டு பெரும் நல்லா இருந்தா சரிதான்..” என்றார்.
“நீயும் சும்மா அவளைத் தாங்கிட்டு இருக்காத. அவன் சொன்னது ஞாபகத்துல இருக்குள்ள.. அவளை வீட்ல நாலு வேலையை செய்ய சொல்லு.. அப்பத்தான குடும்பம்ன்னா என்னனு தெரியும்..” என்றார்.
“சரிங்கத்தை..” என்றார்.
“மாமியாருன்ற பயம் கொஞ்சமாவது அவளுக்கு இருக்க வேண்டாம்..” என்ற ருக்குவிற்கும் மனதிற்குள் மகிழ்ச்சி தான்.
அவனின் அறைக்குள் சென்ற மகாவிற்கு அப்படியே அழ வேண்டும் போல் இருந்தது.
“இப்ப அழுது என்ன பிரையோஜனும்..? பேசுறதுக்கு முன்னாடி எதையுமே யோசிக்கிறது இல்லை. அவனும் எவ்வளவு நேரம் அமைதியா இருப்பான்..?” என்று அவளின் மனமே அவளைக் குத்திக் கிழித்தது.
“நான் ஒன்னும் பேசனும்ன்னு பேசலை..” என்றாள்.
“நீ பேசவே பேசாத. அது தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு..” என்றது மனசாட்சி.
“அதெப்படி இருக்க முடியும்..?” என்றாள்.
“அப்ப அவன் கிட்ட அறை வாங்கிட்டே இரு.. அப்பத்தான் உனக்கு புத்தி வரும்..” என்ற மனம் அதோடு அமைதியாகிவிட்டது.
மதியம் வருவதாய் சொல்லிவிட்டு சென்ற ஈஸ்வரன் இரவு தான் வீட்டிற்கு வந்தான்.
“என்னப்பா இவ்வளவு நேரம் ஆயிடுச்சு..? முதல்ல சாப்பிடு..! சரியா சாப்பிடாம என்ன வேலை வேண்டிகிடக்கு..?” என்ற வசுந்தரா அவனுக்குப் பரிமாறப் போக,
“மகா எங்கம்மா..?” என்றான்.
“அவ அப்பவே சாப்பிட்டு தூங்கப் போயிட்டாப்பா..” என்றார்.
“மகா..!” என்றான் சத்தமாய். அவனின் சத்தத்தில் அவள் அடித்து பிடித்து வெளியே வர,
“என்னத்தை..?” என்றாள்.
“நான் தான் கூப்பிட்டேன். வந்து சாப்பாடு போடு..அம்மா நீங்க போய் தூங்குங்க..” என்றான்.
“நானே வைக்கிறேன் ஈஸ்வர்..” என்று வசுந்தரா தயங்க,
“அம்மா..” என்று அவன் மீண்டும் அழுத்தமாய் சொல்ல, அதற்கு மேல் நிற்காமல், வசுந்தரா சென்று விட்டார்.
“என்ன வேடிக்கை..? சாப்பாடு கூட போட முடியாதா..?” என்றான்.
“கையிருக்குள்ள போட்டு சாப்பிடுங்க. உங்களுக்கு நான் என்ன வேலைக்காரியா..?” என்றாள்.
“அப்ப வெளிய போய் குடும்பத்துக்காக வேலை பார்க்குற என்னைய மாதிரி ஆம்பிள்ளைங்க எல்லாம் வேலைக்காரங்களா..? ஆனா, ஊன்னா, இப்ப இருக்க பொண்ணுங்க இந்த கேள்வியை ஒரு பேஷனா கேட்டுட்டு இருக்கீங்க..?” என்றான் கோபமாய்.
“இப்ப என்ன..? நான் சாப்பாடு போடணும். போடுறேன்..போட்டுத் தொலையறேன்..” என்றாள்.
“அவ்வளவு கஷ்ட்டப்பட்டு நீ ஒன்னும் செய்ய வேண்டாம். எனக்கு சாப்பாடே வேண்டாம்..” என்று எழுந்து விட்டான்.
‘காலையில இருந்து சாப்பிடலைன்னு அத்தை சொன்னாங்களே..?’ என்று நினைத்தவள்,
“ரொம்ப பண்ணாதிங்க..! உட்காருங்க, சாப்பாடு வைக்கிறேன்..” என்றவள், அவனுக்கு சாப்பாட்டை தட்டில் எடுத்து வைத்தாள்.
“சாப்பிடுங்க..” என்றாள்.
“தேவையில்லை..” என்றான் எரிச்சலுடன்.
“ஐயா சாமி… தெரியாம சொல்லிட்டேன், போதுமா. இப்ப உட்கார்ந்து சாப்பிடுங்க..” என்றாள்.
அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டவனுக்கு அப்போது தான் நிறைவாய் இருந்தது. உதட்டோரம் தோன்றிய புன்னகையை மறைத்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஒருவழியாக அவன் சாப்பிட்டு முடிக்க, அறைக்குள் சென்றவளுக்கு பக்கென்று இருந்தது.
“மகா இன்னைக்கு அவன் ஆளே சரியில்லை..வாயைக் குடுக்காம பேசாம தூங்கிடு..” என்றவள் படுத்து கண்களை மூடிக் கொண்டாள். அவன் எப்போதும் போல் வந்து தரையில் தான் படுப்பான் என்று அவள் நினைத்திருக்க, கட்டிலின் மறு ஓரத்தில் படுத்து விட்டான்.
அவன் படுத்த உடனே பட்டென்று எழுந்து விட்டாள்.
“என்ன நீங்க இங்க படுக்குறிங்க..?”என்றாள் வேகமாய்.
“முதல் நாள் நீதான சொன்ன..? இப்ப மட்டும் என்ன பயப்படுற..? எனக்கொண்ணும் பயமில்லை. உனக்கு பயமா இருந்தா நீ கீழ படுத்துக்க..”என்றான்.
“எல்லாம் என் நேரம்..” என்று அவள் கீழே இறங்கப் போக, அவளின் கையப் பிடித்து அருகில் இழுத்துப் போட்டவன்,
“ஒரு பேச்சுக்கு சொன்னா, உடனே கிளம்பிடுவியே..பேசாம படுத்துத் தூங்குடி..” என்று சொல்ல,
“கையை எடுங்க முதல்ல..” என்றாள்.
“முடியாது..! வேணும்ன்னா நீயும் போட்டுக்கோ..நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..” என்றவன்,ஒரு குறும்புன்னகையுடன் அப்படியே தூங்கிப் போனான். முதல் முறையாக அந்த வீட்டில் அவளுக்கு அது தான் தூங்காத இரவு.