காதல் 13:
இரவெல்லாம் முழித்திருந்தவள் காலையில் தான் லேசாக கண்ணயர்ந்தாள். ஈஸ்வரன் எழுந்து பார்க்கும் போது மகா தன்னை மறந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். விட்டால் கீழே விழுந்துவிடும் அளவிற்கு கட்டிலின் ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“அவ்வளவு பயம் இருக்குல்ல..? அப்பறம் என்ன வீர வசனம் வேண்டி கிடக்கு..?” என்று சிரித்துக் கொண்டவன், வெளியே வந்தான்.
“ஈஸ்வர், மகாவை என்ன இன்னமும் காணோம்..?” என்றார் வசுந்தரா.
“நல்லா தூங்குறாம்மா..!” என்றான்.
“பொழுது விடுஞ்சு எட்டு மணி ஆகிடுச்சு, இவ்வளவு நேரம் தூங்கினா பொழப்பு கிழிஞ்சுடும்..” என்றார் ருக்கு.
“விடுங்கத்தை..உடம்புக்கு எதுவும் முடியலையோ என்னவோ..?” என்ற வசுந்தரா, சமையல் வேலையை செய்து கொண்டிருக்க, மீண்டும் அறைக்குள் சென்ற ஈஸ்வரன்,
“ஹேய் மகா..எழுந்திரு..மகா..” என்றான் கொஞ்சம் சத்தமாக.
“மிஸ்டர் மல்லுவேட்டி மைனர், எனக்கு தூக்கம் வருது. சும்மா தொந்தரவு பண்ணாம போய்யா..” என்று மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
“போய்யாவா..???” என்று பல்லைக் கடித்தவன்,
“எந்திரிடி..! மணி எட்டாச்சு..” என்றான் அதட்டலுடன்.
“ச்ச்ச..இந்த வீட்ல நிம்மதியா தூங்கக் கூட முடியலை..” என்று எழுந்து அமர்ந்தவள்,
“எந்திருச்சுட்டேன்..! இப்ப என்ன..?” என்றாள் சிடுசிடுப்பாய்.
அவனுக்கும் அவளை எழுப்ப மனமில்லை தான். ஆனால் அவளுக்குப் பாவம் பார்த்தால் அவன் நிலைமை பாவமாகிப் போய்விடுமே.. என்ற பயம் தான் அவனுக்கு.
“எந்திருச்சு போய் குளிடி முதல்ல. அங்க அம்மா தனியா வேலை பார்த்துட்டு இருக்காங்க. போய் ஹெல்ப் பண்ணு..” என்றான்.
“என்னது..?” என்று வேகமாய் எழுந்து நிற்க,
“இப்ப எதுக்கு இவ்வளவு வேகமா எந்திரிக்கிற..?” என்றான் புரியாமல்.
“இங்க பாருங்க..நானும் நேத்து இருந்து பார்க்குறேன், ரொம்ப ஓவரா தான் போயிட்டு இருக்கீங்க..? அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது. நானும் போனாப் போகுதுன்னு அமைதியா இருக்கேன். இல்லைன்னா நடக்கறதே வேற..?” என்றாள் அவனை முறைத்துக் கொண்டு.
“என்னடி நடக்கும்..? இல்ல என்ன நடக்கும்..? சொல்லு..” என்று பேசிக் கொண்டே அவளை அவன் நெருங்க,
‘இப்ப எதுக்கு பக்கத்துல வரான்..!’ என்று யோசித்தவள்,
“ஒன்னும் நடக்காது..! நான் குளிக்க போறேன்..” என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.
“லூசு..” என்று அவன் சிரித்துக் கொள்ள, முதல் நாளில் இருந்து நடந்த அனைத்தும் அவன் மனதில் மீண்டும் ஒரு படமாக ஓட,
‘இவ கிட்ட பொறுமையா போனா, நம்மளை எருமை மேய்க்க விட்ருவா. இனி ஆக்சன்ல இறங்கிட வேண்டியது தான்..’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவனுக்கு போன் வர பேசிக் கொண்டே வெளியே சென்று விட்டான்.
குளித்து முடித்து அவள் சுடிதாருடன் வெளியே வர, அவளை முறைத்தான் ஈஸ்வரன்.
“இப்ப எதுக்குத் தேவையில்லாம முறைக்கிறிங்க..?” என்றாள்.
“ஏன்? உங்க வீட்ல இருக்குற வரைக்கும் சேலை தான் கட்டுன. இப்ப என்ன சுடிதார்..?” என்றான் நக்கலாய்.
“அது என்னோட இஷட்டம்..” என்றாள்.
“நான் உன்னை சுடிதார் போட வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா, இன்னைக்கு வேண்டாம். போய் சேலையை கட்டிட்டு வா..” என்றான்.
“ஏன்னு காரணம் சொன்னாதான் எதுவா இருந்தாலும் செய்ய முடியும்..” என்றாள்.
“நீயும் இன்னைக்கு என்னோட தோட்டத்துக்கு வர்ற, அதான்..” என்றான்.
“நானா..? அதெல்லாம் முடியாது. நான் வர மாட்டேன்..” என்றாள் வேகமாய்.
“நான் உன்னை வர்றீயான்னு கேட்டலை.. வரணும்ன்னு தான் சொல்றேன்..” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
“நான்..” என்று அவள் ஏதோ மறுத்துப் பேசப் போக,
“போய் கிளம்பு மகா..” என்றான் உறுதியாய்.
“போறேன், போய் கிளம்புறேன். இந்த காட்டுமிராண்டியைக் கட்டிக்கிட்டு பெரிய இம்சையா இருக்கு..” என்று முனங்கிக் கொண்டே போனாள்.
“பாவம் ஈஸ்வரா..! வரலைன்னா விட்ருப்பா..” என்றார் வசுந்தரா.
“உங்களுக்கு இவளைப் பத்தி தெரியாதும்மா. இப்படி வீட்ல சும்மாவே இருந்தான்னு வைங்க, மத்த யாரும் நிம்மதியா இருக்க முடியாது. உங்களுக்கு சரின்னா சொல்லுங்க, நான் விட்டுட்டுப் போறேன்..” என்றான்.
“நீ பேசாம இரு வசுந்தரா. நீ கூட்டிட்டுப் போ ஈஸ்வரா. நம்ம தோப்பு துறவு எல்லாம் எங்க இருக்குன்னு தெரிய வேண்டாம். அப்படியே ரெண்டு வேலையையும் செய்ய சொல்லு…” என்றார் ருக்கு.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள் மகா.
புடவையில் இன்னமும் அம்சமாக இருந்தவளை கண்டுகொள்ளாதவன் போல், கண்டு களித்துக் கொண்டிருந்தான்.
“என்ன பார்வை எல்லாம் ஒரு தினுசா இருக்கு..?” என்றாள் முறைப்புடன்.
“அப்படியா இருக்கு. இல்லையே நான் எப்பவும் போல தான் இருக்கேன்..” என்றான் ஈஸ்வரன்.
“அப்ப நான் தான் எப்பவும் போல இல்லையா..?” என்றாள்.
“தெரிஞ்சா சரித்தான்..” என்றான்.
ஒருவழியாக அவளைக் கிளப்பிக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்பிவிட்டான் ஈஸ்வரன். அவர்கள் ஜோடியாகக் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் மஞ்சு.
“என்னம்மா..? ஒரு வழியா வந்துட்டா போல..” என்றாள் வசுந்தராவிடம்.
“எங்க மஞ்சு..? தானா வந்த மாதிரி தெரியலை, ஈஸ்வரன் தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்த மாதிரி தெரியுது..” என்றார் அவர்.
“தம்பி அப்படி செஞ்சிருக்க மாட்டானே..” என்று மஞ்சு யோசனையுடன் சொல்ல,
“என்னாலையும் முதல்ல நம்ப முடியலை மஞ்சு. நேத்துல இருந்து ஈஸ்வர் ரொம்ப மாறிட்டான். அவளை எப்பப் பார்த்தாலும் அதட்டிகிட்டே தான் இருக்கான். என்னமோ அந்த பொண்ணும் அமைதியாத்தான் போகுது. இப்படியே ரெண்டு பெரும் இருந்துட்டா பரவாயில்லை..” என்றார்.
“அவ அப்படியெல்லாம் இருக்குற ஆள் கிடையாதே..?” என்றாள் மஞ்சரி யோசனையாக.
“நீ நேர்ல பார்த்திருக்கணும் மஞ்சு..! அந்த மகாவா இந்த மகான்னு இருந்தது.” என்றார்.
“சரிம்மா..! பார்ப்போம் எத்தனை நாளைக்குன்னு..?” என்பதோடு முடித்துக் கொண்டாள் மஞ்சரி.
ஈஸ்வரன் தன்னுடைய தோப்பிற்கு சென்று வண்டியை நிறுத்த,
“வெயில் ரொம்ப அடிக்குது..” என்றாள் முகத்தை சுருக்கியபடி.
“இந்த வெயில்ல சாயந்தரம் வரைக்கும் வேலை செய்றவங்களுக்கும் இப்படித்தான் இருக்கும். எல்லாரும் உன்னை மாதிரியே முகத்தைத் தூக்கிட்டு இருந்தா வேலை பார்க்க முடியுமா என்ன..?” என்றான்.
“நான் ஒன்னும் தப்பா சொல்லலையே..? எனக்கு வெயில் பழக்கமில்லை. அதான் சொன்னேன்..” என்றாள்.
“இந்த ஊர்ல தான பிறந்த..? அமெரிக்காவுல பிறந்த ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குற வேலையெல்லாம் வேண்டாம்..” என்றான்.
“நிஜமாவே நான் எங்க தோட்டத்துக்கே போனதில்லை..” என்றாள்.
“ஏன்..?” என்றான் கேள்வியாய்.
“அப்பா வேண்டாம்ன்னு சொல்லிடுவார். நாங்க தான் வெயில்ல கிடக்குறோம். நீங்களும் ஏன் கஷ்ட்டப் படனும்ன்னு சொல்லிடுவார்..” என்றாள்.
“இது தான் தப்பு. விவசாய குடும்பத்துல பிறந்த நீயே விவசாயம் பண்றவனை இளக்காரமா பார்த்தா, பிறந்ததுல இருந்து விவசாயம்ன்னா என்னன்னே தெரியாதவன் எப்படி மதிப்பான்..?” என்றான்.
“உங்களுக்கு கோடி கும்பிடு. எனக்கு விவசாயம் பிடிக்கும், விவாசயியையும் பிடிக்கும். இனிமேல் தயவு செய்து இப்படி பாடம் எடுத்து மட்டும் ஆளைக் கொல்லாதிங்க. முடியலை..” என்றாள் பாவமாய்.
“உனக்கு வாய் கொழுப்புடி..” என்றான்.
“எல்லாம் நீங்க பாலும், சோறும் ஊட்டி அதனால வந்த கொழுப்பு பாருங்க..” என்றாள் நக்கலாய்.
“நானா மாட்டேன்னு சொல்றேன். நீ சரின்னு சொன்னா, இப்பவே ஊட்டி விடுறேன்.. அப்படியாவது வத்தலா இருக்குற உன்னை தேத்திடலாம் பாரு..” என்றான் அவனும் நக்கலாய்.
“எங்கப்பா உங்களுக்குப் பொண்ணு குடுக்கும் போதே, பொண்ணை பன்னு மாதிரி தான் குடுத்தார். என்னமோ வத்தலுன்னு சொல்றிங்க..?” என்றாள்.
“சரித்தான்.. உண்மை என்னன்னு இன்னைக்கு தெரிஞ்சுக்கிறேன்..” என்றான் குறும்பு சிரிப்புடன்.
“என்ன கன்றாவி பேச்சு இது..? இது மாதிரியெல்லாம் பேசிட்டு இருந்திங்கன்னு வைங்க..” என்று அவள் அவனை மிரட்ட,
“என்னடி செய்வ..? எங்க செஞ்சுத்தான் பாரேன்..” என்று அவளை நெருங்க,
“இல்ல, சும்மா சொன்னேன்..!” என்று அவள் திணற,
“இல்லையே வேற எதையோ சொல்ல வந்த மாதிரி இருந்ததே..” என்றான் ராகமாய்.
“இல்ல.. அது வந்து.. எனக்கு இளநீர் வேணும்..” என்றாள் பட்டென்று.
“என்னது..?”
“முதல் தடவை உங்க தோட்டத்துக்கு வந்திருக்கேன். ஒரு இளநீர் கூட கிடையாதா..?” என்றாள்.
“நம்ம தோட்டம்ன்னு சொல்லு..” என்றான் திருத்தமாய்.
“சரி நம்ம தோட்டம். போதுமா..?” என்றாள்.
“இன்னைக்கு என்னமோ நெல்லு நாத்து நடப்போறாங்கன்னு சொன்னாங்க அத்தை..” என்றாள்.
“ஆமா..! ஏன் அதை கேட்குற..?” என்றான்.
“இல்லை. நானும் நடலாம்ன்னு பார்த்தேன்..” என்றாள் சாவகாசமாய்.
“நிஜமாவா..? இதையேன் முன்னாடியே சொல்லலை.. வா..” என்று அவளை வயலுக்கு கூட்டி சென்றான். அங்கு ஏற்கனவே நான்கைந்து பேர் வேலை செய்து கொண்டிருக்க,
“என்ன தம்பி..? இன்னைக்கு பொண்டாட்டியையும் கூட்டிட்டு வந்துட்டிங்களா..?” என்றார் ஒரு பெண்.
“ஆமாங்கம்மா..!” என்றான் ஈஸ்வரன்.
“நல்லது தம்பி..!” என்றார் அவர்.
“இவங்கல்லாம் யாரு..? நம்ம ஊர்ல பார்த்ததே இல்லையே..?” என்றாள்.
“நாங்க எல்லாரும் பக்கத்து ஊருக்காரங்கம்மா..” என்றனர்.
“ஹோ..நானும் வந்து நடவா..?” என்றாள்.
“நீ எதுக்கும்மா..? பார்த்தா படிச்ச புள்ள மாதிரி இருக்க..?” என்று ஒரு பாட்டி சொல்ல,
“இல்லைங்க..! நானும் வரேன்..” என்றவள் அப்படியே இறங்கப் போக,
“ஹேய் மகா,,? இப்ப என்ன செய்ய போற..?” என்றான் பதறியபடி.
“பார்த்தா தெரியலை..! நானும் நாத்து நடப்போறேன்..” என்றாள்.
“இப்படியேவா..?” என்றான்.
“எப்படி..? நல்லாத்தானே இருக்கேன்..” என்றாள்.
“ஏண்டி..தோட்டத்துக்கு கிளம்பி வர சொன்னா.. என்னவோ டீச்சர் வேலைக்கு போற மாதிரி மடிப்பு கலையாம புடவை கட்டிட்டு வந்துட்டு, இப்ப அதோட சேத்துல இறங்க போறேன்னு சொல்ற..?” என்றான் சிரிப்புடன்.
“பரவாயில்லை, துவைச்சுக்கலாம். எனக்கு எதுவும் தெரியாதுன்னு எப்படி கிண்டல் பண்ணிங்க..பாருங்க நான் எப்படி வேலை செய்யறேன்னு..” என்றாள் வீர வசனமாய்.
“தோப்புப் பக்கமே வராதவ எப்படி வேலை செய்வன்னு எனக்குத் தெரியாதா..?” என்று நக்கல் சிரிப்பு சிரித்தவன், அவளின் அருகில் சென்று,
“முதல்ல இந்த முந்தானையை எடுத்து இப்படி சொருகணும்..” என்று அவனே படக்கென்று சொருகிவிட,
“ஆத்தி..” என்று மனம் ஒரு நிமிடம் படபடவென்று அடித்துக் கொண்டது மகாவிற்கு.
“பிறகு இந்த முன் புடவையைத் தூக்கி இப்படி சொருகணும்..” என்று அதையும் அவனே சட்டென்று செய்துவிட, துள்ளி குதித்து ஓரடி விலகி நின்றாள்.
“என்னடி..?” என்றான் புரியாமல்.
‘இவன் தெரிஞ்சு பன்றானா..? இல்லை தெரியாம பன்றானா..?’ என்று நினைத்தவள்,
“ஒண்ணுமில்லை..!” என்றாள்.
அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன்,
“ஒன்னுமேயில்லையா..? எனக்கு வேற என்னமோ தோணுச்சே..” என்றான்.
“ஆத்தி..! இவனை சாதரணமா எடை போட்டது எவ்வளவு தப்பு. மல்லு வெட்டி மைனர் நல்லா மல்லுக்கு நிக்கிறான்..” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள், மெதுவாக வயலுக்குள் காலை வைத்தாள்.
அந்த சேறு அவளை உள்ளே இழுப்பதைப் போல் தோன்ற,
“ஏங்க காலு உள்ள இழுக்குது, இழுக்குது..” என்று தடுமாறி விழப் போக, அவளைப் பிடித்துக் கொண்டான் அவன்.
“இதுக்குத்தான் ஒரு பேச்சுல கேட்கணும். நடவு நடுறது எல்லாருக்கும் வராது. முதல்ல மேல வாடி..” என்றான்.
“இல்லை, படத்துல எல்லாம் பார்த்திருக்கேன். எனக்கும் ஆசையா இருக்கும். அதான் இன்னைக்கு ட்ரை பண்ணி பார்க்கலாம்ன்னு..” என்று இழுத்தாள்.
“அடியேய்..! உன்னோட சோதனைக்கு என்னோட வயல் தான் கிடைச்சதா..? ஏன் உங்கப்பன் வீட்டு வயலெல்லாம் கண்ணுக்குத் தெரியலையா..?” என்றான்.
“அப்பா விடமாட்டார்..” என்றாள் குறையாய்.
“முழுக்க முழுக்க தப்பெல்லாம் உங்கப்பன் பேர்ல தாண்டி..” என்றவன், அவளின் கையைப் பிடித்து, தானும் வயலுக்குள் இறங்கினான்.
“உங்களுக்கு நடத் தெரியுமா..?” என்றாள் ஆச்சர்யமாய்.
“ம்ம்..! எல்லாம் பார்த்து கத்துகிட்டது தான். அதுமட்டுமில்லாம, என்கிட்டே வயலெல்லாம் கம்மி தான். எல்லாமே தென்னை தான போட்ருக்கு. நம்ம வீட்டுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் நடவு பண்ணிக்கிறது..” என்றான்.
“சூப்பருங்க..” என்றாள்.
மகா அவனுக்கு வலது புறம் நின்று கொண்டிருக்க,
“ஒவ்வொரு நாத்தா எடுத்து இப்படி நடணும்..” என்று அவளுக்கு செய்முறை விளக்கம் காட்டியவன்,
“எங்க நீயும் நடு பார்ப்போம்..” என்றான்.
“இதென்ன பிரம்மாதம். இதுக்குத்தான் இவ்வளவு பேச்சா..” என்று குனிந்தவள் அவன் சொன்ன மாதிரியே செய்ய, நாற்று மட்டும் ஏனோ மிதந்து கொண்டு தான் இருந்தது. அவளும் மண்ணிற்குள் பிடித்து பிடித்து வைக்க, வைத்த நிமிடத்தில் அது மிதந்து கொண்டு வந்தது.
“ஏங்க நாத்து மிதக்குதுங்க..?” என்றாள்.
“ம்ம்..! நானும் மிதந்துட்டு தாண்டி இருக்கேன்..” என்றான் மார்க்கமாய்.
“என்னங்க சொல்றிங்க..?” என்று நிமிர்ந்தவள், அவன் அவளின் இடுப்பு பிரதேசத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,
“கண்ணை நோண்டிடுவேன்..” என்றாள் முறைத்துக் கொண்டே சொன்னவள்,
“இந்த பக்கம் வாங்க முதல்ல..” என்றாள்.
“ஈஸ்வரா..! இன்னைக்கு உன் பாடு திண்டாட்டம் தான். பார்த்து கவனமா இரு..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே, அவளுக்கு வேலையை சிறப்பாய் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் கண்களும் சிறப்பாய் அதன் வேலையைப் பார்க்க, சற்று தள்ளி வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள்,
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஒரு அந்நியோன்யம்..?” என்று பேசிக் கொண்டிருந்தனர். அதை மட்டும் ஈஸ்வரன் கேட்டிருந்தால் தெரியும் சங்கதி.
“ஏங்க போதுங்க..என்னால முடியலை..தலையெல்லாம் சுத்துது..” என்றாள் மகா.
“எதே..இந்த நாலு நாத்தை ஒழுங்கா நட்டத்துக்கு உனக்கு தலைவேற சுத்துதா..?” என்று தலையில் அடித்துக் கொண்டவன்,
“வா..! எல்லாம் என் நேரம்..” என்று கடுப்புடன் அவளை வரப்பிற்கு ஏற்றினான். அவன் கவலை அவனுக்கு.
இவர்கள் இங்கிருக்க, அங்கே மகாவின் வீட்டில் சட்டமாக வந்து அமர்ந்திருந்தான் அசோக். அவனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.
“என்ன மாமா? நான் அன்னைக்கு அவ்வளவு சொல்லிட்டு போயும், நீங்க ஒன்னும் செய்யாம இருந்தா என்ன அர்த்தம்..? என்றான்.
“இப்போ மரியாதையா எந்திரிச்சு போகப் போறியா இல்லையா..?” என்று பாண்டியன் கத்திக் கொண்டிருந்தார்.
“இப்ப கத்தி என்ன பிரயோஜனம்..? மகா அன்னைக்கே சொன்ன மாதிரி இவன் மேல இருக்குற கேஸை எதுக்கு வாபஸ் வாங்குனிங்க..? அதனால தான் நம்மகிட்டயே வந்து இப்படி கேவலமா பேசிட்டு இருக்கான்..” என்றார் கமலா.
“என்னது நான் கேவலமா பேசிட்டு இருக்கேனா..? நல்லா இருக்கே உங்க ஞாயம்..? மகாவை எனக்குக் கட்டி வைங்கன்னு நான் சொன்னது ஒரு தப்பா..?” என்றான்.
“அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என் ஒரு பொண்ணை கொன்னது பத்தாதா..?” என்றார் கமலா.
“என்ன மாமனாரே நீங்க..? நான் ஜெயில்ல இருந்து வர்றதுக்குள்ள அவசர அவசரமா உங்க ரெண்டாவது மகளுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டிங்க..அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..? எனக்கு மகா வேணும்..” என்றான் உறுதியாக.
“அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இப்ப வந்து நீ இப்படி பேசுறது சரியில்லை..” என்றார் பாண்டியன்.
“என்னங்க நீங்க..? இவன்கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்கீங்க..? போலீஸ்க்கு போன் போடுங்க..” என்றார் கமலா.
“போலீஸ் வேறையா..? கூப்பிடுங்க கூப்பிடுங்க.. தாராளமா கூப்பிடுங்க. ஆனா, அதுக்கடுத்து என்ன நடக்கும்ன்னு தெரியும்ல..?” என்றான் மிரட்டலாய்.
“என்னவேணும்ன்னாலும் நடந்துட்டு போகுது. நீங்க போலீஸ்க்கு போன் பண்ணுங்க. இல்லைன்னா மாப்பிள்ளைக்கு போன் பண்ணுங்க..” என்றார் கமலா.
“நானும் உங்களுக்கு மாப்பிள்ளை தான் அத்தை..! இருந்தாலும் இப்ப சின்ன மருமகனைத் தான் நம்புறிங்க போல. அதான் அத்தை சொல்றாங்கல்ல மாமா, போன் போடுங்க உங்க மாப்பிள்ளைக்கு. வரட்டும்.. அவனா நானான்னு பார்த்துடுறேன்..” என்றான் அசோக்.
“கமலா.. நீ கொஞ்சம் பேசாம இரு..” என்றவர்,
“இப்ப இங்க இருந்து பேசாம கிளம்பிப் போய்டு..” என்றார் மீண்டும்.
“போக முடியாது..” என்றான் சட்டமாய். பாண்டியனை நம்பிப் பலனில்லை என்று தெரிந்து கொண்ட கமலா, அறைக்குள் சென்று தானே ஈஸ்வரனுக்கு அழைத்து விட்டார்.