காதலியை அதுவும் முன்னாள் காதலியை, எத்தனையோ இடங்களில் சந்தித்திருக்கலாம்.
மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில், மஞ்சள் பூக்கள் சிதறி விழுந்த ஈர நிமிடங்களில் சந்தித்திருக்கலாம்… திருவிழாக்கடை பெட்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் கண்ணாடி வளையல் வாங்கும் பெண்களுக்கு நடுவே சந்தித்திருக்கலாம்… இன்னும் இதுபோன்று வேறு எங்கு வேண்டுமானாலும் சந்தித்திருக்கலாம். ஆனால் நகையை அடகு வைக்கப்போன இடத்தில் சந்தித்திருக்க வேண்டாம்.
தங்கையின் பிரசவ செலவுகளுக்காக, கோபியின் கழுத்துச் சங்கிலியை அடகு வைக்க கோ-ஆபரேடிவ் பேங்க் சென்றபோதுதான் அந்த வேதனையான சந்திப்பு நிகழ்ந்தது.
‘ஜூவல் லோன் வாங்க வந்திருக்கிறது யாரு?’ என்று சத்தமாகக் கேட்டு மானத்தை வாங்கினான் பியூன். வேகமாக எழுந்து சுற்றிலும் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தபடி, கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு மேனேஜர் அறையினுள் நுழைந்தவன் அதிர்ந்தான்.
மேனேஜர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது அவன் முன்னாள் காதலி சத்யா. அதிர்ச்சியில் அவன் கால்கள் நடுங்கின. ஆனாலும், உலகம் இவ்வளவு சின்னதா? சத்யா தன் திருமணத்துக்கு முன் எனக்கு கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘பூமி உருண்டைதானே…. சாவதற்கு முன் எங்காவது சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், சத்யா’ என்று முடித்திருந்தாள். பூமி உருண்டை அவனுக்கு இந்த விதமாக நிரூபணம் ஆகியிருக்க வேண்டாம்.
அலட்சியமாக நிமிர்ந்து பார்த்த சத்யா, அவனைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் சட்டென எழுந்துவிட்டாள். ‘கோபி…’ என்ற சத்யாவுக்கு மேற்கொண்டு பேச்சு வரவில்லை. அவன் பிரமிப்பு விலகாமல், எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“நீ இந்த ஊர்லயா இருக்கே?” என்றான்.
“இல்ல… இந்த பிராஞ்ச் மேனேஜர் பத்து நாள் லீவு. என்னை பெபுடேஸன்ல போட்டிருக்காங்க. கடவுளே… இஸ் இட் ட்ரூ?’ என்றாள் சத்யா.
“என்னாலயும் நம்ப முடியலை. மத்தியானம் பன்னிரெண்டு மணி வெயில்ல, ஒரு கோ-ஆபரேடிவ் பேங்க் ரூம்ல, ஒரு டிஃபிக்கல் தமிழ் சினிமா ஓடும்னு யார்தான் நினைப்பாங்க?’ என்றான்.
“நீ எங்கேயோ ஸ்கூல் டீச்சரா இருக்கிறதா ரதி சொன்னா!’
“ஆமா இங்கதான்!”
“கல்யாணம்…?” என்று இழுத்தாள்.
“ஆகலை. கடைசி தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சிட்டுதான்…”
“உன்னோட கடமைகள் இன்னும் முடியலையா கோபி?”
“பச்..”
“ஜூவல் லோனுக்கு வந்திருந்தது…”
“நான்தான்!”
“ம்… இஃப் யூ டோன்ட் மைன்ட்… எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா கோபி?”
“என் இரண்டாவது தங்கையின் பிரசவ செலவு.”
“சவிதாவுக்கா?”
“ஆமாம்.”
“ம்…ஓ.கே. என்ன நகை?”
“அவன் தயக்கத்துடன் அந்தச் சங்கிலியை மேஜையில் வைக்க, சத்யாவின் முகம் மாறிவிட்டது. ‘எப்பவும் இதைக் கழட்டவே கூடாது’ என்று சத்யா அவனுக்கு அளித்த காதல் பரிசு, அந்தச் சங்கிலி.
ஒரு விநாடி, ஒரே விநாடி… அதைக் கண் கலங்கப் பார்த்த சத்யா, உடனே சுதாரித்துக்கொண்டு பியூனைக் கூப்பிட்டு, ‘அப்ரைஸரை வரச்சொல்லுங்க’ என்றாள்.
நகையை மதிப்பிடும் அப்ரைசர் வந்ததும், ‘இதை எடை போட்டு, ஃபார்ம் ஃபில்லப் பண்ணி எடுத்துட்டு வாங்க. மூணு பவுன் இருக்கும். எவ்வளவு கோபி வேணும்? ஒரு கிராமுக்கு 3500 தருவோம்” என்றாள் சத்யா.
“மேக்ஸிமம்” என்றான் மிகுந்த குற்ற உணர்ச்சியுடன்.
“நாம் வெளியே போய் ஜூஸ் சாப்பிட்டு வருவோம்” என்று எழுந்தாள். கூட்டம் அந்த ஜூஸ் கடையின் மூலையில் அமர்ந்தோம். சட்டென்று, பத்து வருடங்களுக்கு முன்பு அழகான தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்தக் காதல் காலத்துக்கே சென்றுவிட்டது போல் இருந்தது அவனுக்கு.
அவர்களின் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, கோபிக்கு வேலை கிடைத்தாலும் அவனது மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டிய கடமை காரணமாக, முறிந்துபோன காதல் அது. இருப்பினும் சத்யா, எப்போதும் அவனின் அடி மனதில் ஒரு சுடராக ஒளிர்ந்து கொண்டுதான் இருந்தாள்.
சத்யாவிடம் ஆயிரம் விஷயங்கள் பேசவேண்டும் என்று மனது துடித்தது. அவனது காதோர வியர்வையை அவள் ஊதி ஊதி உலரவைத்த நிமிடங்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதா சத்யா? ஒற்றைக் குடைக்குள் நாம் நடந்த அந்த மழைக்கால மாலையை மறக்க முடியுமா வித்யா? என்றெல்லாம் பேச மனது துடித்தது.
ஆனாலும் பேசாமல் அமர்ந்திருந்தான். ஏற்கனவே நெகிழ்ந்து போயிருந்த அவனைத் தூண்டுவதுபோல், ஜூஸ் கடை ரேடியோவிலிருந்து ‘பூங்காற்றிலே…’ பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
துக்கத்தில் அவனுக்குத் தொண்டை அடைத்தது. பாக்கட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். மன வலியைப் போக்கும் மார்க்கம்.
“இன்னும் இந்த சிகரெட்டை விடலையா?” என்றாள் சத்யா.
“இன்னும் இருக்கு….. சிகரெட்டை நிறுத்தினா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடும்,” என்று அவன் சொல்ல, வலது கை ஆள்காட்டி விரலைத் தன் மேலுதட்டின் மேல் குவித்துக்கொண்டு சிரிக்கும் தனது பிரத்யேகமான அந்த அழகுச் சிரிப்பை உதிர்த்தாள் பெண்.
“அழகான பெண்கள் அதை நினைவூட்ட, ஓர் அசைவை வைத்திருக்கிறார்கள்’ என்று வண்ணதாசன் ஒரு கதையில் எழுதியது ஞாபகத்துக்கு வந்தது. அவனுக்கு மனசு படபடவென அடித்துக்கொண்டது. எப்போது வேண்டுமானாலும் சத்யா அவர்களின் காதலைப் பற்றிய பேச்சை எடுப்பாள்… அவனது பிரிவால் ஏற்பட்ட துயரங்களைச் சொல்வாள்… அவனும் மிகவும் வேதனையான அந்தக் காதல் தோல்வி பற்றிப் பேசலாம் என்று காத்திருந்தான்.
“துபாய்ல இருக்கார். ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வந்துட்டுப் போவார்.”
“குழந்தைங்க…?”
“ஒரே ஒரு பையன்.”
இப்படி குடும்ப விஷயங்கள், பழைய நண்பர்கள் குறித்தெல்லாம் பேசிக்கொண்டிருந்தாளே தவிர, அவர்கள் காதல் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
ஜூஸ் குடித்துவிட்டு திரும்ப பேங்க் வந்து, பணத்தை வாங்கிக் கொண்டு அவன் புறப்பட்டபோது, ‘தங்கச்சிக்கு எப்ப டெலிவரி ட்யூ டேட்’ என்றாள்.
“இந்த வாரத்துக்குள்ளேன்னு சொல்லியிருக்காங்க. அதுக்குத்தான் பணம் ரெடி பண்றேன்.”
“குழந்தை பிறந்ததும் ஃபோன் பண்ணு கோபி” என்று அனுப்பி வைத்தாள். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
ஹூம்… திருமணமானவுடன் பெண்கள் சகலத்தையும் மறந்து விடுகிறார்கள்… துறந்துவிடுகிறார்கள். அவனுக்கு வேதனையாக இருந்தது. அந்தந்த நிமிடங்களில் வாழ்பவர்களா பெண்கள்?
பத்துநாள் பெபுடேஷன் முடிந்து ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, சத்யா கோபிக்குப் ஃபோன் செய்தாள். அவளை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் சென்றான்.
வானம் இருட்டிக் கொண்டு வந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம்!
“அப்புறம் கோபி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.’
‘சரிங்க பாட்டி..’ என்று புன்னகைத்தபடி சிக்னலைப் பார்த்தான்.
வானம் மெலிதாக தூற ஆரம்பித்தது.
“மழை பெய்யுது கண்ணா, ட்ரெயின்ல உட்கார்ந்துக்கோ!” காதலிக்கும் போது அழைக்கும் அழைப்பை அவனை அறியாமலே அழைத்திருந்தான்.
கண்கள் பூத்தாலும், அதை மறைத்துக் கொண்டு “பரவாயில்ல கோபி!” என்றாள் பெண்.
ஒன்றிரண்டு மழைத்துளிகள் சத்யாவின் நெற்றியில் விழுந்து தெறித்தன.’
சிக்னல் மஞ்சளுக்கு மாறியது. ‘சத்யா… ட்ரெயின் கிளம்பப்போகுது. ஏறிக்கோ” என்றான் படபடப்பாக..
“ம்…” என்ற சத்யாவின் முகம் சட்டென்று மாறியது. என் கண்களை உற்று நோக்கினாள். அவன் சிலிர்த்துப் போனான். அதே பார்வை. முதன்முதலாக அவர்கள் காதலைப் பறிமாறிக்கொண்ட போது பார்த்த அதே காதல் வழியும் பார்வை.
இப்போது மழை சற்று வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. சத்யா அவனை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தாள். ‘கடவுளே…’ என்று அவன் தவித்துப் போனான். சத்யாவின் கண்கள் கலங்கின.
கார்டின் விசில் சத்தம் கேட்டது. ‘ட்ரெயின் கிளம்புது, சத்திம்மா. சீக்கிரம் ஏறு’ என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ரயில் நகர ஆரம்பித்தது.
வேகமாக அவன் சத்யாவின் இடது கையைப் பிடித்து, ட்ரெயினில் ஏற்றிவிட்டான். சத்யா அவசரமாக தன் ஹாண்ட்பேகைத் திறந்து, ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்து, அவனின் கையில் திணித்தாள். அவனின் ஈரக்கையினை இறுக்கமாக அழுத்தி, ‘வர்றேன் கோபி’ என்று விடைபெற்றுக் கொண்டாள்.
ரயில் வேகமாக நகர, அவன் அப்படியே நின்றுவிட்டான். கையை அசைத்தபடி சில விநாடிகளில், புள்ளியாக மறைந்து போனாள் சத்யா.
பொட்டலம் நனைந்துவிடாமல் இருப்பதற்காக வேகமாக ஓடி, கேன்டீன் வாசலுக்குச் சென்று நின்று, பொட்டலத்தைப் பிரித்தான். உள்ளே அவன் அடகு வைத்த சங்கிலியும், கூடவே ஒரு கடிதமும். தவிப்புடன் பிரிக்க ஆரம்பித்தான்…
“அன்புள்ள கோபி,
ஒரு ஆண் காதலில் தோற்றுவிட்டால், கவிதை எழுதலாம், கதை எழுதலாம். சினிமா எடுக்கலாம். ஏன் மனைவியிடம் தன் பழைய காதலைக் கூறி, என் புருஷன் எதையும் எங்கிட்ட மறைக்க மாட்டாரு’ என்று நல்ல பெயர் கூட எடுக்கலாம். ஆனால் பெண்கள்…?
ஊர் உறங்கிவிட்ட இரவில், ஜன்னல் வழியே தெரியும் ஆகாயத்தை வெறித்தபடி கண்ணீர் விடுவதைத் தவிர, வேறொன்றும் செய்ய இயலாது.
நீண்ட காலம் கழித்து உன்னைப் பார்த்தவுடன், உன் மடியில் விழுந்து கதறி, நமது காதல் பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் பேச என் மனது துடித்தது. ஆனால் செய்யவில்லை. காரணம் நம் காதல் பற்றி உன்னிடம் பேச ஆரம்பித்தால், நான் உடைந்துவிடுவேன், கோபி! உன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறிவிடுவேன். பிறகு அந்த உறவு எங்கே கொண்டுபோய் விடுமோ?
பிறகு… உன் செயினை அணிந்துகொள். நானே மீட்டுவிட்டேன். தயவு செய்து அதை மீண்டும் அடகு வைக்காதே! நம்மைப் போன்ற தோற்றுப்போன காதலர்களுக்கெல்லாம், இது போன்ற காதல் சின்னங்கள்தானே சின்னச்சின்ன சந்தோஷ நினைவுகளை அசைபோட வைக்கின்றன! நீ வாங்கிக் கொடுத்த கொலுசை, அது கறுத்துப் போனாலும் இன்னமும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். வருகிறேன் கோபி! மீண்டும் என்றேனும், எங்காவது சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்,
உன் சத்யா.’
கண் கலங்க, நெகிழ்ச்சியுடன் அந்தச் சங்கிலியை கழுத்தில் அணிந்து கொண்டான் கோபி. அருகிலிருந்த ஆலமரம் காற்றில் அசைய, ஒன்றிரண்டு மழைத்துளிகள் அவன் மீதும் விழுந்தன அந்தக் காதலின் சாட்சியாக.!