காதல் 14:
ஈஸ்வரனின் போன் அடித்துக் கொண்டிருக்க, அவனோ மும்முரமாய் மனைவிக்கு இளநீர் வெட்டிக் கொண்டிருந்தான்.
‘இந்த போன் அடிச்சுகிட்டே இருக்கு. காது கேட்குதான்னு பாரு..செவிட்டுப் பயலா இருப்பான் போல..’ என்று அவள் மனதிற்குள் நினைக்க,
“காதெல்லாம் கேட்குது. நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்.. நீ சும்மா தான இருக்க..? அந்த போனை எடுத்து பேசவேண்டியது தான..?” என்றான் ஈஸ்வரன்.
அவன் சொல்லவும் போனை எடுத்தவளுக்கு, அதில் அவள் வீட்டு நம்பர் தெரியவும் ஒரே யோசனையாக இருந்தது.
“அப்பா எதுக்கு கூப்பிடுறார்..?” என்று நினைத்துக் கொண்டே,
“சொல்லுங்கப்பா..!” என்றாள்.
“நான் அம்மா பேசுறேன் மகா. மாப்பிள்ளை இருந்தா போனை குடு..” என்றார் கொஞ்சம் அவசரமாக.
“என்னம்மா ஆச்சு..? ஏன் ஒரு மாதிரி பேசுறிங்க..?” என்றாள்.
“நீ முதல்ல போனை மாப்பிள்ளை கிட்ட குடு மகா..!” என்று கமலா அழுத்தி சொல்லவும், எரிச்சலுடன் அவனருகில் சென்றவள், போனை அவனிடம் நீட்டினான்.
“யாரு..?” என்றவன், போனை வாங்கிக் கொண்டு, இளநீரை அவளிடத்தில் நீட்ட, வாங்கியவளின் கவனமெல்லாம் அவன் பேசுவதில் தான் இருந்தது.
“சொல்லுங்க அத்தை..” என்றான்.
எதிரில் கமலா பேச பேச, இங்கே ஈஸ்வரனின் முகம் மாறிக் கொண்டே போனது. அவனின் முகத்தில் அப்படி ஒரு கோபத்தை முதன் முறையாக பார்த்தாள் மகா. குடித்துக் கொண்டிருந்த இளநீர் கூட இறங்க மறுத்தது.
“நான் உடனே வர்றேன்..” என்று சொல்லிவிட்டு அவன் போனை வைக்க,
“என்னங்க ஆச்சு..? எதுக்கு உடனே வர்றேன்னு சொல்றிங்க..? யாருக்கு என்ன..?” என்றாள் கொஞ்சம் பதட்டமாய்.
“யாருக்கும் ஒண்ணுமில்லை..! நீ அங்க வேலை பார்க்கிறாங்க பாரு, அவங்ககிட்ட போய் இரு. நான் போன உடனே வந்திடுறேன்..” என்றவன், வேகமாய் பைக்கை எடுக்க,
“இல்ல, நானும் உங்க கூடத்தான் வருவேன்..” என்று அவளும் அவனருகில் வந்து நிற்க,
“சொன்னா கேளு மகா. நீ இங்கயே இரு..” என்றான்.
“அப்படி என்ன எனக்குத் தெரியாம ரகசியம் பேசப் போறீங்க..? நானும் தான் வருவேன்..” என்றாள் கொஞ்சம் குரலை உயர்த்தி.
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. வா, வந்து வண்டியில ஏறு..” என்றவன், அவள் ஏறிய அடுத்த நிமிடம் சீறிப் பாய்ந்தான்.
ஈஸ்வரனிடம் விஷயத்தை சொன்ன கமலா, கோபமாய் வெளியே வந்தார்.
“மாப்பிள்ளை இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவார். அப்பறம் இருக்குடா உனக்கு..” என்றார் கமலா.
“பரவாயில்லையே மாமா.. அத்தைக்கு என்ன ஒரு சமயோசித புத்தி. உடனே சின்ன மருமகனுக்கு சொல்லிட்டாங்களே. நீங்களும் தான் இருக்கீங்க..? நீங்க சுத்த வேஸ்ட் மாமா. வரட்டும் அவன்..?அவனென்ன பெரிய இவனா..? அதையும் தான் பார்த்திடுறேன். கொழுந்தியா புருஷன் எனக்கு சகலை முறையாச்சே. சகலையையும் பார்த்த மாதிரி இருக்கும்..” என்ற அஷோக் கால்மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“இப்ப எதுக்கு கமலா ஈஸ்வரன்கிட்ட சொன்ன..? நான் உன்னை போன் பண்ண சொன்னேனா..? உடனே போன் பண்ணி வர வேண்டாம்ன்னு சொல்லு..” என்றார் பாண்டியன் அவசரமாக.
“அட விடுங்க மாமா..! அத்தைக்கு ரெண்டு மருமகனையும் ஒன்னா வச்சுப் பார்க்கணும்ன்ற ஆசை வந்திருக்கும். பார்த்துட்டு போகட்டுமே..! அவங்களை ஏன் திட்டுறிங்க..?” என்றான் இப்போதும்.
“நான் உன்னைய கெஞ்சிக் கேட்டுக்கிறேன். தயவு செய்து இங்க இருந்து கிளம்பிடு. ஈஸ்வரன் வந்தா பெரிய பிரச்சனை ஆகிடும்..” என்றார் பாண்டியன்.
“அதையும் தான் பார்ப்போம்..! நான் இங்க இருந்து போகுற மாதிரி இல்லை. நீங்கதான அவனுக்கு அவசரமா மகாவைக் கட்டி வச்சிங்க.இப்ப அவன் கிட்டவே நேரா ஞாயத்தை கேட்கிறேன்..” என்று பசை போட்டு ஒட்டியதைப் போல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பிடித்தான் அசோக்.
பாண்டியன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே, ஈஸ்வரனின் வண்டி சத்தம் வெளியே கேட்க, கமலா வேகமாய் வெளியே சென்றார். பாண்டியனுக்கு முள்ளின் மேல் நிற்பதை போல் இருந்தது. லேசாக வியர்த்து வடிய, அப்படியே அமர்ந்து விட்டார் பாண்டியன்.
“எங்கத்தை அவன்..?” என்ற ஈஸ்வரன் வேகமாக உள்ளே நுழைய, அங்கே அமர்ந்திருந்த அஷோக்கைக் கண்டு அப்படியே நின்று விட்டான். ஈஸ்வரனை அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவனை உக்கிரமாய் முறைத்த ஈஸ்வரன்..
“நீ என்னடா இங்க..?” என்றான் கோபமாய்.
“நீதான் எனக்கு சகலையாடா..? ஏன்டா..? எங்க போனாலும் எனக்கு இடைஞ்சலுக்கு வர்றவன் நீதானாடா..?” என்ற அசோக் சிரிக்க,
ஈஸ்வரனுக்கு பின்னால் வந்த மகாவை பார்த்தவன்,
“என்ன மகா ஒரு வாரத்துல ரொம்ப இளைச்சு போயிட்ட. அதுக்குத்தான் சொல்றது, இந்நேரம் என்கிட்ட இருந்திருந்தா, சும்மா கும்முன்னு வச்சிருந்திருப்பேன்..” என்று அசோக் சொல்லி முடிக்கவில்லை, அவனை ஓங்கி அறைந்திருந்தான் ஈஸ்வரன்.
“என்ன..? இன்னும் உன் புத்தி கொஞ்சம் கூட மாறவே இல்லையா..? இன்னும் அதே பொம்பளை பொறுக்கித் தனத்தோட தான் இருக்கியா..?” என்ற ஈஸ்வரன், மேலும் அவனை இரண்டு அறை அறைய,
“இந்த ஆளை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..?” என்றாள் மகா.
“இந்த தெருப் பொறுக்கி நாயை நல்லாத் தெரியுமே..? இவனுக்கா, நிவேதாவை கல்யாணம் பண்ணி குடுத்திங்க..? இப்படி ஒரு நாய்க்கு கல்யாணம் பண்ணி குடுக்குறதுக்குத்தான் அன்னைக்கு அவ்வளவு பேச்சு பேசுனிங்களா மாமா..?” என்றான் பாண்டியனைப் பார்த்து.
“என்ன மாமா..? இவன் அடிக்கிறான்..தேவையில்லாம பேசிட்டு இருக்கான். நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..?” என்றான் அசோக், பாண்டியனிடம்.
“பிரச்சனை வேண்டாம் மாப்பிள்ளை..” என்று பாண்டியன், ஈஸ்வரனிடம் சொல்ல,
“நான் பேசிட்டு இருக்கும் போது எனக்கு பதில் சொல்லத் துப்பில்லை. அவர்கிட்ட என்னடா மிரட்டல் வேண்டி கிடக்கு..?” என்று ஈஸ்வரன் அவனின் குரல்வலையை நெறிக்க,
அவன் கைகளை கஷ்ட்டப்பட்டு விலக்கியவன்,
“வேண்டாம் பிரகதீஸ்வரன்.. இது என்னோட தனிப்பட்ட விஷயம். இதுல நீ தலையிடாத..” என்றான் எச்சரிக்கையாய்.
“நான் தலையிடாம, உங்கப்பனா வந்து தலையிடுவான்..?” என்றான் ஈஸ்வரன்.
“இன்னும் நல்லா போடுங்க. இவனையெல்லாம் இந்த அடியோடு விடக் கூடாது..” என்றாள் மகா.
“அப்படின்ற..? பொண்டாட்டி சொன்னா, அதுக்கு மறுபேச்சே கிடையாது..” என்று மீண்டும் அவனை அடிக்கப் போக,
“மாப்பிள்ளை, வேண்டாம் மாப்பிள்ளை..! எதுக்கு பிரச்சனை. நீ இங்க இருந்து கிளம்பப் போறீயா இல்லையா..?” என்று பாண்டியன் அஷோக்கைப் பார்த்து சொல்ல,
“பயம் விட்டுப் போயிடுச்சா உங்களுக்கு..? இந்த அசோக் யாருன்றதை காட்டுறேன்..” என்றான்.
“நீ காட்டுன்னு தான் சொல்றேன். எங்க காட்டித்தான் பாரேன்..” என்றான் ஈஸ்வரன்.
“காட்டத்தாண்டா போறேன். புது பொண்டாட்டி கட்டுன மயக்கத்துல இருக்கியோ..? அங்க எப்படி..? அவளாவது பிரஷ் பீசா..? இல்லை அவளும் டேமேஜ் பீசா. டேமேஜ் பீசாவே இருந்தாலும், இவங்க அக்காவுக்கு இவ நூறு மடங்கு பெட்டர் தான். அதனால தான இவளையே சுத்திகிட்டு இருக்கேன். என்ன? என்கூட ஒருநாளாவது இருந்திருக்கலாம். எந்த பிரச்சனையும் வந்திருக்காது. இனி நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனை ஓங்கி அறைந்தாள் மகா.
“என்னை என்ன, எங்கக்கா மாதிரி பிள்ளை பூச்சின்னு நினைச்சியா..? செருப்பு பிஞ்சிடும்டா நாயே..?” என்று அவள் ஆங்காரமாய் கத்த,
அவன் அவ்வளவு பேசியும், பாண்டியன் எதுவும் பேசாமல் பரிதவிப்புடன் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒன்று இருக்கிறது என்று மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. பாண்டியனின் குணம் பற்றி தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே..? பேச்சில் கூட கௌரவத்தை எதிர்பார்ப்பார். அப்படிப்பட்டவர் இன்று அமைதியாய் நிற்கிறார் என்றால் என்ன அர்த்தம்..? அதுவும் அவன் அவ்வளவு அசிங்கமாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டு..?
மகாவின் கணவனாக யாரையோ எதிர்பார்த்திருந்த அஷோக்கிற்கு, ஈஸ்வரனைப் பார்த்தது கொஞ்சம் அதிர்ச்சி தான். படிக்கும் காலத்திலேயே அவன் ஹீரோயிசத்தை பார்த்தவன் ஆயிற்றே.
அவனிடத்தில் எப்போதும் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருப்பான். இப்போதும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதனால் தான் அவன் அடித்த போதும் கொஞ்சம் அடக்கியே வாசித்தான் அசோக்.
ஆனால் மகா அடிக்கவும் அவனால் கோபத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.
“என்னடி..? பொட்டச்சி கையை நீட்டுற..?” என்று மகாவின் கையை அவன் இறுக்கிப் பிடிக்க, அவளின் கையை அவன் பிடித்த மறுநொடி, அவனை எட்டி உதைத்திருந்தான் ஈஸ்வரன்.
“யார் பொண்டாட்டி கையை யார் பிடிக்கிறது..? வெட்டி பொலி போட்ருவேன், ஜாக்கிரதை..” என்று அவன் எச்சரிக்க,
“இருக்குடா உங்களுக்கு கச்சேரி. யோவ் மாமா. உன்வீட்டு மானத்தை கூடிய சீக்கிரம் ஊர் சிரிக்க வைக்கிறேன்ய்யா.. வச்சிருக்கேன்டா உங்களுக்கு..” என்றவன், அடுத்த நிமிடம் இடத்தை காலி செய்திருந்தான்.
அவன் போன பின்பு..
“இந்த நாயையெல்லாம் எதுக்குப்பா வீட்டுக்குள்ள விடுறிங்க..? ச்சி.. இவனைப் பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு. அவன் பார்த்தாலே உடம்பெல்லாம் ஏதோ பூச்சி ஊறுர மாதிரி இருக்கு..” என்று முகத்தை அஷ்டகோணலாய் வைத்துக் கொண்டாள் மகா.
“நானும் அதைத் தான் சொல்றேன் மகா. இவன் மேல குடுத்த கேஸை எதுக்கு வாபஸ் வாங்குனார். அவன் பேசாம உள்ளயே இருந்திருந்தா இப்ப இந்த பிரச்சனையில்லை. நம்மளை நிம்மதியாவே இருக்க விட மாட்டான் போல. அவன்கிட்ட போய் இவரு கெஞ்சிகிட்டு இருக்காரு..” என்று கமலா உள்ளதைப் போட்டு உடைக்க, ஈஸ்வரனின் சந்தேகம் வலுவடைந்து கொண்டே போனது.
அவன் பாண்டியனின் முகத்தைப் பார்க்க, அவரோ அவனின் முகத்தை நேராகப் பார்ப்பதையே தவிர்த்தார்.
“என்ன பிரச்சனை மாமா..?” என்றான் நேரடியாக.
“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை மாப்ள. நிவேதா இறந்ததுக்கு அப்பறம் மகாவை கட்டி வைக்க சொல்லி கேட்டான். நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். அதான் வந்து தொந்தரவு பன்றான்..” என்றார் பாண்டியன்.
“நீங்க சொல்றது உண்மை மாதிரி தெரியலையே..?” என்றான் ஈஸ்வரன்.
“நான் எதுக்கு மாப்ள பொய் சொல்ல போறேன்..?” என்றார்.
“எதுவுமே இல்லைன்னா.. எதுக்காக கேஸை வாபஸ் வாங்குனிங்க..?” என்றான்.
“என் பொண்ணே இல்லைன்னு ஆனதுக்கு அப்பறம், இவன் உள்ள இருந்தா என்ன? வெளிய இருந்தா என்ன..? அதான் வாபஸ் வாங்குனேன்..” என்றார்.
“இது உண்மையான பதிலா இருக்க வாய்ப்பில்லை. இப்படி உங்களை தொடர்ந்து வந்து தொந்தரவு பண்ணுவான்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். அப்படி இருந்தும் நீங்க கேஸை வாபஸ் வாங்கியிருக்கிங்க. இப்ப அவன் வந்து இப்படி அசிங்கமா பேசிட்டு இருக்கும் போதும் அமைதியா இருக்கீங்க..? எனக்கு தெரிஞ்ச பாண்டியன் நீங்க இல்லை.. ஒன்னு உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கணும். இல்லைன்னா, அவன் எதவாது உங்களை பிளாக் மெயில் பண்ணியிருக்கணும்..” என்றான் ஈஸ்வரன்.
அவன் அப்படி சொன்னவுடன், அவருக்கு ஒரு மாதிரி படபடவென்று வந்து விட்டது. அவர் அப்படியே சாய்ந்து அமர,
“என்னாச்சு மாமா..?” என்றான்.
“ஒண்ணுமில்லை மாப்பிள்ளை..! லேசா தலை சுத்தல். வேற ஒண்ணுமில்லை..” என்றார் பாண்டியன்.
“நீங்க ரெஸ்ட் எடுங்க. ஆனா, என் கேள்விக்கு பதில் உங்க கிட்ட தான் இருக்கு.. கண்டிப்பா அதை நீங்க சொல்லியே ஆகணும்..” என்றான் ஈஸ்வரன்.
ஈஸ்வரன் பேசும் போது தான் மகாவிற்கும் சில விஷயங்கள் புரிந்தது. எதுவென்று சரியாக தெரியாவிட்டாலும், அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அவளுக்கும் புரிந்தது.
பிரச்சனை ஈஸ்வரன் மூலமாகத்தான் இருக்கும் என்று அவள் நம்பிக் கொண்டிருக்க, இப்போது பார்த்தால் அது அசோக்கின் வடிவில் இருக்கிறது என்று புரிந்தது மகாவிற்கு.
‘இது தெரியாம, இவனை வேற வம்பு தும்பா பேசி, வாங்கிக் கட்டியிருக்கேன். மகா ஏதோ ஒரு அறையோட விட்டான். இன்னைக்கு அஷோக்கை அடிச்ச அடியெல்லாம் நீ வாங்குன, அந்த இடத்துலயே நீ காலி.. இனி எதைப் பேசுனாலும் பார்த்து பேசு..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் மகா.
“நாங்க கிளம்புறோம் அத்தை. அவரைப் பார்த்துக்கோங்க. இன்னொரு தடவை அந்த நாய் வந்தான்னா, அப்பறம் இருக்கு அவனுக்கு..” என்றவன் கிளம்பிவிட்டான்.
மகா, அவள் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்க,
“உனக்கு வேற தனியா சொல்லனுமா..? கிளம்பு..” என்றான்.
“அதிகாரம் தூள் பறக்குது..” என்று முனங்கிக் கொண்டே அவள் பின்னால் செல்ல, கமலாவிற்கு விஷயம் ஓரளவிற்கு புரிந்து விட்டது, மகா எதிர்த்து பேசாமல் அவன் பின்னால் செல்லும் போதே உணர்ந்து கொண்டார்.
அவர்கள் சென்ற பிறகு அறைக்குள் சென்று படுத்த பாண்டியனுக்கு, அப்படியே உயிர் போனாலும் பரவாயில்லை என்று தோன்றியது.
ஈஸ்வரனிடம் எல்லா விஷயத்தையும் சொல்ல அவருக்கு ஒரு நிமிடம் ஆகாது. ஆனால், அவன் ஏதாவது செய்ய போக, மகாவின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகிவிடும் என்று பயந்தார்.
எதை சொல்லுவார், நிவேதா சீரழிந்த கதையை சொல்லுவாரா..? அந்த அவர்கள் வீடியோ எடுத்ததை சொல்லுவாரா..? அதை வைத்து செய்த பிளாக் மெயிலுக்கு பயந்து அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க, சொத்துக்கள் மேல் கடன் வாங்கிய கதையை சொல்லுவாரா..? எல்லாம் செய்தும் மகள் நிம்மதியாக வாழாமல் போய் சேர்ந்த கதையைத் தான் சொல்லுவாரா..? எதைச் சொல்லுவார்.
மானம், மரியாதை, கௌரவம் என்ற மூன்றும் இல்லையென்றால், எத்தனையோ மிடில்கிளாஸ் குடும்பங்கள் உயிருடனாவது இருந்திருக்கும். ஒரு மனிதனின் பயத்தைத் தூண்டி, அதான் மூலம் சம்பாதிக்கும் கும்பல்கள் இன்னும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்ற.
நடந்த விஷயங்களை மனைவிக்கும், மகாவிற்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வதற்குள் அவருக்கு போதும் போதுமென்றாகி விட்டது. கடைசி காலத்தில் இனி ஒரு அசிங்கத்தைப் பட அவர் தயாராய் இல்லை.
நடந்ததை நினைத்துக் கொண்டே அவர் படுத்திருக்க, அங்கே ஈஸ்வரனோ இதைப் பற்றிய எண்ணத்தில் தான் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“என்ன ஞாபகத்துல இருக்கீங்க..? பள்ளத்துல எல்லாம் விட்டு என்னை ஒருவழியாக்கிடுவிங்க போலையே..?”என்று பின்னால் இருந்து மகா அவனைத் திட்ட,
“எல்லாம் உங்க வீட்டு ஞாபகத்துல தான் ஓட்டிட்டு இருக்கேன்..” என்றான் அவனும் மிதப்பாய்.
“ஆமா, இப்ப எங்கப்பாகிட்ட ஏன் அப்படி கேட்டிங்க..?” என்றாள்.
“எப்படி..?”
“இப்படி ஒருத்தனுக்கு பொண்ணுக் குடுக்குறதுக்குத் தான், அன்னைக்கு நிவேதாவை கேட்டு வந்தப்ப என்னை அந்த பேச்சு பேசுனிங்களா..?” அப்படின்னு, நீங்க எங்கப்பாவைப் பார்த்து கேட்கலை..? என்றாள் ஒரு மாதிரியான குரலில்.
“ஆமா, கேட்டேன். இப்போ அதுக்கென்ன..? நான் கேட்டதுல எதுவும் தப்பிருக்கா என்ன..?” என்றான்.
“நீங்க கேட்டதையெல்லாம் தப்பு சொல்லலை. நிவேதாவைக் கேட்டு எங்கப்பா குடுக்கலைன்னு உங்களுக்கு இன்னமும் வருத்தம் இருக்குற மாதிரி தெரியுதே..அதான் கேட்டேன்..” என்றாள்.
அவள் அப்படி சொன்னவுடன், சடன் பிரேக் போட்டான் ஈஸ்வர். அவன் மேல் மோதியவள்,
“இப்ப எதுக்கு வண்டியை நிறுத்துனிங்க..?” என்றாள்.
“ஏண்டி..? நீ திருந்தவே மாட்டியா..? ஒரு ஆதங்கத்துல கேட்டேன். அது ஒரு தப்பா. மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதே உனக்கு வேலையா போய்டுச்சு. இனி ஒரு தடவை இப்படி கேட்டுப் பாரு..?” என்றவன் மீண்டும் வண்டியை எடுக்க,
“அந்த அசோக் நாயை ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா..?” என்றாள்.
“தெரியும்..! என் காலேஜ் மெட் தான்..” என்றான்.
“காலேஜா..நீங்க டிகிரியா..? பார்த்தா அப்படி தெரியலையே..?” என்றாள்.
“நாளையில இருந்து எழுதி ஒட்டிக்கிறேன்..அப்ப தெரியுதான்னு பார்ப்போம்..” என்றான்.
“என்ன கிண்டலா..?” என்றாள்.
“வாயை கொஞ்ச நேரம் மூடுடி. ஒரு நாள் அமைதியா இருந்த, அது உனக்கே பொறுக்கலை போல…” என்றான் ஈஸ்வரன்.
“நான் எதுவுமே பேசலை. ஆனா, இன்னைக்கு அந்த அஷோக்கை அடிச்சிங்க பாருங்க.. செம்ம செம்ம..” என்றாள் உண்மையான மகிழ்ச்சியுடன்.
அவளின் முகத்தை மிரரில் பார்த்தவன்,
“இதை இப்படித்தான் சொல்லுவாங்களா..?” என்றான்.
“வேற எப்படி சொல்லுவாங்க..?” என்றாள்.
தோளில் இருந்த அவளின் கையை எடுத்து, அவன் இடுப்பை சுற்றி படர விட்டவன்,
“இப்படியும் சொல்லலாம்..” என்றான்.
“ஐய ஆசை தான். இப்படி இடுப்போட கட்டிப் பிடிச்சு போறதுக்கு இதென்ன சிட்டியா..? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..?” என்றவள் கையை எடுக்கப் போக,
“யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைச்சாலும் ஒன்னும் பிரச்சனையில்லை. புருஷன் கூடத் தான வர்ற. அதனால யாரைப் பத்தியும் கவலைப் படாம வா..” என்றவன் அவளின் கையை விடாமல் பிடித்துக் கொண்டான்.
மகாவும் ஏனோ மகிழ்ச்சியாக இருந்தாள். அவளைப் பொறுத்தவரை அஷோக் அடி வாங்கியது தான் அவளுடைய எண்ணத்தில் இருந்தது. மற்ற எதுவும் கண்ணில் பட்டாலும், கருத்தில் படவில்லை.
முன்னால் இருந்த ஈஸ்வரனோ, அவளின் அருகாமையில் உருகிக் கரைந்து கொண்டிருந்தான்.
அஷோக்கோ வஞ்சம் தீர்க்க வழி தேடிக் கொண்டிருந்தான்.