காதல் 17:
இரண்டு நாட்கள் என்ற நிலையில், ஈஸ்வரனின் உடல்நிலை சரியாக, ஒரு வாரம் ஆகியது. இந்த ஒரு வாரத்தில் மகாவிடம் நல்ல மாற்றம் தெரிந்தது அவனுக்கு. வாய் ஒன்று தான் குறையவில்லையே தவிர, ஓரளவிற்கு அவனுடன் பொருந்திப் போக முயன்றாள் மகா. இந்த ஒருவார காலமும் அவனை சீண்டிக் கொண்டு தான் இருந்தாள்.
“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகணும் மகா..” என்றான் ஈஸ்வரன்.
“எதுக்குங்க..?” என்றாள்.
“உனக்கு இன்னைக்கு செக்கப் போகணும். எனக்கும் காட்டனும்..” என்றான் கண்ணாடி முன் நின்று தலையை சீவிக் கொண்டே.
“நான் அத்தைகிட்ட சொல்லிட்டு வந்துடுவா..?” என்றாள்.
“முதல்ல கிளம்புடி. போகும் போது சொல்லிக்கலாம்..!” என்றவன், அவள் குளித்து கிளம்பி வரும் முன், வேட்டி சட்டை விகிதம் தயாராய் இருந்தான்.
“ஹாஸ்பிட்டலுக்கு கூட ஒரு பேண்ட் ஷேர்ட் போட்டா என்னவாம்..? எப்பப் பார்த்தாலும் மைனர் மாதிரி..?” என்று முனங்கிக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“நான் அடிபட்ட காலை காட்டனும். அதுக்கு வேஷ்ட்டி தான் வசதிப்படும்..” என்றான், அவளின் முனகல் சத்தம் கேட்டவனாய்.
“ஹோ..அதான் ஒட்டிக்கோ கட்டிக்கோவா..?” என்று சொல்ல, மெல்ல அவளருகில் வந்தவன், தலைவாரிக் கொண்டிருந்தவளை பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டான்.
“ச்சு..விடுங்க முதல்ல..!” என்று அவள் அவனிடமிருந்து விலக முற்பட,
“நீதானடி ஒட்டிக்கோ, கட்டிக்கோன்னு சொன்ன..” என்றான் குறும்பு புன்னகையுடன்.
“ம்ம்ம்..! நான் வேட்டியை சொன்னேன்..” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“நான் கூட என்னைய சொன்னியோன்னு நினைச்சேன்..” என்றாள்.
“நினைப்பிங்க..? நினைப்பிங்க.. நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்குமாம்..” என்றான்.
“இனி பொழப்பே இது தாண்டி..” என்றான் சிரிப்புடன்.
“வரவர நீங்க சுத்தமா சரியில்லை சொல்லிட்டேன். நான் எல்லா நேரமும் இப்படி அமைதியாவே இருக்க மாட்டேன்.. பார்த்துக்கோங்க..” என்றாள்.
“இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை. அடிபட்டு வந்தவனை உசுப்பேத்தி விட்டுட்டு, மாமியாரும், மருமகளும் சேர்ந்து வெடக் கோழியா அடிச்சு ஊத்தி, என்னை ஒரு வழியாக்கி விட்டுட்டு, இப்ப ஒன்னுமே தெரியாதவ மாதிரி ஒரு ரியாக்ஷன் குடுக்குற பார்த்தியா..? அதைத்தாண்டி என்னால தாங்க முடியலை..” என்றான்.
“அது அத்தைதான் சொன்னாங்க..! வெடக் கோழியா அடிச்சு ஊத்தினா, காயத்துக்கும் எலும்புக்கும் நல்லதுன்னு. அதான் செஞ்சு குடுத்தோம்..” என்றாள்.
“காயத்துக்கும், எலும்புக்கும் வழி சொன்ன உங்க அத்தை .. வாழ்க்கைக்கு எந்த வழியும் சொல்லிக் குடுக்கலையா..?” என்றான்.
“ சொல்லிக் குடுத்தாங்களே..” என்றாள்.
“என்ன சொல்லிக் குடுத்தாங்க..?” என்றான் ஆர்வமாய்.
“நீங்க ஓவரா போனா, உங்களை நாலு போடு போட சொன்னாங்க. போடவா..?” என்றாள் சிரிப்புடன்.
“சிரிக்கிரிற..? முரட்டு சிங்கிளோட சாபம் உன்னை சும்மா விடாதுடி..?” என்றான்.
“யாரு சார் இங்க முரட்டு சிங்கிள்..ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் பண்ண நீங்க முரட்டு சிங்கிளா..?” என்றாள்.
அவள் அப்படி சொன்னவுடனே அமைதியாகிப் போனான் ஈஸ்வரன். பட்டென்று அவளை விட்டவன், நீ கிளம்பி வா. நான் வெளிய வெயிட் பண்றேன்..”என்று சொல்லி விட்டு சென்ற விட்டான்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு ஒரு மாதிரிப் போறார்..?” என்று நினைத்தவள், அடுத்த பத்தாவது நிமிடம் கிளம்பி வெளியே வந்தாள்.
“ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு எதுக்கு ஆபீஸ் போறவ மாதிரி கிளம்பியிருக்கவ..?” என்றார் ருக்கு பாட்டி.
“நான் வேணுமின்னா போய் நைட்டியை போட்டுட்டு போகவா பாட்டி..?” என்றாள் நக்கலாய்.
“வசுந்தரா உன் மருமகளுக்கு எது குறைஞ்சாலும் வாய் மட்டும் குறையாது..” என்றார் ருக்கு.
“அது கூடவே பிறந்தது பாட்டி. உடனே எப்படி குறைக்க முடியும். அதுக்கெல்லாம் நேரம் எடுக்கும்..” என்றாள்.
“இப்படியே வாயாடிகிட்டு நின்னா, ஹாஸ்பிட்டல் போய்ட்டு வர்றதுக்கும் நேரம் எடுக்கும். எப்படி வசதி..?” என்றான் ஈஸ்வரன்.
பைக்கை எடுக்காமல் காரை எடுத்தான் ஈஸ்வரன்.
“எதுக்குங்க கார்..? பைக்லையே போகலாம்..” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இன்னைக்கு கார் தான் வசதி. வந்து ஏறு, நேரமாகுது..” என்றான் பட்டென்று.
“இப்ப எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்கிங்க..? அப்படி கஷ்ட்டப்பட்டு ஒன்னும் கூட்டிட்டு போக வேண்டாம். நானே போய்க்குவேன்..” என்றாள் வீராப்பாய்.
“நான் கஷ்ட்டப்பட்டு கூட்டிட்டு போறேன்னு உன்கிட்ட சொன்னேனா..? மறுபடியும் முருங்கை மரத்துல ஏறாத. உன்னை கீழ இறக்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடும்..” என்றான்.
“என்னைப் பார்த்தா வேதாளம் மாதிரி இருக்கா உங்களுக்கு..?” என்று அதற்கும் அவள் முறைக்க,
“இல்லை.. வேதாளம் எப்பவாவது தான் முருங்கை மரத்துல ஏறும். ஆனா நீ, எப்பவாவது தான் மரத்துல இருந்தே இறங்குற. அதனால் வேதாளத்து கூட உன்னை கம்பேர் பண்ணா, அது கோவிச்சுக்கும்..” என்றான்.
“என்னங்க..? கிண்டலா..?” என்றாள்.
“அது புரிய இவ்வளவு நேரமா உனக்கு..?” என்றவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
அந்த நேரத்தில் அவனுக்கு போன் வர, அதை எடுத்துப் பார்த்தவன் யோசனைக்குப் போனான்.
“புது நம்பரா இருக்கே..?” என்று யோசித்தவன்,
“ஹலோ..!” என்றான்.
“அனிதா புருஷனா..?” என்றான் ஒருவன் எதிர் முனையில் இருந்து.
“ஆமா..” என்றான்.
“உன் மாமனார் தான் குடுத்தார் உன்னோட நம்பரை. குடுத்தார்ன்னு சொன்னா நல்லா இருக்காது. மிரட்டி வாங்கியிருக்கோம்..” என்றான்.
“உனக்கு என்ன வேணும்..? முதல்ல யார் நீ..?” என்றான் யோசனையுடன்.
“அதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம். உன் பொண்டாட்டி சீரழிஞ்ச வீடியோ ஒன்னு இருக்கு. அதை வெளிய விடாம இருக்கணும்ன்னா, பத்து லட்சம் ரூபாயோட, நான் சொல்ற இடத்துக்கு நீ வரணும்..” என்றான் எதிரில் இருந்தவன்.
“வரலைன்னா..?” என்றான் ஈஸ்வரன்.
“உன் குடும்ப மானம் சிரிப்பா சிரிக்கும். உன் பொண்டாட்டி தூக்கு மாட்டி தொங்குவா..?” என்றான்.
“யார் இவன்..? அனிதா இறந்தது கூட தெரியாம என்கிட்ட பேசிட்டு இருக்கான்..?” என்று யோசித்தான் ஈஸ்வரன்.
“நீ யாரு..?” என்றான் ஈஸ்வரன்.
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்..” என்றான் அவன்.
“இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் என்கிட்டே வச்சுக்காத. வைடா போனை..” என்று கத்தியபடி வைத்து விட்டான் ஈஸ்வரன்.
“யாருங்க போன்ல..? ஏன் இவ்வளவு கோபமா பேசுறிங்க..? அந்த அசோக்கா..?” என்றாள் மகா.
“இல்ல..இது வேற..” என்றவன் அதற்கு மேல் அவளிடமும் ஒன்றும் சொல்லவில்லை.
மகாவின் செக்கப் முடிந்து அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டவன்,
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு. போயிட்டு வந்திடுறேன்…” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்.
ஈஸ்வரன் நேராக சென்றது கோயமுத்தூரில் இருந்த அனிதாவின் வீட்டிற்கு தான்.
இப்படி திடுமென வந்து நின்ற ஈஸ்வரனைப் பார்த்து அதிர்ந்து போயினர் அனிதாவின் பெற்றோர்.
“வாங்க தம்பி..” என்றார் அனிதாவின் அப்பா.
“நீங்க யாருக்காவது என்னோட நம்பர் குடுத்திங்களா..?” என்றான் எடுத்த எடுப்பில்.
“அது வந்து தம்பி..” என்று அவர் இழுக்க, அவரின் இழுவையிலேயே தெரிந்தது, வந்த போன் உண்மைதான் என்று.
“போன் பண்ணவன் அனிதா இறந்த விஷயம் கூட தெரியாம பேசிட்டு இருக்கான். என்ன பிரச்சனை..?” என்றான் ஈஸ்வரன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை தம்பி..” என்றார் அவர்.
“பொய் சொல்லாதிங்க..! என்கிட்ட பத்துலட்சம் கேட்டு மிரட்டுறான். அப்ப உங்களையும் ஏற்கனவே மிரட்டியிருக்கான். அப்படித்தான..? ஏதோ நடந்திருக்கு. இப்ப உண்மையை சொல்லப் போறிங்களா? இல்லையா..?” என்றான் கோபமாய்.
“எங்களை மன்னிச்சிடுங்க தம்பி..! அனிதாவுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்ததே, உங்க கூட கல்யாணம் பேசி முடிச்சதுக்கு அப்பறம் தான் தெரியும். அழுது புரண்டு, என்னென்னவோ செஞ்சு தான் அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சோம். அவசர அவசரமா உங்களுக்கு பேசி முடிச்சு கல்யாணமும் பண்ணி வச்சோம். அப்பவே பிளாக் மெயில் பண்ணானுங்க. அனிதா கல்யாணத்தப்பவே முப்பது லட்சம் ரூபாய் மிரட்டி வாங்குனாங்க. பணத்தை வாங்கிட்டு இது தான் உங்க பொண்ணோட வீடியோன்னு அவனுங்க குடுத்தப்ப, பெத்த தகப்பனா.. அந்த இடத்துலயே என் உயிர் போயிருக்கனும். ஆனா, அணிதாவுக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டோம். வெளியே தெரிஞ்சா மானமே போய்டும்ன்னு அவங்க கேட்டப்ப எல்லாம் பணத்தைக் கொடுத்தேன். அனிதா கல்யாணத்துக்கு அப்பறம் அவங்க கொஞ்ச நாள் தொந்தரவு பண்ணாம இருந்தாங்க.
இப்ப அதே மாதிரி இன்னொரு வீடியோவ வச்சுகிட்டு மிரட்டுறாங்க தம்பி. என் பொண்ணு செத்துப் போயிட்டான்னு கூட சொல்லிட்டேன். அவங்க நம்பவேயில்லை. நான் பொய் சொல்றேன்னு நினைச்சு தான் உங்க நம்பரை வாங்கிகிட்டாங்க..” என்றார் அழுதபடி.
“இவ்வளவு நடந்திருக்கு..? நீங்க ஏன் இதை முன்னாடியே என்கிட்டே சொல்லலை..” என்றான் கோபமாய்.
“எப்படி தம்பி சொல்லுவோம்..! எங்க பொண்ணு சீரழிஞ்ச கதையை சொல்லியிருந்தா நீங்க கல்யாணம் பண்ணியிருப்பிங்களா..? அப்படியும் என் பொண்ணு மாட்டவே மாட்டேன்னு தான் சொன்னா. இது உங்களுக்கு செய்ற துரோகம்ன்னு சொன்னா. நாங்க தான் அவளைக் கட்டாயப் படுத்தி சம்மதிக்க வச்சோம். கடைசில, எந்த முடிவை அவ எடுத்திடக் கூடாதுன்னு நினைச்சோமோ, அந்த முடிவை உங்க வீட்ல வந்து அவ தேடிகிட்டா.” என்று தொய்ந்து போய் அமர்ந்தவரைப் பார்த்தவனுக்கு, பாவமாய் இருந்தது.
‘இந்த மிடில்கிளாஸ் மானம், மரியாதை, கவுரவம் அவங்களை என்ன பாடு படுத்துது..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“நான் எந்த ஊரு, என்ன பண்றேன்னு அவங்களுக்குத் தெரியுமா..?” என்றான் ஈஸ்வரன்.
“நாங்க எதையுமே சொல்லலை தம்பி. அனிதா உயிரோட இல்லைன்னு மட்டும் தான் சொன்னோம். ஆனா, அவங்க அதைக் கூட நம்பலை..” என்றார்.
“இனி அவங்க ஏதாவது பணம் கேட்டு மிரட்டுனா… நீங்க தைரியமா என்னை கூப்பிட சொல்லுங்க. இனி எக்காரணம் கொண்டும் ஒரு பைசா கூட அந்த நாய்களுக்கு குடுக்கக் கூடாது. உங்களோட பயம் தான் அவங்களோட ஆயுதமே. நீங்க பயப்படுற வரைக்கும் தான் அவங்களுக்கு வருமானம். இது அவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு..” என்றான்.
“சரிங்க தம்பி..” என்றார்.
“அப்போ நான் கிளம்புறேன்..” என்றான் ஈஸ்வரன்.
“எங்களை மன்னிச்சிடுங்க தம்பி..” என்றார் அவர்.
“நானும் ஒரு அக்கா கூட பிறந்தவன் தான். உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் இதைத் தான் பண்ணியிருப்பேன். நான் பார்த்துக்கிறேன்..” என்று கிளம்பியவனுக்கு புது தலைவலி எடுத்தது.
எல்லாத்தையும் யோசித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு, சட்டென்று மூளையில் எதுவோ ஸ்ட்ரைக் ஆக, சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.
‘அனிதா, நிவியோட பெஸ்ட் பிரண்டுன்னு தெரிஞ்சு தான் அவளை கல்யாணம் பண்ணிங்களா..?’ என்ற மகாவின் வார்த்தைகள் அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
நடந்த ஒவ்வொன்றையும் நிதானமாக யோசித்துப் பார்த்தான் ஈஸ்வரன். ஏதாவது பிடி கிடைக்கிறதா என்று.
‘அனிதாவும், நிவேதாவும் பிரண்ட்ஸ்ன்னா, அப்போ அனிதாவுக்கு நடந்தது நிவேதாக்கு தெரியாம இருக்காது. நிவேதாவுக்கு நடந்தது அனிதாவுக்கு தெரியாம இருக்காது..’ என்று அவன் யோசிக்க,
“ஏன்..? ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி நடந்திருக்க கூடாது..?” என்றது அவனின் மனம். அந்த ஒரு புள்ளியில் மீண்டும் யோசிக்கத் தொடங்கினான்.
பாண்டியனின் அவசரம், மகாவின் கல்யாணத்தில் அவர் காட்டிய பதட்டம், வலிய வந்து தனக்கு பெண் கொடுத்தது, அஷோக்கைக் கண்டு பயப்படுவது, வரிசையாக சொத்துக்களை விற்றது, கடன்மேல் கடன் வாங்கியது.. என்று ஒவ்வொன்றாய் யோசித்துக் கொண்டே சென்றவனுக்கு கடைசியாக அசோக்கிடம் வந்து நின்றது.
அன்று நடந்த சண்டையை அவன் மீண்டும் மீண்டும் அசை போட,
“உன் பொண்டாட்டியாவது பிரஷ் பீஸ் தானா..? இல்லை அவளும் டேமேஜ் பீசா..?” என்ற வார்த்தைகள் நிதானமாய் அவன் மனதிற்குள் இறங்க, பட்டென்று கண்களைத் திறந்தான் ஈஸ்வரன்.
அவனுடைய சந்தேகம் நூறு சதவிகிதம் ஊர்ஜிதமானது.
“எனக்கு போன் பண்ணி பேசுனவன் அசோக் இல்லையே..? இது அவன் குரல் இல்லையே..? அப்ப இவன் வேறையா..? ரெண்டும் ஒரே கும்பலா..? இல்லை தனித் தனி ஆளா..?” என்று யோசித்தான்.
அனைத்தையும் யோசித்தவன், தனக்கு போன் செய்தவன் நம்பரை மொபைலில் சேவ் செய்து கொண்டான். ஒரு முடிவுடன் காரை எடுத்தவன், ஊருக்குள் நுழைந்ததும் நேராக மகாவின் வீட்டிற்கு காரை விட்டான்.
அன்றைய பொழுதே முடிந்து, மாலை ஆறு மணியாகியிருந்தது. சொல்லாமல் வந்து நின்ற ஈஸ்வரனை, பாண்டியனும், கமலாவும் எதிர்பார்க்கவில்லை.
“வாங்க தம்பி..! மகாவைக் காணோம்..? உங்க உடம்புக்கு இப்போ பரவாயில்லையா..? காயமெல்லாம் ஆறிடுச்சா..?” என்றார் கமலா விடாமல்.
“நல்லா இருக்கு அத்தை. நான் வெளிய ஒரு வேலையா போனேன். அப்படியே நேரா இங்க வந்துட்டேன். இனி தான் வீட்டுக்குப் போகணும்..” என்றான்.
“உட்காருங்க தம்பி..! குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்..” என்ற கமலா உள்ளே செல்ல,
“உங்ககிட்ட பேசணும் மாமா..!” என்றான் தீர்மானமாய்.
“பக்கத்து வீட்ல ஒரு விசேஷம் மாப்ள. கமலா இப்ப கிளம்பிடுவா. எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்..” என்றார் பாண்டியன்.
சூடாக அவனுக்கு டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார் கமலா.
“சாப்பிட்டு தான் போகணும் தம்பி. கொஞ்ச நேரத்துல சமைச்சுடுவேன்..” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் அத்தை. மகா அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பா. நான் வீட்ல போயே சாப்பிட்டுக்கிறேன். நீங்க ஏதோ விசேஷத்துக்கு கிளம்பிட்டு இருக்குறதா மாமா சொன்னார். நீங்க கிளம்புங்க. நான் மாமாகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிடுவேன்..” என்றான்.
“சரிங்க தம்பி..” என்ற கமலா அடுத்த பத்தாவது நிமிடம் கிளம்பியிருந்தார்.
“சொல்லுங்க மாமா.. அசோக் உங்களை எதை வச்சு மிரட்டுறான்..?” என்றான் ஈஸ்வரன் நேரடியாக.
அவன் கேட்டதென்னவோ சட்டென்று கேட்டு விட்டான். ஆனால் பாண்டியனால் தான் அப்படி சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
எப்படி சொல்லுவார்..? அப்படி உடனே சொல்லக் கூடியவர் என்றால், இவ்வளவு கடன் பட்டிருக்கத் தேவையே இல்லையே. இருந்த சொத்துக்களை விற்றிருக்கத் தேவையில்லையே. அந்த கௌரவமும், மானம் தான் எப்போதும் அவரைத் தடித்துக் கொண்டிருக்கிறதே.
“ஒருத்தியை கல்யாணம் பண்ணி அடுத்த நாளே செத்துட்டா..? இன்னைக்கு அவ அப்பாகிட்ட போய் ஒரு விஷயம் கேட்டேன். மனுஷன் அடுத்த நிமிஷம் எல்லாத்தையும் சொல்லிட்டார். அவர் வேற யாருமில்லை, உங்க மக நிவேதாவோட பிரண்ட் அனிதாவோட அப்பா தான். அவருக்கு என்மேல இருக்குற நம்பிக்கை கூட இன்னமும் உங்களுக்கு வரலை இல்லையா மாமா..? இல்லை இவன்கிட்ட ஒரு காலத்துல திமிரா பேசியிருக்கோமே, இப்ப இவன்கிட்டையே சொல்ற நிலைமை வந்துடுச்சேன்னு கவலைப் படுறிங்களா..?” என்றான் கோபமாக.
“அப்படியில்லை மாப்ள..” என்றான் பாண்டியன்.
“அப்படித்தான் மாமா..! என்னை நம்பி உங்க பொண்ணையே குடுத்துட்டிங்க. இப்ப இதை சொல்றதுல உங்களுக்கு அப்படி என்ன வெட்டி கௌரவம்..? இன்னும் அவன் என்ன கேட்டாலும், எதையாவது வித்து கூட குடுப்பிங்க. ஆனா, என்கிட்டே சொல்ல மாட்டிங்க இல்லையா” என்றான்.
“சொல்லக் கூடாதுன்னு நினைச்சு நான் சொல்லாம இருக்கல மாப்ள. அவனை ஏதாவது செய்றேன்னு போய், உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா, மகாவைப் பத்தி நினைச்சுப் பாருங்க. இருக்குற பொண்ணாவது நல்லா இருக்கனும்ன்னு நினைச்சேன், அவ்வளவு தான்..” என்றார்.
“நிவேதாவை அப்யூஸ் பண்ண வீடியோவைக் காட்டி உங்களை மிரட்டுனானா அந்த அசோக்..?” என்றான் ஈஸ்வரன்.
“ஒரு நாள் நைட்டு நிவேதா திடுதிப்புன்னு தூக்குப் போட போனா மாப்ள.. எங்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. கமலாவுக்கு உயிரே போய்டுச்சு. எப்படியோ அவளைக் காப்பாத்திட்டோம். மகா அப்போ சென்னையில இருந்தா. அவளுக்கு என்ன பிரச்சனைன்னு நானும் கேட்டு அலுத்துப் போய்ட்டேன். நிவேதா வாயைத் திறந்து சொல்லவேயில்லை.
அப்பத்தான் ஒரு நாள் இடியை இறக்குன மாதிரி ஒருத்தன் போன் பண்ணி, என்னை மிரட்ட ஆரம்பிச்சான். அந்த வீடியோவையும் எனக்கு அனுப்பி வச்சான்.
நிவேதாவை நாலஞ்சு பேர் கும்பலா சேர்ந்து, அவளை..அவளை.. என்று பாண்டியன் சொல்ல முடியாமல் கண்ணீர் கோர்க்க,
“விடுங்க மாமா..!” என்றான் ஈஸ்வரன்.
“அதைப் பார்த்த உடனே…! பெத்த தகப்பனா அந்த இடத்துலயே செத்துட்டேன் மாப்ள. கமலாவுக்கு இந்த விஷயம் இப்ப வரைக்கும் தெரியாது. தெரிஞ்சா அவ தாங்க மாட்டா மாப்ள. நிவேதா அப்படி நடந்துகிட்டதுக்கான காரணமும் எனக்குத் தெரிஞ்சது. அவனுங்க கேட்ட பணத்தையெல்லாம் நான் குடுத்தேன். கடன் வாங்கிக் குடுத்தேன், நிலத்தை வித்து குடுத்தேன். எப்படியோ அவனுங்க கேட்ட பணத்தை எல்லாம் குடுத்தேன்..” என்றார்.
“உங்களை அப்போ பணம் கேட்டு மிரட்டுனது அசோக்கா..?” என்றான் ஈஸ்வரன்.
“இல்ல மாப்ள..” என்றார்.
“அப்பறம் அசோக் எப்படி..?” என்றான் ஈஸ்வரன் புரியாமல்.
“அவனுங்க ஒரு பக்கம் மிரட்டுனா.. நிவேதா கல்யாணத்துக்கு அப்பறம் அசோக் வேற மாதிரி மிரட்ட ஆரம்பிச்சான் மாப்ள..” என்றார் பாண்டியன்.
“புரியலை மாமா..அசோக் எப்படி நிவேதாவுக்கு மாப்பிள்ளையா ஆனான்..?” என்றான் புரியாமல்.
“அப்போ எனக்கிருந்த பதட்டத்துல நிவேதாவுக்கு உடனே ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிடனும்ன்னு நினைச்சேன் மாப்ள. அப்போ தரகர் கொண்டு வந்த மாப்ள தான் இந்த அசோக்..” என்றார் பாண்டியன்.
“அப்பறம் என்னாச்சு..?” என்றான்.
“நிவேதா இந்த கல்யாணத்துக்கு முதல்ல சம்மதிக்கவே இல்லை. அவளுக்கு பின்னாடி மகா இருக்குறான்னு சொல்லி நான் தான் சம்மதிக்க வச்சேன். அந்த விஷயத்திலாவது அவளுக்கு ஒரு நல்லது நடந்துடாதான்னு ஒரு நப்பாசை. அஷோக்கைப் பத்தி விசாரிச்சப்ப ஆகா, ஓஹோன்னு சொன்னாங்க. நானும் நம்புனேன். நான் அப்படி நம்புனதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் இருக்கும் போது தான் அசோக் என்னை பார்க்க வந்தான்..”
“என்ன காரணம்..? எதுக்கு பார்க்க வந்தான்..?” என்றான் ஈஸ்வரன்.
பாண்டியனுக்கு நிவேதாவின் நியாபகம் வந்திருக்க வேண்டும், கண்கள் கலங்கி மீண்டும் தளர்ந்து போனார்.
“இந்த தண்ணியை குடிங்க..” என்று தண்ணீரை எடுத்துக் கொடுத்தான் ஈஸ்வரன்.
அங்கே மகா இவனைக் காணாமல் புலம்பிக் கொண்டிருந்தாள்.