காதல் 18:
“வாங்க மாப்பிள்ளை..! என்ன இவ்வளவு தூரம்..? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு..?” என்றார் பாண்டியன், அஷோக்கைப் பார்த்து.
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் மாமா..! அதான் நேர்லயே பார்த்து பேசிட்டு போயிடலாம்ன்னு வந்தேன்..” என்றான் அசோக்.
“என்ன விஷயம் மாப்பிள்ளை..? எதுவா இருந்தாலும் சொல்லுங்க..” என்றார்.
“இதையெப்படி உங்ககிட்ட சொல்றதுன்னே தெரியலை மாமா. ஆனா, சொல்லாமலும் இருக்க முடியாது..” என்றான்.
“முதல்ல விஷயம் என்னன்னு சொல்லுங்க மாப்பிள்ளை..” என்றார் பாண்டியன்.
“யாருன்னு தெரியலை மாமா. என்னோட நம்பருக்கு நிவேதா பத்தின தப்பான வீடியோவை அனுப்பி வச்சிருக்கான். அதைப் பார்த்ததும் எனக்கு அப்படியே ஷாக் ஆகிடுச்சு. முதல்ல நான் இதை நம்பலை மாமா. ஏதாவது மார்பிங் வேலையா இருக்கும்ன்னு நினைச்சேன். அப்பறம் தான் அது மார்பிங் இல்லை உண்மைன்னு தெரிஞ்சது..” என்றான் அசோக்.
அசோக் வந்து அப்படி சொன்னதும் பாண்டியனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. எது வெளியே தெரியக் கூடாது என்று அவர் நினைத்தாரோ, அது வெளியே வந்துவிட்டது. அதுவும் யாருக்குத் தெரியக் கூடாதோ.. அவனுக்கே.
“மாப்பிள்ளை..” என்று தயங்கி தடுமாறி நின்றார். பெண்ணைப் பெற்ற ஒரு தகப்பனின் குறுகல் அது.
“நீங்க ஒன்னும் தப்பா நினைக்க வேண்டாம் மாமா. விஷயம் தெரிஞ்சு அதை உங்ககிட்ட சொல்லாம இருக்கக் கூடாதுன்னு தான் வந்தேன். அது மட்டுமில்லாம அந்த வீடியோவை அனுப்பினவன், பணம் கேட்டு வேற பிளாக்மெயில் பண்றான்.. விஷயம் வீட்டுக்குத் தெரிஞ்சா, இந்த கல்யாணத்தையே நிறுத்திடுவாங்க மாமா.” என்றான் அசோக்.
“தப்பு எங்க பக்கம் இருக்கு மாப்பிள்ளை..” என்றார் பாண்டியன்.
“அதுக்காக நான் நிவேதாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன் மாமா. இந்த விஷயம் என்னைத் தவிர வெளிய யாருக்கும் தெரியாது. இனி நான் சொல்லவும் மாட்டேன். நிவேதாவோட மான, அவமானத்துல எனக்கும் பங்கிருக்கு மாமா. இன்னும் ரெண்டு நாள்ல அவ எனக்கு பொண்டாட்டியா ஆகப் பொறவ. அவளை நான் ஏத்துக்கிறேன் மாமா..” என்று தேனாகப் பேசினான் அசோக்.
துவண்டு போயிருந்த பாண்டியனுக்கு அந்த நேரத்தில் அசோக்கின் வார்த்தைகள் தான் வர்ணஜாலம். மகளின் உண்மை தெரிந்து அவளைக் காக்க வந்தவனாகவே தெரிந்தான் அசோக் அப்போது.
“ரொம்ப நன்றி மாப்பிள்ளை..! நீங்க மாப்பிள்ளையா கிடைக்க நாங்க தான் குடுத்து வச்சிருக்கணும்..” என்றார் பாண்டியன்.
“அவன் கேட்ட பணத்தை குடுத்து, அந்த வீடியோ வோட ஒர்ஜினல் காப்பியெல்லாம் வாங்கி நான் அழிச்சுட்டேன் மாமா.. இனி அவனால எந்த பிரச்சனையும் இருக்காது” என்றான் அசோக்.
“நீங்க தெய்வம் மாப்பிள்ளை..! நீங்க நிவேதாவை ஏத்துகிட்டதே போதும் மாப்பிள்ளை. அவனுக்கு நீங்க எவ்வளவு குடுத்திங்கன்னு சொல்லுங்க. அதை நான் உங்களுக்குக் குடுத்துடுறேன்..” என்றார் பாண்டியன்.
“பத்துலட்சம் குடுத்தேன் மாமா.. ஆனா, நான் பணத்தை எதிர்பார்த்து இங்க வரலை மாமா. எனக்கு அது தேவையும் கிடையாது..” என்றான் அசோக்.
“அது எனக்குத் தெரியும் மாப்பிள்ளை. ஆனா, உங்க வீட்ல கணக்குக் கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவிங்க. நீங்க எங்களுக்கு இவ்வளவு செஞ்சதே போதும் மாப்பிள்ளை. அந்த பணத்தை நான் குடுத்துடுறேன்..” என்றார் பாண்டியன்.
அன்று நடந்த பேச்சு வார்த்தையை அப்படியே சொல்லி முடித்தார் பாண்டியன்.
“இது தான் மாப்ள அன்னைக்கு நடந்தது. அன்னைக்கு வந்து அவன் பேசுன பேச்சுல தான் நான் அவனை முழுசா நம்புனேன்..” என்றார் பாண்டியன்.
“நீங்க தப்பு மேல தப்புப் பண்ணியிருக்கிங்க மாமா..! அவன் முதல் தடவை பணம் கேட்கும் போதே, நீங்க போலீஸ் கிட்ட போயிருக்கனும்..” என்றான் ஈஸ்வரன்.
“நான் போலீஸ் ஸ்டேஷன் போகலைன்னா நினைக்கிறிங்க மாப்ள.. அதெல்லாம் நடையா நடந்தது தான் மிச்சம். ஒரு பலனும் இல்லை. நான் போலீஸ் ஸ்டேஷன் போன அடுத்த நிமிஷம் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு..” என்றார் பாண்டியன்.
“உங்களை நல்லா ஏமாத்தியிருக்காங்கன்னு மட்டும் தெரியுது. கண்டிப்பா இந்த அசோக்குக்கு இதுல தொடர்பு இருக்கு…” என்றான் ஈஸ்வரன்.
“நிவேதா கல்யாணத்துக்கு அப்பறம் தான் எனக்கு தெரியும் மாப்ள..” என்றார் பாண்டியன்.
“நிவேதா தற்கொலைக்கு முன்னாடி உங்க கிட்ட எதுவும் பேசலையா..?” என்றான் ஈஸ்வர்.
“முதல் நாள் போன் பண்ணி பேசுன புள்ளையோட குரலே சரியில்ல மாப்ள. நான் என்ன பிரச்சனைன்னு கேட்டும் நிவேதா சொல்லவேயில்லை..” என்றார்.
“வேற எதுவும் சொல்லலையா..?” என்றான் ஈஸ்வரன்.
“அப்பா, என் வாழ்க்கை தான் இப்படி ஆயிருச்சு. மகாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுங்கப்பா. மஞ்சு சித்தி தம்பி, ஈஸ்வருக்கே மகாவை கல்யாணம் பண்ணி குடுங்கப்பா. அவரைப் பார்த்தா ரொம்ப நல்ல மாதிரின்னு தான் தோணுது. புரோக்கர் சொல்றதை நம்பி,தெரியாத யாருக்கோ பொண்ணை குடுக்குறதை விட, சொந்த ஊர்ல அளவான வசதின்னாலும், ஒழுக்கமான பையனா இருந்தா பொண்ணைக் குடுக்குறதில் தப்பேயில்லப்பா..”
இது தான் மாப்ள நிவேதா என்கிட்டே கடைசியா பேசுனது.. என்று சொன்ன பாண்டியன் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார். பெண்ணைப் பெற்றவரின் வேதனையெல்லாம் கண்ணீராய் வடிந்து கொண்டிருக்க, அவரை அப்படியொரு நிலையில் பார்த்த ஈஸ்வரனுக்கும் கண்கள் கலங்கிப் போனது. அதிகம் பார்த்ததில்லை என்றாலும் தன் மீது நிவேதாவிற்கு வந்த நம்பிக்கை தான், ஒரு ஆணாய் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று நினைத்தான் ஈஸ்வரன்.
பாண்டியன் தன்னைத் தேடி வந்து மகாவை திருமணம் செய்து கொடுத்த காரணமும் அவனுக்குத் தெளிவாய் தெரிந்தது.
“அழாதிங்க மாமா..! அசோக், உண்மை தெரிஞ்சு உங்களை பிளாக்மெயில் பண்ண மாதிரி, எனக்கும் உண்மை தெரிஞ்சா ஏதாவது பண்ணிடுவேன்னு நினைச்சு தான் என்கிட்டே சொல்ல தயங்குனிங்களா மாமா..?” என்றான் ஈஸ்வரன்.
“அந்த அசோக் அளவுக்கு நினைக்கலை மாப்ள. ஆனா, மூத்த பொண்ணோட விஷயத்தை சொல்லி, அதனால் சின்னப் பொண்ணோட வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு நினைச்சு தான் சொல்லலை மாப்ள. மத்தபடி உங்களை தப்பா நினைச்சுல்லாம் சொல்லாம இல்லை மாப்ள..” என்றார் பாண்டியன்.
அவரைப் பார்க்கும் போது ஒருவகைக்கு பாவமாய் இருந்தது ஈஸ்வரனுக்கு. அவருடைய நிலையில் யார் இருந்திருந்தாலும் அதைத் தான் செய்திருப்பார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, அவரின் மனக்கஷ்ட்டம் புரியாது. எந்த வகையிலும் தன்னுடைய பெண்ணைப் பற்றி யாரும் ஒரு வார்த்தை தப்பாக பேசி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அவரிடத்தில் இருந்து பார்த்தால் அது உண்மையும் கூட. அதற்காக அவர் இழந்தது கொஞ்ச நஞ்சமில்லை. அந்த வயதான காலத்திலும், மனைவி, மகளுக்குத் தெரியாமல், அவர் இத்தனை விஷயத்தையும் போட்டு மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அது சாதாரணம் இல்லை. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், குடும்பத்தோடு தற்கொலை கூட செய்திருக்கலாம்.
“மாமா.. இனி இந்த விஷயத்தைப் பத்தி நீங்க கவலைப் படாம இருங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்..” என்றவன், எதையோ கேட்க அவரிடம் தயங்கினான்.
“என்ன மாப்ள தயங்குறிங்க..?” என்றார் பாண்டியன்.
“மாமா.., அது.. அவங்க உங்களை பிளாக்மெயில் பண்ண வீடியோவை நீங்க பார்த்திங்களா..?” என்றான் தயக்கத்துடன்.
“எந்த தகப்பனும் அனுபவிக்கக் கூடாத கொடுமை மாப்ள அது…” என்றார் கண்ணீருடன்.
“நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. அதுல நிவேதா வலுக்கட்டாயமா எதுவும் பண்ணாங்களா..இல்லை நிவேதா தானாவே…” என்று நிறுத்தினான்.
ஒருவேளை நிவேதாவை காதல் என்ற பெயரில் கூட அவள் சம்மதத்துடன் அவளை எடுத்துக் கொண்டு, அதை வைத்து பிளாக் மெயில் செய்தார்களா என்று தெரிய வேண்டியிருந்தது அவனுக்கு.
“இல்ல மாப்ள..! என் பொண்ணு அப்படி போற பொண்ணு கிடையாது. என் பொண்ணை ஒருத்தன் வலுக்காட்டாயமாத்தான் கற்பழிச்சு வீடியோ எடுத்திருக்கான் மாப்ள..அவளுக்கு சுய நினைவே இல்ல ” என்றவர் மறுபடியும் ஓவென்று அழ, அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ஈஸ்வர்.
“சாரி மாமா..! உண்மையை தெரிஞ்சுக்க வேண்டி தான் கேட்டேன்..” என்றான்.
“என்ன தெரிஞ்சு என்ன செய்ய மாப்ள..? எவ்வளவு துடிச்சாலோ என் பொண்ணு. கரப்பான் பூச்சிக்கே பயப்படுற பொண்ணு. தானே சாவைத் தேடிக்கனும்ன்னா அவ எந்த அளவுக்கு மரத்துப் போயிருப்பா. நான் பார்த்த மாப்பிள்ளை நல்லவன்னு நினைச்சு தான என் பொண்ணு கழுத்தை நீட்டினா. அவ பிரச்சனையை தெரிஞ்ச ஒருத்தன், அவளை நல்லா பார்த்துப்பான்னு தான மாப்ள கழுத்தை நீட்டினா. என் பொண்ணு வாழ்க்கையை நானே அழிச்சுட்டேன். நானே அழிச்சுட்டேன். நான் நல்ல தகப்பனே கிடையாது. என் பொண்ணை எடுத்துகிட்ட ஆண்டவன், அவளுக்கு பதிலா என்னை எடுந்திருந்திருக்கலாம்…” என்று ஆற்றமாட்டாமல் தேற்ற மாட்டாமல் அழுது கொண்டிருந்தார் பாண்டியன்.
இத்தனை நாள் அடக்கி வைத்த எல்லா துக்கமும், வருத்தமும், கோபமும், உணர்ச்சியும், அழுகையும் வெளி வந்து விட்டது பாண்டியனுக்கு. ஒற்றை ஆளாய் தாங்கிய வலிகளுக்கு எல்லாம் வடிகாலாய் வந்திருக்கிறான் ஈஸ்வரன்.
“நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க மாமா..! நீங்க போலீஸ்க்கு போயும் இந்த பிரச்சனையை அவங்க எடுத்துக்கலைன்னா, இதுல பெரிய ஆள் சம்மந்தப் பட்டிருக்கணும். நான் பார்த்துக்கிறேன் இதை..” என்றான் ஈஸ்வரன்.
“இந்த விஷயம் எதுவுமே மகாவுக்கு தெரியாது மாப்ள…” என்றார் பாண்டியன்.
“நான் பார்த்துக்கிறேன் மாமா..!” என்றவன்,
“நிவேதா ரூம் எது..?” என்றான்.
“மகாவும், நிவேதாவும் அந்த ரூம்ல தான் இருந்தாங்க மாப்ள..” என்றார் ஈஸ்வர்.
மகாவின் அறைக்குள் அவன் அதிகம் சென்றதில்லை. இரண்டு மூன்று முறை தான் போயிருக்கிறான்.
“இதோ வந்திடுறேன் மாமா..!” என்று மகாவின் அறைக்குள் நுழைந்தவன், ஏதாவது கிடைக்குமா என்று ஆராய்ந்து பார்த்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. யோசனையுடன் வெளியே வந்தவன்,
“அப்போ நான் கிளம்புறேன் மாமா..” என்றான்.
“மாப்ள அந்த அசோக் கிட்ட கொஞ்சம் பார்த்து இருங்க. ஏன்னா, அவன் லேசுபட்டவன் கிடையாது மாப்ள..” என்றார் பாண்டியன்.
“அவனைப் பத்தி ஏற்கனவே எனக்குத் தெரியும் மாமா. நான் பார்த்து இருந்துக்கிறேன். நீங்க இதைப் பத்தி இனி நினைக்காம இருங்க..” என்றவன், அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
ஈஸ்வரனிடம் அனைத்தையும் இறக்கி வைத்த பாண்டியனுக்கு, ஏதோ ஒரு பெரிய பாரத்தையே இறக்கி வைத்ததைப் போன்று இருந்தது. நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு அன்று தான் அவரின் மனம் கொஞ்சம் அமைதியாக இருந்தது. எல்லாம் ஈஸ்வரனால் மட்டுமே நடந்திருக்கிறது.
வீட்டிற்கு கிளம்பிய ஈஸ்வரனின் மனதில் பாரம் ஏறிக் கொண்டது. பிரச்சனையை எப்படி டீல் செய்வது என்பது தான் அவனின் யோசனையாக இருந்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான் ஈஸ்வரன்.
கார் சத்தம் கேட்டு வெளியே வந்த மகா, அவன் காரை நிறுத்திவிட்டு இறங்கி வரும் வரை அழுது கொண்டிருந்தவள், அவன் இறங்கியது தான் மாயம்..ஓடிச் சென்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளின் திடீர் தாக்குதலில் தடுமாறி நின்றவன்,
“ஹேய் மகா..? என்னாச்சு..? எதுக்கு இப்படி அழற..?” என்றான் ஒன்றும் புரியாமல்.
“என்ன பழக்கம் ஈஸ்வரா இது..? வெளிய போனா எங்க போறன்னு சொல்லிட்டு போக மாட்டியா..? உன்னோட போனுக்கு போன் பண்ணாலும், லைன் போகவே இல்லை. நாங்க என்னன்னு நினைக்கிறது. பாவம் மகா தான் ரொம்ப பயந்து போய்ட்டா..” என்றார் வசுந்தரா.
“நான் வெளிய போறேன்னு சொல்லிட்டு தான போனேன்..” என்றான்.
“எங்க போயிட்டு வர்ற..? எதுக்கு இவ்வளவு நேரம்..?” என்றார் வசுந்தரா.
“கோயம்புத்தூர் போயிருந்தேன் ம்மா.. அனிதா வீடு வரைக்கும்..” என்றான்.
அவ்வளவு தான்..! மகாவின் கண்ணீர் அப்படியே நின்றது. அவனை அணைத்துக் கொண்டு நின்றவள், சட்டென்று விலகினாள்.
“என்னடி ஆச்சு..?” என்றான்.
“ஒண்ணுமில்லை..” என்றாள்.
“எங்க போறதா இருந்தாலும் சொல்லிட்டு போ ஈஸ்வர். அன்னைக்கு மாதிரி எதுவும் ஆயிடுச்சோன்னு நாங்க எவ்வளவு பதறிப் போய்ட்டோம். அதுலயும் மகா, அப்ப பிடிச்ச அழுகை, இப்பதான் நிறுத்தியிருக்கா..” என்றார் வசுந்தரா.
“மொபைல் சார்ஜ் இல்லாம ஆப் ஆயிடுச்சும்மா. இனி இப்படி நடக்காது..” என்றான்.
“கைகால் கழுவிட்டு சாப்பிட வாப்பா.. மகா அவனுக்கு எடுத்து வைம்மா..” என்றார் வசுந்தரா.
“எனக்கு ரொம்ப தலைவலிக்குது அத்தை. நீங்களே எடுத்து வச்சிருங்க..” என்றவள் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை.
“என்னம்மா ஆச்சு இவளுக்கு..?” என்றான் புரியாமல்.
“கொஞ்சம் பயந்துட்டாப்பா. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்..” என்றார் வசுந்தரா.
சாப்பிட மனமே இல்லாமல் பேருக்கு சாப்பிட்டான் ஈஸ்வரன்.
“என்னப்பா..? வயித்துக்கு சாப்பிடு..” என்றார் வசுந்தரா.
“இல்லைம்மா.. என்னமோ தெரியலை, பசியே இல்லை..” என்றான்.
“மகாவும் இன்னும் சாப்பிடலை. கொஞ்ச நேரம் கழிச்சு அவளையும் வந்து சாப்பிட சொல்லு ஈஸ்வர். எல்லாமே எடுத்து வச்சிருக்கேன்..” என்றார்.
“நீங்க போய் தூங்குங்கம்மா. நான் பார்த்துக்கிறேன்..” என்றவன் சாப்பிட்டு முடித்து விட்டு அறைக்குள் சென்றான். அங்கு கட்டிலில் படுத்திருந்தவளின் முகம் அழுததில் வீங்கிப் போயிருந்தது.
“இது ஒரு சாதாரண விஷயம். இதுக்கு ஏன் இப்படி ஆர்ப்பாட்டம் பன்ற..?” என்றான்.
“எது சாதாரண விஷயம்..? காலையில ஏதோ போன் வந்தது.. நீங்க கோபமா பேசுனிங்க. அப்பறம் வெளிய போறேன்னு மொட்டையா சொல்லிட்டு கிளம்பிட்டிங்க. இப்ப வரைக்கும் ஒரு போன் கூட பண்ணி சொல்லலை.. நான் என்னன்னு நினைக்கிறது. ஏற்கனவே அந்த அசோக்கால உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. எனக்கு பயமா இருக்காதா..? இல்லை இருக்கக் கூடாதுன்னு சொல்றிங்களா..?” என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.
“நான் அப்படி சொல்லலை..” என்றவனுக்கு அவளின் முகத்தைப் பார்க்கவே பாவமாய் போனது.
“ஹேய் மகா..” என்று அவளின் முகத்தைத் திருப்ப,
“ஒன்னும் பேச வேண்டாம்..” என்றாள்.
“சரி பேசலை..” என்றவன், அவனின் வேலையை பார்த்துக் கொண்டிருக்க,
“பேசவேண்டாம்ன்னு சொன்னா பேச மாட்டிங்களா..? இது தான் சாக்குன்னு நிம்மதியா இருப்பிங்களா..?” என்றாள்.
“நீ என்னடி முன்ன வந்தா முட்டுற.. பின்ன வந்தா உதைக்கிற..? நான் என்னதான் பண்றது..??” என்றான்.
“நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.. நான் தான் லூசு, நீங்க வீட்டுக்கு வர லேட்டானதும் பதறிப் போயிட்டேன். உங்களுக்குத் தான் அந்த கவலையில்லையே. அனிதா வீட்டுக்கு போன ஜோருல என்னை மறந்திருப்பிங்க..” என்றாள்.
“உனக்கே இது ஞாயமா தெரியுதாடி..? அனிதா உயிரோடவே இல்லை. அதை முதல்ல புரிஞ்சுக்க. என்னமோ நான் என் லவ்வரைப் பார்த்துட்டு வந்த ரேஞ்சுக்கு குதிக்கிற..?” என்றான்.
“ஹோ..லவ்வரைப் பார்த்துட்டு வர்ற ஐடியா வேற இருக்கா உங்களுக்கு..?” என்றாள்.
“ஆளை விடுடி..! எனக்கு நிஜமாவே டயர்டா இருக்கு..” என்றான்.
“ஏங்க..? கால் எதுவும் வலிக்குதா..?” என்று வேகமாய் அவனின் காலை ஆராய்ச்சி செய்ய,
அவளை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்று புரியாமல் திண்டாடிப் போனான் ஈஸ்வரன்.
மகாவையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, பாண்டியன் சொன்ன மொத்த விஷயமும் மீண்டும் ஞாபகத்திற்கு வர, ஏனோ மீண்டும் உள்ளம் கனமாகிப் போனது.
“என்னங்க ஆச்சு..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றாள்.
‘இவளுக்கு மட்டும் நடந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவா..?’ என்று யோசித்தவனுக்கு, அந்த யோசனையே பிடிக்கவில்லை. அவளை எந்த விதத்திலும் எதுவும் பாதிக்கக் கூடாது என்று நினைத்தான். அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, நகர்ந்து அவன் மடியில் படுத்த மகா, அவனை இடுப்போடு கட்டிக் கொண்டு, தூங்கிவிட்டாள். உட்கார்ந்த படியே எவ்வளவு நேரம் யோசனையில் இருந்தானோ தெரியாது, கால் மரத்துப் போகவும் தான் நினைவுக்கு வந்தான். தூங்கியவளை தலையணைக்கு நகர்த்திவிட்டு, எழுந்து விட்டான். அப்பொழுதும் அவனை விடாமல் அவள் பிடித்திருக்க, அவளின் பிடியை மனமேயில்லாமல் விலக்கினான்.
மொட்டை மாடிக்கு வந்தவன், காலையில் தனக்கு அழைத்த நம்பருக்கு திருப்பி அழைத்தான்.
“ஹலோ..! என்ன இந்த நேரத்துக்கு கூப்பிடுற..? பணத்தை ரெடி பண்ணிட்டியா..?” என்றான் எதிரில் இருந்தவன்.
“நானெதுக்குடா உனக்குப் பணம் தரனும்..?” என்றான் ஈஸ்வரன்.
“என்னடா, நான் சொன்னத மறந்துட்டியா..? இல்ல திரும்பவும் சொல்லனுமா..?” என்றான் எதிரில் இருந்தவன்.
“திரும்பவும் தான் சொல்லேன்..” என்றான் ஈஸ்வரன்.
“உன் பொண்டாட்டியோட வீடியோ எங்ககிட்ட இருக்கு. அதை வெளிய விட்டா என்ன ஆகும்ன்னு தெரியுமா..?” என்றான் எதிரில் இருந்தவன்.
“என்ன வீடியோ..? நாலஞ்சு பேர் கும்பலா அவளை ரேப் பண்ண வீடியோவா..?” என்றான் ஈஸ்வரன் நக்கலாக.
“ஏய்..?? நீ யார்கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமா..?” என்றான் அவன்.
“ஏன் தெரியாது..? நல்லா தெரியுமே..?உழைச்சு சாப்பிட துப்பில்லாத நாயி.. ஊர் பொண்ணுங்க கற்பை சூறையாடி, அதை வீடியோ எடுத்து, அதை வச்சு பிளாக் மெயில் பண்ணி, எதிர்ல இருக்குறவன் வயிர் எரிஞ்சு குடுக்குற பணத்துல உடம்பை வளர்க்குற தெரு நாய் கிட்ட பேசிகிட்டு இருக்கேன்னு தெரியுது..” என்றான் ஈஸ்வரன் கோபமாக.
“ஏய்..? என்னடா ஓவரா பேசுற.. வீடியோவை வெளிய விட்டா தெரியும்டா உனக்கு.. வெளிய தலைகாட்ட முடியாம பண்ணிடுவேன்..” என்றான் அவன்.
“நீ வெளிய விட்டுத்தான் பாரேன்..! நாயே நீ வச்சிருக்கிறது என் பொண்டாட்டி உன்னைத் தேடி வந்த வீடியோ இல்லை. நீங்க அவளை ரேப் பண்ண வீடியோ. அதை வெளிய விட்டா, நீதாண்டா ஜெயிலுக்கு போவ. இது உனக்குத் தெரியுமா தெரியாதா..? நீங்களே உயிரோட இருக்கும் போது, பாதிக்கப்பட்ட பொண்ணுங்க ஏண்டா சாகனும்..” என்றான் ஈஸ்வரன்.
“உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லடா. நான் அவ அப்பன்கிட்ட பேசிக்கிறேன்..” என்றான் அவன்.
“ஏன் என்னைப் பார்த்தா பயமா இருக்கா..? அதெப்படிடா.. பையன் இல்லாத வீடா பார்த்து செலக்ட் பண்ணியிருக்கிங்க. அப்பதான் உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாதுண்ணா..? வயசானவங்களை பாடா படுத்தி பணம் பிடுங்குற நாய், உன்வீட்டு பொண்ணுங்களை வச்சு இப்படி பண்ண வேண்டியது தான..? அவங்களை மட்டும் நீங்க விட்டா வச்சிருப்பிங்க..?” என்றான்.
“ஏய்..!! என்று கத்தியவன், இப்படி பேசுறதுக்கு நீ அனுபவிப்படா..?” என்றான் அவன்.
“ஆமா, நீ தனியா இல்லை அந்த அசோக் கூட கூட்டணியா..?” என்றான். அவனுக்கு ஒரு விஷயம் தெளிவாக வேண்டியிருந்தது.
“அசோக்கா..? அப்படி யாரையும் எனக்குத் தெரியாது. நீ என்னடா..? என்னை டைவேர்ட் பண்ண பார்க்குறியா..? நீ எங்க போனாலும் உன்னால எங்களை ஒன்னும் புடுங்க முடியாது…” என்றான்.
அவன் பதட்டத்திலிருந்தே தெரிந்து கொண்டான் ஈஸ்வரன். அஷோக்கை இவனுக்குத் தெரியுமென்று.
“அந்த அசோக்கிட்ட சொல்லு..! ஈஸ்வரன் தான் பேசுனதுன்னு. அவனை கூடிய சீக்கிரம் தொலைச்சுக் கட்டுறேன்னு சொல்லிடு.. இனிமேல் பணம் தா, அது தான்னு போன் ஏதாவது வந்தது.. நான் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போக மாட்டேன். ஸ்ட்ரெயிட்டா கோர்ட்டுக்குத் தான் போவேன்..” என்றான் ஈஸ்வரன்.
இவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, மறுமுனை கட்டாகியிருந்தது.
‘அவனுங்க ரேப் பண்ண வீடியோவை வச்சு மிரட்டியிருக்கானுக. அந்த வீடியோ வெளிய வந்தா, அவனுகளுக்கு தான் ஆப்புன்றது தெரியாம, இவங்க இவ்வளவு பணத்தைக் குடுத்திருக்காங்களே..’ என்று நொந்து கொண்டான் ஈஸ்வரன்.
‘அப்படியில்லை ஈஸ்வரா.. ரெண்டு பேரும் கல்யாணம் ஆகாத பொண்ணுங்க. அதனால தான் பயந்து போய் குடுத்திருக்காங்க. என்னதான் பாதிக்கப்பட்ட பொண்ணுக்காக இரக்கப்பட்டாலும், இந்த ஊர் உலகம் அந்த பொண்ணுங்களை தள்ளி வச்சுத்தான பார்க்குது..’ என்று அவனுக்கு எடுத்து சொன்னது அவன் மனம்.
இப்போதைக்கு அவனை ஆப் பண்ணியதே, ஈஸ்வரனுக்கு போதுமானதாக இருக்க, இறங்கி கீழே வந்தான்.
மகா ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, அவளைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. அவளை இழுத்து தனக்குள் அணைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தான். அவளை தனக்குள்ளேயே வைத்திருப்பதை போன்ற எண்ணம் அவனுக்கு.
அங்கே அசோக்கோ…
“முட்டாள் முட்டாள்..! எதிர்ல பேசுறது யார்ன்னு பார்த்து பேச மாட்ட. அவ அப்பனோட நிறுத்த வேண்டியது தான. புருஷனுக்கெல்லாம் உன்னை நான் போன் போட சொன்னேனா..?” என்றான்.
“அவன் ரொம்ப பேசுறான் அசோக். உன்பேரை கூட சரியா சொன்னான்..” என்றான் அவன்.
“என் பேரை சொன்னானா..?” என்ற அசோக் குழம்பிப் போனான்.
“ஆமா..! அவன் பேர் என்னமோ சொன்னானே..ஆங்.. ஈஸ்வரனாம்..” என்றான்.
“ஈஸ்வரனா..?” என்று அதிர்ந்த அசோக்,
“அவன் மகா புருஷனா, அனிதா புருஷனா..?” என்று குழம்பிப் போனான்.
ரெண்டு பேருக்கும் அவன் தான் புருஷன் என்று விதி அங்கே சிரித்துக் கொண்டிருந்தது.