காதல் 19:
அடுத்து வந்த மூன்று நாட்களும் ஈஸ்வரன் ஒரு இடத்தில் இல்லை. தீவிரமாய் எதையோ செய்து கொண்டிருக்கிறான் என்று மட்டும் மகாவிற்கு தெரிந்தது. ஆனால் என்ன செய்கிறான் என்று தான் தெரியவில்லை. அவள் கேட்டாலும் அவன் சொல்லும் நிலைமையிலும் இல்லை. ஆனால் அவன் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மகாவிற்கு பிபி ஏறியது தான் மிச்சம்.
அவன் லேப்டாப்பில் எதையாவது செய்து கொண்டிருக்க, இவள் அதை எட்டிப் பார்க்க, ஈஸ்வரன் இவளை முறைக்க என்று தான் நேரம் சென்றது.
இன்று…
“இப்ப உனக்கு என்னடி பிரச்சனை..?” என்றான் சலிப்புடன்.
“அப்படி என்ன வெட்டி முறிக்கிறிங்க..? அதைத்தான் பார்த்தேன்..” என்றாள்.
“இல்லையே..மல்லுவேட்டி மைனர் இவனெல்லாம் லேப்டாப் யூஸ் பண்றானேன்னு தான பார்க்குற..?” என்றான் சிரிப்புடன்.
“இப்ப இருக்குற நண்டு சுண்டு கூட என்னென்ன வேலையோ பார்க்குது. நீங்க ஒரு டிகிரி ஹோல்டர்.. உங்களுக்கு எதுவும் தெரியாம இருக்குமா என்ன,.?” என்றாள் ஒன்றுமே தெரியாதவளைப் போல்.
“டிகிரிலையும் இன்னும் பத்து அரியர் வேற வச்சிருக்கேன்..” என்றான் ஈஸ்வரன்.
“ஆமா, ஆமா இருக்காதா பின்ன. விவசாயி மகனுக்கு விவசாயம் பண்ணவே நேரம் சரியாய் இருந்திருக்கும். அப்பறம் கல்யாணம் பண்ணி, பொண்டாட்டியை கரெக்ட் பண்ணி இப்படி பல வேலை இருக்கும் போது, இந்த அரியர்ஸ் எல்லாம் உங்களுக்கு மறந்து போயிருக்கும்..” என்றாள் நக்கலாய்.
“எப்படி டி கரெக்ட்டா சொல்ற..?” என்ற ஈஸ்வரன், சிறப்பாக நடித்தான். அவனின் நடிப்பைப் பார்த்த மகா,
“மகனே.. நீ மல்லுவேட்டி மைனர் மட்டும் இல்லடா. மகா நடிகன். நடத்துடி.. எவ்வளவு தூரம் போறன்னு நானும் பார்க்குறேன்..” என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே அவனைப் பார்த்து இளித்து வைத்தாள்.
“என்னடி..? இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்குற மாதிரி தெரியுது.. நானே கஷ்ட்டப்பட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். இதுல நீ வேற இப்படி வந்து நின்னா… நான் என்ன பண்றது மயக்கி ..?” என்றான் பாவமாய்.
“நான் மயக்கியா..? ஆமா, இவரு பெரிய ரொமான்ஸ் மன்னரு. நான் மயக்கிட்டாலும், இவரு மயங்கிட்டாலும்..” என்றாள் இழுவையாய்.
“பார்த்து சுளுக்கிக்கப் போகுது..” என்றான்.
“ம்ம்..ம்ம்ம். சுளுக்குனா நாங்க பார்த்துக்கிறோம்..” என்றவன் அவனை உரசியபடி அமர,
“என்னடி மயக்கி..? செம்ம பார்ம்ல இருப்ப போல..?” என்று கிண்டலாய் கேட்க,
“யோவ்.. இங்க ஒரு முத்தத்துக்கே பஞ்சமா இருக்கு. இதுல எங்க இருந்து மொத்தத்துக்கு போறது..” என்றாள் கடுப்பாய்.
“இதுக்கு ஏண்டி சலிச்சுக்கிற. நீ மட்டும் ‘ம்’ ன்னு சொல்லு, மாமன் எல்லாத்துக்கும் ரெடியா இருக்கேன்..” என்றான்.
“ஆனா, நான் ரெடியா இல்ல. இன்னும் மூணு நாளைக்கு வாய்ப்பேயில்லை..” என்றாள்.
“எதுக்கு மூணு நாள்..?” என்று யோசித்தவன்,
“ஹோ..! திறப்பு விழா நடந்திருச்சோ..?” என்றான்.
“திறப்பு விழாவா..?” என்றாள் புரியாமல்.
“அதாண்டி, மாதத்தின் மூன்று நாள் திறப்பு விழா…” என்றான் சிரிப்புடன்.
அவளுக்கு லேட்டாக புரிய,
“உங்களை..! கருமம்.. கருமம்.. இப்படியெல்லாமா சொல்லுவாங்க..” என்றாள்.
“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..” என்று அவன் அப்பாவியாய் பார்க்க,
“தயவு செஞ்சு முகத்தை இப்படி வைக்காதிங்க. உங்க முகம் பார்க்கத் தான் அப்பாவி, ஆனா பேச்சு எல்லாமே அடப்பாவி தான்..” என்றாள்.
“அப்படிங்கிற..?” என்று அவளை நெருங்க,
“இப்ப எதுக்கு பக்கத்துல வறீங்க..? தள்ளி இருந்தே பேசலாம், தப்பில்லை..” என்றாள்.
“தள்ளி இருந்தா பேச முடியும். ஆனா, கிஸ் பண்ண முடியாதே..” என்றான் சிரிப்புடன்.
அதற்குள் ருக்கு பாட்டி, “மகா..மகா” என்று அவள் பேரை ஏலம் போட்டுக் கொண்டிருந்தார்.
“உங்க பாட்டிக்கு போன பிறவியில நான் சக்களாத்தியா இருந்தேனோ என்னவோ..? சரியா நேரத்துக்கு அதுக்கு மூக்கு வேர்த்துடும்..” என்றவள், அவனை இடித்துக் கொண்டு சென்றாள்.
“ஹேய்..! பார்த்துடி..” என்ற சிரித்தபடி நின்றவன், அவள் தலை மறையவும் அவன் புன்னகையும் மறைந்தது. அவன் வேலையை மறுபடியும் தொடங்கினான்.
“என்னாச்சு அசோக்..? எதுக்கு இப்போ இப்படி கத்திட்டு இருக்க..?” என்றாள் அசோக்கின் அம்மா.
“விஷயம் எப்படியோ அந்த ஈஸ்வரனுக்கு தெரிஞ்சி போய்டுச்சும்மா. அவன் சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் குடுத்திருக்கான்..” என்றான் அசோக்.
“உனக்கு யார் சொன்னது..?” என்றாள் அவனின் அம்மா.
“இந்த தகவல் எல்லாம் யார் சொல்லுவா நமக்கு..? அவங்க தான்..” என்றான் அசோக்.
“இப்ப என்னதான் பன்றது..?”
“அது தான் எனக்கும் புரியலை.. எப்படி மிரட்டுனாலும் வழிக்கு வர மாட்டேங்குறான்…” என்றான் அசோக்.
“அந்த பாண்டியன்கிட்ட பேசிப் பார்க்க வேண்டியது தானே..? அந்த ஆளுக்கு பயம் விட்டுப் போச்சா என்ன..?” என்றாள்.
“அந்த ஆள் கொஞ்சம் கூட பயமே இல்லாத மாதிரி தான் பேசுறான். எல்லாம் மருமகன் கொடுத்த தைரியமா இருக்கும்..” என்றான் அசோக்.
“கமிஷனர் கிட்ட சொல்லி, நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பார்த்துக்க சொல்லு அசோக். அவருக்கு என்ன கவனிக்கணுமோ கவனிச்சுக்கலாம்..” என்றாள் அவனின் அம்மா.
“கொஞ்ச நேரம் வாயை திறக்காதிங்க. நானே கடுப்புல இருக்கேன். ஏற்கனவே என்மேல நிறைய கேஸ் இருக்கு. இதுக்கும் அந்த கமிஷருக்கு படியளக்கனும்ன்னா, மொத்தத்தையும் குடுக்கணும். குடுக்கவா..?” என்றான் கோபமாக.
“மொத்தத்தையுமா..?” என்று ஷாக் ஆனாள் அவனின் அம்மா.
“பின்ன அந்த ஆளு கொஞ்சமாவா கேட்பான். இதுக்கு வேற வழி தான் தேடனும். ஈஸ்வரன் இதோட நிக்க மாட்டான். அவன் ரொம்ப புத்திசாலி. படிக்கிற காலத்துலயே அவன் தான் எனக்கு வில்லன். பார்க்க ஒன்னும் தெரியாதவன் மாதிரியே இருப்பான். ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுடுவான். அந்த ஈஸ்வரனை போட்டுத் தள்ளிட்டா, நம்ம பிரச்சனையும் முடிஞ்சுடும், மகாவும் எனக்குக் கிடைப்பா. நாம எதுலையும் சிக்கவும் மாட்டோம்..” என்றான் அசோக்.
“ஏற்கனவே அவனுக்கு வச்ச குறியில இருந்து அவன் தப்பிச்சுட்டான் அசோக். அவனைப் பார்த்து தான் ஹேண்டில் பண்ணனும். அவன் சொன்ன மாதிரி இந்த வீடியோ வெளிய போகாத வரைக்கும் தான் நமக்குப் பணம். வெளிய போய்ட்டா, நாம பொணம் தான். அது மட்டும் எனக்கு கன்பார்மா தெரியும்..” என்றான் அசோக்கின் நண்பன்.
“என்னோட தொழில்ல நானே ராஜா, நானே மந்திரின்னு இருந்தேன். இவன் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான். இந்த அனிதாவுக்கும் அவனுக்கும் என்ன ரிலேஷன்ஷிப்ன்னு விசாரிக்க சொன்னேன்.. விசாரிச்சியா…?” என்று அசோக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவனுக்கு அழைப்பு வந்தது.
“யார்டா இது..?” என்று யோசித்துக் கொண்டே அவன் போனை எடுக்க,
“வணக்கம் சகலை..” என்றான் ஈஸ்வரன் எதிர்புறம் சட்டை காலரை பின்னால் தூக்கி விட்டபடி.
“உனக்கு என்னோட நம்பர் எப்படி கிடைச்சது..?” என்றான் அசோக் கோபமாக.
“அட என்னடா நீங்க..? உன்னோட கையாள் மூணு நாளைக்கு முன்னாடி அவனாதான் எனக்குப் போன் பண்ணான். பத்து லட்சம் கூட கேட்டானே..” என்றான் ஈஸ்வரன்.
“உனக்கும் அனிதாவுக்கும் என்னடா சம்பந்தம்..?” என்றான் அசோக்.
“மாப்ள.! மொள்ளமாரித் தனம் பண்ணி பொழைக்கிறது பெரிய விஷயமில்லை. ஆனா, அப்டேட்டா இருக்க வேண்டாமா..? உன்னோட லிஸ்ட்ல இருக்க பொண்ணுங்க எல்லாரும் இருக்காங்களா? இல்லையா? கல்யாணம் ஆயிடுச்சா..? யார் கூட ஆச்சு..? எங்க இருக்காங்க..? என்ன பண்றாங்க..? இப்படி எல்லாமே தெரிஞ்சிருக்க வேண்டாமா..?” என்றான்.
“கோபத்தைக் கிளராத ஈஸ்வரா..? நீ மகா புருஷனா..? இல்லை அனிதா புருஷனா..?” என்றான் அசோக் கோபமாக.
“ங்கா..புஷ்ப்பா புருஷன்..” என்ற ஈஸ்வரனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“புஷ்ப்பா புருஷனா..? அது யாரு புஷ்ப்பா..?” என்றான் அசோக்.
“உங்க அக்கா தான் புஷ்ப்பா..! தெரியாதா சகல. உங்க தொழிலோட முன்னோடி. புஷ்ப்பாவை தெரியாம எப்படி மாப்ள தொழில் பண்றிங்க..?” என்றான் ஈஸ்வரன்.
“என்னடா விளையாடுறியா..? ரொம்ப ஆடாத ஈஸ்வரா..? உன்னை இந்த உலகத்துல இல்லாம பண்றதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் போதும்..” என்றான் அசோக்.
“அப்படியா..? நான் விளையாடுறேனா..?, நீ பல பொண்ணுங்க வாழ்க்கையில விளையாண்ட கதையை நான் சொல்லவா..? இல்ல எல்லா வீடியோவையும் ரிலீஸ் பண்ணவா நான்..?” என்றான்.
“என்ன உளர்ற..? உன்கிட்ட என்ன வீடியோ இருக்கு..?” என்றான் அசோக்.
“அது ஒண்ணுமில்லை..! நீ வீடியோல்லாம் எதுல வச்சிருந்தையோ.. அதுல போய் பார்த்துட்டு கூப்பிடு பார்க்கலாம்..” என்று ஈஸ்வரன் சிரிப்புடன் போனை வைக்க,
“என்ன இவன் உளர்றான்..? வீடியோ எல்லாம் எப்படி அவன் கைக்கு போச்சு..?” என்று யோசித்த அசோக், வேகமாய் போனை ஒப்பன் செய்ய, அது ஒப்பன் ஆகாமல் அடம் பிடித்தது. அவனுக்கு பதட்டம் கூடிக் கொண்டே போக, அவசரமாய் அது பதட்டத்தில் ஓப்பன் ஆகவில்லை. எரிச்சலில் இருந்தவன், அவனுக்கு வந்த லிங்க்கை கவனிக்காது ஓகே கொடுத்து விட்டு, வேகமாய் வீடியோக்கள் அடங்கிய போல்டரை ஒப்பன் செய்ய போக, அனைத்தும் ஒரு நொடியில் அழிந்திருந்தது.
“எப்படி இது நடந்திருக்கும்.இல்லை, இவன் ஏதோ பண்ணியிருக்கான்..” என்ற அசோக் ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்தான்.
“என்னாச்சு அசோக்..?” என்றான் அருகில் இருந்தவன்.
“அவன் என்னை முட்டாளாக்கியிருக்கான்…மொபைல்ல இருந்த வீடியோ எதுவுமே இல்லை. வீடியோ மட்டுமில்ல, மொபைல்ல எந்த ஆப்ஷனுமே வேலை செய்யலை.. அவன் தான் ஏதோ பண்ணியிருக்கான்..” என்றவன் அங்கிருந்த பொருட்களைப் போட்டு உடைக்க,
“இப்ப என்ன பண்றது அசோக்..??” என்றான் அருகில் இருந்தவன்.
“இப்ப ஒன்னும் செய்ய முடியாது. சைபர்கிரைம் நம்ம மேல ஆக்சன் எடுக்குறதுக்கு முன்னாடி, நாம தப்பிக்கிறதுக்கான வழியைப் பார்க்கணும்…” என்று அசோக் சொல்லிக் கொண்டிருக்க, அவனுக்கு அருகில் இருந்தவனின் போன் மணி அடித்தது.
“அவன் தான் அசோக் கூப்பிடுறான்..” என்றான் அவன்.
அவனிடமிருந்து கோபமாக போனை வாங்கிய அசோக்…
“ஈஸ்வர், நீ தேவையில்லாத வேலை செஞ்சுட்ட.. உன்னை கதற விடுறேனா இல்லையான்னு பாரு..” என்றான்.
“கத்தி முடுச்சுட்டியா..? உன்னோட மொபைல்ல என்னென்ன வீடியோ இருந்ததோ, அது எல்லாமே இப்ப என்கிட்டே இருக்கு. இப்ப நான் தான் பேசணும். நீ பேசக் கூடாது. இதுல ஒரு வீடியோ வெளிய விட்டாலும் போதும், என்னை கதறவிட நீ இருக்க மாட்ட..” என்றான் ஈஸ்வரன்.
“உனக்கு என்ன வேணும்..?” என்றான் அசோக்.
“உன்கிட்ட பேரம் பேசவா நான் இதையெல்லாம் பண்ணேன்னு நினைக்கிற. அனிதா என்னோட மனைவி தான். கல்யாணம் ஆன அன்னைக்கே தூக்குப் போட்டு தற்கொலை பண்ணிகிட்டா. அப்பறம் நிவேதா எனக்கு நெருங்கின சொந்தம். அவளும் உன்னால தான் செத்திருக்கா. இப்படி பல பொண்ணுங்க, உன்னோட மிரட்டலுக்கு பயந்து தற்கொலை பண்ணியிருக்காங்க. அவங்க சாவுக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்க வேண்டாம்..” என்றான் ஈஸ்வரன்.
“இப்ப அதுக்கென்ன போலீஸ்க்கு போகப் போறியா..? அதான் ஆல்ரெடி சைபர் கிரைம்ல கம்ப்ளெயின்ட் குடுத்திருக்கியே..?” என்றான் அசோக் நக்கலாக.
“கொஞ்சம் கூட உனக்கு பயமில்லை அப்படித்தான..?” என்றான் ஈஸ்வரன்.
“இங்க பாரு ஈஸ்வரா..! எப்படி இருந்தாலும் நீயும் அந்த வீடியோவ வெளியிட மாட்ட. ஏன்னா, நீ சொன்ன உனக்கு வேண்டப்பட்ட ரெண்டு பொண்ணுங்க வீடியோ வேற அதுல இருக்கே. அவங்களோடதே இல்லைன்னாலும், நீ அதை வெளியவிட மாட்டன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஏன்னா, நீ நல்லவண்டா. ஆனா, நான் அப்படி கிடையாது..பார்ப்போம், என்ன நடக்குதுன்னு..” என்றான் அசோக்.
“உன்னை மட்டுமில்லடா, உன்னக்கு பின்னாடி இருக்குற எல்லாருக்கும் இருக்கு ஆப்பு.. அதுவும் என்னோட கையால தான். ஆல்ரெடி எல்லாமே பண்ணியாச்சு. ஒன்னு நீயா சாகனும். இல்லைன்னா, நீ சொன்ன மாதிரி உனக்கு தான் நிறைய பெரிய இடமெல்லாம் தெரியுமே. அவனுக தப்பிக்க, உன்னை அவனுகளே போட்ருவானுங்க.. எது எப்படி இருந்தாலும் நீ கைலாசம் போறது உறுதி..” என்றான் ஈஸ்வரன்.
அசோக் கோபத்தில் போனை கட் பண்ண,
“என்ன சொன்னான் அவன்..?” என்றான் அருகில் இருந்தவன்.
“என்ன சொல்லுவான்..! இத்தனை வருஷம் பிரச்சனையில்லாம இருந்துட்டு, இவன் விஷயத்துல அசால்ட்டா இருந்துட்டேனே..” என்றான் அசோக்.
“ஒன்னும் பிராப்ளம் இல்லை அசோக். வீடியோ எல்லாமே என்னோட லேப்டாப்லயும் இருக்கே… டென்ஷன் ஆகாத..” என்றான் அவன்.
“முட்டாள் மாதிரி பேசாத. வீடியோ போச்சேன்னு நான் டென்ஷன் ஆகலை. அவன் கைக்கு போயிடுச்சேன்னு தான் டென்ஷன் ஆகுறேன்…” என்று நடையாய் நடந்தவன்,
“பேசாம அந்த மகாவைத் தூக்கிடு. அவளைத் தேடி இவன் கண்டிப்பா வருவான். அப்ப இவனை நம்ம இடத்துல வச்சே முடிச்சுடலாம்.. மகாவும் கிடைச்ச மாதிரி இருக்கும், இவனையும் முடிச்ச மாதிரி இருக்கும்..” என்றான் அசோக்.
“அது வரைக்கும் நாம போலீஸ்கிட்ட சிக்காம இருக்கணுமே..” என்றான் அவன்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றான் அசோக்.
“சரி அசோக்..”
“அப்பறம் இன்னொரு விஷயம்.. கொஞ்ச நாளைக்கு யார்கிட்டயும் காண்டாக்ட் வச்சுக்க வேண்டாம். ஈஸ்வரனுக்கு ஒரு முடிவு கட்டுற வரைக்கும் நாம கொஞ்சம் அமைதியா தான் இருந்தாகணும்.. மகாவை எப்படி தூக்கனும்ன்னு பிளான் நான் போட்டு குடுக்குறேன்” என்றான் அசோக்.
“ஓகே..” என்றான் அருகில் இருந்தவன்.
அங்கே ஈஸ்வரனோ, அடுத்து அசோக் எப்படிப்பட்ட வேலையில் இறங்குவான் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அன்று சபரியும், மஞ்சரியும் வீட்டுக்கு வந்திருந்தனர்.
“என்ன மஞ்சு, ஒருவாரமா வீட்டுப்பக்கமே வரலை..?” என்றார் வசுந்தரா.
“அங்கேயே வேலை சரியா போய்டுது. அப்பறம் எங்க இருந்து இங்க வர்றது..?” என்றாள் மஞ்சு.
“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி சலிச்சுக்கிற மஞ்சு..?” என்றார் வசுந்தரா.
“பின்ன என்னம்மா..? மருமக வந்ததும் என்னை மறந்துட்டிங்க பார்த்திங்களா..? இப்பல்லாம் ஒரு போன் கூட பண்றதில்லை..என்று சலித்துக் கொண்டாள்.
அப்போது மகாவும் அங்கே வர,
“வாங்க சித்தி, வாங்க சித்தப்பா..” என்றாள்.
“ஈஸ்வரன் எங்கம்மா,..? ஆளையே பார்க்க முடியறதில்லை. தோட்டத்துப் பக்கமும் போகலை போல..” என்றான் சபரி
“உள்ள தான் இருக்காங்க சித்தப்பா. எதோ வேலையா இருக்காங்க..கூப்பிடவா” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம் மகா. உங்க சித்திக்கு வெண்கல குரல். அவ சத்தம் கேட்டு அவனே வந்துடுவான்..” என்ற சபரி,மஞ்சுவிடம் ஒரு முறைப்பையும் வாங்கிக் கொண்டான்.
“காயத்ரி எங்க சித்தப்பா..? அவளை ஆளையே பார்க்க முடியலை..” என்றாள் மகா.
“எக்ஸாம் இன்னையோட முடியுது மகா. நாளைக்கு வருவா..” என்றான் சபரி.
மஞ்சு ஓரக்கண்ணால் மகாவைப் அளந்தாள். முன்னே இருந்த துடுக்குத் தனம் கொஞ்சம் குறைந்ததைப் போல் இருந்தது. முன்பெல்லாம் வெட்டு வெட்டு என்று நடந்து கொண்டிருந்தவள், இப்போதெல்லாம் அமைதியாகவே நடக்கிறாள். ஓயாமல் பேசிக் கொண்டிருந்த வாய் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது… என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மஞ்சு.
“அது மட்டுமா மஞ்சு.. ஆளும் எப்படி இருக்கா பாரு, சும்மா தக்காளிப் பழம் மாதிரி தளதளன்னு..” என்றது அவளின் உள்மனம்.
“அது என்னவோ வாஸ்தவம் தான். எல்லாம் என் தம்பியோட கவனிப்பு அப்படி. எப்படியோ நல்லா இருந்தா சரித்தான்..” என்று அவளுக்கு அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள்.
“என்ன சித்தி யோசனை பண்ணிட்டு இருக்கீங்க..?” என்றாள் மகா.
“ஒரு யோசனையும் இல்லை. அப்படியே இருந்தாலும் எனக்கு என்ன யோசனை இருக்க போகுது..? இவ உருப்படியா இருக்காளா..? என் தம்பி கூட ஒழுங்கா வாழ்றாளா..அப்படின்னு தான் இருக்கும்..” என்றாள் மஞ்சு.
“தேவையில்லாத பேச்செல்லாம் எதுக்கு மஞ்சு..” என்று சபரி பேசிக் கொண்டிருக்கும் போதே,
“அக்கா என் மேல இருக்குற அக்கறையில பேசுறாங்க. அதையேன் மாமா கோவிச்சுக்கிறிங்க..?” என்றபடி வந்தான் ஈஸ்வரன்.
“என்னைப் பத்தி என் தம்பிக்கு தான் நல்லா தெரிஞ்சிருக்கு..” என்ற மஞ்சுவிற்கு உச்சி குளிர்ந்து போனது.
“என்ன விஷயம் மாமா..?” என்றான் ஈஸ்வரன்.
“நம்ம கோவில்ல நாளை கழிச்சு கிடா வெட்டு மாப்ள. அதான் உங்களையெல்லாம் அழைச்சுட்டு போகலாம்ன்னு வந்தோம். ஒரு வேண்டுதல் பாக்கியிருக்கு மாப்ள. உங்கக்கா தான், உனக்கு நல்ல படியா கல்யாணம் முடிஞ்சுட்டா, கிடா வெட்டுறதா வேண்டிகிட்டு இருக்கா. அதான் அதை முடிச்சுடலாம்ன்னு..” என்றான் சபரி.
“நாங்க எப்படி மாமா…அனிதா இறந்து..” என்று அவன் இழுக்க,
“அனிதா இறந்து ஒரு மாசத்துல கல்யாணம் மட்டும் பண்ணத் தெரியுதுல்ல. அப்ப இதெல்லாம் கணக்கில்லை..” என்றாள் மகா வெடுக்கென்று.
“சாமி காரியம் நாங்க தான் செய்ய போறோம் மாப்ள. அதனால ஒன்னும் பிரச்சனையில்லை..” என்றான் சபரி.
“சரிங்க மாமா..! நாங்க எல்லாருமே கண்டிப்பா வந்திடுறோம்… நீங்க என்னம்மா சொல்றிங்க..?” என்றான் வசுந்தராவிடம்.
“சாமி காரியத்தை தள்ளிப் போடக் கூடாது ஈஸ்வரா. மாப்ள சொல்ற மாதிரி அவங்க தான செய்ய போறாங்க. ஒன்னும் பிரச்சனையில்லை..” என்றார் வசுந்தரா.
“அதை நம்ம செய்றதாவே இருந்தாலும், பிரச்சனை இருக்கக் கூடாது..” என்றாள் மகா கோபமாக.
‘இவ ஒருத்தி.. அனிதான்னு பேரை எடுத்தாலே பத்ரகாளியா மாறிடுவா..?’ என்று மனதிற்குள் நொந்து கொண்டான் ஈஸ்வரன்.
“இல்லையா பின்னே.. உனக்கு இருக்குடா..” என்று கறுவிக் கொண்டாள் மனதிற்குள்.
சபரியும், மஞ்சுவும் கிளம்பிப் போன பிறகு அவனை பிடித்துக் கொண்டாள் மகா.
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..?” என்றாள் கோபமாய்.
“என்னடி திடீர்ன்னு இப்படி ஒரு சந்தேகம்..?” என்றான் ஈஸ்வரன்.
“நான் ஏன் கோபமா பேசுறேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். இன்னும் அனிதா புராணத்தை விட மாட்டேங்குறிங்க..? அன்னைக்கு எதுக்கு அனிதா வீட்டுக்கு போனிங்க..?” என்றாள்.
“என்னைக்கு போனதை என்னைக்கு கேட்குற மகா..?” என்றான் ஈஸ்வரன்.
“அன்னைக்கே கேட்டிருக்கணும். விட்டது தான் தப்பா போய்டுச்சு. அன்னைக்கு இருந்து நீங்க ஆளே சரியில்லை. மந்திரிச்சு விட்ட மாடு மாதிரியே திரியறிங்க..?” என்றாள் கோபமாய்.
“அதென்னடி மந்திரிச்சு விட்ட மாடு..? மந்திரிச்சு விட்ட கோழின்னு தான சொல்வாங்க..?” என்றான் சிரிப்புடன்.
“நீங்க என்ன கோழியா..?” என்றாள் நக்கலாய்.
“என் கண்ணு முன்னாடியே என் பேரனை இந்த மிரட்டு மிரட்டுறவ..? என்னடி? இப்ப என்ன சொல்லிட்டான் அவன்..?” என்றார் ருக்கு.
“இங்க பாரு கிழவி. வயசான காலத்துல, வயித்துக்கு சாப்பிட்டோமா, நிம்மதியா தூங்குனோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு எங்க சண்டையில இடையில் வந்து ஏதாவது பேசுனிங்க.. அப்பறம் உங்க மண்டை உடைஞ்சாலும் அதுக்கு நான் பொறுப்பில்லை..” என்றாள் கடுப்பாக.
“என்னடி என்னை கிழவின்னு சொல்ற..? ஈஸ்வரா இதையெல்லாம் நீ கேட்க மாட்டியா..?” என்றார் ருக்கு.
“கிழவிய, கிழவின்னு சொல்லாம, குமரின்னா சொல்லுவாங்க..?” என்றாள்.
“என்ன மகா இதெல்லாம்..? இப்ப பாட்டியை எதுக்கு வம்புக்கு இழுக்குற..?” என்றான் ஈஸ்வரன்.
“நான் ஒன்னு சொல்லிடக் கூடாதே .. வந்திடுவிங்க பாட்டியும், பேரனும். எப்படியோ போங்க..” என்று கோபமாக சென்று விட்டாள்.
“இப்ப எதுக்கு ஈஸ்வரா உன் பொண்டாட்டிக்கு என் மேல இப்படி ஒரு கோபம்..?” என்றார் ருக்கு.
“அது வேற ஒண்ணுமில்லை பாட்டி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு முக்கியமான சீன்ல நீங்க அவளை கூப்பிட்டுட்டிங்க. அதான், அந்த கோபத்தை இப்ப காட்டிட்டு போறா..” என்றான்.
“என்ன சீன்ல..? ஏதாவது சீரியல் பார்த்துட்டு இருந்தாளா..?” என்றார் ருக்கு அறியாமல்.
லேசாக சிரித்து வைத்தவன்,
“ஆமா பாட்டி செம்ம ரொமான்ஸ் சீரியல்..” என்றான்.
“அட போடா..” என்ற ருக்கு அங்கிருந்து செல்ல, சிரிப்புடன் மகாவைத் தேடி சென்றான் ஈஸ்வரன்.